“என்னடா கல்யாணமானதும் இவ்வளவு சாந்தமாகிட்ட” நக்கலாக சாமுவேல் கேட்க, அவனை கண்ணை திருப்பி முறைத்தான் புகழேந்தி.
“பிளாக் மெயில் பண்ணி.. லவ் பண்ண வச்சு.. என்னடா நினைச்சுட்டு இருக்கானுங்க. இந்த ஜெனரேஷன் பசங்களை பார்த்தா பயமா இருக்குடா சாம். காதல் எல்லாம் மென்மையான உணர்வுன்னு புரியாம.. ச்சே..” அலுத்துக் கொண்டு அங்கிருந்து எழுந்தான்.
“இவன் திருந்துவான்னு நீ நினைக்கிற புகழ்?”
“நாம சொல்ல வேண்டிய கடமைக்கு சொல்லியாச்சு சாம். அதை கேட்டு உருப்படுறதோ, கேட்காம நாசமா போறதோ அவன் முடிவு தான்.” என்ற புகழேந்தி, “நான் லயா கிட்ட பேசிட்டேன். இனிமே இவன் தொல்லை கொடுத்தா, அந்த பொண்ணு பயந்தாலும் பார்கவி மேம் பார்த்துப்பாங்க. மேனேஜ்மென்ட் வரை போனா பசங்க பேர் கெடும். வீட்டுக்கு விஷயம் போகும்னு யோசிக்கிறோம். ஆனா, அவங்களுக்கு அந்த கவலை முதல்ல இருக்கணும். இல்ல?” என்றபடி முன்னே நடந்தான்.
“அதென்னமோ வாஸ்தவம் தான் புகழ். இந்த பசங்களுக்கு மத்தியில் வாழுற நம்ம வீட்டு பிள்ளைகளை நினைச்சாலே பயமா இருக்குடா”
“பொத்தாம் பொதுவா சொல்லாத டா. தப்பு இரண்டு பக்கமும் இருக்கு. என்ன, எப்பவும் ஆண்கள் தான் அதிகம் தவறுறாங்க. பெண்களை என்னைக்கு தனக்கு சமமா ஒரு ஆண் மதிக்கிறானோ அன்னைக்கு தான் நம்ம சமூகத்தோட மனசாட்சி முன்னேறும்”
இருவரும் பேசிக் கொண்டே தங்களின் உடைமைகளை எடுத்துக் கொண்டு, இரு சக்கர வாகன நிறுத்துமிடத்திற்கு வந்திருந்தார்கள். புன்னகையுடன் அவரவர் வீடு நோக்கி விரைந்தார்கள்.
புகழேந்தி வீடு வர, ஹாலில் அமர்ந்து பூ தொடுத்து கொண்டிருந்தாள் அபிநயா. வடிவுக்கரசி அவளுக்கு பக்கத்தில் கால் நீட்டி அமர்ந்து கதை சொல்லிக் கொண்டிருந்தார்.
“குட் ஈவ்னிங் புகழ் சார்” அபிநயா சொல்ல, “வாப்பே” என்றார் வடிவுக்கரசி. அபிநயா தொடுத்து கொண்டிருந்த பூவை கிண்ணத்தில் அள்ளி வைத்து விட்டு அவனிடம் சென்றாள்.
“டீ போடவா?” அவள் கேட்க, “ம்ம்” என்றபடி அவன் அறைக்குள் செல்ல, அவனைப் பின் தொடர்ந்தாள் அவள்.
அவனது வழக்கமாக அவன் வேலையை அவனே பார்த்துக் கொள்ள, அவனிடம் இயல்பாக பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அவன் உடல் கழுவி, உடை மாற்றி வர, இருவரும் வெளியே வந்தார்கள்.
ஏற்கனவே அரைத்து தயாராக வைத்திருந்த மாவில் மசாலா வடை போட்டு, சூடான தேநீருடன் சேர்த்து பரிமாறினாள்.
ராஜலக்ஷ்மி அங்கு கிண்ணத்தில் இருந்த மல்லி மொட்டுகளை தொடுத்து கொண்டிருந்தார். அவருக்கு மாலை சிற்றுண்டியை அபிநயா கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு, “இந்தா, நீ கட்டின பூவை தலையில் வை அபி” என்று நீட்டினார் அவர்.
அந்தப் பூவை தலையில் சூடிக் கொண்டு கணவனிடம் சென்று அமர்ந்தாள் அவள்.
ராஜலக்ஷ்மி, வடிவுக்கரசி இருவரும் அடுத்த வாரம் வரவிருக்கும் பங்காளி வீட்டு விஷேஷத்தை பற்றி பேசிக் கொண்டிருக்க, அதை ஆர்வமாக கவனித்து கொண்டிருந்த மனைவியின் கையோடு தன் கை சேர்த்து கோர்த்துக் கொண்டான் புகழேந்தி.
அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
“இன்டர்வியூ என்னாச்சு அபி?”
“அதே பதில் தான் சொன்னாங்க. மெயில் பண்றோம். வெயிட் ஃபார் அவர் ஆன்சர். அவ்ளோதான்.”
“ரைட். அடுத்த வாரம் இன்னொரு இன்டர்வியூ இருக்குல்ல அபி?”
“இருக்குதான். அதுக்கு முன்னாடி இந்த ரிசல்ட் வந்துடும்ங்க”
“அப்போ உனக்கு வேலை கிடைச்சிடும்னு சொல்லு” குறுஞ்சிரிப்புடன் சொன்னான்.
“வேலை கிடைச்சா நல்லது. இல்லையா அவன் லாஸ். அவ்ளோதான்” அவனை போலவே அபிநயா சொல்லிக் காட்ட சத்தமாக சிரித்தான் புகழேந்தி. பெரியவர்கள் இருவரும் அவர்களை திரும்பிப் பார்த்து புன்னகைத்து விட்டு தங்கள் பேச்சில் மூழ்கினார்கள்.
“உங்க காலேஜ் பிரச்சனை என்னாச்சு? அந்த பொண்ணோட பிரச்சினையை சரி பண்ணிட்டீங்களா?”
“சரி பண்றதா? நான் என்ன கடவுளா அபி?” என்று கிண்டலாக கேட்டவன், அவள் முகம் பார்த்து, “அந்த பொண்ணை அவங்க வீட்ல சொல்ல சொல்லிட்டேன் அபி.” என்றான்.
“அச்சோ. அவங்க என்ன பண்ணுவாங்க? அந்த பொண்ணுக்கு சப்போர்ட் பண்ணுவாங்களா?”
“முதல்ல கோபம், திட்டு, அடி, மிதி எல்லாம் கிடைக்கும். ஆனா, கடைசியா அவளுக்கு துணையா நிப்பாங்கன்னு நம்புறேன். ரைட், அபி?”
“எனக்குத் தெரியலங்க. சொந்த பொண்ணையே நம்பாத குடும்பம் எல்லாம் இருக்கு தானே? இங்க முக்கால் வாசி பேர் அவங்க குடும்ப மானம், கௌரவம், பேரு, அந்தஸ்து எல்லாத்தையும் பொண்ணோட கால்ல தானே கட்டி வச்சுருக்காங்க” அபிநயா அவன் கண்களை பார்த்துச் சொல்ல, அவள் கையை அழுத்திக் கொடுத்தான் புகழேந்தி.
“எப்பவும் யாரோட தவறான மிரட்டலுக்கும் பணிய கூடாது அபி. உங்க வீட்டை காட்டி தானே உன்னை பயமுறுத்துறான். அவன் என்ன சொல்றது, அதை நீயே செய்திடு. இனி இவனை போல யாரும் உன்னை மிரட்ட மாட்டாங்க. காலேஜ் மட்டுமில்ல, இது தான் காலத்துக்குமான தீர்வுன்னு சொல்லி இருக்கேன். பார்ப்போம். ஏற்கனவே என் கூட வேலை பார்க்கற பார்கவி மேம் இதே அட்வைஸ் சொல்லி இருப்பாங்க போல. இப்போ நானும் சொல்லி இருக்கேன். அந்த பொண்ணு சரியான முடிவை எடுத்தா அவளுக்கு நல்லது” அபிநயாவிற்கு பிரச்சனை என்னவென்று தெரியாது. ஆனாலும் கணவன் சொல்வதை கேட்டு கொண்டாள்.
“நீங்க யாரையாவது லவ் பண்ணியிருக்கீங்களா?” மனைவியின் அந்த திடீர் கேள்வியில், “என்னது?” என்று அதிர்ந்து அவன் கேட்க,
“நிஜமா தான் கேட்கறேன் புகழ் சார். நீங்க உங்க காலேஜ் நாள்கள்ல இல்லனா அதுக்கு அப்புறம்.. யாரையாவது லவ் பண்ணியிருக்கீங்களா?” என்று கேட்டாள்.
“ஆமானு சொன்னா என்ன பண்ணுவ?” புகழேந்தியின் பதில் கேள்வி தந்த அதிர்ச்சியில் ஆவென்று வாய் திறந்திருந்தாள் அபிநயா.