காதல் வந்தால் சுற்றம் மறந்துவிடும். காதலிக்கும் பெண்ணை உலகமாய் உயிராய் நினைக்கும். இப்போது தீரஜ் நக்ஷத்ராவை நினைப்பது போல் ஆனால் அதையும் தாண்டி தீரஜ் தன் பொம்மாயிக்காக அவன் செய்யும் விஷயம் என்பதைத் தியாகம் என்றுகூட சொல்லலாம். ஆம், தீரஜ் தன் பொம்மாயிக்காக இப்போது தியாகம் செய்துக்கொண்டிருப்பது அவனின் காதல்.
அவள் கழுத்தில் தாலி கட்டிய அந்நொடி கூட நக்ஷத்ரா அவனைப் பார்த்துக்கேட்ட கேள்விக்கு மட்டுமே தன் காதலை பதிலாக கொடுத்தான் தீரஜ். அதற்கு பின் எப்போதும் தன் மனைவியை காதலுடன் நெருங்கக்கூடாது என்று தனக்குள்ளேயே ஒரு எல்லைக்கோடு போட்டிருக்கிறான். தன் பொம்மாயிக்கு காதலுடன் பாதுகாப்பான அணைப்பில் கதகதப்பு கொடுக்கவேண்டுமெனவும், அவளின் வலிகளுக்கு மருந்தாய் தன் இதழால் மென்மையான முத்தங்களை கொடுத்து உனக்காக நான் இருக்கிறேன் பொம்மாயி என்று செயலால் உணர்த்த அவனின் உடம்பிலுள்ள ஒவ்வொரு செல்லும் அதிவேகமாக துடிக்கிறது.
ஆனாலும் அவனின் இந்த உண்மையான காதல் அவளுக்கு காமமாய் தெரிந்துவிடக்கூடாது என்பதால் தன் காதலை தன்னவளுக்காக மிகவும் கஷ்டப்பட்டு உள்ளடக்கியேவிட்டவன்,அக்காதலின் இன்னொரு பரிமாணமான நேசத்தை ஆழமாக, அளவில்லாமல் கொடுக்கிறான். இனியும் எப்பொழுதும் கொடுப்பான். இதில் அவன் காதலை நக்ஷத்ரா கடைசிவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் கூட சந்தோஷமாக அள்ளி அள்ளி கொடுப்பான் அவனின் நேசத்தை அவனுடைய நேசமிட்ட மையலிற்காக…
“என்ன உமை சந்தோஷமா இருக்க போல?” என்று கஸ்டமருக்கு பில்லிங் முடித்து அனுப்பிவிட்டு, தோழியை புன்னகையுடன் நெருங்கினாள் பிரியா.
“நானா?” என்று கேட்டாள் புரியாதவளாக. .
“பின்ன உன் பாட்டி சொர்ணவள்ளியா!”
என்று நக்கலடித்தபடி, செல்போன் ஃப்ரண்ட் காமெராவை ஆன் செய்து நக்ஷத்ராவின் அவளே உணராத புன்னகையை காட்டினாள் பிரியா.
அதைக்கண்டு நக்ஷத்ரா வியக்க, “இப்படி உன் முகம் மலர்ந்து நீ சிரிச்சு ஆறு வருஷம் ஆகுது. ரொம்ப சந்தோஷமா இருக்கு டி” என்று தோழிக்காக மனதார மகிழ்ந்தவளுக்கு இதனின் காரணகர்த்தா தீரஜாகத்தான் இருக்கமுடியும் என்றொரு யூகிப்பிருந்தது.
“சரி, மாலை எடுத்தியா இல்லை கோர்த்தியா?” என்று யோசனையுடன் கேள்வியெழுப்பினாள் பிரியா.
“இன்னும் முழுசா பதினைஞ்சு நாள் கூட முடியலை மேடம், இன்னும் எதுவும் எடுக்கலை இனி எடுக்கும் நிலை வரலாம்” என்று தன் கைப்பையிலிருந்து தான் செய்த பொருட்களை எடுத்தபடி கூறிக்கொண்டிருந்தாள் நக்ஷத்ரா.
“எடுக்கலை அப்போ கோர்க்குற நிலையும் வரலையா?” என்று சுவாரஸ்சியத்துடன் கேட்டாள் பிரியா.
“ஏய் உனக்கு என்ன தான் டி பிரச்சனை! ஆமா கோர்த்தேன் ஆறு முத்து போதுமா? இந்த ஆறு எடுக்குற நிலை கூட வரலாம். கடையில எவ்வளவு வேலை இருக்கு போயி பாரு முதல்ல” என்று தோழியை துரத்தினாலும் அதிலொரு புன்னகை கலந்த மலர்ச்சி நக்ஷத்ராவிடம் இருந்ததை பிரியா உணர்ந்தாள்.
“ஆளே இல்லாத கடையில யாருக்கு டீயாத்த சொல்றீங்க ஓனரம்மா” என்று பாவமாக முகத்தைவைத்து கேட்ட பிரியாவைப் பார்த்து சிரித்தேவிட்டாள் நக்ஷத்ரா.
இத்தனை நாட்கள் மகனுக்காக கத்தி மட்டும் கொண்டிருந்தவர், தீரஜிடமிருந்து நக்ஷத்ராவை பிரித்தே தீர்க்கவேண்டுமென தன் செல்லில் காசி விஸ்வநாதன் எண்ணை அழுத்தி கால் செய்தார்.
மறுப்பக்கம் ஃபோன் எடுக்கப்பட, “வணக்கம்…நான் சொர்ணவள்ளி…உங்க மருமக உமையாவோட ஆச்சி பேசுறேன்” என்று இவர் கம்பீரமாக ஆரம்பிக்க, சிலநொடி மௌனத்திற்குப் பின், “சொல்லுங்க” என்றொலித்தது காசிவிஸ்வநாதனின் குரல்.
“இனியாவது உமையா சந்தோஷமா இருக்கட்டும்மா. எங்களுக்கு தான் உங்க பேத்தியையும் எங்க பேத்தியையும் எங்களோட குடும்பமா வெச்சிக்க கொடுப்பினையில்லை. புது வாழ்க்கைல சந்தோஷமா இருக்கட்டும்” என்று வாழ்த்தியதோடு, லூசு பாட்டியின் முட்டாள் தனமானப்பேச்சை மேலும் கேட்கப் பிடிக்காமல் கால்லை தூண்டித்துவிட்டார்.
கார்த்திக்கேயனை பெற்றவரே இவ்வாறு சொல்லும் போதும் கூட சொர்ணவள்ளி பாட்டிக்கு புத்தி வந்தபாடில்லை. புத்தியை இழந்து மனசாட்சியை துறந்து திமிர் மற்றும் கர்வத்தின் மொத்த உருவமாயிருக்கிறார் சொர்ணவள்ளி.
அன்று மாலை தீரஜே கூப்பிட வர, அவன் அனுப்பிய மெசேஜை வைத்து அவன் எண்ணை தீரஜென சேமித்திருந்தாள் நக்ஷத்ரா.
அவர்கள் வீட்டிற்குள் வரும்போதே, “சிம்மா, நீ மறுபடியும் மாமா ஆகப்போற டா, திவ்யா முழுகாம இருக்காள்” என்று சந்தோஷத்துடன் கூறினார் சுரேகா.
அதை கேட்டு ஒரு அண்ணனாக முகமலர்ந்த தீரஜ், தங்கைக்கு கால் செய்து பேச,அங்கு நின்றிருந்த நக்ஷத்ரா, தன் மாமியாரிடம் மரியாதைக்கு வாழ்த்துகள் தெரிவித்துவிட்டு விலகினாள்.
அடுத்த மூன்று மணி நேரம் தீரஜிற்கு வேலையிருந்தது. மகள் மற்றும் மனைவியை அழைக்க ஆபீஸிலிருந்து சீக்கிரம் கிளம்புவதால் வீட்டில் வந்து மீதி வேலை பார்த்துவிட்டு மகளுடன் பார்க் சென்றான். இதுவே அன்றாட வாழ்க்கையாகிவிட, ஒரு வெள்ளிக்கிழமை மாலை, நக்ஷத்ராவையும் பார்க்கிற்கு வருமாறு அழைத்தான்.
யோசனையுடன் அவனுடன் பார்க்கிற்கு வந்தவள், ஆதிரா விளையாடிக்கொண்டிருந்ததை பார்த்த தீரஜிடம், “என்ன பேசணும்?” என்று அவன் கண்களை பார்த்து கேட்டாள். நக்ஷத்ரா எப்போதுமே தீரஜின் கண்ணை பார்த்து பேசுவதையே வழக்கமாக வைத்திருந்தாள். ஏனெனில் அவனின் கண்கள் காட்டும் உண்மை நேர்மை எப்போதும் அவன் கண்களில் தெரிகிறதா என்பதை அவ்வப்போது கவனித்துக்கொண்டேயிருப்பாள். அதே கண்கள் காட்டிக்கொண்டிருக்கும் உண்மையால் தான் இப்போது இப்படி சுதந்திரமாக பேசுகிறாள்.
“கரெக்ட்டா கெஸ் பண்ணிட்டியே” என்று பெருமையாக சொன்னவனை முறைத்தவள், “இதென்ன பெரிய கண்டுபிடிப்பா? ஏதாவது விஷயம் இருந்தால் மட்டும் தான் என்கிட்ட பேசுவீங்க மத்த நேரமெல்லாம் மௌனமா தானே இருப்பீங்க” என்று அவள் பாட்டுக்கு பேச, பேசும் அவளையே விழி அகலாமல் ரசித்தவனுக்கு தன் பொம்மாயியை முதன் முதலாக பார்த்த நாள் தான் ஞாபகத்திற்கு வந்தது. அன்று அவள் இருந்தது போல் துறுதுறுவென இப்போதுயில்லை தான் ஆனாலும் நக்ஷத்ராவிடம் முன்னேயிருந்த இறுக்கம் இப்போது சற்று மட்டுப்பட்டு மறைந்தது போல் உணர்ந்தவனுக்கு மனதில் லேசான நிம்மதி.
“உனக்கு ஸ்கூட்டி கார் டிரைவ் பண்ணவெல்லாம் பிடிக்கும் ஆனால் தனியா போகமாட்ட, பயமும் கூட!” என்று கேட்க, “ஆமா ஆனால் உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று புரியாமல் கேட்டாள் நக்ஷத்ரா.
“தெரியும்” என்று சொன்னவன், “ஓகே. பயம்ன்ற விஷயம் தான் அடிப்படையா உனக்கிருக்கு அதை நம்ம இப்போ அழிச்சிடலாம்” என்று அவன் இலகுவாகக் கூற, “என்ன சொல்றீங்க அது எப்படி முடியும்?” என்று வேகத்துடன் கேட்டாள் நக்ஷத்ரா.
“நீ அதை உணரணும். உன் பயம் போகணும்னா யு நீட் டூ ஃபேஸ் தி ஃபியர் நக்ஷத்ரா. இதுக்கு மட்டும் இல்லை. நீ எதுக்கு பயந்தாலும் ஃபேஸ் தி ஃபியர்னு உன் மனசுக்குள்ள சொல்லிப்பாரு கண்டிப்பா தைரியம் வரும்” என்று அவன் உறுதியாக கூற, “இப்போ நான் என்ன பண்ணணும்னு சொல்றீங்க?” என்று விழித்தாள் பெண்.
“உன்னை டிரைவிங் கிளாஸ்ல சேர்த்து விடுறேன். டூ வீலர் அண்ட் ஃபோர் வீலர் ரெண்டுமே கத்துக்கோ. பயம் உனக்கில்லைனு நினைச்சிக்கோ. அண்ட் கண்டிப்பா டிரைவிங் கிளாஸ்னா ஆம்பளைங்க சொல்லி கொடுப்பாங்க. டூ வீலர்க்கு நானே உனக்கு ஆம்பளையை சொல்லித்தர விடமாட்டேன்” என்று கூறியவனின் கூற்றில் நக்ஷத்ராவிற்கான பொசஸிவ்நெஸ் ரொம்பவேயிருந்தது. ஒரு ஆண் நல்லவனாகவே இருந்தாலும் தன் பொம்மாயியை தெரியாமலே கூட தொடக் கூடாது என்பதில் ஸ்திரமாய் இருந்தான்.
“ஏதாவது பொண்ணை சொல்லித்தர சொல்றேன் ஆனால் ஃபோர் வீலர்க்கு ஜென்ஸ் சொல்லித்தருவாங்க.ரொம்ப சேஃப்பா தான் இருக்கும். உனக்கு எப்போ என்ன பிரச்சனைனாலும் எனக்கு கால் பண்ணு எவ்வளவு பிசியா இருந்தாலும் நீ கால் பண்ணினால் கண்டிப்பா எடுப்பேன்” என்று முடித்தான். அதற்கு பின் நக்ஷத்ரா எதுவும் பேசவில்லை என்பதை விட இன்ப அதிர்ச்சியில் ஸ்தம்பித்திருந்தாள் என்பது தான் சரியாகும்.
அன்றிரவு ஆதிராவை தூங்கவைத்துவிட்டு தன் அறைக்குச் சென்றவன், கையில் ஒரு புக்குடன் திரும்பி வந்தான். அதை கண்ட நக்ஷத்ரா விழிக்க, “இது உனக்கு தான்… என்னைப் பொறுத்த வரைக்கும் என் பொம்மாயி” என்று அவனை மீறி காதல் கொண்ட மனது பேசிவிட அதை உடனே மாற்றி, “என் மனைவி எப்போவுமே தைரியமா, தன்னம்பிக்கையா, சந்தோஷமா பழைய துறுதுறு நக்ஷத்ராவா இருக்கணும். ஆகணும். அதை நினைச்சிட்டே படி. ஆதிராவை ஸ்கூல்ல விட்டுட்டு டெய்லி ஒரு மணிநேரம் கிளாஸ். முதல்ல டூ வீலர் கிளாஸ் நாளைக்கு ஸ்டார்ட் ஆகுது. சோ பி ரெடி” என்று அவன் உற்சாகமாக கூறிவிட்டுச் செல்ல,
தன் கையிலிருந்த புக்கை யோசனையுடன் பார்த்தவள், “The Secret” என்று அந்த புக்கின் பெயரை முணுமுணுத்தபடி, வேகமாக தன் கைப்பையிலிருந்த முத்துமாலையை எடுத்து மூன்று முத்துக்களை கோர்த்தாள்.
ஒன்று… அவளின் பயத்தை அவன் போக்க நினைப்பது, இரண்டாவது… அவளுக்கு பிடித்த விஷயத்தை அவளையே செய்ய வைக்கும் எண்ணம். மூன்றாவது… அவளை பழைய நக்ஷத்ரா போலாக்க நினைப்பது.
ரூபா மற்றும் பிரியா நக்ஷத்ராவிடம் மூன்றாவது விஷயத்தை வாய் வார்த்தையாக சொல்லியிருக்கிறார்கள் தான். ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் தீரஜ் மட்டுமே முனைந்தான். ஏனோ தீரஜ் அவளுடன் இருக்கும் எல்லாத் தருணங்களிலும் பேசும் சமயங்களிலும் அவளுக்கு பாசிட்டிவ் வைப்ஸ் நிறைய கிடைக்கிறது.
ஒரு செடியில் தண்டு (stem) எப்படி இணைக்கும் பாலமாக இருக்கிறதோ அதை போல் நம்பிக்கை வேராகயிருந்த தீரஜ் இப்போது நக்ஷத்ராவின் மனதிற்குள் அவனின் அவளுக்கான உண்மையான ஆழமான வார்த்தைகள் மூலம் இணைக்கும் பாலமாய் நக்ஷத்ராவின் மனதிற்குள் நல்லவனாக நுழைந்தான். ஒரு நல்ல மனிதனாக மட்டுமே…