“தூக்கம் வருது அப்பத்தா. நான் இன்னைக்கு காலேஜ் போகல. தூங்க விடு என்னை” உறக்கக் கலக்கத்துடன் சொன்னவளின் பக்கத்தில் அமர்ந்து,
“இந்தாடி, என்னா சொல்ற? காலேஜ் போகலையா? உங்கப்பன், ஆத்தா ஊர்ல இல்லைனா, என் தலையில மொளகா அரைக்கப் பார்ப்பியே. நீ மொத எழுந்திருத்தா சொல்றேன்”
அவர் பேத்தியை அதட்ட,
“ப்ச், அப்பத்தா மேலுக்கு முடியல” என்று புலம்பினாள் பேத்தி. பட்டென போர்வையை உருவி, பேத்தியின் கழுத்து, நெற்றி என பதட்டத்துடன் கை வைத்துப் பார்த்தவர், அவள் உடல் சில்லென்று இருக்கவும் முறைத்தார்.
“இன்னைக்கு ஒரு நாள் தானே காலேஜ். போய்ட்டு வந்திடுத்தா. அப்புறம் நாலு நாளைக்கு நல்லா தூங்கி எழுந்திருப்ப. என்ன?” அதட்டல் செல்லுபடியாகது என்பது புரிந்து கெஞ்சிக் கொண்டிருந்தார்.
“இன்னையில இருந்தே லீவ் போடுவோம் அப்பத்தா. நான் உனக்கு வீடு க்ளீன் பண்ண ஹெல்ப் பண்றேன். என்ன?”
“யாரு? நீயி? செஞ்சிட்டு தானே மறுவேலை பார்ப்ப. வாயிலேயே வானத்தை சுருட்டி தந்திட மாட்ட?” என்று நக்கலாக அவர் கூற, முறைத்தாள் பேத்தி.
“பாட்டி, பாட்டி..” என்று கத்திக் கொண்டே வீட்டினுள் நுழைந்து, அந்த அறைக்குள்ளும் வந்த பேத்தியின் கல்லூரி தோழியான, அதே தெருவில் வசிக்கும் ஷபானாவை பார்த்ததும், “வாம்மா. நீ காலேஜ் கிளம்பிட்ட போல? இங்க பாரு எங்க வீட்டு சோம்பேறி இன்னும் தூங்கறதை” என்று புகார் படித்தார்.
“நீ உட்காரு. நான் போய் உங்களுக்கு காஃபி போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்று அவர் எழுந்து செல்ல, மறுக்க வாயை திறந்தவள், படுக்கையில் இருந்த தோழியின் முகத்தைப் பார்த்ததும் பட்டென்று வாயை மூடிக் கொண்டாள்.
அவள் குரலில் பயத்தை மீறிய அலுப்பும் எரிச்சலும் கொட்டிக் கிடந்தது.
“அவனை உங்கப்பா மிரட்டியிருக்காரு இல்ல. ஒன்னும் பண்ண மாட்டான். எழுந்து வாப்பா. நீ பயப்படுறன்னு தெரிஞ்சா, இன்னும் தொல்லை பண்ணுவான். அவனை எப்பவும் போல கண்டுக்காம, மதிக்காம நாம வந்துட்டே இருப்போம். என்ன சொல்ற?” ஷபானாவின் பேச்சில் அவள் முகம் தெளிந்தாலும், அப்படியே அசையாமல் படுக்கையில் கிடந்தாள்.
“பிளீஸ் எழுந்திருப்பா. நீ வராம நான் போக மாட்டேன். நீயில்லன்னா செம்ம போரா இருக்கும்” தோழி கெஞ்சவும் படுக்கையில் இருந்து எழுந்தாள்.
அவள் குளிக்க செல்லும் முன் காளியம்மாள் இருவருக்கும் காஃபி கொண்டு வர, குடித்து விட்டு சென்றாள்.
அதன் பின் குறித்த நேரத்தில் கல்லூரிக்கு கிளம்பிய பேத்தியை புன்னகையுடன் பார்த்து நின்றார் பெரியவர்.
ஷபானா தன் வீடு சென்று கிளம்பி வந்து தோழியுடன் இணைந்துக் கொண்டாள்.
“பார்த்து போங்க பசங்களா. நல்லா பொங்க வச்சுட்டு வாங்க” என்று அவர் சொல்ல, பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் தம்பியின் தோளில் கைப் போட்டு கொண்டு நடந்தவள், திரும்பிப் பார்த்து அப்பத்தாவிற்கு கையசைத்து விட்டு சென்றாள்.
தம்பியை பள்ளிப்பேருந்து நிறுத்தத்தில் விட்டுவிட்டு பத்து நிமிட நடை தூரத்தில் இருக்கும் கல்லூரிக்கு செல்ல தோழியின் இரு சக்கர வாகனத்தில் ஏறினாள்.
அடர் ஊதா நிற லினன் சில்க் சேலையில், அதற்கு பொருத்தமான அணிகலன்களுடன், நீள கூந்தலில் சூடிய மல்லிகை தோளில் புரள சென்று இறங்கினாள் அவள்.
ஷபானா அதே ஊதா வண்ணப் பட்டில் இருந்தாள். இருவரும் வண்டியை நிறுத்தி விட்டு ஒன்றாக நடந்து செல்ல மாணவர்களின் தலைகள் அடிக்கடி அவர்கள் பக்கம் திரும்பியது. அன்றைக்கு கல்லூரி வளாகமே பல வண்ணங்களில் இருக்க, மொத்த மாணவ, மாணவியர் கூட்டமும் கண்ணைப் பறிக்கும் அழகுடன் வலம் வந்தார்கள்.
இருவரும் நேராக அவர்களது வகுப்பறைக்கு சென்றார்கள். சிறிது நேரத்தில் பொங்கல் விழா தொடங்கியது. பின் காலை பொழுதில், சுட்டெரிக்கும் சூரியனின் முன் பொங்கல் வைத்தார்கள்.
மாணவி ஒருத்தி குலவையிட, “பொங்கலோ பொங்கல். தை பொங்கலும் வந்தது. பாலும் பொங்குது, பாட்டு சொல்லடியோ” என்று அவளைத் தொடர்ந்து பாடத் தொடங்கினார்கள்.
ஆட்டம், பாட்டம் என இளமை பட்டாளத்துடன் கல்லூரி பொங்கல் களைக் கட்டியது.
ஷபானா, கீர்த்தி, எலிசபெத் என மாணவிகள் முன்னின்று தயாரான சக்கரைப் பொங்கலை அனைவருக்கும் ஆசிரியர்களின் மேற்பார்வையில் விநியோகித்தனர்.
அங்கிருந்த அனைவரின் முகத்திலும் இருந்த புன்னகையை தித்திப்பாக்கியது சக்கரைப் பொங்கல்.
அன்று கொண்டாட்டங்கள் முடிந்ததும் விடுமுறை அளித்து மாணவர்களை வீட்டிற்கு செல்ல அனுமதித்தது கல்லூரி நிர்வாகம்.
பெண்கள் இருவரும் தோழிகளுக்கு முன் கூட்டியே பொங்கல் வாழ்த்துகளை பரிமாறி, வீடு கிளம்பினார்கள்.
அவர்களின் இரு சக்கர வாகனம் கல்லூரி வளாகத்தை தாண்டி வெளியில் வந்து ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது.
அவர்களின் வாகனத்தை மறித்து கொண்டு வந்து குறுக்காக நின்றது பல்சர் ஆர்எஸ் 200 மாடல் வண்டி. அதன் மேல் அசட்டு பார்வையுடன் அமர்ந்திருந்தான் அவன்.
“அப்பா வேற ஊர்ல இல்ல ஷபா. நாம இன்னைக்கு காலேஜ் வந்திருக்கவே கூடாது” முகத்தில் இல்லாத நடுக்கமும், பயமும் குரலில் இருந்தது.
“எருமை மாட்டு வண்டியை ஓட்டிட்டு வந்திருக்கு பாரு, எருமை மாடு” ஷபானா பல்லைக் கடித்துக்கொண்டு சத்தமாக முணுமுணுக்க, அவளின் தோளில் அழுத்தமாக கை வைத்து, “வண்டியை எடு ஷபா. வீட்டுக்கு போய்டலாம்” என்று படபடத்தாள்.
“ஹாய்..” என்றவனின் பார்வை பின்னால் அமர்ந்திருந்தவளை அனுமதியின்றி ரசித்தது. அவள் கண்களில் அவனது ரசனையை வெறுக்கும் அப்பட்டமான எரிச்சல் பாவனை மிகுந்திருந்ததை அவன் சட்டை செய்யவேயில்லை.
ஷபானா பதட்டத்துடன் இரு சக்கர வாகனத்தை மீண்டும் இயக்க, சட்டென வண்டியில் இருந்து இறங்கி அவர்களை நோக்கி வந்தான் அவன்.
“ஷபா, பிளீஸ். சீக்கிரம் டி. ஏதாவது பிரச்சனை பண்ண போறான். வண்டியை எடு, போகலாம்”
“இவன் பிரச்சனை பண்ணா, சத்தம் போட்டு, கத்திடுவோம். எருமை பயந்து ஓடிடுவான்” என்றவள், வேகமாக வண்டியை இயக்கி நகர்த்தியிருந்தாள்.
அதை எதிர்பாராதவன், “ஹேய், நில்லு” என்று கோபமாக கத்தினான், மறுநொடியே கடந்த இரண்டு வருடங்களாக தொடர்வதை போல அவர்களை பின் தொடரத் தொடங்கியிருந்தான். குறிப்பாக பின் இருக்கையில் ஊதா நிற சேலையில் இருந்தவளை பின் தொடர்ந்தான் அவன்.
அவர்களின் வண்டிக்கு இணையாக தன் வண்டியை செலுத்திக் கொண்டு வந்தவனை பெண்கள் வெறுப்புடன் பார்த்து முணுமுணுக்க, “இன்னைக்கு அட்டகாசமா இருக்க அழகி.” என்று வழிந்தான் அவன்.
“ஆமா, கெட்டு போக என் பேரு ஊறுகா பாரு. வாயை மூடிட்டு வாப்பா.” பதிலுக்கு ஷபானா கத்த, கண்ணை மூடி தோழியின் தோள் சாய்ந்து கொண்டவளின் உடலில் மெலிதான நடுக்கம் ஓடியது.
அவளை கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக பின் தொடர்ந்து வருகிறான் பல்சர் ஆசாமி. முதலில் முறைத்தாள், பின் மிரட்டினாள். ஆனாலும், அசராது அவளைப் பின் தொடர்பவனை பார்த்து இப்போது மிரண்டு நிற்பது என்னவோ அவள் தான்.
முதலில் காதல் என்றான். அவள் மறுக்க இப்போதெல்லாம் கல்யாணம் பற்றி பேசுகிறான்.
அவளுக்கு பெரிதான கனவுகள் எதுவுமில்லை. ஆனால், கனவிலும் அவனை கல்யாணம் செய்துக் கொள்ளும் விருப்பம் நிச்சமாய் அவளுக்கில்லை.
கல்லூரி மாணவியான அவளின் தெளிவு அவனை அதிகமாக குழப்பியது. ஆக, அவளை விடாமல் பின் தொடர்ந்து, பேசி, மிரட்டி, பயமுறுத்தி குழப்பிக் கொண்டிருக்கிறான் அவன்.
இரண்டு நாட்களுக்கு முன்பு அவளின் பெற்றோர் ஒரு வேலையாக சொந்த ஊர் சென்றிருக்க, அப்பா ஊரில் இல்லாதது வேறு அவளை மேலும் பயங்கொள்ள செய்தது.
அப்பாவை தவிர வீட்டில் ஆண் என்றால் தம்பி மட்டுமே. பனிரெண்டு படிக்கும் அவன் என்ன செய்து விடப் போகிறான்? என்ற எண்ணம் தந்த அலுப்புடன் அவள் கண்களை திறக்க வீடு வந்திருந்தனர்.
“எங்க போய்டுவன்னு நானும் பார்க்கறேன்.”
“ரொம்பத்தான் ஆட்டம் காட்டுற. இன்னும் எத்தனை நாளைக்கு என்னை மதிக்காம இப்படியே சுத்துறன்னு நானும் பார்க்கறேன்டி” அவர்களின் தெரு முனையில் வைத்து கத்தி விட்டு போனவனின் வார்த்தைகள் அவள் நெஞ்சில் கிலியை பரப்பிக் கொண்டிருந்தது.
“வீடு வந்தாச்சு. ரிலாக்ஸ்.” என்றாள் ஷபானா.
“வா, வீட்டுக்குள்ள போவோம். குறைக்கிற நாய் கடிக்காது” ஷபானா தோழியின் தோளில் கைப் போட்டு சொல்ல, “இரண்டு வருஷமா குலைக்குது ஷபா. எப்போ கடிக்குமோன்னு பயமா இருக்கு. அம்மா சொன்ன மாதிரி, நான் ஊருக்கு போய் மாமா வீட்ல இருந்து படிச்சிருக்கலாம். இல்ல?” கலக்கத்துடன் சொன்னவளின் கண் பார்த்து,
“ஊருக்கு போனா மட்டும் என்ன மாறிடப் போகுது? இவனை போல அங்க ஒருத்தன் இருந்தா என்ன பண்ணுவ?” ஷபானா அதை வேண்டுமென்று கேட்கவில்லை. எப்போதும் சொல்வது தான். ஆனால், சட்டென தோழியின் கண்கள் கலங்கி விட, “ஹேய் சாரி, சாரிப்பா” என்று அவளின் கைப் பிடித்தாள்.
புகழேந்தி தன் கையில் இருந்த புகைப்படத்தை சுவாரசியம் சிறிதுமின்றி, கட்டாயமாக மறுப்பு தெரிவிக்கும் நோக்கத்துடன் கண்ணை சுருக்கி, “ம்ம்ம்” என்று அலுத்துக் கொண்டே பார்த்தான்.
மறுகணம் அவன் கண்கள் இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.
அழகி என்று ஒற்றை பார்வையில் அடித்து சொல்லும் அளவிற்கு அசாத்திய அழகு. இத்தனைக்கும் மிக எளிமையான சேலையிலும், சொற்ப நகை அணிந்து, அலங்காரத்தின் சுவடின்றி தானிருந்தாள்.
“அது அவங்கம்மா பர்சுல வச்சிருந்த ஃபோட்டோ தம்பி. அதான் சாதாரணமா இருக்கு. நேர்ல பொண்ணு நல்ல அழகாம். ரொம்ப லட்சணமா இருக்குமாம். உங்க சித்தி சொன்னா” அவனுக்கு கூடுதல் தகவலை சொன்ன அம்மாவை கண்களை மட்டும் உயர்த்திப் பார்த்து புன்னகைத்தான் புகழேந்தி.
“நீ சரின்னு சொன்னா பொண்ணு படிப்பை முடிச்சதும் கல்யாணம் வச்சுக்கலாம். பொண்ணு படிப்பை முடிக்காம பேரன் கட்ட மாட்டான்னு நான் கண்டிஷனா சொல்லிட்டேன் ராசா” அப்பத்தா சொல்ல, புன்னகைத்தான்.
“பொண்ணு பேர் என்ன?” அவன் கேள்வியில் அகமகிழ்ந்து போனார்கள் அம்மாவும், அப்பத்தாவும்.
“அபிநயா” என்றார் ராஜலக்ஷ்மி.
“அபிநயா.. அபி.. உங்க அப்பத்தா பார்த்தா அவ்ளோ தான். வா, அபி. வீட்டுக்குள்ள போவோம்” ஷபானா தோழியை உலுக்கி அழைக்க, மெல்ல நிமிர்ந்தாள் அவள்.
“ஏத்தா அபி. அபிநயா. கேட் திறக்கிற சத்தம் கேட்டுச்சு, எங்க ஆளை காணோம்னு பார்த்தேன். என்ன சீக்கிரம் வந்துட்டீங்க?” என்று கேட்டபடி காளியம்மாள் வெளியில் வர, அவருக்கு பதில் சொன்னபடி இருவரும் வீட்டினுள் சென்றார்கள்.