அபிநயாவின் ஆழ்ந்த உறக்கத்தை அலார சத்தம் கலைத்து விட, மெல்ல புரண்டு படுத்தாள். அனிச்சையாய் அவள் கரம் கணவனைத் தேட, அங்கே அவனில்லை.
“நான் அலாரம் ஆஃப் பண்ணிட்டேன். நீ தூங்கு அபி” கணவனின் குரல் மட்டும் கேட்க, சட்டென கண் விழித்துப் பார்த்தாள். அலைபேசியை அணைத்து கையில் எடுத்துக் கொண்டு அவளைப் பார்த்து புன்னகைத்தான் புகழேந்தி.
“குட் மார்னிங் புகழ் சார்” என்றவளின் கண்கள் கணவனை கட்டிக் கொண்டது. அந்த அதிகாலை வேளையிலும் குளித்து, வேட்டி சட்டை என வெளியில் செல்ல தயாராக நின்றிருந்தான் அவன்.
தலைக்குளித்த ஈரத்தில் அவன் முடி பளபளக்க, படுக்கையில் இருந்து எம்பி அவனை தொட முயன்றாள் அபிநயா.
“அபி..” என்று சலிப்புடன் அதட்டினான்.
“பிளீஸ்” என்று கொஞ்சி, கெஞ்சினாள். அதற்கு அவன் அசையாமல் நிற்க, அவன் சட்டையைப் பிடித்திழுத்தாள். அதை எதிர்பாராதவன் நிலை தடுமாறினான். அவள் மேல் மொத்தமாக விழுந்து விடாமல் இருக்க, படுக்கையில் கையூன்றி அவள் மேல் சரிந்து, அவனுக்கு மிக நெருக்கத்தில் இருந்த மனைவியின் கண்களை கண்டிப்புடன் பார்த்தான்.
“என்ன பண்ற நீ? நான் கார்த்திக்கை கூப்பிட போகணும் அபி”
“போகலாம், போகலாம்” என்றவள், அவன் கழுத்தில் கரம் கோர்த்து அவனை மேலும் நெருக்கமாக இழுத்தாள்.
“நான் குளிச்சுட்டேன் அபி”
“ரொம்ப நல்லது” என்று கண் சிமிட்டினாள்.
“என்னை விடு அரட்ட..” செல்லமாக கடிந்தான்.
“அதெல்லாம் விட முடியாது புகழ் சார். என் கழுத்துல தாலி கட்ட விட்டுருக்கேன். நீங்க என் சொத்து” என்று அவள் சீண்டலாக சொல்ல, சிரித்தான் அவன். அந்த சிரிப்பு அவனுக்கு அதீத கவர்ச்சியை தந்திருந்தது. அறையின் இருளும், அதிகாலை நெருக்கமும், அது தந்த மயக்கமுமாக இருந்த அபிநயா கணவனின் கண்களை ஊடுருவி, அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.
“அபி..” என்ற அவன் குரலில் தாபம் கொட்டிக் கிடக்க, அவன் பின்னந்தலையில் கரம் கோர்த்து ஈரத்தை உணர்ந்தவள், அவன் முகமெங்கும் ஈரமாய் முத்தங்களை பதித்தாள். புகழேந்தி அவளையே பார்த்தபடி அவளிடம் தன்னை ஒப்புக் கொடுத்தான்.
அவன் தாடையில் அழுத்தமாக இதழ் பதித்து அவள் விலக, மனைவியின் கன்னத்தில் முத்தமிட்டு, “என்ன அபி வீக் எண்ட் அதுவுமா இப்படி சைவ முத்தம் தர்ற?” என்று அவன் கோபிக்க, முறைத்தாள் அபிநயா.
“ரைட், ரைட். நீ தூங்கு. நாம மிச்சத்தை மதியம் வைச்சுப்போம். இப்போ பை” என்று அவளை மென்மையாய் அணைத்து விலகினான்.
“பார்த்து போங்க” என்று சொன்னவள் அறையை விட்டு அவன் வெளியேறிய மறுநொடி மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.
வீட்டு ஹாலில் இருந்து வந்த பேச்சு, சிரிப்பு சத்தம் மீண்டும் அவளை எழுப்பி விட்டது. கார்த்திக் வந்து விட்டான் என்பது புரிந்து, படுக்கையில் இருந்து எழுந்து நேராக குளிக்கச் சென்றாள்.
அவள் தயாராகி வெளியில் வர, “ஹாய் அண்ணி” என்று அவளைக் கண்டதும் கத்தினான் கார்த்திக். அபிநயா அவன் நலம் விசாரித்து, பேசி விட்டு தனக்கு காஃபி தயாரிக்க சமையல் அறை சென்றாள்.
அவள் கண்கள் எட்டி ஹாலில் கணவனைத் தேட, “நீ உனக்கு மட்டும் காஃபி கலந்துக்கோ. புகழ், உங்க மாமா கூட கடைக்கு போய் இருக்கான் அபி. அயிரை மீனும், நாட்டுக் கோழியும் சொல்லி இருந்தோம் இல்ல. அதுல ஏதாவது ஒன்னை வாங்கிட்டு வரச் சொல்லி அனுப்பினேன்” என்று சொன்னார் ராஜலக்ஷ்மி.
“சரிங்க அத்த. உங்களுக்கு காஃபி?”
“நான் அப்பவே குடிச்சுட்டேன் த்தா. நீ குடி” என்றார் வாஞ்சையுடன்.
அபிநயா காஃபி குடித்தபடி மேடையில் சாய்ந்து நிற்க, “இன்னைக்கு உனக்கு ஒரு வேலையும் இல்ல. உங்க அம்மாச்சி கூட உட்கார்ந்து பேசிட்டு இரு அபி” என்று ராஜலக்ஷ்மி சொல்ல,
“களிக்கு நான் மாவு அரைக்கவா த்த?” என்று கேட்டாள் அபிநயா.
“மாவு ஓடி முடிஞ்சுடுச்சு அபி. நான் பார்த்துக்கறேன். நீ காஃபியை உட்கார்ந்து குடி போ” என்று விரட்டினார்.
அபிநயா ஹாலுக்கு வர, புகழேந்தி இரண்டு கைகளிலும் பையுடன் வீட்டிற்குள் நுழைந்தான்.
கார்த்திக் வேலைக்கு சென்ற பின் ஒரு முறைதான் வீடு வந்திருந்தான்.
அவன் வந்து விட்டாலே வீடு கலகலக்கும். அவனை அக்கறையாக பார்த்துக் கொள்வார் வடிவுக்கரசி.
அன்று காலை உணவே அவனுக்கு மிகப் பிடித்த வெந்தய களியும், கருப்பட்டி பாலும் தான்.
வடிவுக்கரசி காலையிலேயே பேரன் தலையில் குளிர குளிர எண்ணெய் தேய்த்து விட்டிருந்தார். அவன் தலைக்கு குளித்து வந்ததும், சூடாக களியும், அதற்கு கருப்பட்டி பாலும் (பாகும்) பரிமாறினார்.
புகழேந்தி அமைதியாக உண்ண, அபிநயா ஆரம்பித்து விட்டாள்.
“அம்மாச்சி, எல்லா ஸ்பெஷல் ஐட்டமும் இன்னைக்கு தான் வருது” என்று அவள் கேலியாக சொல்ல, “ஏத்தா அபி. என்ன இப்படி சொல்லிப்புட்ட. போன வாரம் கூட உனக்கு உளுந்து களி கிண்டி கொடுத்தேன் இல்ல?” என்று அவர் அங்கலாய்க்க, “ம்ம். ஆனா, வெந்தய களி செய்யல இல்ல?” என்று சடைத்தாள் அபிநயா.
“நல்லா அடிச்சு கேளுங்க அண்ணி” என்று அவளுக்கு எடுத்துக் கொடுத்தான் கார்த்திக்.
“இந்தாடா, பேசாம இரு” என்று பேரனை அடக்கியவர்,
“ஏ யாத்தே. ரெண்டு வாரத்துக்கு முன்ன கூட செஞ்சோமில்ல?” என்று அபியிடம் கேள்வியை ராகமாக அவர் இழுக்க, பதிலை, “இல்ல..” என்று முடித்து வைத்தாள் அபிநயா.
“அபி..” என்று அதட்டினான் புகழேந்தி.
“பிள்ளை சும்மா சொல்லுதுப்பே. நீ வேற” என்று பேரனை சத்தம் போட்டார் வடிவுக்கரசி.
காலை உணவை முடித்ததும் வீட்டினருக்கு தான் வாங்கி வந்த பொருட்களை கொண்டு வந்து கடைப் பரப்பினான் கார்த்திக்.
அப்பாவுக்கு, அவர் எப்போதும் அணியும் வெள்ளை வேட்டி, சட்டை. அண்ணனுக்கு, அவன் கல்லூரிக்கு அணிந்து செல்லும் ஃபார்மல் சட்டைகள்.
அப்பத்தாக்கு கோஆப்டெக்ஸ் கைத்தறி சேலைகள் மூன்று, அம்மாவுக்கு காட்டன், பட்டு என மூன்று சேலைகள். அண்ணனுக்கு வாங்கிய அதே சட்டை நிறத்தில் அண்ணிக்கு ஒரு பட்டுச் சேலை என வாங்கி வந்திருந்தான்.
மாணிக்கவேலன் மகன் வாங்கி வந்திருந்த உடைகளை பெருமையாய் வாங்கிக் கொண்டார். அடுத்த நிமிடமே அதைப் போட்டு கொண்டு அவர் வெளியே வர, அனைவர் முகத்தையும் நிறைத்தது புன்னகை.
அம்மா, அப்பத்தாவிடம் சேலைகளை கொடுத்தவன், அண்ணிக்கு வாங்கியதையும் சேர்த்து அண்ணனிடமே கொடுத்தான்.
வடிவுக்கரசி பூரிப்பில் பேரனின் முகத்தை கையால் வழித்து நெட்டி முறித்தார்.
“ஷர்ட் நல்லாருக்கு டா” தம்பியிடம் புகழேந்தி சொல்லிக் கொண்டிருக்க, ராஜலக்ஷ்மி எழுந்து சமையல் அறை சென்றார். அபிநயா தானும் எழுந்து போய் அத்தைக்கு மதிய சமையலில் உதவினாள்.
“அப்புறம் என்னப்பே கார்த்தி. கல்யாணத்துக்கு பொண்ணு பார்ப்போமா? நீ என்னய்யா சொல்ற?” என்று கார்த்தியிடம் கேட்டு, அப்படியே அடுத்த கேள்வியை மாணிக்கவேலன் மற்றும் புகழேந்தியை பார்த்துக் கேட்க, அனைவரையும் முந்திக் கொண்டு மறுத்தான் கார்த்திக்.
“அய்யய்யோ அப்பத்தா. இப்பத்தான் வேலையில் சேர்ந்திருக்கேன். அதுக்குள்ள என்னை தள்ளி விடப் பார்க்காத” என்று அவன் கத்த,
“வயசாகுது இல்லப்பே” என்றார் அவர். பதிலுக்கு கார்த்திக் மறுக்க, வடிவுக்கரசி அவனை முறைக்க என அவர்களின் வாக்குவாதம் நீண்டுக் கொண்டே சென்றது.
“விடு, அப்பத்தா. அவன் சொல்றதும் சரிதான்” என்று புகழேந்தி சொன்னதும் சரியென்று அமைதியானார் அவர்.
“ஏ அப்பத்தா.. தாய்க் கிழவி. நான் இம்புட்டு நேரம் தொண்டை தண்ணி வத்த கத்திட்டு இருந்தேன். அது உன் காதுல விழல. ஆனா, உன் பேரன் புகழ் சார் சொன்னதும் சரிப்பேன்னு வாயை மூடுற.. உன்னை…” என்று கார்த்திக் கத்த, “போடா இவனே..” என்று அவன் தோளில் அடித்தார் அவர். அப்படியே சிறிது நேரம் பொதுவான பேச்சுகள், அதன் பின்னர் தீவிரமாக சொத்து பிரச்சனை, ஏதோ பத்திரத்தில் இருந்த வில்லங்கம் என பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.
“ஆஹா, மீன் குழம்பு வாசம் ஆளை தூக்குதே” என்று கார்த்திக் வாசம் பிடித்து சொல்ல, மகனைப் பார்த்து சிரித்தார் மாணிக்கவேலன்.
அபிநயா வேலை முடித்து வந்து கணவனின் பக்கத்தில் அமர, ராஜலக்ஷ்மி பாத்திரங்கள் நிரம்பிய ஒரு கூடையுடன் அவளிடம் வந்தார்.
“இந்தா அபி, இதை வாங்கு” என்று மருமகளிடம் அதை நீட்டி, “புகழு, சூடா அயிரை மீன் குழம்பு வச்சுருக்கேன். இதைக் கொண்டு போய் உன் மாமியார் வீட்ல குடுத்துட்டு வாய்யா. அபி அப்பத்தாவுக்கு அயிரை மீன்னா இஷ்டம். ஆசையா சாப்பிடுவாங்க” என்று சொல்ல, புகழேந்தி எழுந்து கொண்டான்.
புகழேந்தி வாங்கி வரச் சொல்லியிருந்த கடிகாரத்தை கார்த்திக் கொடுக்க, மச்சினனுக்கு பரிசளிக்க அதை வாங்கிக் கொண்டான் அவன்.
அபிநயாவின் வீட்டில் குத்தகைக்கு இருப்பவர்கள் கடந்த மாதம் மாடித் தோட்டம் அமைக்க விரும்பி, அவர்களிடம் அனுமதி கேட்டிருந்தார்கள். அதற்காக மாடியில் நீர் இறங்காத டைல்ஸ் பதிக்க விரும்பினார் மகேஷ்வரன். அவருக்கு புதிய வேலையில் போதுமான விடுமுறை கிடைக்கவில்லை. கார்த்திக் வார விடுமுறையில் அங்கு சென்று அந்த வேலையை மேற்பார்வை பார்த்திருந்தான். மகேஷ்வரன் வேலை கூலி கொடுத்து சென்றிருக்க, அதில் மிச்சம் இருந்த பணத்தை அவரிடம் திருப்பிக் கொடுக்கவும், வீட்டின் புகைப்படத்தை காட்டவுமே அங்கு சென்றான் அவன். ஏற்கனவே அபிநயாவிற்கு புகைப்படங்களை அனுப்பியிருந்தான். ஆனாலும், அவன் நேரில் சென்று சொல்வது போல வராதே.
மூவரும் அபிநயா வீடு செல்ல, “அபி வா த்தா. வாங்க மாப்பிள்ளை” என்று ஆவலாக அவர்களை வரவேற்றார் காளியம்மாள்.
“உட்காருங்க, தண்ணி கொண்டாரேன்” என்று அவர் உள்ளே செல்ல, கணவனோடு சோஃபாவில் அமர்ந்த அபிநயாவின் பார்வை அந்த ஹாலின் மூலையில் இருந்த உணவு மேஜையில் தன் நண்பர்களுடன் அமர்ந்து உண்டு கொண்டிருந்த தம்பி சித்தார்த்தின் மேல் படிந்தது.
“இந்தாங்க ப்பா. சாப்பிடுங்க” சூடாக பொரித்த மீனை தட்டில் கொண்டு வந்து மேஜையில் வைத்தார் சியாமளா.
மெல்ல திரும்பி மகளைப் பார்த்து புன்னகைத்து, மருகனை வரவேற்றார்.
சித்தார்த் எழுந்து கைக் கழுவி வந்து அக்கா, மாமாவிடம் அமர்ந்தான்.
“அடடே வாங்க மாப்பிள்ளை. சின்ன மாப்பிள்ளை, நீங்களும் வந்திருக்கீங்களா? வேலை எல்லாம் எப்படியிருக்கு?” அப்போது தான் அறையில் இருந்து வெளியில் வந்த மகேஸ்வரன் அவர்களை அன்புடன் விசாரித்தார். அபிநயா எழுந்து அப்பாவிடம் செல்ல மகளைப் பார்த்து ஆதூரமாக புன்னகைத்தார்.
“சியாமளா சாப்பாடு எடுத்து வை. அபியும், மாப்பிள்ளையும் சாப்பிடுவாங்க” என்று மனைவியிடம் சொன்னார் அவர்.
அபிநயா கையில் இருந்த கூடையுடன் சமையல் அறை செல்ல, மகளைப் பின் தொடர்ந்தார் சியாமளா.
மகேஷ்வரன் மருமகனுடன் பேசி, பின் கார்த்திக் காட்டிய புகைப்படங்கள் பார்த்து அவனுடன் ஏதோ தீவிரமாக கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார்.
“அப்பத்தா, இங்க வாயேன்” அபிநயா அழைக்க, காளியம்மாளும் உள்ளே சென்று விட்டார். புகழேந்தி கிடைத்த தனிமையை பயன்படுத்தி சித்தார்த்திடம் பேசினான்.
“ஜோசபின் தானே மாமா? நான் பார்த்துக்கறேன்” என்று அவன் உறுதியாக உத்திரவாதம் தர, “தேங்க்ஸ் சித்து” என்று அவன் தோளில் தட்டிக் கொடுத்தான் புகழேந்தி.
“என்ன மாமா தேங்க்ஸ் எல்லாம் சொல்றீங்க? நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும். வாட்ச் சூப்பராருக்கு மாமா. இந்த வருஷம் நீங்க தான் எனக்கு ஃபர்ஸ்ட் கிஃப்ட் கொடுத்துருக்கீங்க. தெரியுமா? அதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மாமா” என்றவன் தோளில் தட்டிக் கொடுத்து புன்னகைத்தான் புகழேந்தி.
“நேரம் ரொம்ப மதிப்பு வாய்ந்தது சித்து. அதுக்குத்தான் வாட்ச்” என்று அவன் சொல்ல, அதைக் கேட்டு, “புகழ் சார், பிளீஸ் அவனை ஃப்ரீயா விடுங்க” என்று கேலி செய்தான் கார்த்திக்.
சித்தார்த் தன் நண்பர்களுடன் சென்று அமர்ந்துக் கொண்டான்.
அம்மா வீட்டிலும் மீன் குழம்பு, வறுவல், நண்டு மசாலா என சிறப்பாக சித்தார்த் நண்பர்களுக்காக சமைக்கப்பட்டிருந்தது. அவளுக்கு கடல் உணவுகள் என்றால் பிடித்தம். அது சியாமளாவிற்கு நன்றாக தெரியும்.
அவள் வீட்டில் அயிரை மீன் என்று இல்லை, அன்றாட வழக்கத்திற்கு மாறாக ஏதாவது விசேஷமாக சமைத்தால் கூட, அதை அம்மா வீட்டிற்கு கொண்டு வந்து கொடுப்பாள் அபிநயா. அவள் மறந்தாலும் ராஜலக்ஷ்மி, வடிவுக்கரசி அவளுக்கு பாத்திரத்தில் எடுத்து கொடுத்து அனுப்பி வைப்பார்கள். ஆனால், இங்கு அம்மாவுக்கு தன் நினைப்பேயில்லையே என்ற வருத்தத்துடன் அவரைப் பார்த்தாள் மகள்.
அவர் என்றைக்கும் அவளை தனியாக கவனித்தது கிடையாது தான். ஆனாலும், சித்தார்த் நண்பர்களை கூட சிரத்தை எடுத்து வீட்டிற்கு அழைத்து கவனிப்பவர் மகளை உதாசீனப்படுத்துவது அவள் மனதை வருத்தியது.
“சாப்பிட்டு போங்க மாப்பிள்ளை” என்று மகேஸ்வரவனும், “சாப்பிடுத்தா அபி. அப்பத்தா ஊட்டி விடவா? தூக்கு வாளில போட்டுத் தர்றேன். வீட்டுக்கு கொண்டு போறியா?” என்று காளியம்மாள் கெஞ்சியதையும் கடினப்பட்ட மனதுடன் மறுத்து வீடு கிளம்பினாள்.
“உனக்கு வேணாம்னா, உங்க வீட்ல போய் சாப்பிடு. மாப்பிள்ளைங்க ரெண்டு பேரையும் சாப்பிட சொல்லு. இல்லனா உங்கப்பா என்னைத்தான் கத்துவார்” என்ற அம்மாவை நிதானமாக பார்த்து, “எங்க வீட்ல அவர் தம்பிக்காக தான் மீன் எடுத்தாங்க மா. அத்தை வெயிட் பண்ணுவாங்க. அங்க போய் சாப்பிட்டுக்கறோம்” என்று ஒரேடியாக மறுத்து விட்டாள் அவள்.
அம்மாவின் மேல் தேவையில்லாமல் அவள் எதிர்பார்ப்பை வளர்த்துக் கொண்டது கிடையாது. ஆனாலும், மனது கேட்கவில்லை.
அவளின் அமைதி புகழேந்திக்கு எதையோ புரிய வைத்திட, அவளை இயல்பாக்க எல்லா முயற்சிகளும் செய்தான் அவன்.
சும்மா இல்லாமல் கார்த்திக்கை அவன் ஏதோ சொல்ல, பதிலுக்கு கார்த்திக் அண்ணனை சீண்ட என மதிய உணவு நேரம் கலகலப்பாக சென்றது.
அயிரை மீன் குழம்பு, ஊளி மீன் குழம்பு, நகரை மீன் வறுவல், சுறா புட்டு, பூண்டு ரசம் என சுவையான மதிய உணவிற்கு பின் அறைக்கு வந்தாள் அபிநயா.
குழம்பு வகைகள் அனைத்தும் சுள்ளென்று காரமாக சமைத்திருக்க, இன்னமும் புகுந்த வீட்டு சுவைக்கு அவள் பழகவில்லை. எப்போதும் உணவு முடித்ததும் வீட்டில் இருக்கும் இனிப்பு பண்டம் எதையாவது பிட்டு வாயில் போட்டுக் கொள்வாள். இன்று அவளுக்கு இருந்த மனநிலையில் உண்ட பாத்திரங்களை மட்டும் ஒதுக்கி விட்டு, அறைக்கு வந்து விட்டாள்.
நாவில் இன்னமும் காரத்தின் எரிச்சல் தெரிய அதை மட்டுப்படுத்த தண்ணீர் குடித்து கொண்டிருந்தாள்.
“இந்தா அபி. இதை சாப்பிடு” என்று அவளிடம் தேன் மிட்டாய் நீட்டினான் புகழேந்தி.
“இது ரொம்ப தித்திப்பா இருக்கும்ங்க” என்று அவள் மறுக்க, அதை உடனே தன் வாயில் போட்டு அதக்கிக் கொண்டான்.
“ம்ம், அப்போ என்ன பண்ணலாம் அபி?” என்று அவள் இடையில் கைக் கோர்த்து இழுத்தான்.
“என்ன பண்ணலாம்னா?”
“அசைவ காரத்தை எடுத்துடுவோம் அபி” என்று கிசுகிசுத்து அவள் இதழ் நோக்கி குனிந்தான். இப்போது முத்தம் அசைவமாகி இருவருக்குள்ளும் தித்திப்பாய் இறங்கியது.