பவித்ராவின் ஒவ்வொரு வார்த்தைகளும், பலராமன் மனதை என்னவோ செய்தது. அதுநாள் வரைக்கும், தான்தான் அப்பா இல்லாது, அம்மா ஒற்றை மனுசியின் வளர்ப்பில், மிகவும் சிரமப்பட்டு வளர்ந்து முன்னேறியதாய் எண்ணிக்கொண்டு இருந்தான்.
ஆனால் பவித்ராவின் வாழ்வு என்பது, ஒருவித வெறுமையிலும், கட்டுப்பாட்டிலும், தன் விருப்பு வெறுப்புகள் உணராது, சொல்லப்போனால் தன் குணம் எப்படி என்றே அவளுக்கு விளங்காது இருந்திருக்கிறது.
இது என்ன மாதிரியான ஒரு வாழ்வு?!
அதை எப்படி அவள் இத்தனை ஆண்டுகளாய் பொறுத்துக்கொண்டு இருந்தாள்?!
அவனுக்கு புரியவே இல்லை.
அதுவும் அவள் திருமணம் என்றதில் பேச்சை நிறுத்த, மேலும் ஒருவித படபடப்பு கூடியது அவனுக்கு.
‘என்ன சொல்ல போகிறாள்…’ என்று அவளையே பார்த்திருக்க,
“என்ன அப்படி பாக்குறீங்க?” என்றவள் “பேசலாம் தானே?” என்றும் கேட்க,
“பேசலாம் பேசலாம்…” என்று பலராமன் வேகமாய் சொல்ல,
“எனக்கு… நிஜமா ஏன் அப்படி அவ்வளோ அழுகை வந்ததுன்னு தெரியலை.. என்னை மீறி அழுதுட்டேன். இதுவரைக்கும் அழுததே இல்லைன்னு சொல்ல முடியாது. நிறைய அழுதிருக்கேன். அப்பா அம்மாவை நினைச்சு அழுதிருக்கேன்.. சித்தப்பாவோட உடல் நிலை எண்ணி அழுதிருக்கேன். உங்களை நினைச்சு ரொம்பவே அழுதிருக்கேன். ஆனா என்னை நினைச்சு அழுதது இதுதான் முதல் முறை..” என, திடுக்கிட்டு பார்த்தான் பலராமன்.
‘என்னை நினைச்சு அழுதாளா?!’
மனது அதிலேயே நிற்க, வார்த்தைகள் அவனிடம் எதுவுமே இல்லை.
“என்ன அமைதியாகிட்டீங்க?” என,
“இல்லை நீ பேசுறப்போ நடுவில பேசினா உனக்கு நீ நினைச்சதை பேச முடியுமோ என்னவோன்னு தான்…” என்று பலராமன் சொல்ல,
மெதுவாய் புன்னகை செய்தவள் “கல்யாணமான முதல் நாள் பேசி பேசியே என்னை தூங்க வச்சவர் தானே நீங்க?” என்று கிண்டல் செய்ய,
‘அம்மாடி..’ என்று பார்த்தான் பலராமன்.
சொல்லப்போனால் அவனுக்கு அதெல்லாம் மறந்துகூட போயிருந்தது. ஆனால் பவித்ரா அதை அப்படியே இப்போது சொல்ல, அவள் மனதில் தன்னை பற்றிய எண்ணம் இல்லாது இல்லை என்பது அவனுக்கு தெளிவாய் புரிந்தது.
“என்னங்க?!” என்று அவள் அழுத்திக் கேட்க,
“நீ கிண்டல் பேச ஆரம்பிச்சா, நான்லாம் ஓடிடணும் போல…” என,
“இருக்கலாம்…” என்று ஒரு முறுவலோடு உதடு பிதுக்க, அவளது அந்த பாவனை அவனை நிச்சயம் அசைக்கவே செய்தது.
‘டேய் பேசலாம்னு தான் வந்து உக்காந்து இருக்க…’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டான்.
“எனக்கு வாழ்க்கை என்ன வச்சிருக்குன்னு தெரியலை.. சித்தப்பாக்கு அவர் இருந்த வரைக்கும் எல்லாம் நான் சரியா பண்ணேன்.. ஆனா அவர் இல்லாதப்போ, அவருக்கு பூஜை என்னை முதல்ல செய்ய சொல்லவும் ஒருமாதிரி என்னை அது அசைச்சு பார்த்திடுச்சு. உங்களோட கண்ணோட்டதில நான் பண்ணது தப்புதான். உங்களை விட்டுப் போய் தான் அவரை கவனிக்கணுமா என்னன்னு உங்களுக்கு இப்பவும் மனசுல இருக்கு கோபம்.
ஆனா நிஜமா எனக்கு அப்போ என்ன செய்றதுன்னே தெரியலை. யார்கிட்ட நான் ஹெல்ப் கேட்க முடியும். என் மனசுல இருக்கிறதை உங்கக்கிட்ட சொன்னேன். நீங்களும் புரிஞ்சுக்கல. அண்ணனும் அக்காவும், யாரோ ஒருத்தரோடு பொறுப்புல அவரை விட்டுட்டு போக இருந்தாங்க.. அப்படி என்னை சித்தப்பா யாரோ ஒருத்தர் பொறுப்புல விட்டிருந்தா என் நிலமை என்னன்னு இப்போ என்னால நினைக்கக் கூட முடியலை.
அட்லீஸ்ட் நீங்க ஒருதடவையாவது வருவீங்கன்னு நினைச்சேன். உங்களுக்கு நியாயம் செய்யலைன்னு எனக்குத் தெரியும். ஆனா எனக்கு வழியே வேற இல்லை.. நீங்க வருவீங்க.. சண்டை போட்டாலும், கொஞ்சம் கொஞ்சமா பேசி சமாதானம் செய்யலாம். இல்லை இதுக்கு மாத்து வழி எதுவும் இருக்கான்னு யோசிக்கலாம்னு எல்லாம் இருந்தேன். ஆனா நீங்க வரவே இல்லை.
சரி ஒருவேளை என்னை வேணாம்னே நினைச்சுட்டீங்க போலன்னு தான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு அத்தைக்கிட்ட சொன்னேன். அவங்களும் திட்டினாங்க. அப்போவாது வருவீங்கன்னு நினைச்சேன்…” என்றவளின் குரலில் அப்படியொரு ஏமாற்றம் தெரிய, முதல் முறையாய் பலராமன் தன் மீது இருக்கும் தவறையும் உணர்ந்தான்.
அம்மா எத்தனை முறை சொன்னார்கள் ‘ஒருதடவ போயிட்டு வா டா..’ என்று.
கேட்கவே இல்லையே அவன்.
பிடிவாதம்.. மனதில் அந்த நேரத்தில் தோன்றிய ஆண் என்ற கர்வம்.
‘என்னை வேணாம்னு சொல்லிட்டு போறா.. வந்தா வாங்கன்னு சொல்றா… அப்போ போறதும் போகாததும் என்னோட இஷ்டம் தானே… நான் போக மாட்டேன்…’ என்ற பிடிவாதம் தான் அவனை இத்தனை நாட்களை பிடித்து வைத்திருந்தது.
நிஜம் அதுதான்.
‘அது எப்படி என்னை அவள் வேண்டாம் என்பது…’ ஒரு ஆண்மகனாய் அவனால் இதனை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
சொல்லப்போனால் அவள் இன்றளவும் அவனை வேண்டாம் என்று சொல்லவே இல்லையே. மனோகர் மறைவிற்கு அம்மாவும் மகனும் வந்ததுமே, அவள் மனதில் தோன்றிய ஆசுவாசம் அவள் மட்டும் தானே அறிவாள்.
பலராமன் இப்படி சுய அலசலில் இருக்க “காத்து வீசுற பக்கமெல்லாம் ஆடுற கொடி போல ஆகிருச்சு என்னோட நிலை…” என்ற பவித்ராவின் சொற்கள் மேலும் அவனை வருந்தச் செய்ய,
“அப்படில்லாம் இல்லை பவி…” என்றான் வேகமாய்.
“இல்லைன்னு எப்படி சொல்றீங்க?” அதைவிட வேகமாய் வந்தது அவளது வார்த்தைகள்.
“முன்ன எப்படியோ.. ஆனா இனி அப்படி இருக்காது.. இது உன்னோட வீடு.. உன்னோட வாழ்க்கை.. நான் உன்னோட புருஷன்.. இது நமக்கான வாழ்க்கை இருக்கிற இடம்…” என,
“அந்த உரிமைல தான் அப்போவும் நான் கேட்டேன்.. கொஞ்ச நாள் சித்தப்பாவோட போய் இருக்கலாம்.. அப்படி இல்லைன்னா நீங்க வந்து வந்து கூட போங்கன்னு.. முயற்சி செஞ்சிருந்தா அது சாத்தியமா கூட இருந்திருக்கும் தானே…” என்று கேட்டவளின் கேள்விக்கு அவனால் பதிலே சொல்ல முடியவில்லை.
ஆம்! ஒரே ஒரு முறை முயன்றாவது பார்த்திருக்கலாம் தானே.
அதை செய்யவே இல்லையே.
“என்னை பாக்குறவங்க எல்லாம் புருஷனை விட்டு வந்துட்டியான்னு கேட்கும்போது எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா?” என்று சொன்னவளின் குரல் உடைய,
“ஹேய் ப்ளீஸ் அழாத நீ…” என்றான் வேகமாய் அவள் கரம் பிடித்து.
“நீங்க வரவே இல்லை தானே…” என்று தலையை ஆட்டி, கண்ணீரை கட்டுப்படுத்த அவள் முயல..
“ஷ்..! சாரி பவித்ரா…” என்றவன, அவளது தலையை தன் நெஞ்சில் பதித்துக்கொள்ள,
“சண்டை போடவாவது வந்திருக்கலாம் தானே…” என்று அவள் மெல்லிசாய் சொல்ல,
‘முட்டாள் முட்டாள்…’ என்று தன்னை தானே திட்டிக்கொண்டு இருந்தான் பலராமன்.
‘அவ உன்னை தேடியிருக்கா டா.. நீ வருவன்னு எதிர்பார்த்திருக்கா.. ஆனா நீ தான்.. அவ விட்டுட்டு போயிட்டா… போயிட்டா… அப்படின்னு ஈகோ பிடிச்சு சுத்திட்டு இருந்திருக்க…’ என்று அவனே கடிந்து கொள்ள, நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள்,
“ஏன் வரல?!” என்றாள் மீண்டும்.
“ப்ளீஸ் பவித்ரா..” என்று அவன் கண்களை சுருக்கி கெஞ்ச,
“என்கிட்டே நீங்க ஈகோ பார்க்கலாமா?” என,
“ப்ளீஸ்.. இது.. இது பத்தி பேச வேண்டாமே…” என்று அவன் தடுமாற,
“நீ போய் அவரை பாரு பவித்ரா.. எதுன்னாலும் பேசிக்கலாம்னு தைரியம் சொல்லி என்னோட பேச உங்களுக்கு என்ன தடுத்தது?” என்று அவள் அடுத்த கேள்விக்கு போக, அவளது பேச்சை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல், அவளை இறுக அணைக்க, அவளும் அந்த அணைப்பில் பொறுந்தினாலும்,
“இவளுக்கு யாருமில்லை.. சித்தப்பாங்கிறவர் இவளை வளர்த்தவர் தானே, அவருக்கு ஏன் அவ்வளோ முக்கியத்துவம் கொடுக்கணும்னு நினைச்சீங்களா?” என,
“ஏய்… ப்ளீஸ்னு சொன்னேன்ல டி… பேசியே கொள்ளாத…” என்று மேலும் அணைப்பை இறுக்க, அவளுக்கோ மூச்சு முட்டியது.
அவனது சொற்களில், அவனின் வேதனை புரிந்தாலும், மனதில் இருந்த அங்கலாய்ப்பு தீரவே இல்லை.
“நான் போனா… நீங்களும் என்னை போ அப்படின்னு அப்படியே விட்ருவீங்க தானே…” என்று கேட்க,
“அடியேய்.. பேச்சை விடுன்னு சொன்னேன்.. இன்னும் ஏதாவது கேட்ட, நான் என்ன செய்வேன்னு தெரியாது…” என்று அவளை தன்னில் இருந்து பிரித்து, இரு தோள்களையும் இறுக பற்றி அவள் முகம் பார்த்து சொல்ல,
“என்ன செய்வீங்க?” என்றாள், ஒருவித நக்கலில்.
உன்னால் என்னை என்னை செய்துவிட முடியும் என்ற பாவனையும் கூட அவள் கண்களில் தெரிய, அதை உணர்ந்துகொண்டவன்,
‘பேசாம சரண்டர் ஆகிடு டா பலராமா…’ என்று நினைத்துக்கொண்டு “அதான் என்ன செய்வேன்னு தெரியாதுன்னு சொல்லிட்டேன்ல..” என்றான் கெத்து குறையாமல்.
“இதுக்கு இதுதான் பதிலா?”
“எனக்கு தெரிஞ்ச பதில் இது தான் ம்மா…” என்றவன் பின் என்ன நினைத்தானோ “இங்க பாரு பவி, நீ ஒருமாதிரி யோசிச்சு இருக்க. நான் வேறொரு கோணத்துல பார்த்துட்டேன்.. நடந்த எதையுமே மாத்த முடியாது.. ஆனா மறக்க முடியும்.. மறக்க பாரு.. வீணா அதை இதை நினைச்சு உன்னை நீயா கஷ்டப்படுத்திக்காத…” என்று ஆதுரமாய் பேச,
“நீங்க எப்போ பார் என்னை திட்டிட்டே இருக்கீங்க.. பின்ன எப்படி நான் பழசை மறக்குறது…” என்றாள் ஒரே போடாய்.
“அது.. அது தான்.. சொல்றேன்ல.. விடு.. இனி பழசு பத்தி நீயும் பேசவேணாம்.. நானும் எதுவும் உன்னை சொல்ல மாட்டேன்…” என்றவன்,
“எனக்கு நிஜமா என்ன சொல்றதுன்னு தெரியலை…” என்றான் பாவமாய் முகம் வைத்து.
அவன் முகத்தையோ ஆழ்ந்து பார்த்தவள் “ம்ம்… சரி…” என்றாள் போனால் போகிறது என்பதுபோல.
“என்ன பொழைச்சு போ அப்படிங்கற மாதிரி சொல்ற?” என்று சரியாய் அவன் கண்டுபிடித்து கேட்க,
“அப்படின்னு நீங்களே நினைச்சுக்கிட்டா நான் என்ன செய்யா?” என்று பேசும் போதே, வெளியே கோமதி “ராமா…” என்று அழைக்கும் சத்தம் கேட்டது.
“இரு வர்றேன்…” என்று அவன் எழ,
“நானுமே வர்றேன்…” என்று அவளும் அவனோடு சேர்ந்து அறையினில் இருந்து வெளி வர, இருவரையும் ஒன்றாய் பார்த்த கோமதிக்கு மனதில் ஒரு சிறு நிம்மதி.
ஆனாலும் பவித்ராவின் கண்கள் அழுததை காட்ட “என்னம்மா மறுபடியும் அழுதியா?” என்றார்.
“லேசா அத்தை.. பெரிய அழுகை எல்லாம் இல்லை…” என்றவள்,
“ஆனா உங்க மகனுக்கு சமாதானம் செய்யவே தெரியலை…” என்று சொல்லிவிட்டு, அவனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவள் போக
“என்னடா?” என்றார் கோமதி.
“ம்மா… என்ன சொல்றதுன்னே தெரியலைம்மா…” என்று அவரிடமும் அதையே சொல்ல,
“சரிதான்.. உன் பொண்டாட்டி உன் வாயை மூடிட்டாளா?” என்றார் நமட்டு சிரிப்போடு.
“ஆ..!” என்று அவன் பார்க்க,
“பின்ன என்னடா, என்னைய எல்லாம் வார்த்தைக்கு வார்த்தை பேசி அடக்குவ.. இப்போ பேசிருக்க வேண்டியது தானே.. பொண்டாட்டி அழுகவும், உனக்கு வார்த்தை வரலியோ…”என்று மகனை கேலி பேச,
“ம்மா என்னம்மா?” என்றான் பாவமாய்.
“சும்மா சொன்னேன் டா…” என்றவர் “எனக்கு கொஞ்சம் பொருள் எல்லாம் வாங்கணும்… நான் வெளிய போயிட்டு வர்றேன்…” என,
“போலாம் அத்தை.. இப்போ என்ன.. நீங்க ஊருக்கு கிளம்புறீங்க.. உங்களுக்கு ஷாப்பிங் செய்யலாம்…” என்று பவித்ரா சொல்ல, பவித்ரா தன்னிடம் எதுவோ பேச எண்ணுகிறாள் என்று அவருக்கு புரிந்து, சரி என்று சொல்லி மாமியாரும் மருமகளும் வெளியே கிளம்ப, பலராமன் பாவமாய் பார்த்து நின்று இருந்தான்.