“ரூபா!நீ எப்போ வந்த?” என்று வேகமாக மனோஜ் வர, அவனின் பின்னே வினோத்தும்.
“மனோஜ்!தீரஜ் அத்தானுடைய காதல் அது ஒரு காவியம்டா.நான் எல்லாத்தையும் படிச்சிட்டேன்” என்று கதறல் அழுகையுடன் தன்னவனை அணைத்துக்கொள்ள, வினோத்தின் கண்களில் கண்ணீர் சூழந்தபடி, “ஆமா, தீரஜ் ஒரு காவியத்தலைவன் தான்!அவன் தலைவிக்காக தன் தலையையே கூட சந்தோஷமா இழப்பான்” என்று நண்பனின் காதலை கிட்டயிருந்து பார்த்தவனின் வார்த்தைகளில் அத்தனை உருக்கம். ரூபாவின் மூலமாக திரஜின் காதல் காவியத்தைக் கேட்ட மனோஜ்ஜின் கண்களும் குளமாகியது.
“இவ்வளவு காதல் ஒரு பொண்ணு மேல தன் உயிரையும் விட மேலாக…லவ் யூ சிம்மா அண்ணையா” என்றான் நெகிழ்வாக.
ஸ்ரீபெரும்புதூரிலுள்ள அந்த ஹோட்டல் வாசலின் முன்னே வந்து நின்றவளின் மனம் தீரஜை ரொம்பவே தேடியது. அப்போதே மணி இரவு ஏழு. முன்னாடியென்றால் இரவில் தனியாக நிற்க பயந்திருப்பாள்…ஆனால் இப்போது தன்னவன் தனக்குணர்த்திய அழகான வாழ்க்கையால் பயமென்பது குறைந்தேவிட்டது.
காரில் சாய்வாக நின்றிருந்தவள் ஏதேர்ச்சையாக சாலையின் மறுப்புறம் பார்க்க கோட் சூட்டில் தீரஜ் தான் யாருக்கோ ஃபோன் பேச முயன்றுக்கொண்டிருந்தான். அதைக் கண்ட நக்ஷத்ராவோ தன் கைப்பையிலிருந்த அந்த அழகான கோர்த்த முத்துமாலையை உள்ளங்கைக்குள் வைத்தபடி சாலையை கடக்க எத்தனித்தாள்.
நக்ஷத்ரா பாதுகாப்பாக வந்துவிட்டாளாவென கண்டறிய ரோகிணி அவளுக்கு கால் செய்ய, அவளின் செல்லோ சைலண்ட்டில் இருக்கிறது.
பார்ட்டி முடிந்து வெளியே வரும்போது தீரஜின் ஃபோன் ஒலிக்க,அதை எடுக்கும் பொருட்டு வெளியே வந்தவன், கால்லை எடுப்பதற்குள் கால் கட்டாகிவிட, ரோட்டை கடந்து மறுபுறம் வந்து திருப்பி சித்திக்கு கால் செய்துக்கொண்டிருக்க அவருக்கு லைன் கிடைக்கவில்லை. அப்போது நக்ஷத்ரா வந்ததையும் கவனிக்கவில்லை.
நக்ஷத்ரா சாலையின் நடுவே தன்னவனைக் காணும் சந்தோஷத்துடன் வந்துக்கொண்டிருக்க,தீரஜ் ஏதேர்ச்சையாக திரும்பி அவளைக் கண்டு ஸ்தம்பித்த நொடி,அவளின் கண்கள் அவளையும் மீறி தாழ்ந்து இதயம் படபடத்து சாலையில் கவனத்தை சிதற, அது அந்த இரவில் வேகமாக வந்துக்கொண்டிருந்த வாகனங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் தீரஜ் ஸ்தம்பித்தாலும் உடனே தன்னிலை மீண்டான். ஏனெனில் இருமுறை விபத்தின் அனுபவம் உணர்ந்தவன் ஆயிற்றே!
“நக்ஷத்ரா அங்கே வண்டி வருது” என்று சத்தத்துடன் அவளை நெருங்கி ஓடி வர, அவள் சாலையில் இருப்பதையே மறந்துவிட்டாள் போல! அசையாது நின்றேவிட்டாள்.
ஒரு தண்ணீர் லாரி அதீத வேகத்தில் நக்ஷத்ராவை நோக்கி வந்துக்கொண்டிருப்பதை கவனித்து பதறிய தீரஜ்,தன்னவளை வேகமாக தன்னுடன் இழுத்தபடி சாலையோரம் ஒதுங்கி மறுகணமே அவளைத் தன்னுள் இறுக்கமாக அணைத்துக்கொண்டான். இதெல்லாமே கண் இமைக்கும் நேரத்தில் நடக்க,மூன்றாவது முறையாக தன்னவளின் உயிரைக் காப்பாற்றியவனின் மனம் இப்போதும் கூட அவனின் உயிரை பொருட்படுத்தவேயில்லை.
எவ்வளவு நேரம் நக்ஷத்ராவை அணைத்திருந்தானென தீரஜிற்கே தெரியவில்லை. முதல் சில நொடிகள், தன்னவளின் உயிரிற்கு எதுவும் ஆகவில்லை என்கிற பதற்றம்,பயம் போய் நிம்மதியில் நிலைத்த அணைப்பு ஆனால் இப்போது அவனின் அணைப்பு மேலும் இறுகியது… எதனால்? இத்தனை நாட்கள் அவளைக் காணாது துடித்த காதல் மனதிற்கு இதமாக,சுகமாகயிருந்தது அந்த அணைப்பு. ஏக்கத்தின் தாக்கமும் கூட.
வாகனங்களின் சத்தத்தில் தான் தன்னிலை மீண்டவன் நக்ஷத்ராவை மெல்ல தன்னிடமிருந்து விலக்க,அப்போது தான் நக்ஷத்ரா சுயநிலைக்கு வந்தாள்.
“நக்ஷத்ரா நீ எப்படியிங்க? ஆதிரா எங்கே?” என்று அவனின் தந்தையுள்ளம் மகளை பரிதவிப்புடன் தேடுவதை, காதல் நிறைந்த பாசத்துடன் பார்த்துக்கொண்டிருந்த நக்ஷத்ரா, “ஆது அவள் அப்பா வீட்டுல இருக்காள்! ஆதுவுடைய அம்மா அவளுடைய புருஷனைத் தேடி வந்திருக்காள்” என்று புன்னகை படர்ந்தாலும் கண்களினோரம் மின்னியது கண்ணீர்.
அதை அதிர்ச்சி கலந்த வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்த தீரஜிற்கு என்ன நடக்கிறதென்றுக்கூட புரியவில்லை. தன் கண்ணோரம் மிளிர்ந்த கண்ணீரை துடைத்த தீரஜை ஆழ்ந்து பார்த்தபடி, “நீங்க என்னை எப்போ எங்கே பார்த்தீங்கனெல்லாம் எனக்குத் தெரியாது தீரஜ்.ஆனால் உங்களுடைய காதல் ரொம்ப ரொம்ப உண்மைன்னு நான் புரிஞ்சிக்கிட்ட அந்த நொடி என்னால நீங்கள் இல்லாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கவேமுடியலை. அந்தக் காதல் என்னை உங்கள்கிட்ட கொண்டு வந்து சேர்த்திடுச்சு…எஸ்,ஐ லவ் யூ..லவ் யூ” என்று அவனின் கண்களை பார்த்தவாறே கண்ணீர் சிந்தியபடி சிரித்தவளின் கூற்றைக் கேட்டு ஸ்தம்பித்து நின்ற தீரஜ்ஜின் வலிய மார்பின் மென்மையான அணைப்பிற்குள் அவனின் பொம்மாயி.
இத்தனை வருடங்கள் தொலைத்த பொக்கிஷத்தை மீட்டெடுத்து தன் அருகே வைத்திருந்தாலும்… நீ அதனுடைய பாதுகாவலன் மட்டுமே உரிமைக்கொள்ளாதே! என்று தினமும் தன் பொம்மாயியின் மேல் உண்டான காதல் உணர்வுகளை அடக்கிக்கொண்டவன்,இன்று அவனின் காதலை நிலைநாட்டி உரிமையையெடுத்து அணைத்துக்கொண்டான் தன்னவளை தன்னுள்! தன்னைப் பிரிந்த ஜீவன் தன்னிடம் திரும்பி வந்து தன்னை ஜனிக்க வைத்த உணர்வில் திளைத்துக் கொண்டிருந்தவனின் அணைப்பில் இருந்தது காதல் காதல் காதல் மட்டுமே!
அவளை அணைத்ததில் அவன் முகம் புன்னகைக்க, அவளோ குலுங்கி அழுதாள் தன்னவனின் மார்பில் தஞ்சம்கொண்டு.
“பொம்மாயி” என்று அவன் அவளின் முகத்தை ஏந்தி,ஆழ்ந்து அழைத்தபடி அவளின் கண்ணீரைத் துடைக்க அது அவளின் உயிர்வரைத் தொட்டுத் தீண்டியது. பொம்மாயி என்று அழைக்கும் வார்த்தைக்குப் பின்னால் சொட்ட சொட்ட காதல் வழிந்ததை அவளின் இதயமறிந்து மொழிந்தது.
“நான் உன்னை அவ்வளவு காதலிக்குறேன் பொம்மாயி! ரொம்ப ரொம்ப… எஸ், ஐ லவ் யூ! ஐ லவ் யூ” என்று சந்தோஷ கண்ணீருடன் காதலை சொன்னவனிடம் சொக்கியே விட்டாள் அவனின் பொம்மாயி.
“நான் உங்களுக்கு கொடுத்தது எல்லாமே வலி,துன்பம்,கோபம்,நஞ்சு,பிரச்சனை, கஷ்டம் தான் தீரஜ். ஆனால் நீங்க எனக்கு எப்போவுமே கொடுத்தது காதல் காதல் காதல் மட்டும் தான்.அப்படி நான் உங்களுக்கு என்ன பண்ணிட்டேன்… உங்களுடைய காதலுக்கு நான் இதுநாள் வரைக்கும் தகுதியானவளா இருந்ததில்லை” என்று அவள் கூறிமுடிக்கும் போதே அவளை மேலும் இவ்வாறு பேசவிடாது அவளின் இதழை மூடியிருந்தான் அவனின் இதழால் மென்மையாக!
நக்ஷத்ராவிற்கு கிடைக்கும் முதல் இதழ் தீண்டல் இது! இதுவரை காம இச்சைக்கு இறையாகியிருந்த அவளின் மென்இதழை மயிலிறகு போல் வருடியது தீரஜின் வன்இதழ்கள் காதலுடன்! இதெல்லவா காதல்! இப்படியொரு காதலை,காதலனை பெற தான் என்ன தவம் செய்தேனோ என்று சந்தோஷத்தில் குதித்த மனதிற்கு அவனுடைய காவியம் எதுவும் தெரியாது. ஆனாலும் உன்னதமான காதலுடன் சரணடைந்துவிட்டாள் அவனிடம்.
தன் கையிலிருந்த முத்துமாலையை அவனிடம் காட்டிய நக்ஷத்ரா, “இது வெறும் முத்து மாலையில்லை தீரஜ். சிறுக சிறுக நான் உங்கள் மேல வைச்ச நம்பிக்கை,மதிப்பு,வியப்பு,ஆவல்,ஆசை,நிம்மதி,சந்தோஷம் எல்லாத்தையும் கோர்த்து காதல்ல முடிச்சு…முடிஞ்சு மாலையா செஞ்சு இப்போ என் கையில என்னுடைய உங்களுக்கான காதலின் தொடக்கமாயிருக்கு!” என்று நெகிழ்வுடன் கூறியவளின் மென்பஞ்சு உள்ளங்கையில் இருந்த மாலையையெடுத்த தீரஜ் அவளை ஆழ்ந்து நோக்கி, “இது நம்ம காதலுக்கான அடையாளம் பொம்மாயி!” என்று காதல் பொங்க அவளின் கழுத்தில் அணிவித்தான்.
அடுத்த சில நொடிகள் என்ன பேசினார்களென்று அவர்களுக்கே தெரியவில்லை! அவர்கள் இருவருக்குமான உலகத்தில் அவர்கள் வானில் மிதக்க, ரோகிணி மறுபடியும் ஃபோன் செய்ய, தன்னிலை மீண்டவன் அவரிடம் பேசிவிட்டு,பெருமையுடன் பார்த்தான் தன் மனைவியை.
“ஃபைனலி யூ மேட் இட் நக்ஷத்ரா. எனக்குத் தெரிஞ்ச உன்னுடைய ஆசைகள் நடந்திருச்சு” என்று அவள் வந்த காரைப் பார்த்தபடி குறிப்பிட்டவன், “இனி எனக்குத் தெரியாத உன்னுடைய ஆசைகள் உன்கிட்ட தெரிஞ்சு நிறைவேத்துவேன்” என்று அவளின் கையை தன் கரத்திற்குள் கோர்த்து உறுதியளித்தான் தீரஜ்.
அன்று வீட்டிற்கு வந்து முதல் வேலையாக விளையாடிக்கொண்டிருந்ததை மகளை அள்ளி கன்னத்தல் முத்தமிட்டான் தீரஜ். அப்போது அவன் விழிகளில் உதிர்ந்தது ஒரு துளி சந்தோஷகக் கண்ணீர்.
அப்பாவைப் பார்த்ததும் தாய் கங்காரூவிடம் அடைக்கலம் அடைவது போல் அடைந்தே விட்டாள் மகள். இவர்கள் இருவரின் பாசப்பிணைப்பைக் கண்டு குடும்பமே மெய்சிலிர்த்துவிட்டனர்.
ஆதிராவின் பிறந்ததாளை அவர்கள் நினைத்தது போல் ஹாலில் சிறப்பாக கொண்டாடினர். தீரஜ், ரூபா மனோஜ் மற்றும் வினோத்திடம் பேசவேயில்லை. அதை நினைத்து நக்ஷத்ராவிற்கு கவலையாகயிருந்தது.
நாட்கள் அப்படியே நகர, அன்று மாலை கடையை மூடிவிட்டு வண்டியில் சென்றுக்கொண்டிருந்த பிரியாவின் முன்னே ஒரு கார் வந்து இடைமறித்து நின்றது.
“யார்டா அவன்?” என்று அவள் கோபத்தில் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் போதே,கூலர்ஸூடன் ஸ்டைலாக வந்து இறங்கிய வினோத், பிரியாவை நோக்கி வர,
“ஓ இவனா! இப்போ மணி என்ன?” என்று முணுமுணுத்தபடி கடிகாரத்தைப் பார்த்தவள், ‘குட் ஈவ்னிங் சொல்லுவான்’ என்று மனதில் நக்கலடித்துக் கொண்டிருக்கும் போதே, “சுத்தி வளைச்சுப் பேச நான் ஒன்னும் ஸ்வீட் 16 இல்லை… ஐ அம் 30 சோ நேரடியா சொல்றேன்… ஐ லவ் யூ. அடுத்து நேரடியா கேட்குறேன்… எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்?” என்று வினோத் கேஷுவலாக கேட்க, பிரியா தான் ஸ்தம்பித்து திகைத்தேவிட்டாள்.‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’ என்று மனதில் நினைத்தபடி.
“நான் கிளம்பணும்” என்று தடுமாறியபடி வண்டியை எடுக்க,சாவியை எடுத்தவன் தன் கையில் சுழற்றியபடி, “தாராளமா போங்க மேடம்! ஆனால் எனக்கு ஆன்ஸர் சொல்லிட்டு” என்று கெத்தாகப் பேச,
“யோவ்! இவ்வளவு நாள் பயந்த மாதிரி சிரிப்பு காமிச்சிட்டு இப்போ திடீர்னு ஹீரோ மாதிரி வெட்டி பந்தா காட்டுற” என்று பிரியா எகிற,
கூலர்ஸை கழட்டியவன், தன் தாடையில் கைவைத்து, “பயம் தான்! உன் மேல இல்லை… தீரஜ் மேல.அவன் நட்பு மேல.நான் உன்னைக் காதலிக்குறேன்னு அரக்கு வேலியிலயே நீ கண்டுபிடிச்சிருப்ப! தீரஜ் நக்ஷத்ராவே சேராமல் இருக்கும் போது நான் உன்கிட்ட காதலை சொல்றது நாகரீகமாயிருக்காதுன்னு தான் ஒதுங்கிப்போனேன். நான் உன்கிட்ட லவ்வைச் சொல்லி, நீ நக்ஷத்ரா சிஸ்டர் கிட்ட சொல்லி அது தீரஜ்க்கும் அவங்களுக்கும் மேலும் பிரச்சனையை உண்டாக்கக்கூடாதுன்னு தான் என் பிரண்ட்ஷிப்காக மட்டும் பயந்து உன்கிட்ட விலகினேன். அதுக்காக உன்கிட்ட பேசாமலும் இருக்க முடியலை அதான் லிமிட்டாயிருந்தேன்.என் நண்பனும் உன் நண்பியும் சேர்ந்தாச்சு! இதுக்கு அப்புறமும் குட் மார்னிங், குட் ஈவ்னிங் சொல்ல நான் என்ன குட்டிப்பாப்பாவா… என்னைக் கல்யாணம் பண்ணினா நான் உனக்கே பாப்பா கொடுப்பேன்! அவ்வளவு மாஸானவன்” என்று அவன் கூறிக்கொண்டிருக்கும் போதே,அவனிடம் வேகமாக கீயை வாங்கி பறந்தேவிட்டாள் பிரியா.
‘ஆத்தாடி! இவன் என்ன திடீர்னு ஹீரோ நான்தான்ற மாதிரி பண்ணிட்டிருக்கான்’ என்று மனதில் படப்படத்துக்கொண்டாள் பிரியா.
சொர்ணவள்ளி பாட்டி, அன்று நக்ஷத்ரா போட்ட போடில் சப்த நாடியும் அடங்கியிருக்க, அவருக்கு சாப்பாடு கொடுப்பதைத் தாண்டி யாருமே பேசுவதில்லை. அருணாச்சலம் உட்பட.
திருந்தாத ஜென்மம் எனத் தெரிந்தும் பேசி என்ன பயன் என்கிற மனநிலை தான். இப்போது சொர்ணவள்ளியும் யாரிடமும் தேவையின்றி பேசவில்லை. அவர் திருந்தவெல்லாமில்லை. தன் கர்வத்தை பிரதானமாக வைத்து திரிபவர் வயதில் சிறியவராயின் திட்டி, அடித்து திருத்தலாம். அதனால் அவருக்கு தனிமை கொடுத்து தங்களை அவரின் வைப்பிரேஷனிலிருந்து தள்ளியிருந்தார்கள் நக்ஷத்ரா குடும்பத்தினர்.
“மனோஜ்! எனக்கு வாந்தி வருது! எனக்கு குப்புற படுக்கணும்! எனக்கு கொமட்டுது” என்று ரூபா அவனை புரட்டிப்போட்டு கொண்டிருந்தாள். ஆம், ரூபா கருவுற்று இருக்கிறாள். ரோகிணி மற்றும் சீனிவாசலு பூர்விக வீட்டிற்குச் சென்றிருந்தனர்.
மனைவியை பிறந்த வீட்டிற்கும் அனுப்ப மனமில்லாது தன்னுடனே வைத்து அவளின் காதல் இம்சையில் காதலுடன் தகித்துக்கொண்டிருந்தான் மனோஜ்.
நாட்கள் செல்ல,எப்படியோ நக்ஷத்ரா தீரஜை கன்வின்ஸ் செய்து மூவரையும் ஒரு பொது மன்னிப்பு கேட்கவைத்து பேசவைத்திருந்தாள்.
சுரேகா வீடு திரும்பியிருக்க, தீரஜின் வீடெங்கும் சந்தோஷ குரல்களும் இனிய கூச்சலும் ஒலித்துக்கொண்டிருந்தது.
“நாளைக்கு கோவில் போகணும் சிம்மா” என்று பேத்தியை கொஞ்சியவர், “உன் அப்பாக்கு நாளைக்கு பிறந்தநாள் குட்டிமா” என்று நெகிழ்ந்தார்.
“ஐ… ஜாலி ஜாலி” என்று ஆதிரா கூச்சலிட்டாள்.
அன்றிரவு மகளை தூங்கவைத்தப் பின்னர்,மனைவியுடன் சிறிது நேரம் காதல் மொழிகள் பேசிவிட்டு இருவரும் உறங்க முற்பட, கணவனின் மேலேறி குழந்தையைப் போல மார்பில் துயில்கொண்டாள் நக்ஷத்ரா. சில சமயம் இந்த மாதிரி ஆசையுடன் செய்வது அவளின் வழக்கம் தான்.
காதலோடு காதலுடன் அவர்களின் இல்லறம் தொடங்கியிருக்க, அடுத்த நாள் தீரஜின் பிறந்தநாளில் விடிய கணவனுக்காக தானே கேக் செய்து அசத்தினாள் நக்ஷத்ரா.தீரஜ் இல்லாத சமயத்தில் ரூபாவே தன் அக்காவைத் தேடி வந்தாள் கையில் அவனுடைய டைரியுடன்.
தான் வைத்த இடத்தில் டைரியில்லை எனக் கண்டறிந்த தீரஜ்… யாரிடம் என்ன கேட்பது என்கிற குழப்பத்திலேயே கேட்காது தேங்கியிருந்தான்.
“உமி, இன்னிக்கு அத்தான் பேர்த்டேனால நான் உனக்கொரு ஃகிப்ட் கொடுக்குறேன்” என்று கொடுத்துவிட்டுச் சென்றுவிட,
“எனக்கு கிஃப்ட்டா” என்று முணுமுணுத்தபடி டைரியைப் பார்த்தவள் முதலில் தட்டுப்பட்ட இடத்தில் திறக்க,அவளின் ஓவியத்துடன் செவியோடிருந்த ஜிமிக்கியைக் கண்டு அதிர, அதே அதிர்வுடன் கைகள் நடுங்க முதல் பக்கத்திலிருந்து படித்தாள்… வேகமாக, பயமாக, கவலையாக,பதற்றமாக,காதலாக,நேசமாக… அதைப் படித்து முடிக்கும் பொழுது அவளின் தலையேசுற்றியது. அவளின் கண்ணீர் தீரஜின் டைரியின் ஒவ்வொரு பக்கத்தையும் நிரப்பிக்கொண்டிருந்தது.ஒருவனால் இந்தளவு இப்படி காதலிக்க முடியுமா! இவனை காதல் பித்தனென்று சொல்லவா? இல்லை பித்துப்பிடித்த காதலனென சொல்லவா? இல்லை என் உயிரைக் காப்பாற்றி அவன் உயிர்மீது பயம் கொள்ளாத வீரக்காதலனென சொல்லவா? அவள் இவ்வுலகில் ஜணித்ததின் பிறவிப்பயனாக தீரஜ் கிடைத்துவிட்டதை எண்ணி அவனிடம் கைக்கூப்பினாலும் ஈடாகாது, காலில் விழுந்தால் கூட அவனின் காதல் முன் சமமாகாதென அவளின் மனது அலறியது.
அன்றிரவு கோவில் சென்றுவிட்டு வெளியே சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்து மகளை தூங்கவைத்த தீரஜின் முன் வந்த நக்ஷத்ரா, “ஹாப்பி பேர்த்டே தீரா” என்று ஒரு அழகான தங்க பிரேஸ்லேட்டை அவனின் கையில் அணிவித்து அங்கே முத்தமிட்ட நக்ஷத்ராவை அள்ளி அணைத்துக்கொண்ட தீரஜ் தன் பொம்மாயியுடன் மென்மையாய் காதலில் சங்கமித்தான்.
கணவனின் மார்பில் படுத்துக்கொண்டிருந்த நக்ஷத்ரா, “கிஃப்ட் இன்னும் முடியலை தீரா” என்று மெதுவாக எழுந்தவள், அங்கு கப்போர்ட்டில் வைத்திருந்த டைரியை எடுத்து, “இது உங்க அப்பாவுடைய கிஃப்ட்” என்று அவள் கூறும் போதே, கண்ணீர் படர அவளின் கன்னம் மூக்கெல்லாம் அழுகையால் சிவக்க ஆரம்பித்தது.
இத்தனை நேரம் மனைவியோடு காதல் புரிந்தவனின் மென்னகை மறைந்து இப்போது உறைநிலையிலிருந்தது.
ஆனால் நக்ஷத்ராவோ உறைநிலையைத் தாண்டிய கொதிநிலையில் இருந்தாள்.தன் மேலேயே கொதிப்பு! தன்னால் தன் தீரா அனுபவித்தது தான் எத்தனை! எத்தனை! அந்த கொதிப்பு கண்ணீராய் வெளியே வந்து கொட்டிக்கொண்டிருக்க, அவளின் கண்ணீரை வேகமாக துடைத்தவன், “அழக்கூடாது பொம்மாயி. ஆறுதல் தராத அழுகை உனக்கு எப்போவுமே வர வேண்டாம்” என்று அவளை பின்னேயிருந்து அணைத்தவன், அவளின் கழுத்து வளைவில் முத்தமிட்டு, “நீ அழுதால் சோகமாயிருந்தால் என்னால தாங்கிக்க முடியாது டி!உன்னை முதல் முறையா பார்த்த பொம்மைப் பொண்ணா நீ ஆகணும். அது தான் நீ பொம்மாயி” என்று அவளின் தலையை ஆதரவாக வருடியவனின் கழுத்தைச் சுற்றி கட்டிக்கொண்டாள் நக்ஷத்ரா காதலுடன்.
“மூனு தடவை உங்கள் உயிரை எனக்காக…” என்று முழுதாக சொல்ல முடியாமல் துடித்தவளின் நா வறண்டு உதடுகள் துடிக்க… தன்னவனுக்காக வந்த அழுகை மற்றும் கண்ணீரை வெளியிடாமல் உள்வாங்கினாள் நக்ஷத்ரா.
“இனி எத்தனை பிறவி எடுத்தாலும் உங்களை நான் யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன் தீரா” என்று தன்னவனின் செவியில் காதல் கலந்த அழுத்தத்துடன் நக்ஷத்ரா கூற,
“எனக்கு நீ… உனக்கு நான்… இது தான் விதிக்கப்பட்டது நக்ஷத்ரா… இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் இந்த ரெட்டி மட்டும் தான் பொம்மாயியுடைய புருஷன் டி அழகு பொண்டாட்டி” என்று மனைவியின் மூக்கை செல்லமாகக் கிள்ளினான் தீரஜ்.
அடுத்த ஒரு வருடத்தில் நக்ஷத்ரா ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுக்க, தன் தந்தையே தனக்கு மகனாய் பிறந்து வந்ததாய் உணர்ந்து நெகிழ்ந்த தீரஜிற்கு இப்போதும், எப்போதுமே முதல் முக்கியத்துவம் அவனின் அம்மாயி தான்.
திவ்யாவிற்கும் ரூபாவிற்கும் பெண் குழந்தை பிறந்திருந்தது.
அடுத்து வந்த தீரஜின் ஒவ்வொரு பிறந்ததாளிலும், நக்ஷத்ரா அவளின் பரிசைக் கொடுத்து அடுத்ததாக தீரஜின் தந்தை தரும் பரிசென ஏதாவது ஒன்றை கொடுப்பதை வழக்கமாக்கிக்கொண்டு அவனை மகிழ்வித்தாள்.
காதலைக் கொடுத்து தன் உயிரை மீட்டிய தீரஜின் பொம்மாயி!
மகனை பெற்றெடுத்து,பிறந்தநாள் பரிசுகள் மூலம் அவன் இழந்த தந்தையையும் மீட்டிக் கொடுத்தாள் தீரஜின் தாரா!
வேராகி, தண்டாகி, இலையாகி இப்போது நக்ஷத்ராவிற்குள் மலராகி பூத்த காதல்,காயாக ஆரோக்கியமான வாழ்வுடனும், கனியாக இனிமையான வாழ்வுடனும் அவளுக்கு கிட்டிக்கொண்டிருக்கும் சந்தோஷம், அவள் மனதில் முகத்தில் மிளிர்ந்து ஒளிரும் புன்னகை மென்மேலும் செழிக்கிறது தீரஜின் காதலால்!