அபிநயாவிற்கு அம்மாவை நிரம்ப பிடிக்கும். ம்ம், யாருக்குத்தான் அம்மாவை பிடிக்காது? குழந்தையாக, சிறுமியாக, குமரியாக என எல்லா பருவத்திலும் அம்மாவை அதிகம் தேடியிருக்கிறாள். ஆனால், கிடைத்தது என்னவோ அப்பத்தா தான். அம்மாவிற்கு எப்போதும் ஆண் பிள்ளை தான் பெரிது. மகன் பிறக்கும் வரைக்கும் மகள் மீது பாசமாக தான் இருந்தார். ஆனால், அந்த மகளுக்கு விவரம் புரியும் வயதில், அம்மா தம்பியை தான் அதிகம் கவனித்தார். அபிநயா அதை என்றுமே குறையாக, குற்றமாக நினைத்தது கிடையாது.
அவளுக்குத் தேவையான அன்பு அப்பா, அப்பத்தாவிடம் இருந்து அளவில்லாமல் கிடைத்ததின் விளைவாய் இருக்கலாம்.
சியாமளா மகளை ஒதுக்கியது கிடையாது. அதே நேரம் அவளுடன் அதிகம் ஒன்றியதும் கிடையாது.
அன்பு விசித்திரமானது. அதிகம் நேசித்தவரை வெறுக்க செய்யும். அதுவரை வெறுத்தவரை கண்ணிமைக்கும் பொழுதில் நேசிக்கவும் வைக்கும்.
சியாமளாவிற்கு திருமணமான முதல் வருடமே அபிநயா பிறந்து விட்டாள். “ஓ, பொம்பளை பிள்ளையா?” என்று உறவுகள் ஏளனமாக விசாரித்தாலும் அவர் வீட்டில் மகள் என்றுமே இளவரசி தான். கணவர், மாமியார் என இருவருக்குமே பெண் குழந்தை மீது கொள்ளை பிரியம். ஆக, சித்தார்த் பிறந்த உடன் அபிநயாவை மிக இயல்பாக தன் பக்கம் இழுத்துக் கொண்டார் காளியம்மாள்.
கணவர், மாமியார் என இருவர் மகள் மீது அன்பு செலுத்த, மகனை தான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவருள் வலுத்தது. இயல்பாகவே அவருக்கு மகன் மேல் அதிகப் பிரியம் உண்டு. ஆனால், தற்போது மகளை கர்ப்பமாக காண்கையில் தன்னிச்சையாக அவள் மேல் அன்பு சுரந்தது.
அவர் மருமகனை கோபமாக பேசும் வரை அவர்கள் உறவில் எல்லாம் நல்லபடியாகதான் சென்றது. அன்று மகன் மீது அவர் காட்டிய கண்மூடித்தனமான அன்பும், அதன் விளைவாக ஆத்திரத்தில் மருமகனை கத்தியதையும் இன்றைக்கும் அவர் நினைத்து நினைத்து வருந்துகிறார். அதற்காக மகளிடம் மன்னிப்பு கூடக் கேட்டு விட்டார்.
புகழேந்தி எதையும் மனதில் வைத்துக் கொள்ளவில்லை. எதனாலும் மாறவில்லை அவன் குணம். அதேதான் அபிநயாவிற்கும். அவளும் மாறவில்லை. அம்மாவை கையெட்டும் தூரத்தில் விலக்கியே வைத்தாள் அவள்.
இப்பொழுதும், “அபி..” என்று அவர் மகளை அழைக்க, கணவன் பின்னிருந்து அழுத்தம் கொடுக்கவும் அடியெடுத்து வைத்தாள் அபிநயா.
சற்று முன்னர் கணவன் சொன்னது அவளது முடிவினை மாற்றியிருந்தது.
“இங்க பாரு அபி. உலகத்திலேயே ரொம்ப மோசமான உணர்வு கோபம்தான் தெரியுமா?”
“அப்படியா? முன்னாடி பயம்னு சொன்னீங்க? உங்க இஷ்டத்துக்கு மாத்தி மாத்தி பேசாதீங்க புகழ் சார்” என்று அவள் கோபமாக சொல்ல, “மூச், நான் பேசும் போது ஊடால பேசக் கூடாது” அவள் உதட்டில் ஒற்றை விரல் வைத்து எச்சரித்தான்.
“இது உங்க கிளாஸ் ரூம் இல்ல. நம்ம பெட் ரூம்” அவள் உதட்டில் இருந்த அவன் விரலை வலிக்காமல் கடித்து குறும்பாக சொன்னாள்.
“அபி..” மனைவியை மென்மையாய் அணைத்து கொண்டான்.
“சில விஷயங்கள் லைஃப்ல ரொம்ப முக்கியமானது. உன் கோபத்தை ஓரமா வச்சுட்டு யோசிச்சா உனக்கு அது புரியும். உங்கம்மா மேல இருக்க கோபத்துல அங்க போக மாட்டேன்னு சொல்ற. ஆனா, நல்லா யோசிச்சு பாரு அபி. முதல் ப்ரெக்னன்சிக்கு மட்டும்தான் வளைகாப்பு பண்ணுவாங்க. அப்போ தான் அம்மா வீட்ல போய் ஆறு மாசம் இருக்க முடியும். இன்னைக்கு கோபத்துல அங்க போக மாட்டேன்னு வீம்புக்கு சொல்லிட்டு.. பத்து வருஷம் கழிச்சி யோசிச்சு பார்க்கும் போது உனக்கே வருத்தமா இருக்கும் அபி. உன்னை விடு. உங்கப்பாம்மாவை யோசிச்சு பாரு. உங்க அப்பத்தாவை யோசி. பேத்தி கோபத்துல முதல் பிரசவத்துக்கு அவ மாமியார் வீட்லயே இருந்துட்டான்னு சொல்லி சொல்லி வருத்தப்படுவாங்க தானே? அவங்களை எல்லாம் விட சித்தார்த், அவனால தான் எல்லாம்னு ஃபீல் பண்ணுவான் இல்ல?” மனைவிக்கு புரிய வைத்து விடும் வேகத்தில் படபடவென நீண்ட விளக்கம் தந்தான் புகழேந்தி.
அபிநயா நிதானமாக, “நான் அங்க ஆறு மாசம் இருக்கணுமா?” என்று மட்டும் கேட்க, “அடிங்க, உன்னை..” என்று பல்லைக் கடித்தான் அவன்.
“ம்ம், இந்த குரலுக்கும், நீங்க பேசுற ரஃப் டோனுக்கும் நான் ஒரு காலத்துல பயந்தேன்னு நினைச்சா சிரிப்பு சிரிப்பா வருது. இனிமே பயப்பட மாட்டேன். மனசுல வச்சுக்கோங்க”
அவள் அலட்சியமாக ஓர் பார்வை பார்த்து சொல்ல,
“அதென்ன ஒரு காலத்துல?” என்று முறைத்தான் புகழேந்தி.
“ஒரு வருஷத்துக்கு முன்னாடின்னு வச்சுப்போம்” என்று கண் சிமிட்டினாள். அதில் ஈர்க்கப்பட்டு அவள் கண்களில் உதடுகளை ஒற்றியெடுத்தான்.
“அபி, பிளீஸ். எல்லாரும் வெளில வெயிட் பண்றாங்க. சட்டுனு ஒரு முடிவுக்கு வா. நீ ஓகேன்னு சொல்லாம உன்னை அம்மா வீட்டுக்கு அனுப்ப எனக்கு மனசு வராது. புரிஞ்சுக்கோ”
அவன் அவ்வளவு சொன்ன பிறகு எப்படி மறுப்பாள்?
“ஓகே. நான் அம்மா வீட்டுக்கு போறேன்” என்றாள்.
வீட்டினர் வளைகாப்பு தேதியை முடிவு செய்திருக்க, அம்மாவிடம் சென்று அமர்ந்தாள் அவள்.
“இன்னமும் அம்மா மேல கோபமா தான் இருக்கியா அபி?” சியாமளா குற்ற உணர்வுடன் அந்தக் கேள்வியை கேட்க, “இல்லம்மா” என்றாள் அபிநயா.
“வளைகாப்பு முடிஞ்சு ஒரு வாரம் நம்ம வீட்ல இரு அபி. அதுக்கு அப்புறம் வேணும்னா உன் விருப்பப்படி இங்க வந்திடேன். அப்பாகிட்ட நான் பேசுறேன்.” என்றார் சியாமளா. அம்மா தனக்காக இவ்வளவு இறங்கி வரும் போது அபிநயாவால் கோபத்தை இழுத்து பிடிக்க முடியவில்லை.
அவளின் அமைதியை பார்த்து, “ஐயோ அபி. அம்மா தப்பா சொல்லல. நம்ம வீட்டுக்கு வர வேணாம்னு சொல்றேன்னு நினைக்காத. உன்னை பார்க்கிறதை விட எனக்கு என்ன பெரிய வேலை இருக்கு சொல்லு?” என்று அவர் படபடக்க, “அம்மா” என்றாள் அபிநயா, அழுத்தமாக. அம்மாவை நெருங்கி அமர்ந்து அவரின் கைப் பிடித்துக் கொண்டாள்.
அன்பு விசித்திரமானதுதான். மகளின் அந்த ஒற்றை செய்கையில் சியாமளாவின் கண்கள் பரிதவிப்பு விலகி அந்த இடத்தை பாசம் பிடித்துக் கொண்டது.
“வீட்ல உனக்காக ஒரு ரூமை இப்பவே ஒதுக்கி வச்சுட்டேன் அபி. தம்பி உனக்கு பிடிச்ச மாதிரி எல்லாத்தையும் இடம் பார்த்து அடுக்கி வச்சுட்டான்.” என்று அவர் பேசிக் கொண்டே போக,
சியாமளா மீண்டும் ஏதோ சொல்ல வர, “நார்மலா இருங்கம்மா, பிளீஸ்” என்று புன்னகைத்தாள் அபிநயா.
அதன் பிறகு வேறு விஷயங்கள் பேசினார்கள்.
அவ்வளவு நேரமும் ஒதுங்கி ஓரமாக அமர்ந்திருந்த சித்தார்த் அம்மா, அக்காவிடம் வந்தான்.
அக்காவிற்கு பிடிக்கும் என்று நண்பனின் வீட்டில் இருந்து பறித்து வந்திருந்த அரிநெல்லிக்காய்களை குட்டி பையில் இருந்து கை நிறைய எடுத்து நீட்டினான்.
“தேங்க்ஸ் டா” என்று சிரிப்புடன் வாங்கிக் கொண்டாள்.
“நம்ம பக்கத்து வீட்டு அக்காகிட்ட, அவங்க மரத்தை பார்த்து ஒரு நாள் ஆசையா நெல்லிக்கா கேட்டேன் மா. அதை ஞாபகம் வச்சுட்டு இப்பவும் பார்க்கிற இடத்தில எல்லாம் வாங்கிட்டு வந்து தர்றான். அப்போ எனக்கு மூனு மாசம் மா. இப்போ எட்டாவது மாசம் நடக்குது. எல்லாமே சாப்பிடுறேன்னு இவன்கிட்ட யாராவது சொன்னா நல்லாருக்கும்” தம்பியை பற்றி அம்மாவிடம் ரகசியம் பேசினாள். என்ன வயதானால் என்ன? அம்மா – மகள் உறவு மாறப் போவதில்லையே. எப்போதும் அடிநாதமாய் அவர்கள் உறவில் அன்பு இருக்கத் தானே செய்யும்.
“சித்து ஆம்பிளை பிள்ளை, இதைப் பத்தியெல்லாம் அவனுக்கு என்ன தெரியும்?” என்று கேட்ட சியாமளா, மகளின் பார்வை மாற்றத்தை உணர்ந்து, “இல்ல அபி. நான் அந்த அர்த்தத்தில சொல்லல” என்று பதறினார்.
“எனக்கு புரிஞ்சுதும்மா. நீங்க எப்பவும் போல நார்மலா இருங்க.” என்று அபிநயா சிரிக்கவும் தான் இயல்பானார் சியாமளா.
கார்த்திக்கின் கல்யாணம், அபிநயாவின் வளைகாப்பு என அடுத்தடுத்து வரும் சுப நிகழ்வுகள் குறித்து பேச இரண்டு குடும்பங்களுக்கும் நேரம் போதவில்லை.
அபிநயா சோர்வாக உணர்ந்ததால் தரையில் அமர்ந்து கால் நீட்டிக் கொண்டாள். காளியம்மாள் பேத்தியின் பாதங்களை மென்மையாக பிடித்து விட்டார்.
“அப்பத்தாக்காக வீட்டுக்கு வா த்தா அபி” என்று அவர் கேட்கவும் அவள் மனது இளகிப் போனது.
“இப்படில்லாம் கேட்காத அப்பத்தா. நீ வான்னு சொன்னா, நான் வரப் போறேன்” என்ற அவள் குரல் அங்கிருந்த எல்லோருக்கும் கேட்டது. மகேஷ்வரன் மகளைப் பார்த்து புன்னகைத்தார். அவர் கண்கள் மருமகனை ஒரு நொடி தொட்டு மீண்டது.
மகளுக்கு நிம்மதியான ஒரு வாழ்க்கையை தந்த மருமகனை அன்பும், மரியாதையும், நெகிழ்ச்சியுமாக பார்த்தார் அவர்.
அன்றிரவு வீடு திரும்பிய பின்னரும் அவர்கள் வீட்டில் அபிநயாவின் பேச்சுதான் ஓடிக் கொண்டிருந்தது.
சித்தார்த் தொலைக்காட்சி முன் அமர்ந்திருந்தான். ஆனால், அவன் கவனம் முழுவதும் அம்மா, அப்பத்தா பேச்சில் தான் இருந்தது.
சில மாதங்கள் முன்பு அக்கா அவன் மேல் கோபமாக இருந்தது அவனுக்கு நினைவு வந்தது. அவனிடம் முகம் கொடுத்து பேசாமல் கூட இருந்தாள் அபிநயா. ஆனால், மாமா அப்படியில்லை.
புகழேந்திக்கு கோபம் அந்த நிமிடத்து உணர்வு மட்டுமே. கோபத்தை சுமந்து அலைவது அவனது இயல்பு கிடையாது. அவன் பார்க்கும் வேலைக்கு அது சரியும் வராது. மாணவர்கள் தவறு செய்வது இயல்பு. அவர்களை மன்னிக்க, மறக்க முடிந்தால் மட்டுமே அவனால் நல்லாசிரியராக இருக்க முடியும். தன்னால் இயன்ற அளவில் அவர்களின் தவறை திருத்த முனைவான். அதைத்தான் சித்தார்த் விஷயத்திலும் செய்தான்.
ஒரு பிரச்சினை என்றதும் கோபத்தில் அடித்தான். ஆனால், மறுநாளே அவனை வீடு தேடி வந்து அக்கறையுடன் மருத்துவமனை அழைத்து சென்றதோடு, ஜோசபினிடம் மன்னிப்பும் கேட்க செய்தான்.
இன்று ஜோசபின் அவனை மன்னித்து மீண்டும் நட்பாக பழகுகிறாள். அதற்கு ஒரு வகையில் மாமா தான் காரணம் என்பான் அவன். ஜோசபின் மட்டும் அவனை மன்னிக்காமல் இருந்திருந்தால், அது அவனை உள்ளுக்குள் உடைத்துப் போட்டிருக்கும். அதிக குற்ற உணர்ச்சி அவனை கொன்று போட்டிருக்கும்.
அதிலும், அவனாக வலுக்கட்டாயமாக அக்காவிடம் போய் ஓர் நாள் பேச, முதலில் கோபப்பட்ட அபிநயா, பின்னர் பொறுமையாக பேசினாள். அன்றைய தினம் மொத்தமாக மாறிப் போனான் சித்தார்த்.
இதுநாள் வரை அத்தனை தீவிரமாக எதையும் பார்த்ததில்லை அவன்.
“நீ அப்போ ஸ்கூல் படிக்கிற சின்ன பையன்னு தான் உன்கிட்ட எதுவும் சொல்லல சித்து. எனக்காக நீ அவனை அடிக்கப் போய் பிரச்சனை ஆகக் கூடாதுனு நினைச்சேன். அவன் உன்னை எதுவும் பண்ணிடுவானோனு பயந்தேன்” அபிநயா அதைச் சொன்ன போது, அக்காவின் கண்களை நேராக பார்க்க முடியவில்லை அவனால்.
“எனக்கு நடந்தது யாருக்கும் நடக்கக் கூடாதுன்னு நான் ஒவ்வொரு நாளும் வேண்டிக்கிறேன் சித்து. யோசிச்சு பாரேன், தினம் உன்னை யாரோ ஒருத்தர் ஃபாலோ பண்ணிட்டே இருந்தா எப்படியிருக்கும்? அதுவும் உன் விருப்பமே இல்லாம? உன் பக்கத்துல வந்து பேசுறது, உனக்கு பிடிக்காத வார்த்தைகளை சொல்றது, உன்னை பிடிக்கும்னு சொல்றது.. உன்னால கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியாது டா. ஏன்னா, இங்க நடக்கிற எல்லா தப்புக்கும் பெண்கள் மட்டுமே காரணம். அந்தப் பழிச் சொல்லுல இருந்து நாங்க தப்பிக்கவே முடியாது. காலம் காலமா அதே தான் தொடரும். ஊசி இடம் கொடுக்கலன்னா அப்படினு ஆரம்பிச்சி, முள்ளுல சேலை விழுந்தாலும்னு எல்லாத்துக்கும் பொம்பளை பிள்ளையை தான் குற்றம் சொல்லுவாங்க. அட்லீஸ்ட் நம்ம ஜெனரேஷனாவது மாறும்னு எதிர்பார்த்தா, ப்ச் எதுவுமே மாறல.
அவங்க அடுத்த கட்டத்துக்கு போய்ட்டாங்க. போன், மெயில், சோஷியல் நெட்வொர்க்கிங்னு பொண்ணுங்களை ஹாரஸ் பண்ண புது புது வழிகளை கண்டுபிடிக்கறாங்க”
அபிநயா பேசிக் கொண்டே போக, “அக்கா ஐ ஆம் சாரி” உடைந்த குரலில் மனதார மன்னிப்பு கேட்டான் சித்தார்த்.
“உனக்கு தெரியுமா சித்து? எனக்கு இப்பவும் அந்த பயம் இருக்கு. உன் மாமா, அவங்க குடும்பம்னு நான் ரொம்ப பாதுகாப்பா இருக்கேன். ஆனாலும், எங்க போனாலும் ஒருவித பயமும் ஒதுக்கமும் இருந்துட்டே இருக்கு. வீட்டை விட்டு இறங்கிட்டா தானாவே அந்த பயம் வந்துடுது. அதுவும் என்னை அறியாமயே.
யாராவது யதேச்சையா எனக்கு நெருக்கமா வந்தாலோ, என்னை உத்து பார்த்தாலோ, தெரியாம உரசவோ, இடிக்கவோ செஞ்சா பதறிடுது…” அவள் சொல்லி முடிக்கும் முன்பே, “சாரிக்கா” என்றான் சித்தார்த்.
அப்போது அங்கு வந்த புகழேந்தி, “நீ ஃபீல் பண்ணனும்னு அபி இதை சொல்லல சித்து. அம்மா, அக்கா, ப்ரெண்ட், நாளைக்கு மனைவி, மகள்னு உன்னை சுத்தி பொண்ணுங்க இருந்துட்டே இருக்கப் போறாங்க. உனக்கு அவங்களை புரியணும்னு தான் இதெல்லாம் சொல்றா. உனக்கு புரிஞ்சா உன் ப்ரெண்ட்டுக்கும் நீ சொல்லுவ இல்ல? அதுக்காகத்தான்” என்று சொல்ல, “புரியுது மாமா” என்றான் சித்தார்த்.
புகழேந்திக்கு அலைபேசியில் அழைப்பு வரவும், அங்கிருந்து நகர, கணவனை பார்த்தபடியே,
“உங்க மாமாவோட ரிலேட்டிவ் ஒருத்தவங்களுக்கு தெரிஞ்ச போலீஸ் ஆபீசர்கிட்ட அவனைப் பத்தி சொன்னோம். உனக்குத் தெரியுமா? அவர் இப்போ வரை அவனை கண்காணிச்சுட்டு இருக்கார். உங்க மாமா எனக்கு அதெல்லாம் தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கார். ஆனா, எனக்குத் தெரியும் சித்து” என்றாள் அபிநயா.
“அம்மா சொன்னாங்க கா. அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு இல்லக்கா? நீ இனிமே பயப்பட தேவையில்ல. நான் பார்த்துக்கறேன் கா” சத்தியமாக அந்த வார்த்தைகளை உணர்ந்து தான் சொன்னான் சித்தார்த்.
“தேங்க்ஸ் டா. அந்த பொறுக்கியை பத்தியெல்லாம் நான் யோசிக்கிறது கிடையாது சித்து. ஆனாலும், அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு கேள்வி பட்டப்போ, அப்பாடா தொல்லை ஒழிஞ்சதுன்னு நிம்மதியா இருந்தது தெரியுமா? அது எனக்காக மட்டுமில்ல. என்னை மாதிரி யாரும் அவன்கிட்ட மாட்டிக்க கூடாதுன்னு.. இனிமே மாட்ட மாட்டாங்கன்னு..” அவள் பேசிக் கொண்டே போக புரிதலுடன் தலையசைத்தான் சித்தார்த்.
அடுத்து வந்த சில நாள்கள் அவன் மனதில் அதுவே ஓடிக் கொண்டிருந்தது. அப்போது தான் மாமாவின் கல்லூரியில் அந்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. உடனடியாக புகழேந்தி முன் சென்று நின்றான் அவன்.
“உங்க காலேஜ்ல நடந்த அவேர்னஸ் ப்ரோகிராம் நியூஸ்ல பார்த்தேன் மாமா. அது எங்க காலேஜ்ல நடந்தா நல்லாருக்கும். அதுக்கு நீங்க ஏற்பாடு பண்ண முடியுமா?” என்று கேட்டவன் தோளில் தட்டிக் கொடுத்தான் புகழேந்தி. சித்தார்த்தின் அந்த மாற்றம் அவனுக்கு அத்தனை மகிழ்ச்சியை தந்தது.
“பாரேன். இவ்வளவு யோசிக்கிறியா நீ? சூப்பர் டா” என்ற புகழேந்தி, “உங்க காலேஜ்ல இருந்து ஆல்ரெடி எங்க மேனேஜ்மென்ட்ல பேசியிருக்காங்க. கூடிய சீக்கிரம் அவங்க அரேஞ் பண்ணுவாங்க. உங்க காலேஜ்ல மட்டுமில்ல இன்னும் நிறைய காலேஜ்ல நடக்கப் போகுது” என்றான் புகழேந்தி.
“சரிங்க மாமா. ரொம்ப நல்லது” என்றான் சித்தார்த்.
இயல்பில் அவன் நல்லவன் தான். அங்கே கேடாய் முடிந்தது கூடா நட்பு மட்டுமே. அந்த நண்பனையும் மன்னித்து, அவனையும் நல்வழிப்படுத்தியிருந்தான் அவன்.
“சித்து, டேய் சாப்பிட வா” சியாமளா அழைக்க, நினைவுகள் கலைந்து எழுந்து சென்றான்.