வெண்மேகங்களுக்கு மேல் பறப்பது, பஞ்சு பொதிகளுக்கு மேலிருப்பதை போலிருக்க, அபிநயாவின் விழிகள் வியப்புடன் அதன் அழகை ரசித்துக் கொண்டிருந்தது.
விமானம் மெல்ல மெல்ல தரையை உரசி மேலெழும்பியதில் இருந்து, மிக பெரிய ஆரஞ்சு நிறப் பந்தாய் சூரியனை கண்டது, தற்போது சுற்றிலும் இருந்த மேகப் பொதிகள் என காளியம்மாளிற்கு அனைத்துமே ஆச்சரியமும், அதிசயமுமாக தான் இருந்தது. பேத்தியிடம் கேள்விகள் கேட்டபடியே வந்தார் அவர்.
அபிநயா அவருக்கு பதில் சொல்லிக் கொண்டே வந்தாலும், மனதிற்குள் தனக்குள்ளாக பேசிக் கொண்டே வந்தாள் அவள்.
சென்னையை விட்டு நிரந்தரமாக செல்கிறோம் என்ற நினைப்பே அவளை எடையற்ற மனதுடன் பறக்கச் செய்தது.
ஒன்றே கால் மணி நேரம் கழித்து விமானம் மதுரையில் தரையிறங்கும் போது, இருள் கவியத் தொடங்கிருந்தது.
மேலும் அரை மணி நேரம் சென்று தங்கள் உடைமைகள் வந்து சேர்ந்ததும், எடுத்துக் கொண்டு அவர்கள் வெளியில் வர புன்னகையுடன் புகழேந்தி நின்றிருந்தான்.
தன் கைகள் இரண்டையும் பேண்ட் பாக்கெட்டிற்குள் நுழைத்து, காற்றில் கேசம் நெற்றியில் புரள, உதட்டில் உறைந்த புன்னகையுடன், கம்பியில் லேசாக சாய்ந்து நின்றிருந்தவனை பார்த்ததும் அபிநயாவின் இதழ்கள் தானாக பிரிந்து புன்னகைத்தன.
அவர்களை பார்த்ததும் வேக எட்டுக்களுடன் அபிநயாவிடம் வந்தான்.
“வாங்க அம்மாச்சி, வாங்கத்தை” என்று காளியம்மாள், சியாமளாவை வரவேற்று, “ஃப்ளைட் டிராவல் எப்படியிருந்தது அம்மாச்சி?” என்று காளியம்மாளிடம் கேட்டான்.
“அதுக்கென்ன, நல்லா இருந்துச்சுப்பே. மொத பறக்க ஆரம்பிக்கும் போதும், இப்ப கீழ இறங்குறப்பவும் தான் படபடன்னு வந்துச்சு. மத்தபடி வானத்துல பறக்குறாப்பலயே இல்ல.” என்று சிறுகுழந்தையின் ஆர்வத்துடன் அவனிடம் விவரித்தார் அவர்.
“இவென் சொன்னாப்ல ஒரு மணி நேரத்தில மதுரையில கொண்டு வந்து விட்டுட்டான்.” என்று கார்த்திக்கை காட்டி, தாடையில் கை வைத்து அவர் வியந்து சொல்ல, “அப்பத்தா” என்று அவரைக் கடிந்தாள் அபிநயா.
கார்த்திக் அவர்களின் பெட்டிகளை இழுத்துக் கொண்டு, அண்ணன் முன் செல்ல, அவனின் தோளை தட்டினான் புகழேந்தி.
அதில், “தம்பி உடையான் படைக்கு அஞ்சான்” என்ற பாவனையும், மறைமுக பாராட்டும் இருந்தது போலிருந்தது.
அபிநயா அவர்களை கண்களைச் சுருக்கி பார்க்க, “என்ன அபி?” என்று கேட்டான் புகழேந்தி.
அவன் கார் சாவியை தம்பியிடம் நீட்ட, “வாங்க காருக்கு போகலாம்” என்று காளியம்மாள், சியாமளா இருவரையும் அழைத்துக் கொண்டு முன்னே நடந்தான் கார்த்திக்.
“உங்க தம்பி சென்னையில் பண்ண சம்பவத்துக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு சொன்னீங்க தானே?”
“நீ இப்ப கேட்டாலும் அதான் சொல்வேன் அபி”
“ஓஹோ. ஆனா, அவர் பண்ணதை நீங்க ஏன் கண்டிக்கல?”
“நான் ஏன் கண்டிக்கணும்? அப்பச் சொன்னது தான் இப்பவும் சொல்றேன் அபி. கார்த்திக் எதைச் செய்தாலும் சரியான காரணமும், அதுக்குத் தகுந்த நியாயமும் இருக்கும். அவன் தப்பு பண்ற ஆள் கிடையாது. அப்படியே தப்பு பண்ணிணான்னா அதைத் தட்டிக் கேட்கிற முதல் ஆள் நானாதான் இருப்பேன்”
“கார்த்திக், அவனை அடிச்சதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம். அதனால அதை விட்டுடுவோம். இப்போ நீங்க அவரை எதுக்கு பாராட்டுனீங்க?” என்று அவள் அழுத்தமாக கேட்க, தனக்கு இணையாக நடந்து வருபவளை ஓரக் கண்ணால் முறைத்தான் புகழேந்தி.
அபிநயா நடையை நிறுத்தி, “எனக்கு எப்படி தெரியுதுன்னா, அவனை அடிச்சதுக்கு கார்த்திக்கை நீங்க பாராட்டுற மாதிரி..” என்று அபிநயா அவன் கண்களை கூர்ந்து சொல்ல, புகழேந்தியின் கண்களில் பளபளப்பு கூட, மீசை துடிக்க, சிரிப்பை அடக்க முடியாமல் பற்கள் தெரிய புன்னகைத்தான் அவன்.
“ரைட், உனக்கு என்ன இப்போ? மதுரை வந்து இறங்கினதும் எதுக்கு என்னை இத்தனை கேள்வி கேட்டுட்டு இருக்க?”
“ஒன்னுமில்ல.” என்று தோளை அசட்டையாக குலுக்கினாள் அபிநயா.
“இங்க பாரு ஆண்கள் எல்லோருக்குள்ளும் ஒரு கற்கால மனிதன் இருப்பான். அவனுக்கு தன் பெண் துணையை தான் தான் பாதுகாக்கணும். அவளுக்கு நான்தான் பொறுப்புன்னு அவன் ரத்தத்திலயே ஊறிப் போய் இருக்கும். அப்படி பார்க்கும் போது எனக்கு அந்த பொறுக்கியை அடிச்சு நொறுக்கணும் போல இருந்தது என்னவோ உண்மைதான். ஆனா, எனக்கு எப்பவும் நேர் வழியா போகணும். சட்டத்தை கையில் எடுக்க யோசிக்கும் சராசரி மனுஷன் நான். அதேநேரம் கார்த்திக் நான் நினைச்சதை செய்திட்டு வரும் போது எனக்கு அவன் மேல கோபம்னு நான் பொய் சொல்ல விரும்பல அபி.” என்று நேர்மையாக அபிநயா எதிர்பார்த்த பதிலைச் சொன்னான் புகழேந்தி.
அவள் புன்னகையுடன் அவனோடு நடந்தாள். காரில் முன்னே தம்பியுடன் புகழேந்தி அமர்ந்து விட அவனை கண்களால் களவாடிக் கொண்டிருந்தாள் அவள்.
காளியம்மாளுடன் பேசும் சாக்கில் பின்னால் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்த புகழேந்தியின் பார்வையை நிறைத்தது அபிநயா மட்டுமே.
அவன் உதவி பேராசிரியர் என்றாலும், அவர்களது மத்தியத் தர குடும்பம். விமான பயணம் என்பது அவர்களின் அவசரத்திற்கு கூட நிகழாது. அப்படியிருக்கையில் அவளுக்காகத் தான் அதை செய்திருக்கிறான். அவளுக்கு பணத்தைக் காட்டிலும் அந்த அன்புதான் பெரிதாகத் தெரிந்தது.
“அத்த புதூர்ல வீடு எங்க?” கார்த்திக் கேட்க, அவனுக்கு வழிச் சொன்னாள் அபிநயா.
சியாமளாவின் பிறந்த வீட்டுக்கு விரைந்தது வாகனம்.
மகேஷ்வரன், சித்தார்த் இருவரும் சென்னையில் இருந்து வரும் வரைக்கும் சியாமளாவின் பிறந்த வீட்டில் வசிப்பதென முடிவு செய்திருந்தது அவர்கள் குடும்பம்.
சென்னை வீட்டை முதலில் விற்று விடுவது என்ற முடிவில் இருந்தார் மகேஸ்வரன். ஆனால், காளியம்மாள் வீட்டை விற்காமல், அதே நேரம் வாடகைக்கும் விடாமல், ஐந்து வருட குத்தகைக்கு விட்டு விடலாம் என்ற யோசனையை சொன்னார். சியாமளாவின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்தே அந்த யோசனையை அவர் தந்திருந்தார்.
மகேஸ்வரன் சில உறவுகள், நட்புகளிடம் கருத்துகள் கேட்டு கடைசியில் வருங்கால மருமகனிடம் கலந்தாலோசிக்க, அவன் சித்தார்த்தைக் கைக் காட்டினான்.
“உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்ல மாமா. ஒரு சொத்தை சம்பாதிக்கிறது ரொம்ப கஷ்டம். விக்குறது சுலபம். நீங்க வீட்டை 5 வருஷம் லீஸுக்கு விடுறது நல்ல ஐடியான்னு நான் சொல்லுவேன். ஆனா, நீங்க வீட்டை விக்கிறதுன்னு முடிவு பண்ணா என்கிட்ட கேட்கிறதை விட சித்தார்த்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுடுங்க” என்றான் புகழேந்தி.
“சரிங்க மாப்பிள்ளை” என்றவர், மகளிடம் அபிப்ராயம் கேட்க, அவரின் மீனாட்சி, மதுரை போதும் என்று விட்டாள்.
சித்தார்த், “வீட்டை விக்கணுமாப்பா?” என்ற ஒற்றைக் கேள்வியின் மூலம் அவருக்கான பதிலைச் சொல்லி விட்டான்.
மகேஸ்வரன் உடனடியாக அம்மா மற்றும் மனைவியுடன் பேசி, அவர்கள் சொன்னதை செயல்படுத்தினார்.
இங்கே சியாமளாவின் வீடு வந்து விட, வருங்கால மாப்பிள்ளையை வாசலோடு அனுப்பாமல் உள்ளே அழைத்துச் சென்றார் காளியம்மாள்.
அபிநயாவின் அம்மாச்சி, தாத்தா, அத்தை என அனைவரும் வாகன சத்தம் கேட்டு வாசலுக்கு வந்தனர்.
“அடடே வாங்க மாப்பிள்ளை. நல்லா இருக்கீங்களா? நீங்களும் வாங்க தம்பி” என்று புகழேந்தி, கார்த்திக் இருவரையும் அபியின் தாத்தா உள்ளே அழைத்துச் சென்றார்.
“வாம்மா சியாமளா, அபி வாத்தா. நீங்க நாளைக்கு காலையில வர்றதா இல்ல சொன்னீங்க?” என்று அபியின் அம்மாச்சி கேட்க,
“என்னா? இப்ப வந்தா வீட்டுக்குள்ள விட மாட்டீங்களா? நாளைக்கே தான் வரணுமா?” என்று எகத்தாளம் பேசினார் காளியம்மாள்.
“ஆத்தே. உங்களை அப்படிச் சொல்லுவோமா? பேத்தியை பார்த்ததும் எனக்கு சரியா பேச்சு வரல. அதான் அப்படி கேட்டுட்டேன். மனசுல வச்சுக்காம வீட்டுக்குள்ளார வாங்க, மயினி.” என்று அவர் சமாளிக்க,
“பேசத் தெரியாம தான் இவளை எங்கத் தலையில் கட்டினாங்களாக்கும்..” என்று மருமகளை பார்த்து முணுமுணுத்து நொடித்தார் அவர்.
“அப்பத்தா” என்று அபிநயா கண்ணை உருட்டி மிரட்ட, “நீ பேசாம இருத்தா” என்று அவளை அதட்டியபடி வீட்டுக்குள் நடந்தார் காளியம்மாள்.
சோஃபாவில் புகழேந்தி அமர்ந்திருக்க, அவனுக்கு பக்கத்தில் பேத்தியை அமர வைத்து, அவளின் காலடியில் கால் நீட்டி அமர்ந்துக் கொண்டார் அவர்.
புகழேந்திக்கு அங்கே கவனிப்பு பலமாக இருந்தது. ஆனால், காளியம்மாள் அதை விட பலமாக அவன் பெருமையை பேசி அலப்பறையை கூட்டினார்.
“நாங்க நாளைக்குத்தான் வர்றதா இருந்தது. திடீர்னு பார்த்தா பேரன் ஏரோபிளேன் டிக்கெட் போட்டு, எங்களை சூதானமா கூட்டி வர கூடவே தம்பியை அனுப்பி வச்சுட்டார்”
“எம் பேத்தியை கட்ட மதுரை வீரனே வருவான்னு சொன்னேன். இவ கேட்டா தானே?” என்று அவரிடம் காஃபியை நீட்டிய சியாமளாவின் அம்மா முத்துப்பேச்சியிடம் மருமகளை குறை பட்டுக் கொண்டாலும், அதில் மறைமுக குத்தலே அதிகம் இருந்தது.
மகன் வயிற்று பேரனுக்கு, பேத்தியை மணமுடிக்க பல வருடங்களாக ஆர்வம் காட்டியவர்கள், இப்போது அவர்களாக உப்பு சப்பில்லாத காரணங்கள் சொல்லி பின் வாங்கியது காளியம்மாளுக்கு அத்தனை கோபத்தை தந்தது. சொந்த பேத்தியை, சொந்த தங்கை மகளை இவர்களே நம்பவில்லை என்றால், ஊர் எப்படி நம்பும் என்ற ஆத்திரம் அவருக்கு. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே அபிநயா மாமன் மகன் மேல் விருப்பம் காட்டாதது ஒன்று தான் அவருக்கு மிகப் பெரிய ஆறுதல்.
இப்போது அனைத்தும் அவர்களின் விருப்பப்படி அமைந்து விட்டாலும், அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை.
புகழேந்தி குடும்பத்தினரை சியாமளா வீட்டினர் அறிந்தே இருந்தாலும், தன் பங்கிற்கு அவர்களின் பெருமை பாடி விட்டே ஓய்ந்தார் அவர்.
“புகழ் சார் புகழ் பாட நீங்க ஒருத்தர் போதும் போலயே” என்று கார்த்திக் கேலியாக சொல்ல, “நான் நெசத்தை தான் சொன்னேன்” என்று சிரித்தார் காளியம்மாள்.
மறுநாளில் இருந்து அபிநயாவிற்கு தேவையான ஜவுளி, நகைகள் என அலைந்து திரிந்து வாங்கத் தொடங்கினார்கள்.
அதற்குள் திருமண பத்திரிக்கை அச்சடித்து வந்து விட, குலதெய்வ வழிபாடு முடித்து வந்து, அதை உறவுகளுக்கு விநியோகிக்கத் தொடங்கினார்கள். சென்னைக்கு தேவையான பத்திரிக்கையை அனுப்பி வைக்க, அங்கிருந்த உறவு மற்றும் நெருங்கிய நட்பு, அக்கம் பக்கத்தினருக்கு பத்திரிக்கை கொடுத்து, அவர்களை திருமணத்திற்கு அழைத்து விட்டு மதுரை வந்தார் மகேஸ்வரன்.
அவரோடு வீட்டுப் பொருட்கள் மொத்தமும் லாரியில் வந்து இறங்கியது. ஏற்கனவே முடிவு செய்திருந்த படி மறுநாள் அவர்களின் புதுப்பிக்கப்பட்ட வீட்டில் அதிகாலையில் பூஜை செய்து, பால் காய்ச்சி, அங்கு குடிப் பெயர்ந்தார்கள்.
காலையில் பூஜையில் கலந்துக் கொண்டு கல்லூரி சென்று விட்டான் புகழேந்தி. அவன் குடும்பத்தினர் அங்கேயே இருந்து காலை உணவை முடித்து விட்டுச் சென்றனர்.
மறுநாள் காலை மீண்டும் வந்து அவர்களுக்கு பொருட்களை அதனதன் இடத்தில் நகர்த்தி வைக்க எல்லா உதவிகளையும் சித்தார்த்துடன் சேர்ந்து செய்தான் கார்த்திக்.
சில நாட்களில் அபிநயா குடும்பம் தங்களின் சொந்த ஊரான மதுரைக்கு பழகியிருந்தனர்.
அபிநயாவிடம் நித்தம் அலைபேசியில் காதல் வளர்த்த புகழேந்தி, முதன் முறையாக அவளின் வீடு வந்து, பெற்றோர் அனுமதியுடன் அவளை வெளியில் அழைத்துச் சென்றான்.
சியாமளா மறுக்கத்தான் நினைத்தார். ஆனால், காளியம்மாளின் ஒற்றை பார்வையில் அவர் தலை தானாக சம்மதம் என ஆடியது.
“ஹாய் அபி, என்ன பார்வை? வண்டியில ஏறு?” புகழேந்தி புருவம் உயர்த்தி சொல்ல, அவனையே இமைக்காமல் பார்த்தாள் அபிநயா. அவளுக்கு நெருக்கமாக நின்றவனை பார்த்து, பூட்டியிருந்த கேட்டில் கால் வைத்து நின்று குரைத்து தன் கடுப்பை காட்டியது ஐரீன்.
“அவ உங்களை தள்ளி நிக்கச் சொல்றா” என்று அபி கேலியாக சொல்ல,
“ஐயோ என் மக்கே. நான், அவளை தூக்காம உன்னைப் பார்த்துட்டே நிக்கிறேன்னு அவளுக்கு கோபம்.” என்றான் அவன்.
“அப்படியா ஐரீன்?” அபி கடுப்புடன் கேட்க, உயிரைக் கொடுத்து குரைத்தது அது.
“உன்ன…” அபிநயா முறைக்க,
“நீ என்னைப் பாரு அபி” என்று அவளின் கைப் பிடித்தான். அவன் கையை உதறி விட்டு பின்னால் ஏறி அமர்ந்தாள்.
“அபி..” மென்மையாக அழைத்தான். அவளையும் அறியாமல் இதழ்கள் பிரிந்து புன்னகைத்தது.
நம் பெயரை சுருக்கி அழைக்கும் உறவையும், செல்லப் பேர் வைப்பவர்களையும், ஏன் இத்தனை பிடித்துப் போகிறது என்று அவள் யோசிக்க, புன்னகையில் பூரித்திருந்த அவளின் முகத்தை, வண்டியின் கண்ணாடியில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் புகழேந்தி.
இளநீல நிற சுடிதார் அணிந்து, அதே நிறத்தில் பொட்டும் வைத்திருந்தாள். காதில் முன்னர் வாங்கித் தந்திருந்த குடை ஜிமிக்கி அசைந்தாடி கொண்டிருந்தது.
அபிநயா சாதாரணமாகவே கண்ணை நிறைக்கும் அழகுதான். அவளை ரசித்துப் பார்த்தவன், அந்த முகத்தில் எதுவோ குறைகிறது என்ற தேடலுடன் அவள் முகத்தை ஆராய,
“போதும். வண்டியை எடுங்க. இல்லனா, எங்கம்மா இப்போ வெளில வந்து என்னை வீட்டுக்குள்ள கூட்டிட்டு போய்டுவாங்க” என்று மிரட்டினாள் அபிநயா.
அப்போது தான் கவனித்து, “நீ பூ வைக்கல அபி” என்றான் பின்னால் திரும்பி.
“என்னது?” என்று அவள் கேட்க, அவளுக்கு பதில் சொல்லாமல் வண்டியை இயக்கி நகர்த்தியிருந்தான்.