ஏற்கனவே அனைவரும் திவ்யா கத்தியதில் உறைந்திருக்க, அவள் நக்ஷத்ராவிடம் மன்னிப்பு கேட்க அனைவருக்குமே பேரதிர்ச்சி.
‘நான் இவனுக்கு நல்ல விதமா எதுவுமே பண்ணலையே! நேத்து அவன் கையையும் மனசையும் காயப்படுத்திருக்கேன். அதுக்கு நான் ஒரு சாரி கேட்கலை ஒரு கர்டிசிக்கு கூட இவன்கிட்ட தன்மையா பேசலை. ஆனால் இவன் தங்கச்சி என்னை ஒரு வார்த்தை சொன்னதுக்கே அடிச்சு மன்னிப்பு கேட்க வைச்சிட்டான்’ என்று தன்னையும் மீறி தீரஜை அதிர்ச்சியுடன் பார்த்தாள் நக்ஷத்ரா.
அவன் முகத்திலிருந்த உண்மை பெண்ணவளுக்கு பொய்யாக தெரியவில்லை என்பதை விட பிரியா இவளுக்கு புரிய வைத்திருந்தாள் என்பதே சரியாகும்.
ஆம், தன்னை எப்போதும் அழகி என்றெல்லாம் நக்ஷத்ரா நினைத்ததேயில்லை. அப்படியிருக்கும் போது, ஒரு பிள்ளையுடன் இருக்கும் தன்னை ஏன் அவன் மணக்க வேண்டும். பிரியா சொன்னது போல பணத்தை எதிர்பார்க்கும் ரகம் போலவுமில்லை… பிரியா தனக்கு விளக்கியப்பின்னரும் அவன் ஆதிராவிடம் பேசிய விதத்தை அறிந்தப்பின்னரும் தான் தன்னுடைய முந்தைய இரவின் பேச்சின் முட்டாள்தனம் தெளிவாக புரிந்தது. ஆதலால் இப்போதும் அவன் கண்களில் தெரியும் உண்மையை அலட்சியப்படுத்தாமல் ஆராய முயன்றாள்.
“உமி, உன்கிட்ட அவள் மன்னிப்பு கேட்குறாள்” என்று ரூபா முணுமுணுக்க, தன்னிலை மீண்டவள் திவ்யாவிடம் வேறுவழியின்றி தலையை மட்டும் அசைத்தாள்.
“நக்ஷத்ராவையும் ஆதிராவையும் இனி யாராவது ஒரு வார்த்தை பேசினால் நாங்க இந்த வீட்டுல இருக்க மாட்டோம்” என்று தீரஜ் அழுத்தமாகக் கூற, “சிம்மா இது உன் வீடு. இனி கண்டிப்பா இந்த மாறி நடக்காம பாத்துக்குறோம். அதுக்காக வீட்டை விட்டு போறோம்னுலாம் சொல்லாத! நீ இல்லாத வீடு எங்களுக்கெதுக்கு” என்று ஆதங்கப்பட்டார் அன்னை.
“ஏன்னா என் பொண்ணும் என் பொண்டாட்டியும்… அவங்க நிம்மதி எனக்கு ரொம்ப முக்கியம் அம்மா” என்று முடித்தவன், திவ்யா புறம் திரும்பி, “கடைசி வரைக்கும் என் தங்கச்சியா நீ இருக்கணும்னு நினைச்சால் இனி இப்படி பேசக்கூடாது. இதுக்கு அப்புறமும் ஏதாவது சொன்னனு தெரிஞ்சிது உன்னை தலைமுழுகிடுவேன் திவ்யா” என்று அதட்டியவன் வேகமாக அவனுடைய ஆபீஸ் அறைக்குள் சென்றிருந்தான்.
“உனக்கு இதெல்லாம் தேவை தான்” என்று அழுதுக்கொண்டிருந்த மகளை சுரேகா திட்டினாலும், தன் மகன் மனைவிக்காக வீட்டை தூக்கிப்போட கூட துணிந்துவிட்டானே என்கிற கவலை படர்ந்தது. அதற்காக மருமகளிடம் முகத்தையெல்லாம் தூக்கி வைக்கவில்லை.
“அடி வாங்கவே ஹைதராபாத்ல இருந்து வந்திருக்கியா திவ்யா… ஏமிரா இப்படி! போய் முகத்தை கழுவிட்டு வா” என்று அக்காவின் அறைக்குள் மகளை அனுப்பிய ரோகிணி, நக்ஷத்ராவிடம், “நீ எதுவும் மனசுல வைச்சிக்காதமா… அவள் கொஞ்சம் துடுக்குத்தனமா பேசுவா” என்று மருமகளின் கையைப்பிடித்தார் ஆறுதலாக.
“அக்கா வாங்க நம்ம சமையல் வேலை பார்ப்போம்” என்று சூழ்நிலையை இலகுவாக்கினார்.
“அத்தை நானும் சமைக்க வரேன்” என்று ஆர்வமாக கூறினாள் ரூபா.
“உனக்கு சமைக்க தெரியாதுலமா?”
“கொஞ்சம் தெரியும் அத்தை நீங்க சொல்லிக்குடுங்க நான் கத்துக்குறேன்” என்று புன்னகைத்தாள்.
“நானும் சமைக்க வரேன் அத்…தை” என்று தட்டு தடுமாறி வேறு வழியின்றி உறவுமுறை வைத்து பேச தொடங்கினாள் நக்ஷத்ரா. இனி இங்கே தான் இருக்க போகிறோம் என்றிருக்கும் போது, உறவுமுறை வைத்து அழைக்காமல் இருப்பது சாத்தியமில்லை என்றுணர்ந்து தன் மனதின் கவலை,பயம், பரிதவிப்பு எல்லாவற்றையும் பின் தள்ளி மனதிற்குள், ‘இன்னும் மூணு மாசம் தானே பாதி மாலையெல்லாம் கோர்க்குற நிலைவர வாய்ப்பேயில்லை’ என்று தன்னையே தேற்றினாள்.
திவ்யா, ரூபா மற்றும் நக்ஷத்ராவின் பக்கம் திரும்பவேயில்லை. அவளால் கண்டிப்பாக இந்த கல்யாணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் நாத்தனாரை அண்ணனிற்கு திருமணம் செய்துவைத்து புகுந்த வீட்டில் தன் ராஜ்ஜியத்தை நிலைநாட்ட எண்ணியவளுக்கு இப்போது ஏமாற்றம் கலந்த கடுங்கோபம். இதில் காதல் தோல்வி கல்யாணம் வேண்டாமென தீர்மானமாகயிருந்த தன் அண்ணன் எப்படி இப்படி கையில் குழந்தையுடன் இருக்கும் பெண்ணை திருமணம் செய்தான் என்கிற குழப்பமும் இருந்தது. யாரிடம் கேட்டாலும் பதில் வராதென்று உணர்ந்தவள், அண்ணனுக்கு பயந்தே அமைதி காத்தாள்.
ஆதிரா எழுந்த பின், வருணை அவளுக்கு அறிமுகப்படுத்தி விளையாட வைத்தான் தீரஜ். இதையெல்லாம் டைனிங் டேபிளில் அமர்ந்தபடி காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருந்த நக்ஷத்ரா கவனித்தாள்.
‘தீரஜ் சொன்னால் ஆதிரா நம்பி பழகுறாள். அதனால தான் இங்க வீட்ல எல்லார்கிட்டயும் சட்டுனு ஒட்டிக்கிட்டாள் போல’ என்று மனதில் அலசினாள்.
ரூபா தன் வீட்டில் இருப்பது போல இங்கேயும் கலகலவெனயிருந்தாள். நக்ஷத்ராவோ யாரோடும் ஒன்ற முடியாமல் அமைதியாக வேலைப்பார்த்தாள். இங்கே ஆதிராவின் நடவடிக்கையிலும் சில மாற்றங்களை உணர்ந்தாள் நக்ஷத்ரா. ஆதிரா சுட்டிப்பெண் தான் இருந்தாலும் அங்கே தந்தை வீட்டில் பெரிதாக சிரிக்கவேமாட்டாள். ஆனால் இங்கேயோ நிறைய சிரிக்கிறாள் நிறைய விளையாடுகிறாள் என்பதை விட தீரஜ் விளையாட சொல்லி கொடுத்தான் என்பதே உண்மை.
நேற்று நக்ஷத்ரா கூறியதெல்லாம் அவனுக்கு குத்திக்கொண்டிருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் மகளுடன் விளையாடுவது, மகளை அழைத்துக்கொண்டு பார்க் செல்வது என தன்னுடைய தந்தை உரிமைகளை அவன் விட்டுதரவேயில்லை. இன்று நக்ஷத்ராவிடம் மகளை கூறவைத்துவிட்டுத் தான் வெளியில் அழைத்துச் சென்றான் தீரஜ்.
ஆம், ஏனோ நக்ஷத்ராவால் தீரஜை இனி ஆதிராவின் விஷயத்தில் தப்பாக நினைக்க முடியவில்லை… காரணம் நேற்றைய குற்றஉணர்ச்சியோ? அல்லது தீரஜின் கண்கள் உணர்த்திய உண்மையோ? அல்லது அவளின் ஆழ்மனதின் ரீங்காரமோ? காரணம் அவளுக்கே தெரியவில்லை.
அன்றிரவு ஆதிராவை எப்போதும் போல் உறங்கவைத்துக் கொண்டிருந்தான் தீரஜ். அவன் தூங்கவைக்கும் வரை ஹாலில் அமர்ந்திருந்தாள் நக்ஷத்ரா. அங்கே டிவி பார்த்துக்கொண்டிருந்த திவ்யாவோ நக்ஷத்ராவை அவ்வப்போது முறைத்துக்கொண்டும், குறுகுறுவென பார்த்துக்கொண்டும் இருந்தாள். என்ன தான் திவ்யா மன்னிப்பு கேட்டாலும் அதில் உண்மையில்லையென்று நக்ஷத்ராவிற்கு புரியாமலில்லை.
அந்த பார்வை வீச்சை சந்திக்க பிடிக்காமல் வேகமாக எழுந்த நக்ஷத்ரா அறைக்குள்ளேயே சென்றுவிட்டாள். அன்று காலையிலேயே ஆதிரா உறங்கியிருந்ததால் இரவு சட்டென்று தூக்கம் வராமல் கீழே மண்டியிட்டு தன் தலையை கோதியபடி கதை சொல்லிக்கொண்டிருந்த தந்தையை பார்த்தவாறு கொட்ட கொட்ட விழித்திருந்தாள்.
“என்ன அம்மாயிக்கு தூக்கம் வரலையா?” என்று பாசமாக கேட்டவனை, “இல்லைப்பா ஆனாலும் நீங்க எனக்கு தூக்கம் வரும்வரை கதை சொல்லிட்டே இருக்கணும்” என்று செல்லமாக கட்டளையிட்ட மகளை பார்த்து, “சரிடா குட்டிமா” என்று புன்னகையுடன் கதையைத் தொடர்ந்தான்.
இன்று வாங்கிய புது மேஜையின் பக்கத்தில் அமைதியாக நின்றுக்கொண்டுயிருந்தபடி தந்தை மற்றும் மகளின் உரையாடலை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் நக்ஷத்ரா. தந்தையின் வாடையை இதுநாள்வரை மகள் அனுபவித்ததில்லை இனியும் அப்படி ஒன்று தன் மகளுக்கு கிடைக்காதென்று மனதளவில் நிறைய இரவுகள் மகளுக்காக தலையணையை நனைத்திருக்கிறாள். வீட்டிலோ பிரியாவிடமோ இதைப்பற்றி பகிர்ந்தால் எங்கே இரண்டாவது திருமணம் செய்யச்சொல்லி ஆரம்பித்து விடுவார்களோயென்று தனக்குள்ளேயே சில விஷயங்களுக்காக நிறைய நாட்கள் மருகி இருக்கிறாளே! இந்த வாழ்க்கை தனக்கு வேண்டாம் என்பதை தாண்டி தன் மகளுக்கு இப்போது தீரஜால் கிடைக்கும் சந்தோஷத்தையும் பாசத்தையும் இனம்புரியாத நிம்மதியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
எவ்வளவு நேரம் இப்படி அசைவின்றி பார்த்திருப்பாளென்று அவளுக்கே தெரியாது. இன்னும் மகள் தூங்கியபாடில்லை. இத்தனை நேரம் தீரஜ் மண்டியிட்டு அமர்ந்திருப்பதைக் கண்ட நக்ஷத்ரா, ‘இவ்வளவு நேரம் முட்டி போட்டு உட்கார்ந்திருக்கானே… அவனுக்கு கண்டிப்பா கால் வலிச்சிருக்கும்’ என்று சக மனுஷியாக அவள் யோசித்துக்கொண்டிருக்கும் போதே, “அம்மா நீங்களும் வாங்க” என்ற மகளின் அழைப்பில் சுயம் பெற்று அதிர்ந்தவள், “அ…து” என்று திக்கி திண்டாடினாள்.
அவள் திணறுவதை உணர்ந்த தீரஜ், “குட்டிமா அம்மா உங்களுக்கு இன்னிக்கு கதை சொல்லி தூங்க வைப்பாங்க. அப்பாவுக்கு கொஞ்சம் வேலை இருக்குமா” என்று மகளிடம் சமாளித்தவன், மகள் அடம்பிடிப்பதற்க்குள் வேகமாக எழுந்து வினோத் வீட்டிற்குச் செல்ல எத்தனித்திக்கும் போது, “சிம்மா இங்கே வாப்பா” என்று அறையிலிருந்து அழைத்தார் பாட்டி.
“சொல்லுங்க பாட்டி” என்று கட்டிலில் அமர்ந்திருந்தவரின் பக்கத்தில் அமர்ந்த தீரஜிடம் பொதுப்படையாக பேச்சை ஆரம்பித்தார் அம்பிகாவதி.
இங்கு அறையிலோ, “அப்பா ஏன்மா கிளம்பிட்டாங்க?” என்று சோகமாக கேட்ட மகளை காண நக்ஷத்ராவிற்கு பயமாகவே இருந்தது. ’என்ன இது ஆதிரா இப்படி மாறிட்டாள், ஒரு நிமிஷம் அவன் இல்லைனா கூட இப்படி சோகமாயிடறா’ என்று மனதில் குழம்பியபடி, “ஆதிரா இங்க பாரு உனக்கு பிடிச்ச பார்பி டால்” என்று விளையாட்டாக பேசியபடியே கப்போர்ட்டைத் திறந்து பொம்மையை எடுக்க, அவள் கண்ணில் பிரியா கொடுத்த முத்து மாலை டப்பா பட்டது.
அதை திறந்து பார்த்தவளோ, ‘இதுல நீ நியாயமா இருக்கணும். தீரஜ் அண்ணா உனக்கு பிடிச்ச மாதிரியோ இல்லை உன் நல்லதுக்காக ஏதாவது பண்ணும் போது கண்டிப்பா நீ கோர்த்தே ஆகணும். இது என் மேல சத்தியம்’ என்று அவள் கூறியது மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டேயிருக்க, இன்று காலை தீரஜ் தன்னையும் ஆதிராவையும் அவனின் தங்கையிடமே விட்டுக்கொடுக்காமல் பேசியது அவளையும் மீறி ஞாபகத்திற்கு வந்தது.
“ஐ முத்து மணி” என்று கட்டிலிலிருந்து ஓடி வந்த ஆதிரா, அன்னையிடமிருந்து டப்பாவை வேகமாக பிடிங்கிவிட்டு கட்டிலுக்குச் சென்றேவிட்டாள்.
“ஆது அதை கொடு” என்று பதறியவளுக்கு எங்கே மகள் அதை கோர்க்க தொடங்கி விடுவாளென்று பயம். ஆம், ஆதிராவிற்கு மாலையை செய்துமுடிக்க தெரியாது ஆனால் கோர்க்க தெரியும். வீட்டில் நக்ஷத்ரா வேலை செய்யும் போதெல்லாம் அன்னையை போல் அமர்ந்து கயிறில் முத்துக்களை கோர்ப்பது அவ்வப்போது பழக்கம்.
“எனக்கு தூக்கம் வரலைமா, நான் இதை செய்யப்போறேன்” என்று வேகமாக ஒரு முத்தை கோர்த்தேவிட்டது பிள்ளை.
“ஆது நோ” என்று கத்திய நக்ஷத்ரா அதை மகளிடமிருந்து கைப்பற்றி, கோர்த்த முத்தை கையோடு எடுக்கச்சொல்லி உறைத்த மூளையை, மனது தடுத்தது. ‘உனக்கு பிரியா எவ்வளவு பக்கபலமா இருக்காள்… இன்னிக்கு உன் மேல இருக்குற அக்கறையில உடனே வந்து அவ்வளவு பேசியிருக்காள், உனக்கு அவள் இருக்கானு நம்பிக்கை கொடுத்துட்டு அவள் மேல சத்தியம்னு சொல்லிட்டு போயிருக்காள். நீ தீரஜை அவ்வளவு காயப்படுத்துன அப்புறமும் இன்னிக்கு காலைல உன்னையும் உன் பொண்ணையும் எல்லார் முன்னாடியும் இப்படி விட்டுக்கொடுக்காமல் பேசணும்னு தீரஜ்க்கு எந்த அவசியமும் இல்லை. அந்த திவ்யாவுக்கு உன்னை பிடிக்கலை அப்படி இருந்தும் தீரஜ்க்கு பயந்து உன்னை தொந்தரவு செய்யாமல் இருக்காள்னா இந்த விஷயத்துக்கெல்லாம் நீயே ஒரு முத்தை எடுத்து நியாயமா கோர்த்திருக்கணும். கோர்த்ததை எடுத்து பிரியாவுக்கு பொய்யா இருக்க போறியா? இனியும் இந்த மாலை கோர்க்குற விஷயத்தில் பொய்யா தான் இருப்பியா?’ என்று அவளின் மனசாட்சியே கேள்வி கேட்டு அரிக்க, ‘இல்லை நான் நியாயமா தான் இருப்பேன்… எனக்கு மாலை கோர்க்க கூடாது ஆனாலும் முத்துக்கள் கோர்க்கும் நிலை வந்தால் நியாயமா இருப்பேன்… என் பிரியாக்கு கண்டிப்பா உண்மையா இருப்பேன்’ என்று உறுதிமொழி எடுத்தவள், கோர்த்ததை எடுக்காமல் பத்திரமாக உள்ளே வைத்துவிட்டாள்.
“அம்மா, அப்பா மாதிரி கதை சொல்லுங்க இல்லைனா அப்பாவை கூப்பிடுங்க” என்று ஆதிரா சிணுங்க, ‘இவளை இப்படியே விட்டால் அப்பா பைத்தியமே ஆயிடுவாள்… மூணு மாசம் அப்புறம் இந்த உறவு நீடிக்க போறதில்லை’ என்று மனதில் நினைத்தபடி, “கதை தானே நான் சொல்றேன்” என்று இதுவரை மகளுக்கு பெட் டைம் ஸ்டோரிஸ் சொல்லாதவள், இன்று முதல் முறை சொல்ல ஆரம்பித்தாள்.
“ஒரு ஊருல ஒரு பாட்டி வடை…” என்று நக்ஷத்ரா ஆரம்பிக்கும் போதே, “அம்மா இந்த கதையெல்லாம் வெரி ஓல்ட்… தீரஜ் அப்பா எனக்கு முயல் கதை, ஓநாய் கதை, சிங்கம் கதையெல்லாம் சொன்னாங்க. அந்த மாதிரி சொல்லுங்க” என்று மகள் அடம்பிடிக்க,
‘ஐய்யோ! திடீர்னு ஒரு கதையும் ஞாபகத்துக்கு வர மாட்டிங்குதே’ என்று நக்ஷத்ரா மனதில் புலம்பியபடியே யோசித்துக்கொண்டிருந்தாள்.