மீனாட்சி, கணவன் சொல் தட்டாத மனைவி. மாமியாருக்கு அடங்கிய மருமகள். இப்படியே இருந்து இருந்து தான் பெரிய மகள் வாழ்க்கையில் கோட்டை விட்டார்.
மாப்பிள்ளை கோடீஸ்வரன் அங்கே தான் பெண் கொடுக்க வேண்டும் என்று சொர்ணவள்ளி கூறிய போது மகன் மற்றும் மருமகள் இருவருக்குமே பேரானந்தம் தான்!
பெண் வாழ்க்கை இப்படி ஆனதில் தனக்கும் சம பங்கு இருக்கிறது என்று மீனாட்சிக்கு மனதில் அழுத்திக் கொண்டு தான் இருக்கிறது. அப்போது கூட அவர் மாமியாரின் மேல் மனதளவில் கோபம் அடையவில்லை. ஆனால் இப்போது மனமெல்லாம் அவர் மீது கோபம்.
நக்ஷத்ரஉமையாள், பெயரைப் போல அழகில் ஜொலிக்கும் தேவதைப்பெண். நிலாவைப் போன்று பால் வண்ணத்தில் சிறிய வட்ட முகத்தை கொண்டவளுக்கு லட்சணமான எடுப்பான தோற்றம். சராசரி உயரத்துடன் மெல்லிய தேகத்துடன் கச்சிதமான உடலமைப்புடன் துறுதுறுவென திரியும் வண்ணத்துப் பட்டாம்பூச்சி போல் வளர்ந்தாள். உதவி என்று யாராவது கேட்டால் திகட்ட திகட்ட உதவி செய்வாள். இரக்க குணம் அதிகம் உள்ள பெண். பிறரின் சோக கதையைக் கேட்டால் கூட அழுது விடுவாள்.
எப்போதும் அவளின் முகத்தில் புன்னகை இருந்துக் கொண்டே இருக்கும்.யாரையும் புண்படும் படி பேசவும் மாட்டாள். அதே சமயம் எடுப்பாற் கைப்பிள்ளை போல் யார் என்ன சொன்னாலும் கேட்டும் விடுவாள். அவளுக்கென்று விருப்பு வெறுப்புகள் என்று எதுவும் இல்லை.
சிறிய வயதிலிருந்து அவளுக்கு உடைகள் கூட தேர்வு செய்வது மீனாட்சி தான்.
பன்னிரண்டாம் வகுப்பு முடிந்த பின் அவள் என்ன படிக்க வேண்டும் என்று முடிவெடுத்து பிஎஸ்சி படிக்க வைத்தது தந்தை தான். இப்படி தன் வாழ்க்கையை மற்றவர்களின் கையில் கொடுத்து கோட்டை விட்டதில் நக்ஷத்ராவின் தவறும் இருக்கிறது.
ரூபா அவளுக்கு குணத்திலும் நேர் எதிர் என்றால். உருவத்திலும் வேற்றுமை தான். ஐந்தரை அடியில் உயரத்துக்கேற்ற உருவத்துடன் பார்க்க அழகாகவே இருந்தாலும், நக்ஷத்ராவிற்கு அக்காவைப் போல் இருக்கின்றாள் என்று தான் பார்ப்போர்கள் எல்லாம் சொல்வர். அவர்கள் உருவத்தை வைத்து குறிப்பிட்டாலும், மனதளவிலும் ரூபா தான் நக்ஷத்ராவை விட முதிர்ச்சியாக இருப்பாள்.
நக்ஷத்ராவிற்கு பதினொன்பது வயது இருக்கும் பொழுது தான் காரைக்குடியில் ஒரு சொந்தக்கார கல்யாணத்திற்கு குடும்பத்தோடு சென்றிருந்தார் அருணாச்சலம்.
அங்கே தான் கார்த்திகேயன் முதன் முதலாக நக்ஷத்ராவைப் பார்த்தான். பார்த்தவுடன் அவளின் அழகை கொள்ளை கொள்ள அவனின் உணர்வுகள் துடித்தது. அவனுக்கு பெண்கள் புதிது எல்லாம் இல்லை.
பெங்களூரில் உள்ள ஒரு பிரபல நகைக்கடை மற்றும் துணிக்கடையின் உரிமையாளர் காசிவிஸ்வநாதன், கார்த்திகேயனின் தந்தை. அவரைப் பொறுத்த வரை அவருடைய மகன் இரத்தினக் கட்டி! உத்தம ராசா! ஆனால் அவன் ஒரு கடைந்து எடுத்த பொறுக்கி என்று யாருக்குமே தெரியாது.
கார்த்திகேயனின் குடும்பம் ரொம்பவே நல்ல குடும்பம் தான். பண்பு, பணிவு, ஒழுக்கம் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து தான் மகனை வளர்த்தனர். அப்படி இருந்தும் அவனின் நண்பர்கள் சகவாசம் சரியில்லாமல் இருந்தது. சேர்க்கை சரியில்லாமல் கெட்டுப் போனான். ஆனாலும் அவன் மனது திடமாக தூயதாக இருந்திருந்தால், இப்படி கேடுகெட்டவனாய் ஆகியிருக்க மாட்டான்.
அவனின் பெற்றோர்கள் செய்த ஒரே தப்பு, அவனை செல்லமாக வளர்த்தது. எந்நேரமும் பெங்களூரில் இரவு நேர பார்ட்டி, கிளப், ஸ்ரிப் கிளப், தகாத இடங்கள் என்று அவன் செய்யாத வேலைகளே இல்லை.
கல்லூரி படிக்கும் போது க்ரூப் ஸ்டடி என்று உருட்டியவன், அப்பாவின் பிசினஸைப் பார்க்கும் போது புது பிசினஸ் பிளான் என்று நன்றாக ஏமாற்றி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்த சமயத்தில் தான் காரைக்குடியில் உறவினர்கள் திருமண நிகழ்ச்சியில் புதிதாக பூத்த மலர் போல இருந்த நக்ஷத்ராவைக் கண்டான். அவன் வாழும் ஊர் பெங்களூர் என்பதால் இதுவரை அந்த ஊரில் தான் அவனின் ஆட்டமெல்லாம்.
காரைக்குடியில் சொந்தம் பந்தம் முன்னர் பவ்வியமான பையன் என்று அனைவரும் சொல்லும் அளவிற்கு நடித்தான்.
நக்ஷத்ரா உறவினர் பெண் அவள் மீது கை வைக்க முடியாது என்பதே அவனிற்கு மனதினுள் பெருங்கோபம் கிட்டியது. மூன்று நாட்களாக அந்த திருமண விழாவில் நட்ஷத்ராவை வைத்த கண் வாங்காமல் பார்த்தவன் அவளை எப்படியாவது தன் உடைமையாக்க வேண்டும் என்று எண்ணினான்.
‘சுடிதார்லயும் அழகா இருக்கா, சேலையில ஹாட்டா இருக்காள்’ என்று அவளை அவதூறாகப் பார்த்தவனின் கண்களோ லேசாக தெரிந்த அவளின் வெற்றிடையைக் கூட விட்டு வைக்காமல் அசிங்கமாகப் பார்த்தது.
‘பொண்ணுனா இப்படி இருக்கணும்… எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் கன கச்சிதமா இருக்கு’ என்று அவளை மேலிருந்து கீழ் வரைப் பார்த்தவன், ‘ஆளு செமயா இருக்காள்! கண்டிப்பா பேரழகி தான்… எப்படியோ நமக்கு இங்க தான் பொண்ணு பார்ப்பாங்க… பேசாமல் இவளையே கல்யாணம் பண்ணிடுவோம்… இவளை விட அழகா எவளும் இந்த சுத்து வட்டாரத்துல கிடைக்க மாட்டாள். ஏன் பெங்களூர் நவ யுவதிங்க கூட இவளை மாதிரி அட்டகாசமா இல்லை’ என்று முடிவெடுத்தவனோ, நல்ல பிள்ளை போன்று தன் தாய் சிவகாமியிடம் சென்று, “அம்மா, அந்த ரெட் கலர் பட்டு சேரி கட்டிருக்க பொண்ணு எனக்கு மனைவி வந்தால் நல்லா இருக்கும்” என்று நடிப்புடன் அவன் நினைத்ததைப் போல் கூறினான்.
“அப்படியா கார்த்தி… நமக்கு நெருங்கிய சொந்தம் தான்” என்று வாய் முழுதாக பற்களுடன் தன் கணவனை நோக்கிச் சென்றார் சிவகாமி.
“ஏங்க நம்ம கார்த்திக்கு அந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்காம்” என்று புன்னகையுடன் கூறியவரை முறைத்த கணவர், “அவனுக்கென்ன வயசு ஆகுது… இன்னும் இருபத்தி மூணே முடியலை அதுக்குள்ள என்ன கல்யாணத்துக்கு அவசரம்” என்று மறுத்தார்.
சிவகாமியோ, “இப்போ பொண்ணு கேட்காமல் விட்டுட்டால், கிளி மாதிரி இருக்குற பொண்ணை வேற யாராவது கொத்திட்டு போயிடுவாங்க” என்று எரிச்சல் கலந்த சலிப்புடன் கூற, கணவனுக்கும் மனைவி கூறுவது சரி என்றே தோன்றியது.
அங்கு விழாவில் அமர்ந்திருந்த சொர்ணவள்ளி, காசி விஸ்வநாதனிற்கு நெருங்கிய உறவு தான். அவரிடம் தயங்கியபடி தான் பெண் கேட்டார்.
சொர்ணவள்ளி ஆச்சிக்கோ அவ்வளவு பெரிய கோடீஸ்வரர் தன்னிடம் வந்து தணிவாக பேசியது குளு குளுவென இருக்க, உடனே மகனை அழைத்து விஷயத்தைக் கூறினார்.
“உமையாள் இப்போ தான் காலேஜ்ல ரெண்டாவது வருஷம் படிக்குறாள். உங்கள் பையனுக்கும் வயசு இருபத்தி மூணு தானே! இன்னும் வயசு இருக்கே” என்று மறைமுகமாக மறுத்தார் அருணாச்சலம். அவரின் பக்கத்தில் அமர்ந்திருந்த மீனாட்சியும் இதெல்லாம் கேட்டுக் கொண்டு தான் இருந்தார்.
“சம்பாதிச்சு கொடுக்குற பசங்களுக்கு தான் வயசு எல்லாம் கணக்கு… நம்ம பசங்க ஏற்கனவே செல்வ செழிப்போடு தான் இருக்காங்க. என் பையன் எங்க பிசினஸைப் பார்த்துக்குறான். அது போக புது பிசினஸ் பிளான் பண்றான் (அவன் பிசினஸ் பிளான்னு என்ன பண்றான்னு நமக்கு தான் தெரியும்.)”
“இப்போ பேசி முடிவு பண்ணிக்கலாம். உங்கள் பொண்ணு காலேஜ் முடிச்சவுடனே கல்யாணம் வைச்சிடலாம்… அதோ அங்க ஒசரமா நெடுக நிக்குறானே அவன் தான் எங்க பையன் கார்த்திகேயன்” என்று சிவகாமி அவரின் மகனைக் காட்ட, அவனை ஆவலுடன் பார்த்த சொர்ணவள்ளிக்கு பரம திருப்தி.
ஏன் அருணாச்சலத்திற்குமே காரத்திகேயனைப் பார்த்ததும் பிடித்துவிட்டது. அப்படி ஒரு வசீகரமானத் தோற்றத்தைக் கொண்ட ஆறடி பொறுக்கி தான் அவன். சொல்லப் போனால் அழகாகவே இருப்பான். குணம் சரியின்றி அழகிருந்து என்ன பிரோயஜனம்?
‘இவள் ஏன் இப்படி அவசரப்படுறாள்’ என்று காசிவிஸ்வநாதன் மனதில் நினைத்தாலும், அவருக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்தைப் பற்றி தெரியும். அதே போல் மனைவி கூறுவதிலும் அர்த்தம் இருக்கு என்று தான் நினைத்தார். கல்யாணம் செய்து வைத்தால் செல்லமாக வளர்ந்த மகனிற்கு ஒரு பொறுப்பு, முதிர்ச்சி, கடமை உணர்ச்சி வந்து விடும் அதை இப்போதே செய்து விடுவோம் என்று முடிவெடுத்தார்.
“அருணாச்சலம்… உமையாள் படிச்சு முடிச்ச உடனே கண்ணாலம் தானே கட்டித் தர போறோம்… இப்போவே பேசி முடிச்சிடு” என்று தீர்மானமாகக் கூறினார்.
அங்கே தான் அருணாச்சலமும் மீனாட்சியும் கார்த்திகேயனின் வசதி, படிப்பு, குடும்ப பிண்ணனியைப் பார்த்து வழுக்கி விழுந்தார்கள்.
எல்லாப் பெற்றோரின் மனதிலும் தங்களின் பிள்ளையின் இல்வாழ்க்கை சிறப்பாக நிம்மதியாக அமைய வேண்டும் என்று தானே நினைத்து திருமணத்தை முடித்து வைக்கின்றனர்.
நக்ஷத்ராவின் விருப்பத்தை பெற்றவர்கள் கேட்கவும் இல்லை. முடிவு செய்து விட்டனர் அன்றே கார்த்திகேயனுக்கு நக்ஷத்ரஉமையாள் என்று. மூன்றாம் வருடம் கல்லூரி படிப்பு முடிந்த பின்பு கல்யாணம் என்று அன்றே சில சொந்தங்கள் முன் பேசிவிட்டு முடிவு செய்தனர்.
அந்தோ பரிதாபம் இதெல்லாம் தெரியாமல் சிறுவர்களுடன் சில்வண்டாய் விளையாடிக் கொண்டிருந்தாள் நக்ஷத்ரா.
ரூபா மற்றும் கண்ணம்மா நக்ஷத்ராவுடன் இருந்ததால் அவர்களுக்கும் இந்த விஷயம் அப்போது தெரியவில்லை.
கார்த்திகேயனை அருணாச்சலம் குடும்பத்திடம் அறிமுகப்படுத்தி வைத்தனர் அவனின் பெற்றோர்கள். அப்படி ஒரு தன்னடக்கமான அமைதியான பையன் போல் அனைவரிடமும் பாவித்துக் கொண்டான். அவ்வளவு தான் அருணாச்சலத்தின் குடும்பமே வானில் மிதந்து விட்டனர்.
‘சீமையிலே இல்லாத மாப்பிள்ளை போல’ என்ற கூற்றிற்கு ஏற்றாற் போல், அவ்வளவு சந்தோஷம் கலந்த கர்வம் அவர்களின் மனதில்…
பதறிய காரியம் சிதறும் தானே! சிதறியேவிட்டது தான்…நக்ஷத்ராவின் வாழ்க்கையை சிதைத்தே விட்டது.
அடுத்து ஜாதகம் பரிமாறிக் கொள்ளப்பட கார்த்திகேயனின் வீட்டில் ஜாதகத்தை பெரிதாக கருதவில்லை என்பதை விட கார்த்திகேயன் விடாகண்டனாக “எதுக்கு மா ஜாதகம் எல்லாம் எனக்கு அந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்கு அதான் பேசி முடிவு பண்ணியாச்சு தானே!” என்று கேட்க, அவனின் செல்ல அம்மா கணவனை மூளை சலவை செய்திருந்தார்.
“முடிவு பண்ணின அப்புறம் ஜாதகத்தை எல்லாம் எதுக்கு பார்க்கணும்” என்று ஆரம்பித்தார் சொர்ணவள்ளி.
“எதுக்கோ பார்த்துடுவோம் அம்மா” என்று நினைத்தவருக்கு மனதில் ஒரு பயம், ‘அன்னிக்கு ஒரு வேகத்துல முடிவு பண்ணிட்டோம் ஆனால் ஜாதகம் சரி வரணுமே!’ என்று யோசித்தவர் கையோடு தங்கள் குடும்ப ஜோசியரைப் பார்த்தும் விட்டார். அப்போது தான் நக்ஷத்ராவின் ஜாதகத்தில் ராகு கேது தோஷம் இருப்பதாகவும் அதற்கு காளஹஸ்தி சென்று பரிகாரம் செய்ய வேண்டும் அதற்கு பின் திருமணஞ்சேரி கோவிலுக்குச் சென்று கடவுளின் பெயரில் ஒரு அர்ச்சனை செய்து வேண்ட வேண்டும். மத்தபடி ஜாதகத்தில் பொருத்தம் அமோகம் என்று முடித்து விட்டார். அதற்கு பின் தான் உனக்கு கல்யாணம் என்று நக்ஷத்ராவிடம் கூறினார்கள்.
இதற்கிடையில் கண்ணம்மா மூலமாக ரூபாவிற்கு விஷயம் தெரிந்தது. அவளுக்கு கோபம் வரவில்லை ஆனாலும் ஏன் இந்த அவசரம் என்று தோன்றத் தான் செய்தது. இதில் நக்ஷத்ரா இன்னும் மாப்பிள்ளையையே பார்க்கவில்லை. அதற்குள் வீட்டில் முடிவு செய்ததை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“நான் எல்லாம் இப்படி மாப்பிள்ளையின் முகத்தை கூட பார்க்காமல், பிடிச்சிருக்கான்றது கூட தெரியாமல், பேசி பார்க்காமல் ஒத்துக்க மாட்டேன் உமி” என்று அக்காவிடம் அவளின் அதிருப்தியை வெளிப்படுத்தினாள் ரூபா.
“அப்பா, அம்மா, ஆச்சி என் நல்லதுக்கு தானே டி பண்ணிருப்பாங்க” என்று உமையாள் புன்னகையுடன் கூற,
“போடி… பூம்பூம்மாடு” என்று சிரித்தபடி உமையாளின் மேல் தலையணையை வைத்து அடித்த ரூபாவோ, அதற்கு பின் தலையிடவில்லை.
அதற்கு ஏற்றாற் போல் அடுத்த சில நாட்களில் கார்த்திகேயனின் வீட்டில் வந்து பொண்ணு பார்க்க, ரூபாவிற்குமே அவனின் தோற்றம் வெகு திருப்தி தான். இங்கு பெரியவர்களே தோற்றம் அது இது கண்டு கல்யாணம் வரைக்கும் சென்றுவிட்டார்கள்.
‘டேய் கார்த்தி கண்ணாலயே அவளை பருகிடலாம் போல! இப்போ அவள் கிட்ட பேசி ஆசையை அடக்க முடியாமல் ஏதாவது பண்ணி அவளை அடைஞ்சிடாமல் போயிட போகுது… அதனால் அடக்கியே வாசி’ என்று அமைதியாக மனதில் அசிங்கத்துடன் தனக்கு மனையாளாக வரப் போறவளை ஒரு ஆசை போதைப் பொருளாகவே மட்டும் பார்த்தான் அந்த பொறுக்கி.
நக்ஷத்ராவிற்கு கார்த்திகேயனின் தோற்றம் மற்றும் கம்பீரம் பிடித்திருந்தது தான். அப்படி அவன் கம்பீரமின்றி பார்க்க சுமாராக இருந்திருந்தாலும் கூட இந்த பூம்பூம்மாடு அதான் நம்ம நக்ஷத்ரா இப்போது இருக்கும் அதே பிடித்தம் என்கிற மனநிலையில் தான் இருந்திருப்பாள். காரணம், பெற்றவர்கள் மற்றும் ஆச்சியின் வார்த்தைகள், அவளின் வாழ்க்கைக்கு வேதவாக்கு!!!
சொல்புத்தி மட்டுமே தன் வாழ்க்கைக்கு போதுமென்று, சுயபுத்தி என்கிற ஒன்றை அவள் உபயோகிக்கவே இல்லை.