அபிநயாவின் நெற்றியில் பதிந்த கரத்தின் குளுமை அவளை கண் விழிக்கச் செய்தது.
“உடம்பு முடியலையா அபி? என்ன இந்நேரம் தூங்குற?” படுக்கையில் அவளுக்கு அருகில் அமர்ந்து கேட்டான் புகழேந்தி. இமைகளை மெல்லப் பிரித்து, “அச்சோ டைம் என்ன? ரொம்ப நேரம் தூங்கிட்டேனா?” பதறி உறக்கத்தை விரட்டியபடி கேட்டாள் அபிநயா.
“உடம்புக்கு என்ன பண்ணுதுன்னு கேட்டேன் அபி”
“ஒன்னும் பண்ணலங்க. சும்மா படுத்தேன். அப்படியே தூங்கிட்டேன் போல” மெல்ல படுக்கையில் இருந்து எழுந்தபடி சொன்னாள் அபிநயா.
“இன்னைக்கு வெளில போன அலைச்சலா இருக்கும். நீ முகம் கழுவிட்டு வா. டீ குடிக்கலாம்”
“ம்ம்”
இரண்டு நிமிடத்தில் முகம் கழுவி, தன்னை சீர்படுத்திக் கொண்டாள் அபிநயா.
“நீங்க என்ன இன்னைக்கு லேட்? காலேஜ்ல எதுவும் முக்கியமான வேலை இருந்ததா?” அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், ஏதோ சிந்தனை வயப்பட்டவனாக தலையசைத்தான்.
“என்ன பிரச்சனை புகழ் சார்?” மேஜையில் கணவன் வாங்கி வந்திருந்த மல்லிகை பூவை எடுத்து தலையில் சூடியபடி கேட்டாள்.
“பிரச்சனைன்னு எப்படி சொல்ற?”
“நீங்க அமைதியா இருக்கீங்களே. அதை வச்சுத்தான் சொன்னேன். பிரச்சனை எதுவும் இல்லனா இந்நேரம் என்னை எத்தனை கேள்வி கேட்டுருப்பீங்க?”
“ஹேய், என்ன நீ தினமும் உன்ன நான் கேள்வி கேட்டு கொடுமை பண்றது போல சொல்ற?”
“கொடுமை இல்ல. ஆனா கேள்வி இருக்கு. இப்பக் கூட நீங்க கேட்டது கேள்வி தான்” இடுப்பில் கை வைத்து அவள் சொல்ல, கை நீட்டி அவளை தன்னிடம் இழுத்துக் கொண்டான் புகழேந்தி.
“அதை விடு. இன்டர்வியூ என்னாச்சுன்னு ஒன்னுமே சொல்லல நீ. இன்டர்வியூ முடிஞ்சு வீட்டுக்கு போறேன்னு மட்டும் மெஸேஜ் அனுப்பி இருந்த. என்ன சொன்னாங்கன்னு சொல்லவே இல்லையே”
“இப்பவும் கேள்விதான் கேட்கிறீங்க” அவள் சொல்லவும், சத்தமாக சிரித்தான் புகழேந்தி.
“சரி, பதில் சொல்லு. இன்டர்வியூல என்ன கேட்டாங்க?”
“நளவெண்பா எழுதியவர் யார்னு கேட்டாங்க” அவள் இதழ்களும், விழிகளும் புன்னகையில் பளபளக்க, அவன் கழுத்தில் கரம் கோர்த்து சொன்னாள். அபிநயாவின் புன்னகை அவனையும் தொற்றிக் கொள்ள, “நீயென்ன பதில் சொன்ன?” என்று சிரிப்பை அடக்கியபடி கேட்டவனுக்கு பதிலை கணிக்க முடிந்திருந்தது.
“வேறென்ன, என் புருஷன் தான்னு சொன்னேன். அதாவது புகழேந்தி புலவர்” அவள் சொல்லி முடிக்கும் முன்பே சத்தமாக சிரிக்கத் தொடங்கி இருந்தான் புகழேந்தி.
“அரட்டை”
“யார் நானு? நானெல்லாம் அமைதியோ அமைதி புகழ் சார்” என்று கண் சிமிட்டினாள்.
“நாளைக்கு இன்டர்வியூக்கு நீயே போய்டுவியா? இல்ல, நான் வரவா அபி?” அக்கறையுடன் அவன் கேட்க, “நாளைக்கும் போகணுமா?” என்று அலுத்துக் கொண்டாள் அவள்.
“ஒரு கம்பனி போய் இன்டர்வியூ கொடுத்துட்டு வந்ததும், அவன் வேலை தந்திடுவான்னு அப்படியே உட்கார்ந்துடுற பார்த்தியா. அதைத்தான் சோம்பேறித்தனம்னு சொல்வேன். அவனும் அதையே தான் பண்ணான். ஓகே, கவர்மென்ட் எக்ஸாம்ஸிக்கு ப்ரிப்பேர் பண்ணான் தான். அது ரொம்ப கஷ்டமும் கூட, ஆனாலும் ரெண்டாவதா ஒரு ஆப்ஷன் வச்சிருக்கணும் இல்ல அபி? அவனுக்குச் சொன்னதை தான் உனக்கும் சொல்றேன். நாலு இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணி அதுல பெஸ்ட் எதுவோ, அதை தேர்ந்தெடு”
“ஓகே புகழ் சார். அப்புறம் இன்டர்வியூ ரிசல்ட் மெயில் பண்றேன்னு சொல்லி இருக்காங்க. ஒரு வாரத்துல வந்திடும்னு நம்புறேன்” என்று அபிநயா சொல்ல, “சரி வா. டீ குடிக்கலாம்” என்று அவளுடன் வெளியில் வந்தான்.
அபிநயா மாலை வந்ததும் வீட்டினரிடம் தகவல் தெரிவித்திருந்தாள். ஆகையால் இப்போது வேறு விஷயங்கள் பேசியபடி தேநீர் அருந்தினார்கள்.
“நைட்டுக்கு என்ன சமையல் அத்த? என்ன செய்யணும்னு சொல்லுங்க. நான் செய்யறேன்” அபிநயா கேட்க,
“உனக்கு என்ன வேணும்னு சொல்லுத்தா. அதையே செஞ்சுடலாம்” என்றார் வடிவுக்கரசி. மகன், இரண்டு பேரன்கள் என்று ஆண்களோடு பல வருடங்களை கழித்தவருக்கு பெண் பிள்ளைகள் மீது தனிப் பிரியம் உண்டு. அதிலும் அபிநயா மூத்த பேரனின் மனைவி, கூடுதலாக அவரின் தேர்வு வேறு. கேட்கவும் வேண்டுமா, பேரன் மேல் காட்டிய அதே பிரியத்தை இப்போது பேத்திக்கும் அளித்தார் அவர்.
“ம்ஹூம். இன்னைக்கு நீங்க சொல்லுங்க அம்மாச்சி. உங்களுக்கு என்ன வேணும், நான் சமைச்சு தர்றேன்” இருக்கையில் காலை மடித்து அமர்ந்தபடி, அவள் கேட்க, “இப்படி கேட்டா, என்னா சொல்லுவேன்” என்று சிரித்தார் வடிவுக்கரசி.
“ஏ அப்பத்தா, உன்கிட்ட என்ன ராக்கெட் சையின்ஸா கேட்கிறா உன் பேத்தி? ராத்திரி சமையல் தானே?” உள்ளிருந்து புகழேந்தி சத்தம் போட, “போடா டேய். எங்க பேச்சுக்குள்ள நீயேன் வர்ற? உன் வேலையை பார்டா.” என்று பதில் சூடாக கொடுத்தார். அபிநயா கிளுக்கி சிரித்தபடி, “சொல்லுங்க சொல்லுங்க அம்மாச்சி” என்று ராகம் போட, “பரோட்டா வாங்கி தரியா?” என்று குரலை தழைத்து கேட்டார் வடிவுக்கரசி.
“அத்தே, அதெல்லாம் வேணாம்.” ராஜலக்ஷ்மி வேகமாக மறுக்க,
“என்னை பரோட்டா திங்க கூடாதுனு உன் புருஷன் தான் மிரட்டி வச்சிருக்கான். மதுரைக்காரிய பரோட்டா திங்க கூடாதுனு சொல்றவனை என்ன பண்ணலாம், நீயே சொல்லு” என்று குரலில் ஏற்ற இறக்கத்தை கூட்டி, முகத்தை பாவம் போல வைத்துக் கொண்டு அவர் கேட்ட விதத்தில் அபிநயா சிரித்து விட்டாள்.
“கார்த்தி இருந்த வரைக்கும் இவனுக்கு தெரியாம வாங்கிட்டு வந்து தருவான். ஆனா, உன் புருஷனுக்கு தெரிஞ்சுட்டா போதும். அம்புட்டு தென். எங்களை பேசியே கொன்றுவான்”
அதற்கு ராஜலக்ஷ்மியும் சிரிக்க, அவரை முறைத்தார் வடிவுக்கரசி.
“சரி அம்மாச்சி. நான் போய் உங்களுக்கு பரோட்டா வாங்கிட்டு வர்றேன்” என்று அவள் எழுந்து கொள்ள, “அவன் கூடவா போக போற? இதைக் கேட்டதும் கண்டமேனிக்கி கத்துவானே” என்று போலியாக கவலைப்பட்டார் அவர்.
“அவர் கத்துறது நமக்கு என்ன புதுசா அம்மாச்சி. டெய்லியும் தானே திட்டு வாங்குறேன். அதெல்லாம் கண்டுக்கப்படாது” என்று சிரிப்புடன் சொல்லிக் கொண்டே தங்களின் அறையை நோக்கி நடந்தாள்.
அவள் அறைக்குள் செல்ல, அங்கே புகழேந்தி புத்தகத்தில் மூழ்கி இருந்தான்.
“புகழ் சார்”
“என்ன வேணும்?”
“ஏதாவது வேணும்னா தான் உங்களை கூப்பிடுவேனா?”
“இல்லதான். ஆனா, நீங்க மூனு பேரும் சேர்ந்து ஏதோ பிளான் போட்ட மாதிரி தெரிஞ்சுதே”
“அதான் உங்களுக்கு தெரியுது இல்ல. அப்புறம் என்ன கேள்வி. வாங்க கடைக்கு போகலாம்” அவன் முழங்கையை பற்றியபடி அவள் சொல்ல, நிமிர்ந்து அவளை தீர்க்கமாக பார்த்தான் அவன்.
“அம்மாச்சி ரொம்ப ஆசையா பரோட்டா கேட்டாங்க”
“அதுக்கு?”
“வாங்க, போய் வாங்கிட்டு வருவோம்” கெஞ்சலாக கேட்டவளிடம் மறுக்க முடியாமல், “ஓகே. இன்னைக்கு ஒரு நாளைக்கு தான். இன்னும் ரெண்டு மாசத்துக்கு அவங்களுக்கு வெளிச்சாப்பாடு கிடையாது” என்று கண்டிப்புடன் அவன் சொல்ல, “அதுக்குள்ள வீட்ல செய்ய நானே கத்துப்பேன்” என்று உதடு சுளித்து ஒழுங்கு காட்டினாள் அபிநயா.
அந்த பாவனையை ரசித்தபடி எழுந்து உடைமாற்றி வந்தான் புகழேந்தி. இருவரும் சென்று பரோட்டா, சால்னா, மட்டன் சுக்கா வாங்கி வந்தனர். வெளி உணவு என்பதால் பெரியவர்கள் விரைவாக உண்டு முடிக்க, தங்களுக்கு மட்டும் இடியாப்பம் செய்தாள் அபிநயா.
இரவு உணவு முடித்த பின்னரும் புத்தகங்களை கையில் வைத்துக் கொண்டு தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு அருகில் சென்று அமர்ந்தாள் அவள்.
“எதுக்காக இப்படி மண்டையை உடைச்சுட்டு இருக்கீங்க?” அவள் கேட்க, “ஒன்னுமில்ல அபி” என்றான்.
“அப்படியா?”
“ப்ச், காலேஜ்ல சின்ன இஷ்யூ. அதைப் பத்தி யோசிச்சுட்டு இருந்தேன்”
“சின்ன இஷ்யூ தானே? சரி பண்ணிடுவீங்க” என்று கண்ணை சுருக்கி அவள் சொல்ல, “பண்ணணும் அபி.” என்றவன், “நாளைக்கு நமக்கு ஒரு பையன் பொறந்தா அவனை நல்லவனா வளர்க்கணும். பொண்ணுங்களை மரியாதையா நடத்த சொல்லிக் கொடுக்கணும்” திடீரென்று புகழேந்தி சொல்ல, “ரோல் மாடலா உங்களைப் பார்த்து தானே வளருவாங்க. அப்போ நாம சொல்லிக் கொடுக்காமலே நல்லவங்களா தான் வருவாங்க” என்றாள் அபிநயா.
“அப்படிச் சொல்ல முடியாது அபி. எத்தனையோ நல்ல அப்பாக்கள் வளர்க்கும் பிள்ளைங்க தறுதலையா தான் இருக்குதுங்க. வீட்ல ஒரு முகம், வெளில ஒரு முகம்னு.. ச்சே. பொண்ணை துணிவா எதையும் எதிர்கொள்ற தைரியத்தோட வளர்க்கணும். பையனை அதை விட கவனமா வழி நடத்தணும். உனக்கு வலிக்கிற மாதிரி தான் அவளுக்கும் வலிக்கும்னு சொல்லி..”
“என்னங்க ஆச்சு?”
அபிநயா கவலையாக கேட்க, “ஒன்னுமில்ல அபி. லவ் டார்ச்சர் தான். ஆனா, அந்த பொண்ணு வெளில சொல்ல பயப்படுறா. அதை அவன் இன்னும் அட்வான்டேஜா எடுத்துட்டு தொல்லை பண்றான் போல. எங்ககிட்ட சொல்லவே அந்தப் பொண்ணு பயப்படுது. இதுல மேனேஜ்மென்ட்ல சொன்னா அவ்ளோ தான். அவங்க உடனே ஆக்சன் தான் எடுப்பாங்க”
“அது நல்லது தானேங்க”
“ம்ம். எஸ். ஆனா, அவங்க அந்த பையனை சஸ்பென்ட் பண்ணாலோ, இல்ல வேற ஏதாவது ஆக்சன் எடுத்தாலோ இந்த விஷயம் எப்படியாவது வெளில வந்திடும். அந்த பொண்ணு இன்னுமே பயந்து தானே போவா. இல்லையா?” அவன் கேட்பதில் உள்ள நியாயம் அவளுக்கு புரிந்தது.
அவளும் அந்த நிலையில் இருந்திருக்கிறாளே. பெற்றோரின் நடவடிக்கைக்கு அவளும் பயந்திருக்கிறாள். அவள் பயந்தது போலவே படிப்பை நிறுத்து, கல்யாணம் செய்து கொள் என்று குதித்தார்களே தவிர, தீர்வு காண்பதில் அத்தனை தீவிரம் காட்டவில்லையே அவர்கள்.
இன்றைக்கு அவளுக்கு ஒரு நல்ல வாழ்வும், அதன் வழியாக மன நிம்மதியும் கிடைத்து விட்டது. ஆனால், பாதிக்கப்படும் எல்லா பெண்களுக்கும் அது வாய்க்குமா? என்ற சிந்தனையின் முடிவில், “நீங்க என்ன பண்ண போறீங்க?” என்று கேட்டாள் அபிநயா.
“என்ன பண்ணுவேன்? பேசி புரிய வைக்க டிரை பண்ணணும். கேட்கலைன்னா ஹெச்ஓடி கிட்ட சொல்லிட்டு நான் ஒதுங்கிக்க வேண்டியது தான்.”
“அதை ஏன் கோபமா சொல்றீங்க. அவங்க என்ன பண்ணுவாங்க?”
“முதல்ல விசாரிப்பாங்க, அப்புறம் வீட்டுக்கு சொல்லி..” என்று தோளை குலுக்கினான்.
“இது போல அடிக்கடி நடக்குமா?”
“ஏன் உன் காலேஜ்ல நீ பார்த்தது இல்ல?”
“நிறைய…” நாக்கை கடித்து கண் சிமிட்டி அவள் சொல்ல, “இந்த வயசு அப்படி அபி. ஆப்போசிட் ஜென்டர் மேல அட்ராக்சன் வர்றது ரொம்ப ரொம்ப நார்மல். ஆனா, அது அவங்க எதிர்காலத்தை பாதிக்காம பார்த்துக்கணும். அவங்க காதலுக்கு ஒரு எதிர்காலம் இருக்கற மாதிரி அவங்க பார்த்துக்கணும். அவ்ளோதான். எல்லாத்துக்கும் ஒரு எல்லைக் கோடு இருக்கு. அதைத் தாண்டாத வரைக்கும் தப்பில்ல.”
“கண்ணியம், கட்டுப்பாடு” என்று அவள் முணுமுணுக்க, சிரித்தான் புகழேந்தி.
மறுநாள் மற்றொரு நிறுவனத்தின் நேர்முகத் தேர்விற்கு அபிநயா செல்ல, புகழேந்தி அவளை அங்கு விட்டுவிட்டு கல்லூரி சென்றான்.
அன்று மாலை வரை அவனுக்கு வகுப்புகள் இருந்தது. மதியம் கிடைத்த உணவு இடைவேளையில் லயாவை யாரும் புருவம் உயர்த்தி சந்தேகமாக பார்க்காத வகையில் பேராசிரியர் பார்கவியுடன் சந்தித்துப் பேசினான்.
மாலை கிஷோரை அவனது வகுப்பறையில் காத்திருக்க சொல்லியிருந்தான் புகழேந்தி. அவனும், சாமுவேலும் ஒன்றாக சென்று அமர, இருவரையும் அலட்சியமாக பார்த்து திமிராக நின்றான் கிஷோர்.
அவனுக்கு முன்னே அமர்ந்திருந்த ஆசிரியர்கள் இருவரும் அந்த மாணவனை விட எட்டு, ஒன்பது வயதே பெரியவர்கள். ஆனால், அவர்களின் கல்வி அறிவும், அனுபவமும், மனமுதிர்ச்சியும் தான் அந்த இடத்தில் அவர்களை அமர வைத்திருக்கிறது என்பது அந்த மாணவனுக்கு புரிந்திருந்தாலும் அதை அவன் பெரிதுப்படுத்தி கவனத்தில் கொள்ள போவதில்லை என்பது அவன் நின்ற தோரணையை பார்த்ததும் தெரிந்தது.
புகழேந்திக்கு அதீத கோபம் வரும்தான். ஆனால், அதே அளவு பொறுமைசாலியும் கூட. மிக நிதானமாக, “இப்படி உட்காரு கிஷோர்” என்றவன், நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.
“உன் கிளாஸ்மேட் லயா..”
“அவளுக்கு என்ன? என்னைப் பத்தி கம்பிளைண்ட் பண்ணாளா? நான் என்ன பண்ணேன்னு சொன்னா? நீங்க இப்படி ஸ்டூடண்ட்டை தனியா கூப்பிட்டு மிரட்டுறது தப்பு. நான் ஹெச்ஓடி கிட்ட போவேன்” புகழேந்தி பேச ஆரம்பிக்கும் போதே இடையிட்டு தவறு செய்தவனுக்கு உரிய பயத்துடன் படபடத்தான் கிஷோர்.
“கிஷோர், லயா உன்னைப் பத்தி சொன்னான்னு நான் சொல்லவே இல்லையே. முன்னாடி ஒருமுறை நானே உன்னை வார்ன் பண்ணி இருக்கேன். அன்னைக்கும் இப்படித்தான் எதையோ சொல்லி சமாளிச்ச..” என்றவன், “இல்லல்ல. ப்ரெண்ட்னு சொன்ன. ஆமா, கிஷோர் எனக்கு ஒரு டவுட் கிளியர் பண்ணு. நீ ப்ரெண்ட்டை தான் லவ் பண்ண சொல்லி பிளாக் மெயில் பண்ணுவியா?” என்று கேட்டான்.
அவன் குரலில் இருந்த கடினத்தன்மையும், அவனையே கூர்ந்த கண்களும், அந்தக் கேள்வியும் கிஷோரை பதட்டத்துடன் எச்சில் கூட்டி விழுங்கச் செய்தது.
“சொல்லு கிஷோர்”
“நான் உண்மையா அவளை லவ் பண்றேன் சார்”
“ரைட். ஓகே. ஆனா, அவளுக்கு விருப்பம் இல்லைனு சொல்லிட்டா தானே? அது உனக்கு புரியலையா?”
புகழேந்தி கேட்க, “புகழ் சார். இவன் கதை விட்டுட்டு இருக்கான். நீங்க என்ன மயிலே மயிலேன்னுட்டு இருக்கீங்க?” சாமுவேல் இடை புகுந்து ஆவேசமாக ஆட்சேபித்தான்.
“இருங்க சாம் சார்” என்று நண்பனிடம் சொன்ன புகழேந்தி, “உன் அகராதிப்படி காதல்னா என்ன கிஷோர்?” என்று கேட்க, முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு மௌனமாக அமர்ந்திருந்தான் கிஷோர்.
“இங்க பாரு கிஷோர். நீ படிக்கிற பையன். சின்ன வயசு, இதெல்லாம் தப்பு.. அப்படினு நான் அட்வைஸ் பண்ண விரும்பல. எனக்கு சில கேள்விகள் இருக்கு. நான் கேட்கறேன். நீ பொறுமையா யோசிச்சு, பதிலை உனக்கு நீயே சொல்லிக்கோ, போதும்” என்றான் தீர்க்கமாக.
“லயா, அவளுக்கு பிடிச்ச ஒருத்தனை நேசிச்சுருக்கா. அவங்க வீட்ல அந்த காதலை ஏத்துக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சி, ரொம்ப தெளிவா பேசி அவங்க பிரிஞ்சுருக்காங்க. ஆனா, அதை எப்படியோ தெரிஞ்சுக்கிட்ட நீ அதை சொல்லி அவளை பிளாக் மெயில் பண்றது சரியா?”
“உன் அகராதிப்படி காதல்னா என்ன?”
“இப்படி ஒரு பொண்ணை மிரட்டி கார்னர் பண்ணி காதலிக்க வச்சு அது மூலமா உனக்கு உண்மையான அன்பு கிடைக்கும்னு நீ நம்புறியா?”
“அப்படியே கிடைச்சாலும் அதோட எதிர்காலம் என்ன? எதிர்காலத்தை பத்தி எல்லாம் யோசிக்காம டைம் பாஸ் பண்ண தான் அந்த பொண்ணை டார்கெட் பண்றியா?”
“லயா ஒருத்தனை உண்மையா நேசிச்சதை பகடையா வச்சு ஆடி அவ அன்பை பெற நினைக்கிற, உன் மேல அவளுக்கு அதே உண்மையான அன்பு வரும்னு நீ நினைக்கிறியா?”
“உனக்கான அன்பு இல்லாத இடத்தில உன்னால நிம்மதியா இருக்க முடியுமா? வாழ்நாள் முழுக்க உறுத்தாது?” புகழேந்தி கேள்விகளாக அடுக்க, கிஷோர் குழப்பத்தில் நாலா பக்கமும் அலைந்த கண்களுடன் அமர்ந்திருந்தான்.
“நாம பேசுறது இவனுக்கு போரா இருக்கும் புகழ் சார். வெளில போய் இதைச் சொல்லி நக்கல் பண்ணிட்டு இருப்பான். நல்லது எல்லாம் மண்டையில் ஏறாது..” சாமுவேல் கடுப்புடன் சொன்னான்.
புகழேந்தி எழுந்து சென்று கிஷோரின் தோளில் கைப் போட்டான்.
“இந்த வயசில் ஒரு பொண்ணு மேல.. ஒன்னுன்னு ஏன் சொல்வானேன். உன் ரசனைக்கு ஒத்து வர்ற நிறைய பொண்ணுங்க மேல.. உனக்கு நிறைய உணர்வுகள் வரும். அது ரொம்ப நேச்சுரல். இயற்கையில அது சரியும் கூட. ஆனா, காதல்? அது எல்லோர் மேலயும் வராது இல்லையா? எதிர்காலத்தை பத்தி யோசிக்காத எதுவுமே காதல் கிடையாது கிஷோர். ஒரு பெண் மேல உனக்கு காதல் வரலாம். அது தோல்வியும் அடையலாம். ஆனா, தோல்வியில் தொடங்க கூடாது காதல்.” அவ்வளவு நேரமும் இருந்த அசட்டை மாறி சட்டென நிமிர்ந்து புகழேந்தியை பார்த்தான் கிஷோர்.
“டேக் யுவர் டைம் கிஷோர். வீட்டுக்கு போய் பொறுமையா யோசி. முடிஞ்சா இதைப் பத்தி உங்க வீட்ல பேசிப் பாரேன்”
“சார்..” என்று தயக்கத்துடன் இழுத்தான் கிஷோர்.
“வீடுன்னு சொன்னாலே பயமா இருக்குது இல்ல? அப்போ வீட்டுக்கு சொல்ல முடியாத ஒரு விஷயத்தை செய்றன்னா அது தப்பா சரியான்னு உன்னை நீயே கேள்வி கேட்டுக்கோ” என்றான் புகழேந்தி.
கிஷோர் நிச்சயமாய் இந்த அணுகுமுறையை எதிர்பார்த்து இங்கு வந்திருக்கவில்லை. ஆசிரியர்கள் கண்டிப்பார்கள், வீட்டுக்கு சொல்லி விடுவோம் என்று மிரட்டுவார்கள், ஆலோசனை என்ற பெயரில் கழுத்தை அறுப்பார்கள் என்றே நினைத்திருந்தான் அவன். அதிகபட்சமாக கல்லூரி அலுவலகம் வரை விவகாரம் என்று எதிர்பார்த்திருந்தான். ஆனால், இப்படி நிதானமான அணுகுமுறை அவனை ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைய செய்தது. புகழேந்தி அடித்து விடுவான் என்று கூட நினைத்திருந்தான் அவன்.
“ரைட் கிஷோர். உனக்கு டைமாச்சு இல்ல? வீட்டுக்கு கிளம்பு.” புகழேந்தி சொல்லவும் மிகுந்த தயக்கத்துடன் இருக்கையில் இருந்து எழுந்தான் அவன். இன்னமும் புகழேந்தியின் கை அவன் தோளில் இருக்க, அவன் புறமாக சாய்ந்து நின்றான்.
“சாரி சார்” என்றான் மெதுவாக.
“அதுக்குள்ள திருந்திட்டியா டா?” என்று சாமுவேல் நக்கலாக கேட்க, மென்நகை புரிந்தான் புகழேந்தி.
“அந்த சாரியை நீ லயாகிட்ட தான் சொல்லணும். அந்த சாரிக்கு என்ன அர்த்தம்னு உணர்ந்து சொல்லணும். அப்படி நீ உணரலைன்னா ஆபீஸ் ரூம்ல தான் போய் நிக்கணும். எங்களுக்கு வேற வழியில்ல. நாளைக்கு உன் தொல்லையால லயா ஏதாவது தவறான முடிவெடுத்தா.. ப்ச், ஏற்கனவே உன்னை மாதிரி சில மாணவர்களால எங்க கையில நிறைய இரத்தக்கறையும், மனசுல ஏகப்பட்ட குற்ற உணர்ச்சியும் இருக்கு. உன் பங்குக்கு நீயும் சேர்க்காத” என்று முடிவாக சொன்னான் புகழேந்தி. அதைக் கேட்டு தலை குனிந்து கிஷோர் நிற்க, அவன் தோளில் தட்டினான் புகழேந்தி.
“கிளம்பு” என்று விட்டு அவன் சென்று இருக்கையில் அமர்ந்து கண் மூடிக் கொள்ள, இருவரையும் மாறி மாறிப் பார்த்த கிஷோர் தயக்கத்துடன் வெளியேறினான்.