“விடுங்கம்மா,நக்ஷத்ரா கண்டிப்பா வீட்டுக்கு வந்திடுவாள்” என்று ஹாலில் அமர்ந்தபடி அம்பிகாவதி பாட்டியை ரோகிணி ஆறுதல்படுத்திக்கொண்டிருக்கும் போதே, “அத்தை” என்று வேகமாக உள்ளே நுழைந்த நக்ஷத்ரா ஓடிச்சென்று பாட்டியின் கால்மாட்டில் அமர்ந்து, “சந்தோஷமா திரும்பி வந்துட்டேன்.என் வீட்டுக்கு!உங்கள்கிட்ட சொல்லாமல் போனதுக்கு மன்னிச்சிடுங்க பாட்டி” என்று அவரின் கரங்களை ஏந்தி தன் கன்னத்தில் வைத்தாள் நக்ஷத்ரா.
பின்னாடி வந்த ரூபாவோ, ஆதிராவை அவர்களிருந்த அறையில் படுக்கவைக்க,
“பரவாயில்லை ராசாத்தி!நீயும் பாப்பாவுமில்லாமல் வீடே வெறிச்சோடிப்போச்சு!இனி எல்லாம் சுபம் தான்” என்று இன்முகத்துடன் பேசினார். பாசமாக ரோகிணியை அணைத்துக்கொண்ட நக்ஷத்ராவின் விழிகள் தீரஜைத் தேடியபடி, “அவர் எங்கே அத்தை?” என்று தேட,
“அவன் ஆபீஸ் விஷயமா ஹோட்டல் போயிருக்கான்மா” என்று தீரஜ் தன்னிடம் கூறிய முழுவிவரத்தையும் சொல்ல, பெண்ணவளின் மனமோ தன்னவனை உடனே பார்க்கத்துடித்தது.
“அத்தை,நான் போய் அவரை பார்த்துட்டுவரேன்” என்று இனிமையான படபடப்புடன் கூற,
“அவனே நைட்டு வந்திடுவான்மா”
“எனக்கு அதுவரைக்கும் பொறுமையில்லை அத்தை” என்று தன்னை மீறி சொல்லியேவிட, பெண்களுக்கு அத்தனை சந்தோஷம்.
“விடு ரோகிணி! அவள் புருஷனை இத்தனை நாள் பார்க்காத ஏக்கத்துல கேட்குறாள். சரிம்மா வினோத் கூட போயிட்டுவா” என்று அம்பிகாவதி கூற,
“என் புருஷனால நானே இப்போ சூப்பரா கார் ஓட்டுறேன் பாட்டி! இங்கேயே நான் தான் ஓட்டிட்டு வந்தேன். சரி, நான் கிளம்புறேன்” என்று உற்சாகமாக பாட்டியை அணைத்தவள்,அறைக்குள் உறங்கிக்கொண்டிருந்த மகளின் பக்கத்திலிருந்த ரூபாவிடம், “சாலா” என்று அவளின் கையைப் பிடிக்க, “நீ சந்தோஷத்துல பேசினதெல்லாமே என் காதுல விழுந்துச்சு மேடம். ஆல் தி பெஸ்ட். பார்த்து போ. ஆதுவை நான் பார்த்துக்குறேன்” என்று தைரியம் கொடுத்தாள் தங்கை.
“தாங்க் யூ டி.நான் சொன்ன ஸ்டோரி புக்கை வீட்டுலயே வைச்சிட்டு வந்துட்டேன். அந்த பேக்ல புக்ஸிருக்கும் பாரு.என் கையிலேயே புக் இருந்ததால நான் அதை கொஞ்ச நாளா திறந்தே பார்க்கலை ஆனால் கண்டிப்பா புக்ஸிருக்கும் அவள் எழுந்தால் எடுத்துச்சொல்லு. அப்புறம் அப்பாக்கு கால் பண்ணி நம்ம லக்கேஜ் அனுப்பிட சொல்லு” என்று வேகமாக கூறிவிட்டு தன் கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பியேவிட்ட அக்காவின் இம்மாற்றம் ரூபாவை சந்தோஷத்துடன் வியக்கவைத்தது. இப்படி ஒரு நக்ஷத்ராவை உருவாக்கிய,செதுக்கிய தீரஜை நினைத்து மனதில் அத்தனை ஒரு பெருமை மற்றும் மகிழ்ச்சி.
நக்ஷத்ரா சென்று சற்று நேரத்தில் ஆதிரா லேசாக சிணுங்க, ‘எதுக்கும் ஏதாவது ஸ்டோரி எடுத்து படிப்போம் அப்போதான் ஆது எழுந்தால் திணறாமல் சொல்லமுடியும்’ என்று மனதில் நினைத்தவள், பேக்கைத் திறக்க அவளின் கண்ணில் வித்தியாசமாக தென்பட்டது அந்த டைரி.
அதை படிக்கச்சொல்லி மனம் உந்த,எடுத்து படிக்கத் திறந்தவளின் கண்கள் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து விரிந்தது.
“சின்னவயசுலயிருந்தே என் அப்பா தான் எனக்கு ஹீரோ, ரோல்மாடல், இன்ஸ்பிரேஷன்.அப்பாவை கட்டிப்பிடிச்சு தூங்கலைன்னா தூக்கமேவராது.ஏதாவது அப்செட்டாயிருந்தால் அப்பா மடியில படுத்துப்பேன்.அம்மா என் மேல உயிரையே வைச்சிருக்காங்க ஆனாலும் என் நெருக்கம் அப்பாக்கிட்ட தான் அதிகம்.”
“அப்பா இறந்த அப்புறம், சிம்மா அமைதியானவன், பொறுப்பானவன்னு என் காதுபடவே எல்லாரும் சொல்லிருக்காங்க! அப்பா வாங்கின கடனெல்லாம் அடைச்சிக்கிட்டே தான் இருக்கேன். கடன் கொடுத்தவங்களும் என் மேல நம்பிக்கை வைச்சிருக்காங்க…ஆனாலும் என்னால இப்போ மனசுவிட்டு சிரிக்கமுடியலை, நிம்மதியாயிருக்கமுடியலை…என் குடும்பத்துல எல்லாருமே என்னை ரொம்ப மெச்சூர்ட்டானவன்னு நினைக்குறாங்க. அதுதான் உண்மையும்!”
“ஆனால் எனக்குள்ளயும் ஒரு குழந்தையுள்ளம் இருக்கு. ஆறடி வளர்ந்தாலும் அப்பா முன்னாடி நான் எப்போவுமே ஒரு குழந்தை தான்.இப்போ குடும்பபாரம் எனக்கு சுமையாயில்லை ஆனால் மனபாரம் அதையிறக்கி வைக்க யாருமேயில்லைன்றதுவிட அப்பாக்கிட்ட மட்டுமே இத்தனை வருஷம் இலகுவா இருக்க முடிஞ்ச என்னால திடீர்னு, அம்மாவை ரொம்பப் பிடிச்சாலுமே இதுவரை காட்டாத நெருக்கத்தை இப்போ காட்டமுடியலை.”
“என்னுடைய எல்லாப்பிறந்தநாளுக்கும் அப்பா ஏதாவது ஒரு பரிசு கொடுப்பார்.அந்தப்பரிசுக்காகவே என்னுடைய பிறந்தநாளை எதிர்ப்பார்த்து ரொம்ப சந்தோஷமா உற்சாகமா காத்திட்டிருப்பேன்.அப்பா எங்களைவிட்டு போய் மூணு வருஷம் ஆயிடுச்சு ஆனாலும் என்னால அப்பாவுடைய இழப்பிலிருந்து வெளியே வர முடியலை.ஐ மிஸ் யூ நாணா. அப்பா இறந்து முதல் இரண்டு வருஷமும் என்னோட பிறந்தநாளுக்கு அப்பா எனக்காக பேங்க்ல போட்டு வைச்சிருந்த எஃப்டி மெச்சூராகி எனக்கு கிஃப்ட்டா வந்துச்சு!என்னுடைய சம்பளத்தைவிட அப்பா எனக்காகப்போட்ட எஃப்டில வந்த அஞ்சாயிரம் பணம் எனக்கு அவ்வளவு பிரிஷியஸ்.அதை அப்படியே பத்திரமா வெச்சிருக்கேன்.”
“அந்த தருணத்துல தான்,எங்க காலேஜ் சீனியருடைய கல்யாணத்துக்காக நானும் வினோத்தும் ஆந்திரா போயிருந்தோம்.அடுத்தநாள் என்னுடைய பிறந்தநாளும் கூட.என் வாழ்க்கையிலேயே அப்பாவுடைய பரிசில்லாமல் வரும் முதல் பிறந்ததாள் அதை எதிர்க்கொள்ள வெறுமையா இருந்துச்சு…அப்பாயில்லாத இந்த ரெண்டு வருஷமும் கிடைச்ச பரிசுல அப்பாவே என்கூட இருக்குற மாதிரி ஒரு உணர்வு.ஆனால் இனி வரும் பிறந்தநாள்ல அது இருக்காதுன்னு நினைச்சிட்டே மன வருத்தத்துல இருக்கும் போது தான் அம்மா கால் பண்ணி அடுத்த நாள் பிறந்தநாள் சமயம் ஆந்திராவுல இருக்கப்போறதுனால கோவில்க்கு போகச்சொன்னாங்க. நாங்கயிருந்த ஏரியாவுக்கு திருப்பதி ரொம்பவேபக்கம் தான்.ஆனாலும் நான் போக தேர்ந்தெடுத்த கோவில் ஸ்ரீகாளஹஸ்தி.”
“அப்பாவுக்கு ரொம்ப பிடிச்ச கோவில். நிறையதடவை அப்பாக்கூட வந்திருக்கேன். முதல்முறையா அப்பாயில்லாமல் போகும்நிலை.வருத்தம் தான் ஆனாலும் அந்த கோவிலைப் பத்தி நினைச்சாலே அப்பாவுடைய நினைவலைகள் மனசுலவந்து இதமாயிருக்கும் அதனாலேயே வெறுமையை ஒதுக்கி மனசை புத்துணர்ச்சியாக்கி வினோத் கூட போனேன்.”
“அன்னிக்கு காலைல கல்யாணத்தை முடிச்சிட்டு கோவில் போகவே பின் மதியம் ஆயிடுச்சு.பர்ஸ்ல அப்பா ஃபோட்டோ எப்போவுமேயிருக்கும். அப்பாவுடைய நிறைய ஃபோட்டோஸ் என்கிட்டயிருக்கு ஆனாலும் நான் பர்ஸ்ல வைச்சிருந்த ஃபோட்டோ ரொம்பவே ஸ்பெஷல்.”
“உண்டியல்ல காணிக்கைப்போட பர்ஸ்ஸை எடுக்கும் போது உள்ளேயிருந்த அப்பா ஃபோட்டோ கீழே விழுந்ததை நான் கவனிக்கலை. ஆனால் அவள் கவனிச்சிட்டாள்.”
***
நக்ஷத்ராவிற்கு ராகு கேது பரிகாரத்திற்காக ஸ்ரீகாளஹஸ்தி வந்திருந்தனர். பரிகாரத்தை முடித்துவிட்டப் பின், அவர்கள் அன்று தங்கியிருந்த ஹோட்டலுக்கு கிளம்பலாம் என்று அருணாச்சலம் கூறும்போதே, “அப்பா, இந்தக்கோவில் சூப்பராயிருக்கு!நானும் உமை.இல்லையில்லை Nன்னும் கொஞ்சநேரம் இருந்திட்டுவறோம்.கூடவே Kவும் இருப்பாள்” என்று கண்ணம்மாவைக் குறிப்பிட்டாள்.
வீட்டுப்பெண்கள் வெளியில் வரும்போது பெயரை சொல்லி அழைக்கக்கூடாதென்பது சொர்ணவள்ளி பாட்டியின் ஆர்டர். அதனால் பெயரிலிருக்கும் முதல் வார்த்தையை எடுத்து மட்டும் அழைப்பர் பெண்கள்.
“சரி, கண்ணம்மா பத்திரமா பார்த்துக்கோ! சீக்கிரம் வந்துடுங்க பிள்ளைங்களா” என்று அருணாச்சலம் மனைவி மற்றும் தாயுடன் செல்ல எத்தனிக்க, “நீ கல்யாணப் பொண்ணு!பத்திரம்” என்று தன் மூக்கு கண்ணாடியை சரி செய்தபடி குறுகுறு பார்வையோடு சென்றுவிட்டார் சொர்ணவள்ளி.
மூவரும் கோவிலுக்குள்ளேயே நடந்துக்கொண்டிருக்க தீடீரென்று, “சார், சார்” என்று கத்திய நக்ஷத்ரா, அந்த சார் திரும்பவில்லையென அறிந்தநொடி, வேகமாக கீழே காற்றில் பறந்தோடிக்கொண்டிருந்த அந்த பாஸ்போர்ட்டளவு புகைப்படத்தையெடுத்து அச்சாரை நோக்கி தான் அணிந்திருந்த பாவாடை தாவணியோடு பின்னேயே ஓட இருப்பெண்களும் “N எங்க போற” என்று அழைத்தபடி ஓடினர்.
வேகமாக அந்த ஆடவனின் முன்னேவந்து நின்ற நக்ஷத்ரா மூச்சு வாங்கியபடி, “சார், உங்கள் பர்ஸ்லயிருந்து இந்த ஃபோட்டோ விழுந்திருச்சு” என்று அவன்புறம் நீட்ட, அவனோ பேசமறந்து சிலையாகயிருந்தான்.
அவனின் அசையாத இறுகிய உதடும் இடுங்கிய கண்களும் உணர்ந்த தாக்கத்தை உணராத பெண், “ஓ இது தெலுங்குகாரங்க ஊர்ல! சார்,திஸ் ஃபோட்டோ ஹஸ் ஃபாலன் டௌன் ஃப்ரம் யுவர் வாலட்” என்று சைகை கலந்த உரையாடலுடன் கூற,அதை வாங்கிக்கொண்டவனுக்கு தமிழ் நன்றாகவே புரியும் ஆனால் அவனின் அப்போதைய மனநிலை தான் புரியவில்லை.
“தாங்க் யூ” என்று அவன் ஆங்கிலத்தில் கூறும்போதே, அவனுக்கு தமிழ் தெரியாதென அவன் முதுகின்பின்னே நின்றிருந்த ரூபா உணர, ”ஏய் N இதுக்குத் தான் இவ்வளவு வேகமா மூச்சு வாங்க ஓடி வந்தியா?நான் கூட காசோ பணமோன்னு நினைச்சிட்டேன்” என்று கூற,
“முக்கியமா இருக்கப்போய் தானே பர்ஸ்ல வைச்சிருக்காங்க R!” என்று தீரஜின் பின்னால் நிற்கும் தங்கை மற்றும் கண்ணம்மாவைப் பார்த்தபடியே அவர்கள் புறம் செல்ல,அந்த ஆடவனாகிய தீரஜின் பக்கத்தில் நின்றிருந்த வினோத், “உனக்கு தமிழ் தெரியாதுன்னு அதுங்களே ஒரு முடிவுக்குவந்துட்டு பேசுதுங்க! அது என்னடா பேரு N,Rனு.ஃபன்னி கேர்ள்ஸ்” என்று காதில் முணுமுணுத்தவனுக்கு பதில் கூறாது, சென்றுக்கொண்டிருந்த அந்த பச்சை வண்ண பாவாடை தாவணி பெண்ணாகிய நக்ஷத்ராவையே சுவாரசியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் தீரஜ்.