“சார்னு என் முன்னாடி திடீர் மின்னல் மாதிரி தாவணியில ஒரு பொம்மை பொண்ணு…பார்க்க மட்டும் தான் பொம்மை மாதிரியிருந்தாள்.ஆனால் பேசினால் அவ்வளவு எக்ஸ்பிரஷன் கொடுக்குறாள்! கள்ளங்கபடமில்லாத களப்படமற்ற முகம்! அவள் என்கிட்ட ஃபோட்டோ பத்தி மூச்சு வாங்க பேசிட்டிருக்க என்னால அவளைப்பார்த்து மூச்சே விட முடியலை…அவள் அழகாயிருந்தாள் ஆனால் அது என்னைத் தாக்கலை… தலையை ஆட்டிக்கிட்டே,கைகளின் வளையல்கள் ஓசையெழுப்பும் விதமாய் அவள் கரம் சைகையுடன் குலுங்கிக்கொண்டிருக்க,பேசிய ஒரு வசனத்திலேயே அவளின் அஞ்சன விழிகளில் அத்தனை உணர்வுகள்(Expressions).”
“உணர்வுகளை வெளிக்காட்டாமல் இறுக்கமாயிருக்குற ஒருவன் நான்
உணர்வுகளை அள்ளி அள்ளி கொடுக்கும் துறுதுறுன்னு ஒருத்தி அவள்.”
“அதுவும் அவள் எடுத்துக்கொடுத்தது என்னுடைய அப்பா ஃபோட்டோ! அவள் அதைவொரு ஃபோட்டோனு அலட்சியப்படுத்தாமல் ஓடிவந்து என்கிட்ட கொடுத்தாள்.என்னவோ அந்தப் பொண்ணு என் இதயத்துக்குள்ள சுவாரசியத்தைக் கொண்டுவந்தாள்.ஆனாலும் அவளை கடந்து,சாமி கும்பிட போயிட்டேன்.”
“சாமி கும்பிட்டு திரும்புனா அதே பொம்மைப் பொண்ணு கோவில் மணியை குதிச்சு குதிச்சு அடிச்சிட்டு சேட்டை பண்ணிட்டிருந்தது.அவளைச் சுத்தியிருந்த அவள் வயசு பொண்ணுங்க அமைதியாயிருக்க இவள் மட்டும் குழந்தைத்தனமா நடந்துக்கிட்டாள்.அவள் செஞ்சதை கண் இமைக்காமல் பார்த்த என் மனசு Her behavior is Cuteனு சொல்லிட்டேயிருந்தது.”
***
“ஏய் லூசு!போதும் டி. எவ்வளவு தடவை இப்படி குதிச்சு மணியடிச்சிட்டேயிருப்ப!” என்று ரூபா கேட்க,
“நம்ம பக்கத்து வீட்டு குட்டிவாலு பிரணவ் சொன்னான்…இந்த மாதிரி குதிச்சிட்டேயிருந்தால் ஹைட்டாகிடுவாங்களாம்” என்று ஆர்வத்துடன் கூறியபடியே துள்ளிக்குதித்து மணியடித்த தமக்கையின் கண்மூடித்தனமான வெள்ளந்திகுணத்தை ரூபா பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் என்றால் இவர்களின் சற்று அருகில் நின்றுக்கொண்டிருந்த தீரஜோ நக்ஷத்ரா கூறியதைக்கேட்டு ரசனையுடன் முறுவல் செய்தான்.ஏனோ அவள் தனக்கு ஒரு வழிப்போக்கனாக இருக்கமாட்டாள் என அவனின் மனது ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.
அங்கு பக்கத்திலேயே அமர்ந்தார்கள் ரூபா மற்றும் கண்ணம்மா. “என்ன Rமா,ஒருமாதிரி இருக்கீங்க!” என்று கண்ணம்மா அக்கறையுடன் கேட்க, “இந்த N ரொம்ப வெகுளியாயிருக்காள் K. அன்னிக்கு பிரணவ் இவளைக் கிண்டல் பண்ணி தான் குதிச்சா ஹைட் ஆவீங்கன்னு சொன்னான்.ஆனால் இந்த லூசு அவன் சொன்னதை அப்படியே பண்ணுது இந்த வயசுல.இவள் இப்படியேயிருந்தால் நல்லதுக்கில்லை” என்று பயந்தாள்.
“நீ என்னத்த தான் அவளை கணிச்சியோ இத்தனை வருஷம். இரு” என்று மணியடித்துக்கொண்டிருந்த அக்காவைப் பார்த்தவள், “ஹேய் N…இங்கே வாடி” என்றழைக்க, “சொல்லு சா…சாரி சாரி R” என்று தங்கையின் முன் வந்தவளை, “அங்க இருக்குற சிவன் சாமிக்கிட்ட ‘நீங்க தான் என் வாழ்க்கை’ன்னு பத்து முறை சொல்லிட்டே உன் மனசுக்குள்ள கார்த்திக்கேயனை நினைச்சிட்டு வேண்டுனா உன் ஆளு சீரும் சிறப்புமா நல்லாயிருப்பாராம்.”
“அப்படியா டி…சரி, நான் அப்போ வேண்டிட்டுவரேன்” என்று உற்சாகமாக சென்ற நக்ஷத்ராவை ஆதங்கத்துடன் பார்த்தபடியே கண்ணம்மாவிடம், “பார்த்தியா K, எதையும் ஆராயாமல் கண்மூடித்தனமா போறதை…நீ தான் என் வாழ்க்கைனு இவள் பாட்டுக்கு சத்தமா வேண்டப்போறாள். இவளை” என்று எழுந்தவளப் பிடித்த கண்ணம்மா, “தடுக்காதீங்க Rமா,அவங்க வருங்கால புருஷனை நினைச்சு வேண்டப்போறாங்க.கல்யாணத்துக்கு அப்புறம் மாப்பிள்ளை தம்பி நம்மபுள்ளையை விவரமா மாத்திடும்.”
வினோத்திற்கு ஒரு ஃபோன் வந்திருந்ததால் கோவிலுக்கு வெளியில் சென்றிருக்க!அங்கு சிவனின் சன்னதியில் தீரஜ் தன் கண்களை மூடியபடி,‘அப்பா! உங்களுக்கு ரொம்ப பிடிச்ச கோவில், ரொம்ப பிடிச்ச சிவன்.என் மனசு ரொம்ப பாரமாயிருக்குப்பா இந்த வருஷம் உங்கள் பரிசு’ என்று அவன் மனதில் வேண்டிக்கொண்டிருக்கும்போதே, “நீங்க தான் என் வாழ்க்கை” என்று எதிரிலிருக்கும் நபரின் முகத்தைக் காணாது,யாரிருந்தாலும் அவர்களுக்கு தமிழ் தெரியாதென அசட்டு தைரியத்தில் சத்தமாகவே தலையாட்டிக்கொண்டு கண்களை மூடியபடி வேண்ட,
அவளெதிரில் நின்றுக்கொண்டிருந்த தீரஜ் அவளின் வேண்டுதலில் வேகமாக கண்ணைத் திறந்து அவளை வியந்துப்பார்க்க,அச்சன்னதியில் இவர்கள் இருவரைத் தவிர வேறாருமில்லை…
“நீங்கள் தான் என் வாழ்க்கை” என்று அபிநயத்துடன் உதிர்ந்த நங்கையின் வாய்மொழி…அவளின் மூடிய இமையிலும் முகத்தில் மிளிர்ந்த நாணம்! எதிரிலிருக்கும் ஆண்மகனின் உயிர்வரைத்தொட்டு இழந்தேவிட்டான் அவன் மனதை அப்பொம்மைப்பெண்ணிடம்.
‘உங்கள் பரிசு இவள்தான்ப்பா! இந்தப் பொம்மைப் பொண்ணு தான் எனக்கான பொம்மாயி…நீங்க தான் என் வாழ்க்கைன்னு அவளைப் பொறுத்தவரை அவள் சொன்னது கடவுளுக்கு.ஆனால் என்னைப் பொறுத்தவரை அது எனக்கு தான்!அவள்கிட்ட ஏதோவொரு தாக்கம் எனக்கு முதல்லயிருந்தே இருந்துச்சு. நீங்க எனக்காகவே கொடுத்த பரிசு தான்ப்பா இவள்.அதனால தான் உங்கள் ஃபோட்டோவை அவள் எடுத்துக்கொடுத்தாள். இப்போ நான் உங்கக்கிட்ட பரிசு பத்தி வேண்டு்ம் போது கூட நீங்கள் தான் என் வாழ்க்கைனு என் ஏக்கம்,வெறுமைக்கெல்லாம் பதில் கொடுத்துட்டாள்.அவளால நான் சிரிக்குறேன்ப்பா! அவளுடைய துறுதுறு குழந்தைத்தனத்தோட என்னோட தகிக்கும் வாழ்க்கை சேரும்போது கண்டிப்பா என்னுடைய குழந்தைத்தனம் வெளியேவரும்’ என்று அவன் மனதில் சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்றுக்கொண்டிருக்க,அவள் துள்ளல் நடையோடு சென்றேவிட்டாள்.அப்போது அவளின் செவியை வருடிக்கொண்டிருந்த ஜிமிக்கி ஒன்று கீழே விழுந்ததை அவள் கவனிக்காமல் சென்றுவிட்டிருக்க,அது தீரஜின் கண்களில் பட்டநொடி அவனின் கைகளின் அணைப்பிற்குள்!
டைரியில்
“என் காதலை அவள்கிட்ட உடனே சொல்லி அவளை என்கூடவே கூட்டிட்டு போயிடணும்னு அத்தனை ஆசை!அவள் பின்னாடியே போனேன் காதலுடன்.”
“வானம் மேகமூட்டமா குளிர்க்காற்று வீசத் தொடங்குச்சு. அவள் கூடயிருந்த பொண்ணுக்கிட்ட அவளுக்கு ஸ்கூட்டி, காரோட்ட ரொம்ப பிடிக்கும் ஆனாலும் தனியா போக பயம்னு பேசிட்டிருந்தாள். அவளைப் பத்தி இன்னும் நிறைய தெரிஞ்சிக்கிட்டு அவளுடைய ஆசை எல்லாத்தையும் நிறைவேத்தணும்னு வெறி என் மனசுக்குள்ள. அவளைப் பார்த்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தான் ஆயிருக்கும்.ஆனால் என்னவோ அவளுடன் எனக்கான காதல் ஏழு ஜென்மமாய் பிணைக்கப்பட்ட பந்தம் மாதிரி ஒரு அழகான உணர்வு.”
***
சில்லென்ற காற்று நன்றாக வீச,கோவிலிருக்கும் வீதியிலுள்ள கடைகளை சும்மா பார்த்துக்கொண்டிருந்தாள் கண்ணம்மா. ரூபாவின் ஃபோன் ஒலிக்க,சற்று ஓரமாக நின்று பேசிக்கொண்டிருந்தாள்.
அந்த குளுமையான இயற்கைக்காற்றை கண்மூடி ரசித்த நக்ஷத்ரா, அதை அனுபவித்தபடி சுவாசித்தபடி அவளை மறந்து அவ்விடத்தைவிட்டு அப்படியே முன்னேறி நடந்து வர, வேகமாக வந்துக்கொண்டிருந்த ஒரு வேன் திடீரென்று இவள் நடுவில் வந்ததை கவனிக்கமுடியவில்லை.
வேகமாக வந்த அவ்வண்டி இடித்தேவிட்டது.ஆம், தீரஜை…நக்ஷத்ராவின் பின்னே வந்தவனின் கண்ணில் அக்காட்சிப்பட வேகமாக தன்னவளை தள்ளிவிட்டு விபத்துக்குள்ளாக…கண் இமைக்கும் நொடிக்குள் கூட்டம் கூட, அங்கே அத்தனை பதற்றம்.
கண்களை மூடியிருந்ததால் தன்னைத் தள்ளியது யாரென பெண்ணவளுக்குத் தெரியவில்லை. ஆனால் தன் உயிரைக் காப்பாற்றி அவன் உயிரை விபத்துக்குள்ளாகி ஆபத்தில் இருக்கின்றான் என்றுணர்ந்த நொடி அவளின் கை கால்கள் கீழே விழுந்திருந்த நிலையிலேயே நடுங்கியது. கூட்டம் சூழ்ந்திருந்ததால் அவன் முகத்தை அவளால் பார்க்கமுடியவில்லை.
ரூபா மற்றும் கண்ணம்மா பதறியடித்துக்கொண்டு வேகமாக ஓடிவந்து நக்ஷத்ராவைத் தூக்க அவளோ உறைநிலையின் உச்சத்தில்…
“அவர்…என்னால…அவர் என்னால தான்…இப்படி” என்று அவளின் உதடுகள் நடுங்க, உடல் குலுங்க… அடிப்பட்டவனின் ரத்தம் பெண்ணவளின் உடையிலிந்து முகம் வரை தெறித்து படிந்திருக்க,
ரூபாவின் ஃபோன் வேறு அலறியது!
“ஐய்யயோ!அப்பா கால் பண்றாங்க”
“முதல்ல நம்ம ஹோட்டலுக்குப் போலாம்” என்று பதறிய கண்ணம்மா, “ஐய்யயோ! உமையாம்மா நெத்தியில அடிப்பட்டவருடைய இரத்தம் கல்யாணமான பொண்ணுங்க குங்குமம் வெச்சு பதிஞ்ச மாதிரியிருக்கு அதை முதல்ல துடைங்க” என்று நக்ஷத்ராவை தாங்கிக்கொண்டிருந்தவள் அலற,தன் துப்பட்டாவை வைத்து வேகமாகத்துடைத்த ரூபா அந்நெற்றி வகிட்டு ரத்தத்தையெடுக்க மிகவுமே கஷ்டப்பட்டாள்.
தன் உயிரையும் விட மேலாக இந்த பெயர் அறியாப் பொம்மாயிக்காக அவளின் மீது வைத்திருக்கும் இந்த அதீத காதலுக்காக இப்படி ரத்தம் சொட்டச் சொட்ட சுயநினைவையிழந்திருப்பவின் குருதி குங்குமமாய் நக்ஷத்ராவை அன்றே மனைவியாக்கிக்கொண்டதிற்கு கடவுள் மட்டுமே சாட்சி.
நக்ஷத்ராவை வேகமாக அவர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்குள் அழைத்துச்சென்று,பதறிய வீட்டினரிடம் விஷயத்தைச்சொல்லி ஆச்சியிடம் ஏச்சுகள் பேச்சுகள் வாங்குனாலும்,சுயநினைவிருந்தும் பயத்தில் உறைந்திருக்கும் அக்காவை அம்மாவிடம் பார்த்துக்கச்சொல்லி, அப்பாவோடு விபத்திடத்திற்குச் செல்லும்போது அங்கே விபத்துக்குள்ளானவனில்லை.
கூட்டம் கூடியிருக்கும்போதே, பதற்றத்துடன் வந்த வினோத் அங்கு ரத்த வெள்ளத்தில் சுயநினைவின்றியிருக்கும் நண்பனைக் கண்ட நொடி அவனின் இதயம் ஒரு நொடி செயலிழந்தேவிட்டது.
இங்கே நக்ஷத்ராவை சுத்தம் செய்து, ஹோட்டல் ரிசப்ஷனில் டாக்டர் எண் வாங்கி அவளை பரிசோதித்து ஒன்றுமில்லையென கூறியப்பின்னர் தான் அனைவருக்குமே நிம்மதியானது.
நக்ஷத்ரா இயல்பு நிலைக்குத் திரும்ப ஒரு நாளானது. ஆனாலும் மனதில் பெரிய குற்றஉணர்ச்சியைத் தாண்டிய வலி, சோகம், வெறுமை..
தன் தந்தையிடம் தொடர்ந்து விபத்துக்குள்ளானவனின் நிலையைக் கேட்டுக்கொண்டேயிருந்தவளுக்கு பாலை வார்க்கும் விதமாய் அடுத்த நாள் அவள் செவியில் விழுந்தது…
ஆம், அருணாச்சலத்திற்கே மனது பாரமாயிருக்க,ரிசப்ஷனில் விபத்தாகியவன் பிழைத்துக்கொண்டானானெனக் கேட்க,பிழைத்துவிட்டானென செய்தி வந்தது.அதைக்கேட்ட பின்னர் தான் நக்ஷத்ராவின் இதயத்துடிப்பே சீரானது.
அதே ஏரியாவில் மருத்துவமனையில் தான் தீரஜைச் சேர்த்திருந்ததால் ரிசப்ஷன் மூலம் இவர்களுக்கு அவனின் நிலைப்பற்றி தெரிந்தாயிற்று.சொர்ணவள்ளி பாட்டியின் தொடர் ஏச்சுடன் சென்னைக்குத் திரும்பிவிட்டனர்.ஏனோ அவ்விடத்தை விட்டுச்செல்லும்போது நக்ஷத்ராவின் இதயம் வெறுமையாகயிருந்தது.எதையோ இழந்துவிட்டுச் செல்வது போல்.இதில் அவள் முதல் முதலாக செய்த ஜிமிக்கி ஒன்று வேற காணாமல் போன பெருஞ்சோகம். அது அவளுக்கு ரொம்ப பிடித்த ஒன்று, ஸ்பெஷலான ஒன்று, லக்கியான ஒன்றும் கூட… அதனின் விளைவு அவள் அதற்குப் பின்னர் அவள் செய்த எதையும் போடவில்லை.
தீரஜ் மண்டையில் பெரிதாக அடியில்லை என்பதால் அவனின் உயர் தப்பியது.தீரஜ் கண்விழிக்கும் போது,அவனின் குடும்பமே அழுகை வெள்ளத்தில் திரண்டிருக்க, அடுத்தடுத்து வந்த நாட்கள் அவர்களை ஆறுதல்படுத்துவதிலேயே சென்றாலும்,மனதில் அவளை தொலைத்துவிட்டானென அலறியது. அந்த ஜிமிக்கி அவனின் கை அணைப்பின் பின்னர் பாக்கெட்டில் சென்றுவிட்டிருக்க, அது தொலையாமல் பத்திரமாகயிருந்தது.
வீட்டிற்கு வந்து கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பிய அத்தருணத்தில் அவன் முதலில் செய்தது…ஒரு புது டைரியின் நடுப்பக்கத்தில் அந்தப் பெயர் தெரியாத பொம்மாயியை அச்சசலாக அவளின் அதே பாவாடை தாவணியோடு வரைந்தது தான்.கூடவே அந்த ஜிமிக்கியைவரைந்த ஓவியத்தின் செவிமடலில் காதலுடன் கோர்த்தான்.
அதற்குக் கீழே Nயென எழுதியவன், அவளின் பெயர் என்னவாகயிருக்கும் என்று யோசித்தபடி அப்போதைக்கு விடுவித்தவன்…
அவனின் தேடலைத் தொடங்கினான். அவள் தமிழ்ப்பெண்ணென மட்டும் அறிந்தவன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தமிழ்நாட்டில் தேட, அப்படியே தமிழ் மொழியை எழுதவும் கற்றுக்கொண்டான் அவளுக்காக.
தன் தந்தை தனக்குக் கொடுத்த வாழ்நாள் பரிசாக அவனின் பொம்மாயியைக் கருதியவனின் காதலின் ஆழம் கடலைவிடப் பெரிது.
டிடெக்டிவ் மூலம் அவளை தேடியிருக்கலாம்.ஆனால் ஒரு பெண்ணைப் பற்றி அப்படி விசாரிப்பது நாகரீகமில்லையென அல்லும் பகலுமாய் தேடியவன் வினோத்திடம் இதைப்பற்றிச் சொல்ல,அவனுக்கு ஷாக் மேல ஷாக் தான்…
முதல் அதிர்ச்சி… பாறையைப் போல் இருக்கும் தீரஜின் மனதில் பனித்துளி போல் ஒரு பெண் மீது காதல்.
இரண்டாவது… அப்பெண் ஒரு பெயர்த்தெரியாதவள்.யார் என்னவென ஒன்றும் தெரியாத பெண்ணின் மீது நண்பனின் இந்த வெறித்தனமான காதல்.
தேடினான்! தேடினான்! தேடிக்கொண்டேயிருந்தான். தமிழ் மொழியை நன்றாக எழுதியபின்னர் தான் டைரியில் எல்லாவற்றையும் எழுதினான்.
தமிழ் மொழியின் அர்த்தங்கள் இப்போது அத்துப்படியில் வந்தப்பின்னர். Nயென எழுதி விடுபட்டிருந்த இடத்தில் Nesamitta Maiyale என்று சொட்ட சொட்ட காதல் உணர்வுகளுடன் எழுதினான் தீரஜ்.
அடுத்து தங்கை திவ்யாவிற்கு கல்யாணம் செய்துவைப்பதில் அவன் பிஸியாகியிருந்தாலும்,எப்போதுமே அவனின் பொம்மாயி மனதில் இதயராணியாக அமர்ந்திருந்தாள்.அவளை தன்னவளாக்கி தன்னுடன் கைக்கோர்த்து வாழ்க்கையை பிணைத்து சந்தோஷமாக வாழவேண்டும் என்கிற எண்ணம் அவனின் உடம்பிலுள்ள ஒவ்வொரு செல்லிலும் ஓட…
அடுத்து அவனே எதிர்ப்பாராமல் வந்து இடியாய் விழுந்தது அமெரிக்கன் ப்ராஜெக்ட்… அவன் கண்டிப்பாக செல்லவேண்டிய சூழ்நிலை. தீரஜ் அவனின் நேசமிட்ட மையலை வெறித்தனமாய் காதலித்தாலும் கூட அவனின் குடும்ப பொறுப்புகளிலிருந்து ஒரு முறை கூட தவறியதில்லை.
அடுத்த மூன்று வருடங்கள் அமெரிக்காவில் ஆனால் மனதில் முழுக்க காதல் கலந்த ஏக்கங்களுடன் அவள் மட்டுமே! ஏனெனில் அவளைக் கண்டும், அவளை விபத்தால் இழந்தும் வருடங்கள் கடந்துவிட்டதே!
வினோத் சென்னையிலிருந்ததால் அவனை மட்டும் நம்பி பொம்மாயியின் புகைப்படத்தை அனுப்பி தேடச் சொன்னான்.வினோத், தீரஜின் அதீத விசுவாசி. அந்த விஸ்வாசத்தால் மட்டுமே தான் நண்பனின் மீது அவனுக்கு பயம். உண்மையில் நண்பனாய் வினோத் கிடைக்க தீரஜ் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.
வினோத்தின் தேடலுக்கும் பலனின்றி போக! அமெரிக்காவிலிந்து சென்னை வந்தவன் மறுபடியும் அவனின் தேடலைத் தொடங்க… இரண்டாவது முறை அவளை விபத்திலிருந்து காத்து மீட்டு கண்டும் விட்டான் ஆனால் அவளை கரம் கோர்க்க முடியாத சூழ்நிலையில்!
தீரஜின் டைரியைப் படித்துமுடித்த ரூபாவின் கண்களில் அவ்வளவு கண்ணீர். அச்சமயம் ஆதிரா இன்னும் உறக்கதிலேயேயிருக்க…