நேற்றைய இரவு வானத்தை அலங்கரிக்கத் தொடங்கிய கருமேகங்கள் விடிய விடிய அடைமழையாய் கொட்டி பூமிக்காதலியை முத்தமிட்டு முடித்தும் இன்னும் தீராக் காதல் கொண்டு துளி துளியாய் இறங்கி மண்ணோடு இதழ் ஒற்றல்கள் செய்து கொண்டிருக்க, அவைகளோடு போட்டி போடும் வண்ணம் விடியுமட்டும் காதல் கடலில் முக்குளித்து முடித்தவர்களும் ஒரே போர்வைக்குள் ஒன்றுக்குள் ஒன்றாய் இளைப்பாறிக் கிடந்தனர்.
கணவன் இரவு முழுதும் பயிற்றுவித்த பள்ளிப் பாடம் தாளாது அவன் வெற்று மார்பின் மத்தியிலே கண்கள் கிறங்கி சோர்ந்து கிடந்த பெண்ணவளின் சிகையை வருடிக் கொடுத்தபடி அவளையே பார்த்திருந்த ஆதி, அவள் நெற்றி முடியையும் மென்மையாக விலக்கி நுதலின் மத்தியில் மெல்ல இதழ்கள் ஒற்றி எடுக்க, அதில் மெல்ல தலையை மட்டும் தூக்கி அவன் முகத்தை ஏறிட்டு, சிறு புன்னகையை உதிர்த்து மீண்டும் மார்பில் புகுந்தவள் அங்கே மென் முத்தம் ஒன்றையும் பதித்தாள் ராஹி.
அதில், “ஹனீ…” என்று தன் மேல் கிடந்தவளிடம் அணைப்பின் இறுக்கத்தைக் கூட்டியவன், “தியாமா… சாரிடா” என்று குரல் நெகிழச் சொல்லி லேசாக கன்றிச் சிவந்திருந்த பெண்ணின் இதழ்களையும் மென்மையாக வருட…
அவளோ, “பரவாயில்லத்தான். உங்க லிப்ஸ் என்னதுக்கு மேல கண்டிப்போய் இருக்கு” என்று லேசான வெட்கக் குரலில் சொன்னாள். அவன் எதற்கு மன்னிப்பு வேண்டுகிறான் என்று அறிந்து கொண்டே.
மனைவியின் பதிலில் அவள் வேண்டுமென்று பேச்சை மாற்றுக்கிறாள் என்று நன்கு உணர்ந்து கொண்டவன், “தியா தியா தியா… நான் அவ்ளோ பண்ணியும் என்ன மன்னிச்சு ஏத்துகிட்ட உன்னோட இந்த நல்ல குணம் ஏண்டி எனக்கு முன்னமே புரியாம போச்சு” என்று அவள் நாடியைப் பற்றி நிமிர்த்தி நெற்றி கன்னம் செவிமடல் என்று முத்தாடி முடித்தவன், “நான் முன்ன பேசுனது நடந்துகிட்டது டிவோர்ஸ் கேட்டது அதுக்குப் பின்னயும் உன் லவ்வ புரிஞ்சிக்காம உன்ன விட்டு விலகி நின்னதுன்னு எல்லாத்துக்கும் சேர்த்து என்ன மன்னிச்சுடு கண்மணி” என்று தவறு செய்தவனாய் குரல் இறங்கிச் சொல்ல…
அதற்கு, “அச்சோ ஆதித்தான் போதுமே…” என்று செல்லமாக சலித்தவளும், “ஒரு தடவ செஞ்ச தப்புக்கு எத்தனை தரம் சாரி கேப்பிங்க ஆதித்தான்? பழசை எல்லாம் மறந்துறலாம்னு நீங்க தான சொன்னீங்க. ஆனா இப்போ நீங்களே விடிய விடிய அதப் பத்தியே பேசிட்டிருக்கீங்க ஆதித்தான்” என்று அவன் மார்பில் மீண்டும் ஒரு முத்தம் வைத்தாள்.
அதில் மென்மேலும் நெஞ்சுறுகிப் போனவன், “என்ன இருந்தாலும் நம்ம கல்யாண விஷயத்துல நான் உன்கிட்ட நடந்துகிட்டது ரொம்ப ரொம்ப தப்புத்தானே தியா. அன்னிக்கு நைட் நீ எவ்ளோ கெஞ்சுன ஆனா நான்தான் எதுவும் நம்பாம டிவோர்ஸ் வேணும்னு கேட்டு அன்னிக்கு நீ எவ்ளோ பீல் பண்ணிருப்ப ஹனி. அதுக்கப்புறமும் நடிப்புன்னு சொல்லி உன்கிட்ட…” என்று சற்றே நிறுத்தி விட்டுத் தொடர்ந்தவன், “ஆனா உன்கிட்ட நான் குளோசா நடந்துகிட்டது நடிப்பில்ல ஹனி. அது என்ன நானே ஏமாத்திக்க வச்சுகிட்ட பெயர். உன்னோட அருகாமைக்கு ஏங்குன மனச அடக்க முடியாமத்தான் நான் அப்டில்லாம் பண்ணேன் ஹனி. நீ அப்போவே என்ன சலனப்படுத்த ஆரம்பிச்சுட்ட” என்று இன்னும் ஏதேதோ மனம் திறந்து பேசியவனை விழிகள் விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள்…
“நீங்க மட்டும் இல்ல ஆதித்தான் உங்களோட அந்த அருகாமை ஆரம்பத்துல கொஞ்சம் ஒரு மாறி இருந்தாலும் நாள் ஆக ஆக என்னாலயும் அத நடிப்பா எடுக்கவே முடியல. என்னையும் அறியாமையே நான் உங்கட்ட உருக ஆரம்பிச்சிட்டேன். டிவோர்ஸ் கேட்டது உங்க தப்பா இருந்தாலும் உடனே தர்றேன்னு சொன்னது. அதுக்கப்புறமும் அதையே நினைச்சு, பியூலாவோட சூழ்ச்சி புரியாம உங்கள தப்பா நினைச்சது, பிரிய நினச்சு விட்டு வந்ததுன்னு நானும் நிறைய தப்பு பண்ணிருக்கேன் ஆதித்தான். நீங்களும் என்ன மன்னிச்சுடுங்க” என்று கடந்த நாட்களை எண்ணி ராஹியும் குரல் உடையப் பேச…
“அவள் கணவனோ இல்லை ஹனி தப்பெல்லாம் என்மேலதான். நான் என்னோட லவ்வ முன்னவே உனக்கு உணர்த்த தவறிட்டேன் ஹனி. என்னால தான் எல்லா கஷ்டமும்” என்று இன்னும் இன்னும் அவளை இறுக அணைத்து தன் நேசத்தை உணர்த்திக் கொண்டிருந்தான் ஆதி.
கணவனின் அந்த அணைப்பில் கரைந்து உருகிய பெண்ணும் மேலும் மேலும் அவன் மார்பின் மத்தியில் முத்தாடி முடித்தவள், “சின்னப்புள்ளயிலிருந்து நம்ம சண்டையே போடாம இருந்திருந்தா நம்ம மேரேஜ் லைப்பும் ரொம்ப ஹாப்பியா ஸ்டார்ட் ஆகிருக்கும்ல ஆதித்தான்?” என்று சற்றே வருத்தமாகக் கேட்க…
அதில் அவளை செல்லமாய் முறைத்தவனும், “அதுக்கு நீ அன்னிக்கு என் மேல ஐஸ்க்ரீம் கொட்டாம இருந்துருக்கணும் ஹனி” என்று அலட்டிக் கொள்ளாது சொன்னான்.
கணவனின் அந்த பதிலில் அவளும் பதிலுக்கு முறைத்தவள், “நீங்களும் கூடத்தான் சின்ன பொண்ணு தானேன்னு அவகூட சரி மல்லுக்கு நிக்காம இருந்திருக்கலாம் அன்னிக்கு” என்று சண்டைக்கு தயாராக…
அதில் அவளை ரசனையாகப் பார்த்தவனும், “நான் அன்னிக்கு அப்டி நடந்ததுக்கும் நீதான் காரணம் ஹனி. எல்லாரும் தலைல தூக்கி வச்சு கொண்டாடுற ஒருத்தன நீ கண்டுக்காம இருந்தா அவனும் என்ன பண்ணுவான். அதான் உன்ன திருப்பிப் பாக்க வைக்க அப்டி ஆட்டிடூட் காட்டுனானோ என்னவோ. சின்னப் பையன் வேறல்ல” என்று சிறு வயது ஆதிக்கு வக்காலத்து வாங்கி தோள் குலுக்கிச் சிரித்தான் ஆதி.
வழக்கம் போல் அந்தச் சிரிப்பில் விரிந்த கன்னக்குழியின் கவர்ச்சியில் மயங்கிய பெண்ணவள் அவன் மேல் படர்ந்திருந்த தன் கூந்தலை ஒதுக்கும் சாக்கில் பட்டும் படாமல் அதை தீண்டியவாறே, “இது என்ன புது உருட்டா இருக்கு ஆதித்தான்?” என்று புருவம் உயர்த்திக் கேட்க…
“இல்லை ஹனி எனக்கு என்னமோ அப்டித்தான் தோணுது. சாஹி மாறி நீயும் என்கிட்ட சகஜமா பேசிருந்தா உன் மேல எந்த பீலிங்கும் வந்திருக்காதோ என்னவோ. ஆனா நீளாம் ஒரு ஆளாங்கற மாறி நீ என்னக் கண்டுக்காம இருந்தது தான் உன்கிட்ட வித்தியாசமா பிகேவ் பண்ண வச்சுருக்கும்னு நினைக்கிறேன். நீ முன்னவே என்கிட்ட ஒரு ஸ்லிப் ஆர்கினேட் பண்ணிருக்கணும்” என்றவனை அவளோ ஆச்சர்யமாகப் பார்த்திருக்க…
அவனோ, “இட்ஸ் ட்ரூ ஹனி” என்று ஒரு நெற்றி முத்தம் வைத்துத் தொடர்ந்தவன்…
“நம்ம ரெண்டு பேருக்குமே ரெண்டு பேர் மேலையும் ஒரு ஈர்ப்பு இருந்திருக்கணும். ஆனா நம்மள சந்திக்க வச்ச சூழ்நிலைகள் சரியில்லாததால நம்ம சொல்லாடல்கள்ள கோவத்தை மட்டுமே காட்டிருக்கோம். அதனால நம்ம த்ரீ இயர்ஸ் ஜாலி லைப்ப மிஸ் பண்ணிட்டோம்” என்றும் பெரிய ஆராய்ச்சியில் இறங்கி, சோகமாய் முடித்தவனை குழப்பமாகப் பார்த்தவளும்…
“மத்ததெல்லாம் கூட ஓகே ஆதித்தான் ஆனா நமக்கு மேரேஜ் ஆகி செவன் மந்த் தானே ஆகுது அப்புறம் எப்படி த்ரீ இயர்ஸ் சொல்றீங்க?” என்று அதி முக்கிய சந்தேகத்தை கேட்டாள் ராஹி.
இத்துணை நேரமும் அவன் மார்பில் கை ஊன்றி அவன் முகத்தைப் பார்த்தபடியே பெண்ணவள் பேசிக் கொண்டிருக்க, அவனோ விடியல் வரை அவளை ஆதியும் அந்தமும் அறிந்து முடித்தப் பின்னும் இப்பொழுது தான் அவளைப் புதிதாகப் பார்ப்பது போல் விழிகளால் சிறை பிடித்தவாறே அவளோடு அளவளாவியவன்…
“நமக்கு மேரேஜ் ஆகி சிக்ஸ் மந்த்ஸ் தான் ஆகுது பேபி. ஆனா த்ரீ இயர்ஸ் முன்னவே மாம்மும் டாட்டும் உங்க வீட்ல சம்பந்தம் வச்சா நல்லாயிருக்கும்னு பேசுனது ஒருவாட்டி நான் கேட்டிருக்கேன். ஏனோ தெரியல அப்போ உன்னோட சண்டை போட்டது தான் கண் முன்ன வந்து, மேரேஜ்ஜே வேணாம்னு சொல்லிட்டேன். இப்போ சொல்லு ஹனி என்னால த்ரீ இயர்ஸ் வேஸ்ட் ஆகிடுச்சில்ல?” என்று மீண்டும் பாவமாய் முகத்தை வைத்துக் கேட்டவன்…
“அதனால இப்போப் பாரு அதுக்கும் சேர்த்து நான் எக்ஸ்ட்ரா டூட்டி பாக்க வேண்டியிருக்கு” என்றும் அடக்கப்பட்ட புன்னகையோடு சொல்லி முடித்தவன் கண்ணைச் சிமிட்டி இதழ்களையும் நாவால் வருடி எதற்க்கோ ஆயத்தமாகினான் ஆதி.
அவன் நாவை வருடியதிலே அது எதற்கு என்று புரிந்து கொண்டவள், “நைட்டு முழுசும் ஆறு மாசக்கணக்குன்னு சொல்லி சொல்லியே ஒரு பொட்டுக் கூடத் தூங்க விடல என்ன. இப்போ மூனு வருசக் கணக்கா என்னால முடியாது ராமா” என்று வேகமாக அவனில் நின்றும் எழும்பப் போனவள் அப்பொழுது தான், தான் இருக்கும் நிலை கண்டு வெட்கி, “அய்யோ…” என்று மீண்டும் அவன் மார்புக்குள்ளே புகுந்து கொண்டு,
“ஆதித்தான் என்னோட ட்ரஸ்…” என்று இழுக்க…
தலைக்கடியில் கை வைத்துப் படுத்தவாறே அவளது செயல்களை ரசித்திருந்தவன் ஒரு அட்டகாசச் சிரிப்பையும் உதிர்த்து விட்டு, “இப்போ அது எதுக்கு ஹனி?” என்று கேட்டான்.
அதற்கு அவளும், “அய்யோ விளையாடாதீங்க ஆதித்தான் நான் குளிக்கப் போணும். ப்ளீஸ் எடுத்துக் கொடுங்க” என்று சொல்லி சற்றுத் தள்ளிக் கிடந்த மேலாடைகளைப் பார்க்க…
அதற்கு, “ம்ம்ம் ஓகே எடுத்துத் தர்றேன். ஆனா நீ ஒரு டர்ட்டி கிஸ் மட்டும் கொடுத்துடு” என்று கண்சிமிட்டிச் சொன்னான் ஆதி.
அதைக் கேட்டு முகத்தைச் சுளித்தவள், “ம்ஹூம் பிரஸ் பண்ணாம எப்டிங்க? நான் மாட்டேன்ப்பா…” என்று தலையை ஆட்ட…
அதைப் பார்த்து கிறக்கம் கூடிப் போனவனோ, “பிரஸ் பண்ணாம கொடுக்கறதாலதாண்டி அது டர்ட்டி கிஸ். பஸ்ட் நைட் முடிஞ்ச காலைல இதக் குடுக்கலைன்னா அது பஸ்ட் நைட்லயே சேராதுடி. லேட் ஆக்கமா வாடி என் க்யூட் டெவில்” என்று அவள் கரத்தினைச் சுண்டி இழுக்க அதில் நிலை தடுமாறி விழுந்தவளின் இதழ்கள் அவளைக் கேளாமலே ஆணவனின் இதழ்களோடு இனிமையாகப் பொருந்திக் கொள்ள, ஆணவனின் இடக்கரமும் அவளை இடையோடு வளைத்துக் கொண்டது.
ஆரம்பத்தில் அழுக்கு முத்தம் வேண்டாம் என்று மறுத்தவள், கணவனின் இதழ்களும் விரல்களும் செய்த ஜாலத்தில் அவன் அவளை மொத்தமாக அழுக்கு செய்து கொள்ளையிட்டு முடித்தப் பின்னும் கூட விழிகள் திறவாது கிடக்க…
அவள் இமைகளின் மேல் நிறைவு முத்தம் ஒன்றைப் பதித்தவனும், “ஹனி பினிஷ்டி ஓபன் யூர் ஐஸ்” என்று சொன்னதும் தான் தன்னிலை மீண்டவள், “ச்சீ போங்க ஆதித்தான் நீங்க ரொம்ப மோசம்” என்று அவன் மார்பில் வலிக்காது குற்றி விட்டு மீண்டும் எழும்பப் போனாள் ராஹி.
ஒரு இதழ் விரிந்த புன்னகையோடே அப்பொழுதும் அவளை விடாது இழுத்து மார்பில் போட்டுக் கொண்டவன், “ரொம்ப டையர்டா இருக்கடி. கொஞ்ச நேரம் தூங்கு ஹனி” என்று அவளோடு இணைந்து அவனும் உறங்கிப் போனவன் மீண்டும் விழிக்கும் பொழுது மணி காலை பத்தைத் தொட்டிருந்தது.
அறையில் இருந்த கடிகாரம் பத்து முறை ஒலித்து அடங்கியப் பின்னே தான் சட்டென்று விழித்துக் கொண்ட ஆதி, மனைவியைப் பார்க்க அவளோ இன்னும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.
பெண்ணின் கலைத்த தோற்றத்திலே, ‘ஆதி நீ ரொம்ப படுத்துறடா ஹனிய. முன்ன கோபத்தில. இப்போ…’ என்று தனக்குத் தானே கடிந்து கொண்டும் சிரித்துக் கொண்டும் மெல்ல எழுந்து குளித்துத் தயாராகி அறைக்கு வெளியில் பிளாஸ்கில் வைக்கப்பட்டிருந்த தேநீரை எடுத்து வந்து மனைவியை எழுப்பினான் ஆதி.
“தியாமா எழுந்துருடா” என்ற கணவனின் குரலைக் கேட்டு, “போதும் ஆதித்தான் இனி என்னால முடியாது” என்று அவன் மடியிலே திரும்பிப் படுத்துத் தூக்கத்தைத் தொடர்ந்தவளின் காது மடலை வலிக்காது கடித்தவன், “டேய் எப்போப்பாரு அதே நினைப்புல இருக்கியா? நான் இப்போ அதுக்கு எழுப்பல ஹனி. மணி பத்துக்கு மேல ஆச்சு ஆன்டியும் அங்கிளும் நமக்காக டிபன் பண்ணாம வெயிட் பண்ணிட்டிருப்பாங்கடா அதனால சீக்கிரம் எந்துருச்சு ரெடியாகு பேபி. மதியம் தூங்கிக்கலாம்” என்று சொன்னவனின் வார்த்தையில் வாரிச்சுருட்டி எழுந்தமர்ந்தாள் ராஹித்தியா.
ஆதி இங்கு வந்த தினம் தொட்டே எத்துணை நேரம் ஆனாலும் எவ்வேளை உணவையும் மருமகனை விட்டு சாப்பிடாது அவர்களுக்காகக் காத்திருந்து அவர்களோடே உணவருந்தும் பெற்றோரை அறிந்திருந்த ராஹியும், “அய்யோ இவ்ளோ நேரம் தூங்கிட்டனா?” என்று குளித்துத் தயாராகி இருந்த கணவனையும் பார்த்து விட்டு வேகமாக படுக்கையை விட்டு இறங்கப் போக…
“ஹேய் வெயிட் வெயிட்… ரிலாக்ஸ் தியா” என்று அவளை நிறுத்தி கையிலிருந்த தேநீரையும் அவளை அருந்தச் செய்தவன், “சீக்கிரம் வா ஹனி. ஆன்டி வேற பசி தாங்க மாட்டாங்க” என்றும் சொல்லி அவளை குளிக்க அனுப்பி வைத்தான் ஆதி.
முன்பு எப்படி இருந்தாலும் இக்கணம் கணவனின் தன் மீதான அன்பில், அவன் தன் பெற்றோர் மீது காட்டும் அக்கறையில் உருகிக் கரைந்தபடியே குளித்து முடித்து வந்தவளோடு ஆதியும் கீழே இறங்கிச் செல்ல, அவர்கள் எண்ணியது போலவே யுவாவும் மலரும் மகள் மருமகனுக்காகத் தான் உண்ணாமல் காத்திருந்தார்கள்.
“குட் மார்னிங் ஆன்டி. மார்னிங் மாமா” என்று கீழே இறங்கிச் சென்றவன், “நான்தான் எனக்காக சாப்புடாம வெயிட் பண்ண வேணாம்னு சொல்லிருக்கேன்ல அங்கிள். அப்றம் ஏன் இப்டி பண்றீங்க?” என்று உரிமையாகக் கடிந்தபடியே யுவாவோடு இணைந்து உணவு மேஜையில் அமர்ந்தான்.
“மார்னிங் மாப்பிள்ளை” என்று அவனுக்கு பதில் வணக்கம் சொன்ன யுவாவும் மகளையும் கண்ணால் வருடி விட்டு, “இது கிராமத்துப் பழக்கம் மாப்பிள்ளை. வீட்டுக்கு வந்தவங்க வீட்ல இருக்கவங்கன்னு எல்லாரும் சாப்பிட்ட பின்ன தான் எங்களால நிறைவா சாப்பிட முடியும். அப்டியே பழகிடுச்சு. மாத்திக்க முடியல மாப்பிள்ளை” என்று சொன்னவன் “விழிமா சாப்பாட எடுத்து வைமா” என்றும் மனைவியைப் பார்த்துச் சொல்ல…
அதற்காகவே காத்திருந்த மலர்விழியும் காலை உணவைப் பரிமாறத் தொடங்கினாள்.
சுடச்சுடப் பரிமாறப் பட்ட உணவு வகைகளின் ருசியில், “ஆன்டி நீங்க செய்ற டிஷ் மாம் செய்றத விடவும் டேஸ்டா டிப்ரண்டா இருக்கு.” என்று ரசித்து ருசித்துச் சாப்பிட்டவன் மறக்காமல் மனைவியையும் அருகில் அமர்த்திக் கொண்டு மலரிடமும், “செல்ப் சர்வ் பண்ணிக்கலாம் நீங்களும் உக்காருங்க ஆன்டி” என்று வற்புறுத்தி மாமியாரையும் மாமனாரின் அருகில் அமர வைத்திருந்தான்.
வீட்டில் உள்ள மற்றயவர்கள் முதலிலே சாப்பிட்டு அவரவர் வேலைக்குக் கிளம்பி இருக்க, ராஹியின் தம்பி பிரித்திவ்ராஜும் விடுமுறை முடிந்து பள்ளிக்குச் சென்று இருந்தான்.
மூத்த ஜோடியும் இளைய ஜோடியும் பேசிச் சிரித்தபடியே காலை உணவை உண்டு கொண்டிருக்க மகளையே பார்த்திருந்த மலரோ,
“ஏண்டா ராஹிம்மா நைட் எல்லாம் தூங்கலியா? கண்ணெல்லாம் சிவந்து கிடக்கு” என்று அவள் களைத்த முகம் கண்டு கவலையாகக் கேட்க…
அதில் உண்டு கொண்டிருந்த உணவு புரை ஏறியது என்னவோ ஆதிக்குத்தான்.
இத்துணை நேரம் இயல்பாய் உரையாடலைத் தொடர்ந்தவனுக்கு மாமியாரின் கேள்வியில் இரவின் ஞாபகங்கள் எழுந்து புதுவிதமான வெட்கம் ஒன்று சூழ்ந்து தலையைக் குனிந்து கொண்டவன் ஓரக்கண்ணால் மனைவியையும் பார்த்து வைத்தான்.
அவளும் நாணத்தில் சிவந்த முகத்தை மறைக்க முடியாது அன்னையை ஏறிட்டவள், “அது வந்துமா… வந்துமா… நைட்டு இடி மின்னல் மழையா இருந்ததா அதான் தூக்கம் இல்லைம்மா” என்று ஏதோதோ சொல்லி சமாளித்தவள் கணவனையும் திரும்பிப் பார்த்து விட்டு…
‘இவங்க என்ன என்னவிட வெக்கப்படுறாங்க நைட்டெல்லாம் தூங்க விடாமப் பண்ணிட்டு இப்போ ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி வெக்கப்பட்டு இவங்களே எல்லாத்தையும் கடை பரப்புறாங்களே’ என்று ஏகத்துக்கும் கணவனை முறைத்து வைத்தாள் ராஹி.
பெரியவர்களின் பார்வையிலும், மனைவியின் முறைத்த விழிகள் சொன்ன செய்தியிலும் 17 வயதுப் பையன் போல் ஆதி இன்னும் இன்னும் அழகாய் வெட்டகப்பட்டுச் சிரிக்க, அதில் தோன்றிய கன்னங்குழியின் குழைவில் கரைந்து காணாமல் போகத் தொடங்கினாள் அவன் மனையாள்.
பார்வையாலே அவர்களின் தனிப்பட்ட உலகில் சஞ்சரிக்கத் தொடங்கிய இளையவர்களின் வெட்கப் பரிமாற்றங்களிலே ஏதோ புரிபட்டதாய் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழ்ச்சியாக புன்னகைத்துக் கொண்ட மூத்தவர்களுக்கும் மனம் முழுதும் பரவசம் பொங்கிப் பெறுகியது.
உணவை விட்டு தன்னை உணவாய் உண்ணத் தொடங்கிய கணவனின் பார்வையில் அதற்கு மேல் உண்ண முடியாது எழுந்து கொண்ட ராஹியும் தன்னைத் தொடர்ந்து எழுந்த கணவனையும் அழைத்துச் சென்று அப்பத்தா பாட்டியிடம் ஆசி பெற்றுக் கொள்ள அதைப் பார்த்திருந்த மலரோ கணவன் கையைப் பற்றியவள், “மாப்பிள்ளை வந்து இத்தனை நாள் ஆகியும் ராஹி இன்னும் முகத்தை தூக்கி வச்சிருக்காளேன்னு ரொம்ப கவலையா இருந்தது. ஆனா இன்னிக்கு எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு யுவித்தான்” என்று கண்ணில் நீர் துளிர்க்கச் சொல்ல…
தன் கரம் பற்றிய மனைவியின் தாயின் தவிப்பை வாஞ்சையாகப் பார்த்த யுவாவும், “உனக்கு அப்பப்போ கண்ணில் தண்ணி வச்சிக்க ஏதோ ஒரு காரணம் கிடைச்சிருதேடி மொசக்குட்டி. மொதோ கண்ணைத் தொடை. இது சந்தோசப்பட வேண்டிய நேரம்டி” என்று கிண்டல் போலவே அவளைத் தேற்றினான்.
அதில், “போங்க யுவித்தான் உங்களுக்கு எப்பவுமே கிண்டல் தான்” என்று உதட்டைச் சுளித்தவளை…
“நடு ஹால்ல வச்சு இப்டி உதட்டை செய்யாதன்னு சொல்லிருக்கேன்ல மொசக்குட்டி” என்று மையல் பார்வை பார்த்தான் அவள் கணவன்.
கணவனின் பார்வையில் சட்டென்று சிவந்தவள், “அய்யோ கல்யாணம் ஆன ரெண்டு பொண்ணுங்களுக்கு அப்பாவா இருந்துட்டு என்ன பார்வை யுவித்தான் இது?” என்று சிறு பெண்ணாய் மீண்டும் உதட்டைச் சுளித்த மலரின் பார்வை கணவனுக்கு சற்றும் குறையாத மையலோடு அவன் கம்பீர முகத்திலே நிலைத்திருக்க…
அதைப் பார்த்து அடக்க மாட்டாது சிரித்து விட்டவனோ, “நீங்களும் கல்யாணமான பொண்ணுங்களுக்கு அம்மாதான் மறந்துட்டிங்களோ?” என்று கேலி பேசியவன், தன் கூற்றில் வெட்கியவளிடம், “டேய் மொசக்குட்டி புருஷன் பொண்டாட்டிய ரசிக்கவும் பொண்டாட்டி புருஷன கொஞ்சவும் காலமும் தேவையில்ல, வயசும் தேவையில்லடி. காதல்… காதல்… காதல் இருந்தா மட்டும் போதுமடி” என்று தத்துவமும் பேசினான்.
கணவனின் பேச்சில், “ம்க்கும் அது அளவில்லாம இருக்கது தான எனக்கு இம்சையே” என்று பொய்யாக சலித்தவள், “விளையாட்டு போதும் யுவித்தான். பிள்ளைகள கூட்டிட்டு குலதெய்வக் கோவிலுக்கு போய்ட்டு வந்துரணும். மாப்பிள்ளைட்ட பேசுங்க” என்றும் சொல்ல…
அதற்கு யுவாவும், “மாப்பிள்ளை அங்கல்லாம் வருவாரா தெரியலயே” என்று பதில் சொல்லிக்கிட்டு கொண்டிருக்கும் பொழுதே…
“எங்க போணும் அங்கிள்?” என்று மனைவியின் கரத்தைப் பற்றியபடியே வந்து நின்றான் ஆதி.
ஆதியிடம் திரும்பிய யுவாவும் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று தயக்கமாகவே சொல்ல…
அவர்களின் தயக்கத்திற்கெல்லாம் அவசியமே இல்லை என்பது போல் “அதுக்கென்ன அங்கிள் இன்னிக்கே போலாமே” என்று உடனே சம்மதித்த ஆதியும் ராஹியின் மொத்தக் குடும்பத்தோடும் இணைந்து குலதெய்வக் கோவிலுக்குச் சென்றவன் மனைவியின் கரத்தைப் பற்றியபடியும் அவளைப் பார்வையாலே வருடியபடியும் கடவுளை வணங்கி முடித்து இன்னும் இன்னும் மனைவியை காதல் கடலில் திக்கு முக்காட வைத்தவன் அவள் பெற்றோரின் மனதிலும் மகிழ்ச்சியும் பரவசமும் பொங்கி வழியச் செய்திருந்தான்.