நண்பனின் தங்கை என்பதால் பெரிதான மெனக்கெடல் இல்லாமல் அவர்களை அணுகி பேசுவது அவனுக்கு எளிதாகவே இருந்தது.
புகழேந்தி நண்பனின் பெற்றோருடன் பேசி, தங்களின் விருப்பத்தை தெரிவித்தான். அவர்களும் ஆர்வமாக இருக்க, அம்மாவிடம் பேச சொல்லி அலைபேசியை நீட்டினான். ஆனால், அதை வாங்கியது அவனது அப்பத்தா. அந்தக் கல்யாண பேச்சு வார்த்தையை புகழேந்தி தொடங்கி வைத்தான். அவ்வளவுதான். பத்தே நாட்களில் வடிவுக்கரசி கோட்டையை கட்டி விட்டார்.
இரண்டு குடும்பங்களும் பேசி, முதலில் அவர்களுக்கு பிடித்து, பின்னர் ஜாதகம் பரிமாறி, பொருத்தம் பார்த்து, அதுவும் பொருந்தி வர, அதன் பின் அனைத்தும் முன்னோக்கி மட்டுமே சென்றது.
இரண்டே வாரங்களில் முறையாக பெண் பார்க்க கிளம்பினார்கள். வீட்டில் நடப்பது எதுவும் அறியாத கார்த்திக், அப்பத்தாவின் அழைப்பின் பேரில் அந்த வார விடுமுறையை கழிக்க, வீட்டிற்கு வந்திருந்தான்.
“புகழ் சார், கறி தோசை சாப்பிடணும் போல இருக்கு. வாங்கித் தர்றீங்களா?” என்று சனிக்கிழமை மாலை கார்த்திக் கேட்க, அவனிடம் கறி தோசையோடு கண்மணியின் புகைப்படமும் கொடுக்கப்பட்டது.
“கார்த்திக் கல்யாணத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க?” அபிநயா கேட்க,
“ஐயோ அண்ணி, நீங்களுமா?” என்று அலறியவன், “இந்த தாய் கிழவி கூட சேராதீங்க, உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்” என்று தீவிரமாக எச்சரித்தான்.
“ஆங்.. வந்துட்டான் கோளாறு சொல்ல.. நாளைக்கு எனக்கு பொண்ணு பிடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணி வை அப்பத்தான்னு வா, அந்த வாய்லயே குத்துறேன்” என்று நொடித்துக் கொண்டார் வடிவுக்கரசி.
“ஏயப்பத்தா, நீ இப்படியெல்லாம் பில்ட்அப் கொடுத்தா நான் மனசு மாறிடுவேன்னு நினைச்சியா? நெவர். சொன்ன சொல் மாற மாட்டான் இந்த கார்த்திக்” என்று அவன் வசனம் பேச, “டேய்..” என்று தம்பியின் தோளில் அடித்தான் புகழேந்தி.
“இந்த அதட்டல், மிரட்டல் எல்லாம் என்கிட்ட செல்லாது புகழ் சார். நான் ஒன்னும் உங்க ஸ்டூடண்ட் இல்ல, தெரிஞ்சுக்கோங்க” என்ற தம்பியை நோக்கி கையை நீட்டி சட்டையை மடித்து விட்டான் புகழேந்தி.
“புகழ் சார், என்ன? அடிக்க வர்றீங்களா..” என்று லேசாக பின்னால் நகர்ந்தபடி கேட்ட கார்த்திக், அண்ணன் சட்டையை மடிப்பதை பார்த்ததும் அசட்டு சிரிப்பு சிரிக்க, “அடிக்க முன்னாடி பயப்படுறான் பாரு” என்று கேலி செய்தார் வடிவுக்கரசி.
அபிநயா தன் கையில் இருந்த கறி தோசை தட்டை கார்த்திக்கின் வலக்கரத்தில் வைத்து, இடக்கரத்தில் புகைப்படத்தை திணித்தாள்.
“அண்ணி என்னது இது? என்ன ஃபோட்டோ? சாப்பிடுற நேரத்துல போய் இதை..” கார்த்திக்கின் குரல் அப்படியே தேய்ந்து போனது. புகைப்படத்தில் ஆணி அடித்தது போல உறைந்து நின்றது அவன் பார்வை.
“ஏலேய் கார்த்தி, உனக்கு இப்போ கல்யாணம் வேணாம்னு உங்கப்பன் கிட்ட சொல்லிடுறேன். சரி தானே?” என்ற வடிவுக்கரசி, “நீ என்ன சொல்றத்தா ராஜி?” என்று அம்மாவிடமும் கேட்க, எதுவுமே அவன் காதில் விழவில்லை.
“கார்த்திக்…” என்று அபிநயா அழைக்க, மெல்ல நிமிர்ந்து பற்கள் தெரிய புன்னகைத்து அனைவரையும் பார்த்தான் கார்த்திக்.
“ரைட், இப்போ பேசுங்க ஆபீஸர்” என்று புகழேந்தி நக்கலாக சொல்ல, “புகழ் சார், அண்ணன் உடையான் படைக்கு அஞ்சான், கேள்வி பட்டதில்லை? அண்ணா நீங்க இருக்கும் போது தம்பி நான் எதுக்கு பயப்பட போறேன். எனக்காக இந்த லேடீஸை நீங்க சமாளிக்க மாட்டீங்க?” என்று கடைசி வாக்கியத்தை கெஞ்சலாக அவன் சொல்ல, பக்கென்று சிரித்து விட்டான் புகழேந்தி.
ஆனால், பெண்கள் கூட்டணி அப்படியொன்றும் எளிதில் உண்மையை உரைக்கவில்லை.
“இதான் பொண்ணு ஃபோட்டோன்னா, எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு” என்று வெட்கத்தை விட்டு கார்த்திக் சொன்ன பிறகே தங்களின் அலப்பறையை நிறுத்தினார்கள்.
“சரிப்பே, நீ பொண்ணு பிடிச்சுருக்குன்னு சொல்லிட்ட இல்ல? பேசி முடிச்சுடுவோம்” என்று அப்பாவியாக சொன்னார் வடிவுக்கரசி.
“நாளைக்கே போய் பொண்ணு பார்த்திட்டு வந்திடுவோம்.” என்ற அபிநயா, “நீங்க என்னத்த சொல்றீங்க?” என்று மாமியாரிடம் கேட்க, “நீ சொன்னா சரித்தா அபி” என்றார் அவர்.
“அப்புறம் என்ன? நாளைக்கு பொண்ணு பார்க்க போவோம். நீ ரெடியா இருய்யா கார்த்தி” என்று வடிவுக்கரசி சொல்ல, “இந்த வாரம் எதுக்கு என்னை ஊருக்கு வரச் சொன்ன தாய்க் கிழவி?” என்று அப்பத்தாவை சந்தேகமாக பார்த்துக் கேட்டான் கார்த்திக்.
“சாப்பிடுங்க கார்த்தி” என்ற அபிநயா அடக்க முடியாமல் சிரிக்க, “குடும்பமா இது?” என்று கத்தினான் கார்த்திக்.
அபிநயா கையை கட்டிக் கொண்டு அவனைப் பார்க்க, “பொண்ணு பேர் என்ன?” என்று பவ்யமாக கேட்டான் அவன்.
“கண்மணி”
“ஓ..” என்று கேட்டவன் அங்கிருந்து மெதுவாக எழுந்து நழுவினான்.
உணவை மென்றபடி, “ஓகே, கண்மணியே..” என்று அவன் மெல்லிய குரலில் பாடியது அனைவர்க்கும் துல்லியமாக கேட்டது.
மறுநாள் திட்டமிட்டபடி பெண் பார்த்து விட்டு வந்தனர்.
கண்மணிக்கும், அவள் குடும்பத்தினருக்கும் கார்த்திக்கை பிடித்து விட, கல்யாண பேச்சு வார்த்தை மிக இயல்பாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது.
பெண்ணுக்கு பூ வைத்து பரிசம் போட தேதி குறித்தார்கள். அதற்கு முதல் அழைப்பு அபிநயா வீட்டிற்கு தான் சென்றது.
அவர்களை முறையாக வரவேற்று உபசரித்த சியாமளாவின் மனதில் மகள் குறித்த கவலை மட்டுமே ஆக்கிரமித்திருந்தது.
அபிநயாவிற்கு தற்போது எட்டாம் மாதம் நடந்துக் கொண்டிருக்க, மகளின் வளைகாப்பு குறித்து அவளின் புகுந்த வீட்டினர் எதுவும் சொல்லவில்லை என்ற வருத்தம் அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
இளைய மகனின் கல்யாணம் பற்றி மகிழ்ச்சியுடன் அவர்கள் திட்டமிட, அவரால் எதுவும் பேச முடியவில்லை. ஆனால், அன்றிரவே மகேஷ்வரன், காளியம்மாள் இருவரிடமும் சண்டையிட்டு, அவர்களை அழைத்துக் கொண்டு மறுநாளே மகளின் வீட்டுக்கு சென்று விட்டார் அவர்.
அபிநயா வழக்கம் போல உபசரித்து, நலம் விசாரித்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.
“அது, பேத்திக்கு இன்னும் வளைகாப்பு பண்ணல. அது பத்தி நாங்களும் உங்ககிட்ட கேட்டு கேட்டு ஓஞ்சுட்டோம். நீங்க இப்போ வரை செரியா ஒரு பதிலே சொல்லாம இருக்கீங்க. அபிக்கு ஒன்பதாம் மாசம் தொடங்கையில வளையல் போட்டு எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்னு இருக்கோம். உங்க தோது சொன்னா..” காளியம்மாள் பேசியது உள்ளே அமர்ந்திருந்த அபிநயாவின் காதில் துல்லியமாக விழுந்தது.
“என்ன அபி உன் பிரச்சனை? முதல் குழந்தைக்கு வளைகாப்பு கண்டிப்பா செய்வாங்கன்னு உனக்குத் தெரியாதா? ஏன் இப்படி அடம் பண்ற?” என்று மனைவியை கேட்டுக் கொண்டிருந்தான் புகழேந்தி.
எட்டு மாத வயிறுடன் அவனை இடித்துக் கொண்டு நின்றாள் அபிநயா. அவளின் இடையில் வலக்கரத்தை சுற்றி அணைவாக பிடித்துக் கொண்டு, இடக் கரத்தால் அவளின் முகத்தை நிமிர்த்தி, “அபி..” என்றான் புகழேந்தி.
அவளின் கண்களை கூர்ந்து, “என்ன?” என்று அவன் கேட்க, “நான் அம்மா வீட்டுக்கு போகல” என்றாள் அழுத்தமாக.
“ரைட்”
“இவ்வளவு நாளா எனக்கு டெலிவரி அங்க தான் பார்க்கணும், அதான் உலக வழக்கம், பழக்கம்னு என்னமோ கதை சொல்லி, அதுனால வளைகாப்பு முடிஞ்சுதும் அம்மா வீட்டுக்கு போன்னு என்னை சொன்னீங்க. இப்போ நான் கேட்டதும் டக்குனு சரின்னு சொல்லிட்டீங்க. எப்படி?” என்று அபிநயா சந்தேகமாக கேட்க,
“இந்தா இருக்கு உங்கம்மா வீடு. எல்லோரும் ஒரே ஊருக்குள்ள தான் இருக்கோம். நீ எங்க இருந்தா என்ன அபி? முதல்ல வளைகாப்பை நல்லபடியா முடிப்போம். ரைட்?”
“ம்ம், ம்ஹூம்” என்று மறுப்பாக தலையசைத்தாள் அபிநயா.
“அபி…” என்று பல்லைக் கடித்தான் புகழேந்தி.
வெளியே காளியம்மாள், “சொல்லுங்க எந்த தேதியில் வைக்கலாம்?” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
வடிவுக்கரசி, ராஜலக்ஷ்மி இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, “நீங்க இப்படி மூஞ்சியை பார்த்துக்கிட்டே இருந்தா, நாங்க என்னதான் நினைக்க? உங்க மனசுல என்ன இருக்குனு சொன்னா தானே எங்களுக்குத் தெரியும். எங்க புள்ளையை, எங்க வீட்டுக்கு அனுப்ப யோசிக்கறீங்களா? நாங்க அவளை நல்லா பார்த்துக்க மாட்டோமா? நீங்க மாப்ளயை கூப்பிடுங்க. நாங்க அவர்கிட்ட பேசிக்கிறோம்” என்று காளியம்மாள் படபடக்க,
“உங்க பேத்திகிட்ட தான் பேசணும் நீங்க.” என்றார் வடிவுக்கரசி.
காளியம்மாள் ஒரு நிமிடம் அதிர்ச்சியுடன் அவர்களைப் பார்த்தார். அவரிடமும் அபிநயா, “வளைகாப்பு அஞ்சாவது மாசமேவா அப்பத்தா வைப்பாங்க? ஏழாவது, ஒன்பதாவது மாசம் தானே பண்ணுவாங்க? ஒன்பது ஓகே தானே?” என்று முன்பு பேத்தி கேட்டது, சாக்கு போக்கு என்று அவருக்கு இப்போது புரிந்தது.
மகேஷ்வரன், மாணிக்கவேலன் இருவரும் உணவு மேஜையில் அமர்ந்து மும்முரமாக எதையோ விவாதித்து கொண்டிருந்தனர்.
காளியம்மாள் தன் பக்கத்தில் இருந்த சியாமளாவை கண்களில் தொக்கி நின்ற கேள்வியுடன் பார்த்தார்.
அந்நேரம் அபிநயா வெளியில் வர, புகழேந்தி அவளின் கையை அழுத்தி, கண்களால் ஏதோ செய்தி சொன்னான்.
பெரியவர்கள் அவர்களிடம் அனுமதி கேட்காமல், வளைகாப்பு தேதி குறித்து விட்டோம் என்று தகவலாக மட்டுமே சொல்ல, புகழேந்தி அமைதியாக கேட்டுக் கொண்டான்.
அபிநயா அம்மாவை வெறித்து பார்த்தாள்.
சியாமளா அவரால் முடிந்த மட்டும் மகளை நெருங்கினார். ஆனால், அவளோ அவரை தள்ளியே நிறுத்தினாள். மகளுக்கு இன்னமும் தன் மேல் கோபம் இருக்கிறது என்று அவருக்கு புரிய, அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தார் அவர்.
அபிநயா அந்த பார்வைக்கும் இறங்கவில்லை. சியாமளா மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனாலும், முன்பு போல அம்மாவிடம் நெருக்கம் காட்ட அபிநயாவால் முடியவில்லை. தானாக ஒரு இடைவெளி அவர்களுக்குள் விழுந்திருந்தது.
“அபி…” என்று மகளை நோக்கி கை நீட்டினார் சியாமளா. அவர் நீட்டிய அந்த சமாதான கிளையை பற்றிக் கொள்ள விரும்பாமல் அப்படியே அசையாமல் நின்றாள் அவள். புகழேந்தி மனைவியின் முதுகில் கை வைத்து அவளை முன்னோக்கி நடக்க உந்தினான். அவனை ஓரக் கண்ணால் முறைத்தாள் அபிநயா.
“பிளீஸ் அபி” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் படி சொன்னான் புகழேந்தி.