அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் வீட்டிற்கு வந்த வினோத், போனவாரம் தான் புதிதாக ஒரு கார் வாங்கியிருந்தான்.
“எவ்வளவு நாள் சிம்மா, டிக்கெட் புக் பண்ணியாச்சா” என்று வரிசையாக கேள்விகளை அடுக்கினார் அம்பிகாவதி. நக்ஷத்ராவோ அமைதியாக நின்றிருந்தாள். அவளின் அமைதிக்குள் ஒரு பரிதவிப்பிருந்தது.
“வினோத், எனக்கு ரெண்டு நாள்ல ஃப்ளைட்.. மோஸ்ட்லி ஒன் வீக் டிராவல் தான் இருக்கும் பட் ரிட்டர்ன் இன்னும் கன்பர்ம் ஆகல. மனோஜும் இந்த வீக்கெண்ட் பெங்களூர் கிளம்புறான் சோ நான் திரும்பி வர வரைக்கும் எல்லாரையும் பத்திரமா பார்த்துக்கோ” என்று கூறியவனின் கண்கள் எல்லாரையும் குறிப்பிட கடைசியாக நக்ஷத்ராவில் நிலைத்து நிற்க, அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்! என்பதற்கேற்ப,
நக்ஷத்ராவும் அப்போது தீரஜை தான் பார்த்தாள் என்பதை விட தன் பரிதவிப்பை வேகமாக மறைத்து உள்ளடக்கி அவனின் கண்களை ஆழ்ந்து அழமாக கவனித்தாள்.
தீரஜின் கண்களை இதயத்தின் கண்களாய் இத்தனை நாட்கள் நோக்கியவள் இதுவரை ஆழ்ந்து ஆராயந்ததில்லை. ஆனால் இன்று இந்நொடி அவனின் கண்களை ஆழமாகப்பார்த்தவள், அதில் தெரிந்த விஷயத்தை கண்டு ஸ்தம்பித்த அந்நொடி அவளின் கண்கள் விரிந்தது.. ஏனெனில் தீரஜின் கண்களில் நக்ஷத்ரா கண்டது காதல் காதல் காதல் மட்டுமே!
இருவரின் விழிகளும் இமைக்காமல் இருவரை நோக்கியபடியேயிருக்க, “அப்பா” என்ற சத்தத்தில், முதலில் தன்னிலை மீண்ட தீரஜ், மகளைத் தூக்கி மடியில் அமர்த்திக்கொண்டு, “சொல்லுங்க குட்டிமா” என்று மகளுக்கு தோசையை ஊட்டிவிட ஆரம்பித்தான்.
“நீங்க ஊருக்கு போயிட்டீங்கனா! எனக்கு ரொம்ப போர் அடிக்கும்” என்று சிணுங்கினாள் மகள்.
“அப்பா ஒன் வீக்ல வந்திடுவேன்மா.. உங்களுக்கு ஊர்லயிருந்து என்னலாம் வாங்கிட்டு வரணும்” என்று மகளிடம் ஆர்வமாக கேட்டான்.
அதுக்கு ஒரு லிஸ்டே போட்ட ஆதிராவை, “ஆது போதும் நிறுத்து” என்று மகளை அடக்கினாள் நக்ஷத்ரா.
“நீ கவலைப்படாத மச்சான்! நான் பாத்துக்குறேன்” என்று நம்பிக்கை கொடுத்தான் வினோத்.
அன்றிரவு எப்போதும் போல் மகளை தூங்கவைத்துக்கொண்டிருந்த தீரஜிடம் பேசலாமா வேண்டாமா என்று மனதில் தயக்கத்துடன் ரொம்ப நேரமாக பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தாள் நக்ஷத்ரா.
ஆதிரா உறங்கியப்பின் எப்போதும் போல் மகளுக்கு போர்வை போர்த்தியவன் நக்ஷத்ராவைப் பார்த்து, “ரூபாவும் பெங்களூர் போறாள். வேணும்னா நான் வர வரைக்கும் நீயும் ஆதிராவும் உன் அப்பா வீட்ல இருந்திட்டு வாங்க.. அம்மம்மாவை பாக்க சித்தியை வர சொல்றேன்” என்று தீரஜ் கூற,”இல்லை வேண்டாம்.. வந்தால் புருஷனோடு தான் வரணும்னு அப்பா சொல்லிட்டாங்க. எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை” என்று அவள் முடிக்க, எப்போதும் போல் ஒரு தலையசைப்புடன் தீரஜ் செல்ல எத்தனிக்க, “வந்து.. அத்தை கால் பண்ணினாங்க.. நான் நீங்க யுஸ்ஏ கிளம்புறதை சொல்லிட்டேன்” என்று என்ன பேசுவதென்று தெரியாமல் தடுமாறினாள்.
அவ்வப்போது சுரேகா மருமகளிற்கு கால் செய்து பேசுவதுண்டு .“நானே அம்மாக்கிட்ட சொல்லிட்டேனே” என்று யோசனையுடன் சொன்னவனிடம், “அது.. விசா எடுத்தாச்சா” என்று தயக்கத்துடன் கேட்டாள்.
“ஏற்கனவே யுஸ்ஏ போயிருக்கேன்.. அந்த விசா வேலிடிட்டி இருக்கு சோ டிக்கெட் மட்டும் தான்” என்று பதிலளித்துவிட்டு நகர்ந்தான்.
‘என்ன ஆச்சு நக்ஷத்ரா உனக்கு.. அவர் எப்போ பேசுவார்னு இப்போலாம் என் மனசு நினைக்குறது உண்மை.. ஆனால் நீயே அவர்கிட்ட ஏதோ பேச்சு கொடுக்க பேசுற! ஏன் அவர் ஒரு வாரம் யுஸ்ஏ கிளம்புறேனு சொன்னதலயிருந்து உன் மனசு ஒரு மாறி பரிதவிப்பா இருக்கு’ என்று மனதிற்குள் குழம்பியவள், எப்போது தூங்கினாலென்று அவளுக்கே தெரியவில்லை.
அடுத்த இரண்டு நாட்கள் வேகமாக ஓட, தந்தை கிளம்புவதால் அழுதுக்கொண்டிருந்த மகளைத் தூக்கி நீண்ட நேரமாக ஆறுதல்படுத்தி, சிரிக்கவைத்த தீரஜின் கன்னத்தில் முத்தமிட்ட ஆதிரா, “மிஸ் யு அப்பா.. லவ் யு” என்று தந்தையின் தோளில் சாய்ந்தாள்.இதைக் கண்ட குடும்பத்தினர் அனைவருக்கும் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது என்றால் நக்ஷத்ராவின் கண்களிலோ கலவையான உணர்வுகளுடன் கண்ணீர் சூழ்ந்தது. தந்தை மகள் பாசத்தில் சந்தோஷக் கண்ணீர் ஒரு பக்கமிருக்க… தீரஜ் கிளம்புவது அவளுக்கு சந்தோஷமாக இல்லை.. அதற்காகவும் சூழந்தது கண்ணீர்.. பரிதவிப்புடன்.. யாரும் பார்ப்பதற்குள் வேகமாகக் கண்களைத் துடைத்தாள்.
“அப்பாவும் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன் அம்மாயி.. லவ் யு டா குட்டிமா” என்று மகளின் கன்னத்தில் முத்தமிட தோன்றிய மனதை அடக்கியவன், தன்னுடைய தீர்மானத்தில் உறுதியாகயிருந்தான்.
அன்று நக்ஷத்ரா தன்னை ஆதிரா விஷயத்தில் அவ்வாறு கீழ்த்தனமாக பேசிய அந்நொடியே முடிவெடுத்திருந்தான்.. நக்ஷத்ரா தன்னை மனதார கணவனாக ஏற்றுக்கொண்ட பின் மட்டுமே ஆதிராவிற்கு அவளின் தந்தையாக அவன் உரிமையாக முத்தம் கொடுப்பானென்று.. அப்படி ஒரு தருணம் நடக்கவில்லையெனில் கடைசி வரை அவனால் தன் செல்ல மகளை முத்தமிட கொடுப்பிணையில்லாமல் போய்விடும்!
அனைவரிடமும் பொதுப்படையாக விடைப்பெற்ற தீரஜ், கடைசியாக நக்ஷத்ராவைப் பார்த்து தலையசைக்க, அவளும் தலையசைத்தாள். இதைக் கவனித்த குடும்பத்தினர் அனைவருக்கும் அத்தனை நிம்மதி என்றால் ரூபாவிற்கோ அவ்வளவு சந்தோஷம். ஒரு பரஸ்பர தலையசைப்பு இவர்கள் அனைவருக்கும் அத்தனை நம்பிக்கை கொடுத்தது.
“நீயெல்லாம் வெறும் வாய் சவடா தான் டா… உன் அண்ணனை பாரு.. அவன் பேசாம கண்ணுலயே காதல் பண்றான்” என்று மனோஜிடம் கிசுகிசுத்தான் வினோத்.
“யாரு நானு வாய் சவடா வா.. யோவ் அண்ணா காதலிக்குற பொண்ணு கிட்ட தைரியமா நாலு வார்த்தை பேச வக்கில்லை! உங்களுக்கு வெட்டி வாய் தான்” என்று மெதுவாக கிண்டல் செய்தான் மனோஜ்.
“நாலு என்ன டா நாற்பது வார்த்தை பேசுறேன்! உனக்கு என் பவரைக் காட்டுறேன்” என்று மனோஜிடம் கெத்தாக பேசினான் வினோத்.
வினோத்துடைய காரில் தீரஜை வழியனுப்பிவிட்டு திரும்பினார்கள் மனோஜ் மற்றும் வினோத்.”அண்ணா, நான் சொல்ற ரூட்ல போங்க” என்று மனோஜ் சொல்ல, வினோத்தும் மனோஜிற்கு ஏதோ வாங்கவேண்டும் போல என்று நினைத்து அவன் சொன்ன காம்ப்ளக்ஸ்ஸிற்குள் வண்டியை நிறுத்தினான்.
“என்ன வாங்கணும் டா?” என்று வினோத் கேட்க,
“5 மினிட்ஸ்” என்று வாட்ச்சைப் பார்த்து மனோஜ் சொல்ல,
“என்னடா 5 மினிட்ஸ்” என்று புரியாமல் கேட்டான் வினோத்.
“இன்னும் சரியா அஞ்சு நிமிஷத்துல உங்க ஆளு கடையை சாத்திட்டு வெளிய வருவாங்க.. நீங்க சொன்ன நாற்பது வார்த்தையை ஆசை தீரப்போய் பேசிட்டு வாங்க தம்பி இங்க வெயிட் பண்றேன்” என்று நல்ல பிள்ளை போல் சொன்னான் மனோஜ். மனோஜ் ரூபாவை காதலிக்கும் போதே நக்ஷத்ராவின் கடையிருக்குமிடம் பார்த்திருக்கிறான்.
“என்னது ஆசை தீர பேசணுமா.. டேய்!.அவள் என்னை தீர்த்து கட்டிட போறாடா” என்று நடுங்கினான் வினோத்.
“யோவ் அண்ணா! வீட்ல பவரைக் காட்டுறேன்னு இப்போ ஷிவர் ஆகிட்டு இருக்க. சுகர் பேசண்ட்டாயா நீ.. உங்க ஆளு வந்துட்டாங்க” என்று வேகமாக வினோத் பக்கம் கார் கதவை திறந்து தள்ளினான் மனோஜ்.
“ஐய்யய்யோ!” என்று புலம்பியபடி வினோத் இறங்க, தன் வண்டியையெடுக்க வந்த பிரியா தன்னெதிரே வினோத் நிற்பதை கண்டுவிட்டாள்.
‘இவன் வேற’ என்று நினைத்தபடி நடந்து வர, அன்று போல் இன்றும் “குட் ஈவினிங்ங்க” என்று மனதிற்குள் எல்லா சாமியையும் வேண்டியபடி சொன்னான் வினோத்.
“என்னது?” என்று கேட்டபடி நின்றவள் தன் கைகளை கட்டியபடி புருவத்தை உயர்த்தினாள்.
“குட் ஈவினிங் சொன்னேங்க”
“ஒ ஓ” என்று கூறிவிட்டு நகர்ந்துவிட்டாள் பிரியா.
“அப்பாடி.. இப்போ தான் உயிரே வருது” என்று வினோத் பெருமூச்சுவிடும் போதே,
“உங்களுக்கெல்லாம் இந்த ஜென்மத்துல கல்யாணம் ஆகாது” என்று தன் தலையில் அடித்துக்கொண்டான் மனோஜ்.
“அது வந்து” என்று வினோத் ரீல் விட எத்தனிக்க,
“உங்க ரீல் அந்து போயி ரொம்ப நேரம் ஆகுது வாங்க” என்று கிண்டலடித்து புலம்பியபடி வினோத்தை அழைத்துக்கொண்டு சென்றான் மனோஜ்.
தீரஜ் சென்றதிலிருந்து நக்ஷத்ரா ஆதிராவை ஆட்டோவில் தான் பள்ளிக்கு அழைத்துச்சென்றாள். வினோத் காரில் விடுவதாய் நிறைய தடவை கூறினான் தான். தன்னால் ஏன் அவனுக்கு சிரமமென்று மென்மையாக மறுத்துவிட்டாள்.
தன் பிரிவால் மகள் ஏங்கிவிடக்கூடாது என்று ஆதிராவிடம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கால் செய்து பேசினான் தீரஜ். அப்படியே நக்ஷத்ராவிடம் அவர்கள் நலனை விசாரித்து வைத்துவிடுவான்.
அந்த வார இறுதியில் மனோஜ்ஜூம் ரூபாவும் பெங்களூர் கிளம்பியிருந்தார்கள். வினோத்துடைய மொபைல் எண்ணை ஏற்கனவே நக்ஷத்ராவிற்கு அனுப்பியிருந்தான் தீரஜ்.
தந்தையில்லாமல் வாடிய மகளின் முகத்தை கண்ட நக்ஷத்ராவின் மனது, ‘அப்போ நம்ம எடுத்த முடிவு ரொம்பவே சரி தான்’ என்று நிம்மதியுடன் இன்னுமே உறுதியாகியிருந்தாள்.ஆனால் தன்னுடைய இந்த வாடியமுகம் எதனாலென்று அவளால் ஆராயமுடியவில்லை.
தினமும் இரவு மகளுக்கு கதை சொல்லும் போதெல்லாம், அழையாமலே தீரஜின் நினைவுகள் நக்ஷத்ராவிற்கு வந்துவிடும். அவனிடம் அதிகம் பேசியதில்லை ஆனால் அவனின் கண்கள்,பேசாத மொழிகளை கூடச் சொல்லி உணர்த்தி தாக்கியது.
அவனிடம் பெரிதாக பழகிக்கொண்டதுமில்லை ஆனால் அவனுடைய பாசம்,அக்கறை, செயல்கள், எண்ணங்கள், சிந்தனைகள் இது எல்லாவற்றையும் தாண்டி அவனின் கண்ணியமான நடத்தை நக்ஷத்ராவை அசைத்தே பார்த்துவிட்டது தான்.
தீரஜின் பண்பு யாருக்குத் தான் பிடிக்காது? அப்படியிருக்கும் பட்சத்தில் கார்த்திகேயனுடன் வாழ்ந்து,ஓய்ந்து,தேய்ந்து,வலுவிழந்து,பயந்து ஓடியே வந்தவளை நிமிரவைத்தவனை நக்ஷத்ராவிற்கு எப்படி பிடிக்காமல் போகும்! இதெல்லாம் அவள் இன்றோ நேற்றோ உடனடியாக வேகமாக கணித்த விஷயங்களில்லை. கடந்த மூன்று மாதங்களாக அவனுடன் வாழவில்லை ஆனால் பயணித்திருக்கிறாள். அவள் கோர்த்த ஒவ்வொரு முத்து மாலையும் அவள் மனதால் உணர்ந்து தான் கோர்த்தாள்.
இப்படியிருக்கையில், அவனுடன் ஒரு புது வாழ்க்கை தொடங்க அவளிடம் தயாரா என்று கேட்டால்? அவளுடைய பதில் உண்மையாகவே தெரியாது தான். ஆம் என்று முடிவெடுத்து அவனுடன் உடனடியாக இல்லறம் புரிய அவளின் மனது ஏற்றுக்கொள்ளவுமில்லை. இல்லை என்று அவனை நிரந்தரமாக ஒதுக்கவும் முடியவில்லை… இனி நடப்பது எல்லாம் காலத்தின் கையில் என்று விட்டுவிட்டாள்.
இப்போது நக்ஷத்ரா நன்றாகவே காரோட்ட கற்றுக்கொண்டாள். ஒரு வாரம் கடந்திருந்த நிலையில்,அமெரிக்காவிலிருந்து இந்தியா கிளம்பியிருந்தான் தீரஜ். அவன் வருகிறான் என்று தெரிந்தவுடனே அவனில்லாமல் சோர்வாயிருந்த நக்ஷத்ராவின் மனது புத்துணர்ச்சி பெற்று தெம்படைந்தது.
“அம்மா! அப்பா இன்னிக்கு நைட் வந்திடுவாங்களா?” என்று பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தபடி உற்சாகமாக கேட்டாள் ஆதிரா.
“ஆமா ஆது” என்று மனதில் சந்தோஷத்துடன் பதிலளித்தாள் நக்ஷத்ரா.
“ஐய்யா ஜாலி!” என்று குதித்த ஆதிரா,திடீரென்று “அம்மா… எனக்கு அந்த ஸ்டோரி புக் வேணும். நீங்க அப்பாகிட்ட கேட்கவேயில்லை” என்று முகம் சுணங்க, ”நான் அப்பா வந்ததும் கேட்டு வாங்கித்தரேன் ஆது” என்று சமாதானப்படுத்தினாள் அன்னை.
“எனக்கு இப்போவே வேணும்மா” என்று ஆதிரா அடம்பிடிக்க, “என்ன ஆது இப்படி அடம்பிடிக்குற… அதை எடுத்தாலும் உனக்கு தான் வாசிக்க தெரியாதே” என்று நக்ஷத்ரா கேட்டாலும், தீரஜ் வரைந்த ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என்கிற ஆவலிருந்தது. அதனால் மகளை அழைத்துக்கொண்டு தீரஜின் ஆபீஸ் அறைக்குள் சென்றாள்.இதுவரை அவனை சாப்பிட அழைக்க, ஏதாவது பேச வேண்டிய விஷயம் தாண்டி அவள் எதற்கும் சென்றதில்லை.
“அம்மா இந்த கப்போர்ட் தான்” என்று ஆதிரா அங்கு ஓட, அந்த ரூமிலுள்ள வரைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்த நக்ஷத்ரா வியப்பில் கண்களை விரித்தாள்.
அப்போது கீழேயிருந்த கப்போர்ட்டைத் திறந்து அந்த பெரிய டைரியையெடுத்த ஆதிரா, “இதுல என்னமோ உள்ளயிருக்கு போல” என்று சொல்லிக்கொண்டே ஒற்றை கண்ணை மட்டும் திறந்தபடி புத்தகத்தின் கீழிலுள்ள வழியாக அதை பார்க்க முற்படும் போது தான், “சிஸ்டர் போலாமா?” என்று கேட்டபடி உள்ளே வந்தான் வினோத். அதில், “ஹாய் வினோத் மாமா” என்று வினோத்திடம் சென்ற ஆதிரா புத்தகத்தினுள் பார்க்க நினைத்ததை மறந்தேவிட்டாள். அன்று ஆட்டோக்கள் ஸ்டிரைக் என்பதால், வினோத்தை பள்ளியில் விட அழைத்திருந்தாள் நக்ஷத்ரா.
“அஞ்சு நிமிஷம் அண்ணா… ஆது சீக்கிரம் வா” என்று மகளை கையோடு அவசரமாக அழைத்துச் சென்றவள், மகள் கையிலிருந்த டைரியை கவனிக்காது அவசரத்தில் வெளியே வந்து லன்ச் பேக் பண்ண சென்றுவிட்டாள்.
ஆதிராவோ, பள்ளிக்கு நேரமானதால் அதை தன் ஸ்டோரி புக்ஸ் அடங்கிய பேக்கில் வைத்துவிட்டாள். ஆதிரா தினமும் புது கதை கேட்கவேண்டும் என்று நினைப்பாள். அதனாலேயே தீரஜ் ஏகப்பட்ட கதைப் புத்தகங்கள் வாங்கி வைத்திருந்தான்.அதைப் படித்துவிட்டு தான் இரவில் மகளுக்கு கதை சொல்லுவான்.
நக்ஷத்ராவோ கதைப் புத்தகத்தை கையில் வைத்தபடியே கதையைப் படித்து கூறுவாள். ஆனால் பிள்ளைக்கு தந்தை கதைக் கூறும் விதம் தான் ரொம்பவே பிடிக்கும்.
அன்று இரவு தீரஜ் வரும் வரை விழித்துக் கொண்டிருந்த ஆதிரா, “அம்மா, அப்பா எப்போ வருவாங்க?” என்று சிறிது நேரத்திற்கு ஒரு முறை கேட்டுக்கொண்டே இருந்தாள்.
“வந்திடுவாங்க ஆது… நீ தூங்கு… அம்மா கதை சொல்லவா!” என்று மகளின் தலையை வருடியபடியே கேட்டாள் நக்ஷத்ரா.
“இல்லைமா… நான் அப்பாவைப் பார்த்த அப்புறம், அப்பாக்கிட்ட கதைக்கேட்டு தான் தூங்குவேன்” என்று ஸ்திரமாக கூறிய மகளை சந்தோஷமாக பார்த்தாள் அன்னை.
‘என்னமோ பிறந்ததுலயிருந்து கதைக் கேட்டு தூங்குற மாதிரி எவ்வளவு அடம்… சரியான அப்பா செல்லம்’ என்று மனதில் விளையாட்டாக புலம்பினாள் நக்ஷத்ரா.
தீரஜ் வருகிற நேரம் நெருங்க, நக்ஷத்ராவிற்கு ஒரு வித இனிமையான படபடப்பாய் இருந்தது. அவனை அழைக்கச் சென்ற வினோத் நள்ளிரவில் தீரஜூடன் வர, தந்தையைக் கண்ட நொடி ஓடிச்சென்ற ஆதிராவை சந்தோஷத்துடன் தூக்கினான் தந்தை. அவனின் கழுத்தைச் சுற்றிய பிள்ளை, “அப்பா” என்று சந்தோஷத்தில் கத்த, மகளின் தலையை பாசத்துடன் வருடினான் தீரஜ். இக்காட்சியைக் கண்ட நக்ஷத்ராவோ, தந்தை மற்றும் மகளின் பாச பிணைப்பைக் கண்டு உள்ளம் பூரித்தாள்.
தீரஜ் எப்போதும் போல் தான் நக்ஷத்ராவிடம் நடந்துக்கொண்டான்… அவன் தான் எப்போதும் உணர்வுகளை காட்டிக்கொள்ளாது அடக்கத்தெரிந்த வல்லமை கொண்டவன் ஆயிற்றே!
தீரஜ் குளித்து முடித்து சாப்பிட்டு வந்தவுடனே, அன்றிரவு எப்போதும் போல் மகளை தூங்கவைத்து, அவன் அறைக்குச் சென்றுவிட, செல்லும் அவனையே யோசனையுடன் பார்த்த நக்ஷத்ரா, ‘இவர் என்னை எப்போ பார்த்திருப்பார்? எங்கே பார்த்திருப்பாரு? போன வருஷம் தான் சென்னைக்கே வந்தாங்கனு சாலா சொன்னாள்… நான் ஃபேஸ்புக்ல கூட இல்லையே!’ என்று தீவிரமாக யோசித்தவளின் மனமுழுதும் சந்தோஷம்… இதே சந்தோஷம் நாளை இரவு சுக்கு நூறாக உடையப்போகிறதென்பதை அறியாமல் துயிலில் ஆழ்ந்தாள் நக்ஷத்ரா.