புகழேந்தி சற்றே முன்னே குனிந்து பார்த்தான். அவள்தான். அவளேதான். பச்சை பட்டுச் சேலையில் அத்தனை பசுமையாய் அவன் கண்களை நிறைத்தாள் அபிநயா.
அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
மனதின் ஓரத்தில் இந்த திருமணத்திற்கு தன்னை கட்டாயப்படுத்தி அப்பத்தா அழைத்து வந்ததின் காரணம் அவனுக்கு இப்போது பிடிப்பட்டது.
இன்னமும் முகூர்த்தத்திற்கு நேரமிருக்க நிதானமாக அபிநயாவை பார்த்தான். அவளின் பதட்டம் இவனுக்கு ஏனோ பரிதவிப்பை தந்தது.
அவள் உடல் மொழியில் வெளிப்படையாய் தெரிந்த படபடப்பு, கண்களில் தெரிந்த மிரட்சி, அவளை கூர்ந்து நோக்கச் செய்தது.
ஏனோ அந்த நொடி இவளுக்கு ஏன் இத்தனை விரைவாக திருமணம் பேசுகிறார்கள் என்ற எண்ணமும் அவன் மனதில் துளிர்க்க, அவளின் செயலில் அதற்கு பதில் இருப்பது போலிருந்தது.
அபிநயா மெல்லத் திரும்பிப் பின்னால் பார்த்தாள். தன்னையே பின் தொடர்பவனை கண்டதும் நடையில் வேகத்தை கூட்டினாள். எதிரில் சித்தார்த் வர, அவன் தோளில் பட்டென்று அடித்தாள்.
தம்பியின் கரத்தை இறுக்கமாக பிடித்து, “எங்கடா போய் தொலைஞ்ச? புது இடத்துக்கு வந்தா கூடவே இருக்க மாட்டியா? உன்னையும், அப்பாவையும் தேடுறாங்க அம்மா. அப்பாவை கூட்டிட்டு வரச் சொன்னாங்க”
என்று குரலை தழைத்து கோபமாக சொன்னாள்.
“நீங்க கிளம்பிட்டு இருக்கும் போது உங்ககிட்ட சொல்லிட்டு தானே நானும், அப்பாவும் வந்தோம் கா. நீங்க தான் லேட் பண்ணீங்க. இப்போ ஆளை காணோம்னு என்னை திட்டுற?”
“சரி விடு. என் கூடவே இரு” என்றவள் திரும்பிப் பார்க்க, வீட்டு வாயிலில் இருந்த மஞ்சள் அரளி மரத்தின் மேல் சாய்ந்து நின்றிருந்தான் அவன்.
“என்னக்கா?”
“ஒன்னுமில்ல சித்து”
சித்தார்த் அவளைப் போலவே திரும்பி பார்த்து விட்டு, “ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று அழுத்திக் கேட்க,
“எனக்கு பின்னாடி நிக்கிற அந்த ஆள் நேத்து நாம வந்த கொஞ்ச நேரத்தில இருந்து என் பின்னாடியே வர்ற மாதிரி இருக்குடா. நேத்து நான்தான் தேவையில்லாம கற்பனை பண்றேன் போலன்னு நினைச்சேன். ஆனா, இப்போ அத்தை வீட்ல இருந்து நான் நடந்து வரும் போது கையில செய்கை காட்டி, ஏதோ பேச டிரை பண்ணான். நான் பதில் பேசல. ஆனா, என் பின்னாடியே வரவும்…”
“ப்ச். அபிக்கா, அவரு நம்ம ரிலேட்டிவ் தான். நேத்து அப்பாம்மா கூட அவங்க ஃபேமிலி பேசிட்டு இருந்தாங்க. நீ இல்லையா அப்போ? அவங்க உன்னை பத்தி தான் பேசிட்டு இருந்தாங்க. அவர் உனக்கு கட்டிக்கிற முறை போல. அது பத்தி தான் பேசினது போல இருந்தது”
“ஓ…” என்ற அபிநயாவின் தொண்டையை அவஸ்தை மெல்ல கவ்வியது. முதல் பார்வையிலேயே அவன் மேல் ஒருவித வெறுப்பு தான் அவளுக்கு வந்திருந்தது. அவளைப் பார்த்து, சிரித்து பின்னால் வந்தவனை பார்த்து, அவளுக்கு எங்கிருந்து பிடித்தம் வரும்? மிக மோசமான முன் அனுபவம் அவளுக்குத் தான் இருந்ததே.
“என்ன சித்தார்த்? சித்தார்த் தானே? இங்கேயே நின்னுட்டீங்க? உள்ள போகலையா?”
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் பின்னிருந்து வந்து பேச, அபிநயா சடாரென அவனை ஏறிட்டு பார்த்தாள்.
“இது போல நேரா முன்னாடி வந்து பேசுங்க எப்பவும். நேத்துல இருந்து நீங்க என் பின்னாடியே வர்றது எனக்கு பிடிக்கல” அதே வேகத்துடன் அவனிடம் சொல்லியும் விட்டாள் அபிநயா.
அவன் கண்களில் ஒரு நொடி அதிர்ச்சியின் சாயல் வந்துப் போனது.
“அச்சோ. சாரிங்க. நான் உங்ககிட்ட பேசணும்னு தான் டிரை பண்ணேன், வேற ஒன்னுமில்ல, எனக்கு தப்பான இன்டென்ஷன் இல்ல. நம்புங்க பிளீஸ்” அவன் சற்றே சங்கடத்துடன் சொல்ல,
“எது? ஒரு பொண்ணு பின்னாடி பின்னாடி ஃபாலோ பண்ணி வர்றது தான் பேச டிரை பண்றதா?” அபியின் குரல் உயர, அவன் புரியாத பார்வை பார்த்தான்.
“இல்லைங்க. நமக்கு வீட்ல..” என்று அவன் ஆரம்பிக்க, “நீங்க இதை பத்தி எங்கப்பாகிட்ட பேசிக்கோங்க. எங்கப்பா முடிவு தான் என் முடிவும்” படபடத்து பட்டென்று அங்கிருந்து விலகி சென்றாள். அவன் ஒரு தோள் குலுக்களுடன் அவளையே விநோதமாக பார்த்து நின்றான்.
“சித்து, ஏடிஎம் போய் பணம் எடுத்துட்டு வரணும்னு அம்மா சொல்லிட்டு இருந்தாங்க. அப்பாகிட்ட போய் சொல்லணும்” என்று தம்பியிடம் சொன்ன அவள் குரலில் இன்னமும் மெல்லிய கோபம் இருந்தது.
புகழேந்தி கீழே நடந்தது அத்தனையும் அவனது ஆசிரியர் பார்வையில் பார்த்துக் கொண்டிருந்தான். பாட்டுச் சத்தத்தில் அவர்கள் பேசுவது அவனுக்கு கேட்கவில்லை என்றாலும், அபிநயா பின்னால் திரும்பி திரும்பி பார்த்து நடந்து வந்ததும், இப்போது அவள் நின்ற விதமும், பேசிய விதமும், அவளது உடல் மொழியும் அவனுக்கு பல ஊகங்களை தந்தது.
அவள் தம்பியின் கையை இறுக்கமாக பிடித்திருந்த காட்சி இன்னமும் அவன் கண்ணில் நின்றது.
இங்கே அபிநயா அப்பாவைத் தேடிச் சென்றாள். இந்த ஊரும், உறவுகளும் அவளுக்கு வந்ததில் இருந்தே புதிதாக தான் தெரிந்தனர். அதற்கான காரணமும் இப்போது தான் புரிந்தது. அம்மா வழி உறவுகளுக்கு இத்தனை முக்கியத்துவம் தந்து அப்பா விடுமுறை எடுத்து இங்கு வந்ததின் நோக்கம், அவளின் திருமண பேச்சு என்பது இப்பொழுது விளங்கியது.
அடிக்கடி சந்திக்காததால் பார்ப்பவர் எல்லாம் அந்நியர் போலவே அவள் கண்களுக்கு தெரிந்தனர்.
“அப்பா அங்கருக்கார் பாருகா” சித்தார்த் கைக் காட்டி சொல்ல, நேராக அவரிடம் சென்றார்கள்.
அப்பாவிடம், அம்மா தேடுவதாக அவள் தெரிவிக்க, “நீ இங்கேயே இரு அபி. அப்பா வந்துடுறேன்” என்றார் மகேஷ்வரன்.
“சக்தி” என்று ஒரு பெண்ணை அழைத்தவர், “அபியை பார்த்துக்கோ மா.” என்று விட்டு சென்றார்.
“என்னை ஞாபகம் இல்லையா அபிநயா?” அவர் கேட்கவும், தயக்கத்துடன் மறுப்பாக தலையசைத்தாள்.
அவர் தான் யாரென அவளுக்கு விளக்கம் தந்து, அண்ணி முறை என்று அழைக்க சொல்லி கதை பேச, கால் மணி நேரம் கரைந்திருந்தது.
“மாப்பிள்ளை மேடைக்கு வந்தாச்சு. நான் போய் உங்க அண்ணா கூட இருக்கேன். நீ தனியா இருந்துப்ப இல்ல?” என்று கேட்டு, அவள் சரியென்று சொல்லவும் எழுந்து போனார் சக்தி.
முகூர்த்த நேரம் நெருங்கியிருக்க அங்கிருந்த இருக்கைகள் நிறையத் தொடங்கியது.
அபிநயா அலைபேசியில் அப்பா, அம்மாவை அழைத்து அவர்களின் வருகையை உறுதி செய்துக் கொண்டாள். அவளின் அப்பத்தாவிற்கு பயணம் ஒத்துக் கொள்ளவில்லை. அவர் பொருட்டு மெதுவாகத்தான் காலையில் கிளம்பினார்கள். இப்போது அதனால்தான் தாமதம் எனப் புரிந்து பொறுமையாக அமர்ந்திருந்தாள்.
அந்நேரம் புகழேந்தி தன் குடும்பத்துடன் அங்கு வர, அவனுக்குப் பின்னே அவள் குடும்பமும் வந்தது. அனைவரும் ஒரே வரிசையில் தான் அமர்ந்திருந்தார்கள்.
“இங்கருக்க அம்புட்டு பேரும் நம்ம சொந்தக்காரங்க தான் அபி. யாரோடயாவது பேசிட்டு இருக்கலாம் இல்ல. ஏன் இப்படி தனியா உட்கார்ந்துட்டு இருக்க?” பேத்தியை கடிந்து கொண்டார் காளியம்மாள்.
அவளோ, “போ அப்பத்தா. எனக்கு யாரையும் சரியா தெரியல.” என்று அலுத்துக் கொண்டாள் அவள்.
மகேஷ்வரன், புகழேந்தி அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்திருக்க, இருவரும் புன்னகையுடன் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
சுபவேளையில் திருமணம் சிறப்பாக முடிய, காலை உணவு உண்ணச் சென்றார்கள். அதன் பின்னர் அபிநயாவிற்கு தெரிந்த உறவுகள் எல்லாம் வரத் தொடங்க, அவர்களுடன் அம்மா, அப்பத்தா ஊர்க்கதை பேச அபிநயாவும் தன் பொதுஅறிவை வளர்த்துக் கொண்டாள்.
வீட்டிலேயே நடக்கும் திருமணம் என்பதால் உறவுகள் உடனடியாக கிளம்பவில்லை. அங்கேயே அமர்ந்து அவர்கள் விட்ட இடத்திலிருந்து உறவுகளை புதுப்பித்துக் கொண்டிருந்தார்கள்.
மதிய விருந்தும் தயாராகி கொண்டிருந்தது.
புகழேந்தி அங்கே கலைத்துப் போடப்பட்டிருந்த இருக்கைகளை நகர்த்தியபடியே முன்னேறி அப்பத்தாவின் பக்கத்தில் சென்று அமர்ந்தான்.
“என்ன ராசா?” என்று பேரனை பார்த்ததும் கேட்டார் வடிவுக்கரசி.
“உனக்கு இடது பக்கமா, மகேஷ் மாமாகிட்ட பேசிட்டு இருக்கறது யாரு அப்பத்தா?” அவனும் சுற்றி வளைக்காமல் நேரடியாக கேட்க,
வடிவுக்கரசி, “யாரச் சொல்ற ராசா?” என்று பேரனிடம் இயல்பாக பேசியபடி பார்வையை சுழற்றினார்.
“மெட்ராஸ்காரங்க கூட இவனுக்கு என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு?” என்று சடைத்தவர், “அது உங்க நத்தம் சித்தப்பன் குடும்பம் டா. உனக்கு அடையாளம் தெரியலையா? போன வருஷம் அவங்க மூத்த மக கல்யாணத்துக்கு போனோமே? அந்தப் பிள்ளையை அருப்புக் கோட்டையில் கட்டிக் கொடுத்தாங்க இல்ல?” என்று அவர் கதை சொல்ல,
“ஏ அப்பத்தா. இப்போ அதுவா முக்கியம்? அவங்க ஏன் மாமாகிட்ட பேசிட்டு இருக்காங்க?” என்று புகழேந்தி கேட்க, வடிவுக்கரசி முகம் நொடியில் அரசியின் தோரணையைக் காட்டியது.
“இவன் யாருடா வெட்டி நியாயம் பேசுறவன்? ஒரு வயசு பொண்ணு வீட்ல இருந்தா நாலு பேர்கிட்ட சொல்லி வைக்கிறது தானே ஊரு வழக்கம்? அந்த பொண்ணுக்கு ஒருத்தன் பரிசம் போடாத வரைக்கும் நாலு பேர் கட்டிக்க கேட்டு தான் போவாங்க? நாம அதெல்லாம் தப்பு சொல்ல முடியுமா? இல்ல, தடுக்கத்தான் முடியுமா? ஒரு கல்யாண வீட்ல வச்சு இன்னொரு கல்யாணத்துக்கு பேசி முடிக்கிறது எல்லாம் சாதாரணம்ப்பே. பல பேர் விசேஷ வீட்டுக்கு வர்றதே அதுக்குத்தான்” என்று வடிவுக்கரசி பேரனின் முகம் பார்த்துக் சொல்ல, “ம்ம், சரிதான்” என்றான் அவன்.
“நீ என்ன சொன்ன? பொண்ணு முதல்ல படிப்பை முடிக்கட்டும்னு தானே?” அவர் கேட்க,
“ம்ம்” என்றான். இம்முறை லேசான கோபம் தெரிந்தது.
“அதைத்தான் பொண்ணு வீட்ல சொன்னோம் நாங்க. ஆனா, நம்ம ஒரு வார்த்தை சொன்னதுக்காக அவங்க பொண்ணை கட்டிக் கொடுக்காம காத்துட்டு இருப்பாங்கன்னு எதிர்பார்க்க முடியாது இல்ல?”
“சரிதான். எதிர்பார்க்க முடியாது தான்.” என்று சிரிப்புடன் சொன்ன பேரனை நன்றாக திரும்பி அமர்ந்து கண்ணைச் சுருக்கி பார்த்தார் வடிவுக்கரசி.
அவனும் பதிலுக்கு அவரைப் பார்க்க சிரித்து விட்டார் பெரியவர்.
“என்னய்யா ராசா?” என்று அவர் கேட்க,
“நாம தான் காலைலயே அவங்களுக்கு சம்மதம்னு பதிலை சொல்லிட்டோமே. அப்புறம் இன்னமும் என்ன பொண்ணுக்கு வெளில வரன் பார்த்திட்டு இருக்காங்க?” புகழேந்தி நமுட்டு சிரிப்புடன் கேட்க,
“அடியாத்தே, நீ என்னய்யா ராசா சொல்ற?” என்று சந்தோஷத்தை சத்தம் கூட்டி கேட்டார் அவர்.
அவரின் சத்தத்தில் சில தலைகள் அவர்கள் புறமாக திரும்ப, “அப்பத்தா..” என்று அதட்டினான் புகழேந்தி.
“புகழேந்தி சார், நீங்க என்ன அண்ணியை பார்க்காம இங்க உட்கார்ந்துட்டு தாய்க் கிழவி கூட கதை பேசிட்டு இருக்கீங்க?” என்று வம்பு பேசியபடி கார்த்திக் அங்கு வர,
“யாத்தே, இவனுக்கு கூட செய்தி தெரிஞ்சிருக்கு. நீங்க ஒருத்தனும் எனக்குச் சொல்லல?” என்று வடிவுக்கரசி அதிர்ச்சியுடன் வாயில் கை வைக்க,
“அப்பத்தா, நான் விஷயத்தை உன்கிட்ட சொல்லதான் வந்தேன். அதுக்குள்ள இவன் ஊடால வந்துட்டான். வெட்டிப்பய” என்று தம்பியை பார்த்து முறைத்தபடி சொன்னான்.
“புகழாதீங்க புகழ் சார்” அண்ணனை வெறுப்பேற்றும் வெடிச் சிரிப்புடன் சொன்ன கார்த்திக் அடுத்திருந்த இருக்கையில் பொத்தென்று அமர்ந்தான்.
“அப்பத்தா, நான் பொண்ணு வீட்ல பேசச் சொல்லி காலையிலயே அப்பாகிட்ட சொல்லிட்டேன். அப்போ உன்னை தான் தேடினேன். நீ எப்பவும் ஒரு கூட்டத்தோடவே இருந்த, அதான் உன்கிட்ட சொல்ல முடியல. கோவிச்சுக்காத அப்பத்தா” என்று புகழேந்தி அவரை சமாதானம் செய்ய,
“நீ கல்யாணத்துக்கு சரின்னு சொன்னதே எனக்கு ரொம்ப சந்தோஷம்ப்பே. அவக குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம்னு எல்லாம் சொல்றாங்க. பொண்ணும் தங்கமாம்.” என்றவர்,
“நான் காலையில பொண்ணை பார்த்தேன். எல்லார்கிட்டயும் மருவாதையா தான் பேசுது பேத்தி. பக்கத்துல பாக்க என்னா அழகு. அப்படியே கண்ணுல ஒத்திக்கலாம் போல அழகு..”
“அப்பத்தா…” என்றழைத்து அபிநயா பற்றிய புகழுரையை தடுத்து நிறுத்தினான் புகழேந்தி.
“இப்போ சொல்லு. எதுக்கு அந்த மாமா நத்தம் சித்தப்பாகிட்ட பேசுறார்? எப்படி பார்த்தாலும் நம்ம பதிலுக்கு தானே வெயிட் பண்ணனும்?” என்று அவன் கேட்க, இம்முறை எடக்கு மடக்காக பதில் சொல்லாமல் கூட்டத்தில் மகேஷ்வரனை பார்த்தார் அவர்.
“ஆமாய்யா. நீ சரின்னு சொன்னதுக்கு அப்புறம் அவனுங்க கிட்ட என்ன பேச்சு வேண்டி கிடக்கு.” என்று கடுப்புடன் கேட்டார் வடிவுக்கரசி.