நேத்ரன் கேட்கும் உதவிகளை எல்லாம் பலராமன் செய்து கொடுத்தான். ஒருமுறை கூட முகம் சுளிக்கவில்லை. பவித்ராவிற்கு இது ஆச்சர்யமே.
அவளின் முகம் அதை அப்படியே காட்டிக் கொடுக்க, “நானும் மனுஷன் தான். எந்த சூழ்நிலைல எப்படி நடக்கனும்னு தெரியும்… என்னை மதிச்சு நடந்தா நானும் அப்படித்தான் நடப்பேன்…” என்று சொல்லி முடித்துக்கொண்டான்.
ஆனாலும் அது அவளுக்கு மகிழ்வாகவே இருந்தது. இப்படியே எல்லாம் சரியாகி விடவேண்டும் என்று எண்ண, பவித்ராவிற்கும், பலராமனுக்குமான உறவு ஜான் ஏறினால் முலம் சறுக்குவதாய் இருந்தது.
அவளுக்குமே ஒரு அளவுக்கு மீறி என்ன செய்வது என்று தெரியவில்லை. சில நேரத்தில் அவன் இயல்பாய் இருப்பது போல் இருந்தாலும், பல நேரங்களில் காய்ந்து விடுகிறான்.
அவனது வலி அப்படி என்றாலும், ஒரு மனிதனால் எப்போதுமே இப்படி இருக்க முடியுமா என்ன?
அவ்வப்போது அவனின் பார்வைகள் அவள் மீது ஆர்வமாய், ஏக்கமாய் படிவது பவித்ரா உணரவே செய்து இருந்தாள். மனதில் தைரியம் வரவைத்து அவ்வப்போது அவளுமே நெருங்க முயற்சி செய்தாலும், பலராமனும் தடுமாறினாலும், அடுத்து அப்படியே சுதாரித்துக்கொள்கிறான்.
கோமதி சொன்னதினால் மட்டும் இல்லை.
அவளுக்குமே அவனோடு இணைந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கத்தானே செய்தது. சொல்லப்போனால் இத்தனை நாள் அவள் பட்ட வேதனையின் காரணமே இதுதானே.
சித்தப்பாவிற்காக கிளம்பி வந்துவிட்டாள் தான். ஆனால் ஒவ்வொரு நொடியும் அவள் மனது பலராமனை எண்ணிக்கொண்டு தான் இருந்தது. இப்படி விட்டு வந்துவிட்டோமே என்று தவியாய் தவித்துக்கொண்டு தான் இருந்தது.
ஒருமுறையாவது என்னைக் காண வருவானா என்று ஏக்கம் கொண்டுதான் இருந்தது. ஒருமுறை வந்தால் தான் என்ன என்று அங்கலாய்த்துக் கொண்டு தான் இருந்தது.
ஆனால் அவன் வரவே இல்லை தானே.
அவளை திட்டவோ, சண்டையிடவே கூட வரவே இல்லை தானே.
அதில் தான் மனம் மிகவும் நொந்து போனாள் பவித்ரா.
இதோ இப்போதும் கூட, கணவன் தன்னை இங்கே வரவழைத்து விட்டான் என்பதில் மகிழ்ச்சியே. கூடவே சிறு கோபமும் உண்டு. நான் செய்தது தவறாகவே இருக்கட்டும். தவறு தான். அதை நான் மறுக்கவே மாட்டேன். ஆனால் நீ என்ன செய்தாய்?
போனால் போ என்பது போல் அல்லவா இருந்துகொண்டாய் என்று கோபமும் இருக்கவே செய்தது.
இப்படி, பயம், தயக்கம், குற்றவுணர்வு, கோபம் என்று எல்லாம் கலந்து அவளை படுத்த, பலராமனும் தன் வார்த்தைகளால் அவளை படுத்த, திக்குமுக்காடி தான் போனாள் பவித்ரா.
ஆனால் அவளுக்கு கோமதியின் வார்த்தைகள் பெரும் உதவியாய் இருந்தது. அவ்வப்போது அவர் சொல்லும் அறிவுரைகள் எல்லாம் மிக மிக மனதிற்கு இதமாய் இருக்க, மனதினை தேற்றிக்கொண்டாள்.
இவனோடு தான் வாழ்வு என்று வந்தாகிவிட்டது. என்ன நடந்தாலும் சற்று பொறுமையாய் போவோம் என்று இருக்க, கோமதியும் இருவரையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தார்.
கண்டிப்பாய் இவர்களுக்கு தனிமை கொடுத்தே தீரவேண்டும் என்று எண்ணியவர், அதற்கான முயற்சியில் இறங்க, பலராமனோ “ம்மா என்னம்மா இப்போல்லா வீட்ல இருக்கவே மாட்டேங்கிற?” என,
“எதுக்குடா இருக்கணும்?” என்றார் பட்டென்று.
அவர் சொல்லிய விதம், பவித்ராவிற்கு ஒரு சிரிப்பை கொடுத்துவிட, வேகமாய் வாயை மூடிக்கொண்டாள். சிரிக்கும் அவளை கண்டு முறைத்தவன்,
“அப்படி எங்கதான் போறீங்க?” என்றான் அடுத்து.
“ஏன் எல்லாமே உன்கிட்ட சொல்லிட்டு தான் போகனுமா? எனக்குன்னு எதுவும் இருக்கக் கூடாதா?” என,
‘இதென்னடா இப்படி?’ என்று நெற்றியைச் சுருக்கியவன், பதில் எதுவும் சொல்லாமல் இருக்க,
“எனக்கு பதினஞ்சாயிரம் பணம் வேணும் பலராமா..” என்றார் அடுத்து.
“எது பதினஞ்யிரமா? எதுக்கும்மா அவ்வளோ பணம்..?” என,
“வேணும்…” என்று பிடிவாதமாய் சொல்ல,
“ம்மா தரலைன்னு சொல்லலை.. ஆனா என்ன செலவுன்னு தான் கேட்டேன்..” என,
கணவன் மனைவி இருவருமே ‘என்னது?!’ என்பதுபோல் அதிர்ந்து பார்த்தனர்.
“என்ன ரெண்டு பேரும் சொல்லி வச்சது போல பாக்குறீங்க.. ஏன் நான் டூர் போகக் கூடாதா?” என,
“போலாம் தான் ம்மா.. ஆனா இப்படி திடீர்னு சொன்னா எப்படி?” என்றான் பலராமன் யோசனையாய்.
“திடீர்னு சொல்லாமா? மொத்தம் பத்துபேருக்கு மேல சேர்ந்து இருக்காங்களாம். நானும் வர்றேன்னு சொல்லிட்டேன். பவித்ரா சித்தப்பாவோட பதினாறு முடியவும் அடுத்து ரெண்டு மூணு நாள்ல கிளம்பனும்.. இப்பவே பணம் கட்டினா தான் டிக்கட் போட முடியும். மொத்தம் பத்து நாள்…” என,
அம்மாவின் முகமும், குரலுமே சொன்னது அவர் இதில் உறுதியாய் இருக்கிறார் என்று.
“இப்போ போகாம எப்படி பவித்ரா? அடுத்து நீ உண்டாயிட்டா, உன்னை பார்க்க வேணாமா? அடுத்து பேறுகாலம் இருக்கும்.. பேரன் பேத்தின்னு எனக்கு எங்கயும் அசைய முடியாது. சிலது எல்லாம் வாய்ப்பு கிடைக்கும்போது பயன்படுத்திக்கணும்.. எனக்கு இப்போ போயிட்டு வர்றது தான் சரின்னு தோணுது… என்னடா பணம் எப்போ தர்ற…” என்று மருமகளிடம் ஆரம்பித்து, மகனிடம் முடிக்க, அவர் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் இருவர் மனதிலுமே ஒரு சஞ்சலத்தை உண்டு செய்தது.
கணவன் மனைவி.. குழந்தைகள் என்று அடுத்த கட்டம் நீங்கள் செல்லவேண்டும் என்கிறார் என்பது புரியாமல் இல்லை.
திருமண வாழ்வின் நியதி அதுதானே.
பலராமன் எதுவுமே பேசவில்லை அன்றைய மாலையே அம்மாவிடம் பணம் கொணர்ந்து கொடுத்துவிட்டான். உடன் தனியாய் ஐந்தாயிரம் வேறு கொடுத்தான். செலவுக்கு என்று.
அம்மா கிளம்பிச் செல்வது அவனுக்கு ஒருமாதிரி இருந்தாலும், அவரும்தான் இதுநாள் வரைக்கும் எந்தவொரு சந்தோசமும் அடைந்தது இல்லை. சென்று வரட்டும் என்று இருக்க, பவித்ராவிற்குத்தான் எப்படியோ இருந்தது.
அதோ இதோ என்று மனோகரின் பதினாறாவது நாள் காரியமும் வர, கோமதி சொன்னதுபோல் தான் நேத்ரன் எல்லாம் ஏற்பாடு செய்திருந்தான்.
கிளம்பும்போதே பலராமன் பவித்ராவிடம் “அங்க போய் சேலையை தூக்கி சொறுகிட்டு எல்லாம் இழுத்து போட்டு வேலை செஞ்ச பார்த்துக்கோ.. போனோமா, கும்பிட்டோமா, சாப்பிட்டோமோ, வந்தோமான்னு இருக்கணும்…” என்று மிரட்டும் விதமாய் பேச, வேகமாய் பவித்ரா தலையை ஆட்ட,
“சரியான தலையாட்டி பொம்மை டி நீ…” என்று கடிந்து சொல்ல வேண்டும் என்று ஆரம்பித்தவனுக்கு அது முடியவில்லை.
அவனது சிறு தடுமாற்றத்தையும் கண்டுகொண்டவள், கண்கள் சுறுக்கி லேசாய் புன்னகை செய்ய முயல,
“வேணாம்னு விட்டு போயிட்டு, சிரிக்க வேற செய்யாத நீ. கடுப்பா இருக்கு…” என்று அடுத்த நொடி, வார்த்தையில் விஷம் தடவி பேச, அப்படியே முகம் வாடி போனாள் பவித்ரா.
கோமதியோ “அடடா..! உங்க பஞ்சயாத்து ஓயாதா என்ன? நானும் பாக்குறேன் எப்போ பார் சிடு சிடுன்னு இருக்க ராமா நீ.. அவதான் வந்துட்டால்ல அப்புறமென்ன.. பேசி என்னாகப் போகுது…” என்று கடிய,
“வந்தா.. வந்தா.. போறதுக்கு வேற இடமே இல்லையே. சித்தப்பாவும் இல்லையேன்னு தான் வந்தா.. அன்னிக்கு நம்ம போகலைன்னா இன்னிக்கு இந்தம்மா வந்திருப்பாளா? நிச்சயம் வந்திருக்க மாட்டா.. அவங்க எல்லாரும் வீட்டையும் எப்படியும் இவக்கிட்ட இருந்து வாங்கிட்டு, போயிட்டு வா மகராசின்னு அனுப்பி வச்சிருப்பாங்க. இவளும் நன்றி கடன் லொட்டு லொசுக்குன்னு தியாகம் பண்ணிட்டு…” என்று எதையோ சொல்ல வந்தவன் பேச்சை நிறுத்தி
“என்னத்த செய்றது.. அவர் இருக்கும்போதே ஒருதடவை வந்திருந்தா…” என்று வேறு எதையோ பேச வந்து அதையும் முடிக்காமல் நிறுத்த, மறுபடியும் பவித்ரா கண்ணீர் வடிக்க, நொடியில் அங்கே சூழல் மாற, அதற்குள் நேத்ரன் பலராமனுக்கு அழைத்து விட்டான். கிளம்பிவிட்டீர்களா என்று.
“அடடா… இப்போதான் தங்கச்சி.. தங்கச்சி புருஷன் எல்லாம் இவனுங்களுக்கு நியாபகம் வரும்போல..” என்றவன் “கிளம்பலாம்…” என்று முன்னே நடக்க, பவித்ரா முகத்தைத் துடைத்துக்கொண்டு பின்னே நடக்க, கார் தான் ஏற்பாடு செய்திருந்தான் பலராமன்.
காரில் ஏறியதுமே “நான் சொன்னது நியாபகம் இருக்கட்டும்…” என்று மீண்டும் அவளிடம் சொல்ல, அவள் தலையை கூட ஆட்டவில்லை.
மனதில் இருந்த சிறு இதம் கூட இப்போதில்லை.
இன்னமும் வார்த்தைகளால் குத்துகிறான். ஓரளவு தானே தாங்க முடியும். அவன் மீதிருந்த சிறு கோபமும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் அதிகம் தான் ஆனது அவளுக்கு.
நான் போனேன் தான்.. ஆனால் நீ வந்தாயா என்று..
ஒருமுறையாவது நீ வந்தாயா? என்று அவனை போட்டு உலுக்கிக் கேட்க வேண்டும் போல் இருந்தது.
ஆனாலும் முடியவில்லை.
இத்தனை வருடங்களில் அவள் யாரை குரல் உயர்த்தி பேசியிருக்கிறாள்.
பவித்ரா அமைதியாகவே வர, அதையும் பலராமன் கவனித்துக்கொண்டு தான் வந்தான். காலையில் கொஞ்சம் உற்சாகமாகவே கிளம்பிக்கொண்டு இருந்தாள். சின்னதாய் எதையோ பேசி கோமதியிடம் சிரித்துக்கொண்டு வேறு இருந்தாள்.
‘ச்சே..’ என்று தானே நொந்துகொண்டான் பலராமன்.
‘வேணும்னே பண்ற டா நீ…’ என்று அவனையே அவன் கடிய,
‘பண்றது எல்லாம் பண்ணிட்டு என்னை பார்த்து சிரிக்க வேற செய்றா.. அதான் தாங்க முடியலை…’ என்று அவனே பதிலும் சொல்லிக்கொள்ள, அதற்குள் மனோகர் வீடும் வந்துவிட்டது.
வீட்டினில் நாட்கள் நிறைந்தே இருந்தனர். சொப்னாவின் கணவன் ஜனகன் வீட்டினர் ஓரிருவர் இருந்தனர். நிகிதா வீட்டினில் இருந்து அவளது அப்பாவும் அம்மாவும் வந்திருக்க, அனைவரையும் பார்த்தவள், வரவேற்பாய் தலையசைத்து பேச, ஒருசிலர் நன்கு பேச, சிலர் அளவாய் இருக்க, பலராமன் அவளை பார்த்த பார்வையில் அமைதியாய் வந்து அவனருகே அமர்ந்துகொண்டாள்.
சொப்னாவோ “என்ன பவித்ரா வந்து அப்படியே உக்காந்துட்ட.. நீயென்ன விருந்தாளியா.. இந்த வீட்டுக்கு சொந்தக்காரி.. நீதானே எல்லாம் முன்னாடி நின்னு செய்யணும்…” என்று குத்தலாய் பேச, பவித்ராவோ என்ன சொல்வது என்று தவித்து, கணவன் முகம் பார்க்க, பலராமன் எதுவும் சொல்லாமல், அமைதியாய் ஜனகன் முகம் நோக்கினான்.
அதேநேரம் நிகிதாவும் “அதெப்படி, வீட்டு முதலாளியம்மா அவங்க ஏன் வேலை செய்யணும். நம்மதான் இனி விருந்தாளி.. வந்தோமா போனோமான்னு இருக்கணும்…” என்றும் பேச, அங்கே ஜனகன் வந்துவிட்டான்.
“ஆமா என்ன செய்றது.. அவளே முன்ன நின்னு உங்கப்பாக்கு எல்லாம் செஞ்சு முடிச்சுட்டா. நீங்க வந்தோமா போனோமான்னு தானே இப்போ வந்திருக்கீங்க…” என்று நக்கல் பேச, சொப்னாவிற்கு கோபம் கோபமாய் வந்தது.
இருந்தும் அனைவர் முன்னிலும் கணவனிடம் என்ன வார்தையாட முடியும் என்று அவள் வெடுக்கென்று நகர்ந்து செல்ல, நிகிதாவோ “நீ முன்னாடி நின்னு எல்லாம் செஞ்சா தான் எங்க மாமனாருக்கு திருப்தியாகும்.. செல்லப்பொண்ணு இல்லையா.. வா…” என்று அழைக்க,
“இப்போ கூட நீ வீட்டு மருமகளா எதையும் செய்ய மாட்டியா நிகிதா…” என்றான் ஜனகன்.
“எனக்கென்ன தெரியும்…” என்று அவள் சொல்ல,
“அப்போ அமைதியா இரு…” என்றவன் நேத்ரனை அழைக்க, அவன் வேகமாய் வந்தவன், பவித்ராவின் முகத்தில் இருக்கும் கலக்கமும், பலராமன் முகத்தில் தெரியும் எரிச்சலும் என்ன சொல்லியதோ,
“நிகிதா நீ போ..” என்றான் அடிக்குரலில்.
“நான் என்ன தப்பா பேசிட்டேன்…” என்று கேட்க,
“நீ போன்னு சொன்னேன்…” என்றவன், “பவி வா.. எல்லாம் எடுத்து வச்சாச்சு.. வந்து நீயே தேங்காய் உடைச்சு பூஜை செய்…” என,
“நானா?!” என்று பார்த்தாள் விழி விரித்து.
“ஆமா நீ தான்.. மகனா இருந்து நான் எதுவுமே எங்கப்பாக்கு செய்யலை.. இதுல மட்டும் என்ன ஆம்பிளைன்னு நான் காட்டிக்கனுமா.. வா நீயே செய்…” என்றழைக்க, அவன் சொல்லியது அனைவருக்குமே அங்கே அதிர்ச்சியும் ஆச்சர்யமும் தான்.
“வாட் இஸ் திஸ் நேத்ரன்…” என்று எதையோ நிகிதா பேச வர,
“ஜஸ்ட் ஷட்டப்…” என்று நேத்ரன் ஓங்கிச் சொல்லிவிட்டு, பலராமனைப் பார்த்து “பவியை வந்து பூஜை ஆரம்பிக்கச் சொல்லுங்க…” என, நிச்சயமாய் பலராமனே இதனை எதிர்பார்க்கவில்லை தானே.
அவனுக்குமே இது சரியா முறையா என்று தெரியவில்லை. மனைவியும் கேள்வியாய் அவன் முகம் நோக்கிட “போ…” என்று அவனது தலை ஆட, பவித்ரா தான் கண்ணீர் வடியும் கண்களோடு, மனோகர் படத்தின் முன் வைக்கப்பட்டிருந்த படையல் பார்த்து, தேங்காய் உடைக்க, அவளால் ஒருநிலைக்கு மேல் முடியவில்லை.
நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது.
என்னென்னவோ மனதில் எண்ணங்கள். அவள் சிறு வயதில் இருந்து நடந்தது எல்லாம். மறந்து போனதாய் எண்ணியிருந்தது எல்லாம் இப்போது நினைவில் வந்து அவளை ஆட்டி படைக்க, என்ன முயன்றும் அவளால் அழுகையை அடக்கவே முடியவில்லை.
யாருமில்லாது இங்கே வந்தாள். அப்பா அம்மாவின் முகம் கூட அவளுக்கு நினைவில் இல்லை.
மனோகர் பொறுப்பில், அவர் ஆட்டி வைக்கும் பொம்மை போல் வளர்ந்தாள்.
அவளுக்கென்று தனி விருப்பு வெறுப்புகள் எல்லாம் இருக்கிறதா என்று கூட அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.
திடீரென இவன்தான் மாப்பிள்ளை என்று திருமணம் செய்து வைத்தார். அப்படி செய்து வைத்த மனிதருக்காகவே அந்த திருமண வாழ்வை அவள் விட்டு வந்தாள்.
இதோ இன்று அவரில்லை..
அவரில்லை என்பதாலேயே மீண்டும் கணவனிடம் செல்லும் நிலை..
அவனும் வார்த்தைகளால் கொள்கிறான்..
என்னதான் செய்வாள் அவள்..?!
நெஞ்சு அடைக்க, மூச்சு விடவே மிகவும் சிரமமாய் இருக்க, நொடியில் தவித்துத் தான் போனாள்.
அவளது நிலை கண்டு வேகமாய் பலராமன் அருகே சென்று “என்ன பவித்ரா?” என்று கேட்க, யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் அவள் கவனிக்கவில்லை, அவன் மீதே சாய்ந்து அப்படியொரு அழுகை.