சுட்டெரிக்கும் பரிதியின் பாரிய வல்லமை குறைந்து, அம்புலியின் அழகிய படையெடுப்பில் பூமி மகள் குளிர்ந்திருந்த இனிமையான இரவுவேளை தங்களின் முதன் முதல் நாள் பணி முடிந்து வந்த யுவாவின் புதல்விகளும் தங்கள் ஹாஸ்டல் அறையில் குளித்து உணவருந்தி விட்டு படுக்கையில் விழுந்திருந்தனர்.
முதல் நாள் வேலை முடித்து வந்து தங்கள் வீட்டிற்கும் அழைத்து அனைவரிடமும் பேசி விட்டு எப்பொழுதும் தங்கள் வீட்டில் படுப்பது போல் இருவரும் அருகருகே படுத்திருக்க, ராஹியும் சாஹியின் மேல் தன் காலை போட்டுப் படுத்திருந்தவளோ அவள் புறம் திரும்பி, “அப்றம் டி உன்னோட பர்ஸ்ட் டே ஜாப் எப்டி போச்சு.?” என்று கேட்டாள் தங்கையிடம்.
அவளும், “செம்மையா போச்சுடி, கூட வேல பாக்குறவங்க அப்றம் பாஸ் கூட ரொம்ப நல்ல மாதிரி, எனக்கு இந்த வேலை ரொம்ப பிடிச்சிருக்குடி” என்று சொன்னவள், “உன் வேலையப் பத்தி சொல்லுடி, ரொம்ப கஷ்டமா இருந்திச்சா.?” என்றும் கேட்டாள் சாஹித்யா.
சாஹி வேலை என்றவுடன், ‘நா எங்கடி அதெல்லாம் பாத்தேன்’ என்று எண்ணியவள், “எனக்கும் என்னோட வேலை ரொம்ப பிடிச்சிருக்குடி, கஷ்டமா வெல்லாம் இல்ல, ஆது மாமா கூட தெரியாதத சொல்லிக் குடுத்தாங்க, என்ன எல்லார்கிட்டயும் அவங்க வீட்டுப் பொண்ணுன்னு சொல்லி அறிமுகப் படுத்தி வச்சாங்க, அப்றம் ஈவினிங் ஹாஸ்டல்ல கொண்டு வந்து விடுறேன்னு கூட சொன்னாங்க. ஆது மாமா சோ ஸ்வீட்றி” என்று கவனமாக ஆதியைத் தவிர்த்து ஆத்விக்கை பற்றி மட்டுமே அடுக்கியவள் இறுதியில் “ஆமா ஆது மாமா உன் நம்பர் வாங்குனாங்களே உனக்கு கால் பண்ணாங்களா.?” என்றும் கேட்க…
சாஹிக்கோ மதிய இடைவேளையில் ஆத்விக்குடனான முதல் முதல் கைபேசி உரையாடல் மனதில் ஓடியது.
ஆம் முதல் கைபேசி உரையாடல் தான்.
சிறு வயதில் இருந்தே புத்தகப் புழுவாக இருக்கும் சாஹித்யா தன் இரட்டையைத் தவிர யாரிடமும் அதிகம் பேசிப் பழகாதவள், தங்கள் ஊருக்கு அடிக்கடி வருகை தரும் ஆத்விக்கிடமும் ராஹி அளவுக்கு நட்பு பாராட்டியதில்லை. சென்னை வந்தப் பின்னரும் கூட அவர்கள் வீட்டில் இருந்த பொழுதிலும் அவன் கேள்விகளுக்கு மட்டுமே பதில் கொடுத்திருப்பவளிடம் அவன் கைபேசி எண் கூட இல்லாமல் தான் இருக்க…
மதிய இடைவேளையில் சக பணியாளர்களோடு கேண்டினில் உணவருந்திக் கொண்டிருந்த சாஹியின் எண்ணிற்கு ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வரவும் “யாரது புது நம்பரா இருக்கு” என்று சொல்லிக் கொண்டே கைபேசியை ஆன் செய்து செவியில் வைத்தாள் பெண்.
“ஹலோ யாரு.?” என்று கேட்ட சாஹிக்கு “யாருன்னு கண்டுபிடி பாப்போம்” என்று ஆத்விக் பதில் கொடுக்க…
அவளோ அறிந்தும் அறியாமல் இருந்த அந்தக் குரலிலும் அது கூறிய வார்த்தையிலும் இதழில் லேசான புன்னகை படற ஒரு நிமிடம் யோசித்தவள், “எனக்குத் தெரியலையே நீங்களே சொல்லுங்க” என்று சொன்னாள்.
அதற்கு அவனோ, “நா க்ளு தர்றேன்” என்றவன் “உனக்கு ரொம்ப ரொம்ம்ம்ப வேண்டபட்டவன்” என்று சொல்ல…
அவளோ, “தெரியலையே” என்று உதட்டைப் பிதுக்கினாள்.
அதில், “ப்ச்” என்று சலித்துக் கொண்ட ஆத்விக்கும், “ம்ம்ம் என்பேரோட பஸ்ட் லெட்டர் ஆ. லாஸ்ட் லெட்டர் க். இப்போ சொல்லு பாப்போம்?” என்றும் புதிர் போட்டவன், “இதுக்கு மேலையும் தெரியாதுன்னு சொல்லிராத சாஹி ரொம்ப ஸேமா போகும்” என்றும் சிரிப்போடு முடிக்க.
அவளோ, “நீங்க நீங்க ஆது மாமா தானே” என்றவளுக்கு ‘இவன் ஏன் திடீர்னு போன் பண்ணி நம்ம கிட்ட இப்டிலாம் பேசுறான்?’ என்ற எண்ணமும் ஓடியது போலும், அவளோ அதை அவனிடம் கேள்வியாக கேட்டே விட்டாள்.
ஆத்விக்கும், “ஏன் சாஹி நா உனக்கு போன் பண்ணக்கூடாதா.?” என்று வினவியன் குரலில் ஏதும் வேறுபாடு உள்ளதோ என்று சாஹி யோசிப்பதற்குள், “என்னோட டாடியும் எனக்கு ரொம்ப பிடிச்ச யுவா அங்கிளும் அவங்க வீட்டு பொண்ணுங்கள நல்லா பாத்துக்கற பொறுப்ப என்கிட்டதான் ஒப்படைச்சிருக்காங்க. ராஹிய மார்னிங்கே பாத்து பேசிட்டேன். அதான் உன்கிட்டயும் ரெண்டு வார்த்தை பேசலாம்னு கால் எடுத்தேன்” என்றவன், “அம்மணிக்கு ஏதும் தேவைகள் இருந்தால் அடியேனிடம் செப்புங்கள் அதை நிறைவேற்ற நான் சித்தமாக இருக்கிறேன்” என்றும் சாதாரணமாகத் தொடங்கி நாடக பாணியில் முடித்தவன் பேச்சில் அவளோ தன்னை மறந்து சிரித்து விட.
அவனும் கூடச் சேர்ந்து சிரித்தவன், “இனிமேல் அடிக்கடி இப்படி என் தொல்லைகள் இருக்கும், என்ன சகிச்சுப்பதானே சாஹி” என்று மீண்டும் வினவி அவள் பதிலையும் பெற்றுக் கொண்டு பேசியை அணைத்தவனின் வார்த்தைகளை இப்பொழுது நினைத்தாலும் சாஹித்யாவுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது.
அவளோ தன் இரட்டை மீண்டும் உலுக்கி “என்னடி ஆது மாமா போன் பண்ணலியா.?” என்று கேட்ட பின்னரே அவன் நினைவில் இருந்து மீண்டு, “ம்ம்ம் பண்ணாங்கடி பண்ணாங்க” என்று மட்டும் முடித்துக் கொண்டவள் “எனக்குத் தூக்கம் வருதுடி” என்று தலை வரை போர்வையை இழுத்து போத்திக் கொண்டு படுத்து விட்டாள்.
சாஹியின் செயலை “இவளுக்கு என்னாச்சு.?” என்று விசித்திரமாகப் பார்த்தவளும் விழி மூடித் தூங்க முயற்சிக்க அவள் இமைகளுக்கிடையில் வந்தமர்ந்து கொண்டான் ஆதித்யவர்மா.
அன்று மாலை அலுவலகத்தில் ஆதி ராஹியிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது எப்பொழுதும் போல் லேசாகக் கதவைத் தட்டி விட்டு, ஆதியின் அறைக்குள் நுழைந்த அஸ்வினோ மகனிடம் ஒரு ஹாய் சொல்லிவிட்டு அங்கு நின்றிருந்த ராஹியைப் பார்த்ததும் “உன்னதாண்டா பாக்க வந்தேன்” என்று சொல்லியவாறே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவன் அவளையும் அருகில் அமர்த்திக் கொண்டு… “நியூ ஜாப்லாம் எப்படியிருக்குமா. உனக்கு இங்க ஒன்னும் சிரமம் இல்லியே?” என்றும் வினவ…
அதற்கு ராஹி பதில் சொல்லும் முன்னே முந்திக் கொண்ட ஆதி, “என்ன டாட் நீங்க?. ராஹி யாரு? எவ்ளோ இன்டெலிஜென்ட்டான பொண்ணு. அவகிட்டப் போய் இப்டி கேக்குறீங்க” என்று குதூகலக் குரலில் கேட்டவன், “சொன்னா நம்பமாட்டிங்க டாட். வந்த ஓரே நாள்ள ராஹித்தியாவோட திறமையைப் பார்த்து நானே அசந்துட்டேன். ஒரு பத்து நாள் ட்ரைனிங் மட்டும் முடிஞ்சு, ஒரு சின்ன டெஸ்ட் வச்சு அவளுக்கு இங்க ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டே கொடுக்கலாம்னு இருக்கேன் டாட்.” என்ற ஆதியின் அளவுக்கு மீறிய புகழ்ச்சியில் அஸ்வினோ “அப்டியா ராஹி!” என்று அவளை ஆச்சரியமாகப் பார்க்க, அதற்கு பதில் கூற முடியாத ராஹியோ “நான் உனக்கு என்னடா பாவம் பண்ணேன்” என்பது போல் ஆதியை வெற்றுப் பார்வை பார்த்தாள்.
ஆதியின் அதீத ஆர்ப்பாட்டக் குரலிலே அவன் தன்னை சீண்டிப் பார்க்கவென்றே பேசுகிறான் என்று கண்டு கொண்டவள், அஸ்வினின் முன்னால் எதையும் காட்டிக் கொள்ளவும் விரும்பாமல், தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று, “ஆமா அங்கிள் எனக்கு இங்க நல்லா செட் ஆகிடுச்சி. ஆதி சார் சொன்ன மாதிரி நான் அவங்க வக்கிர டெஸ்ட்லையும் பாஸ் பண்ணிருவேன் அங்கிள்.” என்றும் உறுதியாகச் சொல்ல,
அதைக் கேட்ட அஸ்வினும், “கண்டிப்பா நீ ஜெயிப்படா. ஆல் தி பெஸ்ட்” என்றும் கை குலுக்கிப் புன்னகைத்தான்.
ஆதியும் அவளின் பேச்சை ஏதோ நகைச்சுவை கேட்டதைப் போல் அடக்கப்பட்ட புன்னகையோடு பார்த்திருந்தவன், “இட்ஸ் ஓகே ராஹி. கோ டூ யூர் சீட்” என்று மட்டும் சொன்னவன் அஸ்வினிடம் திரும்பி வேறு ஏதோ அலுவல் விஷயங்களைப் பற்றி பேசத் தொடங்க, அதற்கு மேல், தான் அங்கு நிற்கக் தேவையில்லை என்று உணர்ந்த ராஹியும் அஸ்வினிடம் சொல்லிக் கொண்டு தன் இருக்கைக்கு வந்தமர்ந்தவளுக்கு “நாம இந்த டெஸ்ட்ல பாஸ் ஆகிடுவோமா. அப்டி இல்லாட்டி நிஜமாவே நம்மள வேலைய விட்டு அனுப்பியிருவானா ஆதி? அப்படி அனுப்பிட்டா சாஹியோட ஆசையும் நிறைவேறாது போகுமே” என்று மனம் முழுதும் குழப்பம் மட்டுமே நிரம்பி வழிந்தது.
அன்று மட்டுமல்ல அடுத்தடுத்து வந்த நாட்களிலும் ராஹித்தியா ஆதி சொன்ன பரீட்சையிலே மனதை மூழ்கடித்துக் கொண்டவளுக்கு, அங்கிருந்த தலைமை ஆடிட்டர் சொல்லிக் கொடுத்த வேலை நுனுக்கங்கள் எல்லாம் அவள் புத்தியில் உரைக்கவே இல்லை.
அவள் தான் அப்படி இருந்தாலே ஒழிய அவளுக்கு பரீட்சை வைக்கிறேன் என்று சொன்ன ஆதியோ அடுத்து வந்த நாட்களில் அதைப் பற்றி அவளிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவே இல்லை. பேச்சு மட்டும் அல்ல அன்றைய நாளுக்குப் பின் அவனைக் காலை நேரம் தவிர்த்து மற்றய நேரங்களில் பார்ப்பது கூட பெண்ணுக்கு அரிதாகத்தான் இருந்தது. அப்படி பார்த்த ஒரு சில சந்தர்ப்பங்களிலும் இவள் மரியாதை நிமித்தம் “குட் மார்னிங் சார்” என்று எழுந்து நிற்க, அவனோ அதையெல்லாம் சிறிதும் சட்டை செய்யாமல் சிவா பின்தொடர கைபேசியும் கையுமாக மின்னல் வேகத்தில் வந்து சென்றான்.
அவன் செயலில் முகம் சுளித்த ராஹியும் ‘ரொம்ப தான் பண்றான் நிக்கக் கூட நேரம் இல்லாத அளவுக்கா அவனுக்கு வேலைப் பளு இருக்கு?’ என்று அவனைப் பற்றி அசூசையாக எண்ணியவளுக்கு இத்துணை தினங்களில் அவனது தொழில் விபரங்கள் பற்றி ஓரளவு செவியில் விழுந்ததை வைத்தே, “இருக்குமாகத்தான் இருக்கும். இப்டி ஓடாட்டி இத்தணை தொழில்களை தொடங்கி நடத்த முடியுமா?” என்றும் அவள் மூளையே அவனுக்கு ஆதரவாகப் பேசியது.
இன்றோடு ஆதி சொன்ன பத்து தினங்களில் ஐந்து தினங்கள் கழிந்திருக்க, அவன் தான் அவளைக் கண்டு கொள்ளவில்லையேத் தவிர, அவளுக்குண்டான பயிற்சியும், மற்ற சலுகைகளும் சிவாவின் மேற்பார்வையில் அங்குள்ள சீனியர் தொழிலாளர்கள் மூலம் அவளுக்கு சிறப்பாகவே வழங்கப்பட, அவளுக்குத் தான் அவற்றோடு ஒன்ற முடியாத அளவு ஆதியின் ஒட்டாத குணமே அவள் உள்ளம் முழுதும் ஆக்கிரமிப்பு செய்திருந்தது.
ராஹி எண்ணியது போலவே ஆதியும் கடந்த பல தினங்களாய் தன் கட்டுமானத் தொழிலில் முக்கிய பணியில் ஈடுபட்டிருந்தவன் சரியாக ராஹியிடம் கூறிய பதினொன்றாவது நாள் காலை அலுவலகம் வந்து அவளை அழைத்தவனோ, “ம்ம்ம் அப்றம் ராஹி நீ சொன்னபோல டெஸ்ட்க்கு ரெடியா?” என்று கேட்க…
அவளோ, ‘டேய் நானாடா உன்ன டெஸ்ட் வைக்க சொன்னேன்?’ என்று அவனை ஆற்றாமையாகப் பார்த்தவளுக்கு ஆதி வைக்கும் பரீட்சையில் தேர்வாகி தான் இந்த வேலையில் தொடருவோம் என்று சிறிதும் நம்பிக்கையே இல்லை.
பள்ளி கல்லூரியில் படிக்கும் காலத்திலே முன்னூற்றி சொச்சம் நாட்கள் முக்கி முக்கிப் படித்தும் தேர்வு என்று வரும் பொழுது கோட்டை விடும் பெண்ணவளுக்கு கடந்த பத்து நாளைய பயிற்சி தனக்கு இந்த பரீட்சையில் சிறிதும் உதவப் போவதுமில்லை. தானும் இந்த வேலையில் நிலைக்கப் போவதுமில்லை’ என்று தன் மீதே நம்பிக்கையற்ற பெண்ணவள் ஆதி சரிபார்த்துக் கொண்டு வரச் சொன்ன ஒரு சில கோப்புகளோடு தன்னிருக்கைக்கு வந்து அமர…
தந்தையின் வார்த்தைக்காகவே அவளை தன் அலுவலகத்தில் சேர்த்திருந்தாலும், நூரில் ஒரு வாய்ப்பாக அவள் சற்று திறமைசாலியாக இருந்தால் அவளை தொடர்ந்து வேலையில் வைத்துக் கொள்வதில் தப்பில்லையே என்று முழுக்க முழுக்க ஒரு தொழிலதிபனாக மட்டுமே யோசித்த ஆதித்யா சிறிதான நம்பிக்கையோடு தான் ராஹிக்கு இந்த பரீட்சையை ஏற்பாடு செய்திருந்தான்.
அவன் ராஹிக்கு பரீட்சை என்று கொடுத்த வேலை வழக்கமாக அவன் அலுவலகத்தில் இன்டர்வியூ முடிந்து தேர்வாகி வருபவர்களின் திறமையை சோதிக்கும் பொதுவான ஒரு பார்முலா கோப்புதான்.
தந்தையின் சிபாரிசில் இன்டெர்வியூ இல்லாமலே தன் அலுவலகம் நுழைந்திருப்பவளிடம் மேற்சொன்னது போல் ஒரு சில கோப்புகளைக் கொடுத்து, “இந்த பைல் எல்லாத்துலையும் சின்ன சின்ன மிஸ்டேக்ஸ் இருக்கும். அது என்னனு கண்டு புடிச்சி கரெக்ஷன் பண்ணிட்டுவா. இது மட்டும் நீ சரியா பண்ணிட்டன்னா உனக்கு இங்க வேலை கன்பார்ம். இல்லன்னா” என்று மேலும் ஏதோ சொல்ல வாயெடுத்து பின்பு என்ன நினைத்தானோ…
“போ போய் மொதோ பைல் பாத்து எடுத்துட்டு வா. அப்றம் பேசிக்கலாம்” என்றும் சொல்லி அனுப்பி வைத்தவன் உண்மையாகவே அவளிடம் திறமை இருந்தால் தொடர்ந்து அவளை வேலைக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்ற முடிவோடு தான் இருந்தான்.
அவளும் உள்ளூற சோர்ந்திருந்தாலும் அவனிடம் நிமிர்வாகவே “ஓகே சார்” என்று விட்டு தன் இருக்கைக்கு வந்தவள் அவன் கொடுத்த கோப்பிற்குள்ளேயே புதைந்து விடுபவள் போல் வேலையில் மூழ்கி இருக்க, அதை சிசிடிவியில் பார்த்த ஆதியும், “ம்ம்ம் நாட் பேட்” என்று மட்டும் சொல்லிக் கொண்டவன் தன் வேலையில் மூழ்கிப் போனான்.
கிட்டதட்ட மூன்று மணி நேரங்கள் கடந்த நிலையில் தன் மடிக்கணினியை மூடி விட்டு நிமிர்ந்த ஆதி, சிவாவை அழைத்து ராஹி… கொடுத்த வேலையைச் செய்து முடித்தாளா என்று பார்த்து வரச் சொல்ல…
அதைப் பார்த்து வந்தவனோ “பாஸ்” என்று சற்றே தயங்கி, “ராஹி மேடம் அவங்க சீட்ல இல்லை பாஸ்” என்று சொன்னான்.
சிவா ராஹியை மேடம் என்று விளித்ததிலும் அவன் கூறிய செய்தியிலும் சினம் கொண்ட ஆதியும், “மேடம்மா. அவளா உனக்கு சாலரி கொடுக்கறா? கால் மீ ஜஸ்ட் ராஹித்தியா” என்று சொன்னவன், “குடுத்த வேலையப் பாக்காம எங்க போனா அவ?” என்றும் கேட்க..
அதற்கு சிவாவும் இன்னும் சற்று தயங்கி மௌனம் காத்து, பின்பு ஆதியின் முறைப்பில் தொடர்ந்தவன், “அது வந்து பாஸ். கிளீனிங் வேலை பாக்குற லேடியோட சேந்து கேண்டின் பக்கமா போனதா பக்கத்து சீட் ஹேமா சொல்றாங்க பாஸ்” என்று முடிக்க…
அதைக் கேட்ட ஆதியோ “ரப்பிஸ்” என்று எழுந்தே விட்டான்.
ஆதி கொடுத்த வேலையை எப்படியாவது இன்று சரியாகச் செய்து முடித்து அவன் முன்னால் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்கிற முனைப்புடனே ராஹித்தியா தனை மறந்து கோப்பில் ஆழ்ந்திருந்த சமயம், அந்த அலுவலகத்தில் துப்புரவு செய்யும் வயது முதிர்ந்த பெண் ஒருவர், வேலை முடித்து வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தவர் ராஹியின் இருக்கையை கடந்த நேரம் தடுமாறி அவள் கால்களின் அருகில் விழுந்து வைக்க, அதைப் பார்த்துப் பதறிய ராஹியோ, “அய்யோ அம்மா என்னாச்சு?” என்று பதறி வினவியவள் அவரை தூக்கியும் விட்டாள்.
அவளுக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணியும், “நேரமாச்சுன்னு காலைல சாப்புடாம வந்துட்டேன்மா பிரஸ்ஸர் வேற இருக்கா அதான் கொஞ்சம் தலை சுத்துது. நான் வர்றேன்மா நன்றி” என்று சொல்லி செல்லப்போனவர் அடுத்த எட்டிலும் மீண்டும் தடுமாற…
அதைப் பார்த்த ராஹியோ இப்பொழுது அவர் கையைப் பற்றித் தாங்கி நிறுத்தியவள், “ஏன்மா வயசான காலத்துல இப்டி சாப்புடாம வரலாமா?” என்று கேட்டபடியே நேராக அவரை கேண்டின் அழைத்துச் சென்று உணவருந்த வைத்து, அவர் மகனிற்க்கும் கைபேசியில் தகவல் சொல்லி வரவைத்து, அவரை பத்திரமாக அனுப்பி விட்டுத் திரும்பியவளுக்கு அப்பொழுது தான் ஆதி கொடுத்த வேலையே ஞாபகத்திற்கு வந்தது.
கூடவே ஆதியின் எச்சரிக்கையும் மூளையில் உரைக்க அவளோ அடித்து பிடித்து அலுவலகம் வர அங்கே ஆதி வேட்டைக்குக் காத்திருக்கும் சிங்கம் போல் அவளின் இருகைக்கு அருகிலேயே ஒரு இருக்கையை போட்டு அமர்ந்திருக்க, அதைப் பார்த்த ராஹிக்கோ “செத்தான்டா சேகரு” என்ற மனநிலைதான்.
வியர்வை ஆறாகப் பெறுக, மேல் மூச்சு வாங்க வந்து நின்றவளை தலையூடு பாதம் வரை ஒரு ஏளனப் பார்வை வீசியவன், “உனக்கு டூ டேஸ் டைம் அதுக்குள்ள நீயா இந்த வேலைல இருந்து விலகிக்க” என்று மட்டும் சொல்லி எழுந்து கொண்டவனை “சார்…” என்று அதிர்ச்சியாகப் பார்த்தாள் ராஹி.
என்னதான் மனிதாபிமான அடிப்படையில் அவள் ஒரு நல்ல காரியமே செய்து விட்டு வந்திருந்தாலும், ஆதியிடம் அனுமதி கேளாமல் போனது தன் தப்பு என்று உணர்ந்தவள், அவனிடம் சற்று இறங்கிய குரலிலே “சார் இல்லை சார் வேணாம் சார். அப்டிலாம் சொல்லாதீங்க சார்” என்று வார்த்தைக்கு ஒரு சார் போட்டு அவன் வழியை மறைத்து நின்று அவனை சமாதானம் செய்ய முயன்றாள் ராஹித்தியா.
ஆனால் அவனோ அவள் மேல் கொலை வெறியில் இருந்தவன், “ஹேய் ஸ்டுப்பிட் வழிய விடு. நான் ஒரு தடவ சொன்னா சொன்னது தான். உன்னப் போல இர்ரெஸ்ப்பான்சிபில் இடியட்கு இனியும் இங்க எந்த வேலையும் இல்லை” என்று பற்களுக்கிடையில் கடித்துத் துப்பியவன் சிவாவைப் பார்க்க… அவனோ ராஹியுடைய மேஜையின் மேல் அநாதையாய் கிடந்த கோப்புகளை எடுத்துக் கொண்டு போய் உள்ளே வைத்து விட்டு வந்தான்.
அதில் மேலும் அதிர்ந்தவள்
“சார் சார் நான் வேலைய பாதில விட்டுப் போனது தப்பு தான். ஒரு தவிர்க்க முடியாத சூழல்ல அப்டி பண்ணிட்டேன் ப்ளீஸ் பைல குடுங்க சொல்லுங்க சார். நான் இப்போ அத பாத்து முடிச்சிர்றேன் ப்ளீஸ்.” என்று தன் மேல் தவறு இருப்பதால் சுற்றிலும் அனைவரும் இருப்பதைக் கூட பொருட்படுத்தாது கெஞ்சினாள் பெண்.
ராஹியின் பேச்சில் மீண்டும் அவளைப் பார்த்தவன் சற்று முன்னர் அந்த பெண்மணியோடு உணவருந்தி கை கழுவச் சென்ற சமயம், கேண்டீன் குளியலறைக் கண்ணாடியைப் பார்த்து முகம் அலம்பி சற்றே திருத்தப்பட்டிருந்த அவளின் மாசில்லா முகத்தில் சில நொடிகள் பார்வையை நிலைக்க விட்டு, “அஹான் ரொம்ப தவிர்க்க முடியாத சூழல் தான் போல” என்று எள்ளலாக உரைத்தவன் அவள் கேண்டின் சென்று யாருடனோ அரட்டை அடித்து விட்டு, சாவகாசமாய் ஒப்பனையும் செய்து கொண்டு வந்திருக்கிறாள் என்றே எண்ணிக் கொண்டான் போலும்.
அவன் இப்பொழுது இருக்கும் மனநிலையில் அவள் எதற்காகச் சென்று வந்தாள் என்று முழுமையாக எடுத்துச் சொன்னாலே அவள் செயலில் உள்ள நியாயம் அவனுக்குப் புரிபடுமோ என்னவோ. சொல்லப்போனால் சாப்பிடாமல் வந்து தங்கள் நேரத்தை வீணடித்தது அப்பெண்மணியின் தவறு என்று ராஹியோடு சேர்த்து அவரையும் வேலை விட்டு அனுப்பினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.
அனைத்திலும் அப்படி ஒரு நேரக் கணக்கும், முழு ஈடுபாடும் எதிர் பார்ப்பவனுக்கு இச்சமயம் ராஹி செய்திருக்கும் செயலை அத்துணை எளிதாக எடுத்துக் கொள்ளவே முடியாதிருக்க, தன் தந்தை இருக்கும் தைரியத்தில் அவள் வேண்டுமென்றே தன்னிடம் அலட்சியம் காட்டுகிறாள் என்றும் எண்ணிக் கொண்டவன்…
“லிசன் ராஹித்தியா நீ இங்க செட் ஆக மாட்டான்னு எனக்கு பஸ்ட் டேவே தெரியும். இருந்தும் டாட்க்காக உனக்கு ஒரு சான்ஸ் குடுத்தேன். ஆனா நீ இதெல்லாம் ஒரு விஷயமே இல்லங்கிற மாறி கேண்டின் போய் அரட்டை அடிச்சிட்டு ஒன் அவர் கழிச்சு ஹாயா வர்ற.” என்று பல்லைக் கடித்து நிறுத்தினான் ஆதி.
அதற்கு அவளும், “இல்லை சார் நான் அப்டிலாம் நினைக்கலை ஒரு முக்கியமான வேலையா தான்” என்று தன்னிலை விளக்க முயன்றவளை கை உயர்த்தித் தடுத்தவன்…
“உன்னப் போல ஒரு பொறுப்பில்லாத பெர்செனுக்கு, மேக்கப் கிரேஸி கேர்ளுக்கு என் கம்பெனில நிச்சயம் இடம் கிடையாது.” என்று அவள் தோள்களில் வழிந்த மல்லிச் சரங்களையும் ஒரு முறை நோக்கி விட்டுத் தொடர்ந்தவன், “நான் முன்னவே சொன்னது தான். உனக்கு ஒன் டே டைம். நானா டாட கன்வின்ஸ் பண்ணி உன்ன வேலைய விட்டு அனுப்புறத விட நீயாவே இந்த வேலை பிடிக்கலைனு ரிசைன் பண்ணிட்டு இங்கிருந்து போயிரு” என்றும் சொல்லி வாசலை நோக்கி கை காட்டியவன் விறுவிறுவென்று தன்னறைக்குள் நுழைந்து கொள்ள…
தான் எங்கே எதற்காக சென்றோம் என்று தன் பக்க நியாயத்தைக் கூடக் கேளாமல் தன்னை மேக்கப் பைத்தியம் என்று வேறு சொல்லிச் சென்ற ஆதியின் சிடு சிடு பேச்சிலும், சுற்றி இருப்பவர்களின் பரிதாபப் பார்வையிலும் விழிகள் கலங்கி நின்ற ராஹியின், “சார் வேணாம் சார்…” என்ற வார்த்தைகள் காற்றில் கரைந்து தான் போனது.