அவ்வப்போது பிரியாவிற்கு கால் செய்து தன் மனைவி மற்றும் மகளின் நலனை விசாரித்தான் தீரஜ்.தீரஜிடம் கிளம்பும் முன்னர் தான் பேசிய வார்த்தைகள் எல்லாவற்றையும் தோழியிடம் தயக்கத்துடன் தெரிவித்த நக்ஷத்ராவை பளாரென்று அறைந்த பிரியா அவளிடம் பேசுவதையும் நிறுத்திவிட்டாள்.
யாரிடமும் ஒன்ற முடியாமல், தன் தற்போதைய நிலையெண்ணி வருத்தம் கலந்த கோபத்துடன் இருந்தாள் நக்ஷத்ரா.இதில் ஆதிரா வேறு தந்தையைத் தேடி ஒரே அழுகை. அதனால் பள்ளிக்கும் செல்லவில்லை.
“அவர் தானே விட்டாரு… அவரே வந்து கூப்பிடட்டும்” என்று சோர்வாகக் கூறினாள் நக்ஷத்ரா.
“என்னமோ பிளான் பண்ணி கல்யாணம் பண்ணிருக்காருன்னு நீயா ஒன்ன கற்பனை பண்ணிட்டு பெட்டியோட வந்து நின்னுட்டு இப்போ ஒன்னுமே நடக்காத மாதிரி அவரே வந்து கூப்பிடட்டும்னு சொல்ற.. உனக்கென்ன புருஷன் வீட்டைவிட்டு வரது விளையாட்டாயிருக்கா?” என்று எரிச்சலுடன் கேட்ட மீனாட்சி, மகள் பேசியதை கணவனிடமும் கண்ணம்மாவிடமும் ஆதங்கத்துடன் ஒப்பித்துவிட்டார். அதை அப்படியே ரூபாவிடம் ஒப்பித்தாள் கண்ணம்மா.
“உமி எப்படி நடந்துக்குறா கண்ணம்மா?” என்று கவலையுடன் கேட்டாள் ரூபா.
“எப்போ பார்த்தாலும் சோகமா இருக்காங்க, சில சமயம் அழுகுறாங்க! யார்கிட்டயும் பேச மாட்டிங்குறாங்க. நம்ம பேசினாலும் கடமைக்கேனு பதில் சொல்றாங்க. ஆதிரா பாப்பா வேற அப்பா வேணும்னு அழுதுக்கிட்டேயிருக்கு” என்று எல்லாவற்றையும் கவலையுடன் கூறினாள்.
“அவள் ஏன் இப்படி பைத்தியம் மாதிரி பண்ணிட்டு இருக்காள்! வீட்டை விட்டு வம்படியா போவாளாம் இப்போ அத்தான் வந்து கூப்பிடனுமாம்” என்று எரிச்சலுடன் நகத்தைக் கடித்தாள் ரூபா.
“பைத்தியம் தான் சாலாம்மா… காதல் பைத்தியம்” என்று மெதுவாக கூறினாள் கண்ணம்மா.
“எப்படி சொல்ற கண்ணம்மா?” என்று ரூபா கண்களை விரித்தபடி அதிர்ச்சிக்காட்ட,
“உமையாம்மா நடந்துக்குறது அப்படி தான் இருக்கு… மாப்பிள்ளை மேல தப்பு வேணாம்னு வீட்டுக்கு வந்துட்டு, சோக கீதம் பாடிக்கிட்டு, அவரே வந்து கூப்பிட்டு போகட்டும்னுல சொல்றாங்க!”
“இதனால தான், நான் சென்னை வந்தவுடனே அங்கே வீட்டுக்கு வரலை கண்ணம்மா. இவள் மனசுல என்னதான் இருக்குனு காயவிடுவோம்னு தான் இப்போவரை உண்மையைச் சொல்லலை. நாளைக்கு வரேன்” என்று முடித்தாள் ரூபா.
நக்ஷத்ரா கால்லை பிரியா எடுக்கவேயில்லை. அத்தனை கோபம் அவளின் மேல்! ஆனாலும் நக்ஷத்ரா விடாது கால் செய்ய ஏதோ பிரச்சனை என பயந்து ஃபோனை எடுத்தாள்.
,“பிரியா, உடனே திருமான்மியூர் பீச் வா ப்ளிஸ் டி! உன்கிட்ட பேசணும்” என்று சோர்வுடன் நக்ஷத்ரா கூற,
பிரியாவும் கடையை மூடிவிட்டு வேகமாக பீச் செல்ல, அங்கே நக்ஷத்ரா பதற்றத்துடன் காத்துக்கொண்டிருந்தாள். .
“உமை என்னாச்சு ஏதாவது பிரச்சனையா?” என்று தோழியைக் கண்ட பிரியா பதற, “ஆதிரா அவளுடைய அப்பாவைத் தேடி அப்படி அழுகுறாள்! அவர் ஊருக்கு போயிருக்காருணு சமாளிச்சாலும் நம்பமாற்றாள்.தீரஜ் இப்படி பண்ணது என்னால ஏத்துக்கவே முடியலை! கோபத்துல தான் இங்கே வந்தேன். இனி எல்லாமே முடிஞ்சிதுனு தான் இங்கே வந்தேன். ஆனால் ஒரு வார்த்தை அவர் ஆமா நான் உனக்காகத் தான் தப்பு பண்ணினேன்னு சொல்லிருந்தால் கூட நான் அங்கேயே இருந்திருப்பேன் டி. என் மானத்தை அடமானம் வைச்சு அவர் பண்ணின விஷயத்தைக் கூட என்னால கடந்து வர முடியுதுன்னா நான் அவருக்கு எமோஷனலா எவ்வளவு வீக் ஆகியிருக்கேன் பாரு.நான் ஏன் இப்படி ஆயிட்டேன்!உன்கிட்ட அன்னிக்கு நிம்மதிப்பத்தி பேசினதை அவர் வேறு விதமா புரிஞ்சிக்கிட்டு என்னை விட்டு விலகிப்போயிட்டாரு. அவரை ஆதிராவோட சேர்த்து நானும் மிஸ் பண்றேன் பிரியா.. அவர் கூட நான் இருக்கும் போது ரொம்பவே சந்தோஷமா பாசிட்டிவ்வாயிருந்தேன் இப்போ வெறுமையாயிருக்கு” என்று கண்ணீர் மல்க கூறினாள் நக்ஷத்ரா.
தோழி அழுவதில் அசைவற்று உதவிற்றவளாக நின்றிருந்த பிரியா, “நீ அவரை கெட்டவர்ன்னு முத்திரை குத்தியிருக்க… அந்த கேடுகெட்ட கார்த்திகேயனே மேல்லுன்ற மாதிரி பேசிட்டு வந்திருக்க… ச்ச எப்படி டி உன்னால அந்த மனுஷனைப் பார்த்து இப்படியெல்லாம் பேச முடிஞ்சது… இந்த உலகத்துல தீரஜ் அண்ணா மாதிரி ஒரு புருஷன் கிடைக்குறதெல்லாம் வரம், அபூர்வம்! உன் மரமண்டைக்கு ஏன் அதெல்லாம் புரிய மாட்டிங்குது” என்று ஆதங்கத்துடன் கத்தினாள் பிரியா.
“பிரியா நான்” என்று கண்ணீருடனே நக்ஷத்ரா ஆரம்பிக்க,
“பேசாத…நீ என்ன நியாயம் சொன்னாலும் நீ பண்ணினது ஏத்துக்கவே முடியாத விஷயம்!தீரஜ் அண்ணா அந்த மாதிரி பண்ணிருந்தாலுமே நீ கார்த்திகேயனை வைச்சு அவரை எப்படி அப்படி பேசலாம்? முதல்ல உன் பொண்ணை வைச்சு அவரை காயப்படுத்துன… இப்போ அந்தப் பொறுக்கி கார்த்திகேயன்! ச்ச… அந்த பொறுக்கி கூட அப்புராணி மாதிரி அடிமையா வாழ்ந்த ஆனால் இப்போ உன்னை ராணி மாதிரி வைச்சிக்கிட்டிருக்க ஒரு நல்ல மனுஷனுடைய மனசை குத்தி குத்தி சிதைச்சிட்ட..ஆனாலும் அவர் எந்நேரமும் உன் நலனுக்காக மட்டும் தான் யோசிக்குறாரு! அவர் மனசை உன் அவசர பேச்சால் சுக்கு நூறா கிழிச்சிட்டு.. அவர்கிட்ட இனி எல்லாம் முடிஞ்சிடுனு பெரிய இவள் மாதிரி பேசிட்டு இப்போ அவரை நினைச்சு அழுதுட்டுயிருக்க…ஏன்டி அவர்மேல உனக்கு நம்பிக்கையே வரமாட்டிங்குது… நீ நம்பியிருந்தால் வீட்டைவிட்டு வெளியேவந்து இப்படி இப்போ கதறிட்டு இருப்பியா!” என்று கத்தலில் ஆரம்பித்து ஆதங்கத்தில் முடித்த பிரியாவின் கண்களிலும் கண்ணீர்.
“நான் அவரை ரொம்பவே நம்பினேன் அதான் ஆதங்கத்துல அப்படி வார்த்தைகளை விட்டுட்டேன்.அவர் என்னை லவ் பண்ற விஷயம் யாருக்குமே தெரியாது அப்போ வினோத் அண்ணா பிளான் பண்ணிருக்காருன்னா அது தீரஜ்க்கு தெரியாமல் எப்படியிருக்கும்? என் மானத்தை கூறு போட்டு என்னை கல்யாணம் பண்ண இவ்வளவு பெரிய பிளான்… அன்னிக்கு நான்பட்ட அசிங்கம் உனக்குத் தெரியும்தானே! ஆனாலும் இப்போ கூட என்னால தீரஜை வெறுக்கமுடியலை… என்ன மானங்கெட்ட மனசோ எனக்கு… ச்ச” என்று தலையில் அடித்துக்கொண்டாள் நக்ஷத்ரா.
‘நீ தீரஜ் அண்ணாவை காதலிக்க ஆரம்பிச்சிட்ட உமை’ என்று பிரியா மனதில் உறுதிசெய்து நெகிழ்ந்தாலும், “உன்னைப் பத்தி எல்லாமே எனக்கு தெரிஞ்ச மாதிரி வினோத்துக்கு ஏற்கனவே தீரஜ் அண்ணா உன்னைக் காதலிச்சது தெரிஞ்சிருக்கலாம். பிரண்ட்டுடைய காதல் ஜெயிக்கணும்னு அவர் இப்படி பண்ணிருக்கலாம்” என்று பிரியா தன் யூகிப்பை வேகமாகச் சொல்ல,
“என்ன டி சொல்ற?” என்று அதிர்ந்தாள் நக்ஷத்ரா.
“நீ அந்த அன்கிள்ல யோசிக்கலைன்னு சொல்லு” என்று பிரியா சலித்துக்கொண்டிருக்கும் போதே, “நக்ஷத்ரா” என்று பிரியாவிற்கும் நக்ஷத்ராவிற்கும் இடையில் திரையைப் போல் வந்து நின்றான் அந்த ஆறடி வாலிபன்.
நக்ஷத்ரா என்கிற அழைப்பில் வந்தது தீரஜென ஒரு நொடி நினைத்து மகிழ்ந்தாலும், தீரஜின் கம்பீரக் குரல் இதில்லையென யோசித்தபடி சோர்வில் திரும்பியவள், கூலர்ஸ் அணிந்தபடி நின்றுக்கொண்டிருந்த கார்த்திக்கேயனை கண்டதும் அதிர்ச்சியில் உறைந்தேவிட்டாள்.
தான் காண்பது கெட்ட கனவாக இருக்கக்கூடாதோயென்று அவள் திகைத்துக்கொண்டிருக்கும் போதே, தோழியின் முகமாற்றத்தைக் கண்ட பிரியாவோ, நக்ஷத்ராவின்புறம் வந்து புதியவனின் முகத்தை பார்த்த நொடி அவளுமே அதிர்ச்சியில் பேச்சிழந்துவிட்டாள்.
கார்த்திக்கேயனைக் கண்டதும் அவன் செய்த சித்ரவதைகள் அழையாமலேயே நினைவலைகளில் வந்து, அவளின் உடலில் நடுக்கம் வர ஆரம்பித்தது. அந்நொடி நக்ஷத்ராவின் மனம் தீரஜின் அருகாமையை தாயைத் தேடும் சேய்யை போல் ரொம்பவே தேடியது. தன் கண்களை மூடி தன் நடுக்கத்தை நிலைப்படுத்த முயற்சிக்கும் போது ‘ஃபேஸ் யுவர் ஃபியர்’ என்று தீரஜ் கூறியது தான் அவள் மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டேயிருக்க, அத்தனை நேரமிருந்த நடுக்கம் அவளுக்கு மறைந்து தைரியத்தைக் கொண்டுவந்தது.
தன்னை தேடி நக்ஷத்ரா வரவில்லையென ஏற்கனவே ஏமாற்றத்திலிருந்த கார்த்திகேயன், அந்த விபத்தினால் தனிமையைவுணர்ந்து மனைவியை நாடி இந்தியா வந்தபோது அவனின் செவியில் அதிர்ச்சியாய் வந்து விழுந்தது நக்ஷத்ராவின் மறுமணம் செய்தி.
காசி விஸ்வநாதன் நக்ஷத்ராவின் புது வாழ்க்கையைப் பற்றி நிம்மதியாக பாட்டி கூறியதை மனைவியுடன் பகிர, சிவகாமியோ அதை மகனிடம் ஆதங்கத்துடன் பகிர்ந்தார்! அதனின் விளைவால் இன்று காலை பெங்களூரிலிருந்து கிளம்பியவனின் கார் நக்ஷத்ராவின் அப்பா வீட்டு முன்னர் நின்றபடியே, ‘உள்ளே போயி இருக்குற எல்லாரையும் அதட்டி மிரட்டியாவது நக்ஷத்ராவோட அட்ரஸ் வாங்கணும்.எப்படியாவது உன்னை என்கூட கூட்டிட்டு போயிருவேன் நக்ஷத்ரா’ என்று மனதில் பைத்தியம் போல் கூறிக்கொண்டிருந்தபோது தான் நக்ஷத்ரா வெளியில் வருவதைப் பார்த்து அவளைப் பின் தொடர்ந்து வந்தான் கார்த்திகேயன்.
“என்கூட வந்திடு நக்ஷத்ரா.. நான் தான் உன் புருஷன்” என்று அவன் பாட்டுக்கு பேச, எரிமாலையாகி விட்டாள் நக்ஷத்ரா.
“நீ ஒரு கேடுகெட்ட பொறுக்கி! என்னோட புருஷன் பேரு தீரஜ் நரசிம்ம ரெட்டி! இதுக்கு அப்புறம் என் கண்ணு முன்னாடி வர நினைக்காத.. நான் பத்திரகாளி ஆகுறதுக்குள்ள கிளம்பு” என்று விரல் காட்டி கோபத்துடன் கண்டித்தவளை, அதிர்ச்சி கலந்த குழப்பத்துடன் பார்த்த கார்த்திகேயனின் மனதில், ‘நான் சத்தமா பேசினாலே பயந்து நடுங்குரவ இப்போ தைரியமா விரல் காட்டி மிரட்டுறாள்… ஆனாலும் இனி உன்னை மிஸ் பண்ணவேமாட்டேன் நக்ஷத்ரா’ என்று அவன் தீர்மானமாக நினைத்துக்கொண்டிருக்கும் போதே, “வாடி” என்று பிரியாவின் கையை வேகமாகப்பிடித்து அழைத்துச் சென்ற நக்ஷத்ராவின் முன் வேகமாக வந்து நின்று,
“தீரஜ் நரசிம்ம ரெட்டி.. தெலுங்குக்காரனாலே சாப்புடுல காரம் தூக்கலா இருக்கும்.. அதுக்கு தகுந்த மாதிரி ரோஷம், சூடு, சொரணையும் நிறையவேயிருக்கும்… எனக்கும் உனக்கும் மட்டுமே நடந்த நிறைய விஷயங்கள் ஐ மீன் பெட்ரூம் மொமெண்ட்ஸ்… அது உனக்கும் அவனுக்கும் இந்த கட்டாய கல்யாணத்துல கண்டிப்பா நடந்திருக்காதுணு ஐ கேன் ஸ்மெல் இட்.. சோ அவன் பெயரை வெச்சே என் பண பலத்தால அவனை ஈசியா டிராக் பண்ணி அவன்கிட்ட நமக்குள்ள நடந்த எல்லைத்தையும் இன்ச் பை இன்ச்.. ஸீன் பை ஸீன்.. டீடெயில்ட்டா அவனுக்கு நான் சொல்ற விதத்துல அவனே உன்னை வேண்டாம்னு தூக்கிப்போடப்போறான்.. அதுக்கு அப்புறம் உன்னையும் என் பொண்ணையும் என்கூட கூட்டிட்டு போயிடுவேன்.. இப்படி தலைய சுத்தி மூக்கை தொட நேராவே தொட்டிடலாம் நக்ஷத்ரா.. அதனால நம்பர் 5, 4த் சீவார்ட் ரோட், திருவான்மியூர் இந்த ஏரியா தான்.. நான் இப்போ உனக்காக தங்கி இருக்குற வீடு.. நீயே என்கிட்ட வந்திடு.. நீ லேட் பண்ணிணால் நான் அந்த ரெட்டிக்கிட்டயே டீல் பண்ணிக்குவேன்.. நீயும் என் பொண்ணும் இல்லாமல் நான் கண்டிப்பா பெங்களூர் போக மாட்டேன்” என்று சொல்லி முடித்த கார்த்திகேயன் வேகமாக சென்றுவிட, நக்ஷத்ராவின் முகமோ அதிர்ச்சியில் வெளிறி உலகமே நின்றதுபோல் பேச்சின்றி உறைந்திருந்தாள்.
“உமை” என்று பிரியா வேகமாக உலுக்க, கார்த்திக்கேயன் பேசிவிட்டுச் சென்ற வார்த்தைகளின் வீரியத்திலிருந்து அதன் விளைவுவரை நினைத்து மனதில் பதறியவளின் கைகள் நடுங்க கண்கள் இடுங்க, அவளின் உடல் வழுவிழந்து தடுமாறி பொத்தென்று கடல்மண்ணில் அமர்ந்தாள் பெருங்கண்ணீருடன்..।