“நீ வேற ஜாதி பையனை லவ் பண்ணதை உங்க வீட்ல சொல்லிடுவேன்னு ஒருத்தன் மிரட்டி, அதை வச்சே லவ் டார்ச்சர் கொடுக்கிறான்னு சொல்லியிருக்கா. அவங்கப்பா, அதைக் கேட்டு கொதிச்சி போய், எவன்னு சொல்லு, வெட்டி போட்டுடுறேன்னு அருவாளை தூக்கியிருக்கார். அவரை சாந்தப்படுத்தி, அவங்க வீட்ல எல்லாம் உட்கார்ந்து பேசி, இனிமே லயாவை அவன் தொல்லை பண்ணா அவங்களே தலையிட்டு பிரச்சனையை பார்த்துக்கலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க. நேத்து நைட்டு என்கிட்ட போன்ல பேசினாங்க. அவளை காலேஜ்ல நாங்க பார்த்துக்கறோம்னு தைரியம் சொல்லியிருக்கேன். மதியம் கிஷோரை கூப்பிட்டு திரும்பவும் வார்ன் பண்ணேன்”
“நல்லது மேம். கிஷோர் அவ்வளவு சீக்கிரம் மாற மாட்டான். ஆனா, லயா ஃபேமிலி அவளுக்கு சப்போர்ட்டா இருந்தா அவளே அவனை சமாளிச்சுடுவா”
“ஆமா சார். இனிமே எதுவும் பிரச்சனைன்னா நேரா ஹெச்ஓடி, பிரின்சிபல் கிட்ட போக சொல்லிட்டேன்”
“அதான் சரி மேம். இந்த மாதிரி பசங்களை காலேஜ் விட்டு அனுப்பினா தான்…” கோபத்தில் சாமுவேல் பொரிய, “காலேஜ் விட்டு அனுப்பினா மட்டும் திருந்திடுவானா சாம் சார்?” என்று நண்பன் சொல்ல வந்ததை முடிக்க விடாமல் கேள்விக் கேட்டான் புகழேந்தி.
“இவனை எல்லாம் நம்ம கண்ணுக்கு முன்னாடியே வச்சு கண்காணிக்கிறது நல்லது மேம். வேற காலேஜ் போனா, அங்க போயும் இதையே தான் செய்வாங்க. இங்க ஒரு பொண்ணு, அங்க ஒரு பொண்ணுன்னு குற்ற உணர்ச்சியே இல்லாம தப்பை தொடர்ந்து செய்வாங்க. இவங்க நம்ம கண் பார்வையில் இருக்கிறது நல்லது” என்று புகழேந்தி சொல்ல, மற்ற இருவரும் அவனை ஆமோதித்தனர்.
ஒரு வழியாக அந்த பிரச்சனைக்கு தீர்வு கண்ட நிம்மதியுடன் கல்லூரியில் இருந்து கிளம்பினார்கள்.
புகழேந்தி, “உன் தங்கச்சி பத்தி சொன்னல்ல சாம். நான் சித்தார்த் கிட்ட சொல்லியிருக்கேன் டா. இதுவரை அவனுக்கு தெரிஞ்சு எந்த பிரச்சனையும் இல்லைனு சொல்றான். இனிமே ஏதாவதுன்னா என்கிட்ட சொல்றேன்னு சொன்னான் டா. சோ நீ வொர்ரி பண்ணிக்காத” என்று நண்பனின் தோள் தட்டிச் சொல்ல, “ஓகே டா. தேங்க்ஸ்” என்றான் சாமுவேல்.
புகழேந்தி வீடு வர, அவனை ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தாள் அபிநயா.
அவன் வீட்டிற்குள் நுழைந்ததும் ஓடி வந்து அவன் வாயில் இனிப்பை திணித்தாள்.
ஹாலில் யாரும் இல்லாதிருக்க, மனைவியின் கன்னத்தில் முத்தமிட்டு, “எதுக்கு ஸ்வீட்?” என்று கேட்டான்.
தன் அலைபேசியை எடுத்து, மெயிலை திறந்து கணவனிடம் காட்டினாள்.
“வாவ் அபி. வேலைக்கு போக போறியா? சிஸ்டம் என்ஜினியர். ஒரு வருஷத்துக்கு சில லட்சங்கள் சம்பளம். ரைட் ரைட்” அவன் குரலில் அப்பட்டமான மகிழ்ச்சி. மனைவியை அப்படியே தூக்கி சுற்றி கீழிறக்கி விட்டான் அவன்.
மனைவி முதல் நாள் அலுவலகம் செல்ல புதிய இரு சக்கர வாகனம் ஒன்றை பரிசாக வாங்கித் தந்தான்.
அபிநயா வேலைக்கு செல்லத் தொடங்கி ஆறு மாத காலமாகியிருந்தது.
அப்பொழுது வீட்டில் கார்த்திக் கல்யாணப் பேச்சு மீண்டும் தூசி தட்டப்பட்டது. ஆனால், கோடி பெண்களில் அவனுக்கான ஒருத்தியை கண்டுபிடிப்பது அத்தனை எளிதான வேலையாக இருக்கவில்லை.
அறிந்தவர், தெரிந்தவர், உறவினர் என எல்லா பக்கமும் பேரனுக்கு வரன் பார்க்கிறோம் என்று சொல்லி வைத்தார் வடிவுக்கரசி. அதனால், வரன்கள் வரத்தான் செய்தது. ஆனால், அவர்களுக்கு முதல் கட்டத்திலேயே எதுவும் திருப்தி தரவில்லை.
அப்படியே ஒன்றிரண்டு வரன்கள் அவர்களுக்கு பிடித்திருந்தாலும் கார்த்திக்கிற்கு புகைப்படம் அனுப்பும் முன்பே பெண் வீட்டார் குறித்த ஏதாவது தகவல் தடங்கலாக வந்து அவர்களுக்கு தலைவலியை கொடுத்தது.
“ஏன் கார்த்திக், இந்த லவ் பத்தி என்ன நினைக்கறீங்க? கூட வேலை பார்க்கிற பொண்ணு யாரும்..” என்று அவள் கார்த்திக்கிடம் தயக்கத்துடன் கேட்க, “கூட வேலை பார்க்கிற பொண்ணா.. அபி அவன் கிட்ட இதையெல்லாம் போய் பேசுற..” என்று ரூல்ஸ் பேசினான் புகழேந்தி.
“எனக்கு நீங்க பார்க்குற பொண்ணு தான் செட்டாவும் அண்ணி” என்று கார்த்திக்கும் சொல்லி விட்டான். ஆனால், அமைய வேண்டுமே. அதுதான் நடக்கவில்லை.
சின்ன பேரனை குடும்பமாக பார்க்க வேண்டும் என்ற வடிவுக்கரசியின் பிரார்த்தனையை, பெரிய பேரனின் குடும்பம் விரிவடைந்து நிறைவேற்றி வைத்தது. ஆம், அபிநயா தற்போது கர்ப்பமாக இருக்கிறாள்.
புகழேந்தி, அபிநயா திருமணம் முடிந்து ஒன்றரை வருடங்கள் ஆகியிருந்தது. சித்தார்த் இரண்டாம் வருடம் கல்லூரியில் இருந்தான்.
அபிநயா ஐந்து மாத கர்ப்பத்துடன் வேலைக்கு சென்று கொண்டிருந்தாள்.
அன்று காலை எழுந்து கொள்ளும் போதே அவளுக்கு லேசான தலை சுற்றல் இருந்தது. ஆனால், அடிக்கடி விடுமுறை எடுக்க விரும்பாமல் வேலைக்கு கிளம்பினாள் அபிநயா.
“ரொம்ப முடியலைன்னா லீவ் எடுத்து வீட்ல இரேன் அபி” புகழேந்தி கரிசனத்துடன் சொல்ல, “ஏற்கனவே நிறைய லீவ் எடுத்துட்டேன். வேலைக்கு ஜாயின் பண்ணி ஒரு வருஷம் தான் ஆகுது. அதுக்குள்ள ப்ரெக்னன்சி, மேட்டர்னிட்டி லீவ் வேற கேட்பீங்கன்னு என் மேனேஜரம்மா பார்க்கும் போதெல்லாம் ஜாடை மாடையா என்னை திட்டுறாங்க. இன்னைக்கு முக்கியமான புராஜக்ட் வொர்க் இருக்கு. லீவ் போட்டா என்னை கடிச்சு குதறிடுவாங்க” என்று சொன்னாள் அபிநயா.
புகழேந்தி அன்பின் மிகுதியில், ‘வேலையை விட்டு விடுகிறாயா?’ என்று மனைவியிடம் கேட்க விரும்பினான். ஆனால், அவளே விரும்பாமல் அந்த முடிவை அவள் மேல் அவன் திணிக்க விரும்பவில்லை. அதனால், “ரைட் அபி.” என்று அவள் போக்கில் விட்டான் அவன்.
“ஈவ்னிங் வெயிட் பண்ணு அபி. நான் வந்து பிக் அப் பண்ணிக்கிறேன்.”
“சரிங்க” என்று எம்பி வயிறு கணவன் மேல் இடிக்க, அவன் கன்னத்தில் முத்தமிட்டு அலுவலகம் சென்றாள் அபிநயா.
மாலை வேலை முடித்து கணவனுக்காக காத்திருந்தாள். ஆனால், அவன் வரவேயில்லை. அவனது அலைபேசிக்கு அழைத்தாள், அழைப்பு ஏற்கப்படாமல் அடித்துக் கொண்டேயிருந்தது. புகழேந்தி அப்படி நடந்து கொள்பவன் அல்ல.
எந்த நேரமாக இருந்தாலும், எவ்வளவு முக்கியமான வேலைக்கு நடுவில் இருந்தாலும், அழைப்பை ஏற்று காரணம் சொல்லி விட்டே துண்டிப்பான் என்பதால் கவலையாகிப் போனாள் அபிநயா.
அவனது வகுப்பறை நேரம் மட்டுமே விதிவிலக்கு. அப்போது அலைபேசி பயன்படுத்த மாட்டான்.
கல்லூரி முடிந்து சில மணி நேரங்கள் கடந்திருக்க, கணவனின் இந்த விநோத நடவடிக்கையை வியந்தபடி, வீட்டிற்கு கிளம்பினாள் அவள்.
“பிஸியா இருக்கீங்களா? எனக்கு டையர்டா இருக்கு. நானே வீட்டுக்கு வர்றேன்” என்று அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு வீட்டிற்கு கிளம்பினாள்.
அன்று முழுவதும் சரியாக உண்ணாத காரணத்தினால் தலைவலி வேறு அவளுக்கு சேர்ந்துக் கொண்டது. கணவனுடன் அமர்ந்து மாலை சிற்றுண்டி உண்ணும் ஆசையில் அவள் அலுவலக உணவகத்தில் கூட எதுவும் உண்டிருக்கவில்லை. இப்பொழுதும் தண்ணீர் மட்டும் குடித்து விட்டு வண்டியை வீட்டிற்கு செலுத்தினாள்.
அவர்கள் வீட்டு வாசலில் கணவனின் வண்டியும், கூடவே தம்பியின் வண்டியும் நிற்பதை பார்த்தபடியே வீட்டினுள் நுழைந்தாள்.
சியாமளாவின் கத்தல் தான் அவளை முதலில் வரவேற்றது.
“உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? என் பிள்ளையை அடிக்க உங்களுக்கு யாரு அதிகாரம் கொடுத்தது?” என்று அவர் கத்திக் கொண்டிருக்க, உள்ளே சென்றவளின் பார்வை முதலில் கணவனின் மேல் விழுந்தது.
சுவரில் சாய்ந்து, இரு கைகளையும் மார்பில் கட்டிக் கொண்டு முகத்தை நிமிர்த்தி திமிராக பார்த்தபடி நின்றிருந்தான் புகழேந்தி.
“பொறுமையா பேசும்மா..” என்று வடிவுக்கரசி சொல்ல, “என் பையன் மூஞ்சியை பார்த்து அதைச் சொல்லுங்க” என்று சியாமளா கத்த, அபிநயாவின் கண்கள் அனிச்சையாய் தம்பியை தேடி அவனில் நிலைத்தது.
புகழேந்தி அப்போது தான் மனைவியை கவனித்தான். சரியாக அதே சமயம் சியாமளாவும் மகளைப் பார்த்து விட, “வாடி அபி. உன் தம்பி முகத்தை பாரு. உன் புருஷன் போட்டு என்னா அடி அடிச்சுருக்கார் பாரு” என்று அவர் ஆத்திரத்துடன் கத்த, அபிநயா கணவனின் பக்கமாக நகர்ந்து நின்றாள்.
அவள் விழிகள் தீர்க்கமாக தம்பியின் மேல் படிந்தது. சித்தார்த் முகத்தில் புகழேந்தியின் கைத்தடம் அப்படியே அச்சாக பதிந்திருந்தது. ஒரு பக்க முகம் முழுவதும் வீங்கி, கண்கள் சிவந்து, உதடு கிழிந்து இரத்தக் கரையின் சுவடு தெரிய, அவளுக்கு மனதை பிசைந்தது.
தம்பியின் அருகில் சென்று ஆறுதல் சொல்ல விரும்பினாள் அவள். மெல்ல அவனுக்கு பக்கத்தில் சென்று, “என்னடா பண்ண சித்து? மாமா அடிக்கிற அளவுக்கு என்ன பண்ண?” என்று அவள் கலங்கிய குரலில் கேட்க, அதைக் கேட்டு கொதித்துப் போனார் சியாமளா.
“ஏன் டி, உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? உன் தம்பி உதடு கிழிஞ்சு ரத்தம் வர்ற அளவுக்கு உன் புருஷன் அடிச்சுருக்கார். அவர் சட்டையை பிடிச்சு என்னனு நியாயம் கேட்காம, உன் தம்பியை கேட்கிற? நீயெல்லாம்…” என்று அவர் கத்த, அதைப் பொருட்படுத்தாமல், “என்னடா பண்ண சித்து?” என்று திரும்ப திரும்ப அதையே கேட்டாள் அபிநயா.
சித்தார்த், அக்காவை நிமிர்ந்து பார்க்கும் திராணியின்றி தலைக் குனிந்து நின்றான்.
ராஜலக்ஷ்மி, வடிவுக்கரசி இருவரும் புகழேந்திக்கு பக்கத்தில் கவலை படர்ந்த முகத்துடன் நின்றிருந்தார்கள்.
அபிநயா, “என்னாச்சுங்க?” என்று திரும்பி கணவனிடம் கேட்டாள். அந்த சூழலை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கர்ப்பமாக இருந்தவளின் உடல் படபடத்து சோர்ந்து தள்ளாடியது, புகழேந்தி சட்டென ஓடி வந்து மனைவியைத் தாங்கிக் கொண்டான்.
“என் பையனை இப்படி அடிச்சதுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும். உங்களை எல்லாம் சும்மா விட மாட்டேன் நான்” என்று அப்போதும் ஆவேசமாக கத்திக் கொண்டிருந்தார் சியாமளா.