பவித்ராவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கோமதியோ அசைவேனா என்பது போல் படுத்து உறங்கிவிட்டார். பலராமன் உண்டவனும், இரு கைகளையும் உயர்த்தி, சோம்பல் முறித்து படுக்கப் போக, பவித்ராவிற்கு பசி வேறு வயிற்றைக் கிள்ளியது.
“என்ன உண்ணாவிரதமா?” என்று கேலியாய் அவனின் குரல் முதுகை குத்த, நின்று திரும்பிப் பார்க்க,
“ஹக்கா… இந்த போஸுக்கு எல்லாம் குறை இல்லை…” என்றவன் “தோசை சுடுறேன்…” என்றபடி சமையல் அறையினுள் போக,
“எனக்கு வேணாம்…” என்றாள் பட்டென்று.
“வேணாமா?!” என்று கேட்டவன் “உன்ன சாப்பிடுறியான்னு எல்லாம் கேட்கலை.. ஒழுங்கா வந்து சாப்பிடுன்னு சொல்றேன்.. ரொம்ப பிடிவாதம் செஞ்சா, வாயில வச்சு திணிச்சு விட்டுடுவேன். எனக்கெல்லாம் யார் மனசையும் வயித்தையும் காய போடுற பழக்கம் இல்லை…” என்று பேசிக்கொண்டே போக, அவளுக்கு மழுக்கென்று கண்களில் நீர் வடிந்து விட்டது.
பதில் வராது போகவும், பலராமன் திரும்பிப் பார்க்க, அவள் நின்ற இடத்தினில் இருந்தபடி கண்ணீர் வடிக்கவும், அவனுக்கு என்னத் தோன்றியதோ
“சரி வா…” என்றான் தன்மையாக,
அவள் அப்போதும் அப்படியே நின்று இருக்க “ம்ம்ச் பவித்ரா வான்னு சொல்றேன்ல.. எப்பவுமே என்ன நடந்தாலும், அதை சாப்பாடுல காட்டக் கூடாது..” என்றவன் அவளின் அருகே வர, வேகமாய் அவள் முன்னெடுத்து வந்தாள்.
‘ப்பா இந்த தலையாட்டி பொம்மைக்கு இத்தனை பிடிவாதம் ஆகாது. செஞ்சது எல்லாம் தப்பு.. இதுல நானே சமாதானம் செய்யனும்போல…’ என்று எண்ணிக்கொண்டவன், தோசை வார்க்க,
“நான் எப்பவும் மூணு தான் சாப்பிடுவேன்…” என்று முன்னரே அவள் சொல்லிவிட,
“மூணோ முப்பதோ, எனக்கு மனசு திருப்தி ஆகுற வரைக்கும் நான் சுடுவேன்.. நீ சாப்பிடனும்…” என்றவனுக்கு அவளின் மெலிவு மனதை அப்படி உறுத்தியது.
இத்தனை நாட்களாய் சரியாய் உண்ணக் கூட இல்லை போல.
அவளுக்கோ தட்டினில் சுட சுட தோசை, அதுவும் நெய் விட்டு முறுகலாய் வந்தமரவும், மீண்டும் விழிகளில் கண்ணீர். இதுநாள் வரைக்கும் இப்படி யாரும் அவளை அமர வைத்து சுட்டுக் கொடுத்தது எல்லாம் இல்லவே இல்லை.
பவித்ரா சமையல் செய்ய ஆரம்பிக்கும் வரைக்கும் மனோகர் தான் செய்வார். மொத்தமாய் ஊத்தப்பம் சுட்டு, ஹாட் பாக்ஸில் போட்டு வைத்துவிடுவார். அவ்வளவுதான் அவரால் முடிந்தது.
இப்படி எல்லாம் இதுநாள் வரைக்கும் அவள் வாழ் நாளில் நடந்தது இல்லை.
ஆனால் பவித்ராவோ உள்ளதை மறைக்காது அப்படியே சொல்ல, அவனுக்குமே என்னவோ போல் ஆனது. வாழ்வில் சிறு சிறு சந்தோசங்களை கூட பவித்ரா அனுப்பவித்தது இல்லைபோல என்பது நன்கு புரிய,
“ம்ம்…” என்று அவளை கூர்ந்து பார்த்தவன்
“சாப்பிடு…” என்றுமட்டும் சொல்லி, அவள் போதும் போதும் என்று சொல்லியும் கூட ஐந்து தோசைகளை உண்ண வைக்க,
“இதுக்கு மேல முடியவே முடியாது…” என்றுவிட்டாள்.
“என்னதான் சாப்பிட்டியோ.. பாரு இப்படி மெலிஞ்சு போயிருக்க.. நன்றிகடன் எல்லாம் இருக்கவேண்டியது தான். அதுக்காக நம்மளை வருத்தித்தான் எல்லாம் செய்யனும்னு இல்லை..” என்று பலராமன் கடிய,
“நன்றிகடனுக்காக எல்லாம் நான் மெலிஞ்சு போகலை…” என்று அவனது தொனியிலேயே சொன்னவள், அங்கிருந்து சென்றுவிட்டாள்.
அந்த வார்த்தைகள் பலராமனைத் தான் அப்படியே நிற்க வைத்தது.
பின் எதற்காக? என்ற கேள்வியும் அவனுள் தோன்ற..
‘எல்லாம் உனக்காகத் தான் டா.. உன்னால தான் டா…’ என்று மனது சொல்ல,
‘அடடா… அப்படி ஒன்னு எல்லாம் இருந்தா, இந்த அம்மையார் என்னை வேற கல்யாணம் பண்ணுன்னு சொல்லுவாளா..’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவன் மனம் மீண்டும் இறுகி போனது.
அடுத்து வந்த இரண்டு மூன்று நாட்களும் இப்படியே கழிய, கோமதி மகனையும், மருமகளையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தார். பவித்ராவின் எண்ணங்கள் அவருக்கு தெளிவாய் புரிந்துபோனது.
சூழ்நிலை கைதி அவள்.
விதி ஆட்டி வாய்த்த பொம்மை அவள்.
ஆனால் மகனின் பிடிவாதமும் அவர் அறிந்தது தானே. இத்தனை நாட்களில் சொல்லிக்கொண்டே தானே இருந்தார்.
‘போய் ஒருதடவை பாரு டா.. சண்டை போடவாவது போ.. அடிக்கடி போனா தானே அந்த பொண்ணு மனசும் ஒரு நிம்மதியில இருக்கும்.. இப்படி என்னவோ பண்ணிக்கோன்னு விட்டுட்டா அவளும் தான் என்ன செய்வா?’ என்று.
ஆனால் இவன் கேட்கவே இல்லையே..
‘நான் வேணும்னு நினைச்சா, ஒருதடவையாவது இங்க வரட்டும். என்னோட வந்து அவ சண்டை போடட்டும். என்னோட நீங்க வந்து தான் ஆகணும்னு பிடிவாதம் செய்யட்டும்.. இல்லை அடிக்கடி நீங்க அங்க வரலைன்னா பார்த்துக்கோங்கன்னு பொண்டாட்டியா என்கிட்டே உரிமை எடுக்கட்டும்.. அதெல்லாம் விட்டுட்டு, வந்தா வா அப்படிங்கற மாதிரி பேசிட்டு போறா.. இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்றா…’ என்று அவனும் கோபிக்க, பாவம் கோமதிக்குத் தான் என்ன செய்வது என்று தெரியவில்லை.
இப்போது அவளும் வந்துவிட்டாள். இனியாவது எல்லாம் சுமுகமாகும் என்றால், அதற்கான முயற்சியை இருவரும் எடுப்பதாய் காணோம். இதோ பலராமன் எப்போதும் போல் வேலைக்குச் செல்வதும், மாலை வருவதும், டிவி பார்ப்பதும் பின் உண்டு உறங்குவதுமாய் இருக்க, பவித்ராவோ வீட்டு வேலைகள் செய்வதும், கோமதி சொல்வதை செய்வதுமாய் அவள் நேரத்தை போக்க, இது கதைக்கு ஆகாது என்று எண்ணும் வேளையில் தான் நேத்ரன் வந்தான் அன்றைய தினம்.
அன்று பலராமனும் வீட்டினில் இருக்க, பவித்ராவிற்கு நேத்ரனை கண்டதும் அப்படியொரு சந்தோசம். முதல் முறையாய் வீடு வந்திருக்கிறான் இல்லையா.
“வாங்க அண்ணா..” என்று வரவேற்க, அவளைப் பார்த்து புன்னகை சிந்தியவன்,
பலராமனிடம் “அப்பாக்கு டெத் செர்டிபிகேட், வாரிசு செர்டிபிகேட் எல்லாம் வாங்கணும்.. சொத்து மேல இருக்க லீகல் வேலை எல்லாம் நான் இங்க இருக்கும்போதே முடிச்சிட்டா நல்லது.. எனக்கு உங்க ஹெல்ப் வேணும்…” என,
‘அதானே பார்த்தேன்…’ என்று எண்ணியவன், பவித்ராவையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு “அதுக்கென்ன தாராளமா செய்யலாம்…” என்று முடித்துக்கொண்டான்.
பின் பவித்ராவிடம் “அப்பாக்கு பதினாறாவது நாள் சாங்கியம் செய்யணும் பவி. என்னென்ன செய்யனும்னு தெரியுமா?” என, அவளோ தெரியாது என்றவள், கோமதியின் முகம் பார்க்க, கோமதியும் என்னென்ன எப்படி செய்யவேண்டும் என்று சொல்ல,
“ரெண்டு நாள் முன்னவே நீங்க அங்க வந்திருங்கம்மா… நிகிதாக்கு, சொப்னாக்கு எல்லாம் எதுவும் தெரியாது.. நீங்கதான் முன்ன இருந்து எல்லாம் நடத்திக் கொடுக்கணும்..” என,
“அம்மா எல்லாம் செய்வாங்க.. ஆனா ரெண்டு நாள் முன்னாடி வர்றது சந்தேகம் தான்.. எதுவா இருந்தாலும் போன்ல சொல்வாங்க…” என்று முடித்துவிட்டான் பலராமன்.
அவன் சொல்வதும் சரிதான். இவர்கள் அங்கே வந்தால், தேவையில்லாத பேச்சுக்கள் ஏற்படும். மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு நேத்ரன் கிளம்பிவிட, அடுத்து பலராமனும் வெளியே கிளம்ப ஆயத்தமாக, பவித்ராவிற்கு தான் மனது என்னவோ போல் இருந்தது.
என்ன செய்வது என்று தெரியவில்லை.
கணவனின் ஆறுதலுக்கும், அருகமைக்கும் மனது ஏங்குவது நன்கு அவளுக்கு புரிந்தது. ஓரிரு வார்த்தைகள் அவளோடு அவன் இதமாய் பேசினால் கூட போதுமாய் இருக்கும்போல் இருக்க, வெளியே பலராமனின் பைக் உறுமிக்கொண்டு இருக்க, கோமதி தான் “என்னடா ராமா?” என்று போய் பார்த்தார்.
“நான் வெளிய கிளம்புறேன்…” என்றான் கடுப்புடன்.
“சரி கிளம்பு.. அதுக்கேன் பைக்கை இப்படி படுத்துற…” என,
“வெளிய கிளம்புறேன்னு சொன்னேன்…” என்று சத்தமாய் வீட்டினுள்ளே பார்த்து பேச, அம்மாவிற்கு மகனது எண்ணம் புரியாதா என்ன?
“பவித்ரா…” என்றழைக்க,
“அ.. இதோ வர்றேன் அத்தை…” என்று அவள் வாசலில் வந்து நிற்கும் நேரம், இவன் வண்டியை கிளம்பிச் சென்றுவிட்டான்.
அத்தனை வேகம்.
“நீதான் அவன் கிளம்பும் பொது வெளிய வந்து நிக்க வேண்டியது தானே ம்மா…” என,
“நேத்து ஆபிஸ் போறப்போ, தண்ணி பாட்டில் மறந்துட்டார்னு கொண்டு போய் கொடுத்தேன். முறைச்சுட்டு போனார். சரி நம்ம முன்னாடி வர்றது பிடிக்கலை போலன்னு தான் வரலை அத்தை..” என்று அவள் பாவமாய் சொல்ல,
“சரியா போச்சு.. என்னதான் இந்த காலத்து பிள்ளைகளோ..” என்று நெற்றியில் அடித்துக்கொண்டவர், “இப்படி உக்காரு உன்னோட பேசணும்…” என்றார்.
அவள் அமர “நீ போன இத்தனை நாள்ல, அவன் அவனாவே இல்லை.. ஒரு புது துணி கூட எடுத்துக்கலை. எதுக்கெடுத்தாலும், கோபம் எரிச்சல்ன்னு தான் இருப்பான்.. அதுல இருந்து மாத்தனும்னு தான், இதோ இந்த வீட்டை மாத்தி அமைச்சோம்.. பக்கத்து வீடு ஏற்கனவே நம்ம வாங்கினது தான்.. அதுலயும் மேல் போர்சன் எடுத்தோம்..
வேலை அது இதுன்னு அவன் பிசியாகவும் தான் கொஞ்சம் இயல்பானான். உனக்கும் கஷ்டம் இருந்திருக்கும் தான். ஆனா அவனும் ரொம்பவே பட்டுத்தான். புதுசா வேற கல்யாணம் ஆனவங்க இல்லையா…” என்றவர், பேச்சை நிறுத்தி அவளின் கரத்தில் லேசாய் ஓர் அழுத்தம் கொடுத்து,
“நான் சொல்றது புரியும்னு நினைக்கிறேன் பவித்ரா.. உன்னோட சூழ்நிலை அன்னிக்கு அப்படி.. நடந்தது எல்லாம் நடந்து போச்சு. அதை மாத்த முடியாது. ஆனா மறந்துட்டு, இப்போ இருக்க வாழ்கையை நல்லபடியா மாத்திக்க முடியும். அது உன் கைல தான் இருக்கு..” என,
“நான் என்ன செய்ய அத்தை. என்ன செஞ்சாலும் திட்டுறாரே…” என்றாள்.
“அவன் திட்டினா நீ ஒதுங்கி போயிடுற. பதிலுக்கு பேசு.. பொண்டாட்டின்னு உரிமை எடு. அப்படித்தான்டா நான்.. என்னை வேணாம்னு சொல்லு பாப்போம்னு சவடால் விடு.. எப்படியோ பேசி அவனை வழிக்கு கொண்டு வா…” என, கண்களை விரித்துப் பார்த்தாள் பவித்ரா.
“ஆமா என்ன பாக்குற. என் மகனை வழிக்குக் கொண்டு வா அப்படின்னு எந்த மாமியாரும் மருமக கிட்ட சொல்ல மாட்டாங்க தானே. ஆனா நான் சொல்வேன். ஏன்னா எனக்கு அவன் ஒருத்தன் தான் இருக்கான். அவன் நல்லா இருந்தா போதும். நீ வந்த பிறகு தான் அவன் வயிறு நிறையவே சாப்பிடுறான்.. வீட்ல அவன் பேச்சு சத்தமே கேட்குது. எப்படியாவது அவனை உன்னோட வழிக்கு கொண்டு வந்து நல்லபடியா வாழுங்க.. சீக்கிரம் குழந்தை பெத்துக்கோங்க. அது இன்னமும் உங்களுக்கு நெருக்கத்தை கொடுக்கும். நானும் வெடுப்பா இருக்கும்போதே பிள்ளையை வளர்த்து விட்டுடுவேன்..” என, பவித்ரா தலையை ஆட்டிக் கொண்டாள்.
“சாமர்த்தியமா இரு பவித்ரா…” என, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது அவளுக்கு புரியாமல் இல்லை.
அடுத்த நாளில் இருந்து கோமதி அனைத்திற்கும் பவித்ராவை முன் நிறுத்தினார். நீயே சமைத்துவிடு என்பார். பலராமனுக்கும் அவளையே பரிமாறச் செய்தார். அவன் ஏதாவது கேட்டால் கூட “எனக்கு தெரியாது.. பவித்ராவை கேளு…” என்று சொல்ல ஆரம்பித்தார்.
ஆரம்பித்தில் அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. பின் அவனின் பீரோவில் பவித்ரா வந்து அவனது உடைகளை அடுக்கிவிட்டு, பீரோவை பூட்டிவிட்டு போகப் போனவளை தடுத்து “மாமியார் மருமகள் கூட்டணியாக்கும்…” என்றான் அவளின் அருகே நெருங்கி வந்து நின்று.
“இல்லை.. இங்க வீட்ல நடந்துட்டு இருக்கிறது எல்லாம் என்ன?” என்றவன், அவளது இடுப்பினைப் பார்க்க, அவளுக்கோ மேலும் படபடப்பு கூடியது.
“என்னங்க?” என்றாள் நா தந்தியடிக்க,
“சாவி கொத்து எதுவும் இங்க தொங்குதான்னு பார்த்தேன்..” என்றவனுக்கு, அழகிய இளம் மஞ்சள் நிற சேலையும், அதில் கொஞ்சமே கொஞ்சம் தெரியும் அவளது மெல்லிடையும் கண்ணில் பட, கொஞ்சம் அங்கே தான் தொடேன் பலராமா என்று அவனது மனதும் சொல்ல,
‘ச்ச் இவ பக்கத்துல போனது தப்பா போச்சு…’ என்று எண்ணியவன், அவளைப் பார்க்க, அவளோ அவனையே தான் பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள்.
“என்ன பாக்குற?” என்று பிடிக்காதவன் கேட்பது போல் கேட்க முயன்றாலும், அதற்கு அவன் குரல் ஒத்துழைக்கவில்லை.