அவளின் குடும்பத்தினர் பாசமானவர்கள் தான். அவளுக்கு பிடிக்காத எதையும் அவள் மேல் வலுக்கட்டாயமாக திணித்தது கிடையாது. ஆனாலும், அவளின் பெரும்பாலான முடிவுகளை அவர்கள்தான் எடுத்தார்கள்.
முதல் முறையாக, “நீயென்ன பண்ணனும்னு நினைக்கிற?” என்று அவளின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து புகழேந்தி கேட்டது அவள் மனதில் ஆழப் பதிந்தது.
இதுநாள் வரை மனதில் கனமாய் அழுத்திக் கொண்டிருந்த பாரம் ஒன்று மெல்ல இறங்கியது.
“அபி” என்று கண்டிப்புடன் அழைத்தவனை கண்களால் அலைபேசி வழியே தொட்டு விட முயன்றாள்.
“அம்மா, அப்பாவை மீறி நான் எதுவும் செய்ய விரும்பல. எக்ஸாம் முடிச்சுட்டு மதுரைக்கு வந்துட்டா போதும் எனக்கு” என்றாள்.
அதை வேறு விதமாக புரிந்துக் கொண்டு, “ஓ, ரைட்” என்றான் புகழேந்தி புன்னகையுடன்.
அந்த புன்னகையில் தெரிந்த மகிழ்ச்சி கலந்த கேலியில் அபிநயா ஒரு கணம் குழம்பினாள்.
“மதுரைக்கு வர அம்புட்டு ஆசையா அபி? அப்ப கல்யாண நாளை சீக்கிரம் குறிக்கச் சொல்லிடுவோம்” என்று கண்ணடித்தான்.
“என்னது?” என்று கேட்டவளுக்கு, அவனது வார்த்தைகளை விட அந்த பார்வையும், ஒற்றை கண் சிமிட்டலும் தான் அதிகம் தடுமாற செய்தது.
“என்ன அபி? கல்யாண தேதியை முன்னாடி தள்ளி வைக்க சொல்லவா?”
“முன்னாடி தள்ளியா? எப்படி, இப்போ பூ வைக்கிறதை பண்ண மாதிரியா?” என்று அபிநயா கேட்க,
“அது நிஜமா எனக்கு காலேஜ்ல வேலையிருக்கு” என்று கண்ணை உருட்டியவனை அவள் நம்பாத பார்வை பார்த்தாள்.
“இங்க பாரு அபி” என்றழைத்து, “அந்த ஸ்டாக்கரை பத்தி யோசிச்சு பயப்பட வேணாம். பார்த்துக்கலாம். ரைட்?” என்று அவன் கேட்க, சம்மதமாய் தலையசைத்தாள். காணொளி அழைப்பில் அவள் கண் முன்னே மறைந்துப் போனான் புகழேந்தி.
அன்றிரவு நிம்மதியாக உறங்கினாள் அபிநயா. அவளுக்கு கல்யாண கனவுகள் வரவில்லை என்றாலும் புகழேந்தியின் புன்னகை முகம் அடிக்கடி மனக் கண்ணில் வந்து நின்றது.
ஞாயிறு காலை அவனே நேராக வந்து நின்றான். அவன் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் நெருங்கிய சொந்தங்கள் சூழ வந்திருந்தார்கள்.
அபிநயா குடும்பத்தார் தங்களால் இயன்ற அளவில் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.
முன்காலைப் பொழுதில் இரு வீட்டு பெரியவர்கள் முன்னிலையில் அபிநயாவிற்கு பூ வைத்து, பரிசம் போடும் நிகழ்வு சிறப்பாக நடந்து முடிந்தது.
மதிய உணவிற்கு பிறகு வந்திருந்த உறவினர்கள் எல்லாம் ஓரமாக அமர்ந்து கதைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அபிநயா, புகழேந்தி இருவரையும் புகைப்படங்கள் எடுக்க அனுமதிக்க, ஓரிரு புகைப்படங்கள் எடுத்ததும் போதும் என்று விட்டான் புகழேந்தி.
அபிநயாவுடன் அங்கேயே தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவனின் கண்கள் அவள் வீட்டு நாய்க் குட்டியையும், வீட்டின் சுற்று சுவரையும் பார்வையிட்டு கொண்டிருந்தது.
“அபி, நாய்க்குட்டி பேர் என்ன? பெட்ஸ் ரொம்ப பிடிக்குமா?” என்றுக் கேட்டான்.
“பிடிக்கும்னு இல்ல. பக்கத்து வீட்டு ஜாக்கியை பார்த்து வளர்க்கலாம்னு ஆசையா இருந்தது. அதான் வாங்கினேன்” என்றாள்.
அது ஆசைக்கு அல்ல, பாதுகாப்புக்கு என்பது புதிதாகக் கட்டப்பட்டிருந்த காம்பவுண்ட் சுவரை பார்த்ததும் அவனுக்கு விளங்கியது. இந்த வீட்டை விட்டு மதுரைக்கு மொத்தமாக குடிபெயர்ந்து விட நினைப்பவர்கள், எதற்காக பெரிதாக மதில் சுவர் எழுப்பி, கேட் போட்டார்கள் என்பதற்கு காரணம் யாரும் சொல்லாமலே அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
“ம்ம். ரைட். பேர் என்ன சொன்ன?” புகழேந்தி கேட்க, அபிநயா பதில் சொல்லும் முன், “ஐரீன்” என்று அழைத்து, நாய்க் குட்டிக்கு பந்து தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தான் கார்த்திக்.
“ஐரீன்?” என்று அபியிடம் சந்தேகமாக கேட்டான் புகழேந்தி.
“ம்ம். ஏன் அந்த பேர் நல்லால்லையா? நீங்க வேணா ஒரு நல்ல பேர் சொல்லுங்க, வைப்போம்” என்று அபிநயா படபடக்க, அவளையே பார்த்திருந்தான் புகழேந்தி.
அவன் தேர்ந்தெடுத்து வாங்கியிருந்த அரக்கு நிற பட்டுச் சேலையை தழைய தழைய கட்டியிருந்தவளின், முதுகு மொத்தத்தையும் மதுரையின் குண்டு மல்லி நிறைத்திருக்க, சேலையின் கவர்ச்சி, மல்லியின் வாசத்தை மீறி அவனைக் கட்டி இழுத்தது அவளின் கண்கள்.
மெலிதாக புருவம் உயர்த்தி கண்களால் என்னவென்று அவன் கேட்க, “என்ன? பேர் தானே கேட்டேன்?” என்றாள் அபிநயா அவனது பார்வையின் மாற்றம் புரியாமல்.
“ஐரீன். அதுவே நல்ல பேர் தானே அபி.” என்றான். அதைக் கேட்டதும் நாய்க் குட்டி வாலை ஆட்டியபடி அபியை பார்த்து குலைத்தது.
“ஐரீன், அமைதியின் பெண் தெய்வத்தோட பேர் இல்லையா?” அவன் கேட்க, அவள் விழிகள் வியப்பில் விரிந்தது.
“நீங்க புரோபசர்னு நான் மறந்துட்டேன்” அவள் சொல்லவும் சிரித்தவன், “ம்ம், ரைட். நீ ஒழுங்கா படிப்பை முடி.” என்றான்.
“இப்போ உன்கிட்ட எதையும் பேசவே யோசிக்க வேண்டியதா இருக்கு” என்று புகழ் முணுமுணுக்க, அது அவள் காதில் தெளிவாக விழுந்தது.
அபிநயா புன்னகைக்க, அந்தப் புன்னகை வாடும் முன் விடை பெற்றுக் கொண்டார்கள் புகழேந்தி குடும்பத்தினர்.
மாணிக்கவேலன் முன்னிலையில் அவர்கள் குடும்பத்தினரிடம் தாங்கள் மதுரைக்கு குடி பெயரப் போவதை தெரிவித்து விட்டார் மகேஷ்வரன்.
அவர்களும் தங்களால் ஆன உதவிகளைச் செய்வதாக சொல்ல, மகேஷ்வரன் மகிழ்ந்து போனார். மகள் வாழ்வை குறித்த அவரின் பயமும், கவலையும் மட்டுப்படத் தொடங்கியது.
அன்று பொழுது சாயும் வேளையில் அபிநயாவை இழுத்து வைத்து, இங்கிருந்தே மதுரையில் அனைவரையும் வேலை ஏவிக் கொண்டிருந்த காளியம்மாள் குரலில் அவ்வளவு உற்சாகம்.
“மாப்பிள்ளை தங்கமான பையன்” என்று அவர் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்க, அந்த புகழுக்கு சொந்தமான புகழேந்தி மறுநாள் காலையிலே அவர்களின் வீடு வந்தான்.
அவனை எதிர்பாராத மகேஸ்வரன் குடும்பம், “வாங்க மாப்பிள்ளை” என்று ஆச்சரியத்துடன் உள்ளே அழைத்து உபசரித்தது.
“நீங்க மட்டும் வந்துருக்கீங்க மாப்பிள்ளை. மத்தவங்க எல்லாம் எங்க? அவங்க வரலையா?” காளியம்மாள் விசாரிக்க, அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த மகேஸ்வரன், அவன் பதிலை எதிர்பார்த்து நின்றார்.
“அவங்க எல்லோரும் நேத்தே மதுரை கிளம்பிட்டாங்க அம்மாச்சி. நான் மட்டும் எங்கக்கா வீட்ல இருந்தேன். நானும் இன்னைக்கு நைட்டு கிளம்பிடுவேன். அதுக்கு முன்னாடி அபிநயாவை வெளில கூட்டிட்டு போகலாம்னு ஐடியா.” என்று அவன் சொல்லி முடிக்கும் முன் அங்கு வந்து நின்றார் சியாமளா.
காளியம்மாள் மருமகளின் முகம் பார்த்து கண்ணைச் சுருக்கினார். சட்டென திரும்பி, “பேத்தியை வெளில கூட்டிட்டு போறீங்களா தம்பி? உங்ககிட்ட வண்டி இருக்காது இல்ல? நம்ம காரை எடுத்துட்டு போங்க. என்ன?” என்று கேள்வியும் கேட்டு பதிலையும் அவரே சொன்னார்.
“எத்தா அபி, மாப்பிள்ளை வந்திருக்காங்க பாரு” என்று உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார்.
அப்போது அபிநயாவும் அங்கு வந்து விட, சியாமளாவால் மகளை முறைக்க மட்டுமே முடிந்தது. புகழேந்தி அனைத்தையும் கவனிக்கவே செய்தான். ஆனாலும், அவர்களோடு இயல்பாக பேசி காலை உணவை அங்கேயே உண்டு விட்டு, அபிநயாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.
“இந்தாங்க கார் சாவி” என்று அப்பாவின் பழைய மாருதி 800 காரின் சாவியை அவள் நீட்ட, “உன் ஸ்கூட்டியில் போலாம் அபி” என்றான் அவன்.
அபிநயா உள்ளே சென்று வண்டிச் சாவியை எடுத்து வந்தாள். அவளையே வண்டியோட்ட செய்து பின்னால் அமர்ந்துக் கொண்டான் அவன்.
அவர்கள் பகுதியை விட்டு வெளியில் வந்ததும், புகழேந்தி கதை பேசியபடி, வழி தெரியுமா என்று கேட்டுக் கொண்டே வர, அபிநயா ஒரு கட்டத்தில் வண்டியை ஓரங்கட்டினாள்.
“புரோபஸர், நான் குழந்தையில் இருந்து சென்னையை நல்லா சுத்தியிருக்கேன். எனக்கு வழி தெரியாதுன்னு நினைச்சா, நீங்களே வண்டியோட்டுங்க” என்று திரும்பிப் பார்த்து கடுப்புடன் அவள் சொல்ல, சிரித்தான் புகழேந்தி.
“சாரி அபி.” என்றவன், அப்படியே அவளை பக்கத்தில் இருந்த உணவகத்திற்கு அழைத்துப் போனான்.
“காலைல சாப்பிட்டோமேன்னு ஆரம்பிக்காத அபி. உன்னை முதல் தடவையா வெளில கூட்டிட்டு வர்றேன். அதான்” என்று தயங்கியவன், “சுவீட் சாப்பிட்டு போவோம். ரைட்?” என்று கேட்க, “ஓகே” என்று அவனோடு அமர்ந்தாள் அபிநயா.
இருவருக்கும் வடையும், கேசரியும் சொன்னான் புகழேந்தி. அதை உண்டுக் கொண்டிருக்கும் போதே, “எங்க பெரியம்மா பொண்ணு அனுப்ரியா நேத்து வந்தாங்க ஞாபகம் இருக்கா?” என்று கேட்டான்.
“ம்ம், அந்த அண்ணி தான் எனக்கு மேக் அப் போட்டு விட்டாங்க”
“ரைட். அவங்க வீட்ல தான் நைட் இருந்தேன். அவங்களுக்கு தெரிஞ்ச ஒருத்தரை தான் இப்போ பார்க்க போறோம்” என்றான்.
“எதுக்கு?” என்ற கேள்வியை அவள் மனதில் கேட்க, அவள் கண்களைப் பார்த்து கேள்வியை படித்தவன், “அங்க போனதும் தெரிஞ்சுப்ப, சாப்பிட்டு முடி. போகலாம்” என்றான்.
அடுத்த பத்தாம் நிமிடம் மீண்டும் அவள் பின்னே அமர்ந்தான் புகழேந்தி. இம்முறை அமைதியாக வேடிக்கைப் பார்த்தபடி வந்தான்.
அவள் வேகத்தை குறைத்து வண்டியை செலுத்த, “ம்ம், இங்கதான் நிறுத்து அபி” என்று புகழேந்தி சொன்ன இடம், அம்பத்தூர் காவல் ஆணையர் அலுவலகம்.
அபிநயாவின் கைகள் தன்னிச்சையாக வேகத்தை குறைத்தது. அவள் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு, “இங்கேயா?” என்று தயக்கத்துடன் கேட்க, “ம்ம், இங்கதான். வா, போகலாம்” என்று அவளின் கைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான்.
அபிநயா அவனை ஒட்டிக் கொண்டு நடந்தாள்.
“புரோபஸர், சார்.. வீட்ல சொல்லாம போலீஸ் கம்பிளைண்ட் எப்படி கொடுக்கிறது?” அவன் பக்கமாக சரிந்து அவள் கேட்க, “கம்பிளைண்ட் கொடுக்க வரல அபி. ரிலாக்ஸ்டா” என்று அவளின் கரத்தை அழுத்திக் கொடுத்தான்.
“நீங்க இப்போ வரை ஒன்னுமே சொல்லல. இங்க கூட்டிட்டு வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவேயில்ல” என்று அபிநயா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அங்கிருந்த காவலரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினான் புகழேந்தி.
அவளுக்கு பதட்டத்தில் அவன் பேச்சை கவனிக்க முடியவில்லை. அங்கிருந்து போக வேண்டும் போல உடல் பரபரக்க, “சார்” என்று அவன் கையை சுரண்டினாள்.
“சார் இல்ல. புகழேந்தி” என்று திருத்தினான் அவன்.
“ஆங்.. புலவர்னு கூப்பிடுறேன்” என்று முணுமுணுத்தாள் அபிநயா.
“அது கூட நல்லாருக்கே. அப்படியே கூப்பிடேன். உன் சார், மோருக்கு அது பெட்டர் அபி” என்றவனை அவள் முறைக்க, அவன் கண்களோ அதை ரசித்தது.
“சார், உங்களை சார் உள்ள வரச் சொன்னாங்க. போங்க” என்று காவலர் வந்து அறிவிக்க, இருவரும் உள்ளே சென்றார்கள்.
அவர்கள் அறைக்குள் நுழைந்ததும் இருக்கையில் இருந்து கம்பீரமாக எழுந்து நின்றார் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் உதய் பிரகாஷ்.
“ஹாய், வாங்க, வாங்க. நீங்க வருவீங்கன்னு அனுபிரியா சொன்னாங்க. பிளீஸ், உட்காருங்க” என்று இருவருக்கும் எதிரில் இருந்த இருக்கையை கைக் காட்டினார்.
“ஹலோ சார்” என்ற புகழேந்தியின் வலக்கரம் பற்றி குலுக்கினார்.
புகழேந்தி, அபிநயாவை அறிமுகம் செய்ய, “உட்காருங்க மா” அபிநயாவை பார்த்து புன்னகையுடன் சொன்னார். அந்தப் புன்னகை அவளைத் தளர்த்தியது.
“இட்ஸ் ஓகே. சொல்லுங்க. நான் என்ன ஹெல்ப் பண்ணட்டும்?” உதய் கேட்க, புகழேந்தி பிரச்சனையை அபிநயாவின் சார்பில் விளக்கினான். உதயின் குறுக்கு கேள்விகளுக்கு அவன் அபியை பார்க்க, தன் தயக்கம் உதறி அவளே மொத்தத்தையும் சொல்லி முடித்தாள்.
“ம்ம், ஓகே அபிநயா. இது சட்டப்படி குற்றம். ஆன்டி ஸ்டாக்கிங் லா இருக்கு நம்ம நாட்ல. ஐபிசி செக்சன் 354D படி நீங்க ரிப்போர்ட் பண்ணா அவனுக்கு ஒரு வருஷத்துல இருந்து அதிகப்பட்சமா மூனு வருஷம் வரைக்கும் சிறை தண்டனையும், ஒரு குறிப்பிட்ட தொகை ஃபைனும் போடுவாங்க.” உதய் சட்டத்தை எடுத்துச் சொல்ல,
“அதுக்கு அபிநயா வீடு ஓகே சொல்வாங்களா?” என்று பேனாவை கையில் சுழற்றியபடி கேட்டார் உதய்.
புகழ் பார்க்க, அபிநயா மறுப்பாக தலையசைத்தாள்.
“நீங்க போலீஸ் ஸ்டேஷன் நேரா போய் தான் ரிப்போர்ட் கொடுக்கணும்னு அவசியம் இல்ல அபிநயா. ஆன்லைன் கம்பிளைண்ட் கொடுத்தா போதும், நேஷனல் கமிஷன் ஃபார் வுமன் பார்த்துப்பாங்க. அவங்க ஆக்சன் எடுப்பாங்க. சொல்லுங்க, என்னப் பண்ணலாம்?” உதய் கேட்க,
“சார், அவன் ரெண்டு வருசமா எனக்கு ரொம்பவே மென்டல் டார்ச்சர் கொடுத்திருக்கான். அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கிற வெறி எனக்கு இருந்தாலும்…” அவள் முடிக்க முடியாமல் திரும்பி புகழேந்தியை பார்க்க,
“எனக்கு புரியுது அபிநயா. பொண்ணை பெத்தவங்க எப்பவும் பயப்படுறது தான். அதுல நியாயமும் இருக்கு” என்ற உதய், “சோ, ஃப்ரீயா விடுங்க” என்றார்.
அபிநயா புன்னகைக்க, “புகழேந்தி, இதுக்காக நீங்க எந்த லாயரையும் போய் பார்க்க வேணாம். உங்க அபியோட அட்ரஸ் தெளிவா எழுதி கொடுத்துட்டு போங்க. அந்த ஏரியாக்கு நானே போய் என்னனு பார்க்கறேன். என்னால முடிஞ்சதை கண்டிப்பா செய்யறேன்.” என்று உறுதியளித்தார்.
“அந்த ஏரியா ஸ்டேஷன்ல அபிசியலா சொல்லி வைக்கிறேன். அவங்க பார்த்துப்பாங்க, நீங்க இத்தோட இதை மறந்துட்டு உங்க வாழ்க்கையை நிம்மதியா, சந்தோஷமா தொடங்குங்க அபிநயா. என்ன புகழேந்தி?”
“ரொம்ப தேங்க்ஸ் சார்” புகழேந்தி பற்கள் தெரிய புன்னகைத்து சொன்னான்.
“இட்ஸ் ஓகே” என்ற உதய், “பொதுவா இவனுங்க வேலை எதுவும் இல்லாம இருந்தாதான் நமக்கு தலைவலியா முடியும். ரொம்ப குடைச்சல் கொடுப்பானுங்க. இவன்தான் சூப்பர் மார்க்கெட் வச்சுருக்கான் சொல்றீங்களே. அதுனால உங்களை இதுக்கு மேல பின் தொடர்ந்து பிரச்சனை பண்ண நேரம் கிடைக்காதுன்னு வச்சுப்போமே. அண்ட் நான் அவனோட ஆன்லைன் ஆக்ட்டிவிட்டியை வாட்ச் பண்ண சொல்லிடுறேன். சோ, நமக்கு தெரியாம எதுவும் பண்ண வாய்ப்பில்லை. இந்த பிரச்சனையை இதோட மறந்திடுங்க” உதய் தீர்க்கமாக சொல்ல,
“சார்..” என்றாள் அபிநயா.
“எஸ் அபிநயா. இனிமே உங்க பாதுகாப்பு எங்க பொறுப்பு. நீங்க இதை மறந்துட்டு சந்தோஷமா உங்க வாழ்க்கையை ஆரம்பிங்க” என்று கை நீட்டினார்.
அவளோ புகழேந்தியின் கையை பிடித்தபடி நீட்டினாள். உதய் சிரித்துக் கொண்டே இருவரின் கரத்தையும் பற்றி குலுக்கி, “ஆல் த பெஸ்ட்” என்றார்.
“என்னோடது அரேஞ்ச்டு மேரேஜ் தான்” என்று புன்னகையுடன் அவர் சொல்ல,
“ஓ” என்றான் புகழேந்தி.
“உங்களைப் போல…” என்று உதய் சிரிக்க, “ரைட். நிச்சயித்த பின் வரும் லவ்னு சொல்றீங்க” என்று தானும் சிரித்தான் புகழேந்தி.
மேலும் சிறிது நேரம் பேசி, அவர்களுக்கு நம்பிக்கையும், தைரியமும் அளித்து விடைக் கொடுத்தார் அந்த காவல்துறை அதிகாரி.
அபிநயா வெளியில் வந்ததும் புகழேந்தியின் முகம் பார்த்து, “தேங்க்ஸ்” என்றாள்.
அவள் கண்களில் வைரமாய் மின்னிய கண்ணீர் துளியை ஒற்றை விரலால் சுண்டி விட்டு, “நீ இனிமே சிரிக்க மட்டும்தான் செய்யணும். ஓகே?” என்றான் அவன். அவள் உடனடியாக புன்னகைக்க, பதிலுக்கு புன்னகைக்க மறந்து அவளின் முகத்தையே ரசித்திருந்தான் புகழேந்தி.
“போதும் புரோபஸர்” என்ற அவள் குரலில் வெட்கத்தின் சாயல்.
இப்பொழுது சாவிக்காக அவன் கை நீட்ட, “நானே ஓட்டுறேன்” என்ற அபியின் குரலில் அப்படியொரு துள்ளல்.
அவள் மனம் லேசாகியிருக்க உடலிலும் அது பிரதிபலித்தது. இரு சக்கர வாகனத்தில் இறகை போல மிதந்தாள். அவள் உதட்டில் நிரந்தரமாய் உறைந்திருந்த புன்னகையை தலைகவசம் சாமர்த்தியமாக மறைத்தது.
புகழேந்தி இயல்பாக அவளின் தோளில் கை வைத்து அமர்ந்திருந்தான். முதலில் லேசான கூச்சத்தில் அவள் நெளிந்து இறுக்கமாக அமர, “அபி ரிலாக்ஸ். நான் எப்படி பேலன்ஸ் பண்ண?” என்று புகழ் கேட்கவும், உடலின் இறுக்கத்தை தளர்த்தினாள்.
புகழேந்தி அவனுக்கு புதிதாக தெரிந்த சென்னையை பார்த்துக் கொண்டே வந்தவன், “அபி, பக்கத்துல ஏதாவது ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் வந்தா நிப்பாட்டு” என்று அவளை தொல்லை செய்யாத வண்ணம் காதில் சொன்னான்.
“ஓகே” என்று போக்குவரத்து சத்தத்தை மீறி கத்தினாள் அபிநயா.