தன் மேல் இத்துணை கோபம் இருந்தும் தன் மீதான, தன் பெற்றோரின் மீதான மனைவியின் அக்கறையில் அப்படியே அவளை குண்டு கட்டாக கடத்திக் கொண்டு போனால் என்ன என்ற யோசனையை ‘அப்றம் காலம் முழுசும் அவ உன்ன மன்னிக்க மாட்டாடா’ என்ற மனசாட்சியின் மிரட்டலில் கை விட்டவன், “உனக்குத்தான் என்ன கொஞ்சமும் பிடிக்காதுல்ல. என் மேல உனக்கென்ன அக்கறை ஹனி? என் பிஸ்னஸ், பேமிலி எப்டி போனா உனக்கென்ன? என்ன லவ் பண்றியா பேபி?” என்று புருவத்தை ஏற்றி இறக்கினான் ஆதி.
அவனின் இறுதி வார்த்தையில் தான் தன் பேச்சின் போக்கை உணர்ந்து, “இல்லயே இல்லையே நீங்க சொல்ற மாதிரிலாம் எதுவும் இல்ல. நான் அத்தைக்காகத்தான் சொன்னேன். நீங்க என்னமோ பண்ணுங்க எனக்கென்ன? ஆனா நீங்க நினைக்கிறது எதுவும் நடக்கப்போறதில்ல” என்று சொன்னவளை நெருங்கி அவள் மடியில் தலையை வைக்க முயன்றவனோ,
“ஹனீ… ரொம்ப ஹெட் ஏக்கா இருக்கு ப்ளீஸ் அஞ்சு நிமிஷம் மசாஜ் பண்ணி விடுடி” என்று கெஞ்சியவனை, “அதுக்கு வேற ஆளப் பாருங்க” என்று சொல்லி தள்ளி விட்டு எழுந்தவள் இனியும் இங்கு இருந்தால் சரிவராது என்றும் எண்ணியவளாய் வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினாள் ராஹி.
அதில் அவளை அடக்கப்பட்ட புன்னகையோடு பாரத்தவன் மீண்டும் “தியாமா…” என்றழைத்து, “கிட்டத்தட்ட எயிட் ஹவர்ஸ் எங்கையும் நிறுத்தாம வண்டிய ஓட்டிட்டு வந்துருக்கேன். பல்லுல பச்சத்தண்ணி கூட படலடி. மசாஜ் இல்லாட்டியும் பரவாயில்லை ஒரே ஒரு காபியாவது கொண்டுவாடி. தலைவலி பிக்கிது” என்றும் கூறி விட்டு தலையணையில் சரிந்து படுத்துக் கொண்டவனின் பேச்சில் ஒரு கணம் ஆணி அடித்தது போல் நின்று விட்டுத் தொடர்ந்தவளின் கால்கள் அன்னிச்சையாக சமையல் அறை நோக்கிப் பாய, அடுத்த ஐந்து நிமிடங்களில் சுவையான காபியை எடுத்துக் கொண்டு கணவனிடம் விரைந்தவள் கண்டது என்னவோ சுகமான ஆழ்ந்த நித்திரையில்
இருந்த கணவனைத் தான்.
கடந்த பல நாட்களாவே மனைவியின் பிரிவு தந்த வேதனையால் இரவில் கூட உறக்கம் தொலைத்து இருந்தவனுக்கு இன்று மனைவியின் அறையில், அவளது படுக்கையில், அவளின் பிரத்தியேக வாசத்தில் கிறங்கி கூடு சேர்ந்த பறவையாய் விழிகளும் சேர்ந்து சுழற்றிக் கொள்ள, யாரும் அடித்தால் கூட உணராத அளவு ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தான் ஆதி.
எட்டு மணி நேரப் பயணத்தால் ஏகத்துக்கும் களைந்திருந்த கம்பி போன்ற கருத்த சிகை காற்றில் அசைந்தாட, வேர்த்து விறுவிறுத்திருந்த உடைகள் உடலோடு ஒட்டி அவனின் திண்மையான உடற்கட்டை பட்டவர்த்தனமாக்க, இன்று பிறந்த பாலகன் போல் நிர்மலமான முகத்துடன் உறங்கிக் கிடந்தவனின் அருகில் வந்து அவனையே பார்த்தவள், ‘படுத்த நிமிஷம் தூங்கிட்டாங்க. இவ்ளோ நாளா நம்மளப் போலவே அவங்களும் தூக்கம் இல்லாமத் தவிச்சிருப்பாங்களோ?’ என்று எண்ணி மகிழ்வும், வேதனையும் ஒருங்கே பெற்றுக் கொண்டாள் பெண்.
இது போலான சந்தர்ப்பங்களில் முன்பு செய்தார் போல் இன்றும் ஆடவனின் உடைகளை மெல்லத் தளர்த்தி, காந்த விழிகளை மறைத்த கற்றை முடியையும் அவன் உறக்கம் கலையாது விலக்கி விட்டவளுக்கு, “இவன் என்னவன்” என்ற கர்வப் புன்னகையும் மெல்லிதாக விரிய அவனருகிலே அமர்ந்து வெகு நேரம் தன்னை மறந்து ஆடவனைப் பார்த்து ரசித்தவள், அவனின் பரந்த நுதல் நோக்கிச் சென்ற இதழ்களை சிரமப்பட்டு அடக்கிக் கீழே வந்து சேர்ந்தவளுக்கு சொல்லொணாத நிம்மதியும் மகிழ்ச்சியும் பரவசமும் போட்டி போட்டுக் கிளம்பியது.
‘கணவன் தன்னைத் தான் நேசிக்கிறான், தனக்காகத் தான் வந்திருக்கிறான், அதிலும் தான் மனம் மாறும் வரை பொறுமையாக இருப்பேன் என்று சொன்னானே. அப்படியே மனம் மாறவில்லையானாலும் வீட்டோடு மாப்பிள்ளையாய் இருக்கப் போகிறானாம்’ என்று அவன் சற்று முன்னர் அவளுக்காக பேசியவை எல்லாம் அசைப்போட்டு தனக்குள்ளே புன்னகைத்துக் கொண்டிருந்தவளுக்கு அவனது களைத்த தோற்றமும் ஞாபகம் வர, “சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சுன்னு தெரியலயே. அவரு கைல இருக்க எலிக்குட்டிகூட இளைச்சிப் போன மாறி இருக்கு” என்று உடற்பயிற்சியின் உபயம் கொடுத்த திணவெடுத்த புஜங்களை நினைத்துக் கூறியவள் அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவனுக்குப் பிடித்த உணவு வகைகளை எல்லாம் செய்து மேஜையில் அடுக்க, விசேஷம் முடிந்து யுவா மலரோடு அனைவரும் வீட்டிற்கு வரவும் சரியாக இருந்தது.
வந்தவர்கள் எல்லாம் ஆதி உறங்குவதை அறிந்து அவன் எழுவதற்காகக் காத்திருக்க அவனும் சற்று நேரத்திலே உறக்கம் களைந்து எழுந்து வர அடுத்து வந்த மணித்துளிகளில் ராஹியே பொறாமைப்படும் அளவுக்கு வீட்டினர் அனைவரும் வந்து ஆதியைச் சூழ்ந்து கொண்டனர்.
யுவா வீட்டினர் மட்டுமல்லாது மகப்பேறு மருத்துவராய் மருத்துவமனையின் அருகிலேயே வீடு கட்டி வசிக்கும் யுவாவின் தங்கை ஜானுவும், நண்பன் கதிரும் கூட ஆதியை வந்து பார்த்துவிட்டு தங்கள் வீட்டிற்கும் ராஹியோடு வருமாறு அழைத்து விட்டுச் செல்ல, ஆதியின் வருகையை அறிந்த ராஹியின் தமக்கை சுஜாவும் பக்கத்துத் தெருவில் இருந்த கணவன் வீட்டிலிருந்து இரண்டு வயது மகனைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தவள், “அம்மா அப்பாவோட இருக்க வந்தேன்னு சொல்லி வந்துட்டு உங்க பொண்டாட்டி தான் இத்தனை நாளா அழுது வடிஞ்சிக்கிட்டு இருந்தான்னா நீங்க அதைவிட மோசமா இளச்சு கருத்துப் போயிட்டிங்களே மச்சான். என் தங்கச்சி மேல அவ்ளோ பாசமா” என்று ஆதியை கிண்டல் செய்வதாய் தங்கையின் குட்டை உடைக்க,
அதைக் கேட்டு மனைவியை விழிகள் ஒளிரப் பார்த்தான் ஆதி.
தமக்கையின் கூற்றில் தூக்கி வாரிப் போட்டு நிமிர்ந்த ராஹியும் கணவனின் ஆளை உண்ணும் பார்வை தாளாது தலையைக் குனிந்து கொண்டவள், “சுஜாக்கா வா என்னோட” என்று பல்லைக் கடித்து அவளையும் கையோடு அழைத்துக் கொண்டே சமையலறைக்குள் சென்று மறைய…
கணவன் வந்ததிலிருந்தே பூரித்த முகத்துடன் வளைய வரும் தமக்கையையும், தன் பார்வை கூடத் தாளாது ஓடோடிச் செல்லும் மனைவியையே ரசித்துப் பார்த்திருந்த மாமனையும், ஆச்சரியமாகப் பார்த்தபடி
வளைய வந்தான். இரட்டைகளின் தம்பி பிரித்திவ்ராஜ்.
அவர்கள் திருமண வைபவத்தின் போது கூட ஆத்விக் அளவிற்கு ஆதியிடம் பேசிப் பழக்கமில்லாததால் வெறும் பார்வையோடு உலா வந்தவனை அழைத்த ஆதியோ, “ஹாய் பிரித்வி. உன் அக்கா அப்டித்தான உன்ன கூப்பிடுவா?” என்று கேட்டு, “என்ன படிக்கிற நீ எந்த குரூப் எடுத்துருக்க?. இப்போ எக்ஸாம் லீவா?” என்றெல்லாம் இயல்பாகப் பேச…
அவனும், “ப்ளஸ் ஒன் படிக்கிறேன் மாமா. பஸ்ட் குரூப் எடுத்துருக்கேன்” என்று ஆரம்பித்தவன், “உங்ககிட்ட ஒன்னு சொல்லலாமா?” என்றும் தயங்கியவாறு கேட்டான்.
அதில் அவனை கேள்வியாகப் பார்த்த ஆதியும், “சொல்லு ப்ரித்வி என்ன விஷயம்?” என்று உந்த…
அதற்கு பிரித்திவும், “ராஹிக்கான்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். அவ சென்னை வர்றப்போவும் உங்க மேரேஜ்லயும் கூட நான் ரொம்ப அழுதேன். அவ பிப்ட்ன்டீன் டேஸ் முன்ன இங்க வந்தப்போ அக்கா கூட இருக்கப் போறோம்னு அவ்ளோ ஹாப்பியா இருந்தேன். ஆனா அவ இங்க வந்ததுல இருந்து இன்னிக்குத்தான் இவ்ளோ ஹாப்பியா இருக்கா மாமா. அவ தப்பே பண்ணாலும் கூட இனிமேல் அக்காவ மட்டும் தனியா அனுப்பாதீங்க மாமா. அக்காவ உங்க பக்கத்துலயே வச்சுக்கோங்க. அக்கா எங்க கூட இல்லாட்டியும் எப்பவும் சிரிச்சுட்டே இருக்கணும்” என்றும் மூச்சு விடாது பேசிய இளையவனின் பேச்சில் தமக்கையின் மேல் அவனுக்கு இருக்கும் அன்பில் அதிர்ச்சியும் மகிழ்ச்சியுமாய் அவனையே பார்த்திருந்தான் ஆதி.
மிஞ்சி மிஞ்சிப் போனால் 18 வயது தான் இருக்கும் அவனுக்கு. ஆனால் தமக்கையின் முகத்தை பார்த்தே அவள் உன்னோடுதான் மகிழ்ச்சியாய் இருக்கிறாள் என்று புரிந்து கொண்டு பேசியிருக்க, இத்துணை மாதங்கள் அவள் அருகில் இருந்தும் மனைவியின் மனதை, குணத்தைத் தான் புரியாது போனோமே என்று மேலும் மேலும் குற்ற உணர்வு கொண்ட ஆதிக்கோ மனைவியோடு சேர்த்து அவளுக்காகப் பேசிய மச்சினன் மீதும் நேசமும் பாசமும் பொங்கி வழிந்தது.
இன்னும் தன் முகத்தையே பார்த்திருந்த மச்சினனிடம், “நீ சொன்னாலும் சொல்லலைனாலும் உன் அக்கா இனிமேல் எப்பவும் என் பக்கத்துலயே ஹாப்பியா இருப்பா பிரித்வி. நீ சின்னப்பையன். இது போலல்லாம் இனிமேல் பேசக்கூடாது. உன் கவனம் ஸ்டடீஸ்ல மட்டும் தான் இருக்கணும். சரியா” என்று அவன் தலையைத் தடவி விட்டுக் கூறிய மாமனை இளையவனுக்கும் அத்துணை பிடித்துப் போக அடுத்து வந்த நாட்கள் யுவாவின் ஒட்டு மொத்தக் குடும்பத்துக்குமே பண்டிகை நாளைப் போல் குதூகலமாகவே கழிந்தது.
ராஹியுடன் உண்டான மனக்கசப்பால் சிறுவயதில் இருந்தே அவர்கள் வீட்டிற்குக் கூட வருவதையே தவிர்த்து வந்தவனுக்கு எங்கு காணினும் பச்சைப் பசுமை கொண்ட பூஞ்சோலை கிராமத்தின் எழிலும் சூழலும், அங்குள்ள மக்களின் அன்பும் அரவணைப்பும் இன்று அத்துணை பிடித்து விட்டது என்று சொன்னால் அது சிறிதும் மிகையில்லை.
“மாப்பிள்ளை” என்ற சொல்லுக்கு மறு பேச்சுப் பேசாத யுவாவையும், மருமகன் என்ற மரியாதை காட்டி தள்ளி நின்றாலும் தன் அன்னைக்கு ஈடான அன்பை விழிகளில் காட்டும் மலரையும் மாமா மாமா என்று காலையே சுற்றி வரும் மச்சினனையும் எய்யா ராசா என்று தன்னைக் கைகளாலே உணரத் துடிக்கும் யுவாவின் அப்பத்தாவோடு மற்றவர்களையும் என்று தன்னவளை இன்று அளவின்றிப் பிடிப்பதால் அவள் உறவுகளையும் அத்துணை பிடித்ததோ??? அல்லது அவர்களின் அன்பு அத்தகையதோ அவனே அறியான். ஆனால் ராஹியை இங்கிருந்து அழைத்துச் சென்றாலும் இந்த வீட்டுடன் தன் தொடர்பு என்றென்றும் நீடிக்க வேண்டும் என்று மனதில் உறுதியாக எண்ணிக் கொண்டான் ஆதி.
இப்படியே முழுதாக மூன்று நாட்கள் கழிந்திருக்க, முப்பது வருடங்கள் பழகியவன் போல் அவ்வீட்டில் வலம் வரத் தொடங்கிய ஆதி, பெண்களுடனும் சிறுவர்களுடனும் சேர்ந்து வீட்டில் செய்யும் அலப்பறைகள் போதாதென்று யுவாவுடன் சேர்ந்து அவனது உணவுத் தொழிற்சாலைகளுக்கும் கூட சென்று வரத் தொடங்கியிருந்தான்.
மனைவியோடு செல்ல வேண்டும் என்பதே அவன் செல்வதற்கு முக்கிய காரணம் என்றாலும் சென்றவன் பேருக்குச் செல்லாமல் அங்குள்ள அனைத்தும் சுற்றிப் பார்த்து ஆராய்ந்து தொழிலை மேம்படுத்த மாமனாருக்கு சில பல ஆலோசனைகளும் சொல்லியவன் அதற்கு வேண்டிய உதவிகளும் செய்வதாக வாக்குக் கொடுக்க மருமகனின் புத்திசாலித் தனத்தை பெருந்தன்மையை புகழ்ந்து தள்ளி விட்டான் யுவா.
கணவன் தன் வீட்டினரோடு காட்டும் நெருக்கத்தில் உள்ளூற அகம் மகிழ்ந்து போனாலும் தனிமையில் கணவனிடம், “எதுக்கு இதெல்லாம் செய்றீங்க? என்ன இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்றீங்களா ஆதிசார்?” என்று நக்கலாக வினவியவளின் இதழ்களையே பார்த்திருந்தவன், “நான் உனக்கு ஆதிசார்ரா இருந்தப்போவே அத பண்ணிட்டனே ஹனி. நம்ம பஸ்ட் லிப்லாக்க நீ மறந்துருக்க மாட்டன்னு நினைக்கிறேன்” என்று வழக்கமாய் செய்வது போல் அவன் இதழ்களை நாவால் வருடிக் கொண்டான் ஆதி.
ஆடவனின் பார்வையிலும் பேச்சிலும் அன்றைய நிகழ்வுகள் நெஞ்சிலாடி இதழ்களின் சிவப்பிற்குப் போட்டியாக கன்னங்களும் நிறம் மாறத் தொடங்க, தரையில் கட்டை விரல் ஊன்றி நாணத்தை மறைக்க முயன்றவளோ, “இப்டிலாம் பேசுனா நான் எல்லாத்தையும் மறந்துட்டு உங்கள ஓடி வந்து கட்டிப்பேன்னு நினைக்கிறீங்களா? என் பேமிலிய காக்கா புடிக்கிற வேலைய இன்னியோட நிறுத்திக்கிங்க. சீக்கிரம் உங்க ஊரப் பாத்துக் கிளம்புங்க” என்றும் வரவழைக்கப்பட்ட கடுமையில் கண்டமேனிக்குத் திட்டியவளை அவள் காதல் சொல்லியதைப் போல் உச்சாதி பாதம் கிறக்கமாய்ப் பார்த்து வைத்தவன்…
“நீ கட்டிக்கலன்னா என்ன ஹனி? என் மஞ்சக்காட்டு மைனாவ நான் கட்டிக்கிறேன்டி” என்று சொல்லி
அவள் சிறிதும் எதிர்பாராது இறுக்கி அணைத்து இதழ்களைக் கொய்து ஆழ்ந்த முத்தமிட்டு விலகியவன், “உனக்கு ஓகேன்னா நாளைக்கே நம்ம ஊருக்கு கிளம்பளாம்டி சீக்கிரம் அத்தான்ட வந்துடு ஹனி. ஐம் நாட் கண்ட்ரோல் மைசெல்ப்டி” என்றும் கூறிவிட்டுச் சென்று விட, சாவி கொடுத்த பொம்மை போல் அவன் பின்னேயே நடந்து சென்றாள் ராஹித்தியா.
இப்படியே இன்னும் மூன்று தினங்கள் கழிய இத்தோடு முப்பது முறை மனைவியிடம் மன்னிப்பு வேண்டி விட்டான் ஆதி.
ஆனால் அதற்கெல்லாம் சிறிதும் இளகாமலே இழுத்துப் பிடித்த கோபத்தோடு வளைய வந்தவளோ அவன் முத்தமிட்ட நாளுக்குப் பின் அவனைத் தன் அறைக்குள் கூட படுக்கக் கூடாது என்று சொல்லியிருக்க, அவனோ எதற்கும் தயார் என்கிற ரீதியில் பால்கணியில் பாயை விரித்துக் படுத்துக் கொண்டவனைப் பார்த்து ஏகத்துக்கும் தவித்துப் போனது என்னவோ அவனது மஞ்சகாட்டு மைனாதான்.
கணவன் மனைவிக்குள் கூடல் எத்துணை அழகோ, ஊடலும் கூட அதீத அழகுதானோ…
அஸ்வினின் தவப்புதல்வன் மதி பாலும் தேனுமாய் ஊட்டி வளர்த்த சீமந்தப் புத்திரன் எத்துணையோ தொழில் விஷயங்களை தன் விரல் நுனியில் வைத்திருப்பவன் தொழில் எதிரிகளை கண் பார்வையிலே தெறிக்க விடுபவன் தனக்கே தனக்காக தன் வீட்டுப் பால்கணியில் தரையில் படுத்து தன் கடைவிழிப் பார்வைக்கு ஏங்கி நிற்பதில் அந்த காதல் கொண்ட காரிகைக்கோ சினத்தை இழுத்துப் பிடிப்பது பிரம்ம பிரயத்தனமாகத்தான் இருந்தது.
இன்றும் அதுபோலத்தான் மாமியார் செய்து போட்ட நாட்டுக் கோழியை ஒரு பிடி பிடித்து வந்த ஆதி…
“ஆருயிரே
மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே..
ஆருயிரே என்னை
மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே..
ஓ…
நீ இல்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஆகாதோ”
என்ற பாடல்வரிகளையும் கைபேசியில் ஒலிக்க விட்டபடி பால்கணியில் ஒரு பாயை விரித்து படுத்திருக்க, அவன் பாயில் படுத்திருப்பதனாலோ என்னவோ உள்ளே படுக்கையில் துஞ்ச மனமில்லாது அமர்ந்திருந்தவளுக்கு வெளியே வீசிய ஊதக்காற்றின் உபயத்தில் உள்ளமும் படபடவென்று அடித்துக் கொண்டது.
அந்த இரவின் இருளை இன்னும் வலுவாக்கியபடி வளர்பிறை நிலவின் ஒளியைக் கூட அடர்ந்த கருமேகங்கள் சூழ்ந்து மழைப் பொழிவுக்கு ஆயத்தமாக இருக்க, ஜன்னலின் வழியே உள்நுழைந்த ஈரக்காற்றின் மண்வாசமும் பால்கணியின் ஜன்னல்க் கதவுகள் படபடவென்று அடித்துக் கொண்டதையும் வைத்தே வெளியே உள்ள நிலையை உணர்ந்து கொண்டவளுக்கு, “அய்யோ மழை வர்ற மாறி இருக்கே. இவருக்கு வேற இந்த ஊதக் காத்து ஒப்புக்காதுன்னு அத்த சொல்லிருக்காங்களே” என்று புலம்பிக் கொண்டே, அவள் கோவத்தையும் மீறி கணவனிடம் சென்றவள், “ஆதிசார் ஆதிசார்…” என்று அவன் கால்மாட்டில் நின்று அழைக்க….
அவனுக்கோ அது செவியில் விழுந்தாலும், ‘ஏண்டி எல்லார் முன்னாடியும் ஆதிமாமான்னு கூப்புடறது தனியா இருக்கப்போ மட்டும் ஆதிசாரா?. இப்போ இவ செய்றதுக்குப் பேர் நடிப்பில்லாம வேற என்னவாம். இதக் கேக்க போனா இன்னும் கொஞ்சம் முறுக்கிப்பா.’ என்று தூங்குவது போலவே பாசாங்கு செய்தான் ஆதி.
அதில் அவஸ்தையாய் கையை பிசைந்தவள் “அதுக்குள்ளவா தூங்கிட்டாங்க. நான் ரூம்ல படுக்கக் கூடாதுன்னு சொன்னா அப்டித்தான்டி படுப்பேன்னு சொல்லாம இங்க வந்து கூதக் காத்துல படுத்துருக்காரே முசுட்டு மேங்கோ. மழைக் காத்து ஒத்துக்காம காய்ச்சல் வந்தா என்ன செய்றது?” என்று இன்னும் கொஞ்சம் அவனை நெருங்கிச் சென்றவள், “என்னங்க… ஆதிசார். ஆதிமா. ஆதிமாமா” என்று ஒவ்வொன்றாய் மாறி மாறி அழைத்தும் கூட அவன் இன்னும் மூச்சுக் காட்டாது படுத்திருக்க….
அவளோ, ‘என்ன இப்டித் தூங்குறாரு’ என்று அவன் முகத்தை நோக்கி குனிந்த சமயம் சரியாக படபடவென்று வானத்தில் இடியும் இடிக்க, “ஆதித்தான்” என்று பயந்து அலறி அவன் மேலேயே நிலை தடுமாறி விழுந்து விட்டாள் அவன் மனையாள்.
தரையில் நீட்டி நிமிர்ந்து படுத்திருந்தவனின் மேல் அவளும் எசகு பிசகாக விழுந்திருக்க, திடீரென்று கிட்டிய பூப்போன்ற பெண்மையின் மென்மையில் இங்கு ஆதிக்கோ பித்தம் தலைக்கேறத் தொடங்கியது.
வானத்தில் அடுத்தடுத்த இடிகளும் தொடர்ந்து கொண்டே இருக்க, அதில் மேலும் மேலும் பயந்த ராஹி, “அய்யோ இடி இடி பயமாயிருக்கு ஆதித்தான் பயமாயிருக்கு ஆதித்தான்” என்று அவனில் நின்றும் எழும்பும் எண்ணமே இல்லாது இன்னும் இன்னும் அவனை இறுக்கி இறுக்கி அணைத்துக் கொண்டவளை…
அவனும், “ஹேய் ஒன்னும் இல்ல தியா. ஜஸ்ட் இடிதானே. இதுக்குப் போயா பயப்புடுவாங்க?” என்று அவள் இடையை வளைத்து முதுகைத் தட்டித் தைரியம் சொன்னவனின் கரம் அவனைக் கேளாமலே பெண்ணின் வளைவு நெளிவுகளில் வளைந்தோட ஆரம்பித்தது.