பவித்ரா கிளம்பிச் செல்லவுமே, புரிந்துபோனது அனைவருக்கும் இந்த வீட்டினை அவள் விட்டுத் தரப் போவதில்லை என்று.
நேத்ரன் தெளிவாகவே சொல்லிவிட்டான் “இங்க பாருங்க, நம்ம செய்ய வேண்டியதை அவ செஞ்சிருக்கா.. அப்பா இறக்கும் போது கூட நம்ம இங்க இல்லை.. பேசாம இதோட இதை விடுங்க.. வெளிய யாரும் கேட்டா கூட அசிங்கம் நமக்குத்தான்…” என
நிகிதா “அதெப்படி…” என்று ஆரம்பிக்க,
சொப்னா “உனக்கு இந்த வீடு வேணாம்னா விடு நேத்ரன்.. ஆனா எனக்கு வேணும்.. நம்ம பிறந்து வளர்ந்த வீடு…” எனும்போதே,
ஜனகன் “போதும் சொப்னா…” என்று கடிந்தான்..
“உங்களை எல்லாம் என்னவோன்னு நினைச்சேன்.. இப்போதானே சுயரூபம் தெரியுது.. நான் கேட்கும்போதெல்லாம் பவித்ரா பார்த்துக்கிறா, அவளுக்கு நேத்ரன் மாசா மாசம் பணம் கொடுக்கிறான். அப்படின்னுதானே சொன்ன.. இங்க வந்து பார்த்தா, அந்த பொண்ணோட புருஷன் தனியா நிக்கிறான்.. இல்ல தெரியாமத்தான் கேக்குறேன், ஏன் மா நிகிதா, நீ என்ன பண்ணிட்ட உன் மாமனாருக்கு.. நீயும்தான் சொல்லு சொப்னா, என்ன செஞ்சிட்ட உன் அப்பாக்கு..? ஒரு மண்ணும் இல்லை.
நியாயமா பார்த்தா, அவர் சொத்து முழுசையும் பவித்ராக்கு கொடுத்து இருக்கணும்.. வந்து கொல்லி வச்சுட்டா எல்லாம் போதுமா நேத்ரன். உங்களை எல்லாம் பார்த்தா எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை..” என, சொப்னா திருதிருவென முழித்தாள்.
அவளுக்குத் தான் ஜனகன் பற்றி தெரியுமே..
“என்ன பாக்குற.. கிளம்பு.. என் தங்கச்சி வந்து அவங்க வீட்டுக்கு கூப்பிட்டா தானே.. கிளம்பு நீ முதல்ல…” என்று அதட்டல் விட,
“இல்ல அது…” என்று சொப்னா மறுக்கும் முன்னே,
“கிளம்புன்னு சொன்னேன்…” என்று ஜனகன் சொல்ல, நேத்ரன் எதுவும் பேசுவானோ என்று பார்க்க, அவன் ஒன்றுமே சொல்லவில்லை.
கிளம்பவே விருப்பம் இல்லாது சொப்னா கிளம்பிப் போக, நிகிதா புலம்பித் தள்ளிக்கொண்டு இருந்தாள்.
நேத்ரன் முதலில் காதில் எதுவுமே போட்டுக்கொள்ளவில்லை. ஆனால் ஒருநிலையில் பொறுக்க முடியாமல் “இத்தனை பேசுறியே நீ, எங்கப்பாக்கு ஒருநாளாவது ஒருவாய் சமைச்சு போட்டு இருப்பியா?” என்று கேட்டேவிட்டான்.
நிகிதா விக்கித்துப் பார்க்க “என்ன பாக்குற நீ… சொல்லு நிகிதா… அப்பாக்கு இத்தனை முடியலைன்னு தெரிஞ்சும், ஒருதடவையாவது அவரை பார்க்கனும்னு நீ சொல்லி இருக்கியா? இல்லைதானே..” என, அவள் பதிலே பேசவில்லை..
நேத்ரன் இப்படி நேரடி தாக்குதல் செய்வான் என்று அவள் நினைக்கவில்லை போல.
“பதில் சொல்ல முடியலை தானே.. அப்போ சொத்து விசயத்துலயும் நீ பேசாம இருக்கணும்.. எனக்கு என்ன வேணும் வேணாம்னு நீ சொல்ல வேண்டாம்…” என்று முடித்துவிட்டான்.
அங்கே பேரமைதி நிலவ, பவித்ராவின் நெஞ்சிலோ பெரும் புயல் அடித்துக்கொண்டு இருந்தது.
கோமதியோடு ஆட்டோவில் சென்று, வீட்டின் வாசல் முன்னே இறங்கியும் விட்டாள். கையில் வெறும் பர்ஸ் மட்டுமே தான் கொண்டு வந்திருந்தாள். அவளது உடுப்புகள் எல்லாம் இங்கேதானே இருக்கிறது. அங்கே எடுத்துக்கொண்டு போனது வெகு சொற்பம் தானே..
வீட்டினுள்ளே பலராமன் இருப்பதற்கு அடையாளமாய், வெளியே அவனின் பைக் நின்று இருக்க, அதற்குமேல் பவித்ராவின் பாதங்கள் நகர முடியாது அப்படியே நிலை பெற்று இருக்க, அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து ஒரு சில தலைகள் எட்டிப்பார்க்க,
“வா பவித்ரா…” என்றார் கோமதி..
“ஆ..!” என்று பார்த்தவளின் கண்களில் அப்பட்டமாய் ஒரு பயம் தெரிய,
“அட வா… இத்தனை தூரம் வந்தாச்சு.. இனி என்ன?” என,
“ப.. பயமா இருக்கு…” என்றாள்.
“எதுக்கு பயம்? தப்பு செஞ்சவங்க தானே பயப்படனும்?” என்று கோமதி பேச, தன்னைப்போல் பவித்ராவின் தலை கீழே நோக்க,
“இங்கபாரு, உன் மனசுல என்ன இருக்குன்னு எல்லாம் தெரியாது.. கிளம்பிப் போனவ, இப்போ வந்திருக்க, அவனுக்கும் உன்னை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ற எண்ணமெல்லாம் இத்தனை நாள் இல்லை. இருந்திருந்தா நான் செஞ்சு வச்சிருப்பேன்..” என்றதும் விலுக்கென்று பவித்ரா நிமிர்ந்து பார்க்க,
“ம்ம், நீதானே சொன்ன..” என்றார் நோகாமல்.
அந்த வார்த்தையின் வலி இப்போது இன்னும் பெரிதாய் இருந்தது.
அப்போதாவது சித்தப்பா என்ற உறவு இருந்தது. இப்போது அவரும் இல்லையே..
‘அட முட்டாளே, அவருக்காகத்தானே நீ கணவனை விட்டுச் சென்றாய்..’ என்று மனசாட்சி கடிய, கடகடவென கண்களில் நீர்.
“இங்கபாரு அழுது ஒரு பிரயோஜனமும் இல்லை.. முடிஞ்சா அவன் மனசில இருக்கிற கோபத்தை, காயத்தை மாத்து… இப்போ உள்ள வா…” என்று சொல்லி அவர் உள்ளே செல்ல, பவித்ராவிற்கு கால்கள் நடுங்கியது.
என்னடா அம்மா மட்டுமே உள்ளே வருகிறார் என்று பலராமன் வெளியே வந்து எட்டிப்பார்க்க, பவித்ரா கண்களீர் நீரோடு, அப்படியே நிற்க, அந்த காட்சி அவனுக்கு நிச்சயம் என்னவோ செய்தது.
‘பொம்மை…’ என்று அவளை முதன்முதலில் நேரில் கண்டபோது எண்ணினான்.
இப்போது அதுதான் தோன்றியது..
பொம்மை… விதி ஆட்டி வைக்கும் பொம்மை இவள் என்றே எண்ணினான்.
என்னதான் விதி என்றாலும், அவளின் மதி எங்கே போனது..
அவளின் சித்தப்பவிற்காக சென்றதெல்லாம் சரிதான், ஆனால் என்னை விட்டுச் செல்லவேண்டும் என்று எப்படி முடிந்தது. இதில் இன்னொரு திருமணம் வேறு செய்துகொள்ளுங்கள் என்று சொன்னது, சற்றே இளகிய மனதை மீண்டும் கடினமுறச் செய்ய,
“உள்ள வா…” என்றான் ஒருவித கசந்த குரலில்.
வந்துவிட்டாள் என்ற நிம்மதி இருந்தாலும், கடந்து போன இந்த ஒன்றரை ஆண்டுகள் அவன் அனுபவித்த தனிமையும் வலியும் இன்னும் அப்படியே இருக்க, கணவன் உள்ளே வா என்று சொல்லவும், அவளுக்கு அவளையும் மீறிய ஒரு உணர்வு..
கால்கள் தன்னைப்போல் உள்ளே எட்டுவைக்க, உள்ளே வந்ததும், அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.
மலங்க மலங்க விழித்து நின்றாள்.
அம்மா, மகன் இருவருக்கும் பார்க்க பாவமாய் தான் போனது. நிச்சயம் பலராமன் இயல்பாய் பேசமாட்டான் என்றே ஒரே காரணத்தினால் தான் கோமதி அவளோடு இயல்பாய் பேசுகிறார்.
அவருக்கும் கோபம் இருக்கவே செய்தது.
என்ன இருந்தாலும் அவரின் மகனின் வாழ்வும் தானே இது.
இருவருமே அவளை போட்டு வாட்டினால், அவள் என்ன செய்வாள் என்பதால் “போய் தலைக்கு தண்ணி ஊத்திட்டு வந்து சாமிக்கு விளக்கு ஏத்து பவித்ரா…” என்றார் கோமதி.
மாலை ஆறுமணி கூட இன்னமும் ஆகிடவில்லை அப்போது.
“இ.. இப்பவா?” என,
“ஆமா நீ குளிச்சிட்டு வர்றதுக்கும், விளக்கு போடுற நேரத்துக்கும் சரியா இருக்கும்.. போ…” என, தலையாட்டி பொம்மை போல தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்றாள்.
அவர்களது அறை என்று இலகுவாய் உள்ளே நுழைய வர, அந்த அறையில் முன்பிருந்த கட்டில் மெத்தை எல்லாம் காணோம்.. அந்த அறை பழைய மாதிரியே இல்லை.
அப்போதுதான் சுற்றிலும் பார்த்தாள். வீடே முன்னர் இருந்தது போல் இல்லை.
இன்னும் விஸ்தாரமாய் இருந்தது.
பக்கத்து வீட்டினை முன்னர் விலைக்கு வாங்கியிருப்பது தெரியும். இப்போது இந்த வீட்டினையும் மாற்றி அமைத்து இருக்கிறார்கள் போல என்று நினைக்கும்போதே,
“வீட்டுல கொஞ்சம் வாஸ்து பிரச்சனைன்னு சொன்னாங்க.. ஒருவேளை அதுனால தான் இப்படியெல்லாம் நடந்துச்சோன்னு, நான் தான் ராமன்கிட்ட மாத்தி கட்டலாம்னு சொன்னேன்.. பக்கத்து வீடு காம்பவுண்ட் சேர்த்து, இழுத்து கட்டிருக்கோம்.. பலராமனுக்கு இப்போ சம்பளமும் கூடிருச்சுல..” என்று கோமதி சொல்ல,
“சரிங்கத்தை…” என்றுமட்டும் சொல்லிக்கொண்டாள்.
“உங்க ரூம் அந்த பக்கமா இருக்கு…” என்று கை காட்ட, சரி என்றவள், அங்கே செல்ல, நல்லவேளை பலராமன் அங்கில்லை.
அவளுக்கு சங்கடமாய் இருக்குமென்று, வெளியில் சென்று இருந்தான்.
கோமதியும் அதைத்தான் சொல்லியிருந்தார்.. அரைமணி நேரம் கழித்து வா என்று.
அவளது உடைகள் எல்லாம், எப்படி அவள் வைத்துவிட்டு போனாளோ அப்படியே இருந்தது. வேகமாய் குளித்து முடித்து, எப்போதும் செய்யும் ஒப்பனை செய்துகொண்டு கண்ணாடி முன்னே நிற்க, அவளுக்கு தான் இங்கே வந்த முதல் நாள் மனதில் ஓடியது.
அப்போதிருந்த பதற்றம் வேறு..
இப்போதிருக்கும் பயம் வேறு..
இடைப்பட்ட இந்த நாட்களில் தான் எத்தனை மாற்றம்..
“ஹ்ம்ம்…” என்று பெருமூச்சு விட, கோமதி மருமகளுக்கு பூ வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தார்.
“இந்தாம்மா வச்சுக்கோ…” என,
“இவ்வளோ பூ வா?” என்றாள் பயந்து.
“வேணுங்கிற அளவு வச்சுக்கோ… மீதிய சாமிக்கு போடு…” என்று சொல்லிவிட்டுச் செல்ல, பார்வையோ பலராமன் எங்கே என்று தேடியது.
வீட்டினில் இல்லை என்றதும், ஒரு ஆசுவாசம் வர, விளக்கு ஏற்றவென்று சென்று நின்றாள்.
“ஆண்டவா, என் சூழ்நிலை நான் இங்கிருந்து கிளம்ப வேண்டியதா போச்சு.. அவரோட கோபத்தை என்னால தாங்க முடியுமா தெரியலை… எனக்கு தைரியமும் தெம்பும் குடு..” என்று கண்கள் மூடி வேண்டி நிற்க, இமைகளை திறந்தவளுக்கு குப்பென்று இதயம் அடைத்தது போல் இருந்தது.
காரணம் பலராமன் தான்.
வெளியில் சென்றவன், சத்தமில்லாது திரும்ப வந்திருந்தான்.
‘இவ போவா… இப்போ வருவா, நான் வெளிய சுத்தனுமா?’ என்றொரு பிடிவாதம் தோன்ற, மீண்டும் கிளம்பி வந்திருந்தான்.
‘சாமி கும்பிடுறது தான் குறைச்சல்…’ என்று எண்ணியவன், அவளின் முன்னே சென்று நிற்க, அவள் திக்கென்று பார்க்க,
“கும்பிடு.. கும்பிடு.. நல்ல கும்பிடு.. இன்னும் கொஞ்சம் நெஞ்சழுத்தம் குடு கடவுளேன்னு கும்பிடு…” என்று நக்கலாய் சொன்னவன், அவள் என்ன பதில் சொல்வாள் என்று பார்க்க, பவித்ராவின் முகம் அப்படியே வாடி போனது.
‘இதற்கு இவன் என்னை இங்கே வர வைத்திருக்கவே வேண்டாம்…’ என்று சட்டென்று தோன்ற,
‘ச்சே ச்சே அப்படி நினைக்காதே…’ என்று தலையை தானே குலுக்கிக் கொள்ள,
“என்ன, மறுபடியும் இங்கிருந்து போக தோணுதா?” என்றான்.
விலுக்கென்று அவனை பார்த்தவள், இல்லை என்பதுபோல் தலையை ஆட்ட,
“இப்படியே தலையை ஆட்டி ஆட்டியே, எல்லாரையும் ஒரு வழி செஞ்சிடு..” என்றவன் பேசிக்கொண்டே நடக்க, அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
இங்கிருந்து போனது தவறு என்று தெரியும். ஆனால் அவள் நிலை அப்போது அப்படி. என்ன செய்ய?
இவன் மனது ஆறும்வரைக்கும், பொறுமையாய் தான் இருக்க வேண்டும் என்று எண்ணினாள்.
இரவும் நெருங்கிக்கொண்டே இருக்க, மனதிற்குள்ளே ஒருவித கலவரம் இருந்துகொண்டே தான் இருந்தது.
கோமதி என்ன நினைத்தாரோ, வீட்டினில் இருந்ததை உண்டுவிட்டு படுத்துவிட்டார். இவர்கள் இருவரும் உண்ணவும் இல்லை, பேசவும் இல்லை. ஒருவித அமைதி வீட்டினில் நிலவ, அதுவே இம்சையாய் இருந்தது. பலராமன் பொறுத்து, பொறுத்து பார்த்தவன், அடுப்படிக்குள் சென்று பார்க்க, எதுவுமே இல்லை.
பிரிட்ஜில் மாவும், காலையில் செய்த சாம்பாரும் இருக்க, எடுத்து சூடு செய்யப் போக, வேகமாய் பவித்ராவும் உள்ளே வந்துவிட்டாள்.
“நா.. நான் செய்றேன்…” என்று சொன்னவள், சாம்பாரை சூடு செய்து, தோசைக் கல்லை எடுத்து வைக்க, இவர்களுக்கான முதல் கூடல் நடந்ததும் இப்படியானதொரு தோசை வேளையில் தானே.
அது இருவருக்குமே நினைவில் வந்துத் தொலைக்க, பலராமன், கையில் இருந்த கரண்டியை பட்டென்று தூக்கி வீசிவிட்டுச் செல்ல, பவித்ராவிற்கு என்னவோபோல் ஆனது.
கோபம் இருக்கலாம் தான். ஆனால் இப்படி நொடிக்கு நொடிக்கு அதை வெளிப்படுத்துபவனிடம் தான் என்ன செய்வது?!
மனது மேலும் நொந்தது.
வேக வேகமாய் தோசை வார்த்தவள், அவனுக்கு தட்டில் வைத்துக்கொண்டு போய் அவன் முன்னே கொடுக்க, என்ன நினைத்தானோ ஒன்றும் பேசாமல் வாங்கிக்கொண்டான்.
அவள் சுட்டுக்கொண்டு வந்து தர தர, அமைதியாய் உண்டுகொண்டான்.
ஐந்து தோசைக்கு மேல் செல்லவும், பவித்ரா அவன் முகம் பார்க்க “எத்தனை தோசை புருசன்காரன் சாப்பிடுவான்னு கூட தெரியலை…” என்று கடுகடுக்க, பவித்ரா எதுவும் பேசாமல் இருக்க,
“நாலுதான் சாப்பிடுவேன்… இன்னிக்கு ஒன்னு சேர்த்து ஆகிருச்சு…” என,
“ஒன்னு சேர்த்து சாப்பிடுறதுனால, ஒன்னும் ஆகாது…” என்று இயல்பாகவே அவள் சொல்ல,
“ஆமா.. இதுக்கு மேல என்ன ஆகணும்..” என்றான் குத்தலாய்.
வந்த சில மணி நேரங்களிலேயே மூச்சு முட்டியது பவித்ராவிற்கு.