பவித்ர(ரா)ம் – 17
பவித்ராவும், கோமதியும் வெளியே கிளம்பிவிட, வீடே அமைதியாய் இருந்தது. ஆனால் பலராமன் மனது அமைதியாய் இல்லை. பவித்ரா பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவனுள் ஓடிக்கொண்டே இருக்க, அவள் கேட்ட கேள்விகளுக்கு தான் பதில் சொல்ல முடியாமல் திணறி நின்றதை எண்ணி அவனே வெட்கிக் கொண்டான்.
நிஜம் தானே..
கணவன் என்ற உரிமையில் அவள் கேட்டிருக்கிறாள். என்னோடு வா என்றுதானே முதலில் சொன்னாள், பிறகுதானே உணர்வு மிகுதியில் வந்தால் வரட்டும் என்ற வார்த்தை வந்தது. ஆனால் இவன் என்ன செய்தான், அந்த ஒரு வார்த்தையை பிடித்துக்கொண்டே பிடிவாதமாய் இருந்துகொண்டான்.
‘முட்டாள் முட்டாள்…’ என்று நெற்றியில் தட்டிக்கொண்டவன்,
‘பாவம்டா.. அவளைப் பத்தியே அவளுக்குத் தெரியாம வளர்ந்து இருக்கா.. அவக்கிட்ட போய் நீ உன்னோட ஈகோ காட்டிருக்க.. பெரிய இவன் நீ.. ஏன் புருஷன் பொண்டாட்டி குள்ள சண்டையே வராதா.. கோவிச்சிட்டு வீட்டை விட்டு போறவங்க எல்லாம் இல்லையா.. பின்ன கொஞ்ச நாள்ல சமாதானம் ஆகி வாழ்றது இல்லையா.. அதைவிட்டுடு, நீ என்னவோ அவ பேசிட்டு போனதையே பிடிச்சு தொங்கிட்டு.. கடைசியில விட்டுட்டு போயிட்டா விட்டுட்டு போயிட்டான்னு புலம்பிட்டு இருந்திருக்க. போனா போ அப்படின்னு இருந்தது நீ…’ என்று அவனின் மனசாட்சி எடுத்துரைக்க, அமைதியாய் அமர்ந்திருந்தான்.
இத்தனை நாள் தன்மீது எவ்வித தவறும் இல்லை என்று எண்ணி, அவளை வார்த்தைகளால் தாக்கிக் கொண்டு இருந்தான். இப்படி செய் அப்படி செய் என்று அதிகாரம் செய்துகொண்டு இருந்தான்.
ஆனால் இப்போது?!
தன் மீதிருக்கும் தவறு புரியவும் மௌனியாகி போனான்.
என்ன சொல்லி அவளிடம் பேச்சு வளர்ப்பது என்றுகூட தெரியவில்லை.
இதற்குமேலே என்ன செய்வது என்பதும் புரியவில்லை.
கணவன் மனைவி இருவருக்குமே வாழ்வை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணம் உண்டு தான். ஆனால் இப்போது பலராமனுக்கு அவனின் குற்றவுணர்வே அதற்கு தடையாய் போனது.
தான் வரவில்லை என்றதும், கணவன் தன்னை கை விட்டுவிட்டான் என்று எண்ணி அவள் எத்தனை தவித்திருப்பாள் என்று எண்ணி எண்ணி இவன் தவிக்கத் தொடங்கிவிட்டான்.
கண் முன்னே அவள் அவனோடு தான் இருக்கிறாள் என்கிற நிதர்சனம் மறைந்து, அன்று அவளை நோகடித்தோமே என்று மனம் வருந்தத் தொடங்கி, அவளிடம் நெருங்க வேண்டும் என்ற எண்ணத்தை பின் தள்ளிவிட்டான்.
நான் ஆண்மகன். காலம் காலமாய் ஆண்மகன் எங்கிருக்கிறானோ, அவனின் மனைவியானவளும் அவன் இருக்குமிடத்தில் தான் இருந்திட வேண்டும். அவன் சொல்படி தான் நடந்திட வேண்டும் என்ற, பழைய கட்டுப்பட்டி எண்ணத்தில் இருந்தது எத்தனை தவறு என்பது இப்போது புரிந்தது.
என் மனைவிக்கு என்னிடம் உரிமை இல்லையா என்ன?!
அவள் அப்படி நினைத்திருக்க, நான் இப்படி இருந்திருக்கிறேனே என்று மனது போட்டு அவனை பாடாய் படுத்த, அதற்குமேல் வீட்டினில் தனியே இருந்திட முடியாது என்று எண்ணியவன், தானும் பைக்கை கிளப்பிக்கொண்டு வெளியே கிளம்பிவிட்டான்.
எங்கே செல்வது என்றெல்லாம் தெரியவில்லை. ஆனாலும் மனம் போகும் வழியெல்லாம் அவனும் செல்ல, ஒருநிலைக்கு மேலே அதுவும் முடியாது போல் தோன்றவும், ஒரு சாலையோர தேநீர் கடையில் பைக்கை நிறுத்தியவன், அங்கேயே அமர்ந்துகொண்டான்.
“ஹேய்.. பலராமா என்ன இந்த பக்கம்…?” என்ற குரல் கேட்டு, ‘யாரது…’ என்று திரும்பிப் பார்க்க, ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதர் ஒருவர் நின்று இருந்தார்.
அவர், புண்ணியகோடி.
“சார்.. நீங்களா? எப்படி இருக்கீங்க?” என்றபடி எழுந்து நின்றவன் அவரோடு கரம் குலுக்க,
“நான் நல்லாருக்கேன்.. நீ என்ன இந்த பக்கம்…?” என்றார் மீண்டும்.
புண்ணியகோடி வேராரும் இல்லை. அவன் முதன் முதலில் வேலைக்கு சென்ற கம்பனியில் மனேஜராக இருந்தவர். நல்ல மனிதர். யாரோடும் நெருங்கி பலகிடாத பலராமனை தன்னிடம் நன்றாய் பேச வைத்த மனிதர்.
பலராமனின் திருமணத்திற்குக் கூட வந்திருந்தார்.
“சும்மா தான் சார்.. அப்படியே பைக்கை எடுத்துட்டு ஒரு ரவுண்ட் போலாம்னு…” என்று பலராமன் சமாளிக்க பார்க்க,
“ஹா ஹா…” என்று ஹாஸ்யமாய் சிரித்தவர்,
“யாரு நீயா அப்படியே ரவுண்ட்ஸ் போலாம்னு வந்த.. ஒரு நாளைக்கு பெட்ரோல் இவ்வளோதான் செலவு செய்யனும்னு கணக்கு போட்டு வாழ்றவன் நீ..” என்றவர்
“சரி சொல்லு என்ன குழந்தை?” என்றார்.
“குழந்தையா?!” என்றான் அதிர்ந்து.
“அட ஆமா.. கல்யாணம் ஆகி ஒன்றை வருஷம் ஆச்சுத்தானே.. அப்போ என்ன குழந்தைன்னு கேட்கிறதுல என்ன தப்பு?” என,
“அட போங்க சார்…” என்று சலித்துக்கொண்டான்.
“அட என்னப்பா?!” என்றவர் ஆழ்ந்து அவனை நோக்க,
“என்ன சார் அப்படி பாக்குறீங்க?” என்று கேட்டான்.
“என்னவோ உன்னை போட்டு குடையுது…” என, சில நொடிகள் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தவன், யாரிடமாவது தன் மன பாரத்தை கொட்டிட வேண்டும் என்றெண்ணி, அவரிடம் நடந்த அனைத்தையும் சொல்ல, அவரும் பொறுமையாய் கேட்டார்.
கேட்டுவிட்டு அவருமே சில நொடிகள் எதுவும் பேசவில்லை.
“என்ன சார் அமைதியா இருக்கீங்க?” என்று பலராமனே கேட்க,
“ம்ம்ம் என்ன சொல்றதுன்னு யோசனை பண்ணிட்டு இருக்கேன். பட்டுன்னு உன்னையும் தப்பு சொல்லிட கூடாது..” என்றவர்
“பலராமா, வாழ்கையில நாம எதிர்பார்க்காதது எல்லாம் நடக்கும். சூழ்நிலை நம்ம கை மீறி போகுறப்போ, அந்த சூழல் எப்படி போகுதோ அப்படி போறது தான் நமக்கு ரொம்பவே நல்லது. ஏன்னா மாற்றம் ஒன்றுதான் மாறாதது சரியா. இப்போ உன் சங்கதிக்கு வர்றேன். நடந்தது எல்லாம் நடந்து முடிஞ்சு போச்சு. இப்போ உன் பொண்டாட்டி உன்னோட வீட்டுக்கு வந்திருச்சு. உன்கூட வாழ இஷ்டம் இல்லாம போயிருந்தா கண்டிப்பா அந்த பொண்ணு வந்திருக்காது.
அவங்க சித்தப்பா, வீடு பணம்னு கொடுத்திருக்கார்னு சொல்ற. உன்னை பிடிக்காம போயிருந்தா, நிச்சயம் அந்த பொண்ணு நமக்கு இருக்கிறது போதும்னு இருந்திருக்கும். ஆனா வந்திருக்கு. அப்போ இந்த தடவை நீ இறங்கி போறதுல தப்பில்ல. இது உன்னோட வாழ்க்கை. நம்ம பொண்டாட்டி கிட்ட இறங்கி போகாம நம்ம வேற யார் கிட்ட இறங்கி போக முடியும். மனசை போட்டு குழப்பிக்காம, சீக்கிரம் குழந்தை பெத்துக்க பாருங்க.
அப்புறம் பாரு, நீங்களே நினைச்சாலும் பழைய சங்கதிகள் எல்லாம் நியாபகம் கூட வராது. வாழ்க்கை வேகமா ஓட ஆரம்பிச்சிடும். மனசு விட்டு பேசுறது ஒரு சுகம்னா, புருஷன் பொஞ்சாதிக்குள்ள, உடல் சார்ந்த நெருக்கமும் ரொம்பவே தேவை தான். அது இன்னமும் மன அமைதியை கொடுக்கும்…” என்று பேச்சை முடிக்க, பலராமன் அமைதியாகவே இருந்தான்.
“என்னப்பா அமைதியா இருக்க?” என்று புண்ணியகோடி கேட்க,
“நீங்க சொல்றது எல்லாம் சரிதான் சார். ஆனா…” என்று இழுக்க,
“ஆனா, ஆவன்னா எல்லாம் இல்லை. இனிமே ஆகுற வேலையை பாரு..” என்றவர் “அடுத்து உன்னை பாக்கும்போது சந்தோசமான செய்தி சொல்லணும்…” என்று சொல்லி அவன் முதுகில் தட்டிவிட்டு சென்றுவிட்டார்.
பலராமன் இப்படி உழன்று கொண்டு இருக்க, கணவனிடம் மனதில் உள்ளதை எல்லாம் சொல்லிவிட்டோம் என்ற நிம்மதியில், பவித்ரா தன் மாமியாரிடமும் மனம் விட்டு பேசிக்கொண்டு இருந்தாள்.
இருவரும் வாங்க வேண்டியதை எல்லாம் வாங்கிக்கொண்டு, வரும் வழியில் இருக்கும், சிறு விநாயகர் கோவில் திண்டில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
“நீயும் வர்றேன்னு சொல்லும்போதே நினைச்சேன். ஏதாவது பேசணும்னு தான் இருப்பன்னு…” என்று கோமதி சொல்ல,
“ஆமா அத்தை..” என்றவள் “நீங்க எங்களுக்கு தனிமை கொடுக்கணும்னு தானே ஊருக்கு போறீங்க?” என்று நேரடியாகவே கேட்க, கோமதி மருமகளை பாராட்டுதலாய் பார்த்தார்.
“சொல்லுங்க அத்தை…” என,
“இதுக்கு ஆமான்னு சொல்றதா இல்லைன்னு சொல்றதா?” என்றவர் “எனக்கும் சுத்தி பார்க்கனும்னு ரொம்ப நாள் ஆசை. உங்க கல்யாணம் முடிஞ்சதும் கொஞ்ச நாள்ல போகணும்னு இருந்தேன். அப்போ முடியலை. சரி இப்போ வாய்ப்பு வரவும் கிளம்பிட்டேன். அவ்வளோதான்..” என,
“அப்போ எங்களுக்காக இல்லையா?” என்றாள் வேகமாய்
“இல்லைன்னு எல்லாம் சொல்லமாட்டேன் பவித்ரா. எனக்கு என் மகன் தான் எல்லாமே. என் வாழ்க்கைக்கான பிடிப்பே அவன் தான். நீ அவனுக்கு சரியான ஜோடியா வருவன்னு நினைச்சு நிம்மதியா இருந்தேன். ஆனா என்ன அந்த நிம்மதி இன்னும் முழுசா பூர்த்தி ஆகலை. உன் போட்டோ பார்த்தே அவன் பிடிச்சிருக்குன்னு சொன்னான். பேசி முடிங்கன்னு சொன்னான். அவனுக்கு உன்னை அவ்வளோ பிடிக்கும். இந்த கோபம் எல்லாமே அவ்வளோ பிடிச்சதுனால வர்ற கோபம் தான். ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோசமா வாழ்ந்தா அதைவிட பெரிய சந்தோசம் எனக்கு என்ன இருக்க போகுது சொல்லு..” என, பவித்ராவிற்கு ‘உன்னை அவ்வளோ பிடிக்கும்…’ என்று அவர் சொன்னதில் மனது உற்சாகம் கொண்டது.
‘அவ்வளோ பிடிச்சவரு, ஒருதடவை கூட வந்து பார்க்கலை…’ என்று அங்கலாய்ப்பும் ஏற்பட,
‘ச்சே.. விடு.. இனிமே அதெல்லாம் யோசிக்கவே கூடாது.. இனியாவது எல்லாம் நல்லபடியா நடக்கட்டும்…’ என்று வம்படியாய் தன் மனதை மாற்றிக்கொண்டாள்.
மருமகளின் முகத்தில் நொடியில் வந்து போன மாற்றத்தை கண்டவர் “போனது எல்லாம் போகட்டும்னு விடேன்…” என,
“அப்படி விட்டதுனால தான அத்தை நான் இங்க வந்தேன்.. உங்க மகன் தான் விடாம பிடிச்சு தொங்கிட்டு இருக்கார். பாருங்க, என்னை சமாதானம் கூட பண்ண தெரியலை..” என்று சொல்ல, மெல்லமாய் சிரித்துக்கொண்டார் கோமதி.
“அவனுக்கு அதெல்லாம் வராது..” என,
“அதுசரி… ஆனா இப்போ உங்களுக்கு நான் ஒரு உறுதி சொல்றேன் அத்தை. இனி நீங்க சங்கடப்படுற மாதிரியோ, இல்லை வருத்தப் படுற மாதிரியோ எதுவும் நடக்காது. முக்கியமா என் பக்கமிருந்து இனி எந்த பிரச்னையும் இருக்காது… நீங்க தைரியமா ஊருக்கு போயிட்டு வாங்க. உங்க மகன் என் பொறுப்பு…” என,
“அப்பாடி… அவன் கண்ணுல ஆனந்த கண்ணீர் மட்டும் தான் நான் பார்க்கணும் மருமகளே…” என்று அவர் கேலி போல் பேச, இருவருக்கும் அப்படியொரு சிரிப்பு.
அதே சிரிப்போடு வீடு வந்து சேர, சரியாய் அதே நேரம் தான் பலராமனும் வீட்டு காம்பவுண்டினுள் நுழைந்துகொண்டு இருந்தான். பைக்கை நிறுத்திவிட்டு வந்தவனிடம்
“நீ எங்கடா போயிருந்த..?” என்று கோமதி கேட்க,
“ஹ்ம்ம்.. நானா எவ்வளோ நேரம் வீட்ல இருக்கிறது… அதான் வெளிய போயிட்டு வந்தேன்…” என்று கொஞ்சம் கடுப்பாகவே பதில் சொல்ல,
“எங்களுக்கு போன் பண்ணிருந்தா, வந்து இந்த பையை தூக்கிட்டு வந்திருக்கலாம்ல.. தண்டமா ஆட்டோக்கு பணம் கொடுத்தோம்…” என்று கோமதி சொல்லவும், பவித்ரா பக்கென்று சிரித்துவிட, பலராமன் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிட்டான்.
அடுத்து வீட்டினுள் வந்தபிறகும், கோமதியும் பவித்ராவுமே பேசிக்கொண்டு இருக்க, பலராமன் அமைதியாகவே இருந்தான். எதுவும் பேசவே இல்லை. தனக்குள்ளே உழன்று கொண்டே இருக்க, இரவு உணவு கூட அவன் சரியாய் உண்ணவில்லை.
“என்னடா ஏன் எப்படியோ இருக்க?” என்று கோமதி கேட்டுவிட, அதே கேள்வியை பவித்ரா தன் பார்வையில் வெளிப்படுத்த,
“ஒண்ணுமில்லை… நாளைக்கு ஆபிஸ் சீக்கிரமே போகணும்.. வேலை நிறைய இருக்கு சீக்கிரம் தூங்குறேன்…” என்றவன், ஹாலில் ஒரு பக்கத்தில் தலையணை போட்டு படுத்துக்கொண்டான்.
பவித்ரா இங்கே வந்த நாளில் இருந்தே இப்படித்தானே.
மருமகள், மகனிடம் மனம்விட்டு பேசியபிறகு, இன்றாவது மகன் மனைவியோடு உள்ளே அறைக்குள் சென்று படுப்பான் என்று எண்ணியிருந்தார் கோமதி. அதுவும் இல்லை எனவும், பவித்ரா முகம் பார்க்க, அவளோ குழப்பமாய் கணவனைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
‘என்கிட்டே நல்லாதானே பேசிட்டு போனார்…’ என்று எண்ணியவள்,
‘சரி பொறுத்திருந்து பார்ப்போம்…’ என்று நினைத்தவள், மாமியார் தன்னை நோக்குவது கண்டு
“பார்த்துக்கலாம் அத்தை.. விடுங்க.. நான் சொல்லிட்டேன்ல என்னோட பொறுப்பு, எங்க வாழ்கையை சரி செய்றதுன்னு..” என்று மெதுவாய் சொல்ல,
“சரிம்மா…” என்று தலையை ஆட்டிக்கொண்டார்.
ஆனாலும் மனது சமாதானம் ஆகிடவில்லை.
பவித்ரா எப்போதும் போல் அவளது அறைக்கு படுக்கச் செல்ல, அறையின் விளக்கை அணைக்கவே இல்லை அவள். அந்த வெளிச்சம் நேராய் பலராமன் படுத்திருக்கும் இடத்தினில் விழ, முகத்தில் வெளிச்சம் படவுமே கண் திறந்து பார்த்தான்.
பவித்ராவின் அறையில் விளக்கு அணைக்காமல் இருக்க, ‘லைட் ஆப் பண்ணாம என்ன செய்றா இவ?’ என்று யோசிக்க, அவளோ அறைக்குள் அவன் பார்க்கும்படி அங்கே இங்கே நடந்துகொண்டு இருந்தாள்.
‘என்ன ரூம்குள்ள வாக்கிங் போறா..’ என்று யோசித்தவன்
“ஏ பவித்ரா…” என்று அழைக்க, அவளோ காதே கேளாதது போல் நடந்துகொண்டே தான் இருந்தாள்.
“பவித்ரா…” என்று சத்தமாய் அழைக்க, அப்போதும் அவள் எதுவும் பதில் சொல்லவில்லை.
“ம்ம்ச் இவளை…” என்று சலித்தபடி எழுந்து வந்தவன் “ஏய் லைட் ஆப் பண்ணிட்டு தூங்க வேண்டியது தானே…” என்று அறைக்குள் வர,
“என்னவோ தெரியலை.. இருட்டுல நானா தூங்க பயமா இருக்கு.. இந்த பக்கத்து வீட்டு நாய் வேற நைட்டெல்லாம் சத்தம் போடுதா.. தூங்கவே முடியுறது இல்லை..” என்று புதிதாய் ஒரு கதை சொல்ல,
‘என்ன சொல்றா இவ?’ என்று அவளை பார்த்து நின்று இருந்தான்.
“என்ன பாக்குறீங்க.. உங்களுக்கு நாளைக்கு வேலை நிறைய இருக்கும், ஆபிஸ் சீக்கிரம் போகணும்.. போய் தூங்குங்க.. நான் இப்படி நடந்தே பொழுதை போக்குறேன்…” என்று பாவம் போல் சொல்ல, அப்போதுதான் அவனுக்கு புரியவே செய்தது.
‘ஓ! மேடம் நம்மள உள்ள வர வைக்க இந்த நடை திட்டமா?!’ என்று எண்ணியவனுக்கு சட்டென்று மனம் வாடி போனது.
இவளை புரிந்துகொள்ளாமல் நோகடித்துவிட்டோமே என்று. அந்த எண்ணமே பவித்ராவை நெருங்குவதற்கு தடையாய் இருக்க,
“ம்ம் நீ படு.. நான் இங்க ரூம்க்கு வெளிய படுக்கிறேன்…” என்றவன், தலையணையை எடுத்துக்கொண்டு வந்து, அறை வாயிலில் போட்டு படுத்துக்கொள்ள, பவித்ராவிற்கு இதற்குமேல் என்ன செய்ய என்று தெரியாமல் நின்றுகொண்டு இருந்தாள்.