அபிநயா தோழியுடன் பேசிக் கொண்டே வீட்டுக்குள் செல்ல, “சீக்கிரம் வந்துட்டத்தா அபி. ரெண்டு பேரும் சாப்பிடுறீங்களா?” என்று கேட்டார் காளியம்மாள்.
“இன்னைக்கு பாதி நாள்னு, நான் நேத்தே சொன்னேன் அப்பத்தா. நீங்க கவனிக்கல போல” அபிநயா சொல்லவும், “அப்படியாத்தா, மறந்துட்டேன் போலவே. சரி விடு. சோறு போடவா?” என்று அவர் மீண்டும் கேட்க,
“காலேஜ்ல பொங்கல் சாப்பிட்டதே ஃபுல்லா இருக்கு பாட்டி.” என்றாள் ஷபானா.
“சரி, சரி. அப்போ மோரு தர்றேன். குடிங்க” என்று அவர் உள்ளே நகர, அபிநயா அசதியுடன் சோஃபாவில் சரிந்தாள்.
மனதின் சோர்வு உடலை அதீதமாக தாக்கியிருந்தது. சற்று முன்னர் நடந்ததை அப்பத்தாவிடம் சொன்னால் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு சென்று விடுவார்.
இதற்கு முன்பும் சண்டையிட்டிருக்கிறார் தான். அவன் சட்டையை பிடித்து மிரட்டியும் இருக்கிறார். ஆனால், எதையும் சட்டை செய்யவில்லை அவன்.
இப்படியே பின் தொடர்ந்து தொல்லைக் கொடுத்தால் பெண்ணை பெற்றவர்கள் ஊருக்கு பயந்து, பெயர் கெட்டு விடும் என பயந்து, அவனுக்கே திருமணம் செய்து கொடுத்து விடுவார்கள் என்பது அவனது எண்ணமாக இருக்கும் என்பது அவர்களின் கணிப்பு.
மாறாக அவனது கணக்கு வேறாகவும் இருக்கலாம். காதல் என்று கண்ணாமூச்சி ஆட்டம் காண்பித்து, அவள் வலையில் சிக்கிய பின்னர் விளையாடிப் பார்க்கவும் நினைத்திருக்கலாம்.
“என்ன அபி யோசிக்கிற?” ஷபானா கேட்க, அபிநயாவிடம் இருந்து பெருமூச்சு மட்டுமே வெளிப்பட்டது.
காளியம்மாள் அவர்களுக்கு மோர் கொண்டு வர, அதை வாங்கி மௌனமாக பருகினார்கள்.
“நான் கொஞ்ச நேரம் படுக்குறேன் அப்பத்தா, நீங்க சாப்பிடுங்க” என்று அபிநயா எழுந்து கொள்ள,
“சரித்தா” என்றவர், “டீவில எனக்கு பழைய படமா வச்சுக் கொடேன்” என்று ரிமோட்டை நீட்ட, அவர் கேட்டதை செய்து விட்டு அறைக்குள் நுழைந்தாள் அபிநயா.
“நான் வீட்டுக்கு போய் தலையை காட்டிட்டு வந்துடுறேன் அபி. நீ தேவையில்லாம யோசிக்காத. படுத்து தூங்கு” என்று சொல்லி ஷபானா அவள் வீட்டுக்குச் செல்ல, அபிநயா மெல்ல தலையசைத்தாள்.
தோழி வெளியேறியதும் உடை மாற்றி முகம் கழுவி, படுக்கையில் வந்து அமர்ந்தாள்.
கல்லூரிக்கு செல்லும் போது அணைத்து வைத்திருந்த அலைபேசியை உயிர்ப்பித்து அம்மாவிற்கு அழைத்து அப்பாவிடமும் பேசி விட்டு வைத்தாள்.
மறுநாள் அதிகாலை பெற்றோர் வீடு வந்து விடுவார்கள் என்பதே அவளுக்கு நிம்மதியை தந்தது.
“அபி, நாலு நாள் லீவுக்கு எங்க போகலாம். ஏதாவது பிளான் இருக்கா?” ஷபானா அறைக்குள் வந்து கதவை லேசாக மூடி வைத்தபடி கேட்க, அவளை கண்ணைச் சுருக்கி பார்த்தாள் அபிநயா.
“அந்த எருமை கண்ணுல மிளகா பொடியை தூவிட்டு போகலாம் அபி. ஏதாவது புதுப்படம்? இல்லனா மால் போவோமா?” அவள் கேட்க, அபிநயா அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“என்ன அபி?” அவளின் தோளை தொட்டு உலுக்கினாள் ஷபானா.
“என் மைண்ட் அப்படியே ஃப்ரீசாகிடுச்சு ஷபா. நாளைக்கு அப்பாம்மா வரட்டும். அப்புறம் யோசிக்கலாம்”
“நாளைக்கு அப்பா வந்து மட்டும் என்ன செஞ்சுட போறார் அபி? எப்பவும் போல போய் அவனை மிரட்ட போறார். அவன் இந்த காதுல வாங்கி, அந்த காதுல விட்டுட்டு திரும்பவும் உன் பின்னாடி வரப் போறான். இதுல எதுவும் மாறப் போறதில்ல” ஒருவித கோபத்துடன் அவள் சொல்ல, அபிநயாவின் கண்கள் கலங்கியது. அது எதுவும் செய்ய இயலாத கையாலாகாத தனத்தினால் வந்த கண்ணீர்.
“சாரி அபி” ஷபானா வருத்தத்துடன் சொல்ல,
“எனக்கு உண்மையா என்ன பண்ணன்ணு தெரியல ஷபா. காலேஜ் லைஃப் எப்படியெல்லாமோ இருக்கும்னு கற்பனை பண்ணியிருந்தேன். இந்த பொறுக்கியால எல்லாம் போச்சு. எதையும் என்ஜாய் பண்ண முடியாம பண்ணிட்டான். படிப்பை கூட நிம்மதியா படிக்க முடியல. வீட்டை விட்டு இறங்கி சுதந்திரமா நடக்க முடியல. நம்ம ஏரியாவுல கூட சுத்த முடியல. காலேஜ் க்ரஷ், சைட்டுன்னு நார்மலா எல்லோரும் பண்ணுற எதுவுமே நான் செய்யல. எனக்கு நினைக்க நினைக்க ஆத்திரமா வருது.”
“லவ், இந்த வார்த்தையை கேட்டாலே இப்போ பத்திக்கிட்டு வருது ஷபா. டீன் ஏஜ்ல லவ் மேல அப்படியொரு லவ் இருந்தது.” மேலே சொல்ல முடியாமல் அப்படியே அமைதியாகி விட்டாள் அபிநயா. ஷபானாவிற்கும் அவள் மனநிலை புரிய மௌனமானாள்.
காதலின் மேல் அவளுக்கும் ஈர்ப்பிருந்தது. காதல் என்ற மாய உணர்வை மென்மையாய் ரசித்திட விரும்பிய ஆசைகளை இனி ஒருபோதும் அவள் நினைத்துப் பார்த்திடவே முடியாது என்று நினைக்கையில் அடித் தொண்டையில் கசப்பாய் ஓர் உணர்வு.
அவளைப் பின் தொடர்ந்த பொறுக்கியால் கடந்த வருடமே பெற்றோர் கல்யாண பேச்சை எடுத்து விட்டார்கள்.
இனிமேல் காதல் கனவெல்லாம் அவள் காணவே முடியாது. காதலிக்கும் ஆசையும் இப்போது அவளுக்கில்லை தான். ஆனால், வேறு சில கனவுகள் இருந்தது. இனி அதையெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
அவளின் பெற்றோர் முதலில் மகளுக்கு நிம்மதியான கல்லூரி வாழ்க்கையை கொடுக்க விரும்பினார்கள். ஆகையால், அவளை சொந்த ஊரான மதுரைக்கு அனுப்ப முடிவு செய்தார்கள். அவள் சென்றிருக்கலாம்.
சொந்த தாய் மாமா வீடு தான். “மருமகளே” என்று அழைத்து பாசத்தை பொழியும் அத்தை, மாமா தான். அவர்களின் மூத்த மகனுக்கு அவளை மணமுடிக்கும் ஆசை கூட அவர்களுக்கு இருந்தது. அதனாலேயே மகளை அங்கு அனுப்ப யோசித்தார் அவளின் அப்பா.
அவளுக்கும் அங்கு செல்வதற்கு அதுதான் தடையாக இருந்தது. மகளின் தயக்கத்தை கண்டு, தானும் தயங்கினார் தந்தை.
அதைத் தொடர்ந்து பல்வேறு தடங்கல்கள் வர, சென்னையிலேயே அவள் படிப்பைத் தொடர்ந்தது தான் இப்போது தவறாகிப் போனது.
ஷபானா தன் அலைபேசியில் கண்களை பதித்திருந்தாள். அவள் முகத்தில் நவரசங்களும் வந்து போக, “என்னாச்சு ஷபா?” என்று கேட்டாள் அபிநயா.
புன்னகையுடன் அவளை நிமிர்ந்து பார்த்து, “எங்கண்ணா வேலை பார்க்கிற கம்பெனியில எனக்கு இன்டர்வியூ ஏற்பாடு பண்ணிட்டாங்க அபி.” என்று துள்ளலுடன் சொன்னாள் ஷபானா.
“செம்ம ஷபா. அபுதாபிலயா?” என்று அபிநயா ஆச்சரியமாக கேட்க, “ஆமா அபி” என்றாள்.
“ஸ்கைப்ல வீடியோ இன்டர்வியூ அட்டென்ட் பண்ணுமாம் அபி. ஃபர்ஸ்ட் ரவுண்ட் பாஸ் பண்ணிட்டா, அடுத்து ஹெச்ஆர் இன்டர்வியூ இருக்கும்னு அண்ணா மெயில் பண்ணியிருக்காங்க. எல்லாம் ஓகேயானா படிப்பு முடிந்ததும் பாஸ்போர்ட் காட்டி பறக்க வேண்டியது தான். அப்படி அங்க செட்டாகலைன்னா, இங்க கேம்பஸ் இன்டர்வியூல கிடைச்ச வேலைக்கு போய் அமெரிக்கக்காரனுக்கு புராஜக்ட் பண்ணிக் கொடுப்போம். என்ன சொல்ற?” உற்சாகத்துடன் ஷபானா கேட்க, என்ன சொல்வாள் அபிநயா?
அவள் தற்போதிருக்கும் நிலையில் படிப்பை முழுதாக முடித்தாலே போதுமே. அதன் பின் வேலைக்கெல்லாம் செல்வதெங்கே?
திருமணமாகி புகுந்த வீட்டில் வேலை செய்யும் நிலை வேண்டுமானால் வாய்க்கும் என்று கசப்புடன் நினைத்துக் கொண்டாள் அவள்.
அவளின் பெற்றோர் அவசரமாக மதுரை சென்ற காரணம் வேண்டுமானால் வேறாக இருக்கலாம். ஆனால், அவளின் திருமண பேச்சு அதில் நிச்சயம் இருக்கும் என்பதை அவள் நன்கு அறிவாள்.
“சாரி அபி. வேலைக்கு போக முடியாதுன்னு ஃபீல் பண்றியா?”
“ஏன் ஷபா, இந்த பொறுக்கிகிட்ட இருந்து என்னைக் காப்பாத்த கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்னு நினைக்கிறாங்க. நமக்கு இந்த சமூகம் தராத பாதுகாப்பை கல்யாணம் தந்திடப் போகுதா என்ன?”
“அதுதான் உலக நியதி அபி. அவ்ளோ சீக்கிரம் அதையெல்லாம் மாத்தி எழுத முடியாது. இவனை மாதிரி பொறுக்கிகளை திருத்தவும் கல்யாணம் தான் தீர்வு. ஒரு கால் கட்டு போட்டா எல்லாம் சரியாகிடும், வர்றவ பார்த்துப்பா சொல்வாங்க. அதேதான் நமக்கும். இவளை பொறுப்பா ஒருத்தன் கையில ஒப்படைச்சுட்டா எங்க கடமை முடிஞ்சதுன்னு முடிச்சுடுவாங்க. எப்படி பார்த்தாலும் நாமதான் சிக்கினோம்”
ஷபானா மெலிதான சிரிப்புடன், “அப்புறம் ஏன் பயப்படுற அபி. உனக்கு பிடிச்சதை செய். இன்னைக்கு வீட்டை விட்டு வெளில போகவே பயந்தா, நாளைக்கு வேலைக்கு எப்படி போவ?” என்று கூர்மையாக கேட்டாள்.
அபிநயா போலி கோபத்துடன் தோழியை முறைத்தாள்.
“சரி. நான் வீட்டுக்கு கிளம்பறேன் அபி. அம்மா சீக்கிரம் வரச் சொன்னாங்க. நாளைக்கு பார்ப்போம்” என்று ஷபானா அதே தெருவில் இருக்கும் அவள் வீட்டுக்குச் செல்ல, அவளோடு எழுந்து வெளியில் வந்தாள் அபிநயா.
அவளின் தம்பி பள்ளி விட்டு வீடு வந்திருந்தான். அப்பத்தாவுடன் அரட்டையடித்தபடி சாப்பிட்டு கொண்டிருந்தவனிடம் சென்று, “என்னடா, உனக்கு பொங்கல் லீவ் இருக்கா இல்லையா?” என்று விசாரித்தாள்.
“என்னமோ பெரிய மனசு பண்ணி லீவ் கொடுத்திடானுங்க கா” சிரிப்புடன் சொன்னான்.
“அவர் படமெல்லாம்…” என்று தொடங்கியவன், அப்பத்தாவின் முறைப்பை பார்த்ததும் சொல்ல வந்ததை சோறோடு சேர்த்து முழுங்கினான்.
அபிநயா இடுப்பில் கை வைத்து, “நீ தான் தைரியமானவனாச்சே சொல்லு” என்று மிரட்டவும்,
“அவர் படமெல்லாம் ரொம்ப கூட்டமா இருக்கும்னு சொல்ல வந்தேன் கா. அதுக்குள்ள ரெண்டு பேரும் என்னை ரவுண்ட் கட்டிட்டீங்க” என்று அவன் சமாளிக்கவும் சத்தமாக சிரித்து விட்டாள் அபிநயா.
காளியம்மாள் பேத்தியை வாஞ்சையுடன் பார்த்தார்.
“விஜய் படத்துக்கு நீங்க பசங்க போய்ட்டு வாங்கடா. நான் எங்க கேங் கூட ரஜினி படத்துக்கு போய்க்கிறேன்” என்றாள் அபிநயா.
“ம்ம். ஓகே கா” என்றான் அவளின் தம்பி சித்தார்த்.
அவனோடு அமர்ந்து சிறிது நேரம் கேரம் போர்டு விளையாடினாள். அக்காவும், தம்பியும் எலியும் பூனையுமாக அடித்துக் கொண்டார்கள்.
அதுவரை அவள் மனதில் இருந்த கேள்விகள், பயங்கள் எல்லாம் தற்காலிகமாக மறைந்திருக்க, விளையாட்டில் மட்டுமே இருந்தது அவளின் முழு கவனமும்.
“நான் அடிக்கும் போது தான் வேணும்னு போர்டை நகத்துறான் அப்பத்தா இவன். கள்ளாட்டை ஆடுறான். நீங்களும் இவனுக்கு சப்போர்ட் பண்றீங்க” அபிநயா ஆட்சேபிக்க,
“கள்ளாட்டையா? யாரு நானா?” என்று போலி அதிர்ச்சியுடன் கேட்ட சித்தார்த், தான் தோற்று போகப் போகிறோம் என்பது தெரிந்து, அப்படியே கேரம் போர்டை தூக்கி கவிழ்த்தான்.
“ஆத்தி, அக்கா அடிக்க போறாடா” காளியம்மாள் பேரனை பார்த்து கத்த, சித்தார்த் எழுந்து உள்ளே ஓடினான். அவனைத் துரத்தி கொண்டு ஓடினாள் அபிநயா.
அடுத்த அரை மணி நேரம் வீடே அடிதடியும், சிரிப்புமாக தானிருந்தது. அபிநயா அதே மனநிலையுடன் உறங்கச் சென்றாள்.
ஆனால், நள்ளிரவில் அவளின் அறையின் ஜன்னலில் வெளிச்சம் விட்டுவிட்டு படிந்து அவளின் தூக்கத்தை மட்டுமல்ல நிம்மதியையும் மொத்தமாக குலைத்துப் போட்டது.
அப்பத்தா மாத்திரையின் உபயத்தால் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவரை எழுப்ப மனமின்றி தனியாக எழுந்து அமர்ந்தாள்.
பக்கத்து அறையில் இருந்த தம்பியை, “சித்தார்த்.. டேய், சித்து” என்று மெல்ல அவள் அழைக்க, இரவின் அமைதியில் அவள் குரலே அவளை அச்சுறுத்தியது.