அபிநயா, அப்பத்தா இருவரும் அவ்வளவு நேரம் கண்ணால் பேசியதை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டு தானிருந்தான் புகழேந்தி. அவளுக்கு தன்னை யாரென்று தெரியாது என்பதே அவனுக்கு அதிக சுவாரசியத்தை அளித்தது. முதல் முறையாக தன்னைப் பார்க்கையில் அவள் முகத்தில் வரப் போகும் உணர்வுகளை காண ஆவலாக அவளைப் பார்த்தான் அவன்.
அவனை சற்றே முகம் உயர்த்தி பார்த்த அவள் கண்களில் படபடப்பு, பதட்டம் என கலவையான உணர்வுகளை மீறிய வெட்கமும், கூச்சமும் தெரிய, புன்னகைத்தான் புகழேந்தி.
அபிநயா அந்தப் புன்னகையை பார்த்ததும் மெலிதாக இதழ் பிரித்து தானும் புன்னகைத்தாள்.
அவளது பார்வையில் அவனது புருவங்கள் கேள்வியாக உயர, புன்னகையின் அளவு கூடியது. அபிநயா தடுமாறினாள். அது மனதில் மட்டுமல்ல, உடலிலும் பிரதிபலிக்க, பின்னால் சாயப் போனவளை இடக்கரம் நீட்டி அவளின் இருக்கையை இறுக்கமாக பற்றி தாங்கிப் பிடித்தான் புகழேந்தி.
அதே வேகத்தில் கையை எடுத்து விட்டு, “சாப்பிடுங்க அபிநயா” என்று அவன் சொல்ல, அபிநயா சட்டென பார்வையை தன் இலைக்குத் திருப்பினாள்.
“அண்ணே, புகழேந்தி சாருக்கு பாயாசம்…” என்று குரலில் குறும்பு கொப்பளிக்க கத்தினான் கார்த்திக்.
“டேய்..” என்று தம்பியை அதட்டி விட்டு, திரும்பி அபிநயாவை பார்த்தான். அவளோ, கீழே குனிந்த தலையை நிமிர்த்தவேயில்லை.
அனைவரும் தன்னையே பார்ப்பது போன்ற குறுகுறுப்பு ஏற்பட்டது அபிநயாவிற்கு. அவளின் முழங்கையை பற்றி, “சாப்பிடுத்தா” என்றார் வடிவுக்கரசி. அதற்கும் ஒரு தலையசைப்பை பதிலாக தந்து விட்டு, உண்ணத் தொடங்கினாள் அவள்.
அவள் அதை உண்டு முடிக்கும் முன் அவள் வரிசையில் அனைவரும் உணவை முடித்து அவளுக்காக காத்திருந்தனர்.
“அண்ணே பாயாசம்” புகழேந்தி குரல் கொடுக்க, சிரித்தான் கார்த்திக்.
அபிநயா சட்டென நிமிர்ந்து, “இல்ல. எனக்கு வேணாம்” என்றாள்.
அவளுக்கிருந்த பதட்டத்தில் பாயாசத்தை உண்ண முடியாது என்று உறுதியாக தெரிய இலையை மூடி எழுந்துக் கொண்டாள். கண்ணை உறுத்தாத வகையில் விரைந்துச் சென்று அப்பாவோடு இணைந்து கை கழுவி வந்தாள்.
அனைவரும் மீண்டும் பந்தலில் வந்து அமர்ந்தனர்.
புகழேந்தி குடும்பம் அபிநயாவையே பார்த்திருக்க, காளியம்மாள் பேத்தியை தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார். மகேஸ்வரன் மகளிடம் வந்து அத்தனையும் விளக்கினார்.
எங்கே, இப்போதே பதிலைச் சொல் என்று வற்புறுத்தி விடுவார்களோ என்று அவள் மிரண்டு பார்க்க, “ஒன்னும் அவசரமில்ல அபி. நிதானமா யோசிச்சு பதிலை சொல்லு, போதும்” என்றார் அவர்.
“சரிப்பா” என்றாள். சியாமளா மகளிடம் அவர்கள் இரண்டு குடும்பங்களும் எப்படி உறவென்று சொல்லிக் கொண்டிருந்தார்.
தலையை சுற்றி மூக்கைத் தொட்ட அந்த உறவு முறை அவளுக்கு புரியவில்லை. அத்தனை நெருக்கமான சொந்தமில்லை என்பது மட்டும் விளங்க, கேள்விகள் ஏதும் கேட்காமல் தலையசைத்தாள்.
“ஏத்தா அபி, எனக்கு சாப்பிட்டது நெஞ்சுலயே நிக்கிறாப்பல இருக்கு. வாயேன், கொஞ்ச நேரம் வெளில நடந்துட்டு வருவோம்” என்று காளியம்மாள் பேத்தியை அழைத்தார்.
“நீ உங்கப்பத்தா கூட போ அபி. அப்படியே நடந்துட்டே யோசி. நம்ம அவங்களுக்கு இப்பவே ஒரு பதிலை சொல்லிட்டா நல்லது. அடுத்து என்னனு பேசி முடிக்க தோதா இருக்கும்” என்றார் சியாமளா. மகளின் முகத்தில் இருந்த குழப்பத்தை பார்த்து, ஆறுதலாக ஏதோ சொல்ல வந்தவர் காளியம்மாள் கண் காட்டவும் அமைதியானார்.
அபிநயா அப்பத்தாவின் கைப் பிடித்து கல்யாண வீட்டை விட்டு வெளியில் வந்தாள். அதற்கடுத்து இருந்த தோட்டப் பகுதியை நோக்கி நடந்தார்கள் அவர்கள்.
வெயில் முகத்தில் சுள்ளென்று அடிக்க, கண்ணுக்கு குளிர்ச்சியை தந்தது எதிரில் இருந்த தோட்டம்.
“பார்த்ததும் எப்படி பிடிக்கும் அப்பத்தா?” என்று எதிர்க் கேள்வி கேட்டாள் அபிநயா.
“அதுசரி. எங்க காலத்துல தாலி கட்டின பின்னாடி கூட மாப்பிள்ளை மூஞ்சியை சரியா பார்க்க முடியாது. தெரியுமா? இப்போ என்னன்னா, பரிசம் போட்டு ஆறு மாசம் கழிச்சு, எல்லாம் பேசி முடிச்சு கல்யாணம் கட்டிக்கறீங்க.. ம்ம், எல்லாம் காலம்” என்று அவர் அங்கலாய்க்க,
“கதை விடாத அப்பத்தா” என்று நக்கல் சிரிப்புடன் கேலி செய்தாள் அவள்.
“உங்க காலத்துல நீங்க பிறந்ததுல இருந்து கூடவே வளர்ந்த, உங்களுக்கு ரொம்ப நல்லா தெரிஞ்ச அத்தை பையன், தாய் மாமா பையனுக்கு கழுத்தை நீட்டிட்டு, கல்யாணத்துக்கு முன்னாடி அவங்க முகத்தை பார்த்ததில்லன்னு எனக்கு காது குத்துற பார்த்தியா நீ?”
“ஒரு பெரிய மனுஷி சொன்னா ஆமாங்குறது கிடையாது. இப்படியா வாயடிப்ப? வாத்தி வீட்டுக்கு வாக்கப்பட்டு போகப் போற, இப்படி வாய் கிழிய பேசினியனா குமட்டுலயே குத்தி அனுப்புவாங்க. ஞாபகம் வச்சுக்கோ” என்று விளையாட்டாய் அவளின் தாடையில் இடித்தார் காளியம்மாள்.
அதில் கிளுக்கி சிரித்த அபிநயா, “நான் என்ன உன்ன மாதிரி ஏமாளியா அப்பத்தா? வாத்தியை எனக்கு சலாம் போட வச்சுட்டு தான் மறு ஜோலி பார்ப்பேன், தெரிஞ்சுக்கோ” என்று சொல்லி குறும்பாக கண் சிமிட்டினாள் அவள்.
காளியம்மாள் வாயடைத்து போய் நடையை நிறுத்தி விட்டு பேத்தியை திரும்பிப் பார்த்தார்.
“அப்ப உனக்கு வாத்தியை கட்டிக்க சம்மதமா?” என்று அவர் முணுமுணுப்பாக கேட்க, மறுக்க காரணங்களை தேட முடியாததால் முழித்தாள் அபிநயா.
அந்நேரம், “என்ன, எங்க பேத்தி என்ன சொல்றா?” என்று ராகம் இழுத்தபடி வடிவுக்கரசி அங்கு வர, அவரை எதிர்பார்த்திராத அபிநயா சட்டென அமைதியானாள்.
“அவ என்ன சொல்லப் போறா? நம்ம சொல்ற பேச்சுக்கு மறுபேச்சு பேச மாட்டா என் பேத்தி” என்று பேத்தியின் புகழ் பாடியபடி வடிவுக்கரசியுடன் நடந்தார் காளியம்மாள்.
அபிநயா அப்படியே நிற்க, அவளுக்கு பக்கத்தில் வந்து நின்றான் புகழேந்தி.
அப்பத்தாக்கள் இருவரும் எந்தவித திட்டமிடலும் இல்லாமல் அவர்களை தனியாக விட்டுவிட்டு முன்னே நடக்க, இளையவர்கள் இருவரும் அவர்களை மெல்லப் பின் தொடர்ந்தனர்.
அந்த மண் பாதையின் இருபுறமும் வரிசையாக காவல்காரர்களை போல நின்றிருந்தது நெடிய அகத்திக்கீரை மரங்கள். வெள்ளை, சிவப்பு என இரண்டு நிறங்களில் அகத்திப் பூக்கள் தரையெங்கும் சிதறிக் கிடக்க, அதைப் பார்த்தபடியே நடந்தாள் அபிநயா.
அவளுக்கு சற்று முன்பு, “மாப்பிள்ளை கல்லூரி உதவி பேராசிரியர்” என்று அப்பா சொன்னதுதான் நினைவிற்கு வந்தது. அவள் மனதில் ஆர்வம் இருந்தாலும் அவனை நிமிர்ந்து பார்க்க விடாமல் தடுத்தது தயக்கம்.
அவன் குரலே அப்படித்தான் என்று அவளுக்கு யார் சொல்வது? பதட்டத்தில் சேலையை இறுக பற்றினாள் அபிநயா.
புகழேந்தி அவளிடம் பேச விரும்பினாலும், அவளின் தயக்கம் புரிந்து அமைதியாக நடந்தான்.
இப்போது தோட்டத்தின் உள்ளே வந்திருந்தார்கள். ஒரு பக்கம் மல்லிகையும், மறுபக்கம் பிச்சியுமாக வரிசை வரிசையாக குத்துச் செடிகள் இருக்க, அதை ஆச்சரியமாக பார்த்தாள் அவள்.
அங்கே ஓரமாக போடப்பட்டிருந்த நீண்ட மரப் பலகையிலான இருக்கையில் அமர்ந்திருந்த அப்பத்தாக்கள் இருவரும் ஜோடியாக நடந்து வரும் இருவரையும் தங்கள் பேச்சின் நடுவே கண்டும் காணாதது போல அமர்ந்திருந்தார்கள்.
பச்சை பட்டுச் சேலையில் இருந்த அபிநயாவும், பட்டு வேட்டி சட்டையில் இருந்த புகழேந்தியும் ஒன்றாக நடந்து வந்தாலும், ஒருவரையொருவர் பார்த்து பேசிக் கொள்ளவேயில்லை.
“புகழேந்தி சார், அண்ணிக்கு நான் ஹாய் சொல்லலாமா?” திடீரென்று செடிகளுக்கு இடையில் இருந்து வெளிப்பட்டு கார்த்திக் கேட்க, அபிநயா சட்டென தன்னை நெருங்கி நிற்பதை திரும்பி பார்க்காமலேயே உணர்ந்தான் புகழேந்தி.
இன்னும் தாங்கள் இருவருமே அறிமுகம் செய்து கொள்ளவில்லை என்று தம்பியிடம் எப்படி சொல்வான் அவன்?
“டேய் கார்த்தி, இங்கிட்டு வாடா” என்று வடிவுக்கரசி சத்தமாக அழைக்க, சிரிப்புடன் அவரிடம் சென்றான் கார்த்திக்.
“என் பேர் தெரியுமா? இல்ல, நானும் ஹாய் சொல்லி இன்ட்ரோ கொடுக்கணுமா?” புகழேந்தி திரும்பி அவள் முகம் பார்த்துக் கேட்க, “தெரியும். அப்பா சொன்னாங்க” என்றாள் அபிநயா.
“ம்ம், அப்புறம் வேற என்ன சொன்னாங்க?”
“அது..” என்று ஆரம்பித்தவள் மேலே என்ன சொல்வதென்று தெரியாமல் விழிக்க, சிரிப்பை சாதுர்யமாக மறைத்தான் அவன்.
“என்கிட்ட ஏதாவது கேட்கணுமா?”
“இல்லையே” என்ற அவளின் பதில் ஒளியின் வேகத்தில் வந்தது.
“இன்னைக்கு ஈவ்னிங் அபிநயா. முடிவெடுக்க முழுசா மூனு மணி நேரம் இருக்கே. போதும் தானே?” அத்தனை தீவிரமாக கேட்டவனின் குரலில் சிரிப்பு மறைந்திருக்க, அதை அறிந்துக் கொள்ள முடியாத அபிநயா தலையை எல்லா பக்கமும் அசைத்து வைத்தாள்.
“ரைட். நான் அப்போ உங்க பதிலுக்கு வெயிட் பண்றேன்” என்றான்.
அவன் பேசிய தோரணையில் அவனது வேலைக்கு முக்கிய பங்கிருந்தது. அழுத்தம் திருத்தமாக உச்சரித்து பேசினான். அதன் விளைவாக, உடனடியாக, “ஓகே” என்ற அபிநயா, சாரை சொல்லாமல் விழுங்கினாள்.
புகழேந்தி முன்னால் கை வீசி அவளை நடக்கச் சொல்லி செய்கை செய்ய, அவசர அவசரமாக நடந்து அப்பத்தாவிடம் சென்றாள் அவள்.
அவளை அதிகம் சோதிக்காமல் வடிவுக்கரசியிடம் விடை பெற்றுக் கொண்டார் காளியம்மாள்.
“இங்கனகுள்ள நடந்துட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமா உங்க ரெண்டு பேருக்கும்?” அவர்களைப் பாத்ததும் கேள்வி கேட்டார் சியாமளா.
“உங்கிட்ட சொல்லிட்டு தானே போனோம். என்னாச்சு இப்போ கத்துறவ?” காளியம்மாள் கேட்க,
“அம்மா, நேரமாச்சு. நாம இப்போ கிளம்பினா தான் சரியாருக்கும்.” என்று அவருக்கு பதில் சொன்னார் மகேஷ்வரன். அதற்கு மேல் தாமதிக்காமல் கல்யாண வீட்டினரிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள் அவர்கள்.
ஒரு மணி நேரம் கழித்து வாடகை காரில் மாட்டுத்தாவணி நோக்கி பயணித்து கொண்டிருந்தார்கள்.
அபிநயாவின் திருமண ஏற்பாடுகளை குறித்து இப்போதே அவர்கள் விவாதிக்கத் தொடங்கியிருந்தார்கள்.
அவளோ வெளியில் வேடிக்கைப் பார்த்தபடி இருந்தாள். காளவாசலில் ஒரு உணவகம் முன் சென்று அவர்களின் வாகனம் நிற்க, அங்கு ஏற்கனவே வந்து காத்திருந்த புகழேந்தியின் குடும்பத்தை அபிநயா எதிர்பார்த்திருந்தாள் என்றே சொல்ல வேண்டும்.
“என்னம்மா அபிநயா?” என்று அப்பா கேட்ட போது, “உங்க விருப்பம் ப்பா” என்றிருந்தாள் அவள்.
புகழேந்தியை மறுக்க அவளிடம் காரணங்கள் இல்லை. அவளது சூழ்நிலையும் அதற்கு வாய்ப்பு தரவில்லை.
முதல் பார்வையிலேயே மரியாதை தரத் தோன்றும் அவனது தோற்றமும், முகத்திலும், பேச்சிலும் தெரிந்த முதிர்ச்சியும், அவள் கண்களை நேராக பார்த்து பேசி, புன்னகைத்த கண்ணியமும் அபிநயாவைக் கவர்ந்தது.
அவளின் பெற்றோர், அப்பத்தா நல்லவிதமாக சொன்னது மட்டுமல்லாது அவனின் அப்பத்தாவையும் வைத்துப் பார்க்கும் போது எதுவுமே தவறாகப் படவில்லை.