என்ற அநேகன் படப் பாடல் வரிகள் ஹரிஹரனின் குரலில் ஆணவனின் நெஞ்சை பிசைந்தபடி மகிழுந்தினுள் ஒலித்துக் கொண்டிருக்க, அந்த இரவு நேர மையிருளையும் மகிழுந்து வெளிச்சத்தால் விரட்டி அடித்தபடி காற்றைக் கிழித்துக் கொண்டு திருநெல்வேலி செல்லும் முக்கிய சாலையில் தன் பயணத்தை தொடர்ந்திருந்தது ஆதியின் அன்னப்பறவை பஹாணி ஹுய்ரா.
பூச்சி பொட்டு, நாய் நரிகள், பறவை இனங்கள் என்று அண்ட சராசரமும் உறங்கிக் கிடக்கும் நடுஜாமப் பொழுதில் உறக்கத்தின் சாயல் கூட சிறிதும் இல்லாது, இயற்கை தேவைகளுக்குக்
கூட வண்டியை நிறுத்தாது போருக்குச் செல்லும் வீரனாய் புரவியென மகிழுந்தைச் செலுத்தி வந்தவன் ஒன்பது மணி நேரப் பயணத்தை ஏழு மணிக்குள் கடந்து பூஞ்சோலையில் மனைவியின் வீட்டின் முன்னால் மகிழுந்தை அணைக்க அப்பொழுது தான் நிலா மகள் மெல்ல பூமியிடம் விடைபெற்று இரவின் கருமைக்கு முற்றுப் புள்ளி வைக்கத் தொடங்கினாள்.
மனைவி தன்னைத் தான் நேசிக்கிறாள் என்று எக்கணம் அறிந்து கொண்டானோ அந்நிமிடம் தொட்டே அவளின் மலர் முகத்தை அதிவிரைவில் காண வேண்டும் மன்னிப்புக் கண்ணீர் கொண்டு அவள் மார்புக் குழியை நிரப்ப வேண்டும் என்ற ஒரே உந்துதலில் மகிழுந்தைச் செலுத்தி வந்து நிறுத்திய வேகத்திலே வண்டியை விட்டுப் பாய்ந்து இறங்கியவன் யுவாவின் அரண்மனை வீட்டிற்குள் அடி எடுத்து வைக்க, அச்சமயம் சரியாக யுவாவும் மலரும் எங்கோ செல்வதற்கு ஆயத்தமாகி வந்தவர்கள் ஆதியைக் கண்டு ஒரு நிமிடம் மலைத்துத் தான் நின்று விட்டனர்.
தங்கள் திருமணத்தைக் கூட சென்னையில் தான் வைக்க வேண்டும் என்று உறுதியாகச் சொன்ன மருமகன், திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் நெருங்கிய நிலையில் இன்னும் மறுவீட்டு விருந்தைக் கூட ஏற்காதவன் இருள் கூட விலகாத இத்துணை அதிகாலையில் தங்கள் வீடு தேடி வந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மலரோ அவனை வரவேற்கக் கூடத் தோணாது நிற்க, மகள் பையும் கையுமாய் வந்த தினம் தொட்டே மருமகனின் வரவை பெரிதும் எதிர்பார்த்திருந்த யுவாவுக்கும் கூட இத்துணை அதிகாலையில் இப்படி ஒரு களைத்த கோலத்தில் வந்த ஆதியைக் கண்டு அதிர்ச்சியே மிஞ்சியதில் அவனும் கூட விருந்தோம்பலை மறந்தவனாய் நின்றான்.
ஆனால் இக்கணமே மனைவியைக் காண வேண்டும் என்ற தவிப்பில் இருந்தவனுக்கு யாருடைய வரவேற்பும் தேவையே பட்டிருக்கவில்லை.
“ஹாய் அங்கிள்… ஹாய் ஆன்டி” என்று ஆதி தன் வீடு போல் உள்ளே நுழைந்தவன் தங்களை சமீபிக்கவும் தான் இமைத்தட்டி விழித்தவர்கள், “வாங்க மாப்பிள்ளை வாங்க. எப்டி இருக்கீங்க. அப்பா அம்மா நல்லாயிருக்காகளா?” என்று வரவேற்றவர்களின் சப்தத்தில் வீட்டின் உள்ள மற்றயவர்களும் வரவேற்பறையில் குழுமி விட்டனர்.
வீட்டின் செல்லப் பெண்ணான ராஹியின் கணவன் தங்கள் மூத்த மருமகன் என்பதையும் தாண்டி அஸ்வினின் மூத்த மகன் என்ற அடையாளமே யுவா வீட்டினர் மத்தியில் ஆதியின் மதிப்பை உயர்த்தியிருக்க, யுவாதம்பதி மட்டுமல்லாது அவனின் அண்ணன் தனா குடும்பம் அவர்களின் பெற்றோர் அப்பத்தா என்று அத்துணை பேருமே ஆதியை தங்கள் வீட்டுப் பிள்ளையாய் ஆரவாரத்தோடு வரவேற்று உபசரிக்கத் தொடங்க அன்னிச்சையாய் அவர்களுக்கு பதில் கொடுத்த காளையின் கண்களோ தன் கண்ணான கண்மணியைத் தான் வீட்டைச் சுற்றித் தேடியது.
அனைவரும் அமரச் சொல்லியும் கூட அமராது நின்ற வாக்கிலே அனைவரின் விருந்தோம்பலையும் ஏற்றுக் கொண்டவனின் விழிகள் வீட்டைச் சுற்றி வலம் வந்ததைக் கண்டு கொண்ட யுவாவோ, “ராஹிப்பா மாடில தூங்கிட்டிருக்கா மாப்பிள்ளை. நீங்களே போய் பாக்குறீங்களா? விழியப் போய் எழுப்பச் சொல்லவா?” என்று அவன் தவிப்பறிந்தவனாய்க் கேட்க…
அதில் மாமனாரை நன்றியாய் நோக்கியவனும், “இல்ல இல்ல அங்கிள் நானே போய் பாத்துக்கறேன்” என்று ஒரு வேகத்தோடு கூறியவன், அப்பொழுது தான் ராஹி வீட்டினர் அனைவரும் எங்கோ செல்ல ஆயத்தமாகி இருப்பதையும் கவனித்தான்.
யுவா மற்றும் தனா தம்பதியோடு அவர்கள் பெற்றோரும் கூட உறவினர் வீட்டுத் திருமணத்திற்குச் செல்லக் கிளம்பி இருக்க, ராஹி மட்டும் தனக்கு உடல்நிலை சரியில்லை நான் வரவில்லை என்று நேற்றே கூறி இருந்தவள் அவளது அறையை விட்டே இன்னும் வெளியே வராது இருக்க மருமகன் வந்திருக்கும் பொழுது எப்படி விட்டுச் செல்வது என்று யோசித்த யுவாவும் மலரும் மற்றவர்களை மட்டும் விசேஷத்திற்குச் செல்லும் படி கூறினர்.
அதைக் கேட்டபடி நின்ற ஆதியோ, “அய்யோ அங்கிள் நான் நெக்ஸ்ட் பியூ டேஸ்கு இங்கதான் இருக்கப் போறேன். எனக்காக பங்க்சன கேன்சல் பண்ண வேணாம். நீங்க போய்ட்டு வாங்க ஆன்டி. நான் போய் தியாவப் பாத்துக்கறேன்.” என்று சரளமாக மாமனிடம் தொடங்கி மாமியிடம் முடித்தவன் அவர்கள் பதிலைக் கூட எதிர்பாராது இரண்டிரண்டு படியாக மாடி ஏறிச் சென்று மறைந்தான்.
இருவாரங்கள் முன்பு திடீரென்று மகள் வந்து நின்ற பொழுதே தம்பதியருக்குள் ஏதோ பூசல் என்று உணர்ந்து, உள்ளம் கவலை கொண்ட யுவாவிற்கு அவர்களுக்கிடையில் நுழைந்து பிரச்சனையை கடை பரப்பவும் சிறிதும் விருப்பமில்லை. அத்தோடு ராஹியும் பெற்றோரின் முன்னால் இயல்பாக இருப்பது போலவே காட்டிக் கொள்ள, யுவாவிற்கும் சற்று பொறுமையாக இருப்பதைத் தவிர வேறு வழியும் இருக்கவே இல்லை.
ஆனால் இத்துணை அதிகாலை வந்து நின்ற மருமகனை பார்த்ததும் அதிலும் அவன் விழிகள் மனைவியைத் தேடிய தேடலிலுமே அவர்களின் ஊடல் முடிவை நெருங்கி விட்டதை உணர்ந்து கொண்டவன் கவலையாய் நோக்கிய மலரிடமும், “நீயும் நானும் போடாத சண்டையா மொசக்குட்டி. அதான் மாப்பிள்ளை வந்துட்டாரில்ல. இனி என் பொண்ணு நார்மல் ஆகிடுவா. எல்லாம் அவர் பாத்துப்பாரு” என்று சமாதானம் செய்தவன் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடே அனைவருடனும் விசேஷத்திற்குக் கிளம்பினான்.
அத்துணை பெரிய வீட்டின் மேல் பகுதியில் ராஹியின் அறையைத் தேடிக் கண்டு பிடிப்பதற்குள்ளாகவே ஒரு வழியாகி விட்டான் ஆதி.
யுவா மலர் தவிர பெரியவர்கள் அனைவருக்கும் கீழ்பகுதியிலே அறைகள் இருக்க, பள்ளியின் இறுதிகளில் இருந்த ப்ரித்திவ்வும் நவீனும் பள்ளி விடுதியிலே தங்கிக் கொள்ள, ராஹிக்கும் சாஹிக்கும் கூட திருமணம் ஆகி விட்டதால் மேல் பகுதி அறைகள் முழுதும் பெரும்பாலும் காலியாகவே இருந்தது.
அதில் ஒவ்வொரு அறையாக திறந்து “தியா தியா” என்று தேடிப் பார்த்தவன் மறுகோடியில் அனைத்திலும் சற்று பெரியதாக இருந்த ஒரு அறையை நோக்கி எட்டுக்களை வைக்க, அதற்குள் அவ்வறைக் கதவைத் திறந்து கொண்டு “விழிம்மா…” என்றழைத்தபடியே வெளியே வந்தது சாட்சாத் அவனவளே தான்.
கேள்வனின் பிரிவால் சற்றே உடல் மெலிந்து, கன்னங்கள் ஒடுங்கி, முகம் எல்லாம் ரத்தப் பசையற்ற வெண்மை நிறத்திலும் வெறுமனே உடலைச் சுற்றியிருந்த நூல் புடவையில், அவன் கட்டிய தாலிக்கொடி மட்டுமே கழுத்தில் தவழ, அள்ளி முடிந்த கூந்தலோடு தன்னை நோக்கி வந்தவளை அவளவனோ மகிழ்ச்சி, பரவசம், துக்கம், ஆற்றாமை, குற்றவுணர்ச்சி, தனைப் பிரிந்து வந்து விட்டாளே என்ற சிறிதான கோபம் என்று இன்னும் என்னென்ன உணர்ச்சிகள் எல்லாம் உள்ளதோ அனைத்தும் கண்களில் தேக்கிப் பார்த்திருக்க, கையெட்டும் தூரத்தில் நெருங்கிய பின்னர் தான் கணவனைக் கண்டு கொண்டவளும் அதிர்ச்சியில் அந்த இமையையே இழந்து விட்டது போல எதிரே நின்ற கணவனை விழிகள் விரித்து பார்த்தப்படி உறைந்து நின்றாள் ராஹித்தியா.
அவளைக் காண வேண்டும் என்ற தவிப்போடு ஓடோடி வந்தவனுக்கே மனைவியின் இந்தத் தோற்றம் அதிர்ச்சியோடு வலியையும் கொடுக்க, தன்னைக் காண அவன் வருவான் என்று துளியும் நம்பிக்கையற்று இருந்த பெண்ணுக்கோ அவளுக்குச் சிறிதும் குறையாத துன்பம் அனுபவித்து, சரியான உறக்கம் இல்லாது கண்கள் சிவந்து, உடைகள் கசங்கி, தலைமுடி களைந்து தன் முன்னே நின்றவனின் வரவு உச்சகட்ட அதிர்ச்சியை மட்டுமல்லாது, கூடவே கரைகாணா கண்ணீர்த் துளிகளையும் பெண்ணின் அஞ்சன விழிகளுக்கு பரிசளித்துச் சென்றது.
பிரிந்தவர்கள் சந்தித்தால் அங்கு வார்த்தைக்கும் வேலையுண்டோ காதலின் மொழி கண்கள் மட்டுமே அறிந்த ஒன்றல்லவா….
நிமிடங்கள் பல கரைந்தும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையாலே பருகியபடி நிற்க, பெண்ணின் விழிகளில் திரண்ட கண்ணீர்த் துளிகளைக் கண்டு அதற்கு மேல் தாமதிக்க முடியாதவனோ, “தியாமா…” என்ற கூவலுடன் ஓரெட்டில் அவளை நெருங்கினான் ஆதி.
கணவனின் நெஞ்சை உருக்கும் அந்த அழைப்பில் நெகிழ வேண்டியவளோ, தன் கைகளைப் பற்ற வந்தவனை மிரட்சியாகப் பார்த்தவள், “நீங்க நீங்க எதுக்கு இப்போ வந்துருக்கீங்க? அதான் டிவோர்ஸ் கொடுத்து அனுப்பிட்டீங்கள்ள. இன்னும் ஏதும் பாக்கியிருக்கா டிவோர்ஸ்ல. அப்டி ஏதும் இருந்தாலும் நான் எங்கையும் வரமாட்டேன். என்ன விட்டுடுங்க. இங்கயிருந்து போயிடுங்க” என்று கதறியவாறே அறைக்குள் ஓடி கதவை அடைத்துக் கொண்டாள் ராஹித்தியா.
மனைவியின் அந்தச் செயலில் விக்கித்துப் போனவன் விவாகரத்து என்ற ஒற்றை வார்த்தை மூலம் அவளை எப்படியாப்பட்ட ஒரு அச்சத்தில் தள்ளி விட்டிருக்கிறோம் என்றும் உணர்ந்து, “தியா…” என்று தலையில் தட்டிக் கொண்டே அவளைப் பின்தொடர்ந்து அறைக்குள் நுழைய, அவளோ கட்டிலின் விளிம்பில் அமர்ந்து இருந்தவள் அவனைப் பார்த்ததும், “நான் எங்கையும் வரமாட்டேன். என்ன விட்டுப் போயிடுங்க” என்று முகத்தை மூடிக்கொண்டு மீண்டும் கதறத் தொடங்கி விட்டாள்.
மனைவியின் அந்த அழுகுரலில் இதயத்தை கிழிக்கும் வலியோடு அவளை நெருங்கி அவள் திமிரத் திமிர இழுத்து அணைத்துக் கொண்டவனோ, “தியாமா நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லடி. நான் டிவோர்ஸ் கேட்டது தப்புன்னு எப்பவோ உணர்ந்து அத கேன்சல் பண்ணிட்டேன் டி. நீ எப்பவோ எனக்குள்ள வந்துட்டடி. அந்த நோட்டிஸ் பேக் நோட்டிஸ்மா.” என்று அவள் முதுகைத் தடவியபடி நடந்த உண்மையோடு தன் நேசத்தையும் உணர்த்தியவன் கூற்றைப் புரிந்து நிதர்சனத்தை உள்வாங்கிக் கொள்ளவே வெகு நேரம் பிடித்தது அந்தப் பேதைப் பெண்ணிற்க்கு.
கணவன் வார்த்தைகள் கொடுத்த திடத்தை விட அவன் மார்புச் சூட்டின் கதகதப்பே அவன் பிரிவால் தவித்திருந்தவளுக்கு பெரும் ஆசுவாசத்தைக் கொடுக்க, தாய்ப் பறவையின் இறக்குக்குள் ஒண்டிய சேயாய் தனை மறந்து அவன் நெஞ்சுக்குள் புகுந்திருந்தவளை இன்னும் இன்னும் இறுக்கி தன்னுள்ளே புதைத்துக் கொண்டவனும், “ரொம்ப ரொம்ப சாரிடா தியா. நான் உன்ன சின்னப்புள்ளயிலிருந்தே எப்பவும் தப்பாவே நினைச்சுட்டேன். அதனால தான் நம்ம மேரேஜ் அன்னிக்கு உன்கிட்ட டி டி டிவோர்ஸ் கேட்டு அதுக்கப்புறமும் நடிப்பு அது இதுன்னு உன்ன ரொம்ப கஷ்டபடுத்திட்டேன். ஆனா அதெல்லாம் தப்புன்னு நான் எப்பவோ ரியலைஸ் பண்ணிட்டேன் ஹனி. ஆனா அத நான் உன்கிட்ட சொல்லாம விட்டது தான் டி நான் செஞ்ச தப்பு. அதான் அந்த பியூலா நாய் கூட நம்ம கிட்ட வாலாட்டிப் பாத்துடுச்சி” என்று பல்லைக் கடித்தவனை நிமிர்ந்து பார்த்தவளிடம் இப்பொழுது விசும்பல் கூட மட்டுப்பட்டிருந்தது.
வானம் பார்க்கும் நெற்கதிராய் தன் முகம் நோக்கிய மனையாளின் நெற்றியை மறைத்த கூந்தலை ஒதுக்கி நுதலின் மத்தியில் தன் இதழ்களைப் புதைத்தவன்,
“ஹனீ எப்போ எந்த நிமிஷம் எந்த நொடின்னெல்லாம் எனக்குத் தெரியலடி. நீ என்னோட இதயத்தில நுழைஞ்சு என் உயிரோட கலந்து ரொம்ப நாள் ஆகுதுடி. நான்தான் ஏதேதோ குழப்பத்துல அத உன்கிட்ட வெளிக்கட்டாம இருந்துட்டேன் சாரிடி சாரிடி சாரிடி கண்மணி” என்றவன், “ஆனா நீயாவது உன்னோட லவ்வ என்கிட்ட சொல்லிருந்தா இந்தப் பிரிவு நமக்குள்ள வந்தே இருக்காதடி” என்று ஒரு வித ஆதங்கத்தோடு கேட்டவனின் பேச்சில் தான் தன்னிலை உணர்ந்து சட்டென்று அவனை விட்டு விலகி நின்றவள்…
“நான் உங்கள லவ் பண்றேன்னு யார் சொன்னா உங்களுக்கு?” என்று அவன் தலையில் இடியை இறக்கினாள் அவனின் தியா.
ராஹி அவனை விட்டு வந்த கணம் தொட்டு மனைவியின் தவிப்பிற்க்கு இம்மியும் குறையாத தவிப்பை அனுபவித்தவனும் தாய்நாடு திரும்பிய வேடந்தாங்கள் பறவையாய் இத்துணை நேரம் பெண்ணவளின் அணைப்பில் ஆசுவாசம் அடைந்திருந்தவன் ராஹியின் தற்பொழுதய வார்த்தையில், “தியாமா…” என்று தவிப்போடு அழைக்க…
அதற்கு அவனைத் தீயாய் முறைத்தவளோ, “ஆனாலும் உங்களுக்கு ரொம்ப பேராசைதான். என்ன பிடிக்கவே பிடிக்காத உங்கள, மேரேஜ் அன்னைக்கே டிவோர்ஸ் பேப்பர்ல சைன் வாங்கின உங்களை நான் எப்டி லவ் பண்ணுவேன்னு நீங்க நம்புறீங்க ஆதித்தா…” என்று கூற வந்து பின்பு பல்லைக்கடித்து, “ஆதிசார்” என்று மாற்றியவளின் விழிகளோ அவனை உச்சாதி பாதம் ஆராய்ந்து அவனின் வரிவடிவத்தை தனக்குள்ளே நிரப்பி தன் உள்ளக் கிடக்கை சொல்லாமல் சொல்லியது ஆணவனுக்கு.
மனைவியின் வாய் வார்த்தை வேறு சொன்னாலும், அவள் விழியின் மொழியும், சற்று முன்னர் அது சிந்திய கண்ணீர்த் துளிகளுமே பெண்ணவளின் நேசத்தின் ஆழத்தை அவனுக்கு உணர்த்த, முன்னை விடவும் குழைவாய் “டேய் தியா…” என்றழைத்து அவள் விரல்களைப் பற்றியவன், “நீ என்ன தான் நேசிக்கறன்னு யாரும் எனக்கு சொல்லத் தேவையில்ல ஹனி. உன்னோட ஆதித்தான்கற வார்த்தையும் கொஞ்சம் முன்ன உன் கண்கள் சிந்திய ஈரமும்” என்று அணிந்திருந்த சட்டையையும் மீறி ஆணவனின் மார்பை நனைத்த பெண்ணின் கண்ணீர்த் துளிகளின் அடையாளத்தைத் தொட்டுக் காட்டியவன், “இதுவே போதும் ஹனி உன்னோட லவ்வ உணர்றதுக்கு. ஆனா நீ இப்போ என் மேல இருக்க கோபத்துல பேசுறன்னும் எனக்குப் புரியுதுடா. உன்னோட கோபம் நியாயமானதும் கூட. நான் முன்ன செஞ்சதெல்லாம் தப்பு தப்பு தப்பு மட்டும் தான். அது தான் உன்ன இப்டி பேச வைக்கிதுன்னும் எனக்குப் புரியுதுடி. பெரிய மனசு பண்ணி உன் ஆதித்தான மன்னிச்சுடுடி. நம்ம வீட்டுக்கு வந்துடு ஹனி” என்று சிறு பிள்ளை போல் கெஞ்சியவனின் கெஞ்சலில் அவன் பால் இளகத் தொடங்கிய மனதை வலுக்கட்டாயமாக இழுத்துப் பிடித்தாள் ராஹி.
அவனால் அத்துணை கஷ்டம் அனுபவித்தும் அவனைப் பார்த்ததும் தன்னையும் அறியாமல் கண்ணீரோடு காதலையும் கொட்டிய கண்களை வேகமாகத் திரும்பி தழைத்துக் கொண்டவள், “ஓஹோ நான் இவ்ளோ நாளா உங்க பக்கத்துலயே இருந்தப்போவெல்லாம் உணராத லவ்வ இப்போ உணந்துட்டிங்களோ? அன்னிக்கு பார்ட்டில பியூலா கூட டான்ஸ் ஆடுனப்போ, அப்றம் லாஸ்ட் ஹியரிங்ல கூட உங்க கண்ணுக்குத் தெரியாத லவ், நான் உங்கள விட்டு வந்தப்பின்ன ரொம்ப சீக்கிரமா உணந்துட்டீங்க போலவே ஆதிசார்” என்று குரலில் நக்கலை தருவித்துக் கேட்டவளின் வார்த்தையில் நிமிடங்கள் பல பதிலற்றுத் திணறிப் போனவனும்,
“அப்போ அப்போ நீ சொல்ற அந்த டைம்ல நான், என்னோட லவ்வயே உணரல ஹனி. நீ எனக்காக கைல வெட்டுப்படுற வர நீ எனக்கு காலமெல்லாம் வேணும். உன்ன என் கைவளைவுக்குள்ளயே வச்சிக்கணும்னு தான் நெனச்சிருக்கேன். ஆனா நீ வெட்டுப்பட்டு ஹாஸ்பிடல்ல கிடந்தப்போ தான் டி ஆதின்னு ஒருத்தன் உயிர் வாழணும்னா அவன் கூட அவனோட தியா இருந்தா மட்டும் தான் சாத்தியம்னு நான் புரிஞ்சிக்கிட்டேன் ஹனி. ஐம் மேட்லி லவ் வித் யூடி. ப்ளீஸ் பழசெல்லாம் மறந்துடுடி” என்று மீண்டும் கண்கள் சுருக்கிக் கெஞ்சியவனைக் கண்டு அவனை கட்டித் தழுவச் சொல்லிய கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிப் போட்டு அவனை முறைப்பாகவே ஏறிட்டாள் ராஹி.
யாரை இனி பார்க்கக் கூட முடியாது என்று நேற்று வரை அரை உயிராய்க் கிடந்தாளோ இன்று அவனது ஊனும் உயிரும் தனக்கே தனக்கு என்று அவனின் வாய்மொழியாகவே அறிந்து கொண்டவளுக்கு அவனின் தியா என்ற அழைப்பில் வழிந்த நேசத்திலும் என்றுமில்லா கர்வமும் நிமிர்வும் தலை தூக்க, சற்று முன்னர் தன்னை இழுத்து அணைத்தவனின் அணைப்பின் இறுக்கம் கொடுத்த திடத்திலும், உள்ளே ஊற்று போல் கிளம்பிய பரவசத்தை தலையில் தட்டி அமிழ்த்தியவள் இழுத்துப் பிடித்த கோபக் குரலில்,
“ம்ம்ம் சரி மத்ததெல்லாம் கூட விடுங்க. ஆனா அன்னிக்கு அன்னிக்கு கோவிலுக்கு போய்ட்டு வந்த நைட் நானா நானா வந்து உங்கள கிஸ் பண்ணியும், என்ன விட்டுப் போகவேணாம்னு கெஞ்சியும் ஒரு போன் கால்க்காக என்ன அப்டி ஒரு நிலைல விட்டுட்டுப் போனீங்களே அன்னிக்கு நான் எவ்ளோ அழுதேன்னு உங்களுக்குத் தெரியுமா? அதுக்கு மறுநாள் மறுநாள் அந்த பியூலா போன் பண்ணி என்ன என்னவெல்லாம் பேசுனா, என்ன உங்கள விட்டு உடனே போகச் சொல்லித் துரத்துனா அப்போ எனக்கு எப்டி இருந்திருக்கும்னு நினைச்சு பாத்திங்களா? எல்லாம் உங்களால தான” என்று இத்துணை நாளைய ஏக்கத்தோடு அழுகையும் ஆற்றாமையுமாய் கேட்டவளின் அன்றைய வேதனையை இன்று தனதாய் உணர்ந்து மீண்டும் அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன்…
“ப்ளீஸ் பேபி அழாதடி. அன்னிக்கு உன்ன விட்டுப் போனதுக்கு நீ இவ்ளோ பீல் பண்ணுவன்னு எனக்குத் தெரியாம போச்சுடி. அன்னிக்கு நான் அவ்ளோ அவசரமாப் போனதுக்குக் கூட உன் மேல இருக்க லவ் தாண்டி காரணம். அந்த பியூலா உன்ன போகச்சொன்னா நீ ஏன் ஹனி என்ன விட்டு வந்த?. அது உன் வீடுடி. நான் உனக்கு மட்டுமே சொந்தமானவன்டி” என்று மேலும் ஏதேதோ கூற வந்தவனை வலுக்கட்டாயமாக தன்னிடம் இருந்து பிரித்துத் தள்ளியவள்…
“போதும் நீங்க எனக்கு எந்த விளக்கமும் கொடுக்க வேணாம். இன்னிக்கி உன்வீடுன்னு சொல்ற இதே வாய்தான் நம்ம மேரேஜ் அன்னிக்கு என்கிட்ட டிவோர்ஸ் கேட்டிச்சு. நீங்க அன்னிக்கு விரும்பிக் கேட்டதுதான் இப்போ உங்களுக்கு கிடைச்சாச்சில்ல. இனியாவது உங்க ஆசைநாயகி பியூலாவோட போய் கொஞ்சிக் குலாவி சந்தோசமா இருங்க. செய்றதெல்லாம் செஞ்சி லவ்வ ஓட ஓட விரட்டிட்டு இப்போ வந்து லவ்வாம்ல லவ்வு. ப்ளீஸ் இங்கயிருந்து போயிடுங்க.” என்று கையெடுத்து கும்மிட்டவளின் சினத்தில் சிவந்த முகம், முழுக்க முழுக்க சிறு வயதிலிருந்து தங்கள் திருமணம் வரை இருந்த ராஹியைத்தான் ஆணவனின் மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்தி அவனை கட்டம் கட்டிச் சாய்த்தது.
வெகுநாளைக்குப் பிறகான பெண்ணவளின் அதீதக் கோபமும் நிமிர்வும் ஆணுக்கு சிறிதும் சினத்தைக் கொடுக்காததோடு இத்துணை மாதங்கள் அவள் தன்னருகில் தன் சுயத்தைத் தொலைத்து இருந்தார் போன்று, விவாகரத்தைச் சொல்லி தான் அவளை அடக்கி வைத்திருந்தார் போல சிறிதான குற்ற உணர்ச்சியையே கொடுக்க, அவளின் தற்பொழுதைய வசவு வார்த்தைகளை ஏதோ சங்கீதம் கேட்பது போல் ரசனையாகக் கேட்டிருந்தான் அவள் கணவன்.
தப்பு செய்து விட்டு தாயிடம் அடிவாங்கிய மழலை மீண்டும் அந்தத் தாயிடமே முறுக்கிக் கொள்வதைப் போன்ற செல்லக் கோபத்தில் கணவனின் கெஞ்சலுக்கு செவி சாய்க்காது அவனைப் போகச் சொல்லிச் சொன்னவள், அதற்கு எதிர்பதமாக எங்கே அவன் சென்று விடுவானோ என்ற தவிப்பையும் விழிகளில் தேக்கியபடி அவனையே பார்த்திருந்தவளை நேசக் கயிரால் மட்டுமே தன் வசப்படுத்த முடிவு செய்தவனும் அவளை காதல் வழியப் பார்த்தவன்…
“ஹனீ…. நீ எனக்குள்ள வர்றதுக்கு முன்னவே உன்ன விட்டு விலகி இருக்க முடியாம ட்ராமாங்கற பேர்ல உன்ன இங்கயே வச்சிருந்தவன்டி நான்.” என்று கைவளைவைத் தொட்டுக் காட்டியவன், “ஆனா இப்போ உன்னோட சுகம் துக்கம் காதல் ஏக்கம் ஆசை வலி எல்லாமே நான்தான்னு உன் கண்ணுல பாத்தப்புறம் எப்டி ஹனி உன்ன விட்டுப் போவேன்?” என்றும் கேட்டவாறே அடி மேல் அடி வைத்து மீண்டும் அவளை நெருங்கி நின்றவன், “எனக்கு ஆசைநாயகி எல்லாம் வேணான் டி. என் பொண்டாட்டி நீ மட்டும் போதும்டி. உன்னோட மட்டுமே காலம் முழுசும் கொஞ்சிக் குலாவி, சண்டை போட்டு சமாதானம் ஆகி, கடைசி காலத்தில உன் மடியிலே செத்துப் போகணும்டி. உன் கோபம் குறையற தினம் எவ்ளோ நாளா இருந்தாலும் நான் காத்திட்டிருக்கேன் ஹனி” என்று அவள் காதோரம் மீசை முடிகள் உரச கிசுகிசுத்தவன் சட்டென்று அவளை விட்டு விலகி ராஹியின் மஞ்சத்தில் சென்று சாவகாசமாக படுத்துக் கொண்டான் ஆதி.
அவன் மீசை ரோமங்கள் தந்த குறுகுறுப்பில் மூடத் தொடங்கிய விழிகளை சிரமப்பட்டு தடுத்து நிறுத்தியவள், “என் கோபம் குறையணும்னு காத்திருக்கப் போறீங்களா? குட் ஜோக். நீங்க நல்லா ஏமாற போறீங்க ஆதிசார். என்ன சமாதானம் பண்ணி அழைச்சிட்டு போற எண்ணமிருந்தா தயவு செஞ்சு அத குப்பையில போட்டுட்டு உங்க ஊரப் பாத்து போங்க. எவ்ளோ நாள் ஆனாலும் நான் உங்க கூட வரப்போறதில்ல” என்று எண்ணெயிலிட்ட கடுகாய் படபடவென்று பொரிந்து தள்ளியவளை இன்னும் இன்னும் மென்று உண்பது போல் பார்த்து வைத்தவன்…
“இப்போ முடிவா என்ன சொல்ல வர்ற ஹனி. எவ்ளோ நாள் ஆனாலும் நீ என்னோட வரமாட்ட அப்டித்தான?” என்று கேட்க…
அவளும், “ஆமாம்” என்று இன்னும் அழுத்தமாகவே உச்சரித்தாள்.
அதைக் கேட்டும் சிறிதும் அலட்டிக் கொள்ளாது சிரித்தவன், “சரி பரவாயில்லடி பொண்டாட்டி. நீ என்னோட வரலைன்னா என்ன நான் உன்னோட இங்கயே இருந்துட்டுப் போறேன். வீட்டோட மாப்பிள்ளையா” என்று சிறு தோள் குலுக்களோடு கூறியவனை உச்சக்கட்ட அதிர்ச்சியோடு பார்த்தவாறே, “என்னது வீட்டோட மாப்பிள்ளையா! அங்க அத்தை மாமா, உங்களோட பிஸ்னஸ் எல்லாம் இருக்கப்போ நீங்க எப்டி இங்க இருக்க முடியும். நீங்க கூட இல்லன்னா அத்தை ரொம்ப பீல் பண்ணுவாங்க. மொதோ இங்க இருந்து கிளம்புங்க” என்று அவளையும் அறியாது அவனருகில் அமர்ந்து கொண்டே அவனைத் துரத்த முயன்றாள் ராஹி.