“வந்துவிட்டேன்… இங்கேயே…” என்று பவித்ரா சொல்வது அவனுக்கு நிஜமாகவே விளங்கவில்லை தான்.
ஆனால் சொப்னாவிற்கு தான் பேசியது வெற்றியடைந்துவிட்டது என்று நிம்மதியாய் இருந்தது.
நேத்ரன் புரியாமல் பவித்ராவைப் பார்க்க “அது அண்ணா.. சித்தப்பாக்கு சரியாகுற வரைக்கும் நான் இங்கதான் இருக்க போறேன்…” என,
“என்ன பவித்ரா சொல்ற?” என்றான் லேசாய் அதிர்ந்து.
“ஆமாண்ணா…”
“அப்… அப்போ.. பலராமன்.. அவர் அம்மா எல்லாம்..”
“அது.. அது.. அவங்க அப்பப்போ வருவாங்க.. வந்து பார்த்துட்டு போவாங்க.. இங்கயே வந்து இருங்கன்னு சொன்னேன்.. அது முடியாதுன்னு சொல்லிட்டாங்க.. நானும் அப்பப்போ போய் பார்த்துப்பேன்.. ஒன்னும் பிரச்னை எல்லாம் இல்லை அண்ணா..” என,
“பவித்ரா…” என்றான் தீர்கமாய்.
மனோகர் உள்ளே உறங்கிக்கொண்டு இருந்தார். அவரோடு அவரைக் கவனித்துக்கொள்ள நர்ஸ் இருக்க,
சொப்னா “ஷ்… மெல்ல பேசுங்க…” என்றவன்,
“நேத்ரன், பவி சொல்றது சரிதானே..என்ன இருந்தாலும் அப்பாவை நர்ஸ் மட்டுமே நம்பி இங்க விட முடியுமா.. இல்லை நம்மதான் இப்படியே இங்கேயே இருக்க முடியுமா? அதான் பவி வந்திருக்கா.. என்ன இருந்தாலும் அவளுக்கும் பொறுப்பு இருக்கு தானே..” என,
“என்ன பேசுற சொப்னா.. அதுக்காக இவ இங்கயும், இவ புருஷன் அங்கயும் இருந்தா இவ வாழ்க்கை என்னாகுறது.. நிச்சயம் இதுக்கு அப்பா சரின்னு சொல்லவே மாட்டார். தெரிஞ்சா இன்னும் ரொம்ப மனசு சங்கடப் படுவார்.. இங்க பார், இது பவித்ராக்கு அவர் அமைச்சுக் கொடுத்த வாழ்க்கை.. அது அவராலே கெடுறது எப்பவும் அவர் விரும்பவும் மாட்டார்..” என்றவன்
பவித்ராவிடம் “நீ வந்து பாரு பவித்ரா வேணாம் சொல்லலை.. நான் அப்பாவோடவே இருக்கிறது போல ஒருத்தரை அரேஞ் பண்ணிருக்கேன்.. ஒருவகையில நமக்கு ரிலேசன் தான்.. நீ தினமும் வந்துட்டு போனா போதும்.. நானே வந்து பலராமன் கிட்ட பேசுறேன்..” என்றான்.
பவித்ராவிற்கு திடுக்கென்று ஆனது.
அதைவிட சொப்னாவிற்கு..
“என்ன நேத்ரன் சொல்ற நீ?” என்று அதிர்ந்து தான் கேட்டாள்.
“என்ன சொல்ற அப்படின்னா, உனக்கு புரியலையா? அப்பா ஓரளவு குணமாகவும் நான், நம்மளோட கூட்டிட்டு போகலாம்னு இருக்கேன் சொப்னா.. அதுக்காக பவித்ராவோட வாழ்கையை கெடுக்கிறது எல்லாம் தப்பு…” என்று பேச,
பவித்ராவோ “அண்ணா… நானே சொல்றேன் தானே..எந்த ஒரு பிரச்னையும் இல்லை.. நான் கேட்கவும், எங்க அத்தை தான் அனுப்பினாங்க.. அவரும் சரின்னு தான் சொல்லிருக்கார்.. நாங்க என்ன பிரிஞ்சா வாழப் போறோம்.. இல்லையே..” என்று பூசி மொழுக,
“எனக்கென்னவோ சரியா படலை…” என்றான் நேத்ரன்..
“ஒன்னும் இல்லை அண்ணா.. நீங்க போட்டு குழப்பிக்க வேண்டாம். என்னதான் ஆள் போட்டாலும், வீட்டு ஆளுங்க இருந்து கவனிக்கிற மாதிரி வருமா சொல்லுங்க? அப்படியே ஆள் போட்டு பார்த்தாலும், நம்மனால நிம்மதியா தான் இருக்க முடியுமா? சித்தப்பா மனசு என்ன பாடுபடும்.. இத்தனை பேர் இருந்தும் கூட இப்படி யாரோ பொறுப்புல விட்டுட்டாங்கன்னு நினைக்க மாட்டாங்களா?” என, நேத்ரன் அமைதியானான்.
பவித்ரா சொல்வது எல்லாம் சரிதான்.
இருந்தும் மனம் முரண்டியது.
சொப்னாவோ “நேத்ரன் பவித்ரா சொல்றது தான் சரி.. நீயும் நானும் அடிக்கடி வர முடியாது. அப்பா ஓரளவு சரியாகவும் வேணும்னா, நம்ம கூட்டிட்டு போயிடலாம்.. அதுவரைக்கும் பவித்ரா இருந்து பார்த்துக்கட்டும்…” என, நேத்ரன் வேண்டா வெறுப்பாய் தலையை ஆட்டினான்.
“அவரும் அடிக்கடி இங்க வருவார் சித்தப்பா.. நானும் அப்பப்போ அங்க போயிட்டு வருவேன்.. நீங்க கவலை எல்லாம் படவேணாம்..” என, அவரால் இந்த நிலையில் என்ன செய்ய முடியும்.
மகனையும் , மகளையும் பார்த்தார்.
அவர்கள் பொதுவாய் பேச, அவருக்குமே மனதினில் இப்போது ஒருவித பயம் வந்திருந்தது. யாரும் இல்லாமல் மாண்டு போவோமோ என்று. இப்படியாகும் என்று எதிர்பார்க்கவே இல்லை.
தனிமை என்பதையும் தாண்டி, உடல் முடியாமல் போகும் என்றெல்லாம் நினைக்கவே இல்லை.
சரி மகளாவது இரண்டு மாதங்களேனும் இருப்பாள் என்று பார்த்தார். ஆனால் அவள்தான் அனைத்தையும் பவித்ராவின் தலையில் கட்டிவிட்டாளே.
இப்படி ஆளாளுக்கு ஒவ்வொரு நிலையிலிருக்க, பவித்ராவிற்கு மனோகர் எதுவும் மறுப்பு சொல்லாமல் இருந்ததே பெரிதாய் போனது. பலராமனின் கோபத்தை எப்படியும் சரி செய்துவிடலாம் என்று ஒரு குருட்டு நம்பிக்கையில் தான் கிளம்பி வந்திருந்தாள்.
ஆனால் அது அத்தனை சுலபம் இல்லை என்பது இப்போது புரியாது.
இன்னும் நான்கு தினங்களில் நேத்ரனும், சொப்னாவும் கிளம்பவுள்ளதால் அதற்கான வேலைகளில் சொப்னா இருக்க, நேத்ரன், மற்ற வேலைகளில் இருந்தான்.
பவித்ராவிற்கு வீட்டினை ஒதுங்க செய்யவும், மனோகருக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்கவும் தான் சரியாய் இருந்தது.
உள்ளே அவளுக்கும் உறுத்தல் தான். ஆனால் வெளிக்காட்டவே இல்லை.
ஒருமுறையாவது பலராமன் வருவான் என்று பார்த்தாள். வரவில்லை.
சரி இவர்கள் ஊருக்குச் செல்லட்டும், அவனை நேரில் சென்று பார்த்து பேசுவோம் என்று இருக்க, மறுநாள் கோமதி மட்டுமே வந்து பார்த்துவிட்டு போனார்.
“அவனுக்கு வேலை நிறைய இருக்கு ம்மா…” என்று பொதுவாய் சொல்லிவிட்டார்.
பவித்ராவோ பொத்தாம் பொதுவாய் ஒரு புன்னகை செய்துவைத்தாள். இப்படி ஆரம்பித்த பிரிவு தான். இதோ சரியாய் ஒரு வருடமும், நான்கு மாதங்களும் முடியும் தான் ஒரு முடிவுக்கு வந்தது..
நேத்ரனும், சொப்னாவும் சென்ற பிறகு, ஒருமுறை பவித்ரா அங்கே பலராமன் வீடு சென்றாள் தான். அதுவும் அவன் இருக்கும் நேரம் கணக்கிட்டு சென்றாள் தான்.
கோமதிக்கு மருமகள் வந்தது சின்ன சந்தோசம் கூட. ஆனால் பலராமன் பேச்சே பேசவில்லை.
‘ஏன் வந்தாய்…’ என்பதுபோல் பார்த்து வைத்தான்.
“எப்படி இருக்கீங்க அத்தை..?” என்று கோமதியிடம் கேட்டாள் தான், கணவனை ஒரு பார்வை பார்த்தபடி.
அவனோ பல்லைக் கடித்து அமர்ந்து இருந்தான். உள்ளுக்குள் ஒரு சிறு ஆறுதல் இருக்கவே செய்தது. இருந்தும் கோபம்..
இப்படி விட்டுவிட்டு சென்றுவிட்டாளே என்று.
கணவனும் மனைவியும் தனியே பேசிக்கொள்ளட்டும் என்று கோமதி கிளம்பி வெளியே செல்ல, பவித்ராவோ மெதுவாய், அவனிடம் பேச ஆரம்பிக்கும் போதே
“இங்க பார் பவித்ரா… நீ வந்தது சந்தோசம் தான்.. ஆனா நீ எடுத்திருக்க இந்த முடிவுல எனக்கு உடன்பாடு இல்லை…” என்று நேரடியாய் பேச,
“நான் தான் உங்களை அங்க வாங்கன்னு சொல்றேன் தானே…” என்றாள் தவிப்பாய்.
“அது முடியாது… வேணும்னா உங்க சித்தப்பா கிட்ட பேசு.. அவருக்கு இங்க என்ன வசதி வேணுமோ செஞ்சு குடுக்கலாம்.. நர்ஸ் கூட வரட்டும்.. என்ன செய்யணுமோ செய்யலாம்…” என, அதுதான் சத்தியம் இல்லை தானே..
பதில் சொல்லாமல், அமைதியாய் இருக்க,
“இதை பேசி முடிச்சுட்டு, பதிலோட அடுத்து வர்றதுன்னா வா.. இல்லையா நீ அங்கேயே இருந்துக்கோ..” என, விலுக்கென்று பார்த்தாள் அவனை.
“என்ன பாக்குற நீ… நமக்கு கல்யாணம் ஆகிருச்சு.. சும்மா நீ இங்க வந்து வந்து போறதுக்கும், நான் அங்க வந்து வந்து போறதுக்கும் எல்லாம் சரி வராது.. நமக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு.. அதை நீ முக்கியம்னு நினைச்சா, நான் சொன்னதை செய்.. இல்லையா, உன் இஷ்டம்…” என்றுவிட,
“என்னங்க..?!” என்றாள்.
“என்னோட முடிவு இதுதான் பவித்ரா.. யாரும் யாரையும் கட்டாயம் செய்ய முடியாது இல்லையா.. ஆனா இந்த தொடுக்கோ தொடைச்சுக்கோங்கிற மாதிரியான வாழ்க்கை எல்லாம் எனக்கு ஒத்து வராது.. கஷ்டப்பட்டு முன்னுக்க வந்திருக்கோம்.. எனக்குன்னு சில கொள்கைகள் வாழ்க்கைல இருக்கு.. உன்னை ஆசைப்பட்டுத் தான் கல்யாணம் பண்ணேன்..
பார்த்த முதல் தடவையே அவ்வளோ பிடிச்சது.. காலத்துக்கும் உன்னோட சந்தோசமா வாழணும்னு தான் இப்பவும் நினைக்கிறேன்.. ஆனா இதெல்லாம் உனக்கும் இருக்குதான்னு தான் எனக்குத் தெரியலை.. உனக்குன்னு கடமைகள் இருக்குத்தான்.. ஆனா அது உனக்கு மட்டுமே சொந்தமான கடமை இல்லை.. அதை முதல்ல புரிஞ்சுக்கோ…” என்று நீளமாய் பேசியவன்,
“அவ்வளோதான் இதுக்குமேல உன் இஷ்டம்…” என்று முடித்துவிட்டான்.
பவித்ராவிற்கு என்ன பேசவென்றே தெரியவில்லை..
மனோகர் இல்லம் வந்தவள், நர்சிடம் பேசிவிட்டு அமர்ந்து இருந்தாள். ஒருவித வெறுமையாய் இருந்தது. பலராமன் பக்கமும் நியாயம் உள்ளது என்று அவள் உணராமல் இல்லை.
தன்னால், அவனின் வாழ்வும் சேர்ந்து கெடுகிறதே என்றுதான் வருந்தினாள்.
தங்களது வாழ்வு என்று சேர்த்து எண்ணவில்லை. அவனது வாழ்வு கேடுவதாய் மட்டுமே எண்ணியவள், மேலும் ஒரு வாரம் கழித்து, கோமதிக்கு அழைத்து பேசினாள்.
“அத்தை.. நான் சொல்றேன்னு தப்பா நினைக்க வேணாம். என்னோட சூழ்நிலை எப்போ மாறும்னு எனக்குத் தெரியாது.. வருசக் கணக்குல கூட ஆகலாம்.. என் சித்தப்பா முழுசா சரியாகாம என்னால அங்க வர முடியாது. அவரும் இங்க வர முடியாதுன்னு சொல்லிட்டார்.. என்னால, என்னோட சூழ்நிலையால, அவரோட வாழ்கை கெட வேணாம்..” என,
“அதுக்கு?” என்றார் கோமதி..
“அது.. அதுவந்து… நீங்க அவருக்கு வேற பொண்ணு பார்த்து…” எனும்போதே,
“பவித்ரா…” என்று கோமதி சத்தமிட,
“இல்ல அத்தை என்னோட முடிவு இதுதான்.. எனக்கு வேற வழி தெரியலை…” எனும்போதே, அவளின் குரல் உடைய,
“முட்டாள்…” என்று மட்டும் சொல்லி வைத்துவிட்டார் கோமதி..
பவித்ராவிற்கு அப்படியொரு அழுகை வந்தது.. அன்றைய இரவு எல்லாம் அழுது தீர்த்தாள் தான். பலராமன் நிச்சயம் வந்து சண்டையிடுவான் என்று எண்ணினாள்.
ஆனால் அவன் வரவும் இல்லை.. பேசவும் இல்லை.. எதுவுமே செய்யவில்லை..
உன் முடிவு நீ அங்கே சென்றுவிட்டாய்..
ஆனால் நான் என்ன செய்திட வேண்டும் என்று நீ சொல்ல வேண்டியது இல்லை என்பது போல் அப்படியே அமைதியாய் இருந்துவிட்டான்.
மனோகருக்கு லேசாய் சில மாதங்கள் கழித்து பேச்சு வந்தது.. எல்லாம் வைத்தியம் செய்யும் மாயம் தான்.
பவித்ராவிடம் கொன்னி கொன்னி பேசினார் “நீ சென்று உன் வாழ்வைப் பார்…” என்று..
“நீங்க முழுசா சரியாகுங்க சித்தப்பா…” என்று முடித்துவிட்டாள்.
அவருக்கு மனது போட்டு படுத்தத் தொடங்கியது.. என்ன சொல்லியும் இந்த பெண் கேட்பதாய் காணோமே என்று வருந்தினார்..
நாட்கள் மாதங்கள் ஆகியது..
நேத்ரனும், அவன் மனைவி நிகிதாவும் ஒருமுறை வந்தார்கள் தான்..
“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் பவித்ரா.. நீ மட்டும் இல்லைன்னா, மாமா என்ன செய்வார் பாவம்…” என்று நிகிதா பேசியது எரிச்சலாய் இருந்தது.
நேத்ரன் கேட்டான் தான் “உங்க வீட்ல வந்தாங்களா..” என்று,
பவித்ரா ஒன்றும் சொல்லவில்லை “அண்ணா… அவர் வாழ்க்கை அவர் பார்க்கட்டும்.. எனக்கு இப்போதைக்கு சித்தப்பா தான் முக்கியம்…” என்று முடித்துவிட்டாள்.
“அதுக்காக… நீ வாழவேண்டாமா?” என்றான் நேத்ரன்.
“பவித்ரா… ரொம்ப கிரேட் நீ.. வளர்த்த பாசத்துக்காக, உன்னோட வாழ்கையை விட்டுட்டு நீ இங்க வந்திருக்க…” என்று நிகிதா சிலாகிப்பது போல் பேச, மனோகர் மகனை அர்த்தமாய் ஒரு பார்வை பார்த்தார்.
மனோகரை தங்களோடு அழைத்துக்கொள்கிறோம் என்கிற பேச்சு இப்போது இல்லாமல் போயிருந்தது. நேத்ரனும் சரி, சொப்னாவும் சரி அதைப் பற்றி பேசுவதே இல்லை.
பவித்ரா எப்படி கேட்க முடியும் அதை..
விடவும் முடியாமல், பிடித்துக்கொண்டே இருக்கவும் முடியாமல், தவிப்போடு தான் பவித்ராவும் நாட்களை கடத்த, தன்னை தானே கடிந்துகொண்டாள்.
‘நீ முடிவு பண்ணித்தானே வந்த.. பிறகு ஏன் இந்த தவிப்பு…’ என்று மனதை அடக்கியவள், மேற்கொண்டு தன் உள்ளத்தை அப்படியே இறுக பூட்டி விட்டாள்.
மனோகருக்கு சேவை செய்வதே தன் கடமை என்று இருக்க, மெல்ல மெல்ல நடக்கத் தொடங்கி இருந்த மனோகர், கால் தடுக்கி மீண்டும் கீழே விழ, நிலைமை ரொம்பவே மோசமாய் போனது.
கோமாவில் விழுந்துவிட்டார் மனிதர்.
அதன்பின் மீளவே இல்லை..
கிட்டத்தட்ட ஆறுமாத காலத்திற்கும் மேலாய் கோமாவில் இருந்தவர், பின்னொரு நாளில் இறைவனடி சேர்ந்து இருந்தார்.
வாழ்வு தான் எத்தனை விசித்திரமானது…
இத்தனை நாள் வராத பலராமன், மனோகரின் இறுதி சடங்கிற்குத்தான் வந்தான். அவனைக் கண்டதுமே பவித்ராவிற்கு பக்கென்று ஆனது. நேத்ரன் மற்றும் சொப்னா குடும்பம் கிளம்பி வந்துகொண்டு இருப்பதாள், அனைத்து சாங்கியங்களும் மறுநாள் தான் என்றானது.
இங்கே முன் நின்று செய்வதற்கு யார் என்று பார்க்க, அதுவரைக்கும் மற்ற ஏற்பாடுகளை எல்லாம் முன் நின்று செய்தது பலராமனே..