அதனால் தான் மனைவியை அலுவலகத்தில் இருந்து அழைத்துச் செல்ல வரவில்லை என்பதையும் அவன் கூற, “சித்து ஏன் இப்படி பண்ணான்?” என்று அதிலேயே உழன்று கொண்டிருந்தாள் அபிநயா.
“அவனோட ப்ரெண்ட்டுகாக. வேறென்ன?”
“அப்போ அந்த பொண்ணு அவனோட ப்ரெண்ட் இல்லையா? அவ முக்கியம் இல்லையா இவனுக்கு? அந்த பையனோட பிரெண்ட்ஷிப்க்காக, பொண்ணோட பிரெண்ட்ஷிப்பை விட்டுக் கொடுத்திடுவானா? அந்த பொண்ணோட மனசு பத்தியெல்லாம் இவனுக்கு கவலையே இல்லையா? என் தம்பியா இது? ரெண்டு வருஷத்துக்கும் மேல என்னை ஒருத்தன் ஃபாலோ பண்ணி டார்ச்சர் பண்ணதை நேர்ல தினம் தினம் பார்த்தே வளர்ந்தவனுக்கு எப்படிங்க அதையே இன்னொரு பொண்ணுக்கு நடக்க விட மனசு வரும்? அப்போ அவங்க வீட்டு பொண்ணுன்னா மட்டும் தான் உசத்தியா? மத்தவங்களை எல்லாம் உரசி பார்க்கலாமா?” அபிநயா அவள் போக்கில் தன் மனத்தின் ஆதங்கத்தை கொட்டினாள்.
மகேஷ்வரனுக்கும் அதே ஆதங்கம்தான்.
“தப்பு பண்றவனை பார்த்து நீயெல்லாம் அக்கா, தங்கச்சி கூட பொறக்கலையான்னு ஏன் கேட்கறோம்?” வண்டியில் ஏறி அமர்ந்தவர், வாசக் கதவை பிடித்தபடி ஒடுங்கி நின்று தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மகனைப் பார்த்து கத்திக் கேட்டார்.
“நம்ம வீட்ல ஒரு பொண்ணு இருந்தா அவளோட கஷ்ட, நஷ்டங்கள் ஒருத்தனுக்கு புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறோம். ஆனா, தன் வீட்டு பொண்ணுன்னா மட்டும் தான் உங்களுக்கு பொத்தி பாதுகாக்கணுமா? அடுத்த வீட்டு பொண்ணுன்னா இளக்காரம் இல்லடா. நீங்க பொறுக்கித்தனம் பண்ண தான் நாங்க ஆசையா பெத்து, பாடுப்பட்டு வளர்த்து விட்டிருக்கோம் இல்ல? நல்லா இருங்கடா”
மகன் செய்ததாக கூறியதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. மருமகனை சந்திக்க அவர் கிளம்ப, அவரோடு இணைந்து கொண்டார் காளியம்மாள்.
புகழேந்தி அலைபேசிக்கு கார்த்திக் அழைக்க, “கார்த்தி எதுவும் முக்கியமா பேசணுமா? இல்லனா அப்புறமா கூப்பிடவா?” என்று கேட்டு, கார்த்திக் பதில் சொன்னதும் அழைப்பை துண்டித்து, மனைவியை பார்த்தான். அவளது சோர்ந்த முகம் பார்த்து எழுந்து வெளியில் சென்றான்.
“இந்தாப்பா புகழு, இம்புட்டு நேரமும் நீ எப்போ வெளில வருவன்னு பார்த்திட்டு இருந்தேன். இதைக் கொண்டு போய் மருமகளுக்கு கொடு” என்று ராஜலக்ஷ்மி நீட்டிய தட்டில் இனிப்பு, கார பணியாரமும், சட்னியும் இருந்தது. அதனோடு அவசர அவசரமாக காஃபி கலந்து நீட்டினார் அவர்.
“அபி தம்பி, அவென் சின்ன பய, என்ன பண்ணியிருந்தாலும் நீ பொறுமையா பேசியிருக்கணும்யா” என்று வடிவுக்கரசி பேரனிடம் சொல்ல, ஒன்றும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்தான் அவன்.
“இதை சாப்பிடு அபி” என்று அவன் நீட்ட, அபிநயா தன் மன எண்ணங்களுடன் போராடி அமிழ்ந்து கொண்டிருந்தாள்.
“கார்த்திக் போல சித்தார்த் ஏன் இல்ல? என்னை தொல்லை பண்ணவனை கார்த்திக் அடிச்சார் இல்ல? ஆனா, சித்தார்த் அவனை எதுவுமே செய்தது கிடையாது. பிளஸ் டூ படிக்கிறான். சின்ன பையன்னு நான் அவன்கிட்ட எதுவுமே சொன்னது கிடையாது. ஆனா, அவனுக்கு வீட்ல நடக்கிறது எல்லாம் தெரியும் தானே? ஊரை விட்டே ஏன் வந்தோம்னு அவனுக்குத் தெரியும் தானே? அப்போவே இப்படித்தான் இருந்தானா? நான் கவனிக்காம தப்பு பண்ணிட்டேனா?”
“அபி, ரொம்ப யோசிக்கிற நீ?” அவள் கையில் காஃபியை திணித்தான்.
“ஒருநாள் அப்பா ஊர்ல இல்லாதப்ப வீட்டுக்கு வெளில ஆள் நடமாட்டம் சத்தம் கேட்டு நான் நைட்டு பயந்துட்டேன். அப்போ கூட சித்து தான் என் கூட இருந்தான். ஆனா, ஏன்னு யோசிச்சு இருக்க மாட்டானா? அப்பத்தா எத்தனை நாள் புலம்பி இருப்பாங்க..”
“அபி காம் டவுண். நான்தான் சின்ன விஷயத்தை பெருசு பண்ணிட்டேன் போல” என்றவனை சடாரென்று திரும்பி முறைத்தாள்.
“எதுங்க சின்ன விஷயம்? அந்த பொண்ணு எவ்வளவு பயந்து போய்ருப்பான்னு உங்களுக்கு தெரியுமா? எனக்குத் தெரியும். அந்த பயம் அவளை இனி யாரையும் நம்ப விடாது”
“சரி பண்ணிடலாம் அபி. நானும், சாமும் பார்த்துக்கறோம். நீ சாப்பிடு” அவளால் சாப்பிடவே முடியவில்லை. மனது கிடந்து உலைக்கலனாக கொதித்தது. காதில் கேட்ட செய்தியை ஜீரணிக்க முடியாதவளுக்கு, எதையும் சாப்பிட முடியும் என்று தோன்றவில்லை.
“சாப்பிடு அபி” என்று கட்டாயப்படுத்தி அவளை உண்ண வைத்தான் புகழேந்தி.
“நான் அந்த பொண்ணை பார்க்கணும்” என்று அபிநயா சொல்ல, அந்நேரம் வெளியில் காளியம்மாள் குரல் கேட்டது.
“அப்பத்தா” என்று அபிநயா சொல்ல, உடனே இருவரும் வெளியில் சென்றார்கள்.
“மன்னிச்சுடுங்க மாப்பிள்ளை.” மகேஸ்வரன் சொல்ல, கைக் கூப்ப போன அவர் கையை தடுத்து பிடித்து இறுக பற்றிக் கொண்டான் புகழேந்தி.
“தப்பு என் மேலதான் மாப்பிள்ளை. அவனை சரியா கண்டிச்சு வளர்க்கலை நான். நம்ம வளர்ப்பு தப்பா போகாதுன்னு அம்புட்டு நம்பிக்கையோட இருந்தேன். அவன் கண்ணுக்கு முன்னாடி நடக்கிறதை பார்த்து பாடம் கத்துப்பான்னு நான் விட்டதுதான் தப்பா போச்சு போல. அபியை பார்த்த நான், அவனை கவனிக்காம விட்டுட்டேன் போல.. என்னை மன்னிச்சுடுங்க”
‘விடுங்க மாமா. சின்ன பையன் தானே? தெரியாம செய்துட்டான்’ என்று எந்த சமாதானமும் புகழேந்தியால் சொல்ல முடியவில்லை. என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றான் அவன்.
“உங்க அத்தை வந்து கத்திட்டு போனதுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் மாப்ள. அவளுக்கு பையன் மேல பாசம் ஜாஸ்தி. அதான் என்னன்னு விசாரிக்காம கூட வந்து கத்திட்டா.. நீங்க மனசுல வச்சுக்காதீங்க. உங்க வீட்லயும் சொல்லிடுங்க. நான் வேணா அவங்ககிட்டயும் மன்னிப்பு…” என்றவரை மேலே பேச விடாமல் தடுத்தான் புகழேந்தி.
“பிளீஸ் வேணாம் மாமா. அத்தையோட கோபம் எனக்கு புரியுது. சித்துவ அப்படி பார்த்ததும் அவங்களுக்கு பதறியிருக்கும்.” என்றவன், “அவனை நான் அடிச்சுருக்க கூடாது. சாரி மாமா” என்று சொல்ல,
“என்ன மாப்பிள்ளை நீங்க? எனக்கு அவனை வெட்டி போடணும் போல ஆத்திரம் வருது. நீங்க என்னன்னா சாரி சொல்லிட்டு இருக்கீங்க?” என்று கோபப்பட்டவரை அமைதியாக பார்த்தான் அவன்.
“நீங்க போன் பண்ணும் போது கார் ஓட்டிட்டு இருந்தேன் மாப்ள. அழகர் கோவிலுக்கு டூரிஸ்ட்டை கூட்டிட்டு போய் இருந்தேன். அங்க போனதும் உங்களுக்கு கூப்பிட்டேன். நீங்க எடுக்கல. இப்போ எங்கம்மா கால் பண்ணவும் தான் வீட்டுக்கு வந்தேன்” வேறென்ன பேசுவது என்று தெரியாமல் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார் மகேஷ்வரன்.
அதுவரை என்ன நடந்தது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த வடிவுக்கரசி, ராஜலக்ஷ்மி இருவரிடமும் நடந்ததை சொன்னார் காளியம்மாள்.
இருவரும் முகத்தில் அதிர்ச்சியை காட்டிக் கொள்ளாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டனர்.
“வேணாம் மாமா. ஏற்கனவே அந்த பையனோட அம்மாப்பாவை கூப்பிட்டு சொல்லியாச்சு. இப்போ நாமளும் போய் நின்னா அந்த பொண்ணு பயந்து தான் போவா. எல்லாம் படிக்கிற சின்ன பசங்க. அவங்களே உணர்ந்து திருந்துற வாய்ப்பு நாம அவங்களுக்குத் தரணும். அந்த பொண்ணு இதை மறக்கணும்னா, நாம இதைப் பத்தி இனிமே அவகிட்ட பேச கூடாது. இந்த லவ், அட்ராக்சன், க்ரஷ் இதெல்லாம் இந்த வயசுல நார்மலா வர்றது மாமா. ஆனா, அதை பிடிக்காதவங்க மேல, வேணாம்னு விலகி போறவங்க மேல திணிக்க கூடாதுனு அவங்களுக்கு புரிய வைக்கணும். அவ்ளோதான். அதுக்கான வயசு இதில்லைனு புரிய வச்சா, சரியான வழில போய்டுவாங்க மாமா”
“நீங்க சொல்றது சரி மாப்ள. ஆனா, ஒரு பொண்ணை பெத்தவனா, அவளை ஒருத்தன் கிட்ட இருந்து காப்பாத்த முடியாம ஊரை விட்டே ஓடி வந்தவனா.. என்னால இதெல்லாம் தாங்கிக்க முடியல..” தளுதளுத்த குரலில் அவர் சொல்ல, “என்ன பேசுறீங்க மாமா? நீங்க ஒரு நல்ல அப்பா. அது உங்க மகளுக்காக நீங்க எடுத்த முடிவு. அதை போய்..” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அப்பாவிற்கு தண்ணீர் கொண்டு வந்து நீட்டினாள் மகள்.
சாதாரணமாகவே மகளை பார்க்கும் போதெல்லாம் மனம் கனியும் அவருக்கு. இப்போது தாய்மையில் நிற்பவளை கண்டு, அவளுக்கான நிறைவான வாழ்க்கை அமைந்து விட்ட நிம்மதியை அந்நிலையிலும் உணர்ந்தார் அவர்.
“அப்பா சித்துவை கவனிக்காம விட்டுட்டேனா அபி? அவனை சரியா வளர்க்கலையா நான்?” அப்பாவின் அந்த குரலே அபியை கலங்கடித்தது.
“இல்லப்பா. நீங்க எங்க ரெண்டு பேரையும் ஒரே மாதிரி தான் நடத்தியிருக்கீங்க.” என்றவளுக்கு அதற்கு மேல் என்ன சமாதானம் சொல்வதென தெரியவில்லை.
“நீங்க மனசை வருத்திக்காம வீட்டுக்கு போங்க மாமா. சித்து இந்நேரம் ரியலைஸ் பண்ணியிருப்பான். அவனை தண்டிக்கிறேன்ங்ற பேர்ல எதுவும் பண்ணிடாதீங்க, பிளீஸ்”
“பெல்ட்டால அடிச்சுட்டேன் மாப்ள”
“ஐயோ. ஏற்கனவே நான் வேற அடிச்சுட்டேன்” என்று மருகியவன், “விடுங்க. இனிமே எதுவும் பண்ணாதீங்க மாமா. திருந்த நினைக்கிறவன் கிட்ட திரும்ப திரும்ப அவன் செய்ததை சொல்லி கண்டிக்கிறது கூட தப்பு தான். அதுனால அவனுக்கு வெறுப்பும், வீம்பும்தான் வரும்.” புகழேந்தி சொல்ல, புரிதலுடன் தலையசைத்தார் மகேஷ்வரன்.
“நீ எதையும் மனசுல போட்டுக்காம நிம்மதியா இரு அபி. உன் புருஷன் வீட்டு மனுஷங்க எல்லாம் சொக்கத் தங்கம். தம்பியை பத்தி நீ யோசிக்காத. அவனை அப்பத்தா பார்த்துக்கறேன். சரியா?” காளியம்மாள் பேத்தியின் முகம் வருடி கேட்டார். அவள் சரியென்று தலையசைக்க வீட்டினரிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள் அவர்கள்.
“என்னத்தா மருமகளே, நீ பெத்த மகராசனை கூட்டிட்டு இன்னும் உங்கம்மா வீட்டுக்கு போகலையா நீ?” என்று எரிச்சலுடன் கேட்டார் காளியம்மாள்.
சித்தார்த் காலைக் கட்டிக் கொண்டு தலை குனிந்து ஓரமாக அமர்ந்திருந்தவன், அப்பாவை பார்த்ததும் ஓடி வந்து, “சாரிப்பா, பிளீஸ் ப்பா. தெரியாம பண்ணிட்டேன்” என்று கெஞ்சினான்.
அவர் எங்கோ பார்த்துக் கொண்டு அழுத்தமாக நிற்க, “அப்பா..” என்று குரல் உடைய அழைத்தான்.
“உன் சாரியை போய் உன்னை நம்பி வந்த அந்த பொண்ணுகிட்ட கேளுடா. உங்கக்காகிட்ட கேளு. உன்னை நம்பி அந்தப் பொண்ணை பார்த்துக்க சொன்ன உங்க மாமாகிட்ட கேளு” என்று கத்தினார் காளியம்மாள்.
“சாரி கேட்கிறது இருக்கட்டும் டா. முதல்ல நீ என்ன பண்ணன்னு உட்கார்ந்து யோசி. உன் ப்ரெண்ட் பண்ணது சரியான்னு யோசி. நீ திருந்தினா போதும். அதை விட்டு உன் சாரியை வச்சு யாரும் நாக்கு வழிக்க முடியாது” என்று கத்தி விட்டு உள்ளே போனார் மகேஷ்வரன்.
அந்த இரவு அப்படியே கடந்துப் போனது. மறுநாள் காலையில் சியாமளாவை கண்டுக் கொள்ளவேயில்லை மகேஷ்வரன். காளியம்மாள் ஓரப் பார்வையில் அவரைப் பார்த்து, “இன்னும் போகலையா நீ?” என்று கேட்டு, அவர் அப்படியே நிற்கவும், “ஊர்ல பல பொம்பளை பிள்ளைங்க வாழ்க்கை நிம்மதி இல்லாம மாறி போக உன்னைய மாதிரி அம்மாங்க தான் காரணம்” என்று குத்தினார்.