இரு குடும்பங்களும் உணவகத்தில் சந்தித்து, தேநீர், சிற்றுண்டியுடன் மேற்கொண்டு நடக்க வேண்டியதை பற்றி கலந்தாலோசிக்க, அந்த பேச்சு வார்த்தையின் மையமான இருவருக்கும் மிகத் தேவையான தனிமையை தந்தார்கள்.
“அப்புறம் அபிநயா? என்ன முடிவெடுத்தீங்க?” என்று கேட்டவனை புதிராக பார்த்தாள் அபிநயா. அவளின் பதில் தானே அவர்களை இப்படி கூட்டத்துக்கு நடுவிலும் தனியாக அமர வைத்திருக்கிறது. அப்புறம் என்ன, அப்புறம் என்று கேள்வி கேட்கிறார்? என்ற அவள் மனதை அவளின் கண்களே துல்லியமாக காட்டிக் கொடுக்க, புன்னகைத்தான் புகழேந்தி.
“படிப்பை முடிச்சுட்டு என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?”
அந்தக் கேள்விக்கு, “கல்யாணம்” என்ற அபிநயாவின் பதிலை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.
“ரைட். கல்யாணத்துக்கு அப்புறம்?”
என்று அவன் அடுத்த கேள்வியை கேட்க, அபிநயா கண்களை மூடித் திறந்தாள்.
அவளின் மௌனத்தை தயக்கம் என மொழி பெயர்த்து, “லைஃப் கோல்ஸ், ஆம்பிஷன்ஸ், கனவுகள் இப்படி நிறைய இருந்திருக்கும் இல்ல?” என்று அவளைப் பேசத் தூண்டினான். அவள் மனதை அறிந்துக் கொள்ள முயன்றான்.
அவன் கல்லூரி பேராசிரியர் என்பது அவள் மனதில் அழுத்தமாக பதிந்திருக்க, அவனது ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல தடுமாறினாள் அபிநயா.
“அபிநயா..” அவன் அழைக்க, எச்சில் கூட்டி விழுங்கியவள், “சார்” என்று சொல்லும் முன்பு அவனே முந்திக் கொண்டான்.
“சார்னு மட்டும் சொல்லிடாத மா.” அவள் முன்னே சாய்ந்து அவன் சொல்ல, “ஓகே” என்று சமத்தாக சொன்னவள், சாரை மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.
“ரைட். வேலைக்கு எதுவும் போற ஆசையிருக்கா அபிநயா? உங்க காலேஜ்ல கேம்பஸ் இன்டர்வியூ வந்திருப்பாங்க இல்ல?”
“வந்தாங்க. ஆனா, எனக்கு வேலைக்கு போக வேணாம்” முடிவாக சொன்னாள். அந்தக் குரல் அவனை மேலும் கேள்வி எழுப்ப விடவில்லை.
“ரைட். ஓகே. அப்புறம்?”
“அப்புறம் என்ன? வேலைக்கு போகலைன்னா வீட்லதான் இருக்கணும்” முணுமுணுத்தாள். அது அவனுக்கும் கேட்டு விட, சத்தமாக சிரித்தான் புகழேந்தி.
“ஐ ஆம் சாரி. ஸ்டூடண்ட்ஸ் கூட பேசி பேசி எனக்கு அந்த டோன் தான் வருது. ரியலி சாரி” என்றான் அவள் முகம் பார்த்து.
“இட்ஸ் ஓகே சார்” என்று அவள் சொல்ல, இருவருமே சிரித்து விட்டார்கள்.
“ரைட் அபிநயா. நான் நேரா விஷயத்துக்கு வர்றேன். இந்த கல்யாண பேச்சு உங்க விருப்பத்தோட, உங்க முழு சம்மதத்தோட தானே நடக்குது?” அதுவரை அவன் குரலில் இருந்த கடினத்தன்மை இப்போது காணாமல் போய் இருந்தது.
மென்மையாய் அவன் கேட்க, “எஸ்” என்றாள் அபிநயா.
“இந்த எஸ் எனக்கும் சேர்த்தா அபிநயா?”
அதற்கும் வேகமாக, “எஸ்” என்று அவள் சொல்ல, “ஓகே” என்று அவனும் ஒற்றை வார்த்தையை பதிலாக தந்தான்.
மாலை அவர்கள் திருமண வீட்டில் இருந்து கிளம்பியதும், மாணிக்கவேலன் மகனைப் பிடித்துக் கொண்டார்.
“நீ பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொன்னதுக்கு அப்புறம் இதைச் சொல்றது தப்புதான். ஆனாலும், உங்கிட்ட இதை சொல்லாம விடுற அளவுக்கு சின்ன விஷயமும் இல்லை.” என்று அவர் பீடிகை போட, “என்னனு சொல்லுங்கப்பா” என்றான் புகழேந்தி.
“பொண்ணு வீட்லயும் அவங்களுக்கு இதை நம்மகிட்ட இருந்து மறைக்கிற எண்ணமெல்லாம் இல்ல. கல்யாண பேச்செடுத்ததும் உடனே சொல்ல வேணாம்னு நினைச்சுருக்காங்க. நாம பொண்ணை பிடிச்சுருக்குன்னு சொன்னதுக்கு அப்புறம் உண்மையை சொல்லலாம்னு இருந்திருக்காங்க. அது எனக்கும் சரின்னு பட்டது”
“அப்பா..” புகழின் பொறுமை கரைய, மாணிக்கவேலன் பட்டென்று போட்டு உடைத்தார்.
அவர் எப்படியென்று கேட்கவில்லை. அவனும் நானாக யூகித்தேன் என்று சொல்லவும் இல்லை.
“சரி. நீ என்ன சொல்ற தம்பி?”
“இதுல நான் சொல்ல என்ன இருக்குப்பா? எவனோ பைத்தியக்காரத்தனமா, ஸ்டாக்கர் (Stalkar) வேலை பார்த்தா, அதுக்கு அபிநயா எப்படி பொறுப்பாவா?” என்று கோபத்துடன் கேட்ட மகனின் தோளில் பெருமையுடன் தட்டினார் மாணிக்கவேலன்.
“சரிப்பா. அப்போ உனக்கு ஆட்சேபனை இல்லனா அவங்ககிட்ட பேசி கல்யாணத்துக்கு நாள் குறிச்சிடுறோம். உனக்கு தோதுப்படுற தேதியா இருக்கணும். அதை மட்டும் பார்த்துப்போம்” என்றார்.
இப்போதும் அவன் எதிரே எண்ணற்ற கேள்விகளுடன் அமர்ந்திருந்த அபிநயாவை பார்த்து, “ரைட் அபிநயா” என்க, அவள் நிமிர்ந்து அமர்ந்தாள்.
“ஆல் த பெஸ்ட். எக்ஸாம்ஸ் நல்லா பண்ணுங்க” என்றான்.
‘டவுட் எதுவும் வந்தா கேட்கவா சார்?’ என்ற கேள்வியை நுனிநாக்கை கடித்து தடுத்தாள் அபிநயா.
“அங்க எல்லோரும் நமக்காகதான் வெயிட் பண்றாங்க. அவங்களை காக்க வைக்காம போய் ஜாயின் பண்ணுவோம், வாங்க” என்றபடி அவன் எழுந்து கொள்ள, அவளும் இணைந்துக் கொண்டாள்.
இருவரின் முகம் பார்த்து அவர்கள் சொல்லாமலே புரிந்துக் கொண்ட பெற்றவர்கள், புன்னகைத்தார்கள்.
அவளின் குடும்பம் சென்னை திரும்பியதும், அவர்களின் மகிழ்வும் சேர்ந்து திரும்பியிருந்தது.
அபிநயாவிற்கு தேர்வுகள் நெருங்க, அதற்கு முன்பு மாப்பிள்ளை வீட்டினர் அவளுக்கு பூ வைக்கும் வைபவத்தை வைத்து விட விரும்பினார்கள். புகழேந்திக்கு அதில் அத்தனை ஒப்புதல் இல்லையென்றாலும், அவர்கள் வீட்டினரின் முடிவை ஆதரித்தார் மகேஷ்வரன். அதனால், அவனாலும் அதிகம் மறுக்க முடியவில்லை.
“என்ன அபி, மதுரைக்கு சொந்தக்காரன் கல்யாணத்துக்கு தானே போன? இப்போ உனக்கு கல்யாணம்னு வந்து ஷாக் கொடுக்கிற?” ஷபானா கேட்க, “நீ வேற ஷபா, அது எனக்கே ஷாக்தான். அங்க போய் தான் எனக்கே தெரியும். அப்பா ஏற்கனவே பேசி வச்சதுன்னு சொல்றார்” என்றாள் அபிநயா.
“ம்ம். ஓகே. மாப்பிள்ளை புரோபஸர்னு வேற சொல்ற? என்ன டிபார்ட்மெண்ட்? என்ன சப்ஜெக்ட்? உன்னை என்னெல்லாம் கேள்வி கேட்டார்?” தோழி கேட்க, பே என்று முழித்தாள் அபிநயா.
புகழேந்தி தான் வேலைப் பார்க்கும் கல்லூரி பேரைச் சொன்னதும் அபிநயா அதிர, “எங்க காலேஜ் அளவுக்கு நான் ஸ்ட்ரிக்ட் இல்ல” என்று அவன் சொன்னது அவளுக்கு நினைவிற்கு வந்தது.
அதன் பின்னர் அவள் எங்கே கேள்வி கேட்டாள்? அவன் தான் கேள்விகளை அடுக்கினான் என்று தோழியிடம் எப்படிச் சொல்ல?
“சாரி, நான் அவர்கிட்ட கேட்கலயே ஷபா”
“அடிப்பாவி. என்ன சொல்ற? கேட்கலயா? சரி விடு. அப்போ பதட்டத்துல மறந்துருப்ப. இப்போ கேளு”
“இப்போவா? இப்போ எப்படி கேட்க?” அபிநயா குழப்பத்துடன் கேட்க,
“படிக்கிற பிள்ளை மனசை கலைக்க வேணாம்னு நினைச்சுருப்பார் புரோபஸர். அதைப் பாராட்டுவோம்” என்று ஷபானா சொல்ல, சிரித்தாள் அபிநயா.
மதுரையில் சாமுவேலும் நண்பனிடம் அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தான்.
“ம்ம், உன் ரூல்சை ப்ரேக் பண்ணிணாலும், நியாயமா தான்டா இருக்க புகழ்”
“என்ன நியாயமா இருந்தேன்?” புகழேந்தி நண்பனை முறைக்க, “காலேஜ் படிக்குற பிள்ளையை கல்யாணம் பேசினாலும், அடிக்கடி பேசி படிக்கிற பிள்ளை மனசை கலைக்க கூடாதுனு நினைக்கிற உன் மனசை நான் பாராட்டுறேன் புகழ்” என்று சாமுவேல் சொல்ல, அதற்கு பதிலே சொல்லவில்லை புகழேந்தி.
அவனுக்கென்று சில நியதிகள் அவன் வகுத்திருக்க, அதை மீறுவதில் முதல் முறையாக அவனுக்கு எந்தவித குற்ற உணர்வும் இருக்கவில்லை.
“நான் பேசலைன்னு நீ நம்பினா அதுக்கு நான் பொறுப்பில்லை” நமுட்டு சிரிப்புடன் நண்பனுக்கு புகழேந்தி பதில் சொல்ல,
“ஐயோ, உங்களுக்கு பொய் சொல்ல வரல புகழ் சார்” என்று நக்கலடித்தான் சாமுவேல்.
“ச்சே போய் தொலைடா” என்று அங்கிருந்து நகர்ந்தான் புகழேந்தி.
அபிநயாவின் வாழ்வில் அத்தனையும் ஒரு ஒழுங்கிற்கு வந்திருந்தது. பல மாதங்களுக்கு பிறகு நிம்மதியாக உறங்கினாள் அவள். தன் வீடு, அதன் சுற்றுப்புறம் என எங்கும் பாதுகாப்பாக உணர்ந்தாள். ஆனாலும், உள்ளுக்குள் வேரூன்றி இருந்த பயத்தினால் அதிகம் வெளியில் செல்லவில்லை அவள்.
ஒரு வாரம் கழித்து ஷபானாவுடன் கல்லூரிக்கு ஒரு வேலையாக சென்றாள்.
கல்லூரியை நெருங்கும் முன் அவர்களின் வழியை மறித்து வந்து நின்றான் அவன். மோகன் குமார்.
அபிநயா அதிவேகமாக வண்டியை நிறுத்தி அவனை எரித்து விடுவதைப் போல பார்த்தாள்.
“பொறுக்கி, வழியை விட்டு நகர்ந்து நில்லுடா” என்று கத்தினாள் ஷபானா. அவன் பார்வை அபிநயாவின் மேலிருந்தது.
“எனக்கு உன்கிட்ட பேசணும்?” என்றவனை அசட்டை செய்து வண்டியை இயக்கி அவனைச் சுற்றிக் கொண்டு போனாள் அபிநயா.
“ஹேய் அபிநயா” என்று அவன் அழைப்பது கேட்டாலும், அங்கேயே நின்று அவனுக்கு பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்க விரும்பவில்லை அவள்.
மனம் முழுக்க கோபம் கொழுந்து விட்டெரிய கல்லூரியில் வேலை முடித்து வீடு வந்ததும் அம்மா, அப்பத்தாவிடம் நடந்ததை சொல்லி விட்டாள்.
மகேஷ்வரன் வீடு வர அவர்கள் காத்திருக்க, மாலை அவர் வந்த சில நிமிடங்களிலேயே, அபிநயாவை பெண் கேட்டு வந்தார்கள் மோகன் குடும்பத்தினர்.
இன்னும் ஒரே வாரத்தில் அவளுக்கு புகழேந்தி குடும்பத்தினர் பூ வைக்க வருவதாக இருந்தனர்.
மகேஸ்வரன் மகளின் நிம்மதி மீண்டும் காணாமல் போவதற்கு காரணமானவனைப் பார்த்து தான் அமைதியிழந்தார்.