மழைத்துளிக்கு ஏங்கிய பாலவனப் பறவை போல் கணவனின் இதழ்களே அட்ச்சயப் பாத்திரமாய் மணித்துளிகள் பல கடந்தும் அம்முரட்டு இதழ்களுக்குள் மூழ்கிக் கிடந்தவள் ஆணவனின் உமிழ் நீர் கொண்டே அவனுக்காக ஏங்கித் துடிக்கும் உயிரை சற்றே அமைதிப்படுத்த முனைய…
பெண்ணவளின் இதழ்கள் கொண்ட ஆட்சியிலும், காற்றாற்று வெள்ளமாய் தன்னை சுழற்றிப் போடத் துடிக்கும் பாவையவளின் ஒற்றை முத்தத்தின் ஆழத்திலும், நொடியில் மனைவியின் செயலை தனதாக்கிக் கொண்டவன் தன் காதலின் ஆழத்தையும் இதழ்களின் வழியே அவளுக்கு ஊட்டி பாவையவளின் பஞ்சன்ன அதரங்களில் இருந்த அமிழ்தம் மொத்தமும் அருந்தத் துவங்கினான் ஆதி.
அருந்திய அமிழ்தம் அவர்களுள் கொழுந்து விட்டு எரிந்த காதல் வேட்கையை அடக்குவதற்கு பதிலாய், அளவில்லாத மோக வெள்ளத்தால் அவர்களை மூழ்கடித்துச் செல்ல, உயிர் கொண்ட தேடலை உடல்களின் இணைவால் அடக்க முயன்றவர்கள் பேசும் மொழியை மறந்து தங்களின் நேசத்தைப் பரிமாற முத்தங்களையும் அணைப்புகளையும் மட்டுமே ஆயுதமாக்கிக் கொண்டனர்.
சொல்லாத காதலோடு தீராத மோகமும் சேர்ந்து ஆணின் ஒவ்வொரு அணுவும் பெண்ணின் உதடுகள் போதாது உயிரையும் கேட்டு வீறு கொண்டு எழும்ப, அவள் உடல்நிலையைக் கூட கருத்தில் கொள்ளாது ஆழிப் பேரலையாய் அவளைச் சூழத் தொடங்கியவனுக்கு இம்மியும் குறையாத ஏக்கத்தில் அவளும் முத்தப் பரிமாற்றங்களை நிகழ்த்த, அதில் திக்கு முக்காடிப் போனவனுக்கு தன் காதலை விளக்கும் மார்க்கம் துளியளவும் தேவைப்படவே இல்லை.
ஆணின் வரவை ஏற்று நின்ற பெண்ணின் மெய்யை தன் மேனி கொண்டு மூடியவன் தங்களைப் போர்வையாலும் மூடிக்கொள்ள, பெண்ணின் காயம் கொண்ட வளைக்கரங்கள் இரண்டும் ஆதியின் கட்டுடலை இறுக்க வளைத்தது.
அதில் இன்னும் இன்னும் அவளுள் ஆழப்புதைந்தவனின் மீசை ரோமங்கள் பெண்ணின் ஊனெங்கும் காதல் காயம் வரைந்து, அவளின் உள்ளக் காயத்திற்கும் மருந்திட முயல அச்சமயம் சரியாக ஆதியின் கைபேசி உச்சஸ்தாதியில் ஒலி எழுப்பி அந்த நேசப்பறவைகளின் மோக முக்குளிப்பை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது.
தங்களையும் மறந்த காதல் வெள்ளத்தில் கட்டுண்டு கிடந்தவர்களை மீண்டும் மீண்டும் மிகையான சப்தமிட்டு விடாது அலறிய கைபேசி ஒலி வம்படியாக இப்பூவுலகிற்கு அழைத்து வர, அதில் உணர்ச்சிகள் அறுபட்டு முகத்தைச் சுருக்கியபடி மனைவியின் கழுத்தோர வளைவில் இருந்து மனமே இல்லாது முகத்தைத் திருப்பியவன் படுக்கையில் சற்று தள்ளிக் கிடந்த கைபேசியை எடுத்துப் பார்க்க அதில் ஒளிர்ந்த எண்ணானதே அவனின் மோக உணர்ச்சி மொத்தமும் வடிய வைத்து வேகமாக மனைவியை விட்டு விலகி அமரப் போதுமானதாக இருந்தது.
கைபேசியில் ஒளிர்ந்த சிவாவின் எண்ணைக் கண்டதும் அவனிடம் ஒப்படைத்திருந்த வேலையும் சிந்தையில் உதிக்க, சட்டென்று படுக்கையை விட்டு எழுந்து விரைந்து அதை உயிர்பித்து செவியில் வைத்தவன், “ம்ம்ம் சொல்லு சிவா” என்று மட்டும் கேட்டவனின் குரலோ சடுதியில் கடுமைக்கு மாறி இருந்தது.
அந்தப்புறம் பேசிய சிவாவும், “பாஸ் நீங்க சொன்ன போல கொச்சின்ல அவனோட கெஸ்ட்ஹவுஸ்ல தலைமறைவா இருந்தவனத் தூக்கியாச்சு பாஸ். நேரா சென்னைக்கே கொண்டு வந்துடவா?” என்று கேட்க…
அதற்கு ஆதியும், “வெல்டன் சிவா” என்று அங்கிருந்த மேஜையில் ஓங்கி அடித்து சப்தமிட்டுச் சிரித்தவன், “சென்னைக்கு வேணாம் ஊட்டில இருக்க லேக்ஹவுஸ்கு கொண்டு போய்டு நான் இதோ கிளம்பிட்டேன். பிக்கேர்புல்” என்றும் விழிகள் தகதகத்து மின்ன தன் காரியதரிசிக்கு கட்டளைகள் பிறப்பித்தவன் கைபேசியை அணைத்து விட்டுத் திரும்ப…
அங்கே அவன் மனையாளோ அவனையே குழப்பமாகப் பார்த்தபடி படுக்கையில் எழுந்து அமர்ந்திருந்தாள்.
வண்டாடிய கணவனின் கரங்களில் கள்ளுண்ட மலராய் கிறங்கிக் கிடந்தவளும் கைபேசியை எடுத்துக் கொண்டு அவன் விருட்டென்று தன்னை விட்டு விலகவும் அவளும் உணர்வுக் குவியலில் இருந்து மீண்டு எழுந்து அமர்ந்தவள் ஆதியின் செந்தணலாய் மின்னிய நீல விழிகளில் ஒரு கணம் முதுகுத் தண்டு சில்லிட்டு அவனையே குழப்பமாகப் பார்த்தவளை அவனும் அப்பொழுது தான் பார்த்து விட்டு வேகமாய் அவளை நெருங்கியவனுக்கு சற்று முன்னர் அவளோடு தான் இருந்த நிலை கூட அவன் சிந்தையில் இருந்ததோ என்னவோ…
அவன் கைபேசியில் கேட்ட செய்தி அவனை ஒரு நிமிடம் கூட தாமதிக்கக் கூடாது என்ற ஆத்திரத்தையும் அவசரத்தையும் கொடுத்திருக்க, வேகமாக ராஹியின் முன்னே சென்று அமர்ந்தவன்…
“சாரி ஹனி… நீ முத்தம் கொடுத்ததும் என்னால என்னால என்ன கண்ட்ரோல் பண்ண முடியல. அதான் நிறையவே அட்வான்டேஜ் எடுத்திக்கிட்டேன் சாரிமா” என்று ஏதோ பெரிய தவறு செய்தவன் போல் அவள் முகத்தைக் கூடப் பாராது கூறியவன் போர்வையை மார்போடு பிடித்தபடி அவனையே வெறித்திருந்தவளின் வெற்றுத் தோள்களையும் அங்கிருந்த மற்றொரு போர்வையால் மூடிவிட்டு…
“நான் இப்போ அர்ஜென்ட்டா ஒரு இடத்துக்கு போணும் தியா. நா வர்ற வர பத்திரமா இரு. எந்த வேலையும் செய்யாத. மாம் கேட்டா பிஸ்னஸ் விஷயமா வெளியூர் போயிருக்கேன்னு மட்டும் சொல்லு” என்றும் மூச்சு விடக் கூட அவகாசம் இன்றி வேகமாகக் கூறியவன் அவள் பதிலைக் கூட எதிர்பாராது குளியலறைக்குள்ளும் புகுந்து கொள்ள…
அத்துணை நேரம் அவன் அருகாமைக்கு ஏங்கி அவன் கரங்களில் உருகிக் கரைந்திருந்த ராஹிக்கோ நொடியில் அவன் அவளை ஓங்கி அறைந்தது போல உடல் குன்றிப் போன உணர்வுதான்.
கணவன் தன் அருகாமையை தவிர்க்க எண்ணித்தான் விலகிப் போகிறானோ என்று பெண்ணவள் கூனிக் குறுகி அமர்ந்திருக்க, அவன் எப்பொழுது தான் அவள் உணர்வுகளைச் சரியாகப் புரிந்து கொள்வானோ???????
இக்கணமும் தன்னுடைய இந்த விலகள் தன்னுயிரானவளுக்கு எத்துணை வேதனையைக் கொடுக்கும் என்று உணராமலே குளித்து ஆயத்தமாகி வெளியே வந்தவன், தன்னுடைய பிரத்தியேக அலமாரியிலிருந்து தேவையானவைகளை எடுத்து கோட்பாக்கெட்டில் வைத்துக் கொண்டவன், “பாய் தியா” என்று வாசல் கதவை நோக்கிச் செல்லப் போக…
அவன் மனையாளோ, “என்னங்க” என்றழைத்து அவன் நடையை நிறுத்தியவள்…
“வெளிய போறவங்கள எங்க போறீங்கன்னு கூட கேக்கக் கூடாது. ஆனா இப்போ நீங்க வெளிய போறது எனக்கு என்னவோ போல இருக்குங்க. ப்ளீஸ் என்ன விட்டு எங்கையும் போகாதீங்க. இன்னிக்கு ஒரு நாள் என் கூடவே இருங்க” என்று தன்னை நெருங்கி வந்தவனின் கையைப் பற்றிக் கொண்டு கெஞ்சியவளின் குரலிலே அவள் உள்ளக் கலக்கம் அப்பட்டமாகத் தெரிந்தது.
ஆனால் அவளுக்கே அவளுக்காக ஒரு கணக்கைத் தீர்க்க முடிவு செய்து போர்க்கால அவசரத்தில், வெறி கொண்ட வேங்கையாய் கிளம்பியவனுக்கு பெண்ணவளின் அந்தக் கலக்கம் சற்று சிரிப்பைத் தான் கொடுத்ததோ…
“ஹேய் தியா என்ன இது சின்னப்புள்ள போல பேசிட்டிருக்க? இன்னிக்கு ஒரு நாள் இங்க இருக்கணுமா? சான்ஸே இல்ல” என்று ஒரு புன்னகையுடனே அவளருகில் அமர்ந்தவன், அந்த ஒருநாளில் நடக்கவிருப்பதை அறிந்திருந்தால் ஒருவேளை மனைவியின் சொல்படி அவளுடனே இருந்திருப்பானோ என்னவோ???
எதையும் யோசிக்க முடியாதளவு பழிவெறி அவன் கண்ணை மறைத்திருக்க, ‘நான் உனக்காகத்தாண்டி இப்போ போறேன். ஆனா அது சொன்னா நீ என்ன போகவிடமாட்டடி’ என்று மனதுக்குள் பேசியவன், “நான் இப்போ போயே ஆகணும் தியா. கொஞ்சம் நேரம் கூட என்னால
லேட் பண்ண முடியாது. ப்ளீஸ் புரிஞ்சிக்கோடா.” என்றும் பெண்ணவளின் கன்னம் தாங்கியவன், அப்பொழுதும் தன்னை ஏக்கமாகப் பார்த்த பெண்ணின் நயனங்களிலும் துடிக்கும் அதரங்களிலும் என்ன கண்டானோ…
சட்டென்று அவள் இதழ்களை சிறை செய்து முழுநிமிடம் ஆழ்ந்த முத்தமிட்டு விலகியவன், “தியா நான் போய்ட்டு சீக்கிரம் வந்துருவேன்டி. வந்ததும் உன்கிட்ட பெரிய ரிக்வஸ்ட் ஒன்னு வைக்கப் போறேன். நீ மாட்டேன்னு மட்டும் சொல்லிடாத ஹனி” என்றும் ஏதோ புதிர் போல் பேசி, அவளின் அகன்ற நுதலிலும் மென்முத்தம் பதித்து விட்டு விருட்டென்று அங்கிருந்து வெளியேறியவன் அந்த இரவு நேரக் காரிருளில் மறைந்து காணாமல் போக, சில நிமிடங்களில் அவன் பஹாணி உயிர்பிக்கப்பட்ட சப்தம் மட்டுமே பெண்ணவளின் செவியை வந்து நிறைத்தது.
“சென்றே விட்டான். தன்னவன் தன் அருகாமை வேண்டாம் என்று சென்றே விட்டான். தான் வெட்கம் கெட்டு தன்னுடனே இருக்கும் படிக் கேட்டும் தன்னுடன் இருக்கப் பிடிக்காது அதி விரைவாய்க் கிளம்பிப் போயே விட்டான். அப்டின்னா அப்டின்னா அவனுக்கு என் மேல எந்த உணர்ச்சியும் இல்லையா? அப்டி இருந்திருந்தா ஒரு போன் அழைப்புக்காக என்ன இப்படி ஒரு கோலத்தில் விட்டுச் செல்வானா? ஒரு மனைவிகிட்ட இயல்பா வர்ற மோக உணர்ச்சிக்குக் கூட நான் தகுதியில்லாதவளா போயிட்டனா? அவன் தான் அன்னிக்கே சொன்னானே நான் டேட்டிங் போனும்னா கூட ஒரு தகுதி வேணும்னு” என்று அவன் என்றோ சொன்னதை எல்லாம் இன்று நடந்தது போல் சிந்தையில் கொண்டு வந்து கலங்கித் தவித்தவள்…
‘ஆதிக்கு என்ன சுத்தமா பிடிக்கல. அவர் என்ன டிவோர்ஸ் பண்ணி அனுப்புறதுல உறுதியா இருக்காரு. அதான் நான் வலியக் கூப்பிட்டும் என்ன புறக்கணிச்சுட்டு போயிட்டாரு. ஆனா நான் தான் என்ன கொஞ்சமும் பிடிக்காதவரோட போய் ஒட்டி உறவாடி கிஸ் பண்ணி. ச்சீ ச்சீ என்ன எவ்ளோ சீப்பா நினைச்சுருப்பாரு” என்று தன் மீதே அருவருத்துக் கொண்டவளுக்கு அவன் தனக்கே தனக்காகத்தான் சென்றிருக்கிறான் என்ற காரணமும் தெரியாத நிலையில், அத்துணை அவசரத்திலும் தான் சீக்கிரம் வந்து விடுவதாகவும் அதுவரை அவளை பத்திரமாக இருக்கச் சொல்லி முத்தமிட்டுச் சென்றதும் கூட அவள் சிந்தையில் உரைக்கவே இல்லை. அத்துணை தூரம் அவன் மேல் வைத்த காதலும் ஏக்கமும் அவளது யோசிக்கும் திறனைக் கூட மழுங்கடிந்திருந்தது.
அவன் சற்றுமுன்னர் அவள் மேனியில் வரைந்த கோலங்களும் இதழில் வடித்த முத்தக் கவிகளும் அவளுள்ளே காதல் வேள்வியை கொழுந்து விட்டு எரியச் செய்து பெண்ணவளின் இளமையையும் சுட்டெரித்துக் கொண்டிருக்க, அவன் தன்னை விலகிச் சென்றதற்கு தன் மேல் உள்ள பிடித்தமின்மைதான் முக்கிய காரணம் என்று தவறாக எண்ணி மடைதிறந்த வெள்ளமாய் பொங்கிப் பெறுகிய கண்ணீரையும் கட்டுப்படுத்த முடியாது படுக்கையில் சுருண்டு விழுந்தவள், “ஐ லவ் யூ ஆதித்தான். ஐ லவ் யூ ஆதித்தான்” என்று வாய்விட்டே கதறி அழத் தொடங்கினாள் ராஹி.
அங்கே தனக்காக அழுது கரைந்திருக்கும் தன்னவளின் நிலையை அறியாது சென்னையிலிருந்து ஊட்டி செல்லும் பாதையில் உச்சவேகத்தில் மகிழுந்தைச் செலுத்தி வந்தவன் விழிகள் முழுதும் அக்கினித்தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்க, தன்னவளை அடைய நினைத்து அவள் மேல் கை வைத்து அவள் கரங்களில் வெட்டுக் காயத்தைக் கொடுத்தவனுக்கு, தான் இன்று கொடுக்கப் போகும் தண்டனையை எண்ணி அவன் இதழ்க்கடையோரம் குரூரச் சிரிப்பு ஒன்றும் உற்பத்தியாகி இருந்தது.
தொழிலில் அவனை வெல்ல நினைத்தாலே அவர்களை அடியோடு அழிக்க நினைப்பவன் தன் உயிரானவளின் மேல் கை வைத்தவனை நினைத்து அவனது கோபம் உச்சவரம்பை அடைந்திருக்க கிட்டத்தட்ட எட்டு மணி நேரப் பயணத்திற்குப் பின் அவன் பஹாணியும் ஊட்டியில் இருந்த அவனுடைய ஏரிக்கரை வீட்டையும் நெருங்கி இருந்தது.
அஸ்வின் ஊட்டியில் இருக்கும் பொழுதே ஊட்டியின் ஒதுக்குப் புறமாக இருந்த அழகும் அமைதியும் அதற்கு ஈடானா ஆபத்தும் கொண்ட பெரியதோர் ஏரிக்கரையோரம் ஒரு வீட்டை விரும்பி வாங்கி இருக்க, தனிமை விரும்பியான ஆதி இந்தியா வரும் பொழுதெல்லாம் அவன் அதிகம் வாசம் செய்யும் இடமும் இந்த ஏரிவீடுதான்.
சுற்றிலும் ஆள் அரவமற்ற அந்தப் பகுதியில் ஒற்றை வீடு மட்டும் நிலவொளியில் மின்னிக் கொண்டிருக்க, அதனுள்ளே அழுங்காமல் தன் மகிழுந்தைக் கொண்டு சென்று நிறுத்தி இறங்குவதருக்குள்ளாகவே அடித்துப் பிடித்து வெளியே ஓடி வந்தான் சிவா.
“பாஸ் வந்துட்டிங்களா? ஒரு மனுஷன் எவ்ளோ நேரம் உயிரக் கைல பிடிச்சிட்டு உக்காந்துருக்கது” என்று கேட்டபடியே தனை நோக்கி வந்தவனின் முகத்தில் தெரிந்த பீதியில்,
“ஏன் அவனுக்கு மயக்க மருந்து கொடுத்து தூக்கலியா சிவா?” என்று கேட்டபடியே மகிழுந்தை விட்டு இறங்கியவன் சிவாவோடு இணைந்து வீட்டிற்குள் விரைந்தான் ஆதி.
ஆதியின் கேள்விக்கு, “அவன்லாம் பத்து மணி நேரமாவே மயக்கமாத்தான் கிடக்குறான் பாஸ். ஆனா என்னோட பீதிக்குக் காரணம் இந்த ஏரிவீடுதான்” என்று சொல்ல…
அதற்கு அவனை முறைத்துப் பார்த்த ஆதியும், “என்னடா உளர்ற?” என்று மட்டும் கேட்டபடியே அங்கிருந்த படிகளில் தடதடத்து ஏறி வந்தவன் ஒரு அறையின் முன்னால் நின்றான்.
ஆதியின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது ஓடி வந்தவனும், “உளறல் இல்ல பாஸ். பீதில நடுங்கிப் போயிருக்கேன். ஏதோ ஏரி வீடுன்னதும் போட்ஹவுஸ் மாறி அழகான அமைதியான வீடா இருக்கும்னு நினைச்சா இது முதலைகளோட கூடாராம்னு சொல்லவே இல்லை” என்றவன் ஏரியின் ஒரு பகுதியை வளைத்துக் கட்டி அதன் மேல் அமைக்கப்பட்டிருந்த வீட்டின் மிகப்பெரிய பால்கனியைப் பீதியாகப் பார்த்தவாறே சொன்னவன், “ஆமா இங்க எதுக்கு பாஸ் அந்த சர்வாவ கொண்டு வரச் சொன்னிங்க?” என்றும் கேட்டான்.
அதற்கு “ஹா ஹா ஹா” என்று அட்டகாசமாகச் சிரித்த ஆதியும், “கொஞ்சம் முன்ன சொன்னியே இது முதலைகளின் கூடாரம்னு அதுங்களுக்கு ரொம்ப நாளா புடிச்ச புட்டே கிடைக்கலியாம். அதான் அவன இங்க கொண்டு வரச் சொன்னேன்” என்று சொன்னவன், “முதலைக்கு ரொம்ப புடிச்சது உன்னப் போல மனுஷனோட கறிதான்” என்றும் சொல்லிக் கொண்டே அந்த அறைக் கதவை ஓங்கி ஒரு உதை விட்டுத் திறக்க…
அப்பொழுது தான் சற்று மயக்கம் தெளிந்து எழுந்தமர்ந்த சர்வாவோ அறைக்குள் வந்து நின்ற ஆதியைக் கண்டு “நீ நீ நீயா?” என்று அதிர்ச்சியில் உறைந்தே போனான்.
அதற்கு ஆதியும், “என்ன பாட்னர் இவ்ளோ சாக்காகுற? என்ன நீ இங்க எதிர்பாக்கலில்ல… எதிர்பாக்காத இடத்துல எதிர்பாக்காத நேரம் வந்து நிக்கிறவன் தான் ஆதி” என்று சொல்லி உரக்கச் சிரிக்க, அவனது அந்த குரூரச் சிரிப்பும், அவன் சற்று முன்னர் சொல்லிய வார்த்தைகளும் அவனது காரியதரசி சிவாவின் அடிவயிற்றையே ஒரு கலக்கு கலக்கி விட்டு குளியலறை நோக்கி ஓட வைத்திருந்தது.
ஆதி நின்ற தோற்றமும், அவன் நீல விழிகளில் கொழுந்து விட்டு எரியும் வன்மத்தீயும் சர்வாவின் தொண்டையிலும் பயப்பந்தை உருள வைத்திருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாது தட்டுத் தடுமாறி எழுந்து நின்றவன், “அன்னிக்கு ராஹி மேல கை வச்ச அன்னிக்கே உன்கிட்ட இருந்து இப்டி ஏதாவது எதிர்பாத்தது தான். ஆனா நைட்டோட நைட்டா இப்டி மயக்க மருந்து கொடுத்து கடத்தி வர்ற அளவுக்கு நீ கோழைன்னு நான் எதிர்பாக்கலை” என்று சற்று திமிராகவே சொன்னவன் அடுத்த நொடி வாயைப் பிடித்துக் கொண்டு “ஆ… ஆ… ” வென்று தரையில் விழுந்திருக்க…
“என் தியா பேர சொல்லக் கூட உனக்குத் தகுதி இல்லடா நாதாரி நாயே” என்று கீழே கிடந்தவனின் முகத்திலும் சூக்காலால் ஓங்கி மிதிக்கத் தொடங்கினான் ஆதி.
அதில், ரத்தம் கொட்டிய வாயைப் பிடித்துக் கொண்டு மீண்டும் மீண்டும் “ஆ…. ஆ” வென்று அலறிய சர்வாவும், “அவ உனக்கு மனைவியாகும் முன்னவே நான் அவள காதலிச்சேன்டா. நீதான் குறுக்க புகுந்து என் காதலிய உன் மனைவியாக்கிக்கிட்ட” என்று சொல்ல…
அதில், “தூத்தெரி நாயே” என்று கால்பந்தை எத்துவது போல் அவன் வயிற்றில் ஓங்கி ஒரு எத்து விட்டவன், “நீ ராஹிய காதலிச்சியா? எப்டி நேத்து ஒரு மாடர்ன் கேர்ள்ள கொச்சின் வீட்ல காதலிச்சியே அதுபோலவா?” என்று மீண்டும் அவனைத் தூக்கி நிறுத்தி அவன் சில்லு மூக்கை உடைத்தவன், “உனக்கு காதல்னா என்னனு தெரியுமாடா? நீ காதலிச்ச பொண்ணு உன்ன பிடிக்கலன்னு காரித் துப்புனாக் கூட அவளுக்கு ஒண்ணுன்னா உன் உயிர் துடிக்கணும். அவளுக்காக உன் உயிரைக் கொடுக்கக் கூட நீ தயாரா இருக்கணும். அதுதாண்டா காதல். ஆனா நீ… உனக்கு கிடைக்காதவ யாருக்கும் கிடைக்கக் கூடாதுன்னு என் தியாவுக்கே மரண பயத்தை காட்டிட்டில்ல. என் ஹனியோட பிஞ்சுக் கை ரெண்டும் எவ்ளோ பெரிய காயமாகி, இயற்கை தேவைகளுக்குக் கூட அவள மத்தவங்க உதவிய எதிர்பாக்க வச்ச உன்ன எப்பிட்றா சும்மா விடுறது. அன்னிக்கு அவ எனக்குப் பிடிக்காதவளா இருந்தப்போவே உன்ன நான் அவபக்கம் திரும்பக் கூடாதுன்னு வார்ன் பண்ணேன். ஆனா நீ இந்த ஆதியோட ஒயிப் மேலயே கைவச்சுட்டியேடா. உன்ன…” என்று முழுப்பலத்தையும் திரட்டி அவனை ஓங்கி இன்னொரு உதை உதைக்க, அதில் காத்தாடி போல் பறந்து சென்ற சர்வா சற்று முன்னர் சிவா முதலைகளின் கூடாரம் என்று சொல்லியபடி பார்த்து நடுங்கிய பால்கனிக் கைப்பிடிச் சுவற்றில்
விழுந்து அந்தப் புறம் தொங்கத் தொடங்கியவன் தனக்குக் கீழே இருந்த முதலைகளையும் பார்த்து ஏகத்துக்கும் அலறத் தொடங்கியிருந்தான்.