இப்படியே அவர்கள் இருவரின் நாட்களும் வீச்சுக்களும் பேச்சுக்களுமாய் நகர, அன்று ஆதி அலுவலகம் வந்த உடனே அவன் அன்று தயாரித்து வைத்த கொட்டேசன் காகிதங்களில் ஒன்றை அது அனுப்ப வேண்டிய இடத்திற்கு மின்னஞ்சல் செய்ய அதுவோ “ஈமெயில் அனுப்புவதற்கான காலம் முடிந்தது” என்று திரும்பி வந்தது.
அதைப் பார்த்து, “என்ன மெயில் ரிட்டர்ன் வருது.?” என்று யோசித்தவாறே
தொடையில் தாளம் தட்டியவனும் தந்தைக்கு அழைக்கலாம் என்று கைபேசியை எடுக்க அதற்குள் அஸ்வினே மகனுக்கு அழைக்க…
அந்தப்புறம் அஸ்வினோ, “சார்ம் அந்த கவர்மென்ட் பிராஜெக்ட்கு பைனல் அமௌன்ட் டிக்ளர் பண்ணி கொட்டேசன் பேப்பர் அனுப்பிட்டியா.?” என்று கேட்க..
ஆதியோ, “எஸ் டாட் இப்போ தான் அனுப்பினேன் ஆனா மெயில் டைம் ஓவர்னு ரிப்ளை வருது” என்று சொன்னவன் தொடர்ந்து, “ஒய் டாட் சம்திங் வ்ராங்?” என்று வினவினான்.
மகனின் கேள்விக்கு அஸ்வினும் “எஸ் சார்ம் அந்த ப்ராஜெக்ட்ட யாருக்கு கொடுக்கறதுன்னு முடிவு அறிவிக்கப் போறதா இப்போதான் எனக்கும் மெஸேஜ் வந்தது” என்று சொல்ல…
ஆதியோ, “ஆனா டாட் எப்பவும் ஈவினிங் தானே ரிசல்ட் வரும் அதுவரை பேப்பர்ஸ் எடுப்பாங்களே” என்று கேட்டான் குழப்பம் சூழ்ந்த குரலில்.
அஸ்வினும், “நீ சொல்றது சரிதான் ஆதி, ஆனா ஆன் மை கெஸ்ஸிங் இது அந்த அமைச்சரோட கசின் வேலையாத்தான் இருக்கும்” என்றவன் தொடர்ந்து…
“இன்னும் டூ அவர்ஸ்ல டெண்டர் டிசிசன்னு மெசேஜ் வந்திருக்கு நீ ரெடியா இரு ஆதி, நம்ம நேர்ல போய் என்னனு பாத்துட்டு வந்துரலாம்” என்று கைபேசியை அணைத்தான் அஸ்வின்வர்மா.
தந்தை கைபேசியை அணைக்கவும் அவன் கூறிய செய்தியில் சிறிதே சினம் கொண்ட ஆதியும் சிவாவோடு இணைந்து அந்த டெண்டர் நடக்கும் இடத்திற்குச் செல்ல ஆயத்தமாகியவன் ஒரு சில கோப்புகளை சிவாவிடம் கொடுத்து மகிழுந்தில் வைக்கச் சொன்னவன் ஏதேற்சையாகத் திரும்ப, அங்கே தன் அறைக்கு வெளியே அவளுடைய இருக்கையில் அமர்ந்து சுற்றியும் முற்றியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ராஹித்யா.
கண்ணாடியூடு அவளைப் பார்த்தவன் அந்த அவசர நேரத்திலும் அவளை இன்டர்காமில் அழைத்து சிவாவிடம் இருந்தவற்றை வாங்கி அவளிடம் கொடுத்து, “இத கொண்டு போய் என் கார்ல வை!” என்று சொல்ல அவளுக்கோ அத்துணை எரிச்சல்.
சில பல நாட்களாக இது போல் ஏவல் வேலைகள் மட்டுமே செய்து வரும் ராஹிக்கு அவன் தன்னை இப்படி எல்லாம் ஆட்டுவிக்கத்தான் பி ஏ வாகவே நியமித்திருக்கிறான் என்ற விடயத்தையே மறந்தவள்…
இன்று சிவாவிடம் சொல்லிய வேலையை வாங்கி வீம்புக்கென்றே தன்னிடம் ஏவும் ஆதியைப் பார்த்து அப்பட்டமாகவே முறைத்தவள், “அன்னிக்கு யாரோ அவங்களோட சோப்பு டப்பா கார நா தொடக் கூடாதுன்னு சொன்னாங்க, இப்போ நா தொட்டு இதெல்லாம் உள்ள வச்சா உங்க கார் அழுக்குப் படாத்தா ஆதி… ஸ்ஸார்” என்று ஒரு மாதிரிக் குரலில் இழுத்து வாய்ப்பை விடாமல் அன்றைக்கு அவன் கூறியதையே அவனுக்கு ஞாபகப் படுத்த…
அவனோ அதில் “ஹேய் டெ… ராஹித்தியா உன்ன…” என்று பல்லைக் கடித்தவன், “என்னடி திமிரா, அந்தக் காரோட வேல்யூவ் தெரியுமாடி உனக்கு?, நீ தொட்டா என் கார் நிச்சயம் அழுக்காகும் தான். ஆனா அது பத்தி நீ ஒர்ரி பண்ணிக்காத நா அத வாட்டர் வாஸ் விட்டுக்கறேன்… பதிலுக்கு பதில் ஆர்கியூ பண்ணாம ஒழுங்கா இப்போ நா சொன்னத செய் இல்லனா ரிசைன் பண்ணிட்டுப் போடி” என்றான் ஆதி அலட்சியம் வழியும் குரலில்.
அவன் குரலும், இப்பொழுதுதெல்லாம் அவனிடம் சராளமாகத் தோன்றியிருந்த வாடீ போடி என்ற விளிப்பும் வழக்கம் போல் ராஹியின் சுயமரியாதையும் தட்டிப் பார்க்க அவளோ இன்னும் அங்கிருந்து செல்லாமலே, “இப்பெல்லாம் எப்பப்பாரு என்ன டீ சொல்லியே கூப்புடுறீங்க இது கொஞ்சம் கூட நல்லாயில்ல, நா என்ன உங்க பொண்டாட்டியா.?” என்று சற்று காட்டமாகவே ராஹி வினவ…
அவனும் ஏற்கனவே டெண்டர் விஷயமாக குழப்பத்தில் இருந்தவன் இப்பொழுதைய ராஹியின் வாயாடலில் அவன் ஆத்திரமும் கூட, “என்னது பொண்டாட்டியா? அந்த நினைப்பு வேற இருக்கா உனக்கு?, உன்ன மாறி ஒரு பொண்டாட்டி இருந்தா நான் அவள ஒரே மாசத்துல டிவோர்ஸ் பண்ணிடுவேன் உனக்குலா இதுக்கு மேல ரெஸ்பெக்ட் கொடுக்க முடியாதுடி” என்றான் ஆதி அதிகரிக்கப்பட்ட ரௌத்திரக் குரலில்.
அதற்கு ராஹி சண்டைக்கோழியும், “பின்ன நான் மட்டும்.?. உங்களப் போல ஒருத்தன்தான் மாப்பிள்ளைன்னு தெரிஞ்சா கல்யாணமே வேணான்னு எழுதி வச்சிட்டு ஓடியே போய்டுவேன்” என்று மூச்சு வாங்கப் பேசியவள் அவன் கொடுத்த பைலோடு வேகமாக அங்கிருந்து ஓட…
அவனோ, “ஹேய் டெவில் நில்லுடி…” என்று கத்தியவாறே அவள் பின்னோடு விரைந்தவன் அஸ்வினைப் பார்த்ததும் அமைதியாகி தன் காரில் ஏறி அமர்ந்து கொண்டு, “இருடி உன்ன வந்து வச்சுக்கிறேன்” என்று சைகை செய்து விட்டு செல்ல…
அவளும் அவனைப் போலவே, “போடா முசுட்டு மேங்கோ” என்று உதடசைத்துச் சென்றாள்.
தன் முதலாளி ராஹியிடம் சரி மல்லுக்கு நிற்பதை ஒரு ஆச்சர்யத்தோடு பார்த்திருந்த சிவாவும் தந்தை மகனோடு ஆதியின் பஹானியில் ஏறிக் கொள்ள அவர்கள் மூவரும் அடுத்த ஒரு மணி நேரத்தில் தமிழக அரசு நடத்தும் அந்த மேம்பாலம் கட்டுமான ஏலம் நடக்கும் இடத்திற்குள் நுழைந்திருந்தனர்.
சென்னையின் முக்கியப் பகுதியில் மிகப்பெரும் அளவில் மேம்பாலம் கட்டும் பணிக்கான அரசு திட்டத்தைக் கைப்பற்ற ஆதியின் கட்டுமான நிறுவனம் மட்டுமல்லாது இன்னும் பல பெரு நிறுவனங்களும் போட்டி போட்டு கூடியிருக்க அந்த அனைத்து நிறுவனங்களையும் பின்னுக்குத் தள்ளி அந்த ப்ராஜெக்ட்டை கைப்பற்றி இருந்தான் பாண்டிச்சேரியைச் சேர்ந்த சர்வா.
சென்னையைச் சேர்ந்த மாநில அமைச்சர் ஒருவரின் சொந்தக்காரனான சர்வாவை அங்கு பார்த்ததுமே அஸ்வினுக்குப் புரிந்து போனது. அங்கு பணமும் பதவியும் நன்கு விளையாடியிருப்பது.
அண்ணன் தம்பி போல் இருந்த ஆதியும் அஸ்வினும் தங்கள் வீறு கொண்ட நீள் எட்டுக்கலில் உள்ளே சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம், “வழக்கமா லாஸ்ட் டேட்ல ஈவ்னிங் தான டெண்டர் ரிசல்ட் அனோன்ஸ் பண்ணுவீங்க, இப்போ என்ன எல்லாம் புதுசா இருக்கு.?” என்று பல்லைக் கடித்து வினவ…
அவர்களைப் பார்த்ததும் அடித்துப் பிடித்து எழுந்து நின்ற அந்த அதிகாரிகளோ,
“சாரி சார்” என்று எச்சில் விழுங்கியவர்கள் அங்கிருந்த சர்வாவைப் பார்க்க அவர்கள் பார்வையே ‘பதவிக்கு முன்னாடி எங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை’ என்று சொல்லாமல் சொல்லியது.
அதைப் பார்த்த ஆதி “ஹே டேமிட்ஸ் உங்களுக்குளா எதுக்கு மேன் மீசை, எதுக்கு இந்த டெண்டர் கண்ணாமூச்சி?” என்று எகிர…
அஸ்வினோ அவனை “காம்டவுன் சார்ம், இவங்ககிட்ட பேசி உன் எனர்ஜிய வேஸ்ட் பண்ணாத” என்றவன், “இவங்ககிட்ட எப்டி பேசணுமோ நா அப்டி பேசிக்கிறேன்” என்று சொல்லி அவனை அழைத்துக் கொண்டு வெளியேற…
அதைக் கேட்டிருந்த அதிகாரிகளோ, “நம்மள போல அதிகாரிங்க பொழப்பு மத்தளம் போல இப்டி இடிபடுதே… இப்போ இந்த அஸ்வின் என்னப் பண்ணப்போறாரோ.?” என்று தலையில் கை வைத்துக் கொண்டனர்.
எப்படியாவது இந்த முறை ஆதியை ஜெயிக்க வேண்டும் என்கிற நோக்கில் தன் மாமாவின் அமைச்சர் பதவியை பயன்படுத்தி அந்த அரசு பிராஜெக்டை தன் வசப்படுத்திய சர்வா அங்கு அலுவலகத்திலிருந்து தந்தையோடு வெளியே வந்த ஆதியை நோக்கி வந்தவன், “என்ன பாட்னர் பிராஜக்ட் இந்த முறை சமூகத்துக்கு கிடைக்கல போல, கொட்டேசன கொஞ்சம் சீக்கிரம் அனுப்பியிருக்கக் கூடாது” என்று நக்கல் குரலில் அக்கறைப் பட்டவன் “காத்து எப்பவும் உன் பக்கம் மட்டுமே வீசாது பாட்னர்” என்றான் சீண்டல் குரலில்.
அவன் பேச்சில் ரௌத்திரம் கூடி “டேய்…” என்று அவன் சட்டையைப் பற்றப் போன ஆதியோ அஸ்வினின் “சார்ம்ம்ம்ம்…” என்ற அழுத்தமான வார்த்தையில் தந்தையைத் திரும்பி ஏறிட்டு தந்தையின் முறுவல் மாறா முகத்தைப் பார்த்து, அவனும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன் தன் இதழை ஏளனமாக வளைத்து, “ஐ அக்ரீ யுவர் கமெண்ட் பாட்னர், காத்து இப்போ உன் பக்கம் தான் வீசுது, ஆனா அத வீச வைக்க நீ கொடுத்துருக்க பிரைஸ் எவ்ளோன்னு நீயே கால்குலேட் போட்டுப் பாரு நிச்சயம் இந்த பிராஜக்ட் உனக்கு ஹெவி லாஸ்தான்” என்று தோள்களை குலுக்கியவன் தொடர்ந்து..
“உனக்கு இந்த லாஸ்ஸ மேனஜ் பண்ண பினான்ஸ் தேவைப்பட்டா என்ன கான்டேக்ட் பண்ணு பாட்னர். என்னோட பினான்ஸ் கம்பெனில இன்ட்ரெஸ்ட் ரொம்ப கம்மிதான்” என்றும் சொன்னான்.
ஆதியின் அதீத நக்கலில் மிக அதிக ஊக்கத்தொகை கொடுத்து அந்த டெண்டரை முடித்த சர்வாவின் முகமோ சற்று முன்னர் இருந்த மகிழ்ச்சி மாறி கருத்துச் சிறுத்துப் போக, அதைப் பார்த்துச் சிரித்தவாறே தன் பஹாணியை கிளப்பிய ஆதி தன் தொழில் போட்டியாளனுக்கு தக்க பதில் கொடுத்து வந்திருந்தாலும் ‘டெண்டரை தான் எடுக்க முடியவில்லையே’ என்றும் ‘அதற்கு காரணமான தன் எதிரியை ஒன்றும் செய்ய விடாமல் தந்தை தன்னை தடுத்து விட்டாரே’ என்றும் தன் ஆத்திரத்தை காரின் ஸ்டியரிங் வீலில் காட்ட அதுவோ அவன் அலுவலகத்தை நோக்கி பிய்த்துக் கொண்டு ஓடியது.
ஆதி காரை செலுத்தும் வேகத்தில் சிவா உயிரை கையில் பிடித்து அமர்ந்திருக்க தன் இளம் வயதை அச்சுப் பிசகாமல் பிரதிபலிக்கும் மகனின் கோபத்தில், அவனைப் பார்த்து சிரித்துக் கொண்ட அஸ்வினோ மகனிடம், “சார்ம்… சின்னதோ பெருசோ நியாயமோ அநியாயமோ நமக்கு ஏற்படுற தோல்வி நம்மோட உணர்வுகள தாக்காம, நம்ம இயல்ப பாதிக்காம பாத்துக்கணும் சார்ம். அப்பத்தான் நாம எங்க சறுக்கிருக்கோம்னு யோசிச்சு அத வெற்றிக்கான ஸ்டெப்ஸா மாத்த முடியும்” என்றவன் இன்னும் இறுகிப் போய் இருந்த ஆதியின் முகத்தைப் பார்த்து…
‘கோவம் கொறஞ்ச (குறைந்த) பின்ன திங்க் பண்ணா அவனே சரியாகிடுவான்’ என்றும் எண்ணிக் கொண்டவன் அறியவில்லை அதற்குள் மகன் ஒரு பூவின் மனதை கசக்கி விடுவான் என்று.