“நேத்து நான் அவன்கிட்ட பேசின விதம் இப்போ எனக்கே குத்திட்டு தான் இருக்கு. அவன் ஆதிராக்கிட்ட நடந்துக்குறதுல தப்பான நோக்கமே என் கண்ல படலை. ஆனாலும் என்னால அதை நல்லவிதமா ஏத்துக்க முடியலை. யூ க்னோ வாட் பிரியா… அன்னிக்கு என்னை விபத்துல இருந்து காப்பாத்தி, நான் அடிச்சது இதே தீரஜ் தான்” என்று அவள் தளர்வுடன் சொல்லி முடிக்கும் போதே பிரியாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.
“என்னடி சொல்ற… உன்னை ஹீரோ போல காப்பாத்தி இப்போ உனக்கு ஹீரோவாவே ஆயிட்டாரு” என்று பிரியா ஆச்சரியத்துடன் சொல்ல, அவளை முறைத்த நக்ஷத்ரா,
“உன்கிட்ட நியாயம் கிடைக்கும்னு தான் ஒன்னு விடாமல் எல்லாமே சொன்னேன். எனக்கு ஏன் தாலி கட்டினேனு அவன் கிட்ட கத்தினேன் கதறினேன்… அதுக்கு நான் காதலிச்ச உன்னை தான் கல்யாணம் பண்ணிருக்கேன்னு சொல்றான். அதுவே உண்மையா பொய்யானு தெரியலை. இந்த விஷயத்தை வீட்டுல நான் சொல்லலை. ஏற்கனவே இவன் தான் உன் புருஷன் அது இதுன்னு பேசுறாங்க இதுல இதெல்லாம் தெரிஞ்சால் அவ்வளவு தான்! இதுல ஆதிராக்கிட்ட சொந்த அப்பா மாதிரி நடந்துக்குறான். அவனுடைய இந்த பாசம் பொய் மாதிரியும் தெரியலை. அவன் கண்ணுல ஒரு உண்மை இருக்கு பிரியா ஆனாலும் நான் வாழ்க்கையில கல்யாணம்ன்ற பேருல நடைப்பிணமாவே ஆயிட்டேன். என் பணத்துக்காக தான் அவன் தாலி கட்டியிருக்கான்னு தோணுது” என்று தளர்வுடன் பேசிய நக்ஷத்ராவின் கண்கள் பார்க்கில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த ஆதிராவின் மேல் கலக்கத்துடன் படர்ந்தது.
“நான் இப்போ உன் வாழ்க்கை, உனக்காகனு தான் நினைச்சு பேசுறேன் உமை. உன்னை சும்மா காதலிச்சேன்னு சொல்ற ஆள் மாதிரி எனக்கு தீரஜ் அண்ணா தெரியலை” என்று பிரியா யோசனையுடன் கூறிக்கொண்டிருக்கும் போதே, “அவன் நல்லவன்னு நீயே முடிவு பண்ணிட்டு பேசாத… அதுக்குள்ள உனக்கு அவன் அண்ணா ஆயிட்டானா?” என்று நக்ஷத்ரா ஆவேசமாகப் கேட்டாள்.
“அவர் நல்லவர்னு நான் நியாயம் பேசலை ஆனால் அவர் கண்டிப்பா கெட்டவரா இருக்க வாய்ப்பேயில்லை டி. உன்கிட்ட நான் ஏற்கனவே சொன்ன விஷயம் தான். அந்த கார்த்திகேயனை வைச்சு எல்லா ஆம்பிளைங்களையும் வெறுக்காத, எடை போடாதனு. இப்போ நான் ஒரு சக மனுஷியா பேசப்போறேன். ரியாக்ட் பண்ணாமல் பொறுமையா கேளு. நீ என்ன உலக அழகி ஐஸ்வர்யா ராயா இல்லை சுஷ்மிதா செனா? அழகா இருக்க உமை அதுக்காக ஒரு குழந்தையோட இருக்குற உன்னை காதலிச்சேன்னு பொய் சொல்லி கல்யாணம் பண்ற அளவுக்கு தீரஜ் அண்ணா நிலை இல்லை. அவர் இருக்குற ஸ்மார்ட் அண்ட் மேன்லிக்கு பொண்ணுங்க நான் நீன்னு போட்டி போட்டு வந்திருப்பாங்க டி. நீ சொன்னியே அந்தப் பணம்… இவ்வளவு பெரிய வீட்டை உழைச்சு வாங்குன மனுஷன் எதுக்கு டி உன் பணத்து மேல ஆசைப்படணும். அன்னிக்கு ரூபாவை பொண்ணு பார்க்க வந்த போதே மனோஜ் வீட்டுல சீர் சனம் எதுவும் வேணாம்னு சொன்னாங்க தானே! அப்படி தீரஜ் அண்ணாக்கு பணம் தான் முக்கியம்னா அத்தனை பேர் அதிர்ச்சியில வாய் வைக்குற அளவுக்கு மாஸா உனக்கு தாலி கட்டியிருக்க மாட்டாரு சரியா! உன்னை மட்டம் தட்டவோ காயப்படுத்தவோ நான் பேசலை… ரெட்டியில இல்லாத அழகான பொண்ணுங்களா? இல்லை இந்த உலகத்துல இல்லாத அழகான பணக்கார பொண்ணுங்களா? உன்னை உனக்காகத் தான் கல்யாணம் பண்ணிருக்காரு அப்படின்றதை நான் நம்புறேன் நீயும் சீக்கிரமே நம்புவ” என்று முடித்தாள்.
“இந்த சூழ்நிலையில இருந்து என்னை காப்பாத்துவனு பார்த்தால் அவனை நான் நம்புவேன்ற அளவுக்கு நீ பாட்டுக்கு பேசுற… உன்கிட்ட நான் இதை எதிர்ப்பார்க்கலை பிரியா” என்று தோழியை விரக்தியாகப் பார்த்த நக்ஷத்ராவிடம், “உனக்கெல்லாம் எவ்வளவு சொன்னாலும் புரியப்போறதேயில்லை டி… நான் கிளம்புறேன்” என்று கோபமாக எழுந்த பிரியாவின் கையை வேகமாக பிடித்த நக்ஷத்ரா, “நீயும் என்னை விட்டுப் போயிட்டால் நான் என்ன டி பண்ணுவேன்?” என்று கண்ணில் கண்ணீர் மல்க கேட்டாள்.
“அப்படியெல்லாம் உன்னை விட்டு நான் போயிடுவேனா டி” என்று நக்ஷத்ராவின் கண்களைத் துடைத்தவள், அவள் பக்கத்தில் அமர்ந்து ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டு, “சரி, இப்போ என்ன பண்ணலாம்னு இருக்க?” என்று நக்ஷத்ராவை யோசனையுடன் பார்த்தாள்.
“எனக்கே தெரியலை பிரியா. உன் புருஷனோட வந்தால் வா இல்லைனா செத்துடுவேனு அப்பா ஒரு பக்கம் பயமுறுத்துறாங்க… இதுவே சினிமாவாவோ கதையாவோ இருந்தால் இந்த வீட்டை விட்டே ஓடி போயிருக்கலாம். ஆனால் நிதர்சனமான நிஜ வாழ்க்கையில் கையில ஒரு பொண்ணை வைச்சிட்டு நான் இந்த வீட்டை விட்டு வெளியே போறதெல்லாம் சாத்தியமேயில்லை. ஆஃப்டர் ஆல் நானே இதுவரைக்கும் யார் துணையும் இல்லாமல் தனியா வெளியே போனதில்லையே!” என்று தன் முகபாவனையை பாவமாக வைத்து தோழியைப் பார்த்த நக்ஷத்ரா, “இதுல ஆதிரா வேற அவனை அப்பான்னு சொல்றாள், உரிமையா பேசுறாள்… இந்த வீட்டு ஆளுங்களோட ஒட்ட முயற்சி பண்றாள். இதெல்லாம் எனக்கு ரொம்ப அதிர்ச்சியா வித்தியாசமா இருக்கு.இதெல்லாம் என் மனசுக்குள்ள ஒரு பயம் அழுத்தத்தை கொடுத்து நேத்து நான் வார்ன் பண்ண போய் கொஞ்சம் பேசிட்டேன்” என்று தயக்கத்துடன் கூறியவளை முறைத்த பிரியா, ”உன் பயம் தப்பில்லை உமை ஆனால் இவ்வளவு சென்ஸிட்டிவான விஷயத்தை தீர யோசிச்சு ஆராயாமல் நீ அவசரப்பட்டது தப்பு. உன் கண்ணுலயே தீரஜ் அண்ணா ஆதிரா கிட்ட நடந்துருக்கறதுல உண்மை இருக்குனு உணர்ந்தும் அவரை நீ இந்த மாதிரி வார்த்தையால வதைச்சது ரொம்ப பெரிய தப்பு. முதல்ல ஆதிரா எப்படி தீரஜ் அண்ணாவை அப்பாவா ஏத்துக்கிட்டானு உனக்கு தெரியுமா?” என்று கேள்வி எழுப்பினாள் பிரியா.
“தெரியாது டி”
“ஆதிராவை கூப்பிட்டு கேளு” என்றுரைத்த பிரியாவை புரியாமல் பார்த்த நக்ஷத்ரா, “அவள் சின்ன குழந்தை டி அவளுக்கு என்ன தெரியும்! அதுவுமில்லாமல் அவகிட்ட நான் என்ன எப்படினு கேக்குறது” என்று திணறினாள்.
“நான் சொல்ற மாதிரி நீ ஆதிரா கிட்ட கண்டிப்பா கேட்டு தான் ஆகணும் உமை” என்று அழுத்தமாக கூறிய பிரியா, தோழியிடம் எவ்வாறு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினாள்.
“நல்லா யோசிச்சுத் தான் உங்க ஆளுக்கிட்ட பேச போறேனு சொல்றீங்களா? வதினா வேற கூட இருக்காங்க” என்று கேட்டான் மனோஜ். பார்க்கிற்கு சற்று தொலைவிலிருந்த நீச்சல் குளப்பக்கத்தில் ஒளிந்துக்கொண்டிருந்த மனோஜ் மற்றும் வினோத் நக்ஷத்ரா மற்றும் பிரியா அமர்ந்திருந்த இடத்தைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தனர்.
“எடுத்தவுடனே காதல்ன்னு சொன்னால் அவள் பயந்திடுவாள்ல. ஒரு ஹாய், ஹலோ அப்படி இப்படினு கொஞ்சம் கொஞ்சமா டெவலப் பண்ணா தான் நல்லா இருக்கும்” என்று மனோஜின் தோள்களில் கைபோட்டபடி வினோத் புன்னகை மலர கூற, ப்ரியாவையும் வினோத்தையும் மாத்தி மாத்தி பார்த்த மனோஜோ, “ஆப்பு தி பெஸ்ட்” என்று முணுமுணுத்தான்.
“என்னது!” என்று வினோத் அலற, “ஆல் தி பெஸ்ட் சொன்னேன் அண்ணா” என்று பல்லைக் காட்டி சிரித்தான் மனோஜ்.
தன் மகளை அழைத்து வந்த நக்ஷத்ரா தன் மடியில் அமர்த்தி, “ஆது… உனக்கு அப்பான்னா யாருன்னு தெரியாது தானே?” என்று தயக்கத்துடன் ஆரம்பித்தாள்.
“ஓ… தெரியுமே அம்மா” என்று தலையை ஆட்டியபடி கூறிய மகளை அதிர்ச்சியுடன் பார்த்தாள் நக்ஷத்ரா. அதனை புருவம் சுருக்கி பார்த்த பிரியா, “உன்னை கேள்வி கேட்க சொன்னேன் பார்த்தியா! நானே பேசிக்குறேன் உமை நீ அமைதியா இரு” என்று தோழியைப் அடக்கியவள், ஆதிராவைப் பார்த்து, “தீரஜ் அப்பாவை உனக்கு ரொம்ப பிடிக்குமா ஆது பேபி?” என்று பிள்ளையின் கன்னத்தை வருடியபடியே கேட்டாள்.
“எஸ்… தீரஜ் அப்பாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும்” என்று துள்ளி குதித்த ஆதிராவைக் கண்டு ஏற்கனவே அதிர்ச்சியிலிருந்த நக்ஷத்ராவிற்கு தலை சுற்றுவது போல் ஆனது.
“ஓ… ஆது பேபிக்கு ஏன் தீரஜ் அப்பாவை ரொம்ப பிடிக்கும்னு சொல்றீங்களா… ஆன்ட்டிக்கு தெரிஞ்சிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கே” என்று தலை சாய்த்து கேட்டாள் பிரியா.
“சொல்றேன் ஆன்ட்டி… அன்னிக்கு அம்மா மயக்கம் போட்டு விழுந்தாங்களா அப்போ…” என்று அன்றைய தினம் நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள் ஆதிரா.
“அம்மா… அம்மா” என்று மயக்கத்தில் படுத்துக்கொண்டிருந்த நக்ஷத்ராவின் பக்கவாட்டில் அமர்ந்து ஆதிரா அழ, பிரியாவும் ரூபாவும் அங்கு தான் இருந்தார்கள். யாராலும் பிள்ளையை சமாதானப்படுத்த முடியவில்லை. மீனாட்சி மற்றும் அருணாச்சலம் அவ்வப்போது நக்ஷத்ராவையும், சொர்ணவள்ளி பாட்டியையும் மாறி மாறி பதற்றம் கலந்த பயத்துடன் பார்த்த வண்ணமாயிருந்தனர்.
சாதாரண அதிர்ச்சி மயக்கம் தான் என்று டாக்டர் கூறினாலும், வீல் வீலென்று அழுதுக்கொண்டிருந்த ஆதிராவை கவனித்த அந்நொடியே அவளின் பக்கம் சென்று மண்டியிட்டு, “குட்டி அம்மாயி அழக்கூடாது… அம்மாக்கு ஒன்னும் இல்லைடா தூங்கிட்டு இருக்காங்க இன்னும் கொஞ்ச நேரத்துல எழுந்திருச்சிருவாங்க” என்று குழந்தையின் கண்களை துடைத்துவிட்டவனின் இதயமும் பதற்றத்தில் தன்னவளுக்காக வேகமாக துடிக்கத் தான் செய்தது. அவள் சீக்கிரம் எழ வேண்டுமென அவனின் இதயம் அடித்துக் கொண்டேயிருந்தது.
அப்போதும் ஆதிராவின் அழுகை நின்றபாடில்லை. அதனால் அவளை வேகமாகத் தூக்கியவன் தன் தோள்களில் அணைத்தவாறு பிள்ளையின் முதுகை வருடிக்கொண்டிருக்கும் போதே, “நீங்கள் யாரு?” என்று கேட்டது பிள்ளை. ஒரே கேள்விக்குள் நிறைய கேள்விகளுக்கான விடையைத் தேடி கேட்டது குழந்தை.
மறு நொடியே எந்தவொரு யோசனையுமின்றி, “நான் உன்னுடைய அப்பா டா குட்டிமா” என்று ஆதிராவின் முதுகை ஆறுதலாக தட்டியபடியே பதிலளித்தவனை, அதிர்ச்சியுடன் பார்த்த ஆதிரா, “அப்பாவா! உங்கள் பெயர் என்ன?” என்று கேள்வியாகக் கேட்டாள்.
“என்னுடைய பெயர் தீரஜ்” என்று பரிவாகச் சொன்னவனை, ஆராய்ச்சி பார்வை பார்த்த பிள்ளை, “என் அப்பா பெயர் கார்த்திகேயன்னு கொள்ளு ஆச்சி சொன்னாங்க… என் பிரண்ட்ஸ்யுடைய அப்பாவை பார்க்கும் போது எனக்கு அப்பா எப்போ வருவாங்கன்னு ஆசையா இருக்கும். ஆனால் என் அப்பா ரொம்ப பேட் பாய்ன்னு வீட்டுல ஆச்சி, தாத்தா, சித்தியெல்லாம் பேசிப்பாங்க. நான் இது வரைக்கும் அவரை பார்த்ததே இல்லை. எனக்கு பேட் பாய் அப்பா வேண்டாம். எனக்கு என் அம்மா ஹாப்பியா இருக்கணும். அப்பாவைப் பத்தி பேசும் போதெல்லாம் அம்மா சோகமா ஆயிடுவாங்க… சோ ஐ ஹேட் அப்பா. உங்களுடைய பெட் நேம் கார்த்திகேயனா?” என்று அந்த அழுகையிலும் தீவிரமாகக் கேட்ட ஆதிராவின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியில் ஸ்தம்பித்திருந்தான் தீரஜ்.
‘நாலு வயசு பொண்ணுக்கு இவ்வளவு சென்ஸ்ஸிட்டிவ்வான விஷயங்கள் புரியுமா? தெரியுமா? இந்த குட்டி அம்மாயி மனசுல இத்தனை அதீத முதிர்ச்சியா!’ என்று உறைந்திருந்தவனை, “உங்கள் பெயர் கார்த்திகேயனா?” என்று விடாமல் ஆதிரா கேட்க, தன்நிலைக்கு மீண்டவன், “நான் தீரஜ்… கார்த்திகேயன் இல்லை” என்று மகள் அழுகையை துடைத்தபடியே, “ஆதிரா பாப்பா ரொம்ப பிரேவ் கேர்ள்… அழக் கூடாது. நீங்கள் அழுதீங்கன்னு தெரிஞ்சால் அம்மா ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க” என்று கூறியபடியே மயக்கத்திலிருந்த மனைவியை ஒரு முறை பார்த்துவிட்டு பிள்ளை புறம் திரும்பியவன், “உங்களுக்கு சாமி தெரியும் தானே? நீங்க சாமி கிட்ட வேண்டியிருக்கீங்களா?” என்று கேள்வி எழுப்பினான்.
“ஓ தெரியுமே… பிள்ளையார், முருகன், பெருமாள் இப்படி நிறைய காட்ஸ் இருக்காங்க. நான் நிறைய தடவை கோவில் போயிருக்கேன்… இவங்க கிட்ட நம்ம பிரே பண்ணா நமக்கு நல்லது நடக்கும்னு அம்மா சொல்லுவாங்க. காட் தான் நம்மளை பாதுகாப்பா பார்த்துப்பாங்கனு அடிக்கடி அம்மா சொல்லுவாங்க” என்று அழுகையை விடுத்து சோர்ந்த குரலில் கூறினாள் ஆதிரா.
“கரெக்ட்… ஆதிரா பாப்பா வேண்டுதலைப் பார்த்து சாமி என்னை ஆதிரா பாப்பாக்கு அப்பாவா அனுப்பியிருக்காங்க… நானும் சந்தோஷமா வந்துட்டேன்” என்று முகம் மலர மகளைப் பார்த்தான்.
“ஓ… அப்போ அந்த பேட் அப்பா” என்று பிள்ளை முகத்தைச் சுருக்க, “அப்பான்னா எப்போவுமே குட்டா தான் இருக்கணும் அம்மாயி… பேட் அப்பா, அப்பாவே கிடையாது” என்று தெளிவுப்படுத்தினான்.
“அப்போ நீங்க குட் அப்பாவா? ஆனால் நீங்க அன்னிக்கு அம்மாவை ரோட்டுல அடிச்சீங்க தானே! அம்மா ரொம்ப பாவம் தெரியுமா?” என்று தலையைச் சாய்த்து சோகமாக கேட்டாள்.
“நமக்கு ரொம்ப பிடிச்சவங்க ஒரு ஆபத்துல இருக்கும் போது அவங்களை காப்பாத்துனவுடனே நல்லவேளை எதுவும் ஆகலை அப்படின்னு நம்ம நினைச்சாலும் ஒரு பயம் அதிர்வு இருக்கும். அந்த பயத்துல தான் நான் அன்னிக்கு அம்மாவை அடிச்சேன்” என்று பொறுமையாக பதிலளித்தான் தீரஜ்.
அன்று ஆதிரா ஒடி வரும் போதே, கவனித்த தீரஜ் காரை வேகமாக நிறுத்தி காப்பாத்த ஒரு பக்கம் ஓடி வர, இன்னொரு பக்கம் நக்ஷத்ரா ஓடி வர, அவளைக் கண்ட அந்நொடி இது கனவா இல்லை நினைவா என்று ஒரு நொடி ஸ்தம்பித்து தடுமாறினான் தீரஜ்.
‘கண்டேன் சீதையை’ என்ற கூற்றிற்கு ஏற்றாற் போல் ஆறு வருடத் தீராத் தேடலின் பதில், முகவரியாய் அவனின் கண்களுக்குள் அவனின் பொம்மாயி விழ, அந்நொடியே அவளை தன் மனைவியாய் ஆக்கிக்கொள்ள துடித்த மனதை ஓரம் வைத்து, குழந்தையை காப்பாற்ற விரைந்து செல்வதற்குள், அங்கு நக்ஷத்ரா அக்குழந்தையை காப்பாற்றிவிட்டாள்.
அடுத்த நொடியே குட்டி யானை வண்டி நக்ஷத்ராவை ஏற்றியேயிருக்கும்… அதற்கு விடுவானா தீரஜ்! தன் உயிரை விட மேலாக காதலிக்கும் தன்னவளின் உயிரை பாதுகாப்பது மட்டுமே அவனின் இதயத்துடிப்பாய் இருக்கிறது. வண்டி மோதுவதற்குள் வேகமாக தன்னவளை தனக்குள் இழுத்து அணைத்து அவளை அடைகாத்து காப்பாற்றி பாதுகாத்தவனை அறைந்தே விட்டிருந்தாள் அவனின் பொம்மாயி.
நமக்கு மிகவும் பிடித்த ஒருவர் ஒரு பெரிய ஆபத்திலிருந்து மீண்டு வரும் போது கண்டிப்பாக அணைக்கத் தோன்றும். அப்படித் தான் தீரஜ் நக்ஷத்ராவை அந்நொடியே அணைக்க நினைத்தான். அவள் கொடுத்த அடி கூட அவனுக்கு இனிமையான சுகமாய் தான் இருந்தது ஆதிரா அவளை அம்மாவென்று அழைக்கும் வரை! தன் பொம்மாயியை அணைக்கத் துடித்த கைகளை ஆதிராவின் அம்மாவென்னும் அழைப்பால் அதிர்ச்சியில் உறைந்து கட்டுக்குள் கொண்டுவந்தவன் அவளுக்கு எதுவும் ஆகவில்லை என்றுணர்ந்தாலும் அந்த பயம், பதற்றத்தில் அவளை அடித்துவிட்டான்.
அப்போது அவன் நக்ஷத்ராவிடம் கூறிய வார்த்தைகள் அம்மாயிக்காக இருந்தாலும் அவன் மறைமுகமாக தன்னுடைய பொம்மாயியின் பாதுகாப்பிற்காகவும் அப்படி கூறினான். இன்னொருவரின் மனைவியாக தன் பொம்மாயி ஆகிவிட்டாள் என்றறிந்த அந்நொடியில் நடைப்பிணமாய் அவன் இதயம் வெடித்து சிதறிய பொழுது கூட அவனின் நேசமிட்ட மையலாய் அன்றும் இன்றும் என்றுமே நக்ஷத்ரா ஒருத்தி தான் இருக்கின்றாள்.
“ஆனாலும் நீங்க அடிச்சது தப்பு தானே. அம்மாக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்” என்று ஆதிரா அழுத்தமாகக் கேட்க, “ஆமா தப்பு தான் அம்மாயி. இனி நான் அம்மாவை அடிக்க மாட்டேன்” என்று மென் முறுவலுடன் நம்பிக்கை கொடுத்தான்.
“பிராமிஸ் பண்ணுங்க” என்று கையை நீட்டிய மகளிடம், “இந்த அப்பாவை நம்புங்க… சத்தியமா இனி அம்மாவை அடிக்க மாட்டேன் டா” என்று தீரஜ் மென்மையாக வாக்குறுதியளிக்க, “தாங்க் யூ அப்பா” என்று தீரஜின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள் ஆதிரா.
பிறந்ததிலிருந்தே தன் குடும்பத்தினரைத் தவிர யாரோடும் பழகாத ஆதிராவிற்கு… அப்பா என்னும் உறவில்லாத வலி ரொம்பவே இருந்தது. சொர்ணவள்ளி பாட்டி அவ்வளவு சொல்லும் போது அமைதி காத்து வந்தாலும், தன் மனதிற்குள்ளேயே, ‘என் கிளாஸ்ல எல்லாருக்கும் அப்பா வராங்க. எனக்கு மட்டும் இல்லை’ என்று பிள்ளையின் மனம் கதறிக்கொண்டு தான் இருந்தது. ஆனாலும் வயதிற்கு மிஞ்சிய முதிர்ச்சியால் அமைதி காத்த தீரஜின் அம்மாயி யாரிடமும் தன் உணர்வுகளை வெளிப்படுத்தவில்லை. அவள் தன் உணர்வுகளை முதலில் வெளிக்காட்டும் நபரும் தீரஜ் தான்.
தீரஜ், தன் தாயை அடித்தவன் என்கிற நெருடல் பிள்ளையின் மனதில் முதலில் இருந்தாலும், அரக்கு வேலியில் அவன் தன்னிடம் நடந்துக் கொள்ளும் முறை, தனக்கு பிடித்ததை வாங்கிக் கொடுப்பது, தன்னிடம் அன்பாக பேசுவது, அக்கறையுடன் பேசுவது, மகிழ்ச்சியுடன் பேசுவது பிள்ளைக்கு ரொம்பவே பிடித்து விட்டது. அதனால் இப்போது அவன் அப்பாவென்று தன்னை நிலைநாட்டும் போது தன் சந்தேகங்களையெல்லாம் தீர்த்து சந்தோஷத்துடன் அவனை தன் தந்தையாக ஏற்றுக் கொண்டாள் குட்டி ஆதிரா.