அவரின் கேள்விக்கு அங்கே அபிநயாவை பெண் கேட்டவர்களிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் மகேஷ்வரன்.
“இல்ல, நீங்க எங்களை மன்னிக்கணும். ரெண்டு வருஷத்துக்கு முன்ன நீங்க அபிநயாவை கேட்கும் போது இப்போ கல்யாணம் பண்ற எண்ணம் இல்லைனு சொன்னோம் தான். அப்போ பொண்ணு மூணாவது வருசம் தானே படிச்சுட்டு இருந்தா? ஆனா, இந்த வருஷம் படிப்பை முடிக்கிறா இல்லையா? அதான் இப்போ கேட்டு வந்த வரனுக்கு சரின்னு சொல்லிட்டோம். இத்தனை நாள் அவங்க பதிலுக்காக தான் காத்துட்டு இருந்தோம். நேத்து நீங்களே இதைப்பத்தி கேட்கிற வரைக்கும் எங்களுக்கு உங்க ஞாபகமே வரல. தயவு செஞ்சு தப்பா எடுத்துக்க வேணாம்.” என்று நிதானமாக பேசினார் மகேஷ்வரன்.
“அவங்க நம்ம சொந்தம் தான். உங்களுக்கு நல்லா தெரிஞ்சவங்க தான். கோரிப்பாளையம் ஐயா மூத்த பேரன். காலேஜ்ல ப்ரொபஷரா இருக்காராம். நாலு மாசத்துக்கு முன்னாடியே ரெண்டு குடும்பமும் பேசிட்டோம். அவங்க நம்ம பொண்ணு படிப்பை முதல்ல முடிக்கட்டும்னு சொன்னாங்க. இந்தா ரெண்டு வாரத்துல பரிசம் போட வர்றாங்க.” என்று அவர் முடிக்க, “நல்லதுங்க” என்று நல்ல முறையிலேயே விடைப் பெற்றுக் கொண்டார்கள் அவர்கள்.
“உங்கப்பனை எங்க காணோம்? அவனைக் கூப்பிடு என்ன சங்கதின்னு கேட்போம்” வடிவுக்கரசி மகனை தேடிக் கொண்டே பேரனிடம் கேட்க, அதுவரை மகேஷ்வரனை பார்த்துக் கொண்டிருந்த புகழேந்தி, “வேணாம் அப்பத்தா” என்றான்.
“ஏன் ராசா? என்னத்துக்கு வேணாம்னு சொல்ற? திரும்பவும் முறுக்கிக்காத” என்றார் அக்கறையுடன்.
“அப்பாவை கூப்பிட்டு விசாரிக்க சொல்ல வேணாம்னு சொன்னேன். அம்புட்டு தான். என் மாமனார் இவ்வளவு நேரம் என்ன சொன்னார்னு தெரியல. ஆனா, நத்தம் சித்தப்பா முகத்தைப் பார்த்தா, செய்தி நமக்கு சாதகம்னு தோனுது” என்றான்.
“மாமனாராம் இல்ல?” என்று சிரித்தவர்,
“ஆமாயா. அவன் முகமே விழுந்து போச்சு. அவன் பொண்டாட்டி புலம்பிக்கிட்டே நடக்கறாளே” என்று அப்பாத்தா அவதானிக்க, மெலிதாக சிரித்தான் புகழேந்தி.
“என் ராசா” என்று பேரனின் முகத்தை கையால் வழித்து நெட்டி முறித்தார் அவர்.
“ஆங், நடக்கட்டும் நடக்கட்டும்” என்று கார்த்திக் நக்கலாக சொல்ல, “ஏன் அப்பத்தா? இந்த பொண்ணு கூட தனியா எல்லாம் பேச விட மாட்டாங்களா இன்னைக்கு?” என்று சந்தேகம் கேட்டான் புகழேந்தி.
“ஏலேய், நாம கல்யாணத்துக்கு வந்திருக்கோம் டா. பொண்ணு பார்க்கவா வந்தோம்?” என்று கிண்டலாக கேட்டு பேரனின் கன்னத்தில் தட்டினார்.
“நாம வீட்டுக்கு போறதுக்கு முன்னால உன்னை பொண்ணுகிட்ட பேச வைக்கிறேன். சரியா?” என்று அவர் கேட்க, புன்னகையுடன் அங்கிருந்து எழுந்து போனான் புகழேந்தி.
அண்ணன் சென்றதும் அந்த இருக்கையை நிறைத்தான் கார்த்திக்.
“அண்ணே கல்யாணத்துக்கு வரவே மாட்டேன்னு சொல்லுச்சு. நடுராத்திரி எங்களை எழுப்பி விட்டு, இந்த கல்யாணத்துக்கு வந்தே ஆகணும்னு நீ எங்களை இழுத்துட்டு வரும் போதே நான் என்னமோ இருக்குதுன்னு சந்தேகப்பட்டேன். பார்த்தியா, பொண்ணை நேரா பாக்க வச்சு உன் பேரனை கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சுட்டல்ல தாய்க் கிழவி.” என்று கார்த்திக் கேட்க,
“இந்தாடா கார்த்தி, நான் ஒரு வாரமா இந்த கல்யாணம் பத்தி பேசிட்டு தானே இருந்தேன்?” என்று பேரனை முறைத்தார் வடிவுக்கரசி.
“பேசின, பேசின. ஆனா, நீயும், அம்மாவும் மட்டும் தானே வர்றதா இருந்தது?”
“இல்லையேப்பே” என்று எதுவும் தெரியாதது போல சமாளிக்க பார்த்தவருக்கு சிரிப்பு வந்து விட்டது.
அவரோடு சேர்ந்து சிரித்தவன், “ஆனாலும், அண்ணனை உனக்கு ரொம்ப பிடிக்கும் இல்ல அப்பத்தா?” என்று கேட்க,
“அவன் அப்படியே அவங்க அப்புச்சி சாடை. அதான்” என்று சிரித்தார் வடிவுக்கரசி.
“தாய்க் கிழவிக்கு வெட்கத்தை பாரு” என்று அப்பத்தாவின் தோளில் இடித்து, “இதே போல எனக்கும் சீக்கிரம் கல்யாணம் பேசி முடி அப்பத்தா” என்று தன் காரியத்தில் கண்ணாக இருந்தான் கார்த்திக்.
“ம்க்கும், இன்னும் ஒரு வேலை வெட்டிக்கு போகல நீ, கல்யாணம் கேட்குது உனக்கு?”
“வேலை எங்க போக போகுது அப்பத்தா? அதுக்கு பொறுமையா போவோம். நீ எனக்கு அண்ணி அளவுக்கு இல்லனாலும் ஓரளவு அழகான பொண்ணா பார்த்து கட்டி வைக்கிற சரியா?”
“போடா இவனே. உனக்கு சோறு போடுறது இல்லாம, நாளைக்கு உன்னை கட்டிட்டு வரவளுக்கும் சேர்த்து சோறு போடுவானா என் பேரன்? நா விட மாட்டேன்.” என்று அவர் குரல் உயர்த்த, அவரை பேச்சால் சரி கட்டிக் கொண்டிருந்தான் கார்த்திக்.
மணமக்களோடு குடும்பமாக நின்று புகைப்படம் எடுத்து விட்டு கீழிறங்கி வந்தார்கள் அபிநயா குடும்பத்தினர்.
“இங்க வா த்தா அபி” என்று பேத்தியின் கைப் பிடித்து தனக்கு பக்கத்தில் இருத்திக் கொண்டார் காளியம்மாள்.
“என்ன அப்பத்தா?” என்று கேட்டவளை பார்த்து சிரித்து, முன் கதை எல்லாம் எடுத்துச் சொல்லி, மாப்பிள்ளை வீட்டார் இன்று சம்மதம் சொல்லியது வரை அவளிடம் சொல்லி முடித்தார் அவர்.
“என்ன சொல்ற அப்பத்தா? இத்தனை நாள் நீ இது பத்தி என்கிட்ட எதுவுமே சொல்லல?” அபிநயா கோபமாக கேட்க,
“படிக்கிற பிள்ளை நீ. உன் மனசை கலைக்க வேணாம்னு நினைச்சுத் தான் சொல்லல” என்றார் அவர்.
“இப்போ மட்டும் என்னவாம்?”
“இப்போதான் உனக்கு பரிட்சை வருதே. படிப்பு தான் முடிய போகுது இல்ல? அதான் இப்போ சொல்லுறேன்” என்று பேத்திக்கு சரியாக பேசினார் அவர்.
“இந்த கல்யாணத்துக்கு அவங்களும் வந்திருக்காங்க தானே? யாருன்னு காட்டு அப்பத்தா” அபிநயா கேட்க,
“இரு காட்டுறேன்” என்றவர், “நீ சரின்னு சொன்னா தான், உனக்கு மாப்பிள்ளையை பிடிச்சா தான் கல்யாணம். என்ன?” என்றும் அவர் சேர்த்து சொல்ல, அபிநயாவின் கண்களில் மெலிதாக படர்ந்தது மகிழ்ச்சி.
“ஆத்தா, சாப்பிட வாங்க” கல்யாண வீட்டினர் மதிய உணவு உண்ண அவர்களை அழைக்க, பேத்தியின் கைப் பிடித்து எழுந்து கொண்டார். அந்நேரம் அவரிடம் உறவினர் வந்து பேச, அவர்களோடு நடந்தார் காளியம்மாள்.
“அப்பத்தா” என்று அவரை நோக்கி நடந்தபடி அழைத்த அபிநயாவின் முன்னே வந்து வழியை மறித்து நின்று, “நல்லாயிருக்கியா த்தா?” என்று கேட்டார் வடிவுக்கரசி.
“நான் நல்லாருக்கேன். நீங்க?” என்று கேட்டவளின் கைப் பிடித்து, “நானும் நல்லா இருக்கேன் த்தா. மகராசனாட்டம் எம் பேரன் இருக்கையில் எனக்கென்ன குறை வந்துடப் போகுது?” என்று பெருமையுடன் சொன்னவரை புன்னகையுடன் பார்த்தாள் அவள்.
“நீ சாப்பிட்டியா? நான் இன்னும் சாப்பிடலை. எம் பேரங்களை காணல. அவனுங்க இருந்தா என்னை சாப்பிட கூட்டிட்டு போவானுங்க.” என்று அவர் கண்களை எல்லா பக்கமும் சுற்றி தேடியபடி சொல்ல, அவரோடு சேர்ந்து அவள் கண்களும் சுழன்றது.
அவள் கண்களில் விழுந்தார் சமையல் கூடம் நோக்கி நடந்து கொண்டிருந்த காளியம்மாள், அவரின் முகத்தில் முழுமையான புன்னகையிருக்க கண்ணால் என்னவென்று விசாரித்தாள்.
அவரோ மறுப்பாக தலையசைத்து, “நீ பேசு” என்று வாயசைத்து விட்டுப் போனார்.
“வாங்க, உங்களை நான் சாப்பிட கூட்டிட்டு போறேன்.” என்று அபிநயா சொல்ல, அவளோடு நடந்தார் வடிவுக்கரசி.
அவர்கள் உள்ளே நுழையும் போது அவளின் குடும்பமும் சேர்ந்துக் கொண்டது.
மகேஷ்வரனை பார்த்து, “பேத்தி என் கூட சாப்பிடட்டும்” என்று அவர் சொல்ல, விஷேச வீடுகளில் இதெல்லாம் இயல்பான நடப்புகள் என்பதால் சம்மதமாக தலையசைத்தார் மகேஷ்வரன்.
“நீ வா. நாம இப்படி உட்காருவோம்” என்று அபிநயாவை இழுத்துக் கொண்டு போனார் அவர்.
“ஒரு நிமிஷம்…” என்று அவள் ஆரம்பிக்க,
“என்னை அம்மாச்சின்னு சொல்லுத்தா” என்று உரிமையுடன் உறவு முறை சொல்லித் தந்தார் வடிவுக்கரசி.
“சரிங்க அம்மாச்சி. இருங்க, ஒரு நிமிஷத்துல வந்துடுறேன்” என்றவள், காளியம்மாள் எதிர் புறத்தில் அமர்ந்திருக்க அவரிடம் வேகமாக சென்று, “அப்பத்தா, எனக்கு மாப்பிள்ளை யார்னு காட்டு” என்று அவசரமாக முணுமுணுத்தாள்.
“நான் உனக்கு கண் காட்டுறேன். நீ பார்க்காத மாதிரி பார்த்துக்கோ. என்ன?” என்றார் அவர் ரகசியமாக.
“சரி” என்ற அபிநயா திரும்பி நடந்து வடிவுக்கரசியிடம் வந்தாள்.
அந்த வரிசை முழுக்க காலியாக இருக்க, அப்போது உள்ளே வந்த அவனைவரும் ஒன்றாக உணவருந்த அமர்ந்தார்கள். அவளின் பெற்றோரை தொடர்ந்து வடிவுக்கரசி அமர்ந்து விட அவருக்கு அடுத்து அமர்ந்தாள் அபிநயா.
காளியம்மாளின் கண்கள் வியப்பில் விரிய, கண்ணால் என்னவென்று அவரிடம் கேட்டாள் அபிநயா. அவரின் கண்கள் செல்லும் வழியெங்கும் அவளும் சேர்ந்து தேட, தலைக் குனிந்து சாப்பிடத் தொடங்கினார் அவர்.
அபிநயா அமர்ந்திருந்த வரிசையில் உணவு பரிமாறப்பட அதில் சென்றது அவளின் கவனம்.
சில நிமிடங்களில் வடிவுக்கரசி வெறும் சோறுடன் அமர்ந்திருக்க, “உங்களுக்கு என்ன வேணும்? சாம்பாரா, ரசமா சொல்லுங்க. நான் கொண்டு வரச் சொல்றேன்” என்று அபிநயா கேட்க, “தங்கப் புள்ள” என்றவர், “ரசம் வேணும் த்தா” என்றார்.
சரியாக அந்நேரம் அவளுக்கு பக்கத்தில் இருந்து, “அண்ணே ரசம் கொண்டு வாங்க” என்ற குரல் கணீரென்று கேட்டது.
“அந்தா கொண்டு வாறாங்க. நீ சாப்பிடு ஆத்தா” என்று வடிவுக்கரசி அவளிடம் சொன்னார்.
அபிநயா சோறை பிசைந்து கொண்டே நிமிர, காளியம்மாள் அவளைப் பார்த்து கண் காட்டினார்.
“எங்க?” என்று அவளும் கண்ணால் கேட்க, அவளை திரும்பிப் பார்க்கச் சொன்னார் அவர்.
சட்டென திரும்பி பார்த்து அவளுக்கு அடுத்து இருந்த இரண்டு ஆண்களை பார்த்து விட்டு, “எங்க அப்பத்தா?” என்று மீண்டும் வாயசைத்துக் கேட்டாள் அவள்.
அவரோ, அவளுக்கு அடுத்து என்று கண் காட்ட, ஒற்றை விரலால் மறைமுகமாக பக்கத்தில் சுட்டிக் காட்டி, “இவங்களா?” என்று அதிர்ச்சியுடன் வாயசைத்தாள் அபிநயா.
காளியம்மாள் ஆமென்று வேகமாக தலையாட்ட, மறுநொடி சட்டென தன்னிச்சையாக அவள் தலை திரும்பியது.
அவள் கண்களை விரித்து ஆவலாக அவனைப் பார்த்த அதே கணம், அவளின் கண்களை நேருக்கு நேராக ஊடுருவி பார்த்துப் புன்னகைத்தான் புகழேந்தி.