சென்னையின் பிரதான சாலையில் இருந்து உள்ளே ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது அஸ்வினால் உருவாக்கப்பட்டு அவன் புதல்வர்களால் முக்கியமாக ஆதித்யவர்மாவால் அசுர வளர்ச்சி அடைந்திருந்த R.A.V. வர்மா குழுமத்தின் தொழில் சாம்ராஜ்யம்.
ஊட்டியில் தான் அஸ்வின் வர்மாவின் பூர்வீகம் என்றாலும் பிள்ளைகளின் படிப்பு எதிர்காலம் போன்றவற்றிற்காக பல வருடங்களுக்கு முன்பே சென்னைக்கு குடிபெயர்ந்து விட்ட அஸ்வின் அவ்வப்பொழுது ஊட்டிக்கும் சென்று தங்கள் எஸ்டேட்டுகளை பார்வையிட்டு வருவான். சில சமயங்களில் தந்தையைத் தவிர்த்து ஆதியும் ஊட்டி சென்று வருவதுமுண்டு.
சென்னையின் முக்கியப் பகுதியில் பல்லாயிரக்கனக்கான ஏக்கர் பரப்புள்ள இடத்தை சுற்றி வளைத்து ஒரே கூரையின் கீழ் அதற்கு தகுந்த இடைவெளிகள் விட்டு அருகருகே அமைக்கப்பட்டிருந்தது அவர்களின் ஜவுளி, மற்றும் கார் உதிரி பாகங்கள் தயாரிப்புத் தொழிற்சாலைகளும் அதற்குண்டான அலுவலகங்களும். அத்தோடு பைனான்ஸ் தொழிலுக்குன்டான அலுவலகமும்.
பார்ப்பதற்கு அனைத்தும் ஒரே கூரையின் கீழ் இருப்பது போல் தோற்றம் அளித்தாலும், அஸ்வின் குடும்பத்து ஆட்களைத் தவிர வேறு எவரும் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு அத்துணை சீக்கிரம் சென்று விட முடியாது, ஒவ்வொரு பகுதிக்கும் இடையில் இரண்டாள் உயர சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருக்க அதற்கு இடையில் தாங்கள் செல்வதற்கு மட்டும் என்று பிரத்தியேக வாயில் ஒன்றை உருவாக்கி இருந்த அஸ்வின் அந்த வழியின் கதவிற்கு டிஜிட்டல் லாக் பூட்டும் பொருத்தி கூடவே வாயிலற்காவலர்களையும் நியமித்திருந்தான்.
அனைத்து தொழில்களையும் ஒரே நேரத்தில் பார்வையிடும் பொருட்டாகவும் நேர விரயத்தை தடுக்கும் பொருட்டும் இப்படி ஒரு ஏற்பாடு செய்திருந்த தந்தையின் புத்திக் கூர்மையில் அவன் புதல்வன் ஆதிக்கு மிகப் பெரும் கர்வமே உள்ளது. ஆனால் எத்துணை உயரம் சென்றாலும் அலட்டிக் கொள்ளாத தந்தையின் இலகு மனோபாவமும், தன் உறவுகளுக்கு அவன் தொழிலில் காட்டும் தயவும் தான் ஆதிக்கு அவ்வப்பொழுது எரிச்சலை ஏற்படுத்தும் ஒரே விஷயம்.
“தொழில் வேறு உறவுகள் வேறு இரண்டையும் இணைக்கக் கூடாது” என்பது அவனது கருத்தாக இருக்க… அவன் தந்தையின் கருத்தோ வேறாக இருந்தது அல்லவா.
இப்பொழுதும் அப்படித்தான் கொஞ்சமும் முன் அனுபவம் இல்லா ராஹிக்கு தந்தை கொடுத்திருக்கும் வேலையில் ஆதிக்கு சிறிதும் விருப்பமில்லாவிடினும் தந்தையின் பேச்சை தட்டாது ராஹியை தன் அலுவலகத்தில் பயிற்சிக்காக சேர்த்துக் கொண்டவன் அவளுக்கான சேர்க்கை படிவத்தையும் நேற்று தந்தையிடம் கொடுத்திருக்க…
அந்த சேர்க்கை படிவத்தோடு ஆதியின் தொழில் கோட்டைக்குள் காலடி எடுத்து வைத்தாள் பூஞ்சோலை இளவரசி ராஹித்யா.
ராஹி சாஹி இருவருமே முதல் நாள் வேலையில் சேரும் பொருட்டாக வழக்கத்தை விட முன்னதாகவே எழுந்து கிளம்பியவர்கள் போக்குவரத்துப் பற்றி சில திட்டமிடல்களும் செய்து, ஒருவருக்கு ஒருவர் ஆல் தி பெஸ்ட் உம் சொல்லிக் கொண்டு, அவரவர் பணியிடம் நோக்கி விரைந்தனர்.
“R.A.V வர்மா குரூப்ஸ் ஆர் கம்பெனிஸ் அண்ட் பேக்டரிஸ்” என்று பாரிய பலகையில் அலுமினிய எழுத்துக்களால் பொறிக்கப் பட்டு அதன் கீழே “பினான்ஷியல் ஏஜென்சி” என்றும் மின்னிக் கொண்டிருந்த அந்த நுழைவாயிலில் நுழைந்து அங்கே இருந்த அலுவலகத்திற்குள் சென்ற ராஹிக்கு அவளையும் அறியாமல் அவளின் வட்ட வடிவ நயனங்கள் விரிந்து கொள்ள, அந்த இடத்தின் அழகும் அங்கு இருந்த நேர்த்தியும் அவள் உள்ளத்தில் அவள் தந்தை யுவாவைத் தான் ஞாபகப் படுத்தியது.
விரிந்த விழிகளோடே அந்த நீள வராண்டாவில் நடை போட்டவளை நோக்கி வந்த கடை நிலை ஊழியர் ஒருவரோ, “அம்மா, நீங்கதான் ராஹித்தியாங்களா?… சார் உங்கள அவங்களோட ஆபிஸ் ரூம்ல வெயிட் பண்ண சொன்னாங்கமா, சார் க்ளாத் பேக்டரில இருக்காங்க, இப்ப வந்துருவாங்க” என்று சொல்லி ஒரு அறைக்கு அழைத்து செல்ல…
அவளும் ‘சார்னா யாரா இருக்கும் அஸ்வின் அங்கிளா, இல்ல ஆது மாமாவா, இல்ல’ என்ற சிந்தனைகளோடே அவரைப் பின்தொடர்ந்து சென்று அவர் காட்டிய அறைக்குள் நுழைந்தவளோ மேலும் மலைத்தாள்.
வாடிக்கையாக ஒரு அலுவலக அறைக்குள் இருக்கும் அனைத்தும் அவ்வறைக்குள்ளும் இருந்தாலும் அங்கிருந்த ஒவ்வொரு பொருளின் அழகும் தரமும் அதை வாங்கி அடுக்கியவனின் ரசனையையும் பணச் செளுமையையும் பட்டவர்த்தனம் செய்தாலும் அதை அனைத்தையும் விட ராஹியை மிகவும் கவர்ந்தது அந்த அறையிலும் தெரிந்த சுத்தமும் நேர்த்தியும் தான்.
தரையில் தொடங்கி கார்பெட் வரை டேபிள் சேர் சோபா என்று அனைத்தும் ஒரு பொட்டுத் தூசியில்லாமல் வைரம் போல் ஒளிர, அங்கு அழகுக்கென்று வைக்கப்பட்டிருந்த பூ ஜாடி, மீன் தொட்டி, டேபிளில் அடுக்கப்பட்டிருந்த கோப்புகள், எழுதுகோல் குடுவை, ஒரு உயர் ரக மடிக்கணினி என்று அத்தனையும் ஒரு வித அழகுணச்சியோடு அடுக்கப்பட்டிருக்க அவற்றையெல்லாம் விழிகள் மின்ன ரசித்துப் பார்த்த ராஹிக்கு “அப்பாவும் அவரோட ஆபிஸ் ரூமை இப்படித்தான அழகா, நீட்டா வச்சிருப்பாங்க” என்று மீண்டும் அவள் தந்தையே கண் முன் தோன்றினான்.
தங்கை தம்பியை விட தந்தையின் மேல் ஒரு படி பாசம் அதிகமாகவே வைத்திருக்கும் பெண்ணவளுக்கு இந்த புதிதான அலுவலகச் சூழல் அவள் தந்தையின் குண நலன்களை அவளுக்குப் பெரிதும் பிரதிபலித்ததால் அந்த இடம் அவளுக்கு மிகவும் பிடித்துப் போக, அவளோ நேற்று ஆதி பேசியதை எல்லாம் கூட மறந்து ஒரு மகிழ்ச்சியான மனநிலைக்கு வந்திருந்தவள், அந்த அறை முழுதும் அளைந்து ஒவ்வொரு பொருள்களையும் தொட்டுத் தடவி ரசித்து மகிழ்ந்தாள்.
இறுதியாக அங்கே மேஜையின் மேல் “மிஸ்டர் ஆதித்யவர்மா இன் சேர்மன்” என்ற சிறு பெயர் பலகையில் அவள் விரல்களும் விழிகளும் படிந்த நொடி, அந்த அலுவலக அறைக்கதவு வேகமாகத் திறக்கப்பட்டு, தன் காரியதரசி பின் தொடர உள் நுழைந்தான் ஆதித்யா.
மின்னல் போல் உள் நுழைந்தவனின் செயலில் ராஹி அதிர்ந்து திரும்ப அவனோ அதே வேகத்தோடு சென்று தன் சுழல் நாற்காலியில் அமர்ந்து கொண்டவன், ஒரு மரியாதைக்குக் கூட அவளை உட்காரச் சொல்லாமல், “ராஹி… கிவ் மீ யுவர் அப்பாயின்மென்ட் ஆடர்” என்று மட்டும் கேட்டான்.
ராஹியோ அவன் செயலில் சில கணங்கள் செய்வதறியாது திகைத்து நின்றவள், ஆதியின் அருகில் நின்ற அவன் பி எ சிவா அவளை, “மேடம்” என்றழைத்து, “உங்க அப்பாயின்மென்ட் ஆடர குடுங்க” என்று சொன்னப் பின்னர் தான் அவளும் வேகமாக தன் கைப்பையில் வைத்திருந்த சேர்க்கை படிவத்தை எடுத்து ஆதியிடம் நீட்டினாள் பெண்.
அவள் கொடுத்த படிவத்தை வாங்கி மேலோட்டமாகப் பார்த்தவன் அவளையும் தலை முதல் கால் வரை நோக்கி அவளின் வழக்கமான படிய வாரிய தலை அலங்காரத்தையும் தோள் வரை வழிய விட்டிருந்த மல்லிச் சரங்களையும், நெற்றியில் தீட்டப்பட்டிருந்த விபூதி குங்குமத்தையும் ஒரு வெற்றுப் பார்வை பார்த்து “இவ வேலைக்கு வந்திருக்காளா இல்ல அவங்க ஊர் திருவிழாக்கு வந்திருக்காளா, கன்ட்ரி ப்ரூட்” என்று முனகிக் கொண்டு அந்த படிவத்தில் தன் கையெழுத்தை இட்டு அவளிடம் நீட்டியவன் சிவாவிடம் திரும்பி,
“சிவா, ராஹித்தியாவ சீனியர் ஆடிட்டர் சபரி கிட்ட கூட்டிப்போ கம்பெனி ரூல்ஸ் அண்ட் இங்க அவளோட ஒர்க் பத்தி ட்ரெயின் பண்ண சொல்லு” என்று கூறியவன் தன் மடிக்கணிணியை உயிர்பித்துக் கொண்டே ராஹியின் முகத்தைக் கூட ஏறிடாமல், “ராஹி யூ கோ டு சிவா” என்று மட்டும் கூறினான்.
அவளோ அவனின் அடுத்தடுத்த கட்டளைகளில் அதிர்ந்து மீண்டு அவன் பி ஏ சிவாவுடன் வெளியேற எத்தனிக்கும் பொழுதே மீண்டும் அவளை சொடுக்கிட்டு அழைத்தவன், “போறதுக்கு முன்ன நீ இந்த ரூம்ல கலைச்சி போட்ட பொருளையெல்லாம் தொடச்சி முன்ன இருந்தது போலவே கரெக்ட்டா வச்சிட்டுப் போ” என்றும் சொல்ல அவளுக்கு யாரோ அவளை ஓங்கி அறைந்தது போன்ற உணர்வு.
சென்னை வந்ததிலிருந்து நேற்று இரவு வரை ஏன் காலையில் இந்த அலுவலகத்திற்குள் நுழையும் பொழுது கூட ராஹித்யாவிற்கு இங்கு வேலை பார்க்க வந்திருப்பதில் சிறிதும் பிடித்தம் இல்லாமல் தான் இருந்தது, ஆனால் இந்த அலுவலகச் சூழல் அவள் தந்தையை ஞாபகப் படுத்துவதால் தானாகவே அவள் மனம் மகிழ்ச்சியை தத்தெடுத்துக் கொள்ள அவளோ இது ஆதி அறை என்று கூட அறியாமல் அவற்றை எல்லாம் ரசித்திருந்த தன் மடத்தனத்தை நொந்து கொண்டவளுக்கு அந்த அறைக்குள் அவள் நுழைந்த போது உணர்ந்த இதம் இப்பொழுது முற்றிலும் காணாது போயிருக்க, சிவா முன்னால் அவன் இப்படிக் கூறியதும் முகம் கடுத்த பெண்ணவளோ சற்று முன்னர் ரசித்து பார்த்த பொருள்களோடு ஆதித்யாவையும் சேர்த்து இப்பொழுது ஒருவித எரிச்சல் மேவ நோக்கியவள் வேறு வழியறியாது அவன் கூறியது போல் அவள் தொட்டுத் தடவிய பொருள்களை எல்லாம் சரி செய்து அந்த அறையை விட்டு வெளியேறியப் பின்னர் தான் அவளுக்கு இலகுவாக மூச்சே வெளிவந்தது.
சோர்வும் கடுப்பும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும் முகத்தோடே சிவாவுடன் சென்ற ராஹித்யா, “எப்டி சார் இந்த ஆதி டெவி” என்று கூற வந்து பின்பு நாக்கை கடித்து, “ஆதி சார் கிட்ட வேலை பாக்குறீங்க.?” என்று ஆதங்கத்தோடு வினவ,
சிவாவும் ராஹி ஆதியின் உறவினள் என்று அறிந்திருந்தமையால் அவள் வார்த்தையை பெரிதாக எண்ணாமல், “பாஸ்கு எப்பவும் எல்லாம் பெர்பெக்ட்டா இருக்கணும் மேடம், நம்ம வேலைய நம்ம சரியா செஞ்சிட்டா அவரப் போல நல்லவர் இல்ல மேடம்” என்று சொன்னான்.
அதற்கு ராஹியும், “அதானே நீங்க உங்க பாஸ விட்டுக் குடுப்பீங்களா” என்று கூறிச் சிரித்தவளுக்கு பக்கத்து வீட்டுப் பையன் போன்ற தோற்றம் கொண்ட சிவாவிடம் சட்டென்று ஒரு நட்புணர்வு தோன்றி விட அவனும் அவளைப் பார்த்து நட்புக் கரம் நீட்டியவன் அவளை அழைத்துச் சென்று ஆதி கூறியது போல் சீனியர் சபரியிடம் அறிமுகப்படுத்தி வைத்துச் சென்றான்.
அந்த சபரியும் ராஹியின் வேலை விபரம் கூறியவர் ஒரு பைலைக் கொடுத்து “டேல்லி பண்ணி எடுத்துட்டு வாம்மா பாக்கலாம்” என்று சொல்ல அவளுக்கோ அது கொஞ்சம் கூடப் புரிபடவே இல்லை.
ஆதியின் மிகப்பெரிய பைனான்ஸ் நிறுவனம் சென்னையின் குறிப்பிட்ட பகுதி வரை பணம் பட்டுவாடா செய்திருக்கும் அனைத்து இடங்களில் இருந்தும் வருகின்ற கொடுக்கல் வாங்கல் அனைத்தும் சரிபார்பதற்கு இந்த முக்கிய கிளையில் மட்டும் இரண்டு ஆட்டிட்டர்கள் இருக்க, அவர்களுக்குக் கீழ் தான் பயிற்சிக்காக தற்காலிக வேலையில் ராஹித்தியா நியமிக்கப்பட்டிருந்தாள்.
அவளுக்கு பயிற்சி அளிக்குமாறு அந்த சபரியிடம் ஆதி கூறியிருக்க அவரும் அவள் திறமையை தெரிந்து கொள்ள ஒரு பைலைக் கொடுத்து கணக்கு பார்த்து வரச் சொல்ல அதைப் பிரித்து பார்த்த பெண்ணவளுக்கு தந்தையின் தொழிற்சாலையில் அவள் பார்த்த சாதாரண கணக்குகளுக்கும் இங்கே உள்ள வேலைக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லாதிருந்ததில், “இப்டி வேற ஒரு கம்பெனில வந்து வேல பாக்கப் போறேன்னு முன்னமே தெரிஞ்சிருந்தா பிட் அடிச்சு பாஸ் பண்ணாம ஒழுங்கா படிச்சி டிகிரி வாங்கியிருப்பனே” என்று புலம்பியவள் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் அமர்ந்து விட்டாள் ராஹி.