படிப்பு முடிந்து தொழில் உலகில் காலடி எடுத்து வைத்திருந்த நான்கு வருடங்களில் பார்த்தறியாத நியாயம் இல்லாத தோல்வியை இன்று சந்தித்தவன் தன்னுடைய அலுவலக அறையில் கூண்டுப் புலியாய் உலவிக் கொண்டிருந்தான் ஆதி.
எந்த வேலையிலும் தன் திறமையும் உழைப்பும் மட்டுமே பெரிதாக எண்ணுபவனுடைய கொட்டேசன் காகிதங்கள் இன்று அங்கீகரிக்கப்பட்டிருந்தால் இந்த ப்ராஜெக்ட் நிச்சயம் ஆதிக்குத்தான் கிடைத்திருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஏன் இதுவரை எத்தனையோ ப்ராஜக்டுகளை திறம்பட அவன் கைப்பற்றி இருப்பதும் உண்மையே…
அவனைப் போலவே அந்த சர்வா நியாயமான முறையில் மோதி அந்த பிராஜெக்டை கை பற்றியிருந்தால் அது அவனை இத்துணை ரௌத்திரம் கொள்ள வைத்திருக்காதோ என்னவோ, பணம் பதவி என்கிற குறுக்கு வழிகளில் இன்று தனக்கு ஏற்பட்ட தலை இறக்கத்தை நினைத்து, “டேமிட் என் கூட நேரா மோத துப்பில்ல, இதுல காத்து வீசாதுன்னு டைலாக் அடிக்கிறான், அவன சும்மா விட்டு வந்திருக்கக் கூடாது, இந்த டாட் தான் டாட் தான் என்ன தடுத்துட்டாங்க, சிட்…” என்று ஏதேதோ பேசியவாறு தன் பனைமரக் கால்களையும் அவ்வப்பொழுது நிலத்தில் உதைத்தபடி அந்த அறையை அளந்து கொண்டிருக்க, அந்த நேரம் அவன் அறைக் கதவு மெல்ல தட்டப்பட்டது.
கதவு தட்டப்பட்டவும் அவனோ, “எஸ் கமின்” என்று மட்டும் சொல்ல உள் நுழைந்த ராஹித்தியா, அங்கே அவன் இருக்கும் மனநிலை எதையும் அறியாமல் தயங்கியவாறே, “சார் எனக்கு ஹாப் டே பெர்மிசன் வேணும் சார்” என்றாள்.
பெண்ணவளின் கூற்றில் அவளை நிமிர்ந்து பார்த்தவனுக்கு அவள் காலையில் தன்னிடம் வாயாடிய நினைவும், சற்று முன்னர் அவன் அலுவகத்தில் நுழையும் பொழுது அவன் வருகையைக் கூட உணராமல் அருகில் இருந்த பெண்ணிடம் அவள் பேசிச் சிரித்துக் கொண்டிருந்ததும் ஞாபகம் வர, அவனோ, “மேடம் காலையிலிருந்து அப்டி என்ன வெட்டி முறைச்சிட்டீங்கனு இப்போ பெர்மிசன் கேக்கறீங்க” என்று நக்கலாகக் கேட்டவன்…
ராஹி ஏதோ சொல்ல வருவதற்குள் “அதெல்லாம் பெர்மிஸ்ஸன்லா கொடுக்க முடியாது ஒழுங்கா போய் வேலையப் பாருடி” என்றான் யாரோ மூன்றாம் தர பெண்ணிடம் பேசுவது போன்ற பாவனையில்.
காலையில் ஆதி சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் அவளுக்கு அதிகமான வயிற்று வலி ஏற்பட்டிருக்க அவளோ அவன் வரவும் சொல்லிவிட்டு செல்லலாம் என்று காத்திருக்க…. அவனோ, “எதற்கு பெர்மிஸ்ஸன்” என்று காரணம் கூடக் கேளாது லீவு கொடுக்க முடியாது என்று சொல்லவும் அவளின் விழிகள் தன்னையும் அறியாமல் முணுக்கென்று நீரால் நிறைய அவனைப் பார்த்தவள், “இல்ல சார்” என்று மீண்டும் தன்னிலை விளக்க முயன்றாள்.
எப்பொழுதும் சரிக்குச் சரியாக வாயாடுவது போல் இப்பொழுதும் அவள் தன் பேச்சை அலட்சியப்படுத்துவதாக எண்ணியவன் பொறுமையின் எல்லையைக் கடந்தவனாய், “ஹேய் ஸ்டுப்பிட் உனக்கு ஒரு தடவ சொன்னாப் புரியாதா, போய் ஒழுங்கா வேலையப் பாருடி, போறதுக்கு முன்ன இந்தப் பேப்பர்சயும் எடுத்துட்டுப் போயி மார்னிங் கொடுத்ததோட சேத்து எல்லாத்தையும் கரெக்ட்டா டைப் பண்ணி எடுத்துட்டு வா” என்று அடித் தொண்டையில் சீற, அதற்கு மேல் அங்கு நிற்க முடியாதவளும் தன் இருக்கைக்கு ஓடி வந்து அமர்ந்து கொண்டாள்.
ஆதியின் முகமும் குரலுமே அவன் கோபத்தின் அளவை பறைசாற்ற இதற்கு மேலும் அவன் முன்னால் நின்று எதையும் கேட்க தைரியம் அற்ற பெண்ணும் பல்லைக் கடித்து தன் வயிற்று வலியை அடக்கியவள் ஒரு கையால் தன் வயிரைப் பிடித்துக்கொண்டே மறு கையால் அவன் சொன்ன வேலையை செய்யத் தொடங்க, அந்தோ பரிதாபம் நேரம் தான் ஓடியதே தவிர அந்த வேலை முடியும் அறிகுறியே இல்லை.
சாதாரண நாட்களிலே மிகவும் பொறுமையாகத்தான் வேலை செய்யும் ராஹிக்கு வலியோடு ஈடுப்பாடில்லாமல் தொடங்கிய வேலை முடிவில்லாது நீண்டு கொண்டேயிருக்க ஒரு கட்டத்தில் சோர்ந்தவளோ அந்த மேஜை மீதிலே தலை சாய்த்துப் படுத்தே விட்டாள்.
ஆதியின் கோபத்தில் சிக்கிக் கொள்ளாதிருக்கும் பொருட்டு சிவாவும் தன்னுடையை மடிக் கணினியில் முகம் புதைத்திருந்தவனுக்கு ராஹியின் நிலை தெரியாமல் தான் போக தற்செயலாக வெளியே பார்வையை பதித்த ஆதியோ ராஹி படுதிருப்பதைப் பார்க்கவும் அவனது ஆத்திரம் எவரெஸ்ட் சிகரம் போல் உயர்ந்தது.
கொடுத்த வேலையைச் செய்யாமல் ராஹி தலை கவிழ்ந்து படுத்திருப்பதைப் பார்த்தவன், “டேமிட்” என்று திட்டியவண்ணம் இன்டெர்காமை வேகமாக அழுத்த அதுவோ ராஹியின் செவிக்கருகில் உச்சஸ்தாதியில் கத்தியது.
இன்டர்காமின் ஒலியில் தூக்கி வாரிப் போட்டு எழுந்தவள் அதை செவியில் வைக்க அவனோ, “கம் இன்சைடு” என்று மட்டும் சொல்ல அவளும் டைப் செய்த காகிதங்களோடு அவன் முன்னால் நின்றாள்.
ஏற்கனவே ப்ராஜெக்ட் கிடைக்காத கோபத்தில் இருந்தவன் அவள் நுழைந்தது தான் தாமதம் போல், “ஏண்டி இது ஆபீஸுன்னு நினைச்சியா இல்ல உங்க வீடுன்னு நினைச்சியா, பேப்பர்ஸ் டைப் பண்ணிட்டு வான்னு சொன்னா கீ போர்ட் மேலையே படுத்து தூங்குற, இப்டி தூங்குறதுக்குதான் வில்லேஜ்லயிருந்து கிளம்பி வந்தியா?” என்று அவன் பாட்டில் பொரிந்து தள்ள…
அவளோ, “இல்லை சார் நீங்க சொன்ன வேலைய முடிச்சிட்டேன், ஆனா கொஞ்சம் டையர்டா இருந்துச்சு அதான்…” என்று நிறுத்தியவளுக்கு வயிறு வலியால் குரல் கூட சோர்ந்து போய் தான் வெளி வந்தது.
ஆத்விக் போல அன்னையின் அரவணைப்பில் வளராமல் சிறு பிள்ளையிலிருந்தே அமெரிக்க வாசத்தில் மூழ்கியிருந்தவன் பெண்களை அறியாதவன் அல்ல தான். தாகம் தீர்க்கும் மேகமாய் இரவு நேர மின்மினிகளாய் அவனைச் சுற்றி வந்த பெண்களின் புற அழகு தவிர்த்து பெண்ணினத்தின் குண நலன்களையோ அவர்களின் உடல் ரீதியான உபாதைகளும், அவற்றால் அவர்கள் படும் அவஸ்தைகளையோ எதையும் உணர்ந்திராதவன்…
ராஹியின் முகமும் குரலும் அவளின் சங்கடத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியும் கூட அதை கண்டு கொள்ளாமல் அவளைப் பார்த்து கிண்டலாய்ச் சிரித்தவன்…
“ஆமா… மேடம் இமயமலையே பேத்து எடுத்து வேற இடத்தில வச்சிருக்கீங்கல்ல உங்களுக்கு டையர்டா தான் இருக்கும், நாலு பேப்பர் டைப் பண்றதுக்குள்ள என்ன நாலு பக்கம் பேசவக்கிற நீ, என்ன டார்ச்சர் பண்றதுக்குன்னே உங்க யுவிப்பா உன்ன பெத்து வளத்து இங்க அனுப்பிருக்காராடி” என்று மேலும் மேலும் கடுகாய் பொரிந்தவனின் பேச்சில் பெண்ணவளின் சினமும் கூட, இத்துவிடுவது போல் வலியெடுக்கும் கால்கள் வேறு நிற்க முடியாமல் அவளைத் தள்ளாட வைக்க, அவனை நோக்கி இரண்டெட்டு வைத்தவள், “யுவர் கிராஸ் த லிமிட் ஆதி, நீங்க மறுபடி மறுபடி என்ன டீ சொல்றீங்க தொட்டதுக்கெல்லாம் என்னோட யுவிப்பாவையும் இழுக்கறீங்க இது ரெண்டுமே சரியில்லை” என்று எச்சரிக்கையும் எரிச்சலுமாக மொழிந்தாள் பெண்.
ராஹியின் கூற்றில் அவனும் எரிச்சல் மேவ அவளை நெருங்கியவன், “என்னடி என்கிட்ட வேலை பாத்துகிட்டு எனக்கே ஆடர் போடுறியா? நா அப்டிதாண்டி பேசுவேன் கூப்பிடுவேன், ஏன்னா நா உன்னோட பாஸ், நான்தான் காலையிலே சொன்னேன்ல உனக்குலாம் இதுக்கு மேல மரியாதை கொடுக்க முடியாதுன்னு இஷ்டம்னா இரு, இல்லன்னா ரிசைன் பண்ணிட்டு போடி…” என்று சரமாரியாகப் பேசியவன் தொடர்ந்து…
“என்ன தெரிஞ்சு வச்சிருக்கியோ இல்லியோ சரிக்குச் சரியா ஆர்க்யூ பண்ண மட்டும் நல்லா கத்து வச்சிருக்க, காலையிலயும் இப்படித்தான் என்ன டென்ஷன் பண்ண அதனால தான் இன்னிக்கு எல்லாம் தப்பு தப்பா நடக்குது, உன்னாலதாண்டி அந்த ப்ராஜக்ட் கூட எனக்கு கிடைக்கல” என்று நில்லாமல் அந்த அறையை மேலும் அளந்த வண்ணம் சொன்னவனுக்கே தன் பேச்சில் எந்த நியாயமும் இல்லை என்று புரிந்திருந்தும் அவளை தன் கோபத்திற்கும் ஆற்றாமைக்கும் இரையாக்க முனைந்தவனது அநியாயப் பேச்சில் அவளும் அவனை தீ விழி விழித்தவள்,
“இது என்ன உளறல் ஆதி சார் உங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கலைன்னா நீங்க எதும் தப்பு பண்ணிருப்பீங்க, அது என்ன தப்புன்னு பஸ்ட் பாருங்க அத விட்டு என் மேல அபாண்டமா பழி சொல்லாதீங்க” என்றாள் மூக்கு நுனி சிவக்க.
அதுவரை சிறிது தயக்கத்தோடே அவளை குற்றம் சாட்டியவனும் அவள் வார்த்தையில் கோபத்தின் விளிம்பை தாண்டியவனாய் அவளை மேலும் நெருங்கி, அவள் முகத்தில் தன் மூச்சுக் காற்று மோத நின்றவன், “என்னடி சொன்ன நா தப்பு பண்ணிருப்பனா? என்னையும் உன்னப் போல முட்டாள்னு நினச்சியா, பிஸ்னஸ் வோர்ல்டுக்குள்ள நுழஞ்ச இந்த நாலு வருசத்துல நா தொட்ட எந்த வேலையும் என் கைய விட்டுப் போனதில்ல தெரிஞ்சிக்கோ” என்றவன் பதிலில் அளவுக்கதிகமான ஆணவத்தையே உணர்ந்தவளின் அவன் மீதான அதிருப்தியும் இயலாமையும், வார்த்தைகளாய் உருவம் பெற, அவளோ அவனை விட்டு விலகி பின்னால் சென்றவாறே,
“நீங்க அவ்ளோ பெரிய இவுருன்னா அப்போ ஏன் இன்னிக்கு உங்களுக்கு அந்த ப்ராஜெக்ட் கிடைக்கலியாம்.?” என்றாள் சிறிதே நக்கல் தொனிக்கும் குரலில்.
கட்டுக்கடங்கா கோபத்திலும் ஏமாற்றத்திலும் இருந்தவனை ராஹியின் அந்தக் குரல் ஏகத்துக்கும் அசைத்துப் பார்க்க அவனோ தன்னை விட்டு விலகியவளை மேலும் நெருங்கி அவளின் விரிந்த விழிகளை தன் நீல விழிகளால் உறுத்து நோக்கியவாறே, “ஹேய் ஸ்கௌண்டர்ஸ் என்கிட்டயே இப்டி பேச உனக்கு எவ்ளோ திமிர்டி… இன்னிக்கு ப்ராஜெக்ட் கிடைக்காம போனதுக்கு நீ தாண்டி காரணம் நீதான் காரணம். உன் மூஞ்சில முழிச்சுட்டு போனதால தான் என்னிக்கும் இல்லாம இன்னிக்கு நா லூசர் ஆகி நிக்குறேன், எனக்குன்னு வந்து சேந்துருக்க பாரு ஆளும் மூஞ்சியும் அதுல ஒரு நோஸ் ஸ்டட்டும் கன்ட்ரி ப்ரூட், மொதோ இங்கிருந்து போடி, என் முன்னாடி நிக்காத…” என்று எதற்கு அவளைத் திட்டுகிறோம் என்று உணராமலே யார் மேலோ இருக்கும் கோபத்தில், “கெட் லாஸ்ட் ஐ சே…” என்று அந்த அறையே அதிரும் வண்ணம் கத்தினான் ஆதித்யவர்மா.
இத்துணை நேரமும் சிறு வயது வழக்கமாய் அவனிடம் இயல்பாக வார்த்தை போர் புரிந்தவளுக்கு தான் சிறிது கூட சம்மந்தபடாத ஒரு விசயத்தில் தன்னை குற்றவாளியாக்கிய ஆணவனின் உதாசீன வார்த்தைகள் அவள் இளம் இதயத்தை யாரோ சம்பட்டியால் அடித்தது போல் வலியைக் கொடுத்தது. இந்த நிமிடம் அவளின் வயிற்று வலி கூட இருக்கும் இடம் தெரியாமல் விரண்டோடிப் போயிருக்க, பூஞ்சோலைக்கே இளவரசியாய் யுவாவின் செல்லப் புதல்வியாய் வளைய வந்தவளின் முகமோ அவன் கூறிய வார்த்தை கணம் தாங்காமல் வேதனையில் சிவந்து தான் போனது.
இருந்தும் “நம் மேல் தவறில்லை என்றால் நாம் யாரிடமும் தலை குனியத் தேவையில்லை” என்ற தந்தையின் வார்த்தைகளை எண்ணி நிமிர்ந்து நின்றவள்,
“கெட் லாஸ்ட்” என்று சீறியவனை நோக்கி, “என்னோட முகத்த பாத்துட்டு போனதால தான் உங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கலன்னு இப்டி சில்லியா பேசுறீங்களே… ஒருத்தரோட வெற்றி தோல்விய ஒரு முகம் மாத்த முடியும்னா நம்ம நாடு இன்னிக்கு எங்கையோ போயிருக்காது. ஒருத்தரோட முகத்தயும் அவங்களோட பர்ஸ்னாலிட்டியும் கிண்டல் பண்ண யாருக்கும் உரிமையில்ல. இந்த பேஸிக் மேனர்ஸ் கூட தெரியாத நீங்கல்லாம் அமெரிக்காவுல படிச்சிட்டு வந்தேன்னு வெளிய சொல்லீறாதீங்க” என்று தொடர்ந்தவள்…
“எனக்கும் ஒண்ணும் உங்க முன்னாடி நிக்கணும் உங்க கிட்ட இப்டிலாம் அபாண்டமா பேச்சு வாங்கணும்னு எந்த ஆசையுமில்ல, நா சாஹிக்காகத்தான் பல்லக்கடிச்சு இங்க இருக்கேன். அதுவுமில்லாம நீங்களும் என்ன ஒன் இயர்க்கு பி ஏ ன்னு சொல்லி அக்ரிமெண்ட் போட்டிருக்கீங்க. உங்களுக்கு பி ஏ க்கு மீனிங் தெரியும் தானே?” என்று அன்று அவன் கேட்ட தோரணையிலே கேட்டவள்….
“பிடிக்குதோ பிடிக்கலையோ தினமும் ஒருத்தர் முகத்த ஒருத்தர் பாத்துதான் ஆகணும் வேற வழியில்ல. நீங்க வரச் சொன்னா வர்றதுக்கும் போக சொன்னா போறதுக்கும் நா ஒண்ணும் உங்க வீட்டு நாய் குட்டி இல்ல, ஜஸ்ட் உங்க கிட்ட வேலை தான் பாக்குறேன், அத நல்லா மைண்ட்ல வச்சிக்கோங்க” என்று அவளும் இடைவிடாது கொட்டித் தீர்த்தவளின் விழிகளை உவரி நீர் மறைத்தும் கண் சிமிட்டி அதை உள்ளிழுத்துக் கொண்டவள்
தன்னை அவமதித்தவன் முன்னால் தன் கண்ணீர் துளிகள் சிந்தக் கூடாது என்று எண்ணினாளோ…
சட்டென்று அவனை விட்டு பார்வையை திருப்பி, “நா ஆப் டே லீவ் எடுத்துக்குறேன், மண்டே எப்பவும் போல வேலைக்கு வந்துடுவேன்” என்று தன் இயல்பான துடுக்கோடு கூறியவள் அவன் பதிலைக் கூட எதிர்பாராது சற்று முன்னர் நிற்க முடியாது துவண்ட கால்களை எட்டிப் போட்டு இந்த நிமிடம் அவ்விடம் விட்டுச் சென்றால் போதும் என்பது போல் அத்துணை விரைவாய் அவன் அறையை விட்டு வெளியேறியவள், “ராஹி எங்க போற?” என்று தன் பின்னால் கேட்ட சிவாவின் குரலைக் கூட கவனியாமல் தன் ஹாஸ்டலுக்கே விரைந்து சென்று விட்டாள்.