ஆம்… ஆதி ஆத்விக் தம்பதி இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு வருடம் நெருங்கியிருக்க, இன்னும் சில தினங்களில் வரவிருக்கும் அவர்களின் திருமண நாளை விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்று இரு பெற்றோருமே ஆசை கொண்டனர்.
அதைக் கேட்டு ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்ட இளையவர்களுக்கும் அதுவே ஆசையாக இருக்க, அடுத்து வந்த நாட்களில் அதற்கான ஏற்பாடு துரித வேகத்தில் நடந்தது.
ஆதி, ஆத்விக்கின் திருமணத்தில் வரவேற்பும் வைக்கப் படாததால் திருமணநாளிற்கு நெருங்கிய சொந்தங்களுக்கும், நலம் விரும்பிகள், நண்பர்களுக்கும் கூட அழைப்புகள் விடுக்கப்பட்டு, ஆதியின் வீட்டிலேயே வேண்டிய ஏற்பாடுகள் யாவும் செய்யப்பட, அடுத்த சில தினங்களில் கோலாகலமாகத் துவங்கியது ஆதி ராஹி, மற்றும் ஆத்விக் சாஹியின் முதல் திருமண நாள் கொண்டாட்டம்.
லண்டனில் இருந்து திரும்பிய இளையவர்களை வரவேற்க வந்த யுவாவும் மலரும் இளையவர்களின் திருமண நாளை முன்னிட்டு அஸ்வின் மதியின் கூற்றுப்படி ஒரு வார காலம் அங்கேயே தங்கியிருக்க, மற்ற உறவுகளும் பூஞ்சோலையில் இருந்து முதல் நாள் வந்து சேர்ந்ததும் ஆதியின் வீடே களைகட்டத் தொடங்கியது.
திருமணத்திற்குப் போல அல்லாமல் திருமண நாளிற்கு பிரத்தியேக ஆடை வடிவமைப்பாளர்களைக் கொண்டு விழா நாயக நாயகியருக்கு உடைகள் ஏற்பாடு செய்திருக்க…
“Ermenegildo Zegna Bespoke” என்ற உயர்ரக கருமை வண்ண கோட்சூட் உடையில் ஆதியும் ஆத்விக்கும் கம்பீரமாய் தோற்றம் அளித்தனர்.
கண்ணைக் கவரும் உடையோடு சிறிதான ஒப்பனையும் இதழ் விரிந்த புன்னகையும் இயல்பான உடல்மொழியும் அழகனான ஆத்விக்கை பேரழகனாய்க் காட்ட, ஆறடி இரண்டங்குள உயரமும் எதற்கும் அலட்டாத அலசியப் பாங்கும் அத்தி பூத்தார் போல் விரியும் தடித்த அதரங்களும் அதை தன்னுள்ளே ஒளித்துக் கொண்ட கற்றை மீசையும் சிறு புன்னகை கூடத் தோற்றுவிக்கும் ஆழமான கன்னங்குழியும் ஆதியின் கம்பீரத்தை ஏகத்துக்கும் கூட்டி இருந்தது.
பெண்களுக்கு முன்னவே ஆயத்தம் ஆகி வந்து பெரியவர்களோடு இணைந்து விருந்தினர்களை வரவேற்ற சகோதரர்களைக் கண்டு விழியை விரித்தவர்கள் ‘அண்ணனை ரசிப்பதா? தம்பியை பார்ப்பதா? அண்ணன் அழகா தம்பி அழகா?’ என்றும் பட்டிமன்றம் செய்து கொண்டிருக்க…
‘அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். அனைவரும் எங்களை மட்டுமே பாருங்கள்’ என்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தப்படி ரோஜா வண்ண லெஹங்கா உடையில் தேவதைகளாய் இறங்கி வந்தனர் ராஹியும் சாஹியும்.
மணப் பெண்களுக்கென்றே தயாராகும் “Manish Malhotra’s bridel colection” லெகங்கா உடைகளை அவர்களுக்கேற்ற அளவில் வடிவமைத்து வரவழைத்திருக்க, அடர் ரோஜா வண்ணத்தில் வெள்ளை நிறக் கற்களும், முத்துக்களும் பதித்த அவ்வுடை மங்கை இருவரின் வளைந்து நெளிந்த பொன் மேனியை பாந்தமாய்த் தழுவி மோட்சம் அடைந்து கொண்டது.
இருவரும் ஒன்று சொன்னார் போல் அணிந்திருந்த அழகிய ஆடைக்குப் பொருத்தமாக முத்து மாலைகளும், வைரக்கற்கள் பதிக்கப்பட்ட, கழுத்தங்கியும், காதணிகளும் கூட
ஒரே போல் அணிவித்து, சற்றே ஒப்பனைகளும் முடிந்து விழா அரங்கை நோக்கி நடந்து வந்த இரட்டையரைக் கண்டு பெண்களின் பெற்றோரும் ஆண்களைப் பெற்றவர்களும், “டேய் செல்லங்களா… ராஹிமா சாஹிமா ரொம்ப அழகா இருக்கீங்கடா” என்று பூரித்து சொல்ல…
சிறிதான சலசலப்பு ஓசையில் மனைவியரின் புறம் திரும்பிய ஆண்களோ இமைக்க மறந்து நின்றனர்.
சாஹிதான் மனைவி என்று உணராததால் அன்று திருமண அலங்காரத்தில் கூட சரியாக அவளை பார்த்திராதவன் சாஹியின் இன்றைய எழிலில், “சாஹி பேப் கொல்றியேடி” என்று அவளையே வைத்த கண் வாங்காது பார்த்தபடி நிற்க… தரையைக் கூட்டியபடி நீண்டிருந்த கீழாடையை சற்றே தூக்கிப் பிடித்துக் கொண்டு வளைக்கரம் குலுங்க, அஞ்சன விழிகளால் கணவனையே தேடியபடி அடி மேல்
அடி வைத்து வந்த ராஹியின் கொள்ளையிடும் பேரழகில் ஆதியின் நிலையோ படு மோசமாகி இருந்தது.
மனைவி தன்னை நெருங்க நெருங்க அவளுக்கே உள்ள பிரத்தியேக வாசனையும் அவனைக் காணும் பொழுதில் மட்டுமே பளீரிட்டு ஒளிரும் மீன் விழிகளுமே அவனை ஆழியாய் சுழற்றிக் கொள்ள அதில் விரும்பியே தொலைந்து போனவனோ சுற்றுப் புறத்தையும் மறந்து போனவனாய் மனைவி தன்னை நெருங்கும் முன்னே அவன் அவளை நெருங்கி படிகளில் இறங்கிக் கொண்டிருந்தவள் இறங்குவதற்காக, “கிவ் மீ யூர் ஹாண்ட் ஹனி” என்று கையை நீட்டியவன் விழிகள் கொட்டிய நேசத்தில் கட்டுண்டு போனவளும் அவளையும் அறியாது அவன் கரத்தின் மேல் தன் கரத்தினை வைக்க… அக்காட்சியைப் பார்க்கக் கண்கோடி வேண்டும் போல் அத்துணை பரவசம் அடைந்தனர் அவர்களின் பெற்றோரும்.
நிமிடங்கள் பல கரைந்தும் விழியாலே நேசத்தை உரைத்துக் கொண்டவர்கள் கரத்தையும் பிணைத்தவாக்கிலே கால்கள் நகர மறுத்து நிற்க சூழ்நிலை கருதி அவர்களை நெருங்கிய ராஹியின் தமக்கை சுஜாவோ,
“ராஹிப்புள்ள…” என்று ராஹியின் தோளைச் சுரண்டியவள், ஆதியிடமும் “மச்சான்…” என்றழைத்து “உங்க ரெண்டு பேருக்கும் ஆட்சேபனை இல்லைன்னா மேடைக்கு வந்து அந்த வெட்டிங் கேக்க மட்டும் வெட்டிட்டு அப்றம் உங்க ரொமான்ஸ வச்சுக்கறீங்களா ப்ளீஸ்” என்று அடக்கப்பட்ட புன்னகையோடு கேட்டவள், “அந்தக் கேக்குக்காக காலையிலிருந்து வயித்த காயப் போட்டு வச்சிருக்கேன்டி ராஹி” என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு கூறி அவர்களை நடப்பிற்கு அழைத்து வந்தாள்.
சுஜாவின் கூற்றில் தான் கனவில் இருந்து விழித்தது போல் சுற்றம் உணர்ந்த ஆதி, “ஹான் இதோ வர்றோம் சுஜா” என்று சொன்னவன், மனைவியின் காதோடும் குனிந்து, “வென் யூ ஆர் நியர் எவ்ரிதிங் அரௌண்ட் மீ பிக்கம்ஸ் இன்விசிபில் எக்ஷப்ட் யூ ஹனி” என்று தலையைக் கோதியவாறே குறைபட்டுக் கொண்டவன் அவள் கையை இழுத்தபடியே படியில் இறங்க ஆரம்பித்தான்.
கணவனோடு இணைந்து இறங்கத் தொடங்கியவளுக்கு அப்பொழுது தான் தன்னுடனே வந்த தங்கையின் ஞாபகம் வந்து “சாஹீ…” என்று திரும்பிப் பார்க்க,
அவளோ தமக்கை அழைத்ததையும்
கருத்தில் கொள்ளாது கணவனையே முறைத்தபடி நின்றாள்.
அதில் ராஹி சுஜாவோடு ஆதியின் பார்வையும் ஆத்விக்கின் மேல் பாய அத்துணை நேரமும் அண்ணன் அரங்கேற்றிய காதல் காட்சியை கண்டு களித்திருந்தவன் அப்பொழுது தான் அனைவரின் பார்வையும் உணர்ந்து சாஹியின் புறம் திரும்பியவன், “பேபி ஏண்டா என்னாச்சுடா? ஏன் இப்டிப் பாக்குற?” என்று மனைவியின் அருகில் சென்றான்.
அதில் இன்னும் இன்னும் விழிகளை அக்கினிக் கிடங்காய் மாற்றியவள், “நீங்கள்ளாம் லவ் பண்ணிதான் மேரேஜ் பண்ணிக்கிட்டீங்கன்னு வெளில சொல்லிடாதீங்க” என்று படபடப்பாகச் சொல்ல அவனுக்கோ ஒன்றும் புரியவே இல்லை.
“சாஹி ஏண்டி கோபப்படுற? நான் என்ன செஞ்சேன் பேபி?” என்று கேட்டவனிடம்…
“நீங்க தான் ஒண்ணுமே பண்ணலியே” என்று பொங்கியவள், “ஆதி மாமாவப் பாத்தாச்சும் பொண்டாட்டிய எப்டி லவ் பண்ணனும்னு கத்துக்கோங்க” என்றும் கைகள் கோர்த்து நின்ற மூத்தவர்களைப் பார்த்துச் சொல்லி மூக்கை உரிந்தாள் பெண்.
அதைப் பார்த்து, “கடவுளே இது வேறயா???” என்று தலையில் கை வைத்த ஆத்விக்கோ நொடியில் சுதாரித்தவன், “அது அது அது வந்து நான் உன் அழகைப் பாத்து அப்டியே சாக்காகி நிண்டுட்டேன் பேபி. கைபிடிச்சு கூட்டிட்டுப் போகலைன்னா காதல் இல்லாமப் போகுமா? மாமா உன் அழகுல மயங்கி நின்னுட்டண்டா” என்று எதேதோ தாஜா செய்து அவளை அழைத்துக் கொண்டு விழா இடத்தை நோக்கிச் செல்ல…
அவர்களின் செல்லச் சண்டையை ரசித்துச் சிரித்தபடியே ஆதி ராஹியும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.
இரவும் அல்லாத பகலும் அல்லாத பின் மாலைப் பொழுதில் அஸ்வினின் வீட்டுத் தோட்டப்பகுதியிலே சிறு மேடை அமைத்து ஜோடிகளுக்கு இருக்கை போட்டிருக்க, வந்திருந்த அனைவருக்கும் அறுசுவை உணவிற்கும் பப்பே முறையில் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.
கைகளைப் பிணைத்த வாக்கிலே இரு ஜோடிகளும் மேடையில் வந்து நின்றதும் அவர்களுக்கு பரிசுகளோடு கூடிய வாழ்த்தும் ஆசீர்வாதமும் தெரிவித்து விட்டு பெரியவர்கள் வந்தவர்களை கவனிக்கச் சென்று விடஅடுத்து
அவர்களைச் சூழ்ந்து கொண்ட இளசுகளோடு சுஜா, நவீன், ப்ரித்திவ்ராஜ், சம்யுக்தா என்று அனைவரும் அங்கே இருந்த மிகப்பெரிய வெட்டிங் கேக்கை இரு ஜோடியையும் ஒன்றாகவே வெட்ட வைத்து ஊட்ட வைத்து என்று அடுத்த அரைமணி நேரம் அவர்களை ஒரு வழியாக்கி விட்டனர்.
மனைவி ஊட்டிய கேக்கோடு அவளின் வெண்டைப் பிஞ்சு விரல்களையும் சேர்த்தே சுவைத்து முடித்த ஆதி மனைவியின் செம்மை பூசிய வதனத்தையும் பார்வையாலே மென்று உண்டு கொண்டிருக்க, ஆணின் பார்வை வீச்சைத் தாளாது, “இந்த ஆதித்தான்கு இதே வேலையாப் போச்சு. எத்துணை பேர் இருந்தாலும் இப்டி பாக்குறது கண்ணடிக்கிறதுன்னு இவங்க அலும்பு தாங்கல” என்று தலை குனிந்து நின்றவளை இன்னும் இன்னும் நெருங்கி வந்தான் ஆதி.
இத்துணை பேர் மத்தியில் அவள் தோள் உரசி நின்றவனின் நெருக்கத்திலும் அவனுக்கே உரிய பிரத்தியேக வாசனையிலும் உள்ளம் படபடக்க நின்றவளின் தோள்களைப் பற்றி தன்புறம் திருப்பியவன் தன் கோட்பாக்கெட்டில் கையை விட்டு எதையோ எடுக்க முனைந்தான்.
கணவனின் செயலில் நாணத்தோடு பதட்டமும் கூடி, “அய்யோ ஆதித்தான் என்ன செய்றீங்க எல்லாரும் பாக்குறாங்க?” என்று அவனை அவஸ்தையாய் ஏறிட்டவளின் விழிகள் அவன் கையிலிருந்த பொருளைப் பார்த்து சாகரமாய் விரிய, அவனோ அதில் மூழ்கத் தொடங்கிய மனதை இழுத்துப் பிடித்தபடி தன் கையிலிருந்த பிளாட்டினம் செயினை பெண்ணவளின் சங்குக் கழுத்தில் பூட்டி, “என் வாழ்க்கையை அழகாக்க வந்த க்யூட் டெவிலுக்கு என்னோட சின்னப்பரிசு” என்று கண்ணைச் சிமிட்டியவன், “ஹாப்பி ஆன்னிவர்சரி கண்மணி” என்று அவள் நெற்றியில் தன் இதழ்களையும் ஒற்றி எடுக்க, கணவனின் கரையில்லாக் காதலில் கண்ணில் நீரே நிறைந்து விட்டது ராஹிக்கு.
‘கணவனின் இத்துணை அன்பைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தேன்?’ என்று இந்த ஆறு மாத காலத்தில் பல தடவை எண்ணி விட்டவளின் மனதைப் படித்தவனோ, “தவம் செஞ்சது நான்டி” என்று அவள் காதோரமும் கிசுகிசுத்து மென்மேலும் அவளை நேசத்தால் கொய்தவன், மனைவிக்கு வாங்கிய அதே செயின் போல் அவள் இரட்டைக்கும் வாங்கி இருந்ததை ஆத்விக்கிடம் கொடுத்து சாஹிக்கும் அணிவிக்கச் சொல்லி மனைவியோடு சேர்த்து வீட்டினரையும் பரவசக் கடலில் மூழ்கடித்தான் ஆதி.
காதல் பெண்ணவளின் இணைவும் அருகாமையும் ஆதியின் காதலையும் நேசத்தையும் வெளிக்கொணர்ந்ததோடு அவன் இயல்பை தாண்டிய பக்குவத்தையும் பொறுப்பையும் சேர்த்திருக்க மனைவியிடம் கரையில்லாக் காதலைக் கொட்டுபவன் சுற்றத்தாரிடம் தனது பாசத்தையும் அதிகமாகவே வெளிக்காட்டப் பழகியிருந்தான். மனைவியின் மறுபதிப்பாய்.
ஆதியைத் தொடர்ந்து ஆத்விக்கும் சாஹியின் கழுத்தில் அண்ணன் கொடுத்த செயினை அணிவித்து விட அவளோ அதற்கும் கணவனை, “கத்துக்கோங்க” என்ற முணுமுணுப்போடு முறைத்து வைத்தவள், “ரொம்ப சூப்பரா இருக்கு ஆதிமாமா. ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி “A” லெட்டர் போட்ட பென்டென்ட் அமேசிங்கா இருக்கு” என்று குதூகலித்தவள், “செம்மையா இருக்குல்லடி ராஹி” என்று தமக்கையையும் கட்டிக் கொள்ள அதைப் பார்த்திருந்த ஆண்களோடு பெற்றோர்களுக்கும் மனம் நிறைந்து ஒருவரைப் பார்த்து ஒருவர் இதழ் விரிந்த புன்னகையை பரிமாறிக் கொண்டனர்.
பிள்ளைகளின் மகிழ்ச்சியான வாழ்வை விட பெற்றவர்களுக்கு வேறு பெரிய சந்தோசம் இருக்க முடியுமா என்ன.
இளையவர்களின் நேசப் பரிமாற்றம் முடிந்து அழைப்பை ஏற்று வந்திருந்த உறவினர் நண்பர்களும் கூட மேடைக்கு வந்து இரு ஜோடிகளுக்கும் திருமண வாழ்த்து தெரிவித்து விட்டுச் செல்ல, அதைத் தொடர்ந்து நேரமும் மெல்ல நகர்ந்து அந்த இனிய நாளையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது. (கதையையும் தான்)