“அபி..” இரவின் குளிர்ச்சி இன்னும் அந்தக் குரலில் இருக்க, மெல்ல புரண்டு அரைக் கண்ணில் கணவனைப் பார்த்தாள் அபிநயா. காலை கதிரவனின் கதிர்கள் மூடியிருந்த திரைச்சீலைகளை ஊடுருவி அறைக்குள் நுழைய முயன்றுக் கொண்டிருந்தது. சூரிய உதயம் கணவனின் முகத்தில் நிகழ, வெள்ளை வேட்டி, கையில்லா பனியன் என்று நின்றவன் அதீத கவர்ச்சியுடன் தெரிய, அவனை ரசித்துப் பார்த்திருந்தாள்.
“அபி, எழுந்திரு” மெல்ல அதட்டினான்.
“ம்ம்” என்றவளின் கரம் கணவனின் தலையணையை இழுத்தது. மெல்ல வாசம் பிடித்து, அதையும் அணைத்துக் கொண்டு கண்களை முழுதாக மூடினாள் அபிநயா.
“அபி, கெட் அப்”
“அடுத்து கெட் அவுட்டா புகழ் சார்?” அவள் முணுமுணுக்க, முறைத்தபடி அவள் அருகில் வந்து நின்றான்.
“அதெப்படி காலையில கரெக்ட்டா ப்ரோபஸர் மோடுக்கு வந்துடுறீங்க? நைட் மட்டும் கணவன் மூடுல இருக்கறது” உறக்கம் எக்கச்சக்கமாய் கொட்டிக் கிடந்த குரலில் அவள் புலம்ப, அவன் கண்களும், உதடுகளும் ரசனையாய் விரிய, புகழேந்தி சிரிப்பை அடக்கியபடி, “உனக்கு கூடத்தான் நைட்டானா பேச்சு மறந்து போய்டுது. இப்போ பாரு, எப்படி வாயடிச்சுட்டு இருக்க?” என்று கேலியாக கேட்டான்.
கூச்சமும், வெட்கமும் போட்டியிட, “எனக்குத் தூக்கம் வருது, போங்க” என்று தலையணையை அவன் மேல் தூக்கி எறிந்தாள்.
“ரைட்டு, தூங்கு” என்றவன், கதவைத் திறந்து கொண்டு வெளியேறினான்.
அபிநயாவிற்கு கணவனின் கதகதப்பு இன்னும் உடலில் இருப்பது போன்ற பிரம்மை. அறையின் குளிர்ச்சி அதை இன்னமும் அதிகரிக்கச் செய்ய, அவள் கண்கள் தன்னிச்சையாக சொருகியது. சற்று நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்தவளை அவளின் அலைபேசி அலாரம் அலறி எழச் செய்தது.
அறையின் மூலையில் போடப்பட்டிருந்த மேஜையின் முன் அமர்ந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்த புகழேந்தி, “குட் மார்னிங் அபி” என்றான் மூன்றாவது முறையாக.
“ரூம் இருட்டா தானே இருக்கு? குட் நைட் சொல்லலாம் இல்ல புகழ் சார். நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிப்பேன்” அவனைப் பார்த்து புலம்பிக் கொண்டே அவள் குளியல் அறை நோக்கி நடக்க, “குட் நைட் தானே அபி? சொல்லலாமே. ஆனா, அப்புறம் நீ தூங்குறதுக்கு வாய்ப்பில்லையே” புத்தகத்தில் இருந்து கண்களை மட்டும் உயர்த்தி, அவளை மேலிருந்து கீழாக பார்வையால் வருடியபடி அவன் சொல்ல, “ஆ.. இல்லயில்ல, குட் மார்னிங் தான். நான் குளிக்கப் போறேன்” என்று படபடத்து, பட்டென்று குளியல் அறைக் கதவை மூடினாள் அபிநயா. அவள் கதவை மூடிய பின்னும் கணவனின் சிரிப்பு சத்தம் அவளைத் தொடர்ந்தது.
அவள் குளித்து வெளியில் வர, அவளுக்கான காஃபியுடன் அறைக்குள் வந்தான் புகழேந்தி.
“பெர்பெக்ட் டைமிங். நன்றி புகழ் சார்” கிண்டலாக சொல்லியபடி காஃபியை வாங்கிக் கொண்டாள்.
“அரட்டை” என்று செல்லமாக திட்டினான்.
காஃபியை குடித்து முடித்து அறையை ஒதுங்க வைத்து விட்டு, படுக்கையறையை விட்டு வெளியில் சென்றாள் அபிநயா. புகழேந்தி மீண்டும் புத்தகத்தை பிரித்து வைத்து அன்றைய வகுப்புகளுக்கு தேவையான குறிப்புகள் எடுக்கத் தொடங்கினான்.
வடிவுக்கரசி, ராஜலக்ஷ்மி இருவரிடமும் பேசி, காலை, மதிய சமையலில் அத்தைக்கு உதவி விட்டு மீண்டும் அறைக்குள் வந்தாள் அபிநயா.
புகழேந்தி கல்லூரிக்கு தயாராகி கொண்டிருந்தான். அவனைப் பார்த்தபடியே சென்று படுக்கையில் பொத்தென்று விழுந்து, ஒரு பெருமூச்சுடன் கண்களை மூடினாள் அவள்.
“ப்ச், அபி. குளிச்சுட்டு திரும்பவும் போய் படுக்காதன்னு எத்தனை முறை சொல்றது?” அலுப்பும், சலிப்புமாக கேட்டவனுக்கு, “கிட்சென்ல இருந்து வர்றேன். ஒரு அஞ்சு நிமிஷம் பிளீஸ் புகழ் சார்” என்று கண்களை மூடியபடியே பதில் சொன்னாள்.
“அப்படியே வெட்டி முறிச்ச மாதிரி அலுத்துக்காத அபி. அம்மா கூட நின்னு அரட்டையடிச்சுட்டு வந்ததுக்கு இவ்வளவு சீன் ஆகாது”
“ஹலோ ப்ரோபஸர் சார். பார்த்து பேசுங்க. உங்களை வேலை பார்க்க வச்சாதான் உங்களுக்கு அதோட வலி புரியும்” என்றாள் கோபமாக.
“அபி பாப்பா, காலையில் உங்களுக்கு காஃபி போட்டுக் கொடுத்தது நான்தான். ஞாபகம் இருக்கா?” அவன் போலி கோபத்துடன் கேட்க, “அது உங்க கடமை புருஷர் சார்” என்று சிரித்தவள், படுக்கையில் இருந்து எழுந்து அவனிடம் சென்றாள்.
வெற்று மார்புடன் நின்றவன் பனியனை எடுத்து அணிய, நொடியில் அதனுள் நுழைந்து, அவன் மார்பில் உடையானாள் அவள்.
“ஹேய், என்ன பண்ற அபி. பனியன் கிழிய போகுது” அவன் அதட்ட, “ரொம்ப முக்கியம்” என்று முனகினாள் அவள்.
“வேறென்ன முக்கியமாம் அபிக்கு? காலையிலேயே கச்சேரியை ஆரம்பிக்கச் சொல்றியா?” ஒற்றை விரலால் அவள் கன்னத்தில் கோலமிட்டு கிசுகிசுப்பாக அவன் கேட்க, கூச்சத்தில் கிளுக்கி சிரித்து குளிர்ச்சியாய் இருந்த அவன் மார்பில் கன்னத்தை பதித்தாள் அபிநயா.
“அபி” மெல்ல அவளின் முகத்தை நிமிர்த்தினான்.
“நான் தூங்கப் போறேன்” அவள் அடமாக சொல்ல, “ஸ்கூல் போற பாப்பா மாதிரி பேசாத அபி” என்றான் சற்றே கடுமையாக.
“நேரமாச்சு பாரு. நான் காலேஜ் கிளம்பணும். நீயும் இப்பவே கிளம்பு, அப்போ தான் சரியா இருக்கும்” என்றவனைப் பார்த்து கோபத்துடன் பல்லைக் கடித்தவள், சட்டென கீழே குனிந்து நழுவி அவனிடம் இருந்து பிரிந்து வந்தாள்.
“பத்து மணிக்கு தானே காலேஜ்? அதுக்கு எட்டு மணிக்கு கிளம்பி போற ஒரே ஆள் நீங்களா தான் இருப்பீங்க” கடுப்பாக சொன்னாள். அவள் முகம் பார்த்து நமுட்டு சிரிப்புடன், அறையின் திரைச்சீலைகளை விருட்டென்று விலக்கினான் புகழேந்தி. அது இடையில் சிக்கிக் கொள்ள, “நீங்க இழுத்த இழுப்புக்கு வர அதென்ன உங்க பொண்டாட்டியா புகழ் சார்? கொஞ்சம் பொறுமையா ஹேண்டில் பண்ணுங்க” கண்களிலும், வார்த்தையிலும் குறும்பு கொப்பளிக்க சொன்னவளை எட்டி தனக்கு நெருக்கமாக இழுத்தான் புகழேந்தி.
“பொறுமையா பொண்டாட்டியை மட்டும் ஹேண்டில் பண்ணா போதும் அபி” அவள் காதில் கரகரத்த குரலில் கிசுகிசுத்தான்.
“விடுங்க” என்று அவள் விலக, “எனக்கு ஸ்டூடண்ட்ஸ் வர்றதுக்கு முன்னாடி போகணும் அபி. அப்படியே பழகிட்டேன். இப்போ நீ சீக்கிரம் கிளம்பு” என்றான். மெல்ல குனிந்து பார்த்து சுருக்கங்கள் நிறைந்திருந்த அந்த பனியனை கழற்றி விட்டு வேறு மாற்றினான்.
“என்னது, நானும் இப்பவே கிளம்பவா? இவ்வளவு சீக்கிரம் போய் நான் என்ன பண்ண போறேன்?”
“அபி..” என்று அவன் அதட்ட, அவனை நிமிர்ந்து பார்த்தவள், அந்த பார்வையில் சொல்ல வந்ததை முடிக்காமல் முழுங்கினாள்.
“மதுரை உனக்கு என்ன புதுசா அபி?”
“புதுசில்லை தான். ஆனா, நீங்க கூட வந்தா நல்லாருக்கும்னு நினைச்சேன்”
“நான் எதுக்கு அபி? இன்டர்வியூ அட்டெண்ட் பண்ண போறது நீ தானே? எனக்கு லீவ் கிடைக்காது. புரிஞ்சுக்கோ” அவன் சொல்லவும், “கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு நாள் கூட நீங்க லீவ் போடலை” என்றாள் கோபமாக.
அவன் பதில் சொல்லும் முன், “அப்பா இருந்திருந்தா உங்களை இப்படியா கெஞ்சிட்டு இருப்பேன் நான்? அப்பா நான் கேட்காமயே எனக்குத் துணைக்கு வந்திருப்பாங்க. அப்பாவை விடுங்க. உங்க தம்பி கார்த்திக் இருந்திருந்தா போதும். அவர் என்னை கூட்டிட்டு போய் இருப்பார். அவங்களுக்கு இருக்கற அக்கறை கூட உங்களுக்கு இல்ல” அபிநயா புலம்பித் தள்ள, தம்பி பெயரை கேட்டதும் கனிந்தது புகழேந்தியின் கண்கள்.
“நான் பேசாம சித்தார்த்தை காலேஜுக்கு லீவ் போட்டு வர சொல்லவா?” அவள் கேட்க,
“படிக்கிற பையனை தேவையில்லாம காலேஜ் கட் அடிக்க சொல்லப் போறியா அபி? அடி வாங்க போற. நீ ஒழுங்கா, வாய் பேசாம கிளம்பு. உனக்கு நேரமாகுது பார்” என்று கறாராக அவளைக் கிளப்பினான்.
அவன் உடை மாற்றி தயாராகி நிற்க, அவனைப் பார்த்து உதடு சுளித்து விட்டு தானும் உடை மாற்ற நகர்ந்தாள் அபிநயா.
“இருபது நிமிஷத்துல கிளம்பிடுவேன். நீங்க தானே என்னை ட்ராப் பண்ண போறீங்க?”
“நேத்துல இருந்து இதையே எத்தனை முறை கேட்ப? என்னால வர முடியாது அபி. எனக்கு இன்னைக்கு முக்கியமான கிளாஸ் இருக்கு. வண்டியை எடுத்தா பத்து நிமிசத்தில போற இடத்துக்கு ஏன் இவ்வளவு அக்கப்போர் பண்ற நீ?”
“போங்க. எனக்கு டென்ஷனா இருக்கு” அவள் சொல்லவும், அமைதியாக கைக் கட்டி நின்றான்.
அவள் முழுதாக தயாராகும் வரைக்கும், அப்படியே நின்றான். அபிநயா நேர்முகத் தேர்வுக்கு தேவையான அனைத்தையும் மீண்டும் ஒருமுறை சரி பார்த்து எடுத்துக் கொண்டாள். அவளை இழுத்தணைத்து, “ஆல் த பெஸ்ட்” என்றான் அவன்.
“நான் கண்டிப்பா வேலைக்கு போகணுமா புகழ் சார்? வீட்லயே இருக்கேனே பிளீஸ்” அவள் கெஞ்ச, “நோ. நீ கண்டிப்பா வேலைக்குப் போகணும்” என்றான் தீர்க்கமாக.
அவனை கோபத்துடன் ஏறிட்ட அவள் கண்களில் மென்மையாய் முத்தமிட்டு, முகம் முழுவதும் அதைத் தொடர்ந்தான்.
“வேலை கிடைக்குமா, கிடைக்காதான்னு ரொம்ப யோசிச்சு மனசை குழப்பிக்காம தைரியமா போய்ட்டு வா அபி. வேலை கிடைச்சா நல்லது. வேலை கிடைக்கலையா, ரொம்ப நல்லது. நீ அந்த கம்பெனில வொர்க் பண்ணலன்னா, அது அவனோட லாஸ். அவ்ளோ தான். உனக்கு இதுவும் ஒரு அனுபவம்னு எடுத்துக்கணும். ரைட்?”
அவள் முகம் பற்றி அவன் கேட்க, “ம்ம்” என்றாள் அபிநயா புன்னகையுடன்.
இருவரும் காலை உணவிற்காக ஹாலிற்கு வந்தார்கள்.
“இந்தா ஏய் ராஜி, இங்க வந்து மருமகளுக்கு டிஃபன் எடுத்து வை. புள்ள இன்னைக்கு வேலைக்கு போகுது இல்ல?” வடிவுக்கரசி தலையை உள்நோக்கி சாய்த்து, சமையல் அறையில் இருந்த தன் மருமகளுக்கு குரல் கொடுக்க, “அம்மாச்சி, நான் வேலைக்கு போகல. வேலை கேட்டு போறேன்” என்று அவரை திருத்தினாள் அபிநயா.
“எல்லாம் ஒன்னுதென். அவென் உனக்கு வேலை இல்லைனு சொல்லிடுவானா? நாளையில இருந்து அங்கன தானே வேலைக்கு போகப் போறவ? அதேன் இப்பவே சொல்லிட்டேன்” என்றவருக்கு, அவள் என்ன பதில் சொல்லிட முடியும்.
புகழேந்தி அப்பத்தாவை முறைக்க, அவளோ சிரிப்புடன் உணவு உண்ணச் சென்றாள்.
“ஏ ராசா, புகழு. பேத்தியை நீ தானே கம்பனில கொண்டு போய் விடப் போற?” அவர் கேட்க, “இப்பத்தான் உன் பேத்தி முடிச்சா. இப்போ நீ ஆரம்பிக்கிறியா அப்பத்தா?” என்று அவரிடம் எகிறி கொண்டு போனான் புகழேந்தி.
“என்னய்யா பொறுப்பில்லாத பய மாதிரி பேசுற? உம் பொண்டாட்டிக்கு நீ தானே துணைக்கு போகணும்?”
“அவளுக்கு யார் துணையும் தேவையில்ல. அவளே தனியா போய்ட்டு வருவா. இல்ல அபி?” அதற்கு அபிநயா தலையசைக்க, “நல்லா பேசுறான் பாரு. இதுவே கார்த்தி இருந்தா, எம் பேத்தியை அவென் பத்திரமா கூட்டிட்டு போய் வீட்டுக்கு கூட்டியாருவான். ம்ம்..” என்று பெருமூச்சை வெளியேற்றினார். இப்போது பேத்தியின் கவலை மறந்து போய் அவருக்கு பேரனின் கவலை பிடித்துக் கொண்டது.
“மெட்ராஸ்ல எப்படி இருக்கானோ தெரியலயே. இம்புட்டு வருஷமும் என் காலுக்குள்ளயே சுத்திட்டு திரிஞ்சவன்.. அங்கன என்னண்டு ஒத்தையில இருக்கானோ..” அவர் ராகம் இழுத்து புலம்ப, “வேலைக்குத் தானே போய் இருக்கான் அப்பத்தா. அதுக்கு ஏன் இப்படி அழுதுட்டு இருக்க?” என்று சத்தம் போட்டான் புகழேந்தி. அவன் முகம் பார்த்து அமைதியானார் வடிவுக்கரசி.
அப்போது அங்கு மாணிக்கவேலன் வந்து அமர, ராஜலக்ஷ்மி பரிமாற மொத்தக் குடும்பமும் காலை உணவை உண்டு முடித்தனர். அபிநயா அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கணவனோடு வெளியில் கிளம்பினாள்.
இருவரும் அவரவர் இரு சக்கர வாகனத்தில் ஏற, வடிவுக்கரசி முகம் வருத்தத்தைக் காண்பித்தது.
அபிநயாவிற்கு அவர் மனம் புரிந்தது. அதனால் புன்னகை முகமாக, “அம்மாச்சி, அவருக்கு வேலையிருக்கு. இல்லனா என் கூட வந்திருப்பார். நீங்க பாருங்க. நான் மதியம் வேலைக்கான ஆர்டரோட தான் வீட்டுக்கு வருவேன்” என்று சொல்லி அவரை சமாதானப்படுத்தினாள்.
“இன்டர்வியூ நல்லா பண்ணு அபி” என்று புகழேந்தி வாழ்த்த, “ரைட், ரைட்” என்றாள். இருவரும் ஒன்றாக வண்டியை இயக்கி வெளியேறினார்கள். ஐந்தே நிமிடத்தில் அவரவர் வழியில் பிரிந்து சென்றார்கள்.