அவன் தொங்கிய இடத்திற்குக் கீழே ஏரி நீருக்குள் பத்துக்கும் மேற்பட்ட முதலைகள் வாயைப் பிளந்து கொண்டு மேலே தொங்கிய சர்வாவை நோக்கிச் சீற, அதைப் பார்த்தபடி ஒற்றைக் கையால் தொங்கிக் கொண்டிருந்த சர்வாவுக்கு சற்று முன் இருந்த திமிரெல்லாம் எங்கு ஓடி ஒளிந்தது என்று கூடத் தெரியவே இல்லை…
“டேய் டேய் ஆதி காப்பாத்துடா. நான் உன் மனைவி மேல ஆசைப்பட்டது தப்பு தான் டா அதுக்காக இந்த முதலைகளுக்கு என்ன இரையாக்கிடாதடா. ப்ளீஸ் நான் இனிமேல் உங்க பக்கமே திரும்பி பாக்க மாட்டேண்டா. உன் கால்ல விழுந்து மன்னிப்புக் கேக்குறேன் டா. என்ன மேல தூக்கி விட்டுடுடா.” என்று சர்வா பீதியில் உடல் வெடவெடக்கக் கத்தி கூப்பாடு போடத் தொடங்கியதைப் பார்த்திருந்த சிவாவுக்கே தொண்டைக்குழிக்குள் எச்சில் இறங்க மறுக்க…
ஆனால் சர்வாவின் கதறலை ஏதோ சங்கீதம் கேட்பதைப் போல் புன்னகையுடன் பார்த்துக் கொண்டே அங்கிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான் ஆதி.
இதுநாள் வரை இப்படி ஒரு குரூரத் தனத்துடன் தன் முதலாளியைப் பார்த்திராத சிவாவோ, “பாஸ் தன்னோட ஒயிப் மேல கை வச்சான்னு இப்டி ஒரு கொடூரமான தண்டனையை சர்வாக்குக் குடுக்கப் போறாரா?. ராஹி தங்கச்சி மேல இவ்ளோ பாசம் வச்சிருக்காரா பாஸ்?” என்று பலவாறு சிந்தித்தவன் சர்வாவின் கதறலையும் கேட்க முடியாது “பாஸ்…” என்று ஆதியிடம் ஏதோ சொல்ல முனைந்தவேளை ஆதியின் பாக்கெட்டில் இருந்த கைபேசி அவன் மனைவியின் அழைப்பைக் காட்டியதோடு அவளது வட்ட வடிவ நிலா முகமும் கைபேசியின் தொடுதிரையில் அழகாக ஒளிர்ந்தது.
சில மணி நேரம் முன்பு இன்று ஒருநாள் தன்னுடன் இருக்கும் படி வாய் விட்டே கேட்டும் சிறிதும் தன் உணர்வுகளை மதியாது தன்னைப் புறக்கணித்துச் சென்ற கணவனின் செயலில் ஏகத்துக்கும் ரணப்பட்டுப் போன பெண்ணவளுக்கு கரிய நிற விழிகளில் இருந்து கண்ணீர் அருவி நிற்காமல் வழிந்து கொண்டே இருக்க, அந்தக் கண்களுக்கு விடியும் வரையில் கூட உறக்கம் என்பதே இல்லாமல் தான் போனது.
கணவன் மேல் கொண்ட நேசத்தை அவனிடம் வாய் வார்த்தையாய் கூற முடியாமல் தன்னையே அவனுக்கு அர்ப்பணித்து அவன் கைகளில் களிமண் போல் குழைந்து இருந்தவளை ஆதி புறக்கணித்துச் சென்ற நிமிடம் தொட்டே அவனுக்கு தன் மேல் துளியும் நேசமில்லை, ஏன் தன்னிடம் அவனுக்கு மோக ஆசை கூட இல்லை என்று மீண்டும் மீண்டும் அவன் புறக்கணித்துச் சென்ற நிமிடங்களை எண்ணியே இரவு முழுதும் அழுது கரைந்திருந்தவளை கைபேசி இசைக்கும் சப்தம் மெலிதாக அவளது கவனத்தை ஈர்த்திருந்தது.
இருந்தும் எழுந்து அதை எடுக்கக் கூடத் தோன்றாது உள்ளத்தோடு உடலும் பலவீனமாய் மாற சோகை பீடித்தது போல் படுத்திருந்தவள் மீண்டும் மீண்டும் கைபேசி ஒலிக்கவும் ஒரு கணம் கணவன் தான் அழைக்கிறானோ என்றும் உள்ளூறப் பரவசம் பொங்க தட்டு தடுமாறி எழுந்து ஓடியவள் ஓடிய வேகத்தில் மேஜைக் கால்களில் இடித்துக்கொண்டதையும் பொருட்படுத்தாது வேகமாக கைபேசியை எடுத்துப் பார்க்க, அதுவோ அவளுக்கு அறிமுகமே இல்லாத ஏதோ ஒரு புதிய எண்ணைக் காட்டி விடாமல் அலறிக் கொண்டே இருந்தது.
அழைத்தது கணவன் இல்லை என்று தெரிந்ததில் மீண்டும் உள்ளம் நைந்து போனவள் கைபேசியை மேஜையில் வைக்கப் போன சமயம், “போனை எடு ராஹி ரொம்ப முக்கியமான விஷயம்” என்ற குறுந்தகவலும் அதே எண்ணிலிருந்து வந்திருக்க, அது என்ன விஷயம் என்று அறியாத ராஹியும், யாரது நம்ம பேரலாம் போட்டு மெசேஜ் பண்ணிருக்காங்க? என்ன முக்கிய விஷயமோ?’ என்று யோசித்தபடியே மீண்டும் அழைத்த கைபேசி அழைப்பை ஏற்று செவியில் பொருத்தியவள் அந்தப்புறம் கேட்ட பியூலாவின் குரலை அச்சமயம் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.
ஆனால் ராஹியின் அதிர்ச்சியை எதிர்பார்த்தே அவளுக்கு அழைத்திருந்த பியூலாவோ, “என்ன ராஹி என் வாய்ஸக் கேட்டே சாக்கானா எப்படி. நான் சொல்லப்போற விஷயத்தையும் முழுசாக் கேட்டுட்டு அப்றம் மொத்தமா சாக்காகிக்க” என்று எகத்தாளம் பேசியவள் தொடர்ந்து, “ஆதி இப்போ எங்க இருக்காருன்னு உனக்குத் தெரியுமா?” என்றும் கேட்டாள்.
அவள் கேட்ட தோணியே ஏதோ பெரும் பூதம் கிளம்பப் போவதை உறுதி செய்தும், “என் புருஷன் இப்போ எங்க இருந்தா உனக்கென்ன. நீ எதுக்கு போன் பண்ண அத மட்டும் சொல்லு” என்று இழுத்துப் பிடித்த உறுதியோடு கேட்டவளின் பேச்சில்…
“பார்ரா பேச்செல்லாம் பலமாயிருக்கு” என்று மெச்சுவது போல் நக்கல் செய்தவள், “ஆதி உன் புருஷன் தான் நான் ஒப்புக்கிறேன். ஆனா அது நேத்து வரை மட்டும் தான்” என்று சொன்னவள், “இன்னையிலிருந்து உனக்கும் ஆதிக்கும் எந்த பந்தமும் இல்லன்னு உறுதி ஆகிடுச்சு. அத ஆதியே உன்கிட்ட நேர்ல சொல்லத் தயங்கித் தான் என்னப் பேசச் சொன்னாரு. அவரு என்னோடத்தான் இருக்காரு. அதனால நீ உடனே உன்னோட கிராமத்துக்கு ஓடிப்போயிடு” என்றும் மிரட்டல் குரலில் கூற…
இங்கு ராஹிக்கோ தரையில் விழுந்த மீனாய் உள்ளம் துடிதுடிக்கத் தொடங்கியது.
இருந்தும், “இல்ல இல்ல இவ சொல்றப் போல எதுவும் இருக்காது” என்று தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டவள், “உன்னோட உளறல் எல்லாம் வேற எங்கையாவது வச்சுக்கோ. அன்னிக்கு பார்ட்டில மாதிரி உன் மிரட்டலுக்கெல்லாம் நான் பயப்புட மாட்டேன். ஆதித்தான் என்னோட கணவர் அவர விட்டு நான் ஏன் போகணும்” என்று சொன்னவளின் பேச்சில் ஒரு நிமிடம் அதிர்ந்து விழித்த பியூலாவும் சடுதியில் சுதாரித்தவள்,
“அதுசரி… ஆதி உன்ன கன்ட்ரி ப்ரூட்னு சொன்னது சரியாத்தான் இருக்கு. நீ இவ்ளோ லூசா இருப்பன்னு நான் எதிர்பாக்கவே இல்லை. மியூச்சுவல் டிவோர்ஸ்கு சைன் பண்ணிட்டு இன்னும் ஆதி உன் கணவர்னு டைலாக் அடிக்கிற? ஹா ஹா ஹா” என்று என்று ஏதோ ஹாஸ்யத்தைக் கேட்டவள் போல் சிரித்தவள், “சரி நான் பேசுறது உலறல்னே வச்சிகிட்டாலும் இப்போ கொஞ்ச நேரத்தில உனக்கு ஒரு பார்சல் வரும் அதுல இருக்கத பாத்துட்டே நீ உன் நிலைமைய புரிஞ்சிக்கோ. அதப் பாத்த பின்னவும் ஆதிய விட்டுப் போகமாட்டேன்னு நீ அடம் பிடிச்சா அவர் கையாலையே உன்ன கழுத்தைப் பிடிச்சித் தள்ளுறத தவிர வேற வழியே இல்ல எங்களுக்கு. உன் மரியாதைய காப்பாத்திக்கணும்னு நினைச்சன்னா ஆதி அங்க வர்றதுக்குள்ள அவர் வீட்ட விட்டுப் போயிடு. இதுக்கு மேலயாவது அவர் தலையில கட்டின கல்லா இருக்காம அவருக்குப் பிடிச்ச பொண்ணோட அவரை நிம்மதியா வாழவிடு” என்றும் ராஹி மூச்சுவிடுவதற்குக் கூட இடம் கொடாது ஏதேதோ பேசிய பியூலா ராஹி பதில் கூறும் முன்னே சட்டென்று கைபேசியை அணைத்து விட,
அச்சமயம் சரியாக அறைக் கதவு மெமையாகத் தட்டப்பட்டு, “உங்களுக்கு ஒரு பார்சல் வந்துருக்குமா” என்று ஒரு வெள்ளை நிற உரையைக் கொண்டு வந்து ராஹியின் கரத்தில் வைத்து விட்டு சென்றாள் வேலைக்காரப் பெண் செல்வி.
ஒரு கரத்தில் கைபேசியைப் பிடித்திருந்தவளின் மற்றொரு கரத்தில் செல்வி கொடுத்து விட்டுச் சென்ற வெள்ளை நிற உரை இருக்க, அதையும் கைபேசியையும் மாறி மாறிப் பார்த்த ராஹிக்கோ இதயம் வெளியில் வந்து குதித்து விடும் நிலையில் எக்குத்தப்பாகத் துடிக்கத் தொடங்கி, அந்த உரையினுள் என்ன இருக்கும் என்ற யூகத்திலே அவளின் ஐந்தரை அடி மேனியும் ஆட்டம் காணத் தொடங்கியது.
‘இருக்காது இருக்காது இது அதுவா இருக்காது. பியூலா சொல்ற போல எதுவும் இருக்காது. கணவன் தன்னை இங்கிருந்து அனுப்ப நினைக்க மாட்டான்’ என்று மீண்டும் மீண்டும் உள்ளூற உருப்போட்டுக் கொண்டாலும் கையிலிருந்த உரையைப் பிரித்துப் பார்க்க அஞ்சியவள் போல் மறு கரத்தில் இருந்த கைபேசியையே வெறித்துப் பார்த்தவளுக்கு கணவனிடம் ஒரு வார்த்தையாவது பேசினாள் சற்று தென்பு கிடைக்கும் போல் தோன்ற உள்ளக் கலக்கத்தை எல்லாம் ஒதுக்கி வைத்து வேகமாக அழைப்பு எடுத்தாள் ஆதிக்கு.
அங்கே சர்வாவின் கதறலை ரசித்தபடி நாற்காலியில் அமர்ந்திருந்தவனின் கைபேசி, “ஹனி கால்லிங்…” என்ற மனைவியின் அழைப்பைக் காட்டியதோடு எந்நேரமும் புன்னகையைச் சுமந்தபடி இருக்கும் பெண்ணவளின் சாந்த முகத்தையும் திரையில் கண்ட நொடி அவனுள் கொதித்துக் கொண்டிருந்த மிருகம் மெல்ல மெல்லச் சாந்தமடையத் தொடங்கியது.
அத்தோடு அவள் கையில் வெட்டுப்பட்ட அன்று தான் சர்வாவை ஏதேனும் செய்தே ஆக வேண்டும் என்று பல்லைக் கடித்த பொழுதில், “அவங்கவங்க செய்ற தப்புக்கு உண்டான தண்டனையை கடவுள் அவங்களுக்குக் கொடுப்பாரு ஆதித்தான். சராசரி மனுஷங்க நாம ஒரு தப்புக்கு இன்னொரு தப்புதான் தீர்வுன்னு நினைச்சா நம்மளோட பாவக் கணக்குதான் அதிகமாகும். அப்டி உங்களுக்கு அவனை ஏதாச்சும் பண்ணனும்னா சட்டத்தின் மூலமா வேணா பண்ணுங்க. மறுபடியும் அவனோட நேரடியா மோதி உங்களுக்கு ஏதாச்சும் ஆனா என்னால தாங்க முடியாது” என்று அன்று அவள் கூறியது இன்று அவன் செவியில் ஒலிக்க மனைவியின் அந்த பேச்சையும் மீறி இரு விரலில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த சர்வாவின் உயிரைப் பறிக்க அவனால் சிறிதும் இயலவில்லை.
தன்னவள் மேல் கை வைத்தான் என்பதற்காகவே அவனைக் கொடூரமாய்க் கொல்லும் அளவு யோசித்தவன் இன்று அதே தன்னவளின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு சர்வாவை மன்னித்து விட எண்ணியவனாய் இன்னும் ஓயாமல் அழைத்துக் கொண்டே இருந்த கைபேசியில் ஒளிர்ந்த பெண்ணவளின் நகலைப் பார்த்து,
‘நான் உன்கிட்ட நேர்ல வந்து நிறைய பேசணும்டி. இன்னும் கொஞ்சம் நேரம் அத்தானுக்காக வெயிட் பண்ணு ஹனி’ என்று மனதோடு பேசியவன் கைப்பேசியை அணைத்து பாக்கெட்டில் போட்டவாறே எழுந்து சர்வாவை நோக்கி வேக எட்டுக்களை வைத்தான் ஆதி.
பியூலா கூறிய செய்தியிலும், கையிலிருக்கும் பிரிக்கப்படாத வெள்ளை உரையிலும் மனம் முழுதும் சொல்லொணாத கலக்கம் சூழ்ந்த நிலையில் கணவனின் குரலைக் கேட்டாவது சாந்தமடைய எண்ணி அவனை கைபேசியில் அழைத்தவளின் அழைப்பை அவன் நிராகரித்த நொடி அவள் கூடை விட்டுப் பிரிந்த உயிரோடு அவன் மேல் அவள் வைத்த நம்பிக்கையும் காற்றில் கரைந்து காணாது போக, அவன் குரலைக் கூடக் கேட்க முடியாத நிலையில் அவன் தன்னை வேண்டுமென்று தான் தவிர்க்கிறான். என்றும் உணர்ந்து கொண்டவள், “அப்போ பியூலா கூறியது போல் தன்னைப் பிரிவதில் கணவன் உறுதியாக இருக்கிறான்” என்ற முடிவுக்குத்தான் வலிக்க வலிக்க தள்ளப்பட்டாள் ராஹி.
ஆறறிவு மூலம் அவள் அறிந்து கொண்ட செய்தியில் கையிலிருக்கும் வெள்ளை உரையைக் கூட பிரித்துப் பார்க்க அவசியம் இல்லை என்று அவள் மூளை சொல்லியும் கடலில் தத்தளிப்பவனுக்கு கட்டையாய் எண்ணி அதை நடுங்கும் கரங்களால் உரையைப் பிரித்துப் படித்தவள், அதில் இருந்த ‘தனக்கும் ஆதிக்கும் இனி எந்த பந்தமும் இல்லை’ என்ற வரிகளில் அந்த அச்சடித்த காகிதத்தோடு கையிலிருந்த கைபேசியையும் சேர்த்தே நழுவ விட்டவள், “எனக்கு இது வேணாம் ஆதித்தான்…” என்ற கதறலோடு அப்படியே தரையில் சரிந்து அழுது அரற்றத் தொடங்கினாள் ராஹி.
தான் இத்துணை கத்தியும் சிறிதும் இளகாது அமர்ந்திருந்த ஆதியையும் தனக்குக் கீழே பத்தடி தூரத்தில் தன் ராட்சத வாயைப் பிளந்து தன்னை விழுங்கப் போகும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தபடி இருந்த முதலைகளையும் பார்த்தே அனைத்தும் முடிந்தது தான் மரண விளிம்பிற்கு வந்து விட்டோம் என்று சப்த நாடியும் ஒடுங்கிப் போய் நாவரண்டு துவளத் தொடங்கிய சர்வாவின் எஞ்சிய இரு விரல்களும் பால்கனி கைப்பிடியில் இருந்து வழுக்கத் தொடங்கிய வேளை மின்னலென அவனருகில் பாய்ந்து அவன் கையைப் பற்றி காப்பாற்றி பால்கனிக்குள் தூக்கிப் போட்டான் ஆதி.
அத்துணை நேரம் ஆதியின் செயல்களையே அதிர்ச்சியோடு பார்த்திருந்த சிவாவோ தன் கண் முன்னால் நடக்கவிருந்த கொடூர உயிர்பலி தடுக்கப்பட்டு விட்டதை உணர்ந்து, “வாட் எ பர்பாமன்ஸ் பாஸ். சான்ஸே இல்ல. நான் கூட ஒரு நிமிஷம் ரொம்ப பயந்துட்டேன். மயிரிழையில் மேஜிக் பண்ணிட்டீங்க. யூர் ரியலி கிரேட் பாஸ்” என்று ஆதியின் கையைப் பற்றி தன் நிம்மதியை வெளிப்படுத்த, தான் உயிர் பிழைத்து விட்டோம் என்று இன்னும் நம்ப முடியாது, எழும்பி அமரவும் இயலாது தரையில் சுருண்டவாறே ஆதியைப் பார்த்திருந்த சர்வா அவனையும் அறியாது கை எடுத்துக் கும்மிட்டு ஆதிக்கு நன்றி கூறியதோடு மனம் திருந்தி மன்னிப்பும் வேண்டினான்.
ஆனால் அதையெல்லாம் சட்டை செய்யாது அவனருகில் சென்று லேசாகக் குனிந்தவன், “அன்னிக்கு யார உன் கையாள வெட்டிக் கொள்ளப் பாத்தியோ அவளால.என் தியாவால மட்டும் தான் இப்போ நீ உயிரோட இருக்க இனிமேல் உன் வாழ்க்கைல என் தியாவோட பேரக் கூட நீ சொல்லக்கூடாது. எங்க கண்லயும் நீ படக்கூடாது” என்று மட்டும் எச்சரிக்கை செய்தவன், “இவனை எங்க இருந்து கொண்டு வந்தியோ அங்கயே கொண்டு போய் விட்டுடு சிவா” என்று தன் காரியதரிசிக்கும் கட்டளை இட்டவன் அதற்கு மேல் ஒருநிமிடம் கூட அங்கு இருக்க விளையாமல் சென்னையை நோக்கி தன் பயணத்தைத் துவங்கினான் ஆதி.
முதல் முறை… தான் நினைத்த ஒரு காரியத்தை தானே பாதியில் நிறுத்த நேரிட்ட போதும், “அவளுக்காகவே ஆனாலும் ஒரு கொலைப் பாதகம் பண்ணிட்டு வந்தேன்னு சொன்னா தியா நிச்சயம் சந்தோசப் படமாட்டா. என் தியாவுக்காக என் கோபத்தை விட்டுக் குடுத்ததுல எனக்கு சந்தோசமே” என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டபடியே வண்டியை மின்னலெனச் செலுத்தியவனுக்கு மனைவியை எப்பொழுதடா பார்ப்போம் என்ற மன நிலைதான்.
விவாகரத்து கிடைத்துவிட்டதற்கான சான்றிதழை படித்த நொடி அப்படியே தரையில் விழுந்து கதறத் தொடங்கி மணித்துளிகள் பல கடந்தும் தேற்றுவாரற்று கிடந்தவளுக்கு திடீரென்று நேற்று இரவு ஆதி, ‘போயிட்டு வந்து உன்கிட்ட ஒரு கோரிக்கை வைக்கப் போறேன். மாட்டேன்னு மட்டும் சொல்லி விடாதே” என்று கூறிச் சென்ற வார்த்தைகள் அவள் நினைவடுக்கில் தோன்றி அவளை எழுந்து அமரச் செய்திருந்தது.
‘கணவன் தன்னிடம் எதிர்பார்த்த, எதிர்பார்க்கும் மிகப்பெரிய கோரிக்கை தங்கள் விவாகரத்துத்தானே. அவன் நேற்று கூறிச் சென்றதும் இதுவாகத்தான் இருக்கும்… தங்கள் பிரிவு… அவனுக்கு அதுதானே வேண்டும் அவனுக்கு அது தானே சந்தோசம்’ என்று அவளாகவே முடிவு செய்து கொண்டவள் அடுத்த அரை மணி நேரத்தில் தான் நினைத்துக் கூட பார்த்திராத முடிவோடு தன் மாமியார் மதியின் முன்னால் நின்றாள்.
நேற்று இரவு சர்வா மேலிருந்த கோபத்தில் வேறு வழியில்லாது அவள் தன்னுடனே இருக்க சொல்லியும் மனைவியை விட்டு விலகி வந்தவன் இக்கணம் கோபம் மொத்தமும் வடிந்த நிலையில் அவள் நெஞ்சாங்கூட்டின் வாசம் கேட்டு அவன் ஊனும் உள்ளமும் துடிதுடித்துக் கிளம்ப நேருக்கு நேராய் தீண்ட வந்த விசப்பாம்பான சர்வாவையே அவளுக்காக பல்லைப் பிடிங்கி செல்லாக் காசாக்கியவன் அங்கே பியூலா என்ற நச்சுப் பாம்பு தன்னவளைக் கொத்திக் குதறி துடிக்க வைத்திருப்பதை அறியாமல் மனைவியைக் காணும் பேராவலில் வீட்டை அடைந்தவன், “தியாமா… ஹனி” என்று கூவியபடியே தங்கள் அறைக்குள் நுழைந்தவனை வரவேற்றது என்னவோ காரிருளால் சூழப்பட்ட வெறுமையான வெற்று அறைதான்.