ஓட்டமும் நடையுமாக சென்றவளின் முதுகைப் பார்த்து, “என்னாச்சு இந்தப் பொண்ணுக்கு.? இப்டி ஓடுது” என்று தோள்களை குலுக்கிய வண்ணம் தன் எம் டி யின் அறைக்குள் நுழைந்த சிவா அங்கு இன்னும் சிறைபட்ட சிறுத்தையாய் சிவந்த விழிகளோடு உலவிக் கொண்டிருந்த ஆதியை நெருங்கி மெல்ல “பாஸ்” என்று அழைக்க, அவனது கால்களோ ஒரு நொடி நின்று மீண்டும் நடையைத் தொடர்ந்தது.
ஆதியிடம் ஏற்பட்ட அந்த சிறிய மாற்றமே தன் பேச்சை அவன் கவனிக்கிறான் என்பதை உணர்த்த சிவாவோ, “சார் இன்னிக்கு ஈவ்னிங் பிளைட்ல வர்ற ஒரு கிளைண்ட பிக்கப் பண்ணனும் சார்” என்றான் தயங்கித் தயங்கியே.
சிவா கூறியப் பின்னர் தான் தங்கள் குழுமத்தில் கொடுக்கல் வாங்கல் வைத்திருக்கும் ஒரு முக்கிய அயல்நாட்டினனை இன்று தான் சென்று வரவேற்க வேண்டும் என்பதே அவனுக்கு ஞாபகம் வர, கூடவே இப்பொழுது உள்ள மனநிலையில் தன்னால் அங்கு செல்ல முடியாது என்றும் சிவாவை மட்டும் அனுப்பினாலும் சரி வராது என்றும் தோன்ற அவனோ என்ன செய்வது என்று சிந்தனையில் ஆழ்ந்தான்.
இரண்டு நிமிட நேரம் தொடையில் தட்டி யோசித்தவன் அடுத்த நொடி தன் தம்பி ஆத்விக்கிற்கு அழைத்தான்.
ஆதி அழைப்பதற்கு சற்று முன்னர் தன் பிரத்தியேக மடிக் கணினியில் அன்றைய பணியை முடித்து எழுந்த ஆத்விக்கோ “ஸ்ஸப்பா பொறுப்பா இருக்கம்னு காட்டிக்க ஒரு மனுஷன் எவ்ளோ கஷ்டப்பட வேண்டியிருக்கு, எப்பப்பாரு பாக்டரி, ஆபிஸ், எக்ஸட்ரா எக்ஸட்ரா… ச்சை பேசாம வளராம சின்னப்புள்ளயாவே இருந்திருந்தா ஜாலியா இருந்திருக்கலாம், ரொம்ப நாளைக்கப்றம் இன்னிக்குதான் வேல கொஞ்சம் சீக்கிரம் முடிஞ்சது இன்னிக்காச்சும் ப்ரண்ட்ஸ பாக்க போணும்டா ஆது” என்று தனக்குத் தானே பேசியவாறு தங்கள் அலுவலகத்தில் இருந்து தன் மகிழுந்தை கிளப்பியவனை கடந்த பல தினங்களாகவே அவன் அண்ணன் வேலை என்கிற பெயரில் கொஞ்சம் அதிகமாகவே சோதித்திருந்தான்.
ஆத்விக் சும்மா இருந்தால் ராஹியுடன் சேர்ந்து அரட்டை அடிப்பான் என்று எண்ணினானோ அல்லது, தம்பியை மெருக்கேற்ற நினைத்தானோ அவனே அறிவான் ஆனால் “புது ப்ராஜக்ட் நீயே எல்லாம் பாரு” என்று சொல்லி அவனை பொறுப்புகளால் கட்டி வைத்திருந்தான் ஆதித்யவர்மா.
அத்துணை வேலைப்பளுவின் மத்தியிலும் யுவாவின் புதல்விகள் மேல் அதிக அக்கறை கொண்ட ஆத்விக் அவ்வப்பொழுது சாஹியிடம் கைபேசியில் உரையாடுவதையும் மதிய இடைவேளையிலோ, அலுவலகம் முடியும் தருவாயிலோ ராஹியை சந்திப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டிருக்க அது போன்ற சந்தர்ப்பங்களில் அவர்களை ஒன்றாகக் காண நேர்ந்தாலும் ‘என் அலுவல்கள் பாதிக்காத வகையில் உங்கள் நட்பில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை’ என்பது போல் ஒரு அலட்சிய பாவனையில் அவர்களைக் கடந்து விடுவான் ஆதி.
வெகு நாளைக்குப் பிறகு நண்பர்களை சந்திக்கப் போகும் உற்சாகத்தில் “என்றென்றும் புன்னகை முடிவிலா புன்னகை” என்ற பாடலை வண்டியில் ஒலிக்க விட்டு கிளம்பிய ஆத்விக்கோ வழக்கமாக நண்பர்கள் கூடும் இடம் நோக்கி வண்டியைச் செலுத்த, மகிழுந்து ஓடத்தொடங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் பேருந்து நிறுத்தத்தில் நின்ற ஒரு பெண்ணைப் பார்த்து அவன் கால்கள் அவனையும் அறியாது மகிழுந்தின் நிறுத்து விசையை பலமாக மிதித்தது.
காரில் இருந்தபடியே கார் கண்ணாடியை இறக்கி அவளைப் பார்த்தவன், அவள் பேருந்திற்காக சாலையிலே பார்வை பதித்து காத்து நிற்பதை அறிந்து வேகமாக தன் காரை விட்டு இறங்கி அவள் அருகில் சென்றவன், “ஹேய் சாஹி, என்ன இங்க நிக்குற.?” என்றான்.
திடீரென்று தன்னருகில் கேட்ட ஆண் குரலில் திட்டுக்கிட்டுத் திரும்பியவளின் உதடுகள், “ஆது மாமா” என்று விளிக்க…
அவனோ மீண்டும், “ஹேய் சாஹி, வேல முடிஞ்சு ஹாஸ்டல் போக தான வெயிட் பண்ற?” என்று கேட்டு, அவள் ‘ஆமாம்’ என்பது போல் தலையை மட்டும் அசைக்கவும் “நானும் அந்த பக்கம் தான் போறேன் வா உன்னை ட்ராப் பண்றேன்” என்றான்.
அவனோ, “ப்ச்” என்று அவளை முறைத்தவன், “சிஸ்டர்ஸ் ரெண்டு பேரும் டெய்லி பிக்கப்கு டாடி கார் அனுப்புறேன்னு சொன்னதையும் வேணாம் சொல்லிட்டீங்க, சரி ஸ்கூட்டி வாங்கலாம்ன்னு கேட்டா மொதோ ரூட் பழகிக்கறோம்னு சொல்றீங்க. இப்போ ஜஸ்ட் போற வழில இறக்கி விடப்போறேன் இதுல எனக்கு என்ன சிரமம் சாஹி, என்கூட வர உனக்கு என்ன தயக்கம், வா” என்று மீண்டும் அழைக்க.
அவளும் வேறு வழியில்லாமல் “சரி” என்று அவன் காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
அவள் காரின் உள்ளே அமர்ந்ததும் “சீட் பெல்ட் போட்டுக்கோ சாஹி” என்றவன் காரை மிதமான வேகத்தில் செலுத்தியவாறே…
“அப்றம் சாஹி உன்னோட வேலைலாம் உனக்கு பிடிச்சிருக்கா, உனக்கு ஜாப் டைம்லாம் செட் ஆகிருச்சா” என்றவன் வாய் மூடாமல் பேசிக் கொண்டே வர அவளும் அவன் வினாக்களுக்கு விடையளித்தபடி இருந்தவளும் அவ்வப்பொழுது முகத்தைச் சுருக்கி சுருக்கி இயல்பானாள்.
ஆதியைப் போல் அல்லாது பெண்ணவளின் முகம் பார்த்தே அவளுக்கு ஏதோ பிரச்சனை என்று உணர்ந்து கொண்டவன், காரை செலுத்திய வண்ணமே, “என்னாச்சு சாஹி உடம்புக்கு எதும் சரியில்லையா?” என்று வினவ…
அவளும், “ஆமா மாமா கொஞ்சம் ஹெட் எய்டா இருக்கு இந்த பாட்டோடு வால்யூம் கொஞ்சம் கம்மி பண்ணுறீங்களா” என்று தங்கியவாறே சொல்ல…
அதற்கு அவனோ “ஐம் சாரி சாஹி” என்று உடனே அங்கு அலறிக் கொண்டிருந்த வானொலியை அணைத்தவன் “அடிக்கடி உனக்குத் தலைவலி வருமா சாஹி டாக்டர்ட வேணா போலாமா.?” என்று மயிலிறகின் இதத்தோடு வினவினான்.
ஆத்விக்கின் வார்த்தையில் அவனை ஏறிட்டுப் பார்த்தவளும், “இல்ல இது சும்மா எப்பவாவது ஸ்ரெஸ்ஸா இருந்தா வர்ற தலைவலிதான், டாக்டர்லாம் வேணாம் ரூம்கு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாப் போயிரும் மாமா” என்க…
அவனோ அவள் பேச்சில் சமாதானம் அடையாதவன், “இங்க பக்கத்துல ஒரு ஹோட்டல் இருக்கு அங்க ஜிஞ்சர் டீ குடிச்சா உன்னோட ஹெட் எய்ட் பறந்து பூஞ்சோலை வில்லேஜ்க்கே ஓடிரும் சாஹி” என்று அவளை பதில் கூட சொல்ல விடாது அந்த உணவு விடுதியின் முன் தன் மகிழுந்தை நிறுத்தியவன் அவள் புறம் வந்து கார் கதவையும் திறந்து விட்டு “வா சாஹி” என்றான்.
அவளும் தயங்கியவாறே இறங்கி அவனோடு சென்றவள் இதுவே முதன் முறை ஒரு அந்நிய ஆணோடு ஹோட்டல் வரை வந்திருப்பதால் இருக்கையின் நுனியில் நெளிந்தவாறு அமர்ந்திருக்க அதைப் பார்த்து இதழ் பிரித்துச் சிரித்த ஆத்விக்கோ,
“நீ ஐடி ல வேலை பாக்கிறன்னு சொன்னா யாரும் நம்ம மாட்டாங்க சாஹி, ஜஸ்ட் ஒரு டீ குடிக்கத்தான என்னோட வந்துருக்க ரிலாக்ஸ்டா இரு” என்று கூறியவன் காரில் கூறியது போலவே அவளுக்கு இஞ்சி டீயுடன் சேர்த்து ஒரு தலைவலி மாத்திரையும் வரவழைத்து அருந்தச் செய்தான்.
தேநீர் அருந்தி முடிக்கவும் அவள் தலைவலியும் கொஞ்சம் குறைந்திருக்க அவளோ அவனிடம், “டீ குடிக்கவும் நீங்க சொன்ன போலவே தலைவலி நல்லாவே குறைஞ்சிடுச்சு. ரொம்ப தேங்க்ஸ் மாமா” என்று சொல்லி புன்னகைக்க…
அவனும் “இதுக்கெதுக்கு சாஹி தேங்க்ஸ் நானும் கொஞ்சம் ஸ்ட்ரெஸ்ஸா இருந்தேன்னா இங்க தான் வருவேன், நல்ல ரிலீப் கிடைக்கும்” என்றவன் அவளை இலக்குவாக்க வேண்டி அவளுடைய பிடித்தங்கள் பொழுது போக்குகள் பற்றியெல்லாம் கேட்க ஆரம்பிக்க, அவளும் சிறுகச் சிறுக அவனது வசீகரப் பேச்சில் இணைந்து கொள்ள, நேரமும் மெல்ல நகர்ந்தது.
அவனும் ஒரு காபியை தருவித்து உறிஞ்சியபடி அவளிடம், “அப்றம் உன்னோட ஹாபிஸ்லாம் என்ன, உனக்கு புடிச்ச புட் என்ன சிக்கனா மட்டனா, உன்னோட பேவரிட் ஹீரோ யாரு சாஹி.?” என்று பேச்சை வளர்க்க.
அவளும் தன் தயக்கம் தொலைத்து,
“நா படங்கள் அவ்ளவா பாக்குறதில்லை, எனக்கு புக்ஸ் படிக்கிறது தான் ரொம்ப புடிக்கும் மாமா, அப்றம் வெஜ்டரியன் புட் தான் நா எப்பவும் எடுத்துப்பேன்” என்றவள் முடிக்கும் முன்…
“வெஜ் புட் மட்டும் தான் சாப்புடுவியா? சுத்தம் நான்லாம் ஓடுறது தாவுறது நீந்துறது எல்லாத்தையும் வளைச்சு வளைச்சி அடிப்பேன், நம்ம என்ன ஆடு மாடா வெறும் இலை தலைகளை சாப்புடறதுக்கு” என்றவனை விழிகள் உருட்டி முறைத்தவளோ,
“அப்போ என்ன, ஆடு மாடுன்னு சொல்றீங்களா மாமா.?” என்றாள் சிணுங்களாக. அவளுக்கு அவனிடம் இப்பொழுது இயல்பாகப் பேச வந்திருந்தது.
சாஹியின் சிணுங்கள் மொழியில் “ச்ச ச்ச உன்னப் போய் ஆடு மாடுன்னு சொல்ல முடியுமா சாஹி.?” என்று இதழ் விரிந்த புன்னகையோடு விழியின் ரசனை கூடத் தொடர்ந்தவன், “உன்ன அழகான மான்குட்டினு வேணா சொல்லலாம்” என்றவன் பார்வையிலும் பாவனையிலும் எந்த விகல்பமும் இல்லாத போதும்…
ஆடவனின் புன்னகை முகமும், பேசும் விழிகளும் சாஹியின் உள்ளே ஏதோ செய்ய, அவன் வதனத்தில் நிலைத்திருந்த பார்வையை சட்டென்று தழைத்துக் கொண்டவள் “டைம் ஆச்சு மாமா கிளம்பலாமா?” என்று எழுந்த சமயம் ஆத்விக்கின் கைபேசி மெல்ல ஒலியெழுப்பி ஆதியின் அழைப்பைக் காட்டியது.
அந்தபுறம் ஆதியோ, “ஆது இப்போ நீ எங்க இருக்க?” என்றான்.
அவனும், “சாஹியோட ஹோட்டல்ல இருக்கேண்ணா” என்று சொன்ன நேரம் ஆதியின் அலுவலக கைபேசி அலறி கவனம் சிதறிய ஆதி சிவாவிடம் அதை எடுக்கும் படி கண் காட்டிவிட்டு மீண்டும் தம்பியிடம்,
“வாட் ஆது ப்ரண்ட்ஸோடயா.?” என்று வினவ…
அதற்கு அவனும், “நோ அண்ணா யுவா அங்கிள் டாட்டரோட இருக்கேண்ணா” என்று மீண்டும் விளக்கிச் சொன்னவன் “வாட் ஆர் யூ டூயிங்ணா எனிதிங் இம்போட்டண்ட் மேட்டர்?” என்றும் கேட்டான்.
ஆத்விக்கின் பதிலில் ஒரு நொடி முகம் மாறியவனும், “எஸ் ஆது இம்பாட்டென்ட் தான்” என்றவன் தொடர்ந்து அவன் செய்ய வேண்டியதைச் சொல்லி, “பிளைட்டுக்கு இன்னும் டைம் இருக்குன்னு டிலே பண்ணிராத!. எனக்கு பன்சுவாலிட்டி ரொம்ப முக்கியம், அவர ரிசீவ் பண்ணி எப்பவும் நம்ம கிளையிண்ட்ஸ தங்க வக்கிர ரிசார்ட்ல தங்க வச்சுட்டு எனக்கு கால் பண்ணு” என்று சிறிது கடுமையாகவே கூறி கைபேசியை அணைத்துவிட்டு அப்படியே இருக்கையின் பின்னால் சாய்ந்தவன்…
“என் தம்பியோட ஹோட்டல் போறதுக்குதான் கொஞ்சம் முன்ன என்கிட்ட பெர்மிஸ்ஸின் கேட்டியாடி நீ. கொடுக்கலங்கவும் ஏதேதோ பேசி, ஆர்க்யூ பண்ணி, சீன் போட்டு என்னையும் டென்ஷன் பண்ணிட்டு போய் இப்போ ஜாலியா ஊர் சுத்திட்டிருக்க, இர்ரெஸ்பான்சிபில் இடியட்” என்று ஆத்விக்கோடு இருப்பவள் ராஹித்யாதான் என்று அவனாகவே எண்ணிக் கொண்டு உள்ளூற அவளைக் காய்ச்சி எடுத்தான் ஆதி.
முதல் கோணல் முற்றிலும் கோணல் போல் ஒவ்வொரு முறையும் தவறே செய்யாமல் அவனால் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணவளும் அங்கே இருளில் மூழ்கியிருந்த தன்னுடைய ஹாஸ்டல் அறையின் படுக்கையில் உடல் நோவோடு, ஆதியின் பேச்சால் எழுந்த துக்கத்தையும் புதைக்கப் போராடிக் கொண்டிருந்தாள் ராஹித்தியா.