கார்த்திக்கின் வீடு இப்போதே கல்யாண கோலம் பூண்டிருந்தது. ஆனால், அந்த வார விடுமுறைக்கு சோகமாக வீடு வந்து சேர்ந்தான் அவன்.
புகழேந்தி போல விதிகளுக்கு உட்பட்டு வாழ்பவன் அல்ல அவன். வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்பவன். அதற்காக வரைமுறைகளை மீறியதும் கிடையாது.
அவன் பெண் பார்த்து விட்டு வந்த நாளில் இருந்து பெண்ணிடம் பேச முயல்கிறான். கண்மணி அவனை தவிர்க்கவும் இல்லை. அதே நேரம் நெருக்கமான உணர்வையும் அளிக்கவில்லை. அவன் தான் தவித்துப் போனான்.
அவனால் பூ வைத்து பரிசம் போடும் வரை காத்திருக்க முடியும் தான். ஆனாலும், அவனது வயதிற்கே உரிய ஆர்வமும், ஆவலுமாக கண்மணிக்கு அழைத்தான். ம்ஹூம், பெண் பிடி கொடுக்கவில்லை. எங்கே தன்னை பிடிக்கவில்லையோ? பெற்றோர் வற்புறுத்தலினால் தன்னை மணக்க சம்மதித்தாளோ என்று குழம்பி போனான் அவன்.
“என்ன கார்த்திக்? மதுரை பக்கம் மழையடிக்குது?” அபிநயா கிண்டலாக கேட்கவும், சிரித்தான் அவன்.
“உன் சிரிப்பே சரியில்லையே” என்று புகழேந்தி சந்தேகமாக கேட்க,
“உங்களுக்கு இதே வேலை தான் புகழ் சார். சரி, தப்புன்னு எப்பவும் ப்ரோபஸர் மோடுலயே இருங்க” என்று சலித்துக் கொண்டவன், அண்ணியை பாவம் போல பார்த்தான்.
“என்ன கார்த்திக்? ஏதாவது பிரச்சினையா? கண்மணி எதுவும் சொன்னாளா?” என்று அபிநயா சரியாக யூகித்து கேட்க, “பேசவே மாட்டேங்கிறா அண்ணி. இதுல பிரச்சினை எங்கிருந்து வர?” என்று புலம்பினான் கார்த்திக்.
“டேய், பூ வைக்கிற வரைக்கும் வெயிட் பண்ணு டா. அப்புறம் மணிக்கணக்கில் பேசுவ” என்று புகழேந்தி சொல்ல, “புகழ் சார் பிளீஸ். ஐ டோண்ட் ஃபாலோ ரூல்ஸ்.” என்று கடுப்பாக சொன்னான்.
“இப்போ என்ன ரூல்ஸ் ஃபாலோ பண்ண சொன்னாங்க உன்னை? எல்லாத்துக்கும் ஒரு முறை இருக்குடா…” என்று தொடங்கியவனை முறைத்தான் கார்த்திக்.
“பேசாம இருண்ணே.” என்று கார்த்திக் எச்சரிக்க, “என்னடா என்னை மிரட்டுற?” என்று புகழேந்தி எகிறிக் கொண்டு போக, வடிவுக்கரசி பேரன்களின் வார்த்தைப் போரை கவனித்து, “ஏலேய், என்னங்கடா பண்றீங்க? சண்டை போட்டுக்காம ரெண்டு பேரும் எந்திரிச்சு இங்க வாங்க டா.” என்று அதட்டி அழைத்தார்.
இருவரும் ஒருவரையொருவர் முறைத்தபடி அப்பத்தாவிடம் சென்றனர். அவர் சொன்ன வேலையை செய்தார்கள்.
“கண்மணி, உனக்கு கார்த்திக்கை பிடிச்சு தானே கல்யாணத்துக்கு ஓகே சொன்ன? வீட்ல ஃபோர்ஸ் பண்ணலையே?” அபிநயா கரிசனத்துடன் கேட்க, “என்னக்கா இப்படி கேட்கறீங்க? எனக்கு அவர் கிட்ட பேச என்னவோ மாதிரி இருக்கு. இப்பத்தான் வேலையில் சேர்ந்தேன். இவ்வளவு சீக்கிரமா கல்யாணம் எதிர்பார்க்கல. அதான் ஒரு மாதிரி நெர்வஸ்ஸா இருக்கு. ஹாஸ்பிடல், ஹாஸ்டல் ரெண்டும் ஓரளவு பழகுற நேரம், டக்குனு கல்யாணம் முடிவாகி.. புதுசா ஒருத்தர் கூட லைஃப்பை ஷேர் பண்ணனும்னு நினைக்கும் போதே பதட்டமாகுது கா. அப்படியிருக்கும் போது அவர் கால் பண்ணா.. என்ன பேசன்னு தெரியல. உங்களுக்கு புரியுது தானே?” என்று கண்மணி கேட்க,
“அச்சோ சாரி கண்மணி. ஐ அண்டர்ஸ்டாண்ட் யுவர் ஃபீலிங்ஸ்.” என்றாள் அபிநயா.
“கார்த்திக் பத்தி நீங்க கவலைப்படவோ, யோசிக்கவோ தேவையில்லை. உங்க வீட்ல விசாரிச்சு இருப்பாங்க தானே? அவர் ரொம்ப நல்ல பிள்ளை” என்று அவனுக்கு நற்சான்று வழங்கினாள் அவள்.
கண்மணி சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியாக பணிபுரிகிறாள். மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கிறாள்.
“கல்யாணத்தை இப்படி யோசிச்சு பாரு கண்மணி. இனிமே சென்னையில் நீ தனியா இருக்க வேணாம். உன் கூட துணைக்கு ஒருத்தர் எப்பவும் இருப்பார். நீ கொசுக் கடியோட ஹாஸ்டல்ல தங்க வேணாம். மூனு நேரமும் வீட்டு சாப்பாடு சாப்பிடலாம்” என்று அபிநயா அடுக்கிக் கொண்டே போக,
“வீட்டு சாப்பாடு எல்லாம் லிஸ்ட்ல சேர்க்காதீங்க கா. நான் சமைக்குறது எனக்கு சாப்பிட பிடிக்காது.” என்று கண்மணி கடுப்புடன் சொல்ல, “கவலைப்படாத கண்மணி. கை வசம் அதுக்கும் தீர்வு இருக்கு” என்று சத்தமாக சிரித்துச் சொன்னாள் அபிநயா.
“என்ன சொல்றீங்க கா?”
“இங்க பாரு. உனக்கே புரியும்” அலைபேசியை உயர்த்தி பிடித்து பின்னால் காட்டினாள் அபிநயா. அங்கே சமையல் அறையில் நின்று சமைத்துக் கொண்டிருந்தார்கள் புகழேந்தி மற்றும் கார்த்திக்.
“கார்த்திக், என்ன லஞ்ச்?” அபிநயா கேட்க, “அதுவா அண்ணி, மட்டன் பிரியாணி, மட்டன் எலும்பு குழம்பு, மட்டன் சுக்கா, சோறு, பூண்டு ரசம், அவிச்ச முட்டை, வெங்காய பச்சடி. ஆங், அப்புறம் ஸ்வீட் என்ன செய்யலாம்னு யோசிச்சுட்டு இருக்கோம்” என்று தன் கவனத்தை அடுப்பில் வைத்து கார்த்திக் சொல்ல,
“ஸ்வீட் சிம்பிளா ஏதாவது பாயாசம் ஓகே. இல்லனா கேசரி. அதுவும் பைனாப்பிள் எசன்ஸ் போட்ட கேசரி..” கண்மணி சொல்ல, அந்த குரலுக்கு சொடக்கிட்டது போல திரும்பினான் கார்த்திக்.
“புகழ் சார், என் ஆளுக்கு ஒரு பைனாப்பிள் கேசரி பார்சல்” என்று பற்கள் மொத்தமும் தெரிய புன்னகைத்து அவன் கத்த, காணொளி அழைப்பில் இருந்த கண்மணியின் கண்கள் வெட்கத்தில் நிலவாய் தேய்ந்து பின் வளர்ந்தது.
அண்ணி கையில் இருந்த அலைபேசியை எட்டிப் பிடிங்கினான் அவன்.
அவனது அறைக்குள் நுழைந்து, “பைனாப்பிள் கேசரியா? நீ கேட்டு இல்லைனு சொல்வேனா? எல்லாத்துக்கும் ஓகே கண்மணியே தான்” என்றான் மந்தகாச புன்னகையுடன்.
“அதையும் பார்ப்போம்” கண்மணி குறும்பாக சொல்ல, “டீல் சீல்டு கண்மணி. பொதுவா கிஸ்சோட தானே சீல் பண்ணுவாங்க. நாம எப்படி பண்றது?” அவள் கண்களைப் பார்த்து கேட்டான். அதிர்ந்து விழி விரித்தாள் கண்மணி.
“சரி சரி. விடு, விடு. கண்ணே மணியேன்னு கொஞ்ச வசதியா என் மாமனார் உனக்கு கண்மணின்னு பேர் வச்சுருக்கார். உனக்கு பூ வைக்கிற வரை அவரை வீணா கடுப்பேத்த வேணாம்னு பார்க்கறேன். சோ இப்ப கொடுக்க வேண்டிய முத்தத்தை மொத்தமா அப்போ வாங்கிக்கிறேன்”
“கார்த்திக்..” என்ற குரலில் கண்டனத்துக்கு பதில் காற்று தான் வந்தது. “எஸ் கண்மணி” அவளை போலவே அழைத்தான்.
அவள் சிரிப்பும், முறைப்புமுமாக பார்க்க, “ஐ லைக் யூ” என்றான் மென்மையான குரலில். ஒரு மாதம் கழித்து கண்மணிக்கு பூ வைத்து பரிசம் போடும் போது அது, “ஐ லவ் யூ” ஆக மாறியிருந்தது.
அபிநயாவின் பிரசவத்தை கணக்கிட்டு அவளுக்கு குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆகும் போது திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து, திருமண தேதியை குறித்தார்கள் பெரியவர்கள்.
அவ்வளவுதான், கார்த்திகை கையில் பிடிக்க முடியவில்லை. அவனது விடுமுறை நாட்கள் அனைத்தும் கண்மணியுடன் தான் கழிந்தது.
சென்னையை அவளோடு சுற்றினான். பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை காதல் திருமணம் என சந்தேகம் கொள்ள வைத்தான்.
ஆ, அதையெப்படி மறக்க முடியும்? திருமணத்திற்கு முன்னான திருட்டு முத்தத்தின் தித்திப்பை கண்மணியுடன் சேர்ந்து ஓரிரு முறை பரிசோதித்தான். முத்தம் அத்துடன் நிறைவு பெற்றது.
அபிநயாவிற்கு ஒன்பதாம் மாதம் தொடங்கிய ஒரே வாரத்தில் உறவுகளை அழைத்து வளைகாப்பு நடத்தினார்கள்.
தாய்மையின் பூரிப்பில், அது தந்த பூரண அழகில், மேடிட்ட வயிற்றுடன், பட்டும், பூவும், அலங்காரமுமாக நிறைந்த அழகுடன் அமர்ந்திருந்த அபிநயாவை அருகில் அமர்ந்திருந்தாலும் அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தான் புகழேந்தி.
“இருக்கட்டும். என்ன இப்போ? நானென்ன கத்தியா சொன்னேன். ஆமா, அப்படியே கத்தினாலும் என்ன தப்பு? என் பொண்டாட்டி, நான் சொல்லுவேன். எவன் கேட்பான்?” என்று அவன் சத்தமாக கேட்க, அந்நேரம் அங்கு வந்த கார்த்திக், “அதெப்படி ண்ணா? உனக்குன்னு வரும் போது மட்டும் ரூல்ஸ்லாம் இஷ்டப்படி வளைச்சுக்கிற?” என்று சந்தேகம் கேட்டான்.
அண்ணனின் பார்வையை பொருட்படுத்தாமல், “உனக்குன்னு சொல்ல முடியாது. இல்லண்ணா? உன் விஷயத்துல நீங்க எப்பவும் ரொம்ப பயங்கர டெரர் தான். உன் ரூல்ஸ் எல்லாம் அண்ணிக்காக மட்டும் தான் வளையும். இல்லங்க, புகழ் சார்?” என்று அவன் குறுநகையுடன் கேட்க, “உன் வேலையை பார்த்திட்டு போடா” என்று சிரித்துக் கொண்டே தம்பியை திட்டினான் புகழேந்தி.
அபிநயா மனம் கனிய கணவனை பார்க்க, அவளைப் பார்த்து புன்னகைத்து புருவம் உயர்த்தினான் அவன்.
அவளுக்குத் தெரியும். புகழேந்தி அவளை ஆழமாக நேசித்தான். அவனது நேயம் நிஜம். அதற்காகவெல்லாம் நியதிகள் மாறவில்லை.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த கணவனை கண்களால் கட்டிக் கொண்டாள் அபிநயா.
“ஹேய் அபி. கண்ணால கவிதை படிக்காத. அதுவும் இத்தனை பேர் முன்னாடி இருக்கும் போது ஒரு ஹக் கூட பண்ண முடியாது” புகழேந்தி ரகசியம் பேச, வெட்கத்துடன் புன்னகைத்தாள் அபிநயா.
சியாமளா அத்தனையும் தூரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தார். மகளின் மகிழ்ச்சி அவர் மனம் முழுவதும் நிம்மதியை தந்தது. முகம் கொள்ளா புன்னகையுடன் நின்றிருந்தார் அவர்.
அவரோடு நின்றிருந்த அவரின் அண்ணன் மனைவி, மற்றும் உறவுகளின் பேச்சு அவரை கலைத்தது.
“வளைகாப்புன்னா கண்ணாடி வளையல் தானே போடுவாங்க. இங்க பாருங்க கூத்தை. பணம் இருக்குன்னு பவுசை காட்ட தங்க வளையல் போடுறாங்க” சியாமளாவின் அண்ணி சடைத்துக் கொள்ள, அதிர்ச்சியுடன் அவரை திரும்பிப் பார்த்தார் அவர்.
“இவளுக்கு கல்யாணமே ஆகாதுன்னு நினைச்சேன். அப்படி பேர் கெட்டு போய் இருந்தது. என் மாமியார், நாத்தனார் அவ்வளவு கெஞ்சியும் இவளை என் பையனுக்கு கட்டி வைக்கல. இப்போ இவளுக்கு வந்த வாழ்க்கையை பாரேன். அப்படி என்ன பண்ணான்னு தெரியல. ஒத்த ரூபா வரதட்சணை வாங்காம, சீர், செனத்தி எதுவும் வேணாம்னு சொல்லி கட்டிட்டு போனானுங்க. அதுக்கெல்லாம் தனி திறமை வேணும். இவ ஏதாவது பண்ணியிருப்பா..” அவர் சாக்கடையாய் பேசிக் கொண்டே போக, அதை அமைதியாக கேட்டு ஆமாம் சாமி போட்டு தங்கள் பங்கிற்கு குறை சொன்ன உறவுகளை பெருத்த அதிர்ச்சியுடன் பார்த்தார் சியாமளா.
அவர் அங்கிருப்பதை கூட கவனத்தில் கொள்ளாமல், அவர்கள் வீட்டு விஷேசத்தில் வந்து அவர் மகளையே தவறாக பேச இவர்களுக்கு எத்தனை திண்ணக்கம் இருக்க வேண்டும் என்ற குமுறலுடன் அவர்களை முறைத்தார் சியாமளா.
இந்த அண்ணியை நம்பி, இவர் வீட்டுக்கு மருமகளாக மகளை அனுப்பியிருந்தால் மகள் நிலைமை என்னவாகியிருக்கும்? அவரால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
அண்ணன் மகனுக்கு பெண்ணை கொடுக்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில், கோபத்தில் மருமகனை அவர் சரியாக நடத்தியது கிடையாது.
கணவர், மாமியார் என அவர்களிடமும் இதனால் சண்டையும், வாக்குவாதமும் செய்திருக்கிறார். ஆனால், பதிலுக்கு என்ன கிடைத்தது? மகள் செய்யாத தவறுக்கு இன்னமும் அவபெயர் தான் கொடுக்கிறார்கள். இவர்களிடம் மகளை கொடுத்திருந்தால்? நினைப்பே கசந்தது.
“அண்ணி” என்று அவர் சத்தமாக அழைத்து, தன் மனதில் இருந்ததை, முகத்தில் அறைந்தது போல சொல்லி விட்டே அங்கிருந்து நகர்ந்தார் அவர்.
“சொந்தக்காரய்ங்ன்னா அப்படித்தான் இருப்பாங்க சியாமளா. நாமதான் சூதானமா இருந்துக்கணும். வா, வந்து வேலையை கவனி” என்று காளியம்மாள் மருமகளுக்கு அவர் வழியில் ஆறுதல் சொல்லி இழுத்துக் கொண்டு போனார்.
மற்றபடி வளைகாப்பு சிறப்பாக நடந்து முடிய, அபிநயா அம்மா வீடு சென்றாள்.
புகழேந்தி ஏற்கனவே சொன்னது போல அடிக்கடி மனைவியை காண அவள் வீடு சென்றான். அவனோடு, அவன் குடும்பமும் சென்றது. ஆனால், அவன் மட்டும் சமயங்களில் அங்கேயே தங்கியும் விடுவான்.
அன்றைக்கு கல்லூரியில் இருந்து தாமதமாக தான் வீடு வந்தான். பூர்வீக சொத்து ஒன்றில் வில்லங்கம் இருப்பதாக மாணிக்கவேலன் சொல்ல, குடும்பத்தோடு அமர்ந்து அதை பற்றி விவாதித்ததில் அபிநயாவிற்கு அழைக்க மறந்து, இரவு உணவு முடித்து தாமதமாக உறங்கப் போனான்.
அபிக்கு அங்கே தூக்கமே வரவில்லை. உடலில் வினோத உணர்வு. மனது அதிகமாய் கணவனைத் தேடியது. இப்பொழுதெல்லாம் சியாமளா அவளுடன் தான் படுப்பது.
காளியம்மாள் பேத்திக்கு கை வைத்தியம், கஷாயம், மருந்து என்று கண்டிப்பு காட்டிக் கொடுப்பார். மருத்துவர் சொல்லியிருந்தாலும் பேத்திக்கு மீண்டும் மீண்டும் பிரசவ வலி எப்படி இருக்கும் என்பதை அடிக்கடி விளக்கி சொல்வார்.
அவளின் கட்டிலை ஒட்டி தரையில் பாய் விரித்து படுத்திருந்தார் அவர்.
அபிநயா ஒருவித அவஸ்தையுடன் படுக்கையில் எழுந்து அமர்ந்தாள். அம்மா, அப்பத்தா இருவரையும் தொந்திரவு செய்யவில்லை அவள்.
அப்போது தான் ஆழ்ந்த உறக்கத்திற்குள் அமிழ்ந்த புகழேந்தி, அலைபேசி சத்தத்தில் அடித்துப் பிடித்து எழுந்தான்.
“அபி..” பதட்டத்துடன் உயிரை குரலில் தேக்கி அவன் அழைக்க, “வீட்டுக்கு வாங்க” என்றாள். அடுத்த பத்தாம் நிமிடம் அங்கிருந்தான். அவனுக்காக சித்தார்த் கேட்டை திறந்து விட்டான்.
நிறை மாத வயிற்றுடன் முகம் வியர்த்து, கால்கள் தள்ளாட கதவை பிடித்தபடி நின்றிருந்த மனைவியை பார்த்தவனுக்கு உயிர் உறைந்த உணர்வு.
“அபி, என்ன பண்ணுது?”
என்றவன் குரலே நடுங்கியது.
“வலிக்குது. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க”
“அபி, என்ன சொல்ற? வலிக்குதுன்னா எவ்வளவு நேரமா? மாமாவை ஏன் எழுப்பல” என்று அவன் கத்த, சித்தார்த் அதற்குள் அப்பா, அம்மாவை எழுப்பியிருந்தான்.
“இன்னும் ஒரு வாரம் டைம் இருக்கே அபி. அம்மாச்சிகிட்ட சொன்னியா? பால்ஸ் பெயினா இருக்கப் போகுது”
“இல்ல. எனக்கு ரொம்ப வலிக்குது. ஹாஸ்பிடல் போகலாம்” என்று அவன் கையை இறுக பிடித்தாள். அவளை தன் மேல் சாய்த்து மெதுவாக வெளியில் அழைத்து வந்தான் புகழேந்தி.
“உங்களுக்கு பைத்தியக்காரத்தனமா கூட இருக்கலாம். ஆனா, நம்ம குழந்தை வரப் போகுதுன்னு உங்ககிட்ட தான் முதல்ல சொல்லணும்னு நினைச்சேன்.” உயிர் போகும் வலியிலும், கண்கள் கலங்க புன்னகைத்து சொன்னாள் அபிநயா.
“ரைட் அபி. தேங்க்யூ” உணர்ச்சி மிகுதியில் கரகரத்த குரலில் சொன்னவன், மனைவியை அப்படியே கட்டிக் கொண்டான்.
“நான் இருக்கேன் அபி. டோண்ட் வொர்ரி” என்றான்.
அதற்குள் மொத்த குடும்பமும் வெளியில் வந்திருக்க, காலம் தாழ்த்தாமல் மருத்துவமனை விரைந்தார்கள்.