ஆறு மாத தொழில் பயிற்சியும் ஒரு மாதம் தேனிலவும் இனிமையாக முடித்து இன்று தான் சென்னை வந்திறங்கிய ஆத்விக் சாஹி தம்பதியை வரவேற்க ஆதி ராஹி மட்டுமல்லாது இருவரின் பெற்றோரும் விமானம் நிலையம் வந்திருக்க, ஆதியின் பஹாணியைத் தொடர்ந்து அஸ்வினின் ரோல்ஸ் ராய்ஸ் உம் யுவாவின் ரேங்குலரும் கூட சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் வாசலில் வந்து கிரீச்சிட்டு நின்றன.
சிறு குலுங்களோடு நிறுத்தப்பட்ட வண்டிகளில் இருந்து பார்ப்போரின் விழிகள் விரியும் வண்ணம் வெளியேறிய மூன்று ஜோடியும் தங்களின் வேகநடையில் விமான நிலையத்தின் உள்ளே விரைய, அப்பொழுது தான் தங்களுக்கான நடைமுறை வழக்கங்கள் முடிந்து வெளியேறிய ஆத்விக்கும் சாஹியும் வீட்டினர்களைப் பார்த்து விட்டு, “அம்மா… யுவிப்பா ராஹி… மாம் டாட் அண்ணா” என்று மகிழ்ச்சியும் ஆவலுயுமாய் ஓடோடி வந்தனர்.
சிறுபிள்ளைகள் போல் ஓடி வந்தவர்களை, “சாஹி, சாஹிமா, எப்டி இருக்கடா?” என்று பெண்களும் “ஹாய் ஆது… சின்ன மாப்பிள்ளை, பயணம் பரவாயில்லையா?” என்று ஆண்களும் அவர்களுக்குக் குறையாத மகிழ்ச்சியோடு வரவேற்று அணைத்துக் கொள்ள, அந்தக் காட்சியே பார்க்க அத்துணை ரம்யமாக இருந்தது.
கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் கழித்து சொந்த நாட்டுக்குத் திரும்பி இருந்தவர்கள் குடும்பத்தினரின் அன்பில் உருகியபடியே மேலும் அவர்களின் விசாரிப்பிற்கு பதில் கொடுத்த வண்ணம் இருக்க, சற்று நேரத்தில் அவர்களின் உடமைகளும் கைக்கு வந்து சேர்ந்தது.
அவற்றை ஆளுக்கொன்றாய் தூக்கிக் கொண்ட பெரியவர்கள், “எல்லாரும் வாங்கப்பா. வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்” என்று விட்டு முன்னே நடக்க… அவர்களைத் தொடர்ந்து நடந்த தம்பியின் தோளில் கை போட்டுக் கொண்ட ஆதியும், “அப்றம் ஆது அங்க ஸ்டடிஸ்லாம் எப்டி போச்சு? சாஹி ஈஸியா பிக்கப் பண்ணிட்டாளா?” என்று வினவியபடியே மகிழுந்தை நோக்கி விரைய…
ஆத்விக்கும், “சூப்பரா போச்சுணா. பஸ்ட் கொஞ்சம் திணருனா அப்றம் ஈஸியா ஹாண்டில் பண்ண கத்துக்கிட்டா” என்று பதில் கொடுத்தவன் இங்கத்திய சூழ்நிலைகளையும் அண்ணனிடம் கேட்டு அறிந்து கொள்ள ஆண்களின்
உரையாடலோடு நடையும் தொடர்ந்தது.
இரட்டையைப் பார்த்ததும், “ராஹீ… எப்டி இருக்கடீ?” என்று ஓடிவந்து அணைத்துக் கொண்ட தங்கையிடம் ராஹியும், “நல்லாயிருக்கேண்டி நீ எப்ட்றி இருக்க?. லண்டன் எப்டி இருந்தது?. உன் ஸ்டடி பிராக்ட்டீஸ் எல்லாம் திருப்தியா முடிஞ்சதா?” என்று அக்கறையாக வினவினாள்.
அவளும், “சான்ஸே இல்லடி. லண்டன் செம்மையா இருந்தது. வெரி கியூட் ப்ளேஸ்டி. பிராக்ட்டிஸ் கொஞ்சம் டப் தான். ஆனா ஆது மாமா கூட இருந்ததால கஷ்டமே தெரியலடி.” என்றவள் கணவனையும் பார்வையால் தொட்டுவிட்டுத் திரும்ப…
அதைப் பார்த்து புன்னகைத்துக் கொண்ட ராஹியும், “ம்ம்ம்… ம்ம்ம் ஆது மாமா கூட இருந்ததால ஸ்டடி ஈஸியா இருந்ததா? ஓகே ஓகே. ஆனா ஸ்டடி பண்ண உங்களுக்கு டைம் இருந்ததா என்ன?” என்றும் கேட்டு தங்கையின் தோள்களில் இடித்தாள் ராஹி.
தமக்கையின் கூற்றில் மறைந்திருந்த கேள்வியில் சட்டென்று செவ்வறளியாய் சிவந்தவளும், “ச்சீ போடி அதெல்லாம் நிறையவே இருந்தது. ஆதுமாமா எனக்கும் மேல என்னோட கரீர ரொம்ப முக்கியமா நினைக்கிறாங்கடி. ஆறுமாசம் கிளாஸ்ல ஒரு நாள் கூட மிஸ் பண்ண அலோவ் பண்ணதில்லடி உங்க ஸ்ரிக்ட் ஆபிசர்” என்று குறைப்பட்டது போல் சொன்னாலும் கணவனை எண்ணிய பூரிப்பு பொங்கி வழிந்தது சாஹியின் குரலில்.
மனைவியின் ஆசைகள் லட்சியங்களை பெரிதாக மதிக்கும் கணவன்களை நம் நாட்டில் விரல் விட்டே எண்ணிவிடலாம். ஆனால் சாஹியின் வேலையில் அவளுக்கு உள்ள விருப்பமும் ஆர்வமும் உணர்ந்து அவளுக்காக தனியாக தொழில் ஸ்தாபனம் ஒன்றையே உருவாக்க முனைந்து அவளுக்கு உறுதுணையாக இருக்கும் ஆத்விக்கை ஒரு தோழியாக மனம் குளிரப் பார்த்த ராஹியும், “ஆதுமாமா எப்பவுமே சோ ஸ்வீட்டி. அவங்கள நீ எப்பயும் கஷ்டப்படுத்திடாத” என்று தமக்கையாக தங்கைக்கு சிறு புத்திமதியும் உரைத்தவளுக்கு…
அவளும்,”கண்டிப்பாடி. ஆது மாமாவோட அப்பழுகில்லாத அன்ப நான் புரிஞ்சிக்கிட்டேண்டி. இனிமேல் அவங்கள எப்பவும் கஷ்டப்படுத்த மாட்டேன் ராஹி மேரேஜ் அன்னிக்கு நீ மட்டும் மனசு வைக்கலைன்னா என் ஆத்விய நான் இழந்துருப்பேண்டி. நான் உனக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கேன் ராஹி. வெரி வெரி தாங்க்ஸ்டி” என்றும் உணர்ச்சிவசப்பட்டு தமக்கையின் கையைப் பிடித்துக் கொண்டாள் சாஹி.
தங்கையின் கூற்றிற்கு, “இன்னும் இத விடலையா நீ?” என்று கடிந்தவளும் “ஆது மாமாவ உன்னோட சேத்து வச்சது உங்களோட ஆழமான காதல்டி. உண்மையான அன்பு வச்சிருக்கவங்கள யாராலையும், எந்த சக்தியாலையும் பிரிக்க முடியாது சாஹி” என்று அனுபவப் பூர்வமாய் உணர்ந்து சொன்னவளின் பார்வை முன்னே சென்று கொண்டிருந்த தன்னவனையும் நேசத்தோடு தழுவி விட்டு மீள பேசிக் கொண்டே வந்தவர்கள் மகிழுந்தையும் நெருங்கியிருந்தனர்.
அவர்களுக்கு முன்னதாகவே ஆதியின் பஹானியை சமீபித்திருந்த ஆண்கள் இருவரும் இரு பெற்றோரையும் அவர்கள் மகிழுந்தில் அனுப்பி விட்டு மனைவியருக்காகக் காத்திருக்க, சுற்றுப்புறத்தையே மறந்தபடி சாவகாசமாய் பேசிக்கொண்டு தங்களை நெருங்கிய இரட்டையர்களைப் பார்த்த ஆத்விக்கோ, “ஏஞ்சல் இது ஏர்போர்ட் நான் தான் உன் ஹஸ்பண்ட். ஞாபகம் இருக்கா? அக்காவப் பாத்ததும் எல்லாம் மறந்தாச்சா ரெண்டு பேரும் ஒரே கொஞ்சல் தான் போல” என்று மனைவியின் முன்னே கையாட்டி கிண்டல் குரலில் கேட்டவன் இருவருக்கும் கேட்பரீஸ் சாக்கலேட்டையும் நீட்டினான் பழக்கத்தை மறக்காது.
அவன் நீட்டியதைப் பெற்றுக் கொண்ட சாஹியும், “அதெல்லாம் நாங்க மறக்கல. உங்களுக்குத் தான் நாங்க சிஸ்டர்ஸ்னும் நாங்க மீட் பண்ணி செவன் மந்த்ஸ் ஆகுதுன்னும் மறந்துடுச்சி போல” என்று பதில் கொடுத்தாள் தோள்களைக் குலுக்கி.
சிறியவர்களின் பேச்சைக் கேட்டு சிரித்துக் கொண்ட ராஹியும் ஆத்விக் கொடுத்த இனிப்பைப் பிரித்து வாயில் வைத்தபடியே, “அதானே அப்டி சொல்லு சாஹி” என்றவள், “எங்களப் பாத்து பொறாமை படுறத விட்டுட்டு பக்கத்துல இருக்க உங்க உடன்பிறப்போட நீங்களும் கொஞ்சிக் குலாவ வேண்டியது தானே ஆது மாமா” என்ற ராஹியின் பார்வை
மகிழுந்தில் சாய்ந்து நின்ற கணவனின் மேல் பாய…
அவனும் அக்கணம் அவளைத் தான் பார்த்திருந்தான் இனிப்பு உண்பவளையே கடித்து உண்பது போல்.
அவன் பார்வையில், “அய்யோ என்ன இப்டிப் பாக்குறாங்க” என்ற ராஹியின் வாய் இனிப்பை விழுங்கி விட்டு தன்னைப் போல மூடிக்கொள்ள அதைப் பார்த்து இதழ் மறைவில் சிரித்துக் கொண்ட ஆதியும், “கிளம்பலாமா காய்ஸ்?” என்று கேட்டவாறே ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவன் மனைவியை கண்ணால் அழைத்து விட்டு முன் இருக்கையின் கதவையும் திறந்து விட்டான்.
ஆனால் ராஹி கணவனின் அருகில் சென்று அமரமுடியாதபடி தமக்கையின் கையை விட்டு விடாமலே பின்னிருக்கையில் ஏற ஆயத்தமாகினாள் சாஹி.
கணவனுக்கும் தங்கைக்கும் இடையில் மாட்டிக் கொண்ட ராஹியோ தர்மசங்கடமாய் கணவனையே பார்த்தபடி பின் இருக்கையின் கதவருகில் சென்றும் ஏறாது நிற்க, அதைப் பார்த்து அவள் நிலையைப் புரிந்து கொண்ட ஆதியும், “தியா நீ சாஹியோட ஏறிக்கோ. ஆது நீ முன்னாடி வா” என்று புன்னகையோடு சொல்லி மனைவியின் முகத்தில் பரவசத்தை வரவழைத்தான்.
அவர்கள் வாழ்க்கையைத் தொடங்கி ஆறு மாத காலத்தில் மகிழுந்தில் கூட தன் அருகாமை வேண்டும் என்று அன்புக்கட்டளை போட்டிருக்கும் கணவனின் இப்பொழுதைய கூற்றை கேட்டப் பின்னும் அவனுக்கு கோபமோ என்று உள்ளே ஏறத் தயங்கிய ராஹி தவறு செய்தவளாய் அவன் முகத்தைப் பார்க்க, மனைவியின் பார்வையோடு தன் விழிகளைப் பிணைய விட்ட ஆதியும், ‘கோபமெல்லாம் இல்லடி ஏறு’ என்பது போல் விழி மூடித் திறந்தவன் அனைவரும் உள்ளே ஏறி அமர்ந்ததும் மகிழுந்தை உயிர்பிக்க அதுவும் வழக்கம் போல் ஆதியின் கைகளில் சீறிக் கொண்டு பாய்ந்தது.
தமக்கை உள்ளே ஏறி அமர்ந்தும் கூட அவள் கைகளை விட்டு விடாமலே அவள் தோள்மேல் சாய்ந்து கொண்ட சாஹியோ, “என்னப்பத்தி அவ்ளோ கேட்டடி நீ மட்டும் ஒன்னுமே சொல்லலை. ஆதி மாமா உன்ன சந்தோசமா பாத்துக்கிறாங்க தானே?” என்று கேட்டவள் சில மாதங்கள் முன்பு ராஹி சிறிதொரு நாட்கள் தங்கள் ஊரான பூஞ்சோலைக்குச் சென்றதும் ஆதி சென்று அவளை அழைத்து வந்தது என்று அனைத்தும் அறிந்தே இருந்தாள். அவர்கள் விவாகரத்து விஷயம் தவிர.
தங்கையின் குரலில் இருந்த அக்கறையைப் புரிந்தாலும், அவள் தன் கணவனை சந்தேகிப்பது போல் வினவியதில் “என்ன கேள்விடி இது?” என்று சற்றே அதட்டும் தொணியில் கேட்டவள், “ஆதித்தான மேரேஜ் பண்ணும் போது எப்படின்னு எனக்குத் தெரியலடி. ஆனா இந்த நிமிஷம் இந்த உலகத்துலயே சந்தோசமா இருக்கவங்கல்ல நானும் ஒருத்திடி. என்னோட ஆதித்தான் என்னோட இருந்தா இந்த சந்தோசம் என் வாழ்நாள் முழுசும் நிறஞ்சிருக்கும்னு நான் மனசார நம்புறேன்டி. ஆது மாமா கிடைக்க
நீ எப்டி கொடுத்து வச்சிருக்கியோ அதேபோல ஆதி மாமாக்கு மனைவியானது என்னோட பாக்கியம் சாஹி” என்று ஒரு வெட்கப் புன்னகையோடு மூச்சு விடாது பேசியவளை, முட்டைக் கண்ணை விரித்துப் பார்த்திருந்த சாஹி, “பார்ரா அவ்ளோ தூரம் போயாச்சா? ஆதிமாமா ஆதித்தான் வேற ஆயாச்சா? அப்போ சரிதான்” என்று கிண்டல் போல பேசி ராஹியின் முகத்தை உற்று உற்றுப் பார்த்த சாஹிக்கு என்றுமில்லா குதூகலம் மனதுக்குள் பொங்கிப் பெறுகியது.
திருமணம் முடிந்த தினம் தொட்டே தான் மகிழ்ச்சியாக இருப்பது போல ராஹி காட்டிக் கொண்டாலும் தமக்கை தன்னால் தான் பிடிக்காத வாழ்விற்குள் அடியெடுத்து வைத்தாளோ என்று சிறு உறுத்தல் சாஹிக்கு இருந்து கொண்டே தான் இருந்தது.
ஆனால் இக்கணம் தமக்கையின் முகத்தில் இருந்த பூரிப்பும்
புதுப் பொலிவுமே அவள் கலக்கத்திற்கான விடையைச் சொல்லியதில், “அய்யோ எங்கக்காக்கு மாமாவை சொன்னதும் எவ்ளோ கோவம் வருது” என்று இன்னும் இன்னும் ராஹியை நெருங்கி அமர்ந்தவள்,
“அடடா வெக்கம் வேற படுறாளே… இப்போப் புரியுது… ஆதி மாமா எப்டி உன்கிட்ட க்ளீன் போல்ட் ஆனாங்கன்னு” என்று ஏகத்துக்கும் காதில் கிசுகிசு பேசியவளின் வார்த்தையில்…
“ஹேய் சாஹி சும்மா இருடி” என்று மேலும் மேலும் முகம் சிவந்து விகசித்தாள் ராஹி.
ராஹியின் அந்த மகிழ்வு சாஹிக்கு மேலும் குதூகலத்தைத் தர, “டீ நான் சும்மா இருக்கது இருக்கட்டும். அங்க ஒருத்தங்க உன்னப் பாத்து சும்மா இருக்க முடியாம தவிச்சுட்டிருக்காங்க பாத்தியா நீ?” என்றும் கேட்க…
அப்பொழுது தான் சட்டென்று நிமிர்ந்த ராஹி முன்னே பார்க்க அத்துணை நேரமும் மகிழுந்தின் குழி ஆடி வழியாக அவளையே பார்த்திருந்த ஆதி அவளின் பார்வையை சந்தித்த நொடி ஒற்றைக் கண்ணைச் சிமிட்டி உதடு குவிந்த முத்தத்தையும் மனைவிக்கு அனுப்பி வைக்க, உடலோடு சேர்ந்து உள்ளமும் சிவந்தாள் பெண்.
ஆதியின் செய்கையில் சாஹியே வெட்கப்பட்டு, “நான் ஒன்னும் பாக்கலைப்பா” என்று முகம் திரும்பிக் கொள்ள, அப்படி திரும்ப முடியாதபடி கணவன் பார்வையில் கட்டுண்டு போன மனைவியை மேலும் மேலும் பார்வையாலே பருகிக் குடித்தான் ஆதி.
அதைப் பார்த்து, “ஆதி மாமா இன்னிக்கு ஒருநாள் உங்க ஒயிப்ப எனக்குக் கடனாக் குடுங்க. அவகிட்ட சொல்றதுக்கு ஏழு மாசக் கதைய பிளைட் ஏத்தி கொண்டு வந்துருக்கேன். ப்ளீஸ்” என்று ஆதியையும் சேர்த்து வாரி அவனின் வெட்கப் புன்னகையோடு ராஹியின் செல்ல அடி ஒன்றையும் வாங்கிக் கொண்டு இதழ் பிரித்துச் சிரித்தாள் சாஹி.
பொதுவாக இரு பெண்கள் இணைந்தாலே அங்கு பேச்சிற்குப் பஞ்சம் இருக்காது என்பது அநேகரின் கருத்து. அதிலும் அவர்கள் இரட்டையராக இருந்து நீண்ட நாட்கள் கழித்து வேறு சந்தித்த சூழலில் மகிழுந்தினுள் உள்ள சூழலை விளக்கவும் வேண்டுமோ.
சாஹி ஆதியிடம் கூறியது போல் இரட்டையர் இருவருக்கும் ஒருவரிடம் பகிர ஒருவருக்கு ஆயிரத்தெட்டு விஷயம் இருக்க, தற்சமயம் ஆயிரத்து ஒன்பதாவது விஷயமாகிப் போன ஆத்விக்கோ பெண்களின் நெருக்கத்தைப் பார்த்து அண்ணனிடம் உதட்டைப் பிதுக்கி ஜாடை காட்டியவன், “லண்டன் பிளைட் சென்னைல லேண்ட் ஆகுறவரைக்கும் கூட ஆது மாமா ஆது மாமான்னு ஒருத்தி என்னயே சுத்திட்டிருந்தாண்ணா. சென்னைல இறங்கி உடன்பிறப்ப பாத்ததும் மைசெல்ப் டோட்டல் டேமேஜ்” என்று வாய்விட்டே புலம்பிக் கொண்டவன்…
“இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா” என்ற சோகப் பாடலையும் பாட…
அதைக்கேட்டு, “அச்சோ பாவமே” என்று இன்னும் இன்னும் வாய்விட்டுச் சிரித்தனர் ராஹியும் சாஹியும்.
பாதையில் ஒரு கண்ணும்
குழி ஆடியில் தெரிந்த மனைவியின் பிம்பத்தில் ஒரு கண்ணுமாய் வண்டியை ஓட்டிய ஆதியும் நீண்ட நாட்கள் கழித்து கிட்டிய தம்பியின் அலப்பறையை ரசித்துச் சிரித்தவன்…
“என் இனிய பொன் நிலாவே…
பொன்நிலவில் என் கனாவே…
நினைவிலே புது சுகம்
த ர ர ரா த தா…
தொடருதே தினம் தினம்
த ர ர ரா த தா…”
என்ற பாடலை வேறு மனைவியைப் பார்த்தபடியே மகிழுந்தினுள் ஒலிக்க விட…
அதில், “அண்ணா நீயுமா????” என்று அலறிய ஆத்விக்கோ…
“வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்” என்ற பாடலைப் பாடியவன், அந்தப் பாட்டில் வரும் நாயகன் போல் இறுமி வேறு நடித்தான்.
அதைப் பார்த்து கண்ணில் நீர் வரும் வரை சிரித்த இரட்டையர்களோ, “அச்சோ பாத்து ஆது மாமா… இந்தாங்க தண்ணி குடிங்க” என்று காலி பாட்டிலை நீட்டியவர்களின் தலையில் ஆத்விக் வலிக்காது ஒரு கொட்டு வைக்க…
நால்வரின் சிரிப்பலைகளோடு அவர்கள் வீட்டை அடைந்தது ஆதியின் பஹாணி ஹுய்ரா.
வீட்டிற்கு வந்தும் கூட பிணைந்த கைகளை விலக்கிக் கொள்ளாமலே ஒட்டிக் கொண்டு இறங்கிய பெண்களையும் அவர்கள் முகத்தில் இருந்த பெரும் புன்னகையும் பார்த்து அகம் மகிழ்ந்து போனவனாய் அண்ணனிடம் திரும்பிய ஆத்விக்கோ, “ண்ணா… அன்னிக்கு நான் அவ்ளோ பெரிய தப்பு பண்ணியும், நீ மட்டும் அன்னிக்கு நடந்த மேரேஜ்ஜ ஒப்புக்கிட்டு ராஹிய ஏத்துக்கலைன்னா இன்னிக்கு இப்டி ஒரு சந்தோசம் நம்ம குடும்பத்துல இருந்திருக்காதுன்னா… நீ உண்மையிலே கிரேட்ணா” என்று குரல் நெகிழ்ந்து சொல்ல…
அவனைப் பார்த்து இருபுறமும் தலையாட்டிச் சிரித்த ஆதியும்…
“ந்நோ ந்நோ ந்நோ ஆது. இன்னிக்கு நம்ம பேமிலி, நீ, நான் எல்லாரும் இவ்ளோ ஹாப்பியா இருக்கம்ன்னா அதுக்கு முழுக்க முழுக்கக் காரணம் ராஹி மட்டும் தான். அவளைப் போல ஒரு தேவதை என் வாழ்க்கைல வரலைன்னா ஐ வுட் ஹேவ் லாஸ்ட் மை லைப். ஐம் வெரி ப்ரௌட் டு ஹேவ் ஹேர் அஸ் மை ஒயிப் ஆது” என்றும் ராஹியைப் பற்றி சிலாகித்துக் கூறியவனுக்கு…
“இட்ஸ் ட்ரூனா. ராஹி சாஹி ரெண்டு பேருமே ஸ்வீட் ஏஞ்சல்ஸ்தாண்ணா” என்று தமக்கையோடு முன்னே சென்ற மனைவியும் விட்டுக் கொடுக்காது கூறி அண்ணனோடு இணைந்து வீட்டிற்குள் நுழைந்தான் ஆத்விக்வர்மா.
இளையவர்களுக்கு முன்னவே விமான நிலையத்திலிருந்து வீட்டை அடைந்து விட்ட பெரியவர்கள் தடபுடலான விருந்துணவுக்கும் ஏற்பாடு செய்திருக்க, அன்றைய நாள் முழுவதும் இறக்கை கட்டி பறந்தது ஒட்டு மொத்த குடும்பத்தினருக்கும்.
நாவைச் சுண்டி இழுக்கும் பல வித உணவு வகைகளோடு, இடையில் சிறு ஓய்வும், போதும் போதும் மட்டும் பல்சுவை செய்திகளையும் அன்றைய நாள் முழுதும் பரிமாறிக் கொண்டவர்கள் அடுத்த வாரத்தில் வரவிருக்கும் இளையவர்களின் திருமண நாளையும் கொண்டாட திட்டமிடல் செய்தனர்.