ரீட்டேல் ஷாப்பிலிருந்து சோர்ந்து போய் வீடு திரும்பியவளை, “ஏன் லேட்டு?” என ஓங்கி ஒலித்த குரல் தான் அறை வாசலிலே வரவேற்றது.
கைப்பையைக் கழற்றி ஓரமாகத் தூக்கிப் போட்டு விட்டு கட்டிலில் மல்லாக்க சாய்ந்தவளுக்கு களைப்பில் உயிர் போனது.
இரவில் அவன் பாடாய்படுத்த, காலையிலிருந்து மாலை வரை கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தன் பங்கிற்கு படுத்தி எடுக்கின்றனர். போதும் போதுமென்றாகிப் போகும், வசுமதிக்கு!
இருப்பினும் கணவன் என மார்தட்டிக் கொள்பவனின் செலவில் இளைப்பாற விடாமல் தன்மானம் அவளைத் தடுத்து விட, திருமணத்துக்குப் பிறகும் கூட இன்னுமே வேலைக்கு சென்று வருகிறாள்.
“உன்கிட்ட தான் கேட்கறேன்..” என சட்டை பட்டன்களைக் கழற்றியபடி அவளருகே வந்து அமர்ந்தவன், “வாயில கொழுக்கட்டை வைச்சிருக்கியா என்ன?” என்றான், சீற்றம் குறையாமல்.
பெரிதாக மூச்சிழுத்து மெல்ல மெல்ல வெளியேற்றியபடி, “எதுக்கு அவன் உன்னைப் பார்க்க வந்திருந்தான்?” என நேரடியாகவே விடயத்தில் குதிக்க,
“என் தனிப்பட்ட எதுலயும் தலை போட மாட்டேனு கலியாணத்துக்கு முன்னாடி நீ வாக்கு கொடுத்ததா நியாபகம்!” என முகத்திலடித்தாற் போல் வெட்டிக் கொண்டாள்.
அரிஜித் முகத்தில் அரிக்கே உரித்தான சீற்றம்; கோபம்; அரிதிலும் அரிதான பொறாமை..
******
அன்று இரவுணவை முடித்துக் கொண்டு வசுமதி அறைக்கு வரும் போது, இருளை வெறித்தபடி ஜன்னல் அருகே கை கட்டி தேகம் இறுக நின்றிருந்தான், அரிஜித்.
பசிக்கவில்லை என எரிந்து விழுந்ததால், ‘உனக்கு வேணான்னா போ!’ என அலட்சியமாக வெளிக்கிட்டுச் சென்று தொண்டைக்குழி வரை நிறைத்துக் கொண்டு வந்தவள், “தூங்கல?” என்றாள், பெரிதாக ஏப்பம் விட்டபடி.
நிலவொளி முகத்தில் படுமாறு அவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்தவனின் தலை மறுப்பாக அசைந்தது.
‘வித்தியாசமா நடந்துக்குறான், லூசு!’ என சலித்துக் கொண்டவளாய் குளியலறை சென்று இரவுடைக்குத் தாவி இடை வரையான கூந்தலை கொண்டையிட்டபடி வந்தவளை திடீரென இடைமறித்து நிற்க,
“தூக்கம் வருது, வழி விடு!” என பெரிதாக கொட்டாவி விட்டாள், வசுமதி.
“ஸ்ரீ.. ப்ச், வசுமதி. குறுக்கு கேள்வி கேட்காம என் கொஸ்டினுக்கு மட்டும் பதில் சொல்லு!” என்றவனுடன் மல்லுக்கு நிற்கத் தெம்பின்றி பெருமூச்சு விட்டபடி வந்து கட்டிலில் அமர்ந்தவள்,
“என்ன!” என்றாள், ஒற்றை வார்த்தையில்.
சில நொடி அமைதி!
அவள் தலையணையில் கை ஊன்றியபடி மெல்ல உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த நேரம்,
“அந்த ரூமர்ஸ் உண்மையா? ஆக்சுவலி உன் ஜாதகத்தைத் தோண்டி எடுக்க எனக்கு ரொம்ப நேரமாகாது! ஆனா உண்மைய உன் வாயால கேட்டு தெரிஞ்சிக்க விரும்புறேன்..” என கை முஷ்டி இறுக, கோபத்தின் உச்சம் கண்ட தொனியில் கூறினான்.
‘நீ சொல்லித் தான் ஆகணும்..’ எனும் கட்டளை அந்தக் குரலில் அப்பட்டமாய் எதிரொலித்தது.
“ரூமர்ஸ்’னா?” – வசுமதி விழித்தாள்.
“வத..ந்.தி!!!”
அவளின் புருவங்கள் ஜென்ம விரோதிகள் போல் சட்டென்று நெறிந்து கொண்டன; முகத்தில் யோசனை சுருக்கங்கள் விழுந்தன; தலையணையில் தாளம் தட்டிக் கொண்டிருந்த கை விரல்கள் சடுதியில் வேலை நிறுத்தம் செய்து கொண்டன.
எல்லாம் ஒரு நிமிடம்! ஒரேயொரு நிமிடம் தான்!
கண்களை சுருக்கி, “ஏன் உனக்கு தெரியாது? என்னைப் பத்தி எல்லாம் தெரியும்னு சொன்னியே!” என கேலியுடன் எதிர் வினா எழுப்ப,
“கேட்ட கேள்விக்கு பதில் வேணும்..” என்றான், அனல் தெறித்த குரலில்.
“அது என் தனிப்..”
“ஏய்!” என கர்ச்சித்து ஈரடியில் நெருங்கி அவளின் இரு பக்க தோளில் கரம் பதித்து அழுத்தியவன்,
“எதுக்கெடுத்தாலும் தனிப்பட்ட விஷயம், தனிப்பட்ட விஷயம்னு வாய் நிரம்ப சொல்லுறியே! நீ எனக்கு பொண்டாட்டி. உன்னைப் பத்தி நான் அறிஞ்சிக்க வேணாமா?” என உச்சஸ்தாயியில் கொடூரமாக உறுமினான்.
“தள்ளிப் போ!” என அவன் நெஞ்சில் கை வைத்து தன்னிலிருந்து வேகமாகத் தள்ளி நிறுத்தியவள்,
“அது வதந்தி இல்ல, உண்மையான தகவல்!” என்றாள் நிறுத்தி, நிதானமாக.
“வாட் டூ யூ மீன்?” – அரிஜித்தின் கோபம் காற்றோடு போய் குரலில் பதற்றமும், பரிதவிப்பும் சரிசமமாக ஒட்டிக் கொண்டது.
“இந்த மீன், கொக்கு பத்திலாம் எனக்கு தெரியாது! நீ எதை என் வாயால கேட்க ஆசப்படறே, மிஸ்டர் அரிஜித் கேஷவர்தனன்?
ஹான், நான்தான் என் அம்மா புருஷனைக் கொலை செஞ்சேன். என் கையால! போதுமா? இப்போ திருப்தியா இருக்கா என்ன.. தூக்கம் வருது. இப்போ தூங்கட்டுமா?” என்றவள் நிலைக்குத்திய பார்வையோடு தன்னை உறுத்து விழித்தவனைக் கண்டு கொள்ளாமல் முகம் குப்புற கவிழ்ந்து குறட்டை இழுக்க ஆரம்பித்திருந்தாள்.