அம்பிகாவதி பாட்டி தீரஜ் மற்றும் நக்ஷத்ராவை இணைக்க, அடிக்கடி நக்ஷத்ராவை தீரஜிடம் பேசவைக்கும் சூழ்நிலையை கொண்டு வந்தார்.
“நக்ஷத்ரா, தீரஜை சாப்பிட கூப்பிடுமா… நக்ஷத்ரா, தீரஜ் என்ன பண்றான்னு பாத்துட்டு வாமா” இந்த மாதிரி வேண்டுமென்றே செய்தார். இதை கண்டுப்பிடித்த தீரஜ், “எதுக்கு நக்ஷத்ராவை அடிக்கடி என்கிட்ட பேச வைக்க முயற்சி பண்றீங்கனு எனக்கு தெரியும் அம்மம்மா இனி அப்படி பண்ணாதீங்க!” என்று அறையில் தனியாகயிருந்த பாட்டியிடம் தெளிவாகக் கூறினான்.
“இல்ல சிம்மா, உன் நல்லதுக்காக” என்று பாட்டி ஆரம்பிக்க,
“ஒரு விஷயம் நடக்கணும்னா அது உண்மையா உணர்ந்து நடக்கணும் அம்மம்மா,அப்படி அது நடக்கலைன்னா விட்டுடுங்க” என்று தீர்மானமாக முடித்தவனிடம் வேற என்ன தான் பேச முடியும்.
நாட்கள் அப்படியே நகர ஆரம்பிக்க, தீரஜின் தொடர் நல்ல எண்ணங்கள் மற்றும் நடவடிக்கைகளால் கோர்த்த மாலையில் முத்துக்கள் எறிக்கொண்டேயிருந்தது. நக்ஷத்ரா காரோட்ட கத்துக்கொண்டிருந்தாள். முன்னே வெளி ஆண்களிடம் பேசாது தவிர்த்தவள், இப்போது பேசவேண்டிய விஷயம் இருந்தால் பேசுகிறாள்.
அன்று ஆதிராவை பள்ளியில் விட்டப்பின் நக்ஷத்ராவை அவளின் டிரைவிங் கிளாஸில் விட, காரிலிருந்து இறங்கியவள் கதவைச் சாற்றாது பிடித்து, “தாங்க்ஸ்” என்று தீரஜின் கண்களைப் பார்த்தாள்.
“எதுக்கு?” என்று புரியாமல் கேட்டான் தீரஜ்.
“தி சீக்ரட் புக் படிச்சிட்டேன். லைப்போட சீக்ரட் என்னனு புரிஞ்சிக்கிட்டேன்.நம்ம பாசிட்டிவா திங்க் பண்ணினால் நமக்கு எல்லாமே பாசிட்டிவா மட்டும் தான் நடக்கும்” என்று அவனைப் பார்த்து புன்னகைத்தாள் நக்ஷத்ரா.
“குட்…இது தான் லைப்போட மந்த்ரா” என்று மென் முறுவலுடன் கூறியவனிடம், “நிறைய ஃபிலாசஃபி புக்ஸ் படிப்பீங்களா?” என்று ஆர்வமாக கேட்டாள்.
“அப்படினு சொல்ல முடியாது ஆனால் புக்ஸ் படிக்க ரொம்ப பிடிக்கும்” என்று பதிலளித்தவன் அவளிடம் விடைப்பெற்று கிளம்பினான்.
ஆதிராவை பள்ளிக்கு கிளப்புவது, அவளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது என்று மகளுக்கு எல்லாவுமாய் தீரஜ் இருக்க, இனி தந்தை இல்லாமல் ஆதிரா எப்படி இருக்கப் போகிறாள் என்ற எண்ணம் நக்ஷத்ராவிற்கு பெரிய பயத்தைக் கொடுத்தது.
அந்த சனிக்கிழமை மாலை பிரைவேட் டெரேஸில் தன் ஓவியப்பலகையில் மகளை தூக்கி வைத்திருந்தபடி வரைந்துக்கொண்டிருந்தான் தீரஜ். இப்போதெல்லாம் வார இறுதியில் வினோத் மற்றும் மனோஜ் குடும்பத்தினர் தீரஜின் வீட்டில் குழுமிவிடுகின்றனர்.நக்ஷத்ரா எவ்வளவு போராடினாலும் விடுமுறைகளில் ரோகிணி தான் அடம்பிடித்து சமைக்கிறார்.
முன்னாடியெல்லாம் வினோத் மற்றும் மனோஜிடம் பேசவே தயங்கும் நக்ஷத்ரா, இப்போது கொஞ்சம் பேச ஆரம்பித்திருந்தாள். அவ்வப்போது அவர்கள் செய்யும் காமெடியை கண்டும் வாய்விட்டு சிரிக்கிறாள்.
“அப்பா, நானும் வரையணும்” என்று ஆதிரா ஆசையாக கேட்க, ”என் அம்மாயிக்கு இல்லாததா” என்று மகளிடம் பிரஷ் கொடுத்து அவள் கிறுக்குவதை அதீத ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் தந்தை. அதை கண்ட நக்ஷத்ராவிற்கோ அக்காட்சியே அழகான ஓவியமாய் காட்சியளித்தது.
“உமி, அம்மாவும் அப்பாவும் நீ பேச மாட்றனு ரொம்ப ஃபீல் பண்ணாங்க” என்று தயங்கியபடி சொன்னாள் ரூபா. அதற்கு நக்ஷத்ரா மௌனமாகவேயிருந்தாள்.
அன்றிரவு மகளை தூங்கவைத்தவன் நக்ஷத்ராவிடம், “அடுத்த மாசம் ஆதிராவுக்கு ஃபிஃப்த் பர்த்டே வருது. நம்ம ஹால் புக் பண்ணி அவளுடைய ஃபிரண்ட்ஸ் எல்லாரையும் இன்வைட் பண்ணி கொண்டாடலாம். ஆதிராவுக்கு பர்த்டே டிரஸ், கிபிட்ஸ் எல்லாம் வாங்கணும் நக்ஷத்ரா. அப்படியே நீயும் உனக்கு தேவையானது வாங்கிக்கோ, பர்த்டே டெகரேஷன் தீம் என்னனு யோசி” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டான். ஆனால் இங்கு நக்ஷத்ரா தான் அசைவற்று ஸ்தம்பித்திருந்தாள்.ஏனெனில் ஆதிரா பிறந்ததிலிருந்து ஒருமுறை கூட ஹாலில் பிறந்தநாள் கொண்டாடியதில்லை.
தீரஜிற்கு தோன்றியது ஏன் தனக்கு இத்தனை வருஷம் தோன்றவில்லை என்று தன் மீதே கோபம் பெண்ணவளுக்கு. மகளின் பிறந்தநாள் எந்தக்கிழமை வருகிறது என்பதைப் பார்க்க காலெண்டரில் கண் பதித்தவள் அப்போது தான் அன்றைய தேதியை கவனித்தாள்.
“இன்னும் ரெண்டு நாள்ல மூணு மாசம் முடியுதே” என்று முணுமுணுத்தபடி தலையைப் பிடித்து அமர்ந்தாள்.
இரண்டு நாட்கள் கடந்திருந்தது. அன்று விடுமுறை என்பதால் ஆதிராவை வீட்டில் விட்டு மாலை பிரியாவைச் சந்திக்க பீச்சிற்குச் சென்றாள். ஆதிரா, தாய் வீட்டில் இல்லாமல் தந்தையுடன் இருக்க பழகியிருந்தாள் என்பதை விட தீரஜின் அந்த தூய்மையான பாசம் பிள்ளையை அப்படி மாற்றியது.
கடலை அமைதியாக வெறித்துக்கொண்டிருந்த நக்ஷத்ராவை யோசனையுடன் பார்த்த பிரியா, “மாலையை எடு உமை,கவுண்ட் பண்ணனும்” என்று லேசான பதற்றத்துடன் கேட்டாள். பிரியாவிற்கு தீரஜின் மீது நம்பிக்கையிருந்தது தான் ஆனாலும் பயம். ஏனெனில் இது தோழியின் வாழ்க்கை விடயம் ஆயிற்றே!
தன் கைப்பையிலிருந்து மாலையை எடுத்த நக்ஷத்ரா அதை பிரியாவிடம் நீட்ட, திக் திக் மனதுடன் அதை வாங்கிய பிரியா, ”ஒண்ணு, ரெண்டு” என்று மனதிற்குள் எண்ண ஆரம்பிக்க, எண்ணிக்கொண்டிருக்கும் போதே பதற்றத்தில் கவுண்ட்டை தவறவிட்டாள். மறுபடியும் முதலிலிருந்து எண்ணியவள், “பதினைஞ்சு,பதினாறு,பதினேழு” என்று சொல்லிக்கொண்டே, ”மொத்தம் எவ்வளவு டி?” என்று வேகமாக கேட்டாள்.
“இருபத்தி அஞ்சு” என்று நக்ஷத்ரா சொல்ல, ”அப்பாடி” என்று நீண்ட பெருமூச்சுவிட்ட பிரியா, “சப்பா… கொஞ்ச நேரத்துல எனக்கு மினி ஹார்ட் அட்டாக்கே வந்திருச்சு டி, முடியலை. என் வாழ்க்கைக்கு கூட நான் இப்படி பதற மாட்டேன், மாலை பாதிக்கு மேலயே தாண்டிருச்சு” என்று கூறும்போதே முகத்தில் தோன்றிய புன்னகையை தோழிக்கு பயந்து அடக்கினாள் பிரியா.
மௌனமாக கடல் அலைகளை பார்த்துக்கொண்டிருந்த நக்ஷத்ராவை, “பாதி மாலை கூட நீ கோர்க்கலைன்னா யார் தடுத்தாலும் நானே உன்னை என்கூட கூட்டிட்டு போயிடுறேன். உன் அப்பாவையும் நான் கன்வின்ஸ் பண்றேன்னு சொன்னேன்.ஆனால் நீ பாதி மாலைக்கு மேலயே கோர்த்துட்ட!” என்று பிரியா கூறி முடிக்கும் போதே, “அதனால” என்றாள் நக்ஷத்ரா கேள்வியாக.
“இனி என்னனு நீ தான் முடிவு பண்ணனும் உமை” என்று தோழியிடமே,அவளின் வாழ்க்கைக்கான முடிவை விட்டுவிட்டாள் பிரியா. ஏனெனில் நக்ஷத்ராவின் வாழ்க்கைக்கான வழியை பிறர் கொடுக்கலாம். ஆனால் வாழ்க்கைக்கான முடிவு அது உடையப்பட்டவர் தான் எடுக்கவேண்டும் என்பதில் உறுதியாகயிருந்தாள்.
சற்று நேரம் அங்கே அசாத்திய அமைதி நிலவியது. ”நான் இன்னிக்கு ஆதிராவை கூட்டிட்டு வரல பிரியா. முதல் தடவையா என் பொண்ணை நான் இல்லாத இடத்துல விட்டுட்டு வந்திருக்கேன். ஏன்னு தெரியுமா? ஆதிரா அவளோட தீரஜ் அப்பாக்கூட இருக்காள்.இந்த உலகத்துல என்னை விட ஆதிராவை யாராலும் பாதுகாப்பா பார்த்துக்க முடியாதுனு நினைச்சேன் டி,ஆனால் தீரஜ் ஆதிராமேல வைச்சிருக்குற அன்பு, பாசம், அக்கறையால என்னைவிட ஒரு படிமேலனு ப்ரூவ் பண்ணிட்டாரு” என்று சொல்லி முடிக்கும் போதே நக்ஷத்ராவின் கண்களில் கண்ணீர் ஆறாய் ஓடியது.
“அழாத உமை” என்று பிரியா ஆறுதல் படுத்த,
“இது அழுகை இல்லை பிரியா சந்தோஷக் கண்ணீர்” என்று கூறியபடி கண்களை துடைத்த நக்ஷத்ரா, “எனக்கு தீரஜை ஒரு மனுஷனா பிடிச்சிருக்கு பிரியா,இன்ஃபாக்ட் ஒரு மரியாதை கூட அவர் மேல வந்திருச்சு. ஆதிராவால அவளுடைய அப்பாவை பிரிஞ்சு இனி இருக்கவே முடியாது. என் சுயநலத்துக்காக என் பொண்ணுடைய சந்தோஷத்தையும் வருங்காலத்தையும் நான் கெடுக்க விரும்பலை. தீரஜோட வீட்டுல அவருக்கு மனைவியா இருந்தால் தான் என் பொண்ணுக்கு அப்பான்ற உறவு, பாசம், அன்பு நிலைச்சிருக்கும்னா எனக்கு அதுல ஆட்சேபனை இல்லை” என்று தெளிவாக கூறி முடித்தவள் பிரியாவை பார்த்தாள்.
“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு உமை, உன்னுடைய தோழியா உனக்காக கேட்குறேன். உன்னால அவர் கூட மனைவியா ஒரு புது வாழ்க்கை வாழ முடியுமா?” என்று தயக்கம் கலந்த யோசனையுடன் கேட்டாள்.
“தெரியலை பிரியா, ஆனால் அவரால எனக்கு செக்ஷுவல் டார்ச்சர் வராது. அது எனக்கு கண்டிப்பா தெரியும்” என்று நம்பிக்கையுடன் கூறிய நக்ஷத்ரா, பிரியாவிடம் வேண்டுமென்றே தன் மனதை கட்டுப்படுத்தி தீரஜின் நற்குணங்களை விவரிக்காமல் மிகவும் சுருக்கமாகத் தான் கூறினாள்.
ஏன்? ஏன் நக்ஷத்ரா மனதை கட்டுப்படுத்தவேண்டும்? ஏன் தீரஜின் நற்குணங்களை அவளால் பிரியாவிடம் முழுதாக விவரிக்கமுடியவில்லை?
ஏனெனில் கடந்த சில நாட்களாகவே நக்ஷத்ராவிற்குள் தீரஜ் ஒரு தாக்கத்தை உண்டாக்கியிருந்தான்.ஆம், ஒரு ஆழமான தாக்கம்.
தீரஜின் கண்கள் காட்டும் உண்மை, நேர்மை, அக்கறை, பாசம் எல்லாமே நக்ஷத்ராவைத் தாக்கியது.
விஷயமிருந்தால் மட்டுமே பேசுபவனின் இயல்பில் முதலில் நிம்மதியென்றிருந்தவள் இப்போது அவன் எப்போது தன்னிடம் பேசுவானென்று நினைக்க ஆரம்பித்துவிட்டாள் என்பதை விட தீரஜ் அவளுள் அப்படியொரு தாக்கத்தை உருவாக்கியிருந்தான்…
தீரஜுடன் இருக்கும் தருணங்களில் தாயின் கருவறைக்குள் இருப்பது போன்ற பாதுகாப்பான உணர்வு, கதகதப்பை உணர்கிறான் நக்ஷத்ரா… இப்படி பெண்ணவளின் மனதை புரட்டிப்போட்டு தாக்கியிருந்தான் தீரஜ்…
நம்பிக்கை வேராக(root) நக்ஷத்ராவின் வாழ்க்கையில் தொடங்கிய தீரஜின் அத்தியாயம், அவனின் உண்மையான வார்த்தைகளால் இணைக்கும் பாலமாய் ஒரு தண்டைப்(stem) போல், நல்ல மனிதனாய் மட்டும் அதன் பின் நுழைந்தவன்… இப்போது, ஒரு செடியிலுள்ள இலை, சூரிய ஒளியைப்(light) பெற்று அதை ஆற்றலாக்கும்(energy) தன்மையுடையதோ அதைப்போலவே தீரஜும் கருப்பாகயிருந்த நக்ஷத்ராவின் வாழ்க்கையில் இப்போது ஒரு இலையாய் ஒளி கொடுத்து. அவளுக்கு தெம்பும்(energy) கொடுக்கிறான். இப்போது அவனை நினைத்தாலே அவள் மனதில் பச்சை பசேலென்று தோன்றும் இலையை(leaf) போல் இனிமையான உணர்வைக் கொடுக்கும் இனியவனாகி விட்டான்.
“எனக்கு இருபது நாட்கள் பெங்களூர் பிரான்ச் வர சொல்லிருக்காங்க உமி. நீ பாத்துப்ப தானே” என்று அக்காவின் கைகளைப் பிடித்த ரூபா பரிதவிப்புடன் கேட்க,
“எனக்கென்னடி, நீ நிம்மதியா போய்ட்டு வா.சரி தனியாவா போற” என்று அக்கறையுடன் கேட்டாள்.
“நான் தனியா போக ரெடி தான். இந்த மனோஜ் தான் விட மாட்றான். அவனும் லேப்டாப் தூக்கிட்டு கூடவே வரான்” என்று சிரித்துக்கொண்டே கூறிய தங்கையின் கண்களில் மனோஜிற்கான காதலை கண்ட நக்ஷத்ராவிற்கு தீரஜின் கண்கள் தான் ஞாபகத்திற்கு வந்தது.
“அம்மா இங்க பாருங்க! அப்பா என்னை வரைஞ்சிருக்காங்களே” என்று சந்தோஷமாக தன் வரைப்படமிருந்த டிராயிங் பேப்பரைக்காட்டினாள் ஆதிரா.
அதைக்கண்டு வியந்த நக்ஷத்ரா தன் மகளையும் வரைப்படத்தையும் மாறி மாறி ஆச்சரியத்துடன் பார்த்தாள். அச்சு அசல் ஆதிரா முகத்திலிருந்து,அவள் அணிந்திருந்த உடை. அவள் கையிலிருந்த டெட்டி பியர் வரை எல்லாவற்றையும் நகல் எடுத்தது போல் அப்படியே தீர்க்கமாக அழகாக வரைந்திருந்தான் தீரஜ்.
“சூப்பரா இருக்கு ஆது” என்று ரசித்துக்கொண்டிருந்த அம்மாவை, தீவிரமாக பார்த்த பிள்ளை, “அம்மா… எனக்கு ஒரு ஸ்டோரி புக் வேணும்” என்று பாவமாக முகத்தை வைத்து கேட்டாள்.
“என்ன ஸ்டோரி புக் மேடம்?” என்று மகளின் மூக்கை செல்லமாக கிள்ளினாள் தாய்.
தன் அம்மாவின் மடியிலமர்ந்த ஆதிரா,ரகசியம் பேசுவது போல் அம்மாவின் காதோரம் தன் சின்ன கையை வாய் பக்கம் மறைத்து, ”அப்பா ரூம்ல ஒரு கப்போர்ட் இருக்கு. அதை திறந்து ஒரு புக் எடுத்து நான் ஓபன் பண்ணி பார்த்தேனா! அப்போ அப்பா என்கிட்ட அதை மெதுவாக வாங்கி வேற ஒரு நியூ ஸ்டோரி புக் கொடுத்துட்டாங்க” என்று ஏமாற்றத்துடன் கூறினாள்.
“அதான் அப்பா வேற ஒரு புக் கொடுத்துட்டாங்களேடா” என்று மகளிடம் கொஞ்சிப்பேசினாள் நக்ஷத்ரா.
“இல்லை எனக்கு அந்த புக் தான் வேணும்” என்று அடம்பிடித்தாள் ஆதிரா.
“சரி. இரு நான் அப்பாக்கிட்ட பேசி வாங்கித்தரேன்” என்று அப்போதைக்கு மகளை சமாளித்தாள்.
அன்றிரவு வேலையை முடித்து ஹாலிற்கு யோசனையுடன் வந்த தீரஜை சாப்பிட அழைத்தாள் நக்ஷத்ரா. தீரஜ் பாட்டியிடம் அவ்வாறு கூறிய பின், பாட்டியே அவனை சாப்பிட அழைக்க, கடந்த சில நாட்களாக பாட்டியை முந்திக்கொண்டு நக்ஷத்ராவே விருப்பத்துடன் அவனை தினமும் சாப்பிட அழைக்கிறாள்.
டைனிங் டேபிளில் அமர்ந்தவன் பாட்டி மற்றும் நக்ஷத்ராவை பொதுப்படையாக பார்த்து, “நெக்ஸ்ட் வீக் யுஸ்ஏல(USA) ஒரு கான்பரன்ஸ் இருக்கு. நான் அதுக்கு கண்டிப்பா போகணும்” என்று கூறியபடி தன் செல்லையெடுத்து வினோத்திற்கு கால் செய்து உடனே வீட்டிற்கு வரச் சொன்னான்.