மார்கழி மாதப் பனியின் சில்லிப்பு அனுமதியின்றி அத்துமீறி அறைக்குள் நுழைந்தது. திரைச்சீலைகள் மூடியிருந்தாலும் திறந்திருந்த ஜன்னல் வழியே தென்றல் அறைக்குள் நுழைவது சுலபமாகவே இருந்தது.
படுக்கையில் போர்வைக்குள் புகுந்திருந்த அபிநயாவை குளிர் ஊடுருவ, உடலை சிலிர்த்துக் கொண்டாள். அவள் கரம் அனிச்சையாய் படுக்கையை துழாவியது. பக்கத்தில் மகனை காணவில்லை என்றதும் பெருமூச்சை வெளியிட்டு உறக்கத்தைத் தொடர்ந்தாள்.
கல்லூரி செல்ல குளித்து விட்டு இடையில் துவாலையுடன் வெளியில் வந்த புகழேந்தி கண்களில் அந்தக் காட்சி விழுந்தது. மனைவி குழந்தையை தேடுகிறாள் என்பது தெளிவாக புரிந்தது. ஆனால், அவனுக்கு மனைவியை தேடியதே. குழந்தை வந்த பிறகு அவர்களுக்குள் அன்னியோன்யம் அதிகரித்திருந்தது. அதற்கு நேரெதிராக தாம்பத்யம் குறைந்திருந்தது.
மனைவி பிரசவ வலியில் துடித்து பல மணி நேரங்கள் கதறியது அவன் மனதில் பயமாய் பதிந்து போனது.
அன்று அத்தனை விரைவாக மருத்துவமனை சென்றும் கூட அதிகாலையில் தான் பிறந்தான் அவர்களின் மகன்.
ஆதவன்!
மகனை நினைக்கையிலேயே புகழேந்தி முகத்தில் புன்னகை உதித்தது. மகன் பிறந்த பிறகு மனைவியின் மீதான நேசமும் நிறைவாகி நிறைந்திருந்தது.
மெல்ல திரும்பி மனைவியை பார்த்தான். அபிநயாவின் கரம் இன்னமும் அப்படியே இருக்க, சட்டென அதற்குள் புகுந்துக் கொண்டான் புகழேந்தி.
ஏற்கனவே குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தவளுக்கு தன் ஈர உடலின் வழியே கூடுதலாக குளிரை கடத்தினான் அவன்.
“குளிருதுங்க” அவள் சிணுங்க, இறுக அணைத்து கொண்டான்.
“குழந்தை எங்க?”
“அப்பத்தாகிட்ட போனான். அவனுக்கு எண்ணெய் தேய்ச்சு மசாஜ் பண்ணி விட்டாங்க. அப்புறம் அப்பா கூட மாடியில வாக் போய் இருக்கார் சார்” புகழேந்தி சிரிப்புடன் சொல்ல, அபிநயா அரைக் கண் திறந்து கணவனை பார்த்து புன்னகைத்தாள்.
“அழகி அபி நீ. அதுவும் இப்ப.. பார்க்கவே அப்படி இருக்க..” மோகமும், தாபமுமாக அவள் காதில் கிசுகிசுத்தான்.
“ஆஹான், அப்படியா?”
“ம்ம்..”
“புகழ் சாருக்கு பொண்டாட்டியை இப்பத்தான் கண்ணு தெரியுதோ?” அவன் மார்பில் கை வைத்து தள்ளியபடி அவள் போலி கோபத்துடன் கேட்க, “ஹேய் அபி. என் கண்ணு எப்பவும் உன் மேலதான் இருக்கும்” அவன் மார்பில் இருந்த அவள் கரத்தை எடுத்து தன்னை சுற்றிப் போட்டுக் கொண்டான்.
அவனை மெதுவாய் மென்மையாய் தொட்டு தழுவிய அவள் விழிகளில் மொத்தமாய் விழுந்து முத்தமிட்டான். முத்தம் மோகம் படிக்க, அபிநயாவை புத்தகத்தைப் போல பிரித்தான்.
“நீங்க குளிச்சுட்டீங்க..” அவள் முணுமுணுக்க, “ம்ம், பரவாயில்ல. நீ அழுக்குப் பண்ணு. இன்னொரு முறை குளிச்சுக்கறேன்” ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாக அவள் மேனியெங்கும் முத்தம் வைத்துச் சொன்னான். அவனது மீசை அழுந்தி உரச கூச்சத்துடன் சிரித்தாள் அபிநயா.
மனைவியின் சிரிப்பு அவன் முகத்திலும் பிரதிபலிக்க, அவளின் கண்ணோடு கண் கலந்து, மெய்யோடு உயிர் கலக்க, பள்ளியறை பாடம் படிக்கத் தொடங்கினான்.
அபிநயா உடல் கழுவி வந்து அசதியில் படுக்கையில் பொத்தென்று விழுந்தாள். புகழேந்தி குளித்து கல்லூரி கிளம்பினான்.
அபிநயா சிரிப்புடன் அவனையே பார்த்திருக்க, கண்ணாடியில் மனைவியை பார்த்து என்னவென்று கண்ணால் கேட்டான்.
“இல்ல, உங்க கண்ணு எப்பவும் என் மேல மட்டும்தான் இருக்கும்னு சொன்னீங்க தானே?”
“ம்ம்”
“ஆனா, காலேஜ்ல உங்க மேல நிறைய பேருக்கு கண்ணுன்னு கேள்விப்பட்டேன்? நேத்து கண்மணி உங்களை பார்க்க காலேஜ் வந்தப்போ, ஹேய் இவங்க நம்ம க்ரஷை தேடுறாங்கன்னு பொண்ணுங்க சொல்லியிருக்காங்க?” என்று அவள் கண்ணை சுருக்கி முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு விளையாட்டாக கேட்க,
“எங்க வச்சு என்ன பேசுற அபி?” என்று அதட்டினான் புகழேந்தி.
“இங்க உனக்கும் எனக்கும் மட்டும்தான் இடமிருக்கு. வேற யார் பேச்சும் இங்க வரக் கூடாது” அழுத்தமாக சொன்னான். அவள் முகம் திருப்ப, “சாரி. பட் மனசுல வச்சுக்கோ” என்றவன், “ஸ்டூடண்ட்ஸ் அப்படித்தான் இருப்பாங்க. அது ஒரு மாதிரி அந்த வயசில் வர்ற ஈர்ப்பில் சொல்றது. அதையெல்லாம் சீரியஸா எடுக்கக் கூடாது. அப்புறம் நான் அதை என்கரேஜ் பண்றதும் கிடையாது” என்று முடித்தான்.
“ம்ம்” என்ற அபியின் பக்கத்தில் சென்று அமர்ந்து, “பொறாமையா அபி?” என்று குறுநகையுடன் அவன் கேட்க, “ச்சே, இல்லையே” என்றவளுக்கு சிரிப்பு வந்து விட்டது.
எட்டி அவனை இழுத்து அணைத்து உதட்டில் ஆழமாக முத்தமிட்டு விலகினாள் அபிநயா.
“நீ தூங்கு. நான் காலேஜ் கிளம்பறேன்.”
“குழந்தையை தூக்கிட்டு வந்து என்கிட்ட விட்டுட்டு போங்க. என்னைத் தேட போறான்”
“அவன் அழுதா அம்மா, அப்பத்தா பார்த்துப்பாங்க அபி. நீ தூங்கு” என்று கண்டிப்பாக சொன்னவன், “வெளில போகணும்னு சொன்ன அபி? எப்போனு டைம் சொல்லு. நான் கால் பண்றேன். அப்போ எழுந்து கிளம்பினா போதும்” என்று முடித்தான்.
“தெரியல. கண்மணிக்கிட்ட கேட்கணும். நீங்க காலேஜ் போங்க. நான் பார்த்துக்கறேன். எனக்கு இன்னைக்கு ஆபீஸ் வொர்க் வேற இருக்கு. பத்து மணிக்கு நான் லாகின் பண்ணனும்” என்று புலம்பியபடி போர்வையை இழுத்து போர்த்தி அபிநயா கண்களை மூட, “ரைட் அபி. வண்டியை பார்த்து ஓட்டு. சரியா?” என்றான் புகழேந்தி.
“ம்ம், கவனமா இருப்பேன்”
“ரைட்” என்றவன், அறையை விட்டு வெளியேறினான்.
அபிநயா கர்ப்பமாக இருக்கும் போதே வேலையை ராஜினாமா செய்யும் முடிவெடுத்து விட்டாள். ஆனால், புகழேந்தி விடவில்லை.
அவளுக்கு அலுவலகத்தில் பேறுகால விடுமுறை ஆறு மாதங்கள் கிடைக்கும் என்பதால், அதன் பின்னர் முடிவெடுக்கலாம் என்று சொல்லி விட்டான். ஆக, ஒன்பதாம் மாத இறுதியில் இருந்து விடுமுறை எடுத்துக் கொண்டாள் அவள்.
ஆதவன் பிறந்த ஒரு மாதத்திலேயே கார்த்திக்கின் திருமணத்தை காரணம் காட்டி புகுந்த வீடு திரும்பி விட்டாள்.
அதில் அவளின் பெற்றோருக்கு அதிக வருத்தம் உண்டு. காளியம்மாள் அப்படி வருந்திக் கொண்டிருப்பவர் கிடையாதே. பேத்தியோடு அவளின் புகுந்த வீட்டிற்கு அவரும் வந்து விட்டார்.
காளியம்மாள், வடிவுக்கரசி, ராஜலக்ஷ்மி என மூன்று மூத்த பெண்மணிகள் அபிநயாவையும், ஆதவனையும் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டனர்.
குழந்தைக்கு நாலு மாதமாகும் போது தான் காளியம்மாள் அவர் வீடு சென்றார்.
ஆறு மாத விடுமுறை முடிந்து அபிநயா அலுவலகம் செல்கையில் ஐந்து மாத ஆதவனை வீட்டில் விட்டுப் போவதற்குள் அவனை விட அதிகமாக அவள் தான் அழுதிருந்தாள்.
“என்னால இவனை விட்டு இருக்க முடியாது. அதுக்கு நான் வேலையை விட்டுடுறேன்” என்று அவள் சொல்ல, மனைவியின் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களுக்குள் பார்த்து, “வொர்க் ஃப்ரம் ஹோம் கேளு அபி” என்றான் புகழேந்தி.
அபிநயா அன்று அலுவகத்தில் அதையே கேட்க அவர்களும் சம்மதித்து அனுமதித்தார்கள்.
இப்போது வீட்டில் இருந்து தான் வேலை செய்கிறாள். தேவைக்கு ஏற்ப மாசத்தில் ஓரிரு நாள் அலுவலகம் சென்று வருகிறாள்.
அவள் கனவுகள் கலையாமல் நனவானதற்கு அவள் கணவன் முக்கிய காரணம்.
கணவனின் தலையணையை இழுத்து அவள் அணைக்க, “அபி அப்புறமா வச்சுக்கலாம்” என்று அவள் காதில் கிசுகிசுத்து, அவளுக்கு பக்கத்தில் ஆதவனை படுக்க வைத்தான்.
“ம்மா..” என்று முண்டிக் கொண்டு வந்த மகனை அணைத்து, கணவனை பார்த்து கண் சிமிட்டினாள் அபிநயா.
மனைவி, மகனை பார்த்து புன்னகைத்து அறையை விட்டு வெளியில் வந்தான் புகழேந்தி.
“டேய் கார்த்திக். எனக்கு நடுவுல ஆஃப் பாயில் இருக்க ஆப்பம் வேணும்” என்று அடுப்படியில் ஆர்டர் போட்டு கொண்டிருந்தாள் கண்மணி.
“உன் அலப்பறை ரொம்ப ஓவரா போகுது கண்மணி. நீ பணியாரம் தானே கேட்ட? அதான் அம்மா செஞ்சு வச்சிருக்காங்க இல்ல?” என்று கார்த்திக் கடுப்புடன் கேட்க,
“ம்ஹூம், எனக்கு இப்போ முட்டை போட்ட ஆப்பமும், வெள்ளை குருமாவும் வேணும்” என்று அடமாக சொன்னாள் கண்மணி.
“அடியேய்..” கார்த்திக் பல்லைக் கடிக்க, “கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாத்துக்கும் ஓகே கண்மணியே சொல்வேன்னு சொல்லி, என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்ட நீ. ப்ராடு பய கார்த்தி.” என்று பதிலுக்கு அவளும் பல்லைக் கடிக்க, அதைக் கேட்டபடியே உணவருந்த வந்த புகழேந்தி, அவர்களுக்கு இடைஞ்சலாக செல்ல விரும்பாமல் உணவு மேஜையின் முன் அமர்ந்து விட்டான்.
“அம்மா..” என்று குரல் கொடுத்து விட்டு, அவன் தனக்குத்தானே பரிமாறி உண்ணத் தொடங்க,
உள்ளே, “டேய் கார்த்தி.. உன் மேல கொல காண்டுல இருக்கேன்” என்று கத்தத் தொடங்கிய கண்மணி, புகழேந்தி குரல் கேட்டு அப்படியே வாய் மூடிக் கொண்டாள்.
சமையல் அறையில் இருந்து வெளியில் வந்தவள், “புகழ் மாமா, என்ன தனியா உட்கார்ந்து சாப்பிடுறீங்க? இருங்க, உங்களுக்கு நான் வைக்கிறேன்” என்று அவன் தட்டில் சட்னி வைக்க, “நீங்களும் சாப்பிட வாங்க” என்று தம்பியையும் சேர்த்து அழைத்தான் புகழேந்தி.
“நானும், கார்த்தி மாமாவும் அப்போவே சாப்பிட்டுட்டோம்” என்று கண்மணி சொல்ல, அந்த கார்த்தி மாமாவை கேட்டதும் கார்த்திக்கிற்கு அப்படியொரு சிரிப்பு. புகழேந்தி சிரிப்பை உணவோடு சேர்த்து விழுங்கினான்.
“நீ நல்லா சிரிண்ணே” கார்த்திக் அண்ணனை பார்த்துச் சொல்ல, “போய் வேலையை பாருடா” என்று அதட்டினான் புகழேந்தி.
“அதான் மாமா சொல்லிட்டாங்க இல்ல? வாங்க கார்த்தி மாமா, போவோம்” என்று கணவனின் கைப் பிடித்து உள்ளே இழுத்துப் போனாள் கண்மணி.
தம்பியை பார்த்து, ஏன் தன்னையும் சேர்த்தே கவனித்து, திருமணமும், அப்பா எனும் பதவியும் ஆணை எப்படி மாற்றி விடுகிறது என்று நினைத்து புன்னகைத்தபடி உணவில் கவனம் செலுத்தினான் புகழேந்தி.
***
“குட்டி பையன் கண்ணுக்குள்ளயே இருக்கான். அவங்களை பொங்கலுக்கு இங்க கூப்பிட்டு இருக்கலாம். உனக்கு மக மேல அக்கறையே இல்ல” காளியம்மாள் கத்திக் கொண்டிருந்தார். சியாமளா அவரைப் பொருட்படுத்தாமல் காலை உணவை மகனுக்கு பரிமாறிக் கொண்டிருந்தார்.
“இந்தா ஏய் சித்தார்த்தே, உன் ஆத்தாக்கு காதும் அவுட்டாகிடுச்சா டா? ஒரு பெரிய மனுஷி கேள்வி கேட்டா ஏதாவது பதில் சொல்றாளா பாரு” என்று அவர் பேரனை பார்த்து கத்த, “பேசாம இரு அப்பத்தா. இன்னைக்கு எங்க காலேஜ்ல பொங்கல் செலிபரேசன். என் மூடை கெடுக்காம பேசாம இருந்தீன்னா சாயந்திரம் வந்து உன்னை அக்கா வீட்டுக்கு கூட்டிட்டு போவேன்” என்று பேரம் பேசினான் பேரன்.
“போடா போக்கத்தவனே. பேத்தி வீட்டுக்கு நானே போய்ப்பேன். எனக்கு தெரியாது பாரு” என்று அதற்கும் சடைத்தார் அவர்.
“உங்க பேத்தி வீட்டுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி தானே போய் பொங்கல் படி கொடுத்துட்டு வந்தோம் அத்த? நேத்து கூட குட்டி பையனை மாப்பிள்ளை கூட்டிட்டு வந்தார் இல்ல? நல்லா செல்லம் கொஞ்சினீங்களே?” சியாமளா கேட்கவும், “அடியாத்தே..” என்று அங்கலாய்த்தார் காளியம்மாள்.
“என் பிள்ளைக்கு பொங்கல் சீரு கொடுத்ததையும், நான் குட்டி பயலை, என் காளான்கண்டை (காளையின் கன்று) கொஞ்சுனதையும் இப்படி சொல்லி காட்டுறாளே. கண்ணு போட்டுட்டா.. பிள்ளைகளுக்கு சுத்தி போட சொல்லணும்” என்று காளியம்மாள் புலம்ப, மாமியாரை முறைத்தார் சியாமளா.
“நல்லா பெரிய பூசணிக்காயா வாங்கி, சுத்தி அதை அம்மா மண்டையில போடு அப்பத்தா” சித்தார்த் சிரிப்புடன் சொல்ல, “சித்து, அப்படி பேசக் கூடாது” என்றபடி அங்கு வந்த மகேஷ்வரன் முகத்திலும் அவர்களின் பேச்சில் விளைந்த சிரிப்பு வாடாமல் இருந்தது.
“உன் பொண்டாட்டியை பாருய்யா. இப்பவே மகளுக்கு பொங்கல் சீரு குடுத்ததை எல்லாம் சொல்லி காட்டிட்டு இருக்கா. பொண்ணை கட்டிக் கொடுத்தா அத்தோட முடிஞ்சதா? வருசாவருசம் இதெல்லாம் தவறாம செய்யணும். இந்தாடா சித்து, அபிநயா உன் கூட பிறந்தவ, எங்க காலத்துக்கு பின்னாடியும் அவளை நீ தான் பார்த்துக்கணும்” வயது கூட கூட பாசமும், அதனால் வரும் அக்கறையும் அன்பும் கூடித் தான் போகிறது.
“என்னம்மா நீங்க? இப்ப எதுக்கு இந்த தேவையில்லாத பேச்சு. சித்து, அபி ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் நல்லா பார்த்துப்பாங்க. அதை நீங்களும் கூடவே இருந்து பார்க்கத் தானே போறீங்க” என்று மகேஷ்வரன் தாயை தேற்ற, “ம்ம்” என்று பெருமூச்சு விட்டார் காளியம்மாள்.
“உங்க பேத்தி எள்ளு இடிச்சு கேட்டா இல்ல? போய் அதைச் செய்ங்க அத்த. சாயந்திரம் எடுத்துட்டு போய் அவ வீட்ல கொடுத்துட்டு வரலாம்.” என்று சியாமளா சொல்ல, “ஆமா மறந்தே போனேன், பார்” என்ற காளியம்மாள், “நீயும் சாப்பிட்டு வா. சேர்ந்தே செய்வோம்” என்று எழுந்து கொண்டார்.
அவர் எழுந்த வேகத்தில் அப்படியே நின்று மகனை பார்க்க, “என்னம்மா?” என்று கரிசனத்துடன் கேட்டார் மகேஷ்வரன்.
“இந்த வீட்டை அபி பேருக்கு எழுதி வைக்கப் போறேன். நீ சென்னை வீட்டை சித்தார்த் பேருக்கு எழுதிடுப்பா. ஊர்ல இருக்க கரிசக்காடு, தோட்டம் எல்லாத்தையும் ரெண்டு பேருக்கும் சரிசமமா பிரிச்சு எழுதிடலாம். என்னப்பா சொல்ற?” என்று கேட்க, திடீரென்று அந்த பேச்சை எதிர்பார்த்திராத மகேஷ்வரன் ஒரு கணம் திகைத்து பின் மனைவியின் முகத்தை பார்த்து விட்டு, “சரிம்மா செய்யலாம்” என்று சம்மதம் சொன்னார்.
அபிநயா சென்னை செல்லவே பிரியப்படவில்லை. அவள் மனது புரிந்தவர்களாக அந்த வீட்டை சித்தார்த் பெயருக்கு எழுதி வைக்க முடிவு செய்தார்கள். நாளை அந்த வீட்டை அவன் விருப்பப்படி என்ன வேண்டுமாலும் செய்துக் கொள்ளலாம் என்று விட்டார்கள் பெரியவர்கள். மற்ற சொத்துக்களை இரண்டு பிள்ளைகள் பெயரிலும் பிரித்து எழுதுவது என்று முடிவானது.
அதைப் பார்த்து, “இந்த முறைப்பெல்லாம் என்கிட்ட வேலைக்கு ஆகாது” என்று அவள் உதடு சுழிக்க, “அடியேய் கிச்சன்ல வச்சு டேய் கார்த்தின்னு கத்துற? அம்மா, அப்பத்தா யாராவது வந்தா என்னாகியிருக்கும்?” கார்த்திக் கோபமாக கேட்டு முடிக்கும் முன், “ஒன்னும் ஆகியிருக்காது” என்று இடுப்பில் கை வைத்து சொன்னாள் கண்மணி.
“அத்த குட்டிப் பையன் துணியை காயப் போட மாடிக்கு போனாங்க. அம்மாச்சி நம்ம தெரு கடைசி வீட்ல எனக்கு புளியங்காயும், நெல்லிக்காயும் பறிக்க போய் இருக்காங்க. மாமா வேலைக்கு போயாச்சு” என்று அவள் நீட்டி முழக்க, அந்த புளியங்கா, நெல்லிக்காவில் தேங்கி நின்று போனான் கார்த்திக்.
அவன் கண்கள் மனைவியின் மேடிட்ட வயிற்றில் அழுத்தமாக படிந்தது. கர்ப்பத்தை காரணம் காட்டி அவள் செய்யும் அத்தனை அடாவடித்தனங்களையும் பொறுத்துப் போகும் அவனைப் பார்க்கையில் அவனுக்கே ஆச்சரியமாக இருக்கும்.
ஏனோ அவனுக்கு கோபமே வந்தது கிடையாது. திருமணம் சார்ந்த அனைத்தும், குழந்தை, அதன் வளர்ப்பு, பொறுப்பு ஆகியவை தம்பதிகள் இருவரையும் சாரும் என்பது அவன் அண்ணனைப் பார்த்து கற்றுக் கொண்ட பாடம். அதை தெளிவாக பின்பற்றினான் கார்த்திக்.
கண்மணி தற்போது நான்கு மாத கர்ப்பம். இருவரும் பொங்கலுக்கு விடுமுறை எடுத்து வீடு வந்திருந்தார்கள்.
“நீ கார்த்தி மாமான்னு சொல்றது கேட்கவே கிக்கா இருக்கு கண்மணி. அப்படியே கூப்பிடேன்.” மனைவியின் இடையில் கைக் கோர்த்து நெருக்கமாக இழுத்து கார்த்திக் கெஞ்சலாக கேட்க, “மாட்டேன்” என்று மிஞ்சினாள் கண்மணி.
“பிளீஸ்..” என்று கெஞ்சியவன் அவளைக் கொஞ்சத் தொடங்கினான். அவள் கழுத்தில் முகம் புதைத்து மீசை உரச முத்தம் வைத்தான்.
கண்மணி கிளுக்கி சிரிக்க, இதழ்களில் மென்மையாய் முத்தமிட்டான்.
அவள் சிணுங்கி சில கணங்களில் அவனது கட்டுப்பாட்டுக்கு வந்திருந்தாள். “கார்த்தி மாமா” ஒவ்வொரு வார்த்தையாக உச்சரித்தாள்.
“ஓகே கண்மணியே” முத்தத்தால் ராகம் இழுத்தான் கார்த்திக். அவன் காதலில் கரைந்தாள் கண்மணி.