“கொஞ்ச நாளைக்கு முன்னாடி நீ ஒரு யோசனை சொன்னியே ஞாபகமிருக்கா ஆத்தா?”
“நான் பலதும் சொல்வேன். அதுல நீ எதைச் சொல்றேன்னு தெரியலையே?”
“நாம மதுரைக்கு போய்டலாம்னு சொன்னியே ஆத்தா..”
“ஆமாய்யா. இப்போ போய்டலாங்கிறியா?” என்று காளியம்மாள் கேட்க, பலமாக தலையசைத்தார் அவர்.
அனைவருக்கும் காஃபி கொண்டு வந்த அபிநயா அவர்களின் பேச்சைக் கேட்டபடி வந்து காஃபியை நீட்டினாள்.
“அம்மா, இந்தாங்க காஃபி” என்று அவள் குரல் கொடுக்க, உள்ளிருந்து வந்தார் சியாமளா.
அவரிடம் தங்களின் முடிவை மகேஷ்வரன் சொல்ல, பலமாக மறுப்பு தெரிவித்தார் அவர்.
“இது ஏற்கனவே மனசுல இருந்த ஐடியா தான் சியாமளா” என்று மகேஷ்வரன் சொல்ல, “எல்லாம் இவளால வந்தது” என்று மகளின் மேல் பாய்ந்தார் சியாமளா.
“திடுதிப்புனு மதுரைக்கு போவோம்னா எப்படிங்க? உங்களுக்கு வேலை இங்கன தானே? அதைவிட்டு எப்படி மதுரை போக முடியும். நம்ம பையன் பிளஸ் டூ முடிச்சிட்டான். அடுத்து அவனை காலேஜ் சேர்க்கணும். இங்க சென்னைலன்னா நல்ல காலேஜ் நிறைய இருக்கும்”
“மதுரைல பள்ளிக்கூடமே இல்லாமதான் நீயும், உன் புருஷனும் படிச்சு வந்தீங்க இல்லத்தா? வந்துட்டா பேச..” என்று கடுப்புடன் சொன்ன காளியம்மாள்,
“உன் மருமகனே காலேஜ்ல தான் வேலைப் பார்க்கிறான். அங்கன நல்ல காலேஜ் இல்லைனு சொல்லிட்டு இருக்க நீ” என்று அவர் முறைக்க, “இது நம்ம சொந்த வீடு அத்த. இதை விட்டுட்டு எப்படி..” என்று அடுத்த காரணத்தை அடுக்கினார் சியாமளா.
“அப்பத்தா” என்று கத்திய அபிநயாவிற்கும் சிரிப்பு வந்து விட்டது.
மகேஸ்வரன் மனக் கணக்குகள் போட்டபடி எதிரில் இருந்த சுவரை வெறித்துக் கொண்டிருந்தார். மனைவியை தன் அம்மா சமாளித்து விடுவார் என அவருக்கு நன்றாகத் தெரியும்.
சென்னையின் பிரபலமான வாடகை கார் (call taxi) நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்துக் கொண்டிருந்தார் அவர். பல வருட அனுபவமும், பதவிக்கான நல்ல வருமானமும் வரும் இந்த வேலையை விட்டுவிட்டு மதுரையில் புதிதாக ஒரு வேலையை தேடுவதும், அவரது வயதிற்கு அதில் பொருந்திப் போவதும் அவருக்கு கடினம் தான் என்றாலும், மகளின் மகிழ்ச்சி மட்டுமே தற்போது அவருக்கு பெரிதாகப்பட்டது.
மேலும், காளியம்மாள் கடந்த சில வருடங்களாக சொந்த ஊரின் புகழ் பாடிக் கொண்டிருந்தார். வேலை, சொந்த வீடு என பலவற்றை காரணம் காட்டி மகேஸ்வரன் தட்டிக் கழித்து கொண்டே வந்திருந்தார். ஆனால், இப்பொழுது மோகன் குமாரால் ஒரு முடிவுக்கு வந்திருந்தார் அவர்.
“ஏங்க, உங்கம்மா சொல்றதை கேட்டுட்டு முடிவெடுக்காதீங்க. அபியை கட்டிக் கொடுத்துட்டா, அவ மாப்பிள்ளை வீட்டோட மதுரையில இருக்கப் போறா. நமக்கு சொந்த வீடு இங்கருக்கும் போது, இதை விட்டுட்டு அந்த பழைய வீட்ல இருக்கணுமா?” என்று சியாமளா ஆதங்கத்துடன் கேட்க,
“இந்தா, பொண்ணை பெத்த ஆத்தா மாதிரி பொறுப்பா பேசு சியாமளா. மகளை கல்யாணம் பண்ணி அனுப்பிட்டா, அத்தோட எல்லாம் முடிஞ்சுதா? அவ நாள பின்ன புருஷனோட உன் வீட்டுக்கு வந்துட்டு போக வேண்டாமா? அம்மா வீடுன்னு அவளுக்கு ஒன்னு வேணாமா? அந்த பொறுக்கி பய இங்கனக்குள்ள இருக்கும் போது, நம்ம அபி எப்படி நிம்மதியா வர, போக இருக்க முடியும், சொல்லு? காலம் பூரா அவன் தொல்லை கொடுத்தா என்ன பண்றது?” என்று கேட்க, பதிலின்றி முழித்தார் சியாமளா.
“கல்யாணம் முடிஞ்சு மறுவீடு இருக்கு. அடுத்து ஆடி, அப்புறம் பிரசவம், பிள்ளையை ஆறு மாசம் பார்த்து அனுப்பறதுன்னு எத்தனை இருக்கு? அபியும் நம்ம வீட்டுக்கு நிம்மதியா வந்து போகணும். மாப்பிள்ளையும் நம்ம பிள்ளையை யோசிக்காம அனுப்பி வைக்கிறதும் நம்ம கையில தான் இருக்கு. இப்படி ஒருத்தன் தன் பொண்டாட்டியை சுத்தி வந்து டார்ச்சர் பண்றது தெரிஞ்சும், அவளை தனியா அம்மா வீட்டுக்குனாலும் அனுப்ப அவனுக்கு மனசு வருமா நீ சொல்லு?” காளியம்மாளின் கேள்வி அங்கிருந்த அனைவரையும் யோசிக்க வைத்தது.
அபிநயா பிறந்ததில் இருந்து சென்னையில் தான் வளர்கிறாள். அப்புச்சி உயிரோடு இருந்தவரை காளியம்மாள் மதுரையில் தான் இருந்தார். அப்போது பள்ளி விடுமுறை, பண்டிகை, திருவிழா என எல்லாவற்றிற்கும் மதுரை சென்று விடுவார்கள் அவர்கள். சியாமளாவின் பிறந்த வீடும் மதுரைதான் என்பதும் கூடுதல் காரணம். காளியம்மாவிற்கு ஊரில் சொந்த வீடு, நில புலன்கள் என அனைத்தும் இருக்க, அதைப் பார்த்துக் கொள்ள பொறுப்பான ஆள்களை நியமித்திருந்தார் அவர். இப்பொழுது அங்கு செல்வதில் அவருக்கு மிகுந்த விருப்பமே.
அபிநயாவிற்கு தான் வளர்ந்த ஊரை பிரிவதும், சொந்த வீட்டை விற்று விட்டுச் செல்வதையும் நினைக்கவே வேதனையாக இருந்தது. அத்தனைக்கும் பின்னால் இருந்தவனை மனதில் கண்டபடி அர்ச்சித்தாள் அவள்.
சியாமளாவிற்கு மகளைக் குறித்த அக்கறை அதிகமாக இருந்தது. அதே நேரம் சொந்த வீட்டை விற்று விட்டுச் செல்வதை அவர் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. கணவரின் வேலை, மகன் படிப்பு என அனைத்தையும் யோசித்து, தீர்க்கமாக ஒரு முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார் அவர்.
அந்த மாலைப் பொழுதில் எத்தனை நிகழ்வுகளை பார்த்து விட்டார் அவர். அடுத்தடுத்து மூச்சு விட அவகாசம் கொடுக்காமல் நிகழ்ந்தவைகள் அவரை ஆசுவாசப்பட அனுமதிக்கவில்லை.
“என்னங்க…” என்று இழுத்தவரை காளியம்மாள் கடுமையாக முறைக்க, “என்னத்தே நீங்க, பொசுக்குன்னு மதுரைக்கு போவோம்னு சொன்னா எப்படி? இப்போ அபி கல்யாண வேலையை பார்க்கிறதா, இல்ல நாம மதுரைக்கு போறதை பார்க்கிறதா?” என்று கேட்க, “அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்” என்று திடமாக சொன்னார் காளியம்மாள்.
“ஆள் அம்பு இருக்கு. கையில காசு பணம் இருக்கு. அப்புறம் காரியம் நடக்காம இருக்குமா?” என்று அவர் கேட்க, சியாமளாவால் பதில் சொல்ல முடியவில்லை.
அவர் இருமனதாக தலையசைக்க மற்ற இருவரும் திட்டமிட்டத் தொடங்கினார்கள்.
“சென்னையை விட்டு போறது ரொம்ப கஷ்டம் இல்லப்பா? ஐ ஆம் சாரி” என்றாள் அபிநயா.
“எங்களுக்கு நீ தான் அபி முக்கியம். எங்கருந்தாலும் நீ சந்தோசமா இருக்கணும். அம்புட்டு தான்.” என்ற அப்பாவை கண்கள் கலங்கப் பார்த்தாள்.
“நீ பத்திரமா இல்லன்னு தெரிஞ்சா எங்களுக்கு எப்படி தூக்கம் வரும்த்தா? ஒரு வாய் சோறு இறங்குமா சொல்லு? ஊரா பெருசு? எம் பேத்தி தானே பெருசு” காளியம்மாள் சொல்ல, அவரின் மடியில் படுத்து இடையோடு கட்டிக் கொண்டாள் அபிநயா.
ஒரு குடும்பத்தின் ஒட்டு மொத்த நிம்மதியையும், அமைதியையும் எதிர்காலத்தையும் தலை கீழாக மாற்றிப் போட்டவனை மனதிற்குள் சபிக்க மட்டுமே அவளால் முடிந்தது.
அவளுக்கு திருமணம் பேசியிருக்கிறார்கள் என்று அவனுக்கு எப்படித் தெரிய வந்தது என்று பல மணி நேரமாக அவள் மண்டையை உடைத்துக் கொண்டிருந்தாள்.
அம்மா, அப்பத்தா இருவரும் அக்கம் பக்கத்தினரிடம் சொல்லியிருக்க, அவனுக்கு அப்படித்தான் தெரிய வந்திருக்கும் என்று அவளாகவே ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.
பள்ளி இறுதி தேர்வு முடிவுகளுக்கு காத்திருந்த சித்தார்த் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு அப்போது தான் வீடு வந்தான். அவனுக்காக கதவைத் திறக்கப் போனாள் அபிநயா. அப்போது அவனோடு வந்திருந்த அவனின் நண்பன், “அக்கா, உங்களுக்கு கல்யாணமாம், சித்து சொன்னான். கங்கிராட்ஸ் கா” என்று வாழ்த்த, அவள் விஷயம் ஊருக்கே தெரிந்திருப்பது அப்போது தான் அவளுக்குத் தெரிந்தது.
அவளின் பெற்றோர், அப்பத்தா மூவரும் தீவிர திட்டமிடலில் இருக்க, அபிநயா தம்பிக்கு காஃபி கொடுத்து விட்டு தனிமை தேடி தன் அறைக்கு போனாள்.
மதுரையில் மாணிக்கவேலன் குடும்பம் மறுநாள் இரவே சென்னை கிளம்பும் ஆயத்தங்களில் மும்முரமாக இறங்கியது.
புகழேந்தி அம்மா கேட்டது அனைத்தையும் எடுத்துக் கொடுத்து விட்டு தன் அறைக்குள் வந்தான்.
அறைக்கு வெளியே அப்பாவின் குரல் கேட்க, அவர் சொன்னது அவன் மனதில் ஓடிக் கொண்டேயிருந்தது.
வன்தொடர்தல் (Stalking – ஸ்டாக்கிங்) காதல் அல்ல. அது வன்முறை, குற்றம் என்று இந்த சமூகம் என்றைக்கு புரிந்துக் கொள்ளும்? என்று அவன் மனது கவலைக் கொள்ள, அபிநயாவிடம் பேசியே ஆக வேண்டும் என்ற ஆவல் அவன் மனதை அலைக்கழிக்க, அவளின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பினான் அவன்.
“ஹாய், நான் புகழேந்தி. நீங்க ஃப்ரீயா? பேசலாமா?” என்று கேட்டு வந்த குறுஞ்செய்தியை உதட்டில் உறைந்த புன்னகையுடன், தடதடக்கும் இதயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அபிநயா.
“நான் ஃப்ரீ தான். கால் பண்ணவா?” என்று அவள் பதில் சொல்ல, அதற்கு பதிலாக அவளை அழைத்தான் புகழேந்தி.
“ஹாய் அபிநயா, எப்படி இருக்கீங்க?” என்று கேட்டு பின் திருத்தி, “எப்படியிருக்க?” என்று மீண்டும் கேட்டான் அவன்.
“நான் நல்லாருக்கேன். நீங்க?”
“ம்ம். நல்லாருக்கேன். இன்னைக்கு காலேஜ் போனீங்க போல? எக்ஸாம் ஹால் டிக்கெட் வாங்கிட்டியா?” அவன் கேட்க, எப்படி இவருக்குத் தெரியும் என்று அதிர்ந்தாலும், “வாங்கிட்டேன்” என்று பதில் சொன்னாள் அபிநயா.
“ரைட். அப்புறம்?”
“அந்த ஹால் டிக்கெட்டை எடுத்துட்டு போய் எக்ஸாம் எழுதணும்.” அவள் சொல்ல சிரிப்பை அடக்கினான் புகழேந்தி.
அவள் குரலில் இருந்த சோர்வு அவனை உந்த, “அபிநயா, வாட்ஸ்அப் வீடியோ கால் பண்ணவா?” என்று கேட்டான்.
“ஓ, ஓகே” என்று அவள் தடுமாற்றத்துடன் பதில் சொல்லி முடிக்கும் முன்பே காணொளி அழைப்பில் வந்து விட்டான் புகழேந்தி.
அவள் அழைப்பை ஏற்றதும் அலைபேசியை உயர்த்திப் பிடித்து நேராக அவள் விழிகளை பார்த்தான்.
அபிநயா என்ன பேச என்று தெரியாமல் மொழி மறந்து முழிக்க, “ரொம்ப தொல்லை பண்றானா அபி?” என்று கரிசனத்துடன் கேட்டான்.
அவள் விழிகள் அதிர்ச்சியில் விரிய, “என்னத் தொல்லை? ஓ, உங்களுக்கு தெரியுமா? அப்பா சொன்னாங்களா?” என்று அதிர்ச்சியுடன் கேள்வி கேட்டு, “உங்க வீட்ல அப்பா சொல்லியிருப்பாங்க இல்ல?” என்று அவளே பதிலும் சொல்ல, “இல்லையே, எனக்கு நீ தான் சொன்ன” என்றான் புகழேந்தி.
“கல்யாண வீட்ல காலையில ஒருத்தனை என் பின்னாடி வராதன்னு மிரட்டினியே அபி. அதை வச்சு கெஸ் பண்ணேன்” என்றவன், அவள் பயந்ததை, பதட்டத்துடன் திரும்பி திரும்பி பார்த்தபடி நடந்து வந்ததை வைத்து தான் கணித்ததை சாமர்த்தியமாக மறைத்தான்.
அபிநயா அவனையே பார்த்திருந்தாள். அந்த கணம் அவனைப் பிடித்தது. அவள் பார்வையில் அவன் புன்னகைக்க, தானும் புன்னகைத்தாள்.
“அவனை நீயென்ன பண்ணனும்னு நினைக்கிற அபி?”
“நான்.. நானென்ன பண்ண முடியும்? போலீஸ் கேஸ் குடுக்க கூட அம்மா பயப்படுறாங்க. அதைத் தவிர வேறென்ன பண்ண முடியும்?”
“போலீஸ் கேஸ் குடுக்கணும்னா குடுத்திடலாம் அபி. இன்னும் ரெண்டு மாசத்துல நீ இங்க வந்துடுவ. நீ பயப்படத் தேவையில்ல. நான் பார்த்துக்கறேன்” என்றான் அவள் கண்களைப் பார்த்து. புகழேந்தி எந்த அலங்கார வார்த்தைகளும் சொல்லவில்லை. ஆனாலும், அந்த நிமிடம் அபிநயாவிற்கு அவனை அத்தனைப் பிடித்தது.
கண்கள் கலங்க, மனம் நிறைய, அவனையே கண்ணிமைக்காமல் பார்த்தாள் அவள்.
“ஹேய் அபி, என்னாச்சு?” கனிவுடன் கேட்டான்.
அவளின் அமைதியை பார்த்து விட்டு, “சாரி. நான் இனி இதைப் பத்தி பேசி உன்னை அப்செட் பண்ணல. ரைட்?” என்று புருவம் உயர்த்திக் கேட்டான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அபிநயா.