நம் எண்ணங்களே வாழ்க்கை போல் எந்த விவாகரத்தை எண்ணி பெண்ணவள் பெரிதும் கலக்கம் கொண்டாளோ அதன் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது என்று வக்கீலின் வாயிலாக செவிமடுத்த ராஹிக்குள் சில கணங்கள் என்ன உணர்வென்று வரையறுக்கக் கூட முடியாத மனநிலைதான். அவளையும் அறியாமல் அவளின் நெஞ்சுக்கூடு பெரிய பெரிய மூச்சுக்களுடன் ஏறி ஏறி இறங்க, இத்துணை சீக்கிரம் அனைத்தும் முடியப்போகிறதா என்று சில கணங்கள் சுற்றும் உலகமே நின்று விட்டது போன்றதொரு பிரம்மையும் கூட.
இத்தனைக்கும் அன்று பார்ட்டியில் ஆதியின் பெண் தோழி பியூலா பேசியதைக் கேட்ட தினம் தொட்டே இதுபோல் ஒன்றை எதிர்நோக்கித் தான் இருந்தாள் ராஹித்தியா.
அதன் பின்னான நாட்களில் நம் விதி இதுதான் ஆதியுடனான திருமண வாழ்வு விரைவில் ஒரு முடிவுக்கு வரப் போகிறதென்று சிறிது சிறிதாக தன் மனதை அதற்கு தயார் படுத்தவும் தொடங்கியிருந்தவள் அதன் அழுத்தம் தாளாது தான் கணவனின் அருகாமையை முற்றும் முழுதுமாய் புறக்கணிக்கவும் ஆரம்பித்திருக்க, ஆனால் என்ன செய்தாலும் மலரைக் குடையும் வண்டாய் தன் உயிரைக் குடையும் கணவனின் நினைவுகளையும் காலம் முழுதும் அவனுடனே வாழ்ந்து விட மாட்டோமா என்ற ஏக்கத்தையும் அவளால் இம்மியும் குறைக்கவே முடியவில்லை.
அப்படியான சிந்தனைகள் தோன்றும் பொழுதெல்லாம் “தனக்கு மட்டும் ஏன் இந்த நிலை? சிறுவயதில் இருந்தே தன்னை சிறிதும் பிடிக்காதவனுடன், திருமணத்தன்றே தன்னிடம் விவாகரத்து வேண்டும் என்று அடம் பிடித்து சாதித்தவனுடன் காலம் முழுதும் வாழ வேண்டும் என்று தன் மனம் ஏன் இப்படி தன்னை அலைக்களிக்கிறது. அவனை விட்டுப் பிரிய வேண்டும் என்ற நினைப்பே ஏன் எனக்கு இத்துணை வலியைக் கொடுக்கிறது. என்னை விவாகரத்து செய்து விடாதே என்று அவன் காலடியில் விழுந்து கதறக் கூட தன் உள்ளம் தயாராக இருக்கிறதே இதெல்லாம் எப்படிச் சாத்தியம்.?” என்று தனிமையில் அழுது புலம்பியவள்…
“ஆனால் ஆனால் இதை எல்லாம் கணவனிடம் சென்று சொல்ல முடியுமா? நான் உன்னுடன் காலம் முழுதும் வாழ ஆசைப்படுகிறேன் என்று சொன்னாலும் அவன் தன்னை ஏற்றுக் கொள்வானா?. ஏற்றுக் கொள்வது இரண்டாம் பட்சம் என்றாலும் அவன் தன்னை எத்துணை கீழ்த்தரமாகப் பார்ப்பான். சொல்லப்போனால் நான் விவாகரத்திற்குச் சம்மதித்ததில் இருந்து தானே அவன் என்னிடம் அன்பாகக் கூட நடந்து கொள்கிறான். இன்று அதைக் கொடுக்க மறுத்தால் அவன் நிச்சயம் என்னை ஏளனமாக எண்ணக்கூடுமே.
ஏன்… தன் மேல் பெரும் அகங்காரமும் கொள்ளக் கூடுமே” என்றெல்லாம் குழம்பிய குட்டையாக உலன்று ஓய்ந்தவள் இறுதியாக உறுதியாக கணவன் தன்னை விவாகரத்திற்கு வற்புறுத்தும் முன் தானே அவன் விரும்பியதை எந்தத் தடங்களும் இல்லாது அவனுக்குக் கொடுத்து விட வேண்டும் என்ற தவறான முடிவிற்க்குத் தான் வந்திருந்தாள் ராஹித்தியா.
அப்படி ஒரு முடிவை எடுப்பதற்குள் வார்த்தைகளில் வடிக்க முடியாத வேதனைகளைப் பெண்ணவள் கடந்து வந்தாள் என்றால் அது துளியும் மிகையில்லை. ஆனால் அந்த வேதனைகளுக்கெல்லாம் எந்த அவசியமும் இல்லை என்று புரிந்து கணவனின் காதலை கன்னியும் உணரும் நாளும் எந்நாளோ???
அப்படி ஒரு திடமான முடிவை எடுத்தப் பின்னும் இன்று நடைமுறையாக அது நடக்கப் போவதை வக்கீலின் மூலம் அறிந்ததும் ஒரு கணம் எதுவுமே செய்ய இயலாத நிலையில் உறைந்து போய் நின்றவள் வக்கீல் இன்னும் கைபேசியில் குரல் கொடுத்துக் கொண்டிருப்பதையும், கணவன் தன் பதிலுக்காகத்தான் தன் முகத்தையே பார்த்திருப்பதாகவும் அவளாகவே எண்ணிக்கொண்டு அங்கிருந்த தண்ணீரை எடுத்து அருந்தி தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள் கைபேசியை வாங்கி தாங்கள் நீதிமன்றம் வந்துவிடுவதாக உரைத்து விட்டு வைக்க, அதைக் கேட்ட அவள் கணவனோ இப்பொழுது அவளை விடவும் உறைநிலைக்குத் தள்ளப்பட்டான்.
கணவனைப் பிரியப் போகும் தன் கவலையே பெரிதாக இருக்க, கணவனின் அதிர்ச்சி எதையும் உணராதவள் வக்கீலிடம் கூறியது போலவே மாலை கணவனை அழைத்துச் சென்று குடும்ப நீதிமன்ற வாளாகத்திலும் நிறுத்தியிருந்தவள் அவனுக்கு பேசுவதற்கான வாய்ப்பைக் கூட அளிக்கவே இல்லை.
என்றுமில்லாப் பொறுமையோடு ஊர்ந்து வந்த ஆதியின் மகிழுந்து நீதிமன்ற வளாகத்தினுள் வந்து நின்ற மறுகணமே நொடியும் தாமதியாது வெளியேறியவள் தூரத்தில் நின்றிருந்த வக்கீலுக்குக் கை காட்டியபடியே அவரை நோக்கி நடக்க, அவள் பின்னோடு இறங்கிய ஆதியோ…
“ஹேய் தியா… ஏன் இந்த அவசரம். நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் நில்லுமா” என்று அவள் கையைப் பற்றி நிறுத்தியவன் விழிகளில் அவள் காலடியில் சமர்ப்பிக்க நெஞ்சை முட்டும் நேசமும், அவள் மறுத்து விட்டாள் நாம் என்னாவோம் என்று சொல்லொணாத தவிப்பும் ஒரு சேர எழுந்தது.
ஆனால் அவன் கண்களையே சந்திக்க மறுக்கும் பெண்ணோ, ‘என்ன பேசப்போறீங்க ஆதித்தான்? நமக்கு டிவோர்ஸ் வேணாண்டி. உன்ன விட்டு என்னால இருக்க முடியாதுடி. என்னோடவே இருந்துடுறின்னா சொல்லப்போறீங்க? அப்டிச் சொல்ற அளவுக்கு நான் நான் உங்க மனசுல எந்த இடத்தையும் பிடிக்கலில்ல ஆதித்தான்’ என்று கண்ணைக் கட்டிக் கொண்டு வந்த கண்ணீர்த்துளியை கண்சிமிட்டி உள்ளிழுத்தவள், “இந்த நாள் தானே ஆதிசார் நீங்க எதிர்பார்த்தது. இன்னிக்கு நம்ம பிரிவு உறுதியாகிடும். இனிமேல் நாம பிரீ பார்ட் தான் இல்லியா? இனி அதப் பத்திப் பேச என்ன இருக்கு?” என்று கேட்டவள் மீண்டும் நடையைத் தொடர…
‘அய்யோ ராஹி ஏண்டி ஏண்டி இப்டிப் பேசுற. எனக்கு இந்தப் பிரிவு வேணாண்டி கொஞ்சம் நான் சொல்ல வர்றதக் கேளேண்டி’ என்று அழாத குறையாய் புலம்பித் தவித்தவனும், “இல்ல தியா அதில்ல நான் நான் உன்கிட்ட ஒன்னு சொல்லியே ஆகணும் ப்ளீஸ் கொஞ்சம் கேளுடி” என்று என்னவானாலும் பரவாயில்லை என்ற முடிவுடன் மீண்டும் அவள் கைப்பிடித்துத் தடுத்தான் அவள் கணவன்.
அந்த சமயம் சரியாக சற்று தள்ளி மரத்தடியில் நின்ற யாரோ ஒரு தம்பதியில் கணவனோ, “இங்கப்பாருடி ஜீவனாம்சம் கூட எவ்ளோ வேணாலும் தர்றேன். உள்ள வந்து எனக்கு டிவோர்ஸ்கு சம்மதம்னு நீ சொல்லணும். ஏதாவது மாத்தி கீத்தி சொன்ன உன்ன கொன்னே போடுவேன்” என்று அருகில் நின்ற மனைவியைப் பார்த்து மிரட்ட…
அதைப் பார்த்த ராஹிக்கோ அப்படியே தன் கணவனின் மனநிலையை பிரதிபலிப்பது போல் தான் இருந்தது.
அந்தக் கணவனின் கூற்றிற்கு அவன் மனைவியும், “வேணாம் மாமா நான் உன்ன கெஞ்சிக் கேக்குறேன் மாமா என்ன விவாகரத்து பண்ணாத. நம்ம பிள்ளைகளுக்கு ஒசரமாச்சும் கொஞ்சம் யோசி மாமா. எனக்கு நீ கொடுக்கற காசெல்லாம் வேணாம் நீ எங்க கூட இருந்தாலே போதும்” என்று அவனிடம் கெஞ்சியதையும் பார்த்தவளுக்கு, ‘எனக்கு இப்படி ஒரு நிலை வர நான் சிறிதும் அனுமதிக்க மாட்டேன். என்ன வேணாம்னு நினைக்கிறவன் எனக்கும் வேணாம்’ என்று அவள் வலிக்க வலிக்க எடுத்த முடிவு இன்னும் இன்னும் வலுப்பெற்றது. அவர்களது காதலைப் போலவே.
வாக்குவாதம் செய்தபடியே அத்தம்பதி அங்கிருந்து அகலவும் தன் கைப்பற்றி நிறுத்தி இருந்த கணவனைப் பார்த்து ஒரு வலுக்கட்டாயப் புன்னகையை முகத்தில் ஒட்ட வைத்தவள்…
“பயப்படாதீங்க ஆதிசார். நான் உள்ள வந்து எந்த குழப்பமும் பண்ண மாட்டேன். முழுமையான மனசோட நான் இந்த டிவோர்ஸ்கு சம்மதிக்கிறேன்னு தான் அவங்கள்ட்ட சொல்லுவேன். அதுதான் நிஜமும் கூட” என்று அதீத தைரியமாய் நெஞ்சை நிமிர்த்தி நின்றவள், “அதுக்காக நீங்க எனக்கு எந்த வித ஜீவனாம்சம் கூட கொடுக்கத் தேவையில்லை” என்றும் ஏதேதோ பேச…
அதைக் கேட்டிருந்த கணவனுக்கோ என்ன பேசுவது என்று கூடப் புரியாத அளவு மூளையே மந்தித்து விட்ட நிலைதான்.
இத்துணை தினங்கள் அவள் தன்னை விட்டு விலகி இருந்த பொழுதுகள் கூட தன் மேல் ஏதோ கோபத்தில் இருக்கிறாள். என்றெண்ணி அவனும் ஒதுங்கி இருக்க, ஆனால் அவனவளோ இன்று அந்த விலகளை நிரந்தரப் பிரிவாக்குவாதற்கல்லவோ தயாராக இருக்கிறாள்.
அவர்களின் விவாகரத்து என்ற அத்தியாயம் அன்று ஆதியால் துவங்கப்பட்டதாக இருந்தாலும் தான் செய்தது தவறு என்று உணர்ந்து கொண்டவன் இன்றைய நிலையில் அதற்கு முடிவுரை எழுத நினைக்க, அவன் காதலை உணராத அவன் மனையாளோ அதைத் தொடர்கதையாக்கி தங்கள் உறவை அல்லவா முறிக்கத் துணிந்து விட்டாள்.
‘இதில் முழுக்க முழுக்கத் தவறு தன் மேல் தான். என் தியா மேரேஜ் அன்னிக்கு எவ்ளோ கெஞ்சுனா சாஹிக்காகத்தான் உங்கள மேரேஜ் பண்ணேன்னு. எந்த உள்நோக்கமும் இல்லன்னு. நான்தான் பெரிய புடிங்கியாட்டம் டிவோர்ஸ்தான் வேணும்னு நின்னேன். ஆனா ஆனா…. இப்போ இப்போ தியா தியா நீதாண்டி எனக்கு வேணும். டிவோர்ஸ் வேணாண்டி’ என்று உள்ளூற உருகிக் கரைந்தவன் மனைவியின் இப்போதைய பேச்சில் அவள் தங்கள் பிரிவைத்தான் நாடுகிறாளோ என்றும் கலங்கித் தவித்தவாறே வாழ்க்கையில் முதல் முறை வார்த்தைகள் வராது தடுமாறி நின்றான் ஆதி.
அதற்குள் அவர்களை சமீபித்து விட்டிருந்த ஆதியின் வக்கிலோ, “வாங்க ஆதித்யா சார் வாங்க மேடம். எல்லாம் ரெடியா இருக்கு. ஜட்ஜ் மேடமும் இப்போ தான் வந்தாங்க வாங்க உள்ள போலாம்” என்று அவர்களைக் கையோடு உள்ளே அழைத்துச் சென்றார்.
என்னதான் கணவன் முன்னால் திடம் போல் காட்டிக் கொண்டாலும் வராண்டாவில் இருந்து நீதிமன்றம் வரை இருந்த சிறிதான தொலைவைக் கடப்பதற்குள்ளாகவே மனப்பாரம் தாங்காது ராஹியின் கால்கள் பின்னிக்கொண்டு தடுமாற நீதிமன்ற அறைக்குள் நுழையும் தருவாயில் அங்கிருந்த நிலைப் படியைப் பாராத ராஹி சறுக்கி விட்டு விழப்போனாள்.
அதில் பதறிய ஆதியும் “தியாமா” என்று அவள் கையைப் பற்றி மனைவியை விழ விடாது தடுத்தவன் பற்றிய கைகளை விட்டுவிடாமலே அவளோடு இணைந்து சென்று நீதிபதியின் முன்னால் அமர்ந்தான்.
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி குடும்ப வழக்குகள், கணவன் மனைவிக்கிடையில் இருக்கும் பிரச்சனைகளை விசாரித்துத் தீர்த்து வைப்பதற்கென்றே
நம் மாநிலங்களில் உருவாக்கப்பட்டவை தான் குடும்ப நல நீதிமன்றங்கள்.
சமீப காலங்களில் தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்கள் அனைத்திலும் குடும்ப நல நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது என்பது நல்ல விஷயமாக இருந்தாலும், தற்சமயம் இப்படியான நீதிமன்றங்களின் அவசியம் நம்மிடையே மிகவும் அதிகரித்து வருவதும், தங்களைப் பெற்றவர்களையும், தாங்கள் பெற்ற குழந்தைகளையும் கூட மறந்த பல தம்பதிகள் தொட்டதெற்கெல்லாம் பிரிவை நாடி நீதிமன்றங்களை நோக்கிப் படையெடுப்பதும் நிச்சயம் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் அல்லவே.
சில மணித் துளிகள் மனம் விட்டுப் பேசினாலே தீர்ந்து போகும் பிரச்சனைகளை உப்பில்லாத ஈகோவிற்காக வாழ்க்கை முழுதும் இழுத்துப் பிடித்து நாளடைவில் தங்கள் வாழ்க்கையையே தொலைத்து நிற்கின்றனர் ஆதி ராஹி போன்ற பல நேசத் தம்பதிகள்.
ஆனால் இது போன்ற நீதிமன்றங்களின் நோக்கம் அத்துணை சீக்கிரம் உறவுகளை முறிய விடக் கூடாது என்பது மட்டுமே. அவர்களால் இயன்ற வரை நல்ல ஆலோசனைகள் வழங்கி கணவன் மனைவியை சேர்த்து வைக்கவே பல முயற்சிகள் செய்வர். அப்பொழுதும் ஒத்து வராத தம்பதிகளுக்கு மட்டுமே சிறிது கால அவகாசத்திற்குப் பின் விவாகரத்து எனும் நிரந்தரப் பிரிவு கிடைக்கும்.
அப்படி ஒரு பெண் நீதிபதியின் முன்னால் தான் ஆதியும் ராஹியும் சென்று அமர அவர்களையே பார்த்திருந்த நீதிபதியும், “வாங்க” என்று தலையை அசைத்து வரவேற்றவர் “நீங்கதான் மிஸ்டர்?” என்று கைலிருந்த கோப்பைப் பார்த்து விட்டு, “மிஸ்டர் ஆதித்யவர்மா அண்ட் மிஷஸ் ராஹித்தியா ஆதித்யவர்மா. ஆம் ஐ கரக்ட்?” என்று கேட்க…
அவர்களும் ஆமாம் என்பது போல் தலையை ஆட்டினர்.
அதில் அவர்களை நோக்கி ஒரு புன்னகையை உதிர்த்தவரும், “ம்ம்ம் சொல்லுங்க உங்களுக்கு மேரேஜ் ஆகி ஒன் வீக்ல மியோச்சுவல் டிவோர்ஸ்கு அப்ளே பண்ணிருக்கீங்க. போன ஹியரிங்ல கூட பிரிவுல உறுதியா இருக்கோம்னு சொல்லிருக்கீங்க. உங்களுக்கு லாஸ்ட்டா கொடுத்த இந்த ரெண்டு மாசம் டைம்ல உங்க கருத்துல ஏதும் மாற்றம் இருக்கா? உங்க ரெண்டு பேத்துல யாராவது சேந்து வாழ விரும்புறீங்களா?” என்று வழக்கு நிலையை உரைத்ததோடு அவர்களின் இறுதி முடிவையும் கேட்டார் நீதிபதி.
அவர் அப்படிக் கேட்ட அந்தக் கணம் அவர்களின் விழிகள் நான்கும் ஒன்றை ஒன்றை ஏக்கத்தோடு கவ்விக் கொள்ள,
இருவரின் நேச உள்ளங்களுமே “எங்களுக்கு இந்த டிவோர்ஸ் வேணாம். எனக்கு என் தியா தான் வேணும். நான் என் ஆதித்தான் கூட வாழனும்” என்று ஒன்று சொன்னார் போல் ஊமையாகக் கதறத் தொடங்கியது.
இருவருக்கிடையில் உள்ள தவறான புரிதலாலும் முந்தைய மனக்கசப்பாலும் நெஞ்சை முட்டும் நேசத்தை அந்த நெஞ்சுக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொண்டவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் பார்வையை விளக்கிக் கொள்ளாமலே மௌனமாய் நிமிடங்களைக் கரைக்க, அவர்களை ஒரு ஆராய்ச்சிப் பார்வை பார்த்திருந்த நீதிபதியும், “எக்ஸ்க்யூஸ்மி கபில்ஸ் இப்டி பாத்திட்டே இருந்தா எப்படி? ஆன்சர் மை கொஸ்டியன்” என்று அவர்கள் முன்னே கையை ஆட்டி அவர்களை நடப்பிற்கு அழைத்து வந்தார்.