அவர்கள் சந்தித்து ஐந்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. அப்படியிருக்கையில் மனைவி அந்த பெண்ணுடன் சேர்ந்து புகைப்படம் எடுப்பதை புகழேந்தி ரசிக்கவில்லை.
அனைவரின் பார்வையும் தங்கள் மேலிருப்பதை கூட மனைவி உணரவில்லை என்று உணர்ந்தவன், “அபி..” என்று அடர்த்தியான குரலில் அழைக்க, கண்களை மட்டும் கணவனை நோக்கி திருப்பினாள் அபிநயா. அவன் கண்களை பார்த்தே அவன் மனதை படித்தவள், அவளது அலைபேசியை அவன் கையில் திணித்தாள்.
திருமண வீட்டில் முதன் முறையாக சந்தித்த பெண்ணை அவளின் அனுமதியில்லாமல் எப்படி புகைப்படம் எடுக்கலாம் என்ற கேள்வி அவன் கண்களில் தெரிய, அபிநயா அலைபேசியை கண் காட்டினாள்.
அவன் பார்க்க அதில் அபிநயா மட்டும் தனியாக பல கோணங்களில் செல்ஃபி எடுத்திருக்க, சட்டென லகுவான புன்னகை அவன் இதழில் படர்ந்தது.
“அந்த பொண்ணு பெர்மிஷன் இல்லாம ஃபோட்டோ எடுக்க மாட்டேன். என்னை என்ன நினைச்சீங்க?” கணவனின் பக்கம் குனிந்து கிசுகிசுத்து, அவனிடம் கோபமாக உதடு சுளித்தாள்.
“உங்களுக்கு குடிக்க எதுவும் கொண்டு வரவா?” என்று கரிசனத்துடன் கேட்ட பெண்ணை திரும்பிப் பார்த்து, “ஹாய், உங்க பேர் என்ன சொன்னீங்க?” என்று கேட்டாள்.
“கண்மணி”
பெயரை புன்னகையுடன் சொன்ன பெண்ணை அபிநயாவுக்கு மிகவும் பிடித்துப் போனது.
“மாப்பிள்ளைக்கு நீங்க சொந்த தங்கச்சியா? இல்ல பெரியப்பா, சித்தப்பா பொண்ணா?”
“சித்தி பொண்ணு” சிரித்த முகமாகவே பதில் வந்தது.
“கல்யாணத்துக்கு உங்க பேரன்ட்ஸ் வந்திருக்காங்க தானே?” என்று அபிநயா கேட்டதும், “அபி, என்ன கேள்வி இது?” என்று கண்டித்தான் புகழேந்தி.
“இல்லங்க, சித்தின்னா கண்டிப்பா வந்திருப்பாங்க தான். இருந்தாலும், சும்மா தெரிஞ்சுக்க கேட்டேன்.” அபிநயா சிரித்து சமாளிக்க பார்த்தாள்.
அதைக் கவனித்த கண்மணி அப்போதும் பொறுப்பாக பதில் சொன்னாள். “அப்பா மட்டும் வரல, அப்பா வேற ஒரு விஷேசத்துக்கு போய் இருக்காங்க. மதியத்துக்கு மேல வந்துடுவாங்க.” என்று அவள் சொன்னதை சரியென்று கேட்டுக் கொண்ட அபிநயா, கணவன் அவள் கையை அழுத்திப் பிடிக்கவும் மேற்கொண்டு கேள்வி கேட்காமல் அமைதியானாள்.
அவளின் ஆர்வத்தை பார்த்து சாமுவேலின் மனைவி கேள்வி கேட்க அவர்களுக்கு, “தம்பிக்கு பெண் பார்க்கும் படலம்” என்று பதில் சொல்லிக் கொண்டிருந்தான் புகழேந்தி.
ஐந்து நிமிடங்கள் அமைதியாய் சுற்றி முற்றி வேடிக்கைப் பார்த்தபடி, சாமுவேலின் மகனுக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தாள் அபிநயா. அதற்குள் கண்மணி அங்கிருந்து எழுந்து சென்று விட, அவளைப் பார்வையால் பின் தொடராமல் கணவனிடம் திரும்பினாள்.
“உங்க ப்ரெண்ட் லவ் மேரேஜ் சொன்னீங்க இல்ல? அந்தக் கதையை சொல்லுங்க கேட்போம்” அபிநயா கேட்க,
“ஸ்டூடண்ட்டை லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருக்கான். அதை விட்டுட்டீங்க அபிநயா” என்று அவளுக்கு எடுத்துக் கொடுத்தான் சாமுவேல். புகழேந்தி தங்களை சுற்றிலும் பார்வையை சுழற்றி விட்டு நண்பனை முறைத்தான்.
“எல்லாம் அவங்கவங்க வேலையை பார்க்கறாங்க புகழ் சார். நாம பேசுறது இந்த சத்தத்தில் கேட்காது” என்று சாமுவேல் சொல்ல, அதற்கும் முறைத்தான் புகழேந்தி.
“இங்க பாரு. இவன் சொல்றதை கேட்டுட்டு நீ என்னை வில்லன் போல நினைக்காத. எனக்கு லவ் மேல எல்லாம் எந்த வெறுப்பும் கிடையாது அபி. காதல்ன்ற பேர்ல கண்டதையும் என்னால அக்சப்ட் பண்ண முடியாது. அவ்ளோ தான்” என்று அழுத்தமாக சொன்னான்.
“ம்ம், அப்போ உங்க ப்ரெண்ட்?”
“அந்த பொண்ணு ஃபைனல் இயர் படிக்கும் போது, ரெண்டு பேருக்கும் பிடிச்சுருக்கும் போல. ஆனா, அப்பவே லவ்னு சொல்லிட்டு காலேஜ்ல பொறுப்பில்லாம சுத்தல அவங்க. அந்த பொண்ணு காலேஜ்ல இருந்து வெளில போற வரைக்கும் எங்க யாருக்கும் அவங்க விஷயம் தெரியவே தெரியாது. பொண்ணு படிப்பு முடிச்சதும் போய் திரும்ப பேசி, அவங்க வேலைக்கு போனதும் காதலிச்சு, அல்மோஸ்ட் மூனு வருஷமா வெயிட் பண்ணி ரெண்டு பேர் வீட்லயும் பேசி சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணியிருக்காங்க. லவ் இப்படி இருக்கணும். சோ ஐ ரெஸ்பெக்ட் தெம். என் காதல் உனக்கு எந்த விதத்திலும் தடையா இருக்காதுன்னு அவன் ப்ரூஃப் பண்ணது பிடிச்சது. காதல்னா இதுதானே? ஒரு நல்ல அன்பு அதைத்தானே செய்யும்?” அபிநயாவின் கைப் பிடித்து அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அவன் சொல்ல, அதற்கு சற்றும் சம்பந்தமில்லா கேள்வியை கேட்டாள் அபிநயா.
“நம்ம கல்யாணம் அரேஞ்சுடு மேரேஜ் தானே?” என்று அவள் கேட்க, ஆம் என்று தலையசைத்தான் புகழேந்தி.
“ஆனா, நீங்க எனக்காக வெயிட் பண்ணீங்க இல்ல? நான் படிப்பை முடிக்க வெயிட் பண்ணீங்க தானே எதுக்காக?” அவளின் கேள்வி கூர்மையாக வர, “அபி, நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லியிருக்கேன். நீ படிப்பை முடிக்கணும்னு நினைச்சேன் நான். அவ்ளோதான். அதுல என்ன தப்பு? இப்போ உனக்கு என்ன சந்தேகம்? அதை கேட்கிற நேரமா இது?” என்று குறுநகையுடன் கேட்டவன் கண்கள் அவளின் மேடிட்ட வயிறில் படிந்து மீள, அபிநயா வெட்கத்தை சிரிப்பில் மறைத்தாள்.
“ஜஸ்ட் கேட்கணும்னு தோனுச்சு” என்று அவள் முணுமுணுக்க, “ரைட், என் பதிலை நான் சொல்லிட்டேன். பொய்யில் இருக்கும் அழகு. உண்மையில் இருக்காது அபி. அதுனால தான் நமக்கு கவிதை பிடிக்குது.” என்றான் புகழேந்தி. அவன் கண்கள் குறும்பில் மின்ன, “ஓ, எனக்கு கவிதையும் பிடிக்காதே” என்று கண் சிமிட்டினாள் அபிநயா.
அவளுக்கு அவனை நன்றாகத் தெரியும். ஆனாலும், இந்த வார்த்தை விளையாட்டு பிடித்தது.
“அக்கா ஜுஸ் எடுத்துக்கோங்க” என்று பணியாளர் ஒருவர் பழச்சாறு நிரம்பிய கோப்பைகளை அவர்கள் முன் நீட்ட, மறுக்கப் போன மனைவியிடம், “குடி அபி. அப்போதான் என்னை கேள்வி கேட்க எனர்ஜி இருக்கும்” என்று கிண்டலாக சொல்லி புகழேந்தி இரண்டு கோப்பையை கையில் எடுத்தான்.
“சாம், நீயும் எடுத்துக்கோ” நண்பனை சத்தமாக அழைத்து சொன்னவன், அபியிடம் ஒன்றைக் கொடுக்க, “நமக்கு மட்டும் ஸ்பெஷலா ஜுஸ் கொடுக்குறாங்களா?” என்று சந்தேகம் கேட்டாள் அபிநயா.
“இல்லைங்க. எல்லோருக்கும் கொடுக்கிறது தான். உங்களுக்கு அவங்க கொடுக்க சொன்னாங்க” என்று பணியாளர் சொல்ல, அவரைத் தொடர்ந்து பார்த்த அபிநயாவின் கண்களில் விழுந்தாள் கண்மணி.
அபிநயாவை பார்த்து புன்னகைத்து, “குடிங்க” என்று கையால் சைகை செய்து காட்டினாள் அவள்.
“தேங்க்ஸ்” என்று உதடசைத்தாள் அபிநயா.
கண்மணி பெரிதாக ஒன்றும் செய்து விடவில்லை. அன்பின் சிறிய வெளிப்பாடு தான். அதுவும் கூட பெரியவர்கள் யாரேனும் சொல்லி செய்திருக்கலாம். இல்லை அவளுக்கே தோன்றியும் இருக்கலாம். ஆனால், அது தான் அபிநயாவிற்கு கண்மணியை பிடிக்க காரணமானது.
மணமக்களை வாழ்த்தி, பரிசு கொடுத்து, புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்னர், அங்கிருந்த கண்மணியிடம் பேசினாள் அபிநயா. அப்படியே அவளின் அம்மாவிடமும் பேசி, அறிமுகம் செய்து கொண்டாள்.
சற்று நேரத்தில் அவர்கள் உணவருந்த செல்ல அங்கும் உறவினர் ஒருவரை பந்தியில் அமர வைக்க வந்தாள் கண்மணி. இவர்களை பார்த்ததும் அழைத்துப் போய் இடம் பார்த்து அமர வைத்தாள்.
“எனக்கு இந்த பொண்ணை ரொம்ப பிடிக்குதுங்க. அம்மாச்சி இந்த கல்யாணத்துக்கு வந்திருக்கலாம்.” என்று அவள் புலம்ப,
“ஒழுங்கா சாப்பிடு அபி” என்று அதட்டினான் புகழேந்தி.
“கார்த்திக் ஊர்ல இருந்திருந்தா அவரையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்” என்று அவள் மீண்டும் சொல்ல, “எதுக்கு?” என்று கேட்டான் அவன்.
“ரெண்டு பேரையும் பந்தியில பக்கத்துல உட்கார வச்சுருக்கலாம் ஐடியா இல்லாத ப்ரோபஸர்” என்று அவள் கிசுகிசுக்க, “அடிங்க..” என்று நாக்கை மடித்தான் புகழேந்தி. உதடு சுளித்தாள் அபிநயா.
“அம்மாச்சி வந்திருந்தா இந்நேரம் அவங்க ரெண்டு பேரையும் பக்கத்துல உட்கார வச்சு, பேச வச்சிருப்பாங்க. கார்த்திக் பக்கத்து இலைக்கு பாயாசம் போட சொல்லியிருப்பார்” உற்சாகத்துடன் அவள் சொல்ல,
“ரொம்ப ஆசைப்பட்டு கனவு காணாத அபி. அன்னைக்கு நான் உன்கிட்ட பேசணும்னு சொல்லவும் தான் அப்பத்தா பிளான் பண்ணி நம்மளை ஒன்னா உட்கார வச்சாங்க. அதையே திரும்ப கார்த்திக்கு பண்ணா அவ்ளோதான். அப்பத்தாவை இல்ல, உன்னை உதைப்பேன். சில மோமென்ட்ஸ் நமக்கு மட்டுமே சொந்தமானது” ரகசியம் போல தான் பேசினான். அதிலும் அந்தக் கடைசி வார்த்தைகளை சொல்லும் போது அவன் குரலிலும், கண்களிலும் வந்த உணர்வு அவளின் உள்ளத்தை தொட்டது.
அவளால் மறக்கவே முடியாத நிகழ்வு. காளியம்மாளிடம், “இவரா மாப்பிள்ளை?” என்று கேட்டு, அவள் திரும்ப, புகழேந்தி அவள் கண்களை பார்த்து புன்னகைத்த அந்த கணம் அவளுக்கு என்றுமே மறக்காது. மனதில் இன்னமும் பசுமையாய் பதிந்திருந்தது அந்தக் காட்சி.
“சாப்பிடுங்க ரெண்டு பேரும்” சாமுவேலின் மனைவி சொல்ல, புன்னகையுடன் உண்ணத் தொடங்கினார்கள்.
அபிநயா வீட்டுக்கு சென்றதும், ராஜலக்ஷ்மி, வடிவுக்கரசி இருவரையும் அழைத்து கதை சொல்லத் தொடங்கி விட்டாள்.
“எனக்கு பொண்ணை பார்க்கணும் போல இருக்கேத்தா, நீ ஃபோட்டோ எதுவும் எடுக்கல?” என்று வடிவுக்கரசி கேட்க, “ஃபோட்டோவா? அப்படி எடுக்கக் கூடாது. அது தப்பு அம்மாச்சி” என்றாள் அபிநயா. அவர் பேரனை திரும்பிப் பார்த்து சிரித்தார்.
“அப்பத்தா..” என்று கோபமாக கத்தினான் புகழேந்தி.
“இவளை கெடுத்து வச்சிருக்க நீ. அந்த பொண்ணு கையை பிடிச்சுட்டு, யார், எவர்னு விசாரணை பண்ணிட்டு இருந்தா தெரியுமா? எல்லாம் உன் டிரெய்னிங் தானே?” என்று அவன் கடுகடுக்க, “ஐயோ, இவன் என்ன சொல்றான் பாரு ராஜி. எனக்கு ஒன்னுமே தெரியாது. நான் எப்பவும் விஷேசத்துக்கு போனோமா, வந்தோமான்னு இருப்பேன். இல்லத்தா அபி? நம்மள போய் என்ன சொல்றான் பாரேன்” என்று அவர் புலம்பி அலுத்துக் கொள்ள, அபிநயா சிரிப்பை அடக்க சிரமப்பட்டாள்.
“ஏய்யா புகழு, உன் தம்பிக்கு காலாகாலத்தில ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணத்தை முடிச்சுடணும். அது நான் நல்லா இருக்கும் போதே நடந்தா…” என்று அவர் நாடகத்தை தொடங்க, “எத்தே, என்ன பேசுறீங்க? அதெல்லாம் உங்களுக்கு ஒன்னும் ஆகாது. உங்க பேரன் ரெண்டு பேரோட புள்ளைங்களையும் நீங்க தான் வளர்க்க போறீங்க.” என்று பின் பாட்டு பாடினார் ராஜலக்ஷ்மி.
“என்ன திடீர்னு டிராக் மாத்துறீங்க?” என்று புகழேந்தி கேட்க, அவன் பேசாதது போல பாவித்து அத்தைக்கு பதில் சொன்னாள் அபிநயா.
“கரெக்ட்டா சொன்னீங்க அத்த. நான் அம்மா வீட்டுக்கு எல்லாம் போகல. எங்க அப்பத்தாவும், நீங்களும் சேர்ந்து என்னை பார்த்துக்கோங்க. அதுக்குள்ள கார்த்திக்கு பொண்ணு பார்த்திட்டா, எனக்கு டெலிவரியானதும் அவரோட கல்யாணத்தை வச்சுக்கலாம். இல்ல?” என்று அவள் திட்டமிட்ட, “ஹேய் அபி, என்ன பிளானிங் எல்லாம் பலமா இருக்கு?” என்று கேட்டான் புகழேந்தி.
“உங்க தம்பிக்கு சீக்கிரம் பொண்ணு பாருங்க ப்ரோபஸர்” என்று அவள் சொல்ல, அம்மா, அப்பத்தா இருவரும் அவனையே பார்த்தார்கள்.
“எப்பா சாமி, ஒன்னுக்கு மூனு நடிகையர் திலகம். உலக மகா நடிப்பு இதெல்லாம்” என்று காற்றில் கையை வீசி கிண்டலாக சொன்னவன், “பொண்ணு..” என்று ஆரம்பிக்க, “அபி சொன்ன பொண்ணு தான். பேர் என்ன சொன்ன அபி? கண்மணி தானே?” என்று ராஜலக்ஷ்மி கேட்க, புகழேந்தி மூவரையும் முறைக்க முயற்சித்து முடியாமல் சிரித்து விட, அவன் சிரிப்பு அவர்களையும் தொற்றிக் கொண்டது.